பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உயர்வு அற உயர் நலம்*  உடையவன் எவன் அவன்* 
    மயர்வு அற மதி நலம்*  அருளினன் எவன் அவன்*

    அயர்வு அறும் அமரர்கள்*  அதிபதி எவன் அவன்* 
    துயர் அறு சுடர் அடி*  தொழுது எழு என் மனனே! (2)   


    மனன்அகம் மலம் அற*  மலர்மிசை எழுதரும்* 
    மனன் உணர்வு அளவு இலன்,*  பொறி உணர்வு அவை இலன்* 

    இனன் உணர், முழு நலம்,*  எதிர் நிகழ் கழிவினும்* 
    இனன் இலன் எனன் உயிர்,*  மிகுநரை இலனே. 


    இலன் அது உடையன் இது*  என நினைவு அரியவன்* 
    நிலனிடை விசும்பிடை*  உருவினன் அருவினன்*

    புலனொடு புலன் அலன்,*  ஒழிவு இலன் பரந்த*  அந்- 
    நலன் உடை ஒருவனை*  நணுகினம் நாமே.*


    நாம் அவன் இவன் உவன்,*  அவள் இவள் உவள் எவள்* 
    தாம் அவர் இவர் உவர்,*  அது இது உது எது*

    வீமவை இவை உவை,*  அவை நலம், தீங்கு அவை* 
    ஆமவை ஆயவை ஆய்*  நின்ற அவரே.*


    அவரவர் தமதமது*  அறிவு அறி வகைவகை* 
    அவரவர் இறையவர்*  என அடி அடைவர்கள்*

    அவரவர் இறையவர்*  குறைவு இலர் இறையவர்* 
    அவரவர் விதிவழி*  அடைய நின்றனரே.  


    நின்றனர் இருந்தனர்*  கிடந்தனர் திரிந்தனர்* 
    நின்றிலர் இருந்திலர்*  கிடந்திலர் திரிந்திலர்* 

    என்றும் ஓர் இயல்வினர்*  என நினைவு அரியவர்* 
    என்றும் ஓர் இயல்வொடு*  நின்ற எம் திடரே.


    திட விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசைப்*
    படர் பொருள் முழுவதும் ஆய்*  அவைஅவைதொறும்* 

    உடல்மிசை உயிர் எனக்*  கரந்து எங்கும் பரந்துளன்* 
    சுடர் மிகு சுருதியுள்*  இவை உண்ட சுரனே.     


    சுரர் அறிவு அரு நிலை*  விண் முதல் முழுவதும்* 
    வரன் முதலாய் அவை*  முழுது உண்ட பரபரன்*

    புரம் ஒரு மூன்று எரித்து*  அமரர்க்கும் அறிவியந்து* 
    அரன் அயன் என*  உலகு அழித்து அமைத்து உளனே.


    உளன் எனில் உளன் அவன்*  உருவம் இவ் உருவுகள்* 
    உளன் அலன் எனில், அவன்*  அருவம் இவ் அருவுகள்* 

    உளன் என இலன் என*  இவை குணம் உடைமையில்* 
    உளன் இரு தகைமையொடு*  ஒழிவு இலன் பரந்தே.


    பரந்த தண் பரவையுள்*  நீர்தொறும் பரந்துளன்* 
    பரந்த அண்டம் இது என:*  நிலம் விசும்பு ஒழிவு அறக்*

    கரந்த சில் இடந்தொறும்*  இடம் திகழ் பொருள்தொறும்* 
    கரந்து எங்கும் பரந்துளன்:*  இவை உண்ட கரனே.   


    கர விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசை* 
    வரன் நவில் திறல் வலி*  அளி பொறை ஆய்நின்ற*

    பரன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொல்* 
    நிரல் நிறை ஆயிரத்து*  இவை பத்தும் வீடே. (2)


    வீடுமின் முற்றவும்* வீடு செய்து*  உம் உயிர்

    வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)  


    மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்* 

    என்னும் இடத்து*  இறை உன்னுமின் நீரே.


    நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து*  இறை

    சேர்மின் உயிர்க்கு*  அதன் நேர் நிறை இல்லே.


    இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*

    எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.


    அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*

    செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.


    பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*

    பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.


    அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு*  ஈசன்

    அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.


    உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*

    உள்ளிக் கெடுத்து*  இறை உள்ளில் ஒடுங்கே.


    ஒடுங்க அவன்கண்*  ஒடுங்கலும் எல்லாம்*

    விடும் பின்னும் ஆக்கை*  விடும்பொழுது எண்ணே.


    எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*

    வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே.


    சேர்த்தடத்*  தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*

    சீர்த் தொடை ஆயிரத்து*  ஓர்த்த இப்பத்தே. (2)


    பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 
    வித்தகன்*  மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*

    மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 
    எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   


    எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
    ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*

    தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
    அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 


    அமைவு உடை அறநெறி*  முழுவதும் உயர்வு அற உயர்ந்து* 
    அமைவு உடை முதல் கெடல்*  ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*

    அமைவு உடை அமரரும்*  யாவையும் யாவரும் தான் ஆம்* 
    அமைவு உடை நாரணன்*  மாயையை அறிபவர் யாரே?    


    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு அரிய எம் பெருமான்* 
    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு எளிய எம் பெருமான்*

    பேரும் ஓர் ஆயிரம்*  பிறபல உடைய எம் பெருமான்* 
    பேரும் ஓர் உருவமும்*  உளது இல்லை இலது இல்லை பிணக்கே.  


    வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 
    களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 

    தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 
    இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.


    நினைந்து நைந்து உள் கரைந்து உருகி*  இமையோர் பலரும் முனிவரும்* 
    புனைந்த கண்ணி நீர் சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*

    நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்துஆய் முதலில் சிதையாமே* 
    மனம் செய் ஞானத்து உன் பெருமை*  மாசூணாதோ? மாயோனே!


    மா யோனிகளாய் நடை கற்ற*  வானோர் பலரும் முனிவரும்* 
    நீ யோனிகளைப் படை என்று*  நிறை நான்முகனைப் படைத்தவன்*

    சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால் 
    தாயோன்*  எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்*  தான் ஓர் உருவனே.


    தான் ஓர் உருவே தனிவித்தாய்*  தன்னின் மூவர் முதலாய* 
    வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்*

    தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி*  அதனுள் கண்வளரும்* 
    வானோர் பெருமான் மா மாயன்*  வைகுந்தன் எம் பெருமானே.


    மானேய் நோக்கி மடவாளை*  மார்பில் கொண்டாய்! மாதவா!* 
    கூனே சிதைய உண்டை வில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*

    வான் ஆர் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்*  உன்- 
    தேனே மலரும் திருப்பாதம்*  சேருமாறு வினையேனே.


    வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!* 
    மனை சேர் ஆயர் குல முதலே!*  மா மாயனே! மாதவா!*

    சினை ஏய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!* 
    இனையாய் இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.  


    அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை* 
    கடி சேர் தண் அம் துழாய்க்*  கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*

    செடி ஆர் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை* 
    அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? 


    உண்டாய் உலகு ஏழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு* 
    உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்*  உவலை ஆக்கை நிலை எய்தி*

    மண் தான் சோர்ந்தது உண்டேலும்*  மனிசர்க்கு ஆகும் பீர்*  சிறிதும்- 
    அண்டாவண்ணம் மண் கரைய*  நெய் ஊண் மருந்தோ? மாயோனே!  


    மாயோம் தீய அலவலைப்*  பெரு மா வஞ்சப் பேய் வீயத்* 
    தூய குழவியாய் விடப் பால் அமுதா*  அமுது செய்திட்ட-

    மாயன் வானோர் தனித் தலைவன்*  மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்- 
    தாயோன் தம்மான் என் அம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.


    சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து*  மாயப் பற்று அறுத்து* 
    தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்*  திருத்தி வீடு திருத்துவான்*

    ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி*  அகலம் கீழ் மேல் அளவு இறந்து* 
    நேர்ந்த உருவாய் அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே!


    மாலே மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 
    மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 
    பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே.


    பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*

    பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)


    மதுவார் தண் அம் துழாயான்*  முது வேத முதலவனுக்கு*

    எதுவே? என்பணி? என்னாது*  அதுவே ஆள் செய்யும் ஈடே


    ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*

    பாடும் என் நா அவன் பாடல்*  ஆடும் என் அங்கம் அணங்கே.


    அணங்கு என ஆடும் என் அங்கம்*  வணங்கி வழிபடும் ஈசன்*

    பிணங்கி அமரர் பிதற்றும்*  குணங்கெழு கொள்கையினானே*


    கொள்கை கொளாமை இலாதான்*  எள்கல் இராகம் இலாதான்*

    விள்கை விள்ளாமை விரும்பி*   உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.


    அமுதம் அமரர்கட்கு ஈந்த*  நிமிர் சுடர் ஆழி நெடுமால்*

    அமுதிலும் ஆற்ற இனியன்*  நிமிர் திரை நீள் கடலானே.


    நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்*  தோள்கள் தலை துணிசெய்தான்*

    தாள்கள் தலையில் வணங்கி*  நாள்கள் தலைக்கழிமின்னே.


    கழிமின் தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின் அவனை தொழுதால்*

    வழி நின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே.


    தரும அரும் பயன் ஆய*  திருமகளார் தனிக் கேள்வன்*

    பெருமை உடைய பிரானார்*  இருமை வினை கடிவாரே. 


    கடிவார் தீய வினைகள்*  நொடியாரும் அளவைக்கண்*

    கொடியா அடு புள் உயர்த்த*  வடிவு ஆர் மாதவனாரே.


    மாதவன்பால் சடகோபன்*   தீது அவம் இன்றி உரைத்த*

    ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  ஓத வல்லார் பிறவாரே.  


    பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று.* 
    துறவிச் சுடர் விளக்கம்*  தலைப்பெய்வார்,*

    அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
    மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே.


    வைப்பாம் மருந்து ஆம்*  அடியரை வல்வினைத்* 
    துப்பாம் புலன் ஐந்தும்*  துஞ்சக்கொடான் அவன்,*

    எப்பால் எவர்க்கும்*  நலத்தால் உயர்ந்து உயர்ந்து,* 
    அப்பாலவன் எங்கள்*  ஆயர் கொழுந்தே.


    ஆயர் கொழுந்தாய்*  அவரால் புடையுண்ணும்,* 
    மாயப் பிரானை*  என் மாணிக்கச் சோதியை,*

    தூய அமுதைப்*  பருகிப் பருகி,*  என்- 
    மாயப் பிறவி*  மயர்வு அறுத்தேனே.


    மயர்வு அற என் மனத்தே*  மன்னினான் தன்னை,* 
    உயர்வினையே தரும்*  ஒண் சுடர்க் கற்றையை,*

    அயர்வு இல் அமரர்கள்,*  ஆதிக் கொழுந்தை,*  என் 
    இசைவினை*  என் சொல்லி யான் விடுவேனோ?  


    விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 
    நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*

    தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 
    விடவே செய்து*  விழிக்கும் பிரானையே.


    பிரான்*  பெரு நிலம் கீண்டவன்,*  பின்னும் 
    விராய்*  மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*

    மராமரம் எய்த மாயவன்,*  என்னுள் 
    இரான் எனில்*  பின்னை யான் ஒட்டுவேனோ?   


    யான் ஒட்டி என்னுள்*  இருத்துவன் என்றிலன்,* 
    தான் ஒட்டி வந்து*  என் தனி நெஞ்சை வஞ்சித்து,*

    ஊன் ஒட்டி நின்று*  என் உயிரில் கலந்து,*  இயல் 
    வான் ஒட்டுமோ?*  இனி என்னை நெகிழ்க்கவே.


    என்னை நெகிழ்க்கிலும்*  என்னுடை நன் நெஞ்சம்- 
    தன்னை,*  அகல்விக்கத் தானும்*  கில்லான் இனி,*

    பின்னை நெடும் பணைத் தோள்*  மகிழ் பீடு உடை,* 
    முன்னை அமரர்*  முழுமுதல் தானே. 


    அமரர் முழுமுதல்*  ஆகிய ஆதியை,* 
    அமரர்க்கு அமுது ஈந்த*  ஆயர் கொழுந்தை,*

    அமர அழும்பத்*  துழாவி என் ஆவி,* 
    அமரத் தழுவிற்று*  இனி அகலும்மோ.


    அகலில் அகலும்*  அணுகில் அணுகும்,* 
    புகலும் அரியன்*  பொரு அல்லன் எம்மான்,*

    நிகர் இல் அவன் புகழ்*  பாடி இளைப்பு இலம்,* 
    பகலும் இரவும்*  படிந்து குடைந்தே.


    குடைந்து வண்டு உண்ணும்*  துழாய் முடியானை,* 
    அடைந்த தென் குருகூர்ச்*  சடகோபன்,*

    மிடைந்த சொல் தொடை*  ஆயிரத்து இப்பத்து,* 
    உடைந்து நோய்களை*  ஓடுவிக்குமே.


    ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*

    நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே.


    அம்மானாய்ப் பின்னும்,*  எம்மாண்பும் ஆனான்,*

    வெம் மா வாய் கீண்ட,*  செம்மா கண்ணனே.


    கண் ஆவான் என்றும்,*  மண்ணோர் விண்ணோர்க்கு,*

    தண் ஆர் வேங்கட,*  விண்ணோர் வெற்பனே.


    வெற்பை ஒன்று எடுத்து,*  ஒற்கம் இன்றியே,*

    நிற்கும் அம்மான் சீர்,*  கற்பன் வைகலே.


    வைகலும் வெண்ணெய்,*  கைகலந்து உண்டான்,* 

    பொய் கலவாது,*  என்  மெய்கலந்தானே.


    கலந்து என் ஆவி,*  நலம்கொள்நாதன்,* 

    புலன் கொள் மாணாய்,*  நிலம்கொண்டானே.


    கொண்டான் ஏழ் விடை,*   உண்டான் ஏழ்வையம்,*

    தண் தாமம் செய்து,*  என் எண்தானானானே.


    ஆனான் ஆன் ஆயன்,*  மீனோடேனமும்;* 

    தான் ஆனான் என்னில்,*  தானாயசங்கே.


    சங்கு சக்கரம்,*  அங்கையில் கொண்டான்,*

    எங்கும் தானாய,*  நங்கள் நாதனே.


    நாதன்ஞாலம்கொள்*  பாதன், என்ம்மான்,*

    ஓதம்போல்கிளர்,*   வேதநீரனே.


    நீர்புரைவண்ணன்,*  சீர்சடகோபன்,*

    நேர்தல் ஆயிரத்து,*  ஓர்தல்இவையே.


    உடன் அமர் காதல் மகளிர்*  திருமகள் மண்மகள் ஆயர்- 
    மட மகள் என்று இவர் மூவர் ஆளும்*  உலகமும் மூன்றே,*

    உடன் அவை ஒக்க விழுங்கி*  ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,* 
    கடல் மலி மாயப் பெருமான்*  கண்ணன் என் ஒக்கலையானே.  


    ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச், 
    செக்கம் செக அன்று அவள்பால்*  உயிர் செக உண்ட பெருமான்,*

    நக்க பிரானோடு அயனும்*  இந்திரனும் முதலாக,* 
    ஒக்கவும் தோற்றிய ஈசன்*  மாயன் என் நெஞ்சின் உளானே.


    மாயன் என் நெஞ்சின் உள்ளான்*  மற்றும் எவர்க்கும் அதுவே,* 
    காயமும் சீவனும் தானே*  காலும் எரியும் அவனே,*

    சேயன் அணியன் எவர்க்கும்*  சிந்தைக்கும் கோசரம் அல்லன்,* 
    தூயன் துயக்கன் மயக்கன்*  என்னுடைத் தோளிணையானே.  


    தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்*  சுடர் முடி மேலும்,* 
    தாள் இணை மேலும் புனைந்த*  தண் அம் துழாய் உடை அம்மான்*

    கேள் இணை ஒன்றும் இலாதான்*  கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,* 
    நாள் அணைந்து ஒன்றும் அகலான்*  என்னுடை நாவின் உளானே.


    பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
    திருமா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*

    ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
    கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே.


    கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
    எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*

    மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
    விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.


    எம்பிரானை*  எந்தை தந்தை தந்தைக்கும்- 
    தம்பிரானை,*  தண் தாமரைக் கண்ணனை,*

    கொம்பு அராவு*  நுண் நேர் இடை மார்பனை,* 
    எம்பிரானைத் தொழாய்*  மட நெஞ்சமே.


    நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
    என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*

    மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
    துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.


    கண்டாயே நெஞ்சே*  கருமங்கள் வாய்க்கின்று,*  ஓர் 
    எண் தானும் இன்றியே*  வந்து இயலுமாறு,*

    உண்டானை*  உலகு ஏழும் ஓர் மூவடி 
    கொண்டானைக்,*  கண்டுகொண்டனை நீயுமே.   


    நீயும் நானும்*  இந் நேர்நிற்கில்,*  மேல்மற்றோர். 
    நோயும் சார்கொடான்*  நெஞ்சமே சொன்னேன்,* 

    தாயும் தந்தையும் ஆய்*  இவ் உலகினில்,* 
    வாயும் ஈசன்*  மணிவண்ணன் எந்தையே.  


    எந்தையே என்றும்*  எம் பெருமான் என்றும்,* 
    சிந்தையுள் வைப்பன்*  சொல்லுவன் பாவியேன்,*

    எந்தை எம் பெருமான் என்று*  வானவர்,* 
    சிந்தையுள் வைத்துச்*  சொல்லும் செல்வனையே.


    செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,* 
    மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே,*

    அல்லும் நன்பகலும்*  இடைவீடு இன்றி,* 
    நல்கி என்னை விடான்*  நம்பி நம்பியே.


    நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
    செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*

    உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
    எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?


    மறப்பும் ஞானமும்*  நான் ஒன்று உணர்ந்திலன்,* 
    மறக்கும் என்று*  செந்தாமரைக் கண்ணொடு,*

    மறப்பு அற என் உள்ளே*  மன்னினான் தன்னை,* 
    மறப்பனோ? இனி*  யான் என் மணியையே.   


    மணியை வானவர் கண்ணனை*  தன்னது ஓர்- 
    அணியை,*  தென் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    பணிசெய் ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    தணிவிலர் கற்பரேல்,*  கல்வி வாயுமே.   


    வாயும் திரை உகளும்*  கானல் மடநாராய்,* 
    ஆயும் அமர் உலகும்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* 

    நோயும் பயலைமையும்*  மீது ஊர எம்மேபோல்,* 
    நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.  


    கோள் பட்ட சிந்தையையாய்க்*  கூர்வாய அன்றிலே,* 
    சேண் பட்டயாமங்கள்*  சேராது இரங்குதியால்,*

    ஆள் பட்ட எம்மேபோல்,*  நீயும் அரவு அணையான்,* 
    தாள் பட்ட தண் துழாய்த்*  தாமம் காமுற்றாயே.   


    காமுற்ற கையறவோடு*  எல்லே இராப்பகல்,* 
    நீ முற்றக் கண்துயிலாய்*  நெஞ்சு உருகி ஏங்குதியால்,*

    தீ முற்றத் தென் இலங்கை*  ஊட்டினான் தாள் நயந்த,* 
    யாம் உற்றது உற்றாயோ?*  வாழி கனை கடலே


    கடலும் மலையும்*  விசும்பும் துழாய் எம்போல்,* 
    சுடர் கொள் இராப்பகல்*  துஞ்சாயால் தண் வாடாய்,* 

    அடல் கொள் படை ஆழி*  அம்மானைக் காண்பான் நீ,* 
    உடலம் நோய் உற்றாயோ*  ஊழிதோறு ஊழியே.


    ஊழிதோறு ஊழி*  உலகுக்கு நீர்கொண்டு,* 
    தோழியரும் யாமும் போல்*  நீராய் நெகிழ்கின்ற,*

    வாழிய வானமே*  நீயும் மதுசூதன்,* 
    பாழிமையில் பட்டு அவன்கண்*  பாசத்தால் நைவாயே.


    நைவாய எம்மேபோல்*  நாள் மதியே நீ இந் நாள்,* 
    மை வான் இருள் அகற்றாய்*  மாழாந்து தேம்புதியால்,*

    ஐ வாய் அரவு அணைமேல்*  ஆழிப் பெருமானார்,* 
    மெய் வாசகம் கேட்டு*  உன் மெய்ந்நீர்மை தோற்றாயே


    தோற்றோம் மட நெஞ்சம்*  எம் பெருமான் நாரணற்கு*  எம் 
    ஆற்றாமை சொல்லி*  அழுவோமை நீநடுவே,*

    வேற்றோர் வகையில்*  கொடிதாய் எனை ஊழி,* 
    மாற்றாண்மை நிற்றியோ*  வாழி கனை இருளே.


    இருளின் திணி வண்ணம்*  மாநீர்க்கழியே போய்,* 
    மருளுற்று இராப்பகல்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*

    உருளும் சகடம்*  உதைத்த பெருமானார்,* 
    அருளின் பெரு நசையால்*  ஆழாந்து நொந்தாயே.


    நொந்து ஆராக் காதல் நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    நந்தா விளக்கமே,*  நீயும் அளியத்தாய்,*

    செந்தாமரைத் தடங்கண்*  செங்கனி வாய் எம் பெருமான்,* 
    அம் தாமம் தண் துழாய்*  ஆசையால் வேவாயே.  


    வேவு ஆரா வேட்கை நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    ஓவாது இராப்பகல்*  உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*

    மா வாய் பிளந்து*  மருதிடை போய் மண் அளந்த,* 
    மூவா முதல்வா*  இனி எம்மைச் சோரேலே.


    சோராத எப் பொருட்கும்*  ஆதியாம் சோதிக்கே,* 
    ஆராத காதல்*  குருகூர்ச் சடகோபன்,*

    ஓராயிரம் சொன்ன*  அவற்றுள் இவை பத்தும்,* 
    சோரார் விடார் கண்டீர்*  வைகுந்தம் திண்ணனவே.


    திண்ணன் வீடு*  முதல் முழுதும் ஆய்,* 
    எண்ணின் மீதியன்*  எம் பெருமான்,*

    மண்ணும் விண்ணும் எல்லாம்*  உடன் உண்ட,*  நம் 
    கண்ணன் கண் அல்லது*  இல்லை ஓர் கண்ணே.


    ஏ பாவம் பரமே*  ஏழ் உலகும்,* 
    ஈ பாவம் செய்து*  அருளால் அளிப்பார் ஆர்,*

    மா பாவம் விட*  அரற்குப் பிச்சை பெய்,* 
    கோபால கோளரி* ஏறு அன்றியே.


    ஏறனை பூவனை*  பூமகள் தன்னை,* 
    வேறுஇன்றி விண் தொழத்*  தன்னுள் வைத்து,*

    மேல் தன்னை மீதிட*  நிமிர்ந்து மண் கொண்ட.* 
    மால் தனின் மிக்கும் ஓர்*  தேவும் உளதே.  


    தேவும் எப் பொருளும் படைக்கப்,* 
    பூவில் நான்முகனைப் படைத்த,*

    தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,* 
    பூவும் பூசனையும் தகுமே.


    தகும் சீர்த்*  தன் தனி முதலினுள்ளே,* 
    மிகும் தேவும்*  எப் பொருளும் படைக்கத்,*

    தகும் கோலத்*  தாமரைக் கண்ணன் எம்மான்,* 
    மிகும் சோதி*  மேல் அறிவார் எவரே. 


    எவரும் யாவையும்*  எல்லாப் பொருளும்,* 
    கவர்வு இன்றித்*  தன்னுள் ஒடுங்க நின்ற,*

    பவர் கொள் ஞான*  வெள்ளச் சுடர் மூர்த்தி,* 
    அவர் எம் ஆழி*  அம் பள்ளியாரே,  


    பள்ளி ஆல் இலை*  ஏழ் உலகும் கொள்ளும்,* 
    வள்ளல்*  வல் வயிற்றுப் பெருமான்,*

    உள் உள் ஆர் அறிவார்*  அவன் தன்,* 
    கள்ள மாய*  மனக்கருத்தே.


    கருத்தில் தேவும்*  எல்லாப் பொருளும்,* 
    வருத்தித்த*  மாயப் பிரான் அன்றி,*  யாரே

    திருத்தித்*  திண் நிலை மூவுலகும்*  தம்முள் 
    இருத்திக்*  காக்கும் இயல்வினரே. 


    காக்கும் இயல்வினன்*  கண்ண பெருமான்,* 
    சேர்க்கை செய்து*  தன் உந்தியுள்ளே,*

    வாய்த்த திசைமுகன்*  இந்திரன் வானவர்,* 
    ஆக்கினான்*  தெய்வ உலகுகளே.  


    கள்வா எம்மையும்*  ஏழ் உலகும்,*  நின் 
    உள்ளே தோற்றிய*  இறைவ! என்று,*

    வெள் ஏறன் நான்முகன்*  இந்திரன் வானவர்,* 
    புள் ஊர்தி*  கழல் பணிந்து ஏத்துவரே.   


    ஏத்த ஏழ் உலகும் கொண்ட*  கோலக் 
    கூத்தனைக்,*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    வாய்த்த ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    ஏத்த வல்லவர்க்கு*  இல்லை ஓர் ஊனமே.   


    ஊனில் வாழ் உயிரே*  நல்லை போ உன்னைப் பெற்று,* 
    வான் உளார் பெருமான்*  மதுசூதன் என் அம்மான்,*

    தானும் யானும் எல்லாம்*  தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,* 
    தேனும் பாலும் நெய்யும்*  கன்னலும் அமுதும் ஒத்தே.  


    ஒத்தார் மிக்காரை*  இலையாய மாமாய,* 
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,*  என்னைப் பெற்ற- 

    அத் தாய் ஆய் தந்தை ஆய்*  அறியாதன அறிவித்து,* 
    அத்தா, நீ செய்தன*  அடியேன் அறியேனே.


    அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 
    அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*

    அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 
    அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே.


    எனது ஆவியுள் கலந்த*  பெரு நல் உதவிக் கைம்மாறு,* 
    எனது ஆவி தந்தொழிந்தேன்,*  இனி மீள்வது என்பது உண்டே,*

    எனது ஆவி ஆவியும் நீ*  பொழில் ஏழும் உண்ட எந்தாய்,* 
    எனது ஆவி யார்? யான் ஆர்?*  தந்த நீ கொண்டாக்கினையே.  


    இனி யார் ஞானங்களால்*  எடுக்கல் எழாத எந்தாய்,* 
    கனிவார் வீட்டு இன்பமே*  என் கடல் படா அமுதே,*

    தனியேன் வாழ் முதலே*  பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,* 
    நுனி ஆர் கோட்டில் வைத்தாய்*  நுன பாதம் சேர்ந்தேனே.


    சேர்ந்தார் தீவினைகட்கு*  அரு நஞ்சை திண் மதியை,* 
    தீர்ந்தார் தம் மனத்துப்*  பிரியாது அவர் உயிரைச்,*

    சோர்ந்தே புகல் கொடாச் சுடரை*  அரக்கியை மூக்கு- 
    ஈர்ந்தாயை,*  அடியேன் அடைந்தேன்*  முதல் முன்னமே.


    முன் நல் யாழ் பயில் நூல்*  நரம்பின் முதிர் சுவையே,* 
    பல் நலார் பயிலும்*  பரனே பவித்திரனே,*

    கன்னலே அமுதே*  கார் முகிலே என் கண்ணா,* 
    நின் அலால் இலேன்காண்*  என்னை நீ குறிக்கொள்ளே.


    குறிக்கொள் ஞானங்களால்*  எனை ஊழி செய் தவமும்,* 
    கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*

    உறிக்கொண்ட வெண்ணெய் பால்*  ஒளித்து உண்ணும் அம்மான் பின்,* 
    நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்*  பிறவித் துயர் கடிந்தே.


    கடி வார் தண் அம் துழாய்க்*  கண்ணன் விண்ணவர் பெருமான்,* 
    படி வானம் இறந்த*  பரமன் பவித்திரன் சீர்,*

    செடி ஆர் நோய்கள் கெட*  படிந்து குடைந்து ஆடி,* 
    அடியேன் வாய்மடுத்துப்*  பருகிக் களித்தேனே. 


    களிப்பும் கவர்வும் அற்று*  பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,* 
    ஒளிக்கொண்ட சோதியுமாய்*  உடன்கூடுவது என்று கொலோ,*

    துளிக்கின்ற வான் இந்நிலம்*  சுடர் ஆழி சங்கு ஏந்தி,* 
    அளிக்கின்ற மாயப் பிரான்*  அடியார்கள் குழாங்களையே.


    குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
    குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*

    குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
    குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே. 


    ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 
    பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்

    நாடி நாடி*  நரசிங்கா என்று,* 
    வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   


    வாள் நுதல்*  இம் மடவரல்,*  உம்மைக் 
    காணும் ஆசையுள்*  நைகின்றாள்,*  விறல்

    வாணன்*  ஆயிரம் தோள் துணித்தீர்,*  உம்மைக் 
    காண*  நீர் இரக்கம் இலீரே. 


    இரக்க மனத்தோடு*  எரி அணை,* 
    அரக்கும் மெழுகும்*  ஒக்கும் இவள்,*

    இரக்கம் எழீர்*  இதற்கு என் செய்கேன்,* 
    அரக்கன் இலங்கை*  செற்றீருக்கே.   


    இலங்கை செற்றவனே என்னும்,*  பின்னும் 
    வலம் கொள்*  புள் உயர்த்தாய் என்னும்,*  உள்ளம்

    மலங்க*  வெவ் உயிர்க்கும்,*  கண்ணீர் மிகக் 
    கலங்கிக்*  கைதொழும் நின்று இவளே


    இவள் இராப்பகல்*  வாய்வெரீ இத்,*  தன 
    குவளை ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  வண்டு

    திவளும்*  தண் அம் துழாய் கொடீர்,*  என 
    தவள வண்ணர்*  தகவுகளே. 


    தகவு உடையவனே என்னும்,*  பின்னும் 
    மிக விரும்பும்*  பிரான் என்னும்,*  எனது

    அக உயிர்க்கு*  அமுதே என்னும்,*  உள்ளம் 
    உக உருகி*  நின்று உள் உளே.


    உள் உள் ஆவி*  உலர்ந்து உலர்ந்து,*  என 
    வள்ளலே*  கண்ணனே என்னும்,*  பின்னும்

    வெள்ள நீர்க்*  கிடந்தாய் என்னும்,*  என 
    கள்விதான்*  பட்ட வஞ்சனையே.


    வஞ்சனே என்னும்*  கைதொழும்,*  தன 
    நெஞ்சம்வேவ*  நெடிது உயிர்க்கும்,*  விறல்

    கஞ்சனை*  வஞ்சனை செய்தீர்,*  உம்மைத் 
    தஞ்சம் என்று*  இவள் பட்டனவே.     


    பட்ட போது*  எழு போது அறியாள்,*  விரை 
    மட்டு அலர்*  தண் துழாய் என்னும்,*  சுடர்

    வட்ட வாய்*  நுதி நேமியீர்,*  நுமது 
    இட்டம் என்கொல்*  இவ்ஏழைக்கே.


    ஏழை பேதை*  இராப்பகல்,*  தன 
    கேழ் இல் ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  கிளர்

    வாழ்வை வேவ*  இலங்கை செற்றீர்.*  இவள் 
    மாழை நோக்கு ஒன்றும்*  வாட்டேன்மினே      


    வாட்டம் இல் புகழ்*  வாமனனை*  இசை 
    கூட்டி*  வண் சடகோபன் சொல்,*  அமை 

    பாட்டு*  ஓர் ஆயிரத்து இப் பத்தால்,*  அடி 
    சூட்டலாகும்*  அம் தாமமே.      


    அம் தாமத்து அன்பு செய்து*  என் ஆவி சேர் அம்மானுக்கு,* 
    அம் தாமம் வாழ் முடி சங்கு*  ஆழி நூல் ஆரம் உள,*

    செந்தாமரைத்தடம் கண்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    செந்தாமரை அடிகள்*  செம்பொன் திரு உடம்பே.


    திரு உடம்பு வான் சுடர்*  செந்தாமரை கண் கை கமலம்,* 
    திரு இடமே மார்வம்*  அயன் இடமே கொப்பூழ்,* 

    ஒருவு இடமும்*  எந்தை பெருமாற்கு அரனே ஓ,* 
    ஒருவு இடம் ஒன்று இன்றி*  என்னுள் கலந்தானுக்கே.


    என்னுள் கலந்தவன்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    மின்னும் சுடர் மலைக்குக்*  கண் பாதம் கை கமலம்,*

    மன்னும் முழு ஏழ் உலகும்*  வயிற்றின் உள,* 
    தன்னுள் கலவாதது*  எப் பொருளும் தான் இலையே.


    எப் பொருளும் தான் ஆய்*  மரகதக் குன்றம் ஒக்கும்.* 
    அப்பொழுதைத் தாமரைப்பூக்*  கண் பாதம் கை கமலம்,*

    எப்பொழுதும் நாள் திங்கள்*  ஆண்டு ஊழி ஊழிதொறும்,* 
    அப்பொழுதைக்கு அப்பொழுது*  என் ஆரா அமுதமே.      


    ஆரா அமுதமாய்*  அல் ஆவியுள் கலந்த,* 
    கார் ஆர் கருமுகில் போல்*  என் அம்மான் கண்ணனுக்கு,*

    நேரா வாய் செம்பவளம்*  கண் பாதம் கை கமலம்,* 
    பேர் ஆரம் நீள் முடி நாண்,*  பின்னும் இழை பலவே.


    பலபலவே ஆபரணம்*  பேரும் பலபலவே,* 
    பலபலவே சோதி*  வடிவு பண்பு எண்ணில்,*

    பலபல கண்டு உண்டு*  கேட்டு உற்று மோந்து இன்பம்,* 
    பலபலவே ஞானமும்*  பாம்பு அணை மேலாற்கேயோ.        


    பாம்பு அணைமேல் பாற்கடலுள்*  பள்ளி அமர்ந்ததுவும்,* 
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்*  ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*

    தேம் பணைய சோலை*  மராமரம் ஏழ் எய்ததுவும்,* 
    பூம் பிணைய தண் துழாய்ப்*  பொன் முடி அம் போர் ஏறே.


    பொன் முடி அம் போர் ஏற்றை*  எம்மானை நால் தடம் தோள்,* 
    தன் முடிவு ஒன்று இல்லாத*  தண் துழாய் மாலையனை,* 

    என் முடிவு காணாதே*  என்னுள் கலந்தானை,* 
    சொல்முடிவு காணேன் நான்*  சொல்லுவது என் சொல்லீரே.   


    சொல்லீர் என் அம்மானை*  என் ஆவி ஆவிதனை,* 
    எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*

    நல்ல அமுதம்*  பெறற்கு அரிய வீடும் ஆய்,* 
    அல்லி மலர் விரை ஒத்து*  ஆண் அல்லன் பெண் அலனே.


    ஆண் அல்லன் பெண் அல்லன்*  அல்லா அலியும் அல்லன்,* 
    காணலும் ஆகான்*  உளன் அல்லன் இல்லை அல்லன்,*

    பேணுங்கால் பேணும்*  உரு ஆகும் அல்லனும் ஆம்,* 
    கோணை பெரிது உடைத்து*  எம் பெம்மானைக் கூறுதலே.  


    கூறுதல் ஒன்று ஆராக்*  குடக் கூத்த அம்மானைக்,* 
    கூறுதலே மேவிக்*  குருகூர்ச் சடகோபன்,*

    கூறின அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    கூறுதல் வல்லார் உளரேல்*  கூடுவர் வைகுந்தமே.     


    வைகுந்தா மணிவண்ணனே*  என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,* 
    வைகும் வைகல் தோறும்*  அமுது ஆய வான் ஏறே,

    செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து*  அசுரர்க்குத் தீமைகள்- 
    செய் குந்தா*  உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..     


    சிக்கெனச் சிறிது ஓர் இடமும்*  புறப்படாத் தன்னுள்ளே,*  உலகுகள் 
    ஒக்கவே விழுங்கிப்*  புகுந்தான் புகுந்ததற்பின்,*

    மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்*  துளக்கு அற்று அமுதம் ஆய்,*  எங்கும் 
    பக்கம் நோக்கு அறியான்*  என் பைந்தாமரைக் கண்ணனே.         


    தாமரைக் கண்ணனை*  விண்ணோர் பரவும் தலைமகனை,*  துழாய் விரைப் 
    பூ மருவு கண்ணி*  எம் பிரானை பொன்மலையை,* 

    நாம் மருவி நன்கு ஏத்தி*  உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,*  நாவு அலர் 
    பா மருவி நிற்கத் தந்த*  பான்மையே வள்ளலே.


    வள்ளலே மதுசூதனா*  என் மரகத மலையே,*  உனை நினைந்து, 
    எள்கல் தந்த எந்தாய்*  உன்னை எங்ஙனம் விடுகேன்,?* 

    வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி*  களித்து உகந்து உகந்து* 
    உள்ள நோய்கள் எல்லாம் துரந்து*  உய்ந்து போந்திருந்தே.


    உய்ந்து போந்து என் உலப்பு இலாத*  வெம் தீவினைகளை நாசம் செய்து*  உனது 
    அந்தம் இல் அடிமை*  அடைந்தேன் விடுவேனோ,?*

    ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்*  பாற்கடல் யோக நித்திரை,* 
    சிந்தை செய்த எந்தாய்*  உன்னைச் சிந்தை செய்து செய்தே. 


    உன்னைச் சிந்தை செய்து செய்து,*  உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி*  என் 
    முன்னைத் தீவினைகள்*  முழு வேர் அரிந்தனன் யான்,*

    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த*  இரணியன் அகல் மார்வம் கீண்ட*  என் 
    முன்னைக் கோளரியே*  முடியாதது என் எனக்கே. 


    முடியாதது என் எனக்கேல் இனி?*  முழு ஏழ் உலகும் உண்டான்*  உகந்து வந்து 
    அடியேன் உட்புகுந்தான்*  அகல்வானும் அல்லன் இனி,*

    செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து*  எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,* 
    விடியா வெம் நரகத்து என்றும்*  சேர்தல் மாறினரே.


    மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து*  அடியை அடைந்து உள்ளம் தேறி* 
    ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்*  யான் மூழ்கினன்,*

    பாறிப் பாறி அசுரர் தம்*  பல் குழாங்கள் நீறு எழ,*  பாய் பறவை ஒன்று 
    ஏறி வீற்றிருந்தாய்*  உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.   


    எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்*  இலங்கை செற்றாய்,*  மராமரம்
    பைந்தாள் ஏழ் உருவ*  ஒரு வாளி கோத்த வில்லா,*

    கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே*  உன்னை என்னுள்ளே குழைத்த எம் 
    மைந்தா,*  வான் ஏறே*  இனி எங்குப் போகின்றதே?


    போகின்ற காலங்கள் போய காலங்கள்*  போகு காலங்கள்*  தாய் தந்தை உயிர்- 
    ஆகின்றாய்*  உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?

    பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்*  நாதனே! பரமா,*  தண் வேங்கடம் 
    மேகின்றாய்*  தண் துழாய் விரை நாறு கண்ணியனே.          


    கண்ணித் தண் அம் துழாய் முடிக்*  கமலத் தடம் பெருங் கண்ணனைப்,*  புகழ் 
    நண்ணி தென் குருகூர்ச்*  சடகோபன் மாறன் சொன்ன,* 

    எண்ணில் சோர்வு இல் அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,* 
    பண்ணில் பாட வல்லார்*  அவர் கேசவன் தமரே. 


    கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*

    ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
    நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.


    நாரணன் முழு ஏழ் உலகுக்கும்*  நாதன் வேத மயன்,* 
    காரணம் கிரிசை கருமம் இவை*  முதல்வன் எந்தை,*

    சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்*  தொழுது ஏத்த நின்று,* 
    வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்*  என் மாதவனே.   


    மாதவன் என்றதே கொண்டு*  என்னை இனி இப்பால் பட்டது,* 
    யாது அவங்களும் சேர்கொடேன் என்று*  என்னுள் புகுந்து இருந்து,* 

    தீது அவம் கெடுக்கும் அமுதம்*  செந்தாமரைக் கண் குன்றம்,* 
    கோது அவம் இல் என் கன்னல் கட்டி*  எம்மான் என் கோவிந்தனே.


    கோவிந்தன் குடக் கூத்தன்*  கோவலன் என்று என்றே குனித்துத்* 
    தேவும் தன்னையும்*  பாடி ஆடத் திருத்தி*  என்னைக் கொண்டு என்

    பாவம் தன்னையும்*  பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மேவும் தன்மையம் ஆக்கினான்*  வல்லன் எம்பிரான் விட்டுவே.


    விட்டு இலங்கு செஞ்சோதித்*  தாமரை பாதம் கைகள் கண்கள,* 
    விட்டு இலங்கு கருஞ்சுடர்*  மலையே திரு உடம்பு,*

    விட்டு இலங்கு மதியம் சீர்*  சங்கு சக்கரம் பரிதி,* 
    விட்டு இலங்கு முடி அம்மான்*  மதுசூதனன் தனக்கே.


    மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று*  எத்தாலும் கருமம் இன்றி,* 
    துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட*  நின்று ஊழி ஊழிதொறும்,*

    எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்*  எனக்கே அருள்கள் செய்ய,* 
    விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்*  திரிவிக்கிரமனையே.  


    திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்*  எம்மான் என் செங்கனி வாய்* 
    உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு*  நிறத்தனன் என்று என்று,*  உள்ளி

    பரவிப் பணிந்து*  பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,* 
    மருவித் தொழும் மனமே தந்தாய்*  வல்லைகாண் என் வாமனனே


    வாமனன் என் மரகத வண்ணன்*  தாமரைக் கண்ணினன்- 
    காமனைப் பயந்தாய்,*  என்று என்று உன் கழல்*  பாடியே பணிந்து,*

    தூ மனத்தனனாய்ப்*  பிறவித் துழதி நீங்க,*  என்னைத் 
    தீ மனம் கெடுத்தாய்*  உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.    


    சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்*  என்று என்று இராப்பகல் வாய் 
    வெரீஇ,*  அலமந்து கண்கள் நீர் மல்கி*  வெவ்வுயிர்த்து உயிர்த்து,*

    மரீஇய தீவினை மாள இன்பம் வளர*  வைகல் வைகல் 
    இரீஇ*  உன்னை என்னுள் வைத்தனை*  என் இருடீகேசனே. 


    இருடீகேசன் எம் பிரான்*  இலங்கை அரக்கர் குலம்,* 
    முருடு தீர்த்த பிரான் எம்மான்*  அமரர் பெம்மான் என்று என்று,*

    தெருடியாகில் நெஞ்சே வணங்கு*  திண்ணம் அறி அறிந்து,* 
    மருடியேலும் விடேல் கண்டாய்*  நம்பி பற்பநாபனையே.   


    பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
    எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த

    கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
    வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     


    தாமோதரனை தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
    ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*

    தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
    ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.       


    வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
    கண்ணனை நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
    பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே. 


    அணைவது அரவு அணைமேல்*  பூம்பாவை ஆகம் 
    புணர்வது,*  இருவர் அவர் முதலும் தானே,*

    இணைவன்*  ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,* 
    புணைவன்*  பிறவிக்கடல் நீந்துவார்க்கே.


    நீந்தும் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    நீந்தும் துயர் இல்லா*  வீடு முதல் ஆம்,*

    பூந் தண் புனல் பொய்கை*  யானை இடர் கடிந்த,* 
    பூந் தண் துழாய்*  என் தனி நாயகன் புணர்ப்பே.


    புணர்க்கும் அயன் ஆம்*  அழிக்கும் அரன் ஆம்,* 
    புணர்த்த தன் உந்தியொடு*  ஆகத்து மன்னி,* 

    புணர்த்த திருஆகித்*  தன் மார்வில் தான்சேர்,* 
    புணர்ப்பன் பெரும் புணர்ப்பு*  எங்கும் புலனே.


    புலன் ஐந்து மேயும்*  பொறி ஐந்தும் நீங்கி,* 
    நலம் அந்தம் இல்லது ஓர்*  நாடு புகுவீர்,*

    அலமந்து வீய*  அசுரரைச் செற்றான்,* 
    பலம் முந்து சீரில்*  படிமின் ஒவாதே. 


    ஓவாத் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    மூவாத் தனி முதலாய்*  மூவுலகும் காவலோன்,*

    மா ஆகி ஆமை ஆய்*  மீன் ஆகி மானிடம் ஆம்,* 
    தேவாதி தேவ பெருமான்*  என் தீர்த்தனே.         


    தீர்த்தன் உலகு அளந்த*  சேவடிமேல் பூந்தாமம்,* 
    சேர்த்தி அவையே*  சிவன் முடிமேல் தான் கண்டு,*

    பார்த்தன் தெளிந்தொழிந்த*  பைந்துழாயான் பெருமை,* 
    பேர்த்தும் ஒருவரால்*  பேசக் கிடந்ததே?        


    கிடந்து இருந்து நின்று அளந்து*  கேழல் ஆய் கீழ்ப் புக்கு 
    இடந்திடும்,*  தன்னுள் கரக்கும் உமிழும்,*

    தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்*  பார் என்னும் 
    மடந்தையை,*  மால் செய்கின்ற,*  மால் ஆர் காண்பாரே?    


    காண்பார் ஆர்? எம் ஈசன்*  கண்ணனை என்காணுமாறு,?* 
    ஊண் பேசில் எல்லா*  உலகும் ஓர் துற்று ஆற்றா,*

    சேணபாலவீடோ*  உயிரோ மற்று எப் பொருட்கும்,* 
    ஏண் பாலும் சோரான்*  பரந்து உளன் ஆம் எங்குமே.


    எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
    இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*

    அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
    சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 


    சீர்மை கொள் வீடு*  சுவர்க்கம் நரகு ஈறா,* 
    ஈர்மை கொள் தேவர்*  நடுவா மற்று எப் பொருட்கும்,*

    வேர் முதல் ஆய் வித்து ஆய்*  பரந்து தனி நின்ற,* 
    கார் முகில் போல் வண்ணன்*  என் கண்ணனை நான் கண்டேனே.        


    கண் தலங்கள் செய்ய*  கரு மேனி அம்மானை,* 
    வண்டு அலம்பும் சோலை*  வழுதி வள நாடன்,*

    பண் தலையில் சொன்ன தமிழ்*  ஆயிரத்து இப் பத்தும் வலார்,* 
    விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்*  எம் மா வீடே.     


    எம்மாவீட்டுத்*  திறமும் செப்பம்,*  நின் 
    செம்மா பாடபற்புத்*  தலைசேர்த்து ஒல்லை,-

    கைம்மா துன்பம்*  கடிந்த பிரானே,* 
    அம்மா அடியேன்*  வேண்டுவது ஈதே.     


    ஈதே யான் உன்னைக்*  கொள்வது எஞ்ஞான்றும்,*  என் 
    மை தோய் சோதி*  மணிவண்ண எந்தாய்,*

    எய்தா நின் கழல்*  யான் எய்த,*  ஞானக் 
    கைதா* காலக் கழிவு செய்யேலே. 


    செய்யேல் தீவினை என்று*  அருள் செய்யும்,*  என் 
    கை ஆர் சக்கரக்*  கண்ண பிரானே,*

    ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்*  நின் கழல் 
    எய்யாது ஏத்த,*  அருள்செய் எனக்கே.


    எனக்கே ஆட்செய்*  எக்காலத்தும் என்று,*  என் 
    மனக்கே வந்து*  இடைவீடு இன்றி மன்னி,*

    தனக்கே ஆக*  எனைக் கொள்ளும் ஈதே,* 
    எனக்கே கண்ணனை*  யான் கொள் சிறப்பே. 


    சிறப்பில் வீடு*  சுவர்க்கம் நரகம்,* 
    இறப்பில் எய்துக*  எய்தற்க,*  யானும்

    பிறப்பு இல்*  பல் பிறவிப் பெருமானை,* 
    மறப்பு ஒன்று இன்றி*  என்றும் மகிழ்வனே.


    மகிழ் கொள் தெய்வம்*  உலோகம் அலோகம்,* 
    மகிழ் கொள் சோதி*  மலர்ந்த அம்மானே,*

    மகிழ் கொள் சிந்தை*  சொல் செய்கை கொண்டு,*  என்றும் 
    மகிழ்வுற்று*  உன்னை வணங்க வாராயே.      


    வாராய்*  உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,* 
    பேராதே யான் வந்து*  அடையும்படி

    தாராதாய்,*  உன்னை என்னுள்*  வைப்பில் என்றும் 
    ஆராதாய்,*  எனக்கு என்றும் எக்காலே.   


    எக்காலத்து எந்தையாய்*  என்னுள் மன்னில்,*  மற்று 
    எக் காலத்திலும்*  யாதொன்றும் வேண்டேன்,*

    மிக்கார் வேத*  விமலர் விழுங்கும்,*  என் 
    அக்காரக் கனியே*  உன்னை யானே.       


    யானே என்னை*  அறியகிலாதே,* 
    யானே என் தனதே*  என்று இருந்தேன்,*

    யானே நீ*  என் உடைமையும் நீயே,* 
    வானே ஏத்தும்*  எம் வானவர் ஏறே


    ஏறேல் ஏழும்*  வென்று ஏர் கொள் இலங்கையை,* 
    நீறே செய்த*  நெடுஞ் சுடர்ச் சோதி,*

    தேறேல் என்னை*  உன் பொன் அடி சேர்த்து*  ஒல்லை- 
    வேறே போக*  எஞ்ஞான்றும் விடலே.  


    விடல் இல் சக்கரத்து*  அண்ணலை மேவல்* 
    விடல் இல் வண் குருகூர்ச்*  சடகோபன்,*

    கெடல் இல் ஆயிரத்துள்*  இவை பத்தும்,* 
    கெடல் இல் வீடு செய்யும்*  கிளர்வார்க்கே.


    கிளர் ஒளி இளமை*  கெடுவதன் முன்னம்,* 
    வளர் ஒளி மாயோன்*  மருவிய கோயில்,*

    வளர் இளம் பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    தளர்வு இலர் ஆகிச்*  சார்வது சதிரே.  


    சதிர் இள மடவார்*  தாழ்ச்சியை மதியாது,* 
    அதிர் குரல் சங்கத்து*  அழகர் தம் கோயில்,*

    மதி தவழ் குடுமி*  மாலிருஞ்சோலைப்,* 
    பதியது ஏத்தி*  எழுவது பயனே.    


    பயன் அல்ல செய்து*  பயன் இல்லை நெஞ்சே,* 
    புயல் மழை வண்ணர்*  புரிந்து உறை கோயில்,*

    மயல் மிகு பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    அயல்மலை அடைவது*  அது கருமமே.


    கரும வன் பாசம்*  கழித்து உழன்று உய்யவே,* 
    பெருமலை எடுத்தான்*  பீடு உறை கோயில்,*

    வரு மழை தவழும்*  மாலிருஞ்சோலைத்,* 
    திருமலை அதுவே*  அடைவது திறமே.   


    திறம் உடை வலத்தால்*  தீவினை பெருக்காது,* 
    அறம் முயல் ஆழிப்*  படையவன் கோயில்,*

    மறு இல் வண் சுனை சூழ்*  மாலிருஞ்சோலைப்,* 
    புறமலை சாரப்*  போவது கிறியே.


    கிறி என நினைமின்*  கீழ்மை செய்யாதே,* 
    உறி அமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*

    மறியொடு பிணை சேர்*  மாலிருஞ்சோலை,* 
    நெறி பட அதுவே*  நினைவது நலமே.


    நலம் என நினைமின்*  நரகு அழுந்தாதே,* 
    நிலம் முனம் இடந்தான்*  நீடு உறை கோயில்,*

    மலம் அறு மதி சேர்*  மாலிருஞ்சோலை,* 
    வலம் முறை எய்தி,*  மருவுதல் வலமே.


    வலஞ்செய்து வைகல்*  வலம் கழியாதே,* 
    வலஞ்செய்யும் ஆய*  மாயவன் கோயில்,*

    வலஞ்செய்யும் வானோர்*  மாலிருஞ்சோலை,,* 
    வலஞ்செய்து நாளும்*  மருவுதல் வழக்கே.


    வழக்கு என நினைமின்*  வல்வினை மூழ்காது,* 
    அழக்கொடி அட்டான்*  அமர் பெருங்கோயில்,*

    மழக் களிற்று இனம் சேர்*  மாலிருஞ்சோலை,* 
    தொழக் கருதுவதே*  துணிவது சூதே.


    சூது என்று களவும்*  சூதும் செய்யாதே,* 
    வேதம் முன் விரித்தான்*  விரும்பிய கோயில்,*

    மாது உறு மயில் சேர்*  மாலிருஞ்சோலைப்,* 
    போது அவிழ் மலையே*  புகுவது பொருளே.     


    பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
    மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*

    தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
    அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.


    முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
    அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*

    படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
    கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   


    கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
    சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*

    ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
    பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!       


    பரஞ்சோதி! நீ பரமாய்*  நின் இகழ்ந்து பின்,*  மற்று ஓர் 
    பரம் சோதி இன்மையின்*  படி ஓவி நிகழ்கின்ற,*

    பரஞ்சோதி நின்னுள்ளே*  படர் உலகம் படைத்த,*  எம் 
    பரஞ்சோதி கோவிந்தா!*  பண்பு உரைக்கமாட்டேனே.


    மாட்டாதே ஆகிலும்*  இம் மலர் தலை மாஞாலம்,*  நின் 
    மாட்டு ஆய மலர்புரையும்*  திருவுருவம் மனம் வைக்க* 

    மாட்டாத பலசமய*  மதி கொடுத்தாய், மலர்த்துழாய்* 
    மாட்டேநீ மனம் வைத்தாய்*  மாஞாலம் வருந்தாதே?


    வருந்தாத அரும்தவத்த*  மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,* 
    வருந்தாத ஞானம் ஆய்*  வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*

    வரும் காலம் நிகழ் காலம்*  கழி காலம் ஆய்,*  உலகை 
    ஒருங்காக அளிப்பாய் சீர்*  எங்கு உலக்க ஓதுவனே?


    ஓதுவார் ஓத்து எல்லாம்*  எவ் உலகத்து எவ் எவையும்,* 
    சாதுவாய் நின் புகழின்*  தகை அல்லால் பிறிது இல்லை,*

    போது வாழ் புனம் துழாய்*  முடியினாய்,*  பூவின்மேல் 
    மாது வாழ் மார்பினாய்!*  என் சொல்லி யான் வாழ்த்துவனே?  


    வாழ்த்துவார் பலர் ஆக*  நின்னுள்ளே நான்முகனை,* 
    மூழ்த்த நீர் உலகு எல்லாம்*  படை என்று முதல் படைத்தாய்*  

    கேழ்த்த சீர் அரன் முதலாக்*  கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,* 
    சூழ்த்து அமரர் துதித்தால்*  உன் தொல் புகழ் மாசூணாதே?     


    மாசூணாச் சுடர் உடம்புஆய்*  மலராது குவியாது,* 
    மாசூணா ஞானம் ஆய்*  முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*

    மாசூணா வான் கோலத்து*  அமரர் கோன் வழிப்பட்டால்,* 
    மாசூணா உனபாத*  மலர்ச் சோதி மழுங்காதே?     


    மழுங்காத வைந் நுதிய*  சக்கர நல் வலத்தையாய்,* 
    தொழும் காதல் களிறு அளிப்பான்*  புள் ஊர்ந்து தோன்றினையே,* 

    மழுங்காத ஞானமே*  படை ஆக மலர் உலகில்* 
    தொழும்பாயார்க்கு அளித்தால்*  உன் சுடர்ச் சோதி மறையாதே? 


    மறை ஆய நால் வேதத்துள் நின்ற*  மலர்ச் சுடரே,* 
    முறையால் இவ் உலகு எல்லாம்*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய் 

    பிறை ஏறு சடையானும்*  நான்முகனும் இந்திரனும்* 
    இறை ஆதல் அறிந்து ஏத்த*  வீற்றிருத்தல் இது வியப்பே?   


    வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
    சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*

    துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)


    முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
    அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*

    வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
    எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)


    வன் மா வையம் அளந்த*  எம் வாமனா,*  நின் 
    பல்மா மாயப்*  பல் பிறவியில் படிகின்ற யான்,*

    தொல் மா வல்வினைத்*  தொடர்களை முதல் அரிந்து,* 
    நின் மா தாள் சேர்ந்து*  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?


    கொல்லா மாக்கோல்*  கொலைசெய்து பாரதப் போர்,* 
    எல்லாச் சேனையும்*  இரு நிலத்து அவித்த எந்தாய்,*

    பொல்லா ஆக்கையின்*  புணர்வினை அறுக்கல் அறா,* 
    சொல்லாய் யான் உன்னைச்*  சார்வது ஓர் சூழ்ச்சியே.    


    சூழ்ச்சி ஞானச்*  சுடர் ஒளி ஆகி,*  என்றும் 
    ஏழ்ச்சி கேடு இன்றி*  எங்கணும் நிறைந்த எந்தாய்,*

    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து*  நின் தாள் இணைக்கீழ் 
    வாழ்ச்சி,*  யான் சேரும்*  வகை அருளாய் வந்தே.  


    வந்தாய் போலே*  வந்தும் என் மனத்தினை நீ,* 
    சிந்தாமல் செய்யாய்*  இதுவே இது ஆகில்,* 

    கொந்து ஆர் காயாவின்*  கொழு மலர்த் திருநிறத்த 
    எந்தாய்,*  யான் உன்னை*  எங்கு வந்து அணுகிற்பனே?   


    கிற்பன் கில்லேன்*  என்று இலன் முனம் நாளால்,* 
    அற்ப சாரங்கள்*  அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*

    பற்பல் ஆயிரம்*  உயிர் செய்த பரமா,*  நின் 
    நற் பொன் சோதித்தாள்*  நணுகுவது எஞ்ஞான்றே?


    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து*  இரங்கி நெஞ்சே!* 
    மெய்ஞ்ஞானம் இன்றி*  வினை இயல் பிறப்பு அழுந்தி,*

    எஞ்ஞான்றும் எங்கும்*  ஒழிவு அற நிறைந்து நின்ற,* 
    மெய்ஞ் ஞானச் சோதிக்*  கண்ணனை மேவுதுமே?


    மேவு துன்ப வினைகளை*  விடுத்துமிலேன்,*
    ஓவுதல் இன்றி*  உன் கழல் வணங்கிற்றிலேன்,*

    பாவு தொல் சீர்க் கண்ணா!*  என் பரஞ்சுடரே,* 
    கூவுகின்றேன் காண்பான்*  எங்கு எய்தக் கூவுவனே?


    கூவிக் கூவிக்*  கொடுவினைத் தூற்றுள் நின்று*
    பாவியேன் பல காலம்*  வழி திகைத்து அலமர்கின்றேன்,*

    மேவி அன்று ஆ நிரை காத்தவன்*  உலகம் எல்லாம்,* 
    தாவிய அம்மானை*  எங்கு இனித் தலைப்பெய்வனே?  


    தலைப்பெய் காலம்*  நமன்தமர் பாசம் விட்டால்,* 
    அலைப்பூண் உண்ணும்*  அவ் அல்லல் எல்லாம் அகல,*

    கலைப் பல் ஞானத்து*  என் கண்ணனைக் கண்டுகொண்டு,* 
    நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது*  நீடு உயிரே  


    உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
    குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
    உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)      


    ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
    வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*

    தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
    எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)


    எந்தை தந்தை தந்தை*  தந்தை தந்தைக்கும் 
    முந்தை,*  வானவர் வானவர் கோனொடும்,* 

    சிந்து பூ மகிழும்*  திருவேங்கடத்து,* 
    அந்தம் இல் புகழ்க்*  கார் எழில் அண்ணலே.


    அண்ணல் மாயன்*  அணி கொள் செந்தாமரைக் 
    கண்ணன் செங்கனி,*  வாய்க் கருமாணிக்கம்,*

    தெள் நிறை சுனை நீர்த்,*  திருவேங்கடத்து,* 
    எண் இல் தொல் புகழ்*  வானவர் ஈசனே.


    ஈசன் வானவர்க்கு*  என்பன் என்றால்,*  அது 
    தேசமோ*  திருவேங்கடத்தானுக்கு?,* 

    நீசனேன்*  நிறைவு ஒன்றும் இலேன்,*  என்கண் 
    பாசம் வைத்த*  பரம் சுடர்ச் சோதிக்கே.


    சோதி ஆகி*  எல்லா உலகும் தொழும்,* 
    ஆதிமூர்த்தி என்றால்*  அளவு ஆகுமோ?,*

    வேதியர்*  முழு வேதத்து அமுதத்தை,* 
    தீது இல் சீர்த்*  திருவேங்கடத்தானையே.


    வேம் கடங்கள்*  மெய்மேல் வினை முற்றவும்,* 
    தாங்கள் தங்கட்கு*  நல்லனவே செய்வார்,*

    வேங்கடத்து உறைவார்க்கு*  நம என்னல்- 
    ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.


    சுமந்து மாமலர்*  நீர் சுடர் தூபம் கொண்டு,* 
    அமர்ந்து வானவர்*  வானவர் கோனொடும்,* 

    நமன்று எழும்*  திருவேங்கடம் நங்கட்குச்,* 
    சமன் கொள் வீடு தரும்*  தடங் குன்றமே.


    குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
    அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்

    சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
    ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)


    ஓயும் மூப்புப்*  பிறப்பு இறப்பு:பிணி,*
    வீயுமாறு செய்வான்*  திருவேங்கடத்து

    ஆயன்,*  நாள் மலர் ஆம்*  அடித்தாமரை,* 
    வாயுள்ளும்மனத்துள்ளும்*  வைப்பார்கட்கே.


    வைத்த நாள் வரை*  எல்லை குறுகிச் சென்று,* 
    எய்த்து இளைப்பதன்*  முன்னம் அடைமினோ,*

    பைத்த பாம்பு அணையான்*  திருவேங்கடம்,* 
    மொய்த்த சோலை*  மொய்பூந்தடந் தாழ்வரே.  


    தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
    நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
    வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)   


    புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,* 
    திகழும் தண் பரவை என்கோ!*  தீ என்கோ! வாயு என்கோ,*

    நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள் சுடர் இரண்டும் என்கோ,* 
    இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவும் ஆறே! 


    கூவும் ஆறு அறியமாட்டேன்*  குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
    மேவு சீர் மாரி என்கோ!*  விளங்கு தாரகைகள் என்கோ,*

    நா இயல் கலைகள் என்கோ!*  ஞான நல்ஆவி என்கோ,* 
    பாவு சீர்க் கண்ணன் எம்மான்*  பங்கயக் கண்ணனையே! 


    பங்கயக் கண்ணன் என்கோ!*  பவளச் செவ்வாயன் என்கோ,*
    அம் கதிர் அடியன் என்கோ!*  அஞ்சன வண்ணன் என்கோ,*

    செங்கதிர் முடியன் என்கோ!*  திரு மறு மார்பன் என்கோ,*
    சங்கு சக்கரத்தன் என்கோ!*  சாதி மாணிக்கத்தையே!      


    சாதி மாணிக்கம் என்கோ!*  சவி கொள் பொன் முத்தம் என்கோ*
    சாதி நல் வயிரம் என்கோ,*  தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*

    ஆதி அம் சோதி என்கோ!*  ஆதி அம் புருடன் என்கோ,* 
    ஆதும் இல் காலத்து எந்தை*  அச்சுதன் அமலனையே!    


    அச்சுதன் அமலன் என்கோ,*  அடியவர் வினை கெடுக்கும்,* 
    நச்சும் மா மருந்தம் என்கோ!*  நலங் கடல் அமுதம் என்கோ,*

    அச்சுவைக் கட்டி என்கோ!*  அறுசுவை அடிசில் என்கோ,*
    நெய்ச் சுவைத் தேறல் என்கோ!*  கனி என்கோ! பால் என்கேனோ!


    பால் என்கோ!*  நான்கு வேதப் பயன் என்கோ,*  சமய நீதி 
    நூல் என்கோ!*  நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல

    மேல் என்கோ,*  வினையின் மிக்க பயன் என்கோ,*  கண்ணன் என்கோ!- 
    மால் என்கோ! மாயன் என்கோ*  வானவர் ஆதியையே!    


    வானவர் ஆதி என்கோ!*  வானவர் தெய்வம் என்கோ,*
    வானவர் போகம் என்கோ!*  வானவர் முற்றும் என்கோ,*

    ஊனம் இல் செல்வம் என்கோ!*  ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
    ஊனம் இல் மோக்கம் என்கோ!*  ஒளி மணி வண்ணனையே!


    ஒளி மணி வண்ணன் என்கோ!*  ஒருவன் என்று ஏத்த நின்ற* 
    நளிர் மதிச் சடையன் என்கோ!*  நான்முகக் கடவுள் என்கோ,*

    அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்*  படைத்து அவை ஏத்த நின்ற,* 
    களி மலர்த் துளவன் எம்மான்*  கண்ணனை மாயனையே!   


    கண்ணனை மாயன் தன்னை*  கடல் கடைந்து அமுதம் கொண்ட,* 
    அண்ணலை அச்சுதனை*  அனந்தனை அனந்தன் தன்மேல்,* 

    நண்ணி நன்கு உறைகின்றானை*  ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,* 
    எண்ணும் ஆறு அறியமாட்டேன்,*  யாவையும் எவரும் தானே. 


    யாவையும் எவரும் தானாய்*  அவரவர் சமயம் தோறும்,* 
    தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்*  சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*

    ஆவி சேர் உயிரின் உள்ளால்*  ஆதும் ஓர் பற்று இலாத,* 
    பாவனை அதனைக் கூடில்*  அவனையும் கூடலாமே.   


    கூடி வண்டு அறையும் தண் தார்க்*  கொண்டல் போல் வண்ணன் தன்னை* 
    மாடு அலர் பொழில்*  குருகூர் வண் சடகோபன் சொன்ன,* 

    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்தும் வல்லார்,* 
    வீடு இல போகம் எய்தி*  விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)   


    மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,* 
    கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,* 

    எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,* 
    தம்மாம் கருமம் என் சொல்லீர்*  தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)


    தண்கடல் வட்டத்து உள்ளாரைத்*  தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,* 
    திண்கழல்கால் அசுரர்க்குத்*  தீங்கு இழைக்கும் திருமாலைப்,* 

    பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,* 
    மண்கொள் உலகில் பிறப்பார்*  வல்வினை மோத மலைந்தே.    


    மலையை எடுத்து கல்மாரி*  காத்து*  பசுநிரை தன்னைத்,* 
    தொலைவு தவிர்த்த பிரானைச்*  சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*

    தலையினோடு ஆதனம் தட்டத்*  தடுகுட்டமாய்ப் பறவாதார்,* 
    அலை கொள் நரகத்து அழுந்திக்*  கிடந்து உழைக்கின்ற வம்பரே.


    வம்பு அவிழ் கோதைபொருட்டா*  மால்விடை ஏழும் அடர்த்த,* 
    செம்பவளத் திரள் வாயன்*  சிரீதரன் தொல்புகழ் பாடி,* 

    கும்பிடு நட்டம் இட்டு ஆடி*  கோகு உகட்டுண்டு உழலாதார்,* 
    தம்பிறப்பால் பயன் என்னே*  சாது சனங்களிடையே? 


    சாது சனத்தை நலியும்*  கஞ்சனைச் சாதிப்பதற்கு,* 
    ஆதி அம் சோதி உருவை*  அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*

    வேத முதல்வனைப் பாடி*  வீதிகள் தோறும் துள்ளாதார்,* 
    ஓதி உணர்ந்தவர் முன்னா*  என் சவிப்பார் மனிசரே?       


    மனிசரும் மற்றும் முற்றும் ஆய்*  மாயப் பிறவி பிறந்த,* 
    தனியன் பிறப்பிலி தன்னை*  தடங்கடல் சேர்ந்த பிரானை,* 

    கனியை கரும்பின் இன் சாற்றை*  கட்டியை தேனை அமுதை,* 
    முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்*  முழுது உணர் நீர்மையினார.


    நீர்மை இல் நூற்றுவர் வீய*  ஐவர்க்கு அருள்செய்து நின்று,* 
    பார்மல்கு சேனை அவித்த*  பரஞ்சுடரை நினைந்து ஆடி* 

    நீர்மல்கு கண்ணினர் ஆகி*  நெஞ்சம் குழைந்து நையாதே,* 
    ஊன் மல்கி மோடு பருப்பார்*  உத்தமர்கட்கு என் செய்வாரே?  


    வார்புனல் அம் தண் அருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,* 
    பேர்பல சொல்லிப் பிதற்றி*  பித்தர் என்றே பிறர்கூற,* 

    ஊர்பல புக்கும் புகாதும்*  உலோகர் சிரிக்க நின்று ஆடி,* 
    ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே. 


    அமரர் தொழப்படுவானை*  அனைத்து உலகுக்கும் பிரானை,* 
    அமர மனத்தினுள் யோகு புணர்ந்து*  அவன் தன்னோடு ஒன்று ஆக,* 

    அமரத் துணிய வல்லார்கள் ஒழிய*  அல்லாதவர் எல்லாம்,* 
    அமர நினைந்து எழுந்து ஆடி*  அலற்றுவதே கருமமே.      


    கருமமும் கரும பலனும் ஆகிய*  காரணன் தன்னை,* 
    திருமணி வண்ணனை செங்கண் மாலினை*  தேவபிரானை,*

    ஒருமை மனத்தினுள் வைத்து*  உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,* 
    பெருமையும் நாணும் தவிர்ந்து*  பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.


    தீர்ந்த அடியவர் தம்மைத்*  திருத்திப் பணிகொள்ளவல்ல,* 
    ஆர்ந்த புகழ் அச்சுதனை*  அமரர் பிரானை எம்மானை,*

    வாய்ந்த வளவயல்சூழ்*  தண் வளங் குருகூர்ச்சடகோபன்,* 
    நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து*  அருவினை நீறு செய்யுமே. (2)


    செய்ய தாமரைக் கண்ணன் ஆய்*  உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,* 
    வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

    செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்*  வெளிப் பட்டு இவை படைத்தான்*  பின்னும் 
    மொய்கொள் சோதியோடு ஆயினான்*  ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)


    மூவர் ஆகிய மூர்த்தியை*  முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,* 
    சாவம் உள்ளன நீக்குவானை*  தடங் கடல் கிடந்தான் தன்னை,* 

    தேவ தேவனை தென் இலங்கை*  எரி எழச் செற்ற வில்லியை,* 
    பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்*  பரவுமினோ.


    பரவி வானவர் ஏத்த நின்ற*  பரமனை பரஞ்சோதியை,* 
    குரவை கோத்த குழகனை*  மணி வண்ணனை குடக் கூத்தனை,* 

    அரவம் ஏறி அலை கடல் அமரும்*  துயில்கொண்ட அண்ணலை,* 
    இரவும் நன் பகலும் விடாது*  என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 


    வைம்மின் நும் மனத்து என்று*  யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை* 
    எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,*  வானவர் 

    தம்மை ஆளும் அவனும்*  நான்முகனும் சடைமுடி அண்ணலும்,* 
    செம்மையால் அவன் பாத பங்கயம்*  சிந்தித்து ஏத்தித் திரிவரே.


    திரியும் காற்றோடு அகல் விசும்பு*  திணிந்த மண் கிடந்த கடல்,* 
    எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

    கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்*  கண்ணன் விண்ணோர் இறை,* 
    சுரியும் பல் கருங் குஞ்சி*  எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே. 


    தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்*  அவன் ஒரு மூர்த்தியாய்,* 
    சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்*  புகநின்ற செங்கண்மால்,* 

    நாற்றம் தோற்றம் சுவை ஒலி*  உறல் ஆகி நின்ற,*  எம் வானவர் 
    ஏற்றையே அன்றி*  மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.    


    எழுமைக்கும் எனது ஆவிக்கு*  இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
    கெழுமிய கதிர்ச் சோதியை*  மணிவண்ணனை குடக் கூத்தனை,* 

    விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்*  கன்னல் கனியினை,* 
    தொழுமின் தூய மனத்தர் ஆய்*  இறையும் நில்லா துயரங்களே.


    துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்*  அவை அல்லன் ஆய்,* 
    உயர நின்றது ஓர் சோதி ஆய்*  உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*

    அயர வாங்கும் நமன் தமர்க்கு*  அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,* 
    தயரதற்கு மகன் தன்னை அன்றி*  மற்று இலேன் தஞ்சமாகவே.


    தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு*  தானும் ஆய் அவை அல்லன் ஆய்,* 
    எஞ்சல் இல் அமரர் குலமுதல்*  மூவர் தம்முள்ளும் ஆதியை,* 

    அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!*  அவன் இவன் என்று கூழேன்மின்,* 
    நெஞ்சினால் நினைப்பான் எவன்*  அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.  


    கடல்வண்ணன் கண்ணன்*  விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்* 
    படஅரவின் அணைக்கிடந்த*  பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,* 

    அடவரும் படை மங்க*  ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,*  அன்றுதேர் 
    கடவிய பெருமான்*  கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?


    கண்கள் காண்டற்கு அரியன் ஆய்*  கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,* 
    மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்*  வானவர் ஈசனை,* 

    பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,* 
    பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)    


    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
    பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 

    பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
    பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)


    ஆளும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    தோளும் ஓர் நான்கு உடைத்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை*

    தாளும் தடக் கையும் கூப்பிப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    நாளும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடை நாதரே.


    நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்*  நறும் துழாய்ப் 
    போதனை*  பொன் நெடும் சக்கரத்து*  எந்தை பிரான் தன்னை*

    பாதம் பணிய வல்லாரைப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    ஓதும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடையார்களே.


    உடை ஆர்ந்த ஆடையன்*  கண்டிகையன் உடை நாணினன்* 
    புடை ஆர் பொன் நூலினன்*  பொன் முடியன் மற்றும் பல்கலன்,* 

    நடையா உடைத் திருநாரணன்*  தொண்டர் தொண்டர் கண்டீர்,* 
    இடை ஆர் பிறப்பிடைதோறு*  எமக்கு எம் பெருமக்களே.


    பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,*  அமரர்கட்கு* 
    அருமை ஒழிய*  அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*

    பெருமை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    வருமையும் இம்மையும்*  நம்மை அளிக்கும் பிராக்களே.


    அளிக்கும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    துளிக்கும் நறும் கண்ணித்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை,* 

    ஒளