பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?
 
கட்டளைக் கலித்துறை
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே!

சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.

இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.

   பாசுரங்கள்


    பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 
    பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 

    தாம்மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 
    நாம்மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே.   (2)


    கள்ளார்  பொழில்  தென்ன‌ரங்கன்*  கமலப் பதங்கள் நெஞ்சில்- 
    கொள்ளா*  மனிசரை நீங்கி*   குறையல் பிரான‌டிக்கீழ்- 

    விள்ளாத அன்பன் இராமானுசன்*  மிக்க சீலமல்லால்- 
    உள்ளாது என் நெஞ்சு*  ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே. (2) 


    பேரியல் நெஞ்சே!  அடிபணிந்தேன் உன்னை*  பேய்ப்பிறவிப்- 
    பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி*  பொருவருஞ்சீர்-

    ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்புசெய்யும்* 
    சீரிய பேறுடையார்*  அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.


    என்னைப்  புவியில்  ஒருபொருளாக்கி*  மருள்சுரந்த- 
    முன்னைப்  பழவினை  வேர‌றுத்து*  ஊழி முதல்வனையே- 

    பன்னப் பணித்த இராமானுசன்*  பரன் பாதமும் என்-
    சென்னித் தரிக்க வைத்தான்*  எனக்கேதும் சிதைவில்லையே.


    எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று*  இசையகில்லா- 
    மனக்குற்ற மாந்தர்*  பழிக்கில் புகழ்*  அவன் மன்னியசீர்- 

    தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா* 
    இனக்குற்றம் காணகில்லார்,*  பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.  


    இயலும் பொருளும் இசையத் தொடுத்து,*  ஈன் கவிகள் அன்பால்-
    மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,*  மதியின்மையால்- 

    பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால்* 
    முயல்கின்றனன்*  அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.


    மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,*  வஞ்ச முக்குறும்பாம்- 
    குழியைக் கடக்கும்*  நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்* 

    பழியைக் கடத்தும்  இராமானுசன் புகழ் பாடி*  அல்லா- 
    வழியைக் கடத்தல்*  எனக்கு இனி யாதும் வருத்தம‌ன்றே.  (2)


    வருத்தும் புறவிருள் மாற்ற,*  எம் பொய்கைப்பிரான் மறையின்- 
    குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 

    திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 
    இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே.    


    இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட*  ஞானமென்னும்- 
    நிறைவிளக்கு ஏற்றிய*  பூதத் திருவடி தாள்கள்,*  நெஞ்சத்து- 

    உறையவைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும்நல்லோர்* 
    மறையினைக் காத்து*  இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.       


    மன்னிய பேரிருள் மாண்டபின்*  கோவலுள் மாமலராள்- 
    தன்னொடு மானை*  கண்டமை காட்டும்*  தமிழ்த்தலைவன்- 

    பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்* 
    சென்னியிற் ​சூடும்*  திருவுடையார் என்றும் சீரியரே.     


    சீரிய நான்மறைச் செம்பொருள்*  செந்தமிழால் அளித்த- 
    பாரியலும் புகழ்*  பாண்பெருமாள்,*  சரணாம் பதுமத்- 

    தாரியல்  சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்* 
    காரிய வண்மை,*  என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே.


    இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்*  இணையடிப்போது- 
    அடங்கும் இதயத்து இராமானுசன்,*  அம்பொற் பாதமென்றும்-

    கடங்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யா* 
    திடங்கொண்ட ஞானியர்க்கே*  அடியேன் அன்பு செய்வதுவே.


    செய்யும் பசுந்துளபத் தொழில் மாலையும்*  செந்தமிழில்- 
    பெய்யும் மறைத்தமிழ் மாலையும்*  பேராத சீரரங்கத்து- 

    ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி*  ஆதரியா- 
    மெய்யன்*  இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.


    கதிக்குப் பதறி*  வெங்கானமும் கல்லும்  கடலுமெல்லாம்- 
    கொதிக்க*  தவம்செய்யும் கொள்கை அற்றேன்,*  கொல்லி காவலன் சொல்- 

    பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே* 
    துதிக்கும் பரமன்*  இராமானுசன் என்னைச் சோர்விலனே.


