பிரபந்த தனியன்கள்

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், 
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற 
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம் 
பெருமானை, எப்பொழுதும் பேசு.
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

   பாசுரங்கள்


    காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
    நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*

    மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
    ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)


    பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
    அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*

    இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
    அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)


    வேத நூல் பிராயம் நூறு*  மனிசர் தாம் புகுவ ரேலும்,*
    பாதியும் உறங்கிப் போகும்*  நின்றதில் பதினையாண்டு,*

    பேதை பாலகனதாகும்*  பிணி பசி மூப்புத் துன்பம், *
    ஆதலால் பிறவி வேண்டேன் *  அரங்கமா நகர் உளானே.*


    மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
    கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*

    இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
    பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  


    பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
    உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*

    தண்டுழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி யாடி,* 
    தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!


    மறம்சுவர் மதிளெடுத்து*  மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
    புறம்சுவர் ஓட்டை மாடம்*  புரளும்போது அறிய மாட்டீர்,*

    அறம் சுவராகி நின்ற*  அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,* 
    புறம்சுவர் கோலம் செய்து*  புள் கவ்வக் கிடக்கின்றீரே!   


    புலையறம் ஆகிநின்ற*  புத்தொடு சமண மெல்லாம்,* 
    கலையறக் கற்ற மாந்தர்*  காண்பரோ கேட்பரோதாம்,*

    தலை அறுப்புண்டும் சாவேன்*  சத்தியம் காண்மின் ஐயா,* 
    சிலையினால்  இலங்கை செற்ற*  தேவனே தேவன் ஆவான்.   


    வெறுப்பொடு சமணர் முண்டர்*  விதியில் சாக்கியர்கள்,*  நின்பால்- 
    பொறுப்பரியனகள் பேசில்*  போவதே நோயதாகி* 

    குறிப்பெனக் கடையும் ஆகில்*  கூடுமேல் தலையை*  ஆங்கே,- 
    அறுப்பதே கருமம் கண்டாய்*  அரங்கமா நகருளானே!       


    மற்றுமோர் தெய்வம் உண்டே*  மதியிலா மானி டங்காள்,*
    உற்றபோது அன்றி நீங்கள்*  ஒருவன் என்று உணர மாட்டீர் ,*


    அற்றம்மேல் ஒன்று அறியீர் *  அவனல்லால் தெய்வ  மில்லை,* 
    கற்றினம் மேய்த்த  எந்தை*  கழலிணை பணிமின் நீரே.



    நாட்டினான் தெய்வம் எங்கும்*  நல்லதோர் அருள் தன்னாலே.* 
    காட்டினான் திருவரங்கம்*  உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,* 

    கேட்டிரே நம்பிமீர்காள்!*  கெருட வாகனனும் நிற்க,* 
    சேட்டை தன் மடியகத்துச்*  செல்வம் பார்த்து இருக்கின்றீரே.  


    ஒருவில்லால் ஓங்கு முந்நீர்*  அடைத்து உலகங்கள் உய்ய,* 
    செருவிலே அரக்கர் கோனைச்*  செற்ற நம் சேவகனார்,*

    மருவிய பெரிய கோயில்*  மதில் திருவரங்கம் என்னா,* 
    கருவிலே திருவிலாதீர்!*  காலத்தைக் கழிக்கின்றீரே.   


    நமனும் முற்கலனும் பேச*  நரகில் நின்றார்கள் கேட்க,* 
    நரகமே சுவர்க்கம் ஆகும்*  நாமங்கள் உடையன் நம்பி,*

    அவனது ஊர் அரங்கம் என்னாது*  அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,* 
    கவலையுள் படுகின்றார் என்று*  அதனுக்கே கவல்கின்றேனே!  


    எறியுநீர் வெறிகொள் வேலை*  மாநிலத்து உயிர்கள்எல்லாம்,* 
    வெறிகொள் பூந்துளவ மாலை*  விண்ணவர் கோனை ஏத்த,*

    அறிவிலா மனிசர் எல்லாம்*  அரங்கமென்று அழைப்பராகில்,* 
    பொறியில்வாழ் நரகம் எல்லாம்*  புல்லெழுந்து ஒழியுமன்றே?


    வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 
    கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*

    அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
    மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  


    மெய்யர்க்கே மெய்யனாகும்*  விதியிலா என்னைப் போல,*
    பொய்யர்க்கே பொய்யனாகும்*  புட்கொடி உடைய கோமான்,*

    உய்யப்போம் உணர்வினார்கட்கு*  ஒருவன் என்றுணர்ந்த பின்னை,* 
    ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்*  அழகன்ஊர் அரங்கம் அன்றே?   


    சூதனாய்க் கள்வனாகித்*  தூர்த்தரோடு இசைந்த காலம்,* 
    மாதரார் கயற்கண் என்னும்*  வலையுள் பட்டு அழுந்துவேனை,*

    போதரே என்று சொல்லி*  புந்தியுள் புகுந்து தன்பால்- 
    ஆதரம் பெருக வைத்த*  அழகனூர் அரங்கம் அன்றே? 


    விரும்பி நின்று ஏத்த மாட்டேன்*  விதியிலேன் மதியொன்றில்லை,* 
    இரும்புபோல் வலிய நெஞ்சம்*  இறை-இறை உருகும் வண்ணம்,*

    சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
    கரும்பினைக் கண்டு கொண்டு*  என் கண்ணினை களிக்கு மாறே!      


    இனிதிரைத் திவலை மோத*  எறியும்தண் பரவை மீதே,* 
    தனிகிடந்து அரசு செய்யும்*  தாமரைக் கண்ணன் எம்மான்,*

    கனியிருந்து அனைய செவ்வாய்க்*  கண்ணனைக் கண்ட கண்கள்,* 
    பனிஅரும்பு உதிருமாலோ*  என்செய்கேன் பாவியேனே!  


    குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
    வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*

    கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
    உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)


    பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
    மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*

    தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
    ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  


    பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,* 
    துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*

    அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 
    மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? 


    பேசிற்றே பேசல் அல்லால்*  பெருமை ஒன்று உணரலாகாது,* 
    ஆசற்றார் தங்கட்குஅல்லால்*  அறியலா வானும்மல்லன்,*

    மாசற்றார் மனத்துளானை*  வணங்கி நாம் இருப்பதல்லால்,* 
    பேசத்தான் ஆவதுண்டோ?*  பேதை நெஞ்சே!நீ சொல்லாய். 


    கங்கயிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*
    பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*


    எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
    எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!



    வெள்ளநீர் பரந்து பாயும்*  விரிபொழி லரங்கந் தன்னுள்,*
    கள்ளனார் கிடந்த வாறும்*  கமலநன் முகமும் கண்டு*


    உள்ளமே! வலியைப் போலும்*  ஒருவனென் றுணர மாட்டாய்,*
    கள்ளமே காதல் செய்துன்*  கள்ளத்தே கழிக்கின் றாயே!



    குளித்துமூன் றனலை யோம்பும்*  குறிகொளந் தணமை தன்னை,*
    ஒளித்திட்டே னென்க ணில்லை*  நின்கணும் பத்த னல்லேன்,*


    களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
    அளித்தெனக் கருள்செய் கண்டாய்*  அரங்கமா நகரு ளானே!



    போதெல்லாம் போது கொண்டுன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
    தீதிலா மொழிகள் கொண்டுன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*


    காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலே னதுதன் னாலே,*
    ஏதிலே னரங்கர்க்கு எல்லே!*  எஞ்செய்வான் தோன்றி னேனே!



    குரங்குகள் மலையை தூக்கக்*  குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
    தரங்கநீ ரடைக்க லுற்ற*  சலமிலா அணிலம் போலேன்,*


    மரங்கள்போல் வலிய நெஞ்சம்*  வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
    அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே*  னயர்க்கின் றேனே!



    உம்பரா லறிய லாகா*  ஒளியுளார் ஆனைக் காகி,*
    செம்புலா லுண்டு வாழும்*  முதலைமேல் சீறி வந்தார்,*


    நம்பர மாய துண்டே?*  நாய்களோம் சிறுமை யோரா,*
    எம்பிராற் காட்செய் யாதே*  எஞ்செய்வான் தோன்றி னேனே!



    ஊரிலேன் காணி யில்லை *  உறவுமற் றொருவ ரில்லை,*
    பாரில்நின் பாத மூலம்*  பற்றிலேன் பரம மூர்த்தி,*


    காரொளி வண்ண னே!(என்)*  கண்ணனே! கதறு கின்றேன்,*
    ஆருளர்க் களைக ணம்மா!*  அரங்கமா நகரு ளானே!



    மனத்திலோர் தூய்மை யில்லை*  வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
    சினத்தினால் செற்றம் நோக்கித்*  தீவிளி விளிவன் வாளா,*


    புனத்துழாய் மாலை யானே!*  பொன்னிசூழ் திருவ ரங்கா,*
    எனக்கினிக் கதியென் சொல்லாய்*  என்னையா ளுடைய கோவே!



    தவத்துளார் தம்மி லல்லேன்*  தனம்படத் தாரி லல்லேன்,*
    உவர்த்தநீர் போல*  வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*


    துவர்த்தசெவ் வாயி னார்க்கே*  துவக்கறத் துரிச னானேன்,*
    அவத்தமே பிறவி தந்தாய்*  அரங்கமா நகரு ளானே!



    ஆர்த்துவண் டலம்பும் சோலை*  அணிதிரு வரங்கந் தன்னுள்,*
    கார்த்திர ளனைய மேனிக்*  கண்ணனே! உன்னைக் காணும்,*


    மார்க்கமொன் றறிய மாட்டா*  மனிசரில் துரிச னாய,*
    மூர்க்கனேன் வந்து நின்றேன்,*  மூர்க்கனேன் மூர்க்க னேனே.



    மெய்யெலாம் போக விட்டு*  விரிகுழ லாரில் பட்டு,*
    பொய்யெலாம் பொதிந்து கொண்ட*  போட்கனேன் வந்து நின்றேன்,*


    ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
    பொய்யனேன் வந்து நின்றேன்*  பொய்யனேன் பொய்ய னேனே.



    உள்ளத்தே யுறையும் மாலை*  உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
    கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*  தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<


    உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*  உடனிருந் தறிதி யென்று,*
    வெள்கிப்போ யென்னுள் ளேநான்*  விலவறச் சிரித்திட் டேனே!



    தாவியன் றுலக மெல்லாம்*  தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
    சேவியே னுன்னை யல்லால்*  சிக்கெனச் செங்கண் மாலே,*


    ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
    பாவியே னுன்னை யல்லால்*  பாவியேன் பாவி யேனே.



    மழைக்கன்று வரைமு னேந்தும்*  மைந்தனே மதுர வாறே,*
    உழைக்கன்றே போல நோக்கம்*  உடையவர் வலையுள் பட்டு,*


    உழைக்கின்றேற் கென்னை நோக்கா*  தொழிவதே,உன்னை யன்றே*
    அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!*  அரங்கமா நகரு ளானே!



    தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
    ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*


    எளியதோ ரருளு மன்றே*  எந்திறத் தெம்பி ரானார்,*
    அளியன்நம் பையல் என்னார்*  அம்மவோ கொடிய வாறே!



    மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
    ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*


    காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
    சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!



    அடிமையில் குடிமை யில்லா*  அயல்சதுப் பேதி மாரில்,*
    குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்ப ரேலும்,*


    முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற் கன்பு செய்யும்,*
    அடியரை யுகத்தி போலும்*  அரங்கமா நகரு ளானே!



    திருமறு மார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
    மருவிய மனத்த ராகில்*  மாநிலத் துயிர்க ளெல்லாம்,*


    வெருவரக் கொன்று சுட்டிட்*  டீட்டிய வினைய ரேலும்,*
    அருவினைப் பயன துய்யார்*  அரங்கமா நகரு ளானே!



    வானுளா ரறிய லாகா*  வானவா! என்ப ராகில்,*
    தேனுலாந் துளப மாலைச்*  சென்னியாய்! என்ப ராகில்,*


    ஊனமா யினகள் செய்யும்*  ஊனகா ரகர்க ளேலும்,*
    போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனித மன்றே?



    பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
    இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*


    தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
    வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!



    அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
    தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*


    நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
    அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!



    பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
    எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*


    விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
    கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)



    வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
    கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*

    துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
    இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)