     சோராத காதல் பெருஞ்சுழிப்பால்,*  தொல்லை மாலையொன்றும்- 
    பாராத‌வனைப்*  பல்லாண்டென்று காப்பிடும்*  பான்மையன்தாள்- 

    பேராத  உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கியசீர்*
    சாரா மனிசரைச் சேரேன்*  எனக்கென்ன தாழ்வினியே?



    தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து*  தலமுழுதும் கலியே- 
    ஆள்கின்ற நாள் வந்து*  அளித்தவன் காண்மின்*  அரங்கர்மௌலி- 

    சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்ல‌ருளால்* 
    வாழ்கின்ற வள்ளல்*  இராமானுசன் என்னும் மாமுனியே.  (2)


    முனியார் துயரங்கள் முந்திலும்*  இன்பங்கள் மொய்த்திடினும்- 
    கனியார் மனம்*  கண்ண மங்கை நின்றானைக்*  கலைபரவும்- 

    தனியானைத் தண் தமிழ்செய்த நீலன் தனக்கு*  உலகில்- 
    இனியானை*  எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.       


    எய்தற்கு அரிய மறைகளை* ஆயிரம் இன்தமிழால்- 
    செய்தற்கு உலகில் வரும்*  சடகோபனைச்*  சிந்தையுள்ளே- 

    பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை  உயிர்களெல்லாம்* 
    உய்தற்கு உதவும்*  இராமானுசன் எம்  உறுதுணையே. 


    உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும்*  உயர்குருவும்- 
    வெறிதரு பூமகள் நாதனும்*  மாறன் விளங்கியசீர்- 

    நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்* 
    அறிதர நின்ற,*  இராமானுசன் எனக்கு ஆரமுதே.  


    ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,*  அமுதத் திருவாய்- 
    ஈரத் தமிழின்*  இசை உணர்ந்தோர்கட்கு*  இனியவர்தம்- 

    சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை*  நெஞ்சால்- 
    வாரிப் பருகும்*  இராமானுசன் என்தன் மாநிதியே


    நிதியைப் பொழியும் முகில்என்று*  நீசர்தம் வாசல்பற்றித்- 
    துதிகற்று உலகில் துவள்கின்றிலேன்*  இனி தூய்நெறிசேர்- 

    எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணைய‌டியாம்* 
    கதிபெற்றுடைய*  இராமானுசன் என்னைக் காத்தனனே.


    கார்த்திகை  யானும் கரிமுகத் தானும்*  கனலும்முக்கண்- 
    மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு*  மூவுலகும்-

    பூத்தவனே!  என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த* 
    தீர்த்தனை ஏத்தும்*  இராமானுசன் என்தன் சேமவைப்பே.


    வைப்பாய வான்பொருள் என்று,*  நல்லன்பர்  மனத்தகத்தே- 
    எப்போதும் வைக்கும் இராமானுசனை*  இருநிலத்தில்- 

    ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில்வைத்து* 
    முப்போதும் வாழ்த்துவன்*  என்னாம்  இதுஅவன் மொய்புகழ்க்கே!      


    மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,*  அதனால்- 
    எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,*  இன்று   க‌ண்டுயர்ந்தேன்- 

    பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்* 
    கைத்த மெய்ஞ்ஞானத்து*  இராமானுசன் என்னும் கார்தன்னையே   


    காரேய் கருணை இராமானுச,*  இக் கடலிடத்தில்- 
    ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை*   அல்லலுக்கு- 

    நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின்*  உன்- 
    சீரே உயிர்க்குயிராய்,*  அடியேற்கு இன்று தித்திக்குமே.  


    திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,*  என் செய்வினையாம்- 
    மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை*  மேவும்நல்லோர்- 

    எக்குற்ற  வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்* 
    அக்குற்றம் அப்பிறப்பு*  அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே


    கொள்ளக் குறைவு அற்று இலங்கி*  கொழுந்து விட்டு ஓங்கிய உன் 
    வள்ளல் தனத்தினால்*  வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்* 

    வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று* 
    தள்ளுற்று இரங்கும்*  இராமாநுச! என் தனி நெஞ்சமே!


    நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்*  நங்கள்- 
    பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன்*  பாதம்நண்ணா- 

    வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்* 
    கொஞ்சிப் பரவகில்லாது*  என்ன வாழ்வு இன்று கூடியதே!


    கூட்டும் விதி என்று கூடுங்கொலோ,*  தென் குருகைப்பிரான்- 
    பாட்டென்னும்*  வேதப் பசுந்தமிழ் தன்னை,*  தன் பத்தியென்னும்-

    வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்* 
    ஈட்டங்கள் தன்னை,*  என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே?


    இன்பம் தருபெருவீடு வந்து எய்திலென்?*  எண்ணிறந்த- 
    துன்பம் தரு நிரயம்பல சூழிலென்?*  தொல்லுலகில்- 

    மன்பல்லுயிர்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த* 
    அன்பன் அனகன்*  இராமானுசன் என்னை ஆண்டனனே.


    ஆண்டுகள் நாள் திங்களாய்*  நிகழ்காலம் எல்லாம் மனமே!-
    ஈண்டு*  பல்யோனிகள்  தோறும்  உழல்வோம்*  இன்றோர்   எண்ணின்றியே‍‍‍‍‍-

    காண்தகு தோவ‌ண்ணல் தென்ன‌த்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்
    பூண்டன்பாளன்*  இராமானுசனைப் பொருந்தினமே.  (2)


    பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,*  நல்ல- 
    திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்*  செறுகலியால்- 

    வருந்திய ஞாலத்தை*  வண்மையினால்  வந்தெடுத்தளித்த- 
    அருந்தவன்*  எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.  


    அடையார்  கமலத்து அலர்மகள் கேள்வன்*  கையாழியென்னும்- 
    படையோடு   நாந்தகமும் படர் தண்டும்,*  ஒண் சார்ங்கவில்லும்- 

    புடையார்   புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு*  என்று- 
    இடையே*  இராமானுச முனியாயின  இந்நிலத்தே   


    நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,*  நினைப்ப‌ரிய- 
    ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,*  என் பெய்வினைதென்- 

    புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 
    நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே


    நயவேன் ஒருதெய்வம் நானிலத்தே*  சில மானிடத்தைப்- 
    புயலே என*  கவி போற்றி செய்யேன்*  பொன் அரங்கமென்னில்-

    மயலே பெருகும் இராமானுசன்*  மன்னு மாமலர்த்தாள்- 
    அயரேன்*  அருவினை என்னை எவ்வாறு  இன்று அடர்ப்பதுவே?    


    அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன்*  அன்று ஆரணச்சொல்- 
    கடல்கொண்ட ஒண்பொருள் கண்ட‌ளிப்ப,*  பின்னும் காசினியோர்- 

    இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு*  அவர்பின்- 
    படரும் குணன்,*  எம் இராமானுசன் தன் படிஇதுவே.


    படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்* 
    குடிகொண்ட கோயில் இராமாநுசன் குணங்கூறும்,*  அன்பர்-

    கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளங் கனியும்நல்லோர்* 
    அடிகண்டு கொண்டு உகந்து*  என்னையும் ஆள‌வர்க்கு ஆக்கினரே


    ஆக்கி அடிமை நிலைப்பித்தனை*  என்னை இன்று, அவமே- 
    போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு*  புண்ணியர்தம்- 

    வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்* 
    நோக்கில் தெரிவ‌ரிதால்,*  உரையாய் இந்த நுண்பொருளே.  


    பொருளும் புதல்வரும் பூமியும்*  பூங்குழலாரும் என்றே- 
    மருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே!*  மற்றுளார்தரமோ- 

    இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும்புகழே* 
    தெருளும் தெருள்தந்து*  இராமானுசன் செய்யும் சேமங்களே?   


    சேமநல் வீடும் பொருளும் தருமமும்*  சீரியநற்- 
    காமமும் என்றிவை  நான்கென்பர்*  நான்கினும் கண்ணனுக்கே- 

    ஆமது  காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்* 
    வாமனன் சீலன்*  இராமானுசன் இந்த மண்மிசையே. 


    மண்மிசை யோனிகள்  தோறும் பிறந்து*  எங்கள் மாதவனே- 
    கண்ணுற நிற்கிலும் காணகில்லா,*  உலகோர்கள் எல்லாம்-

    அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே* 
    நண்ணரு  ஞானம் தலைக்கொண்டு,*  நாரணற்கு ஆயினரே.


    ஆயிழையார் கொங்கை தங்கும்*  அக் காதல்  அளற்றழுந்தி-
    மாயும் என் ஆவியை*  வந்தெடுத்தான் இன்று*  மாமலராள்-

    நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும்- 
    தூயவன்*  தீதில் இராமானுசன் தொல்ல‌ருள் சுரந்தே.


    சுரக்கும் திருவும் உணர்வும்*  சொலப்புகில் வாய‌முதம்- 
    பரக்கும் இருவினை பற்றற‌ ஓடும்*  படியில்உள்ளீர்- 

    உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியை* 
    துரக்கும் பெருமை*  இராமானுசன் என்று சொல்லுமினே.


    சொல்லார்  தமிழ்ஒரு மூன்றும்*  சுருதிகள் நான்கும்எல்லை- 
    இல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்*  எண்ணருஞ்சீர்- 

    நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு* 
    அல்லார் அகல்இடத்தோர்,*  எது பேறென்று காமிப்பரே.


    பேறுஒன்று மற்றில்லை நின்சரண் அன்றி*  அப் பேற‌ளித்தற்கு- 
    ஆறுஒன்றும் இல்லை*  மற்ற‌ச் சரண் அன்றி,*  என்று இப்பொருளைத்-

    தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்* 
    கூறும் பரம‌ன்று*  இராமானுச மெய்ம்மை கூறிடிலே.


    கூறும் சமயங்கள் ஆறும் குலைய*  குவலயத்தே- 
    மாறன் பணித்த*  மறையுணர்ந்தோனை*  மதியிலியேன்-

    தேறும் ப‌டி என் மனம் புகுந்தானை*  திசைய‌னைத்தும்- 
    ஏறும் குணனை*  இராமானுசனை இறைஞ்சினமே.


    இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று*  இவ்வுலகத்து- 
    அறம் செப்பும்*  அண்ணல் இராமானுசன்,*  என் அருவினையின்-

    திறம்செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே* 
    நிறைந்து ஒப்ப‌ற இருந்தான்,*  எனக்குஆரும் நிகர்இல்லையே!


    நிகரின்றி நின்ற என் நீசதைக்கு*  உன் அருளின்கண் அன்றிப்-
    புகல் ஒன்றும்இல்லை*  அருட்கும் அஃதேபுகல்*  புன்மையிலோர்-

    பகரும் பெருமை இராமானுச!  இனி நாம்பழுதே*
    அகலும் பொருள்என்*  பயன் இருவோமுக்கும் ஆனபின்னே?


    ஆனது செம்மை அறநெறி*  பொய்ம்மை அறுசமயம்- 
    போனது பொன்றி*  இறந்தது வெங்கலி*  பூங்கமலத்-

    தேன்நதி பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னிவைத்துத்* 
    தான்அதில் மன்னும்*  இராமானுசன் இத்தலத்து உதித்தே.


    உதிப்பன உத்தமர் சிந்தையுள்*  ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி- 
    கொதித்திட*  மாறி நடப்பன*  கொள்ளைவன் குற்றம்எல்லாம்-

    பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்* 
    எதித்தலை நாதன்*  இராமானுசன் தன் இணைஅடியே  (2)


    அடியைத் தொடர்ந்துஎழும் ஐவர்கட்காய்*  அன்று பாரதப்போர்- 
    முடியப்*  பரிநெடுந் தேர் விடுங்கோனை*  முழுதுணர்ந்த-

    அடியர்க்கு அமுதம் இராமானுசன்  என்னை ஆளவந்து*  இப்- 
    படியில் பிறந்தது*  மற்றுஇல்லை காரணம் பார்த்திடிலே.


    பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப,*  இப் பார்முழுதும்- 
    போர்த்தான் புகழ்கொண்டு*  புன்மையினேன் இடைத்தான் புகுந்து*

    தீர்த்தான் இருவினை தீர்த்து*  அரங்கன் செய்ய  தாள்இணையோடு- 
    ஆர்த்தான்*  இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.


    அற்புதன் செம்மை இராமானுசன்,*  என்னை ஆளவந்த- 
    கற்பகம்*  கற்றவர்*  காமுறு சீலன்*  கருதுஅரிய-

    பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதுஎன்னும்* 
    நற்பொருள் தன்னை,*  இந் நானிலத்தே வந்து நாட்டினனே.


    நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,*  நாரணனைக்- 
    காட்டிய வேதம் களிப்புற்றது,*  தென் குருகைவள்ளல்-

    வாட்டம்இலா வண் தமிழ்மறை வாழ்ந்தது*  மண்ணுலகில்- 
    ஈட்டிய சீலத்து*  இராமாநுசன் தன் இயல்வுகண்டே.


    கண்டவர் சிந்தை கவரும்*  கடிபொழில் தென்அரங்கன்* 
    தொண்டர் குலாவும் இராமானுசனை*  தொகைஇறந்த-

    பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்* 
    கொண்டலை மேவித் தொழும்,*  குடியாம் எங்கள் கோக்குடியே.


    கோக்குல மன்னரை மூவெழு கால்*  ஒரு கூர் மழுவால்-
    போக்கிய தேவனைப்*  போற்றும் புனிதன்*  புவனமெங்கும்-

    ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின்*  என்
    வாக்கு உரையாது,*  என் மனம் நினையாது இனி மற்றறொன்றையே.


    மற்றொரு பேறு மதியாது,*  அரங்கன் மலரடிக்கு ஆள்- 
    உற்றவரே*  தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை*

     நற்றவர் போற்றும் இராமாநுசனை*  இந் நானிலத்தே- 
    பெற்றனன்*  பெற்றபின் மாற்றியேன் ஒரு பேதைமையே.


    பேதையர் வேதப் பொருள் இதென்று உன்னி*  பிரமம் நன்றென்று 
    ஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று*  உயிர்கள் மெய்விட்டு-

    ஆதிப் பரனோடு ஒன்றுமென்று சொல்லும் அவ் வல்லலெல்லாம்* 
    வாதில் வென்றான்,*  எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.


    கடலளவாய திசை எட்டினுள்ளும்*  கலியிருளே 
    மிடைதரு காலத்து இராமாநுசன்,*  மிக்க நான்மறையின்-

    சுடரொளியால் அவ்   விருளைத் துரந்திலனேல்*  உயிரை- 
    உடையவன்,*  நாரணன் என்று அறிவாரில்லை உற்றுணர்ந்தே. 


    உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும்,*  திருவாய் மொழியின்- 
    மணந்தரும்*  இன்னிசை மன்னும் இடந்தொறும்*  மாமலராள்- 

    புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்* 
    குணந்திகழ் கொண்டல்*  இராமாநுசன் எம் குலக்கொழுந்தே.


    கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால்,*  நிரயத்து- 
    அழுந்தியிட்டேனை*  வந்து ஆட்கொண்ட பின்னும்,*  அரு முனிவர்-

    தொழும் தவத்தோன் எம் இராமாநுசன்*  தொல் புகழ்* சுடர்மிக்கு- 
    எழுந்தது,*  அத்தால் நல்ல அதிசயங் கண்ட இருநிலமே.


    இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி*  இன்று யான் இறையும்- 
    வருந்தேன்*  இனி எம் இராமாநுசன்,*  மன்னு மாமலர்த்தாள்-

    பொருந்தா நிலையுடையப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யா* 
    பெருந்தேவரைப் பரவும்,*  பெரியோர் தம் கழல்பிடித்தே.


    பிடியைத் தொடரும் களிறென்ன*  யான் உன் பிறங்கிசீர்- 
    அடியைத் தொடரும் படி நல்க வேண்டும்*  அறுசமயச்-

    செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து*  இப்- 
    படியைத் தொடரும்*  இராமாநுச! மிக்க பண்டிதனே!


    பண் தரு மாறன் பசுந்தமிழ்*  ஆனந்தம் பாய்மதமாய்- 
    விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம்*  மெய்ம்மை-

    கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக்* குவலயத்தே- 
    மண்டி வந்தேன்றது*  வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.


    வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு*  என்றும் மறையவர்தம்- 
    தாழ்வற்றது*  தவம் தாரணி பெற்றது*  தத்துவநூல்-

    கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு*  அந்- 
    நாழற்றது,*  நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே.


    ஞானம் கனிந்த நலங்கொண்டு*  நாள்தொறும் நைபவர்க்கு- 
    வானம் கொடுப்பது மாதவன்*  வல்வினையேன் மனத்தில்-

    ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு* அத்- 
    தானம் கொடுப்பது*  தன் தகவென்னும் சரண் கொடுத்தே. 


    சரணம் அடைந்த தருமனுக்கா*  பண்டு நூற்றுவரை- 
    மரணம் அடைவித்த மாயவன் தன்னை*  வணங்கவைத்த-

    கரணம் இவை உமக்கன்று என்றி இராமாநுசன்*  உயிர்கட்கு- 
    அரண் அங்கு அமைத்திலனேல்,*  அரணார் மற்று இவ்வாருயிர்க்கே?


    ஆரெனக்கு இன்று நிகர் சொல்லில்?*  மாயன் அன்று ஐவர்தெய்வத்-
    தேரினில் செப்பிய கீதையின்*   செம்மைப் பொருள் தெரியப்-

    பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர்*
    சீரினில் சென்று பணிந்தது,*  என் ஆவியும் சிந்தையுமே.


    சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து,*  முன்னாள் 
    அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு,*  அவை என்தனக்கு அன்றருளால்-

    தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்*  தான் அதுதந்து* 
    எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.


    என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து,*  எண்ணில் பல்குணத்த- 
    உன்னையும் பார்க்கில்*  அருள் செய்வதே நலம்*  அன்றி என்பால்-

    பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை* 
    தன்னை என் பார்ப்பர்?*  இராமாநுச! உன்னைச் சார்ந்தவரே?


    சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ்,*  அன்பு தான்மிகவும்-
    கூர்ந்தது*  அத் தாமரைத் தாள்களுக்கு*  உன்தன் குணங்களுக்கே-

    தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை  நீ செய்வினை*  அதனால்- 
    பேர்ந்தது*  வண்மை இராமாநுச! எம் பெருந்தகையே.


    கைத்தனன் தீய சமயக் கலகரை*  காசினிக்கே-
    உய்த்தனன்*  தூய மறைநெறி தன்னை,*  என்று உன்னி உள்ளம்-

    நெய்த்தவன் போடிருந்தது  ஏத்தும் நிறை புகழோருடனே*
    வைத்தனன் என்னை*  இராமாநுசன் மிக்க வண்மைசெய்தே.


    வண்மையினாலும் தன் மா தகவாலும்*  மதிபுரையும்- 
    தண்மையினாலும்*  இத் தாரணியோர்கட்குத்*  தான்சரணாய்-

    உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை*  உன்னும்-
    திண்மை அல்லால் எனக்கில்லை,*  மற்றோர் நிலை தேர்ந்திடிலே.


    தேரார் மறையின் திமெறன்று*  மாயவன் தீயவரைக்- 
    கூராழி கொண்டு குறைப்பது*  கொண்டல் அனையவண்மை-

    ஏரார் குணத்து எம் இராமாநுசன்*  அவ்வெழில் மறையில்- 
    சேராதவரைச் சிதைப்பது,*  அப்போது ஒரு சிந்தைசெய்தே.


    செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும்*  திருவரங்கர் 
    கைத்தலத்து ஆழியும்  சங்கமும் ஏந்தி,*  நங்கண் முகப்பே-

    மொய்த்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்*   நின்புகழே- 
    மொய்த்தலைக்கும் வந்து*  இராமாநுச! என்னை முற்றுநின்றே.


    நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,*  நிறை வேங்கடப்பொற்
    குன்றமும்*  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*

    உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
    என்தனக்கும் அது,*  இராமாநுச! இவை ஈந்தருளே. (2)


    ஈந்தனன் ஈயாத இன்னருள்*  எணிண்ல் மறைக்குறும்பைப்-
    பாய்ந்தனன்*  அம்மறைப் பல்பொருளால்,*  இப் படியனைத்தும்-

    ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை*  வேர்பறியக்-
    காய்ந்தனன்*  வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே?


    கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி*  கருதரிய-
    வருத்தத்தினால்*  மிக வஞ்சித்து*  நீயிந்த மண்ணகத்தே-

    திருத்தித் திருமகள் கேள்வனு ஆக்கிய பின்*  என் நெஞ்சில்-
    பொருத்தப் படாது,*  எம்இராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே.


    பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,*  இந்தப் பூதலத்தே- 
    மெய்யைப் புரக்கும்*  இராமாநுசன் நிற்க,*  வேறுநம்மை-

    உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே* 
    ஐயப்படா நிற்பர்*  வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே.


    நல்லார் பரவும் இராமாநுசன்,*  திரு நாமம் நம்ப-
    வல்லார் திறத்தை*  மறவாதவர்கள் எவர்,*  அவர்க்கே-

    எல்லாவிடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*
    சொல்லால் மனத்தால்*  கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.


    சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,*  தொண்டு பட்டவர்பால்- 
    சார்வின்றி நின்ற எனக்கு,*  அரங்கன் செய்ய தாளிணைகள்-

    பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுச!*  இனிஉன்- 
    சீர் ஒன்றிய கருணைக்கு,*  இல்லை மாறு தெரிவுறிலே.


    தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,*  வெந் தீவினையால்- 
    உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,*  ஒரு பொழுதில்-

    பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ!* 
    தெரிவுற்ற கீர்த்தி,*  இராமாநுசன் என்னும் சீர் முகிலே.


    சீர்கொண்டு பேரறம் செய்து,*  நல்வீடு செறிதும் என்னும்* 
    பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,*  உன் பதயுகமாம்-

    ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்*  உன்னுடைய- 
    கார்கொண்ட வண்மை*  இராமாநுச! இது கண்டுகொள்ளே.


    கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை*  காண்டலுமே-
    தொண்டு கொண்டேன்*  அவன் தொண்டர் பொற்றாளில்*  என் தொல்லை வெம்நோய்-

    விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை*  வாய்மடுத்து இன்று-
    உண்டு கொண்டேன்,*  இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.


    ஓதிய வேதத்தின் உட்பொருளாய்,*  அதன் உச்சிமிக்க-
    சோதியை*  நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*

    பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும்பெரியோர்*
    பாதமல்லால் என்தன் ஆர் உயிர்க்கு*  யாதொன்றும் பற்றில்லையே.


    பற்றா மனிசரைப் பற்றி*  அப்பற்று விடாதவரே- 
    உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,*  ஒள்ளியநூல்-

    கற்றார் பரவும் இராமாநுசனை*  கருதும் உள்ளம்-
    பெற்றார் எவர்,*  அவர் எம்மை நின்றளும் பெரியவரே.


    பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்*  தன் குணங்கட்கு
    உரியசொல் என்றும்*  உடையவன் என்றென்று*  உணர்வில் மிக்கோர்-

    தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன்*  மறை தேர்ந்துலகில்-
    புரியும் நல்ஞானம்*  பொருந்தாதவரை பொரும் கலியே.


    கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்*  கலைப் பெருமான்- 
    ஒலிமிக்க பாடலை உண்டு*  தன்னுள்ளம் தடித்து,*  அதனால்-

    வலிமிக்க சீயம் இராமாநுசன்*  மறைவாதியராம்* 
    புலிமிக்கது என்று,*  இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.


    போற்றரும் சீலத்து இராமாநுச*  நின் புகழ் தெரிந்து-
    சாற்றுவனேல்*  அது தாழ்வு அது தீரில்,*  உன் சீர்தனக்கோர்-

    ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்திய;ன்றி 
    ஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே.


    நினையார் பிறவியை நீக்கும் பிரானை,*  இந் நீணிலத்தே-
    எனையாள வந்த இராமாநுசனை*  இருங் கவிகள்-

    புனையார் புனையும் பெரியவர் தாள்களில்*  பூந்தொடையல்- 
    வனையார்*  பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.


    மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,*  அவப் பொருளாம்-
    இருள்சுரந்து எய்த்த*  உலகிருள் நீங்கத்,*  தன் ஈண்டியசீர்-

    அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும் 
    பொருள் சுரந்தான்,*  எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே. 


    புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,*  அடி போற்றி செய்யும்-
    நுண்ணருங் கேள்வி*  நுவன்றுமிலேன்,*  செம்மை நூற்புலவர்க்கு-

    எண்ணருங் கீர்த்தி இராமாநுச!  இன்று நீபுகுந்து*  என்- 
    கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்*  நின்ற இக் காரணம் கட்டுரையே.


    கட்டப் பொருளை மறைப்பொருள் என்று*  கயவர்சொல்லும்- 
    பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,*  என் பெரு வினையைக்-

    கிட்டி கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி* 
    வெட்டிக் களைந்த*  இராமாநுசன் என்னும் மெய்த்தவனே.


    தவம் தரும் செல்வம் தகவும் தரும்,*  சலியாப்பிறவிப்-
    பவம் தரும்*  தீவினை பாற்றித் தரும்*  பரந்தாமம் என்னும்-

    திவம்தரும் தீதில் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*
    உவந்தருந்தேன்,*  அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.


    உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து*  அவர்க்குஉயவே-
    பண்ணும் பரனும் பரிவிலனாம்படி*  பல்லுயிர்க்கும்-

    விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்*
    மண்ணின் தலத்து உதித்து*  உய்மறை நாலும் வளர்த்தனனே.


    வளரும் பிணிகொண்ட வல்வினையால்*  மிக்க நல்வினையில்-
    கிளரும் துணிவு கிடைத்தறியாது*  முடைத்தலையூன்-

    தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*
    உளர் எம் இறைவர்*  இராமாநுசன் தன்னை உற்றவரே.


    தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,*  மன்னு தாமரைத் தாள்- 
    தன்னை உற்றாட்செய்ய*  என்னை உற்றான் இன்று*  தன்தகவால்- 

    தன்னையுற்றார் அன்றி தன்மை உற்றாரில்லை என்றறிந்து* 
    தன்னை உற்றாரை*  இராமாநுசன் குணம் சாற்றிடுமே.


    இடுமே இனிய சுவர்க்கத்தில்*  இன்னும் நரகிலிட்டுச்-
    சுடுமே?  அவற்றை*  தொடர்தரு தொல்லை*  சுழல்பிறப்பில்-

    நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
    விடுமே? சரணமென்றால்,*  மனமே! நையல் மேவுதற்கே? (2)


    தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்*  தாழ்சடையோன்- 
    சொற்கற்ற சோம்பரும்*  சூனிய வாதரும்*  நான்மறையும்-

    நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்*  நீள் நிலத்தே- 
    பொற்கற்பகம்,*  எம் இராமானுச முனி போந்தபின்னே.


    போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு*  உனதடிப் போதில் ஒண்சீ- 
    ராம் தெளி தேன் உண்டு*  அமர்ந்திட வேண்டி,*  நின் பாலதுவே- 

    ஈந்திட வேண்டும் இராமாநுச! இது அன்றியொன்றும்*  
    மாந்த கில்லாது,*  இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.   


    மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு*  மதி மயங்கித்- 
    துயக்கும் பிறவியில்*  தோன்றிய என்னை*  துயரகற்றி- 

    உயக்கொண்டு நல்கும் இராமாநுச! என்றது உன்னையுன்னி* 
    நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,*  நல்லவர் என்றும்நைந்தே.


    நையும் மனம் உன் குணங்களை உன்னி*  என் நாஇருந்துஎம்-
    ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்*  அருவினையேன்-

    கையும் தொழும் கண் கருதிடுங் காண க் கடல்புடைசூழ்*
    வையம் இதனில்*  உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? 


    வளர்ந்த*  வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்- 
    கிளர்ந்த*  பொன்னாகம் கிழித்தவன்*  கீர்த்திப் பயிரெழுந்து- 

    விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்* 
    களைந்து நல் ஞானம் அளித்தனன்*  கையில் கனியென்னவே.


    கையில் கனியென்னக்*   கண்ணனைக் காட்டித் தரிலும்*  உன் தன்- 
    மெய்யில் பிறங்கிய*  சீரன்றி வேண்டிலன் யான்,*  நிரயத்- 

    தொய்யில் கிடக்கிலும் சோதி விண்  சேரிலும் இவ்வருள்நீ* 
    செய்யில் தரிப்பன்*  இராமாநுச! என் செழுங் கொண்டலே!


    செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
    விழுந்திருப்பார் நெஞ்சில்*  மேவு நல்ஞானி*   நல் வேதியர்கள்-

    தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
    எழுந்திரைத்து ஆடும் இடம்*  அடியேனுக்கு இருப்பிடமே. (2)  


    இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍- 
    பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-

    இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து*  இன்று அவன்வந்து-  
    இருப்பிடம்*  என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)


    இன்புற்ற சீலத்து இராமானுச,*  என்றும் எவ்விடத்தும்- 
    என்புற்ற நோய்*  உடல் தோறும் பிறந்து இறந்து*  எண்ணரிய‍‍-

    துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு*  உன் தொண்டர்கட்கே‍- 
    அன்புற்று இருக்கும்படி,*  என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 


    அங்கயல்பாய்  வயல் தென் அரங்கன்,*  அணி ஆகமன்னும்- 
    பங்கய மாமலர்*  பாவையைப் போற்றுதும்   பத்தியெல்லாம்- 

    தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே!  நம் தலைமிசையே *
    பொங்கிய கீர்த்தி *  இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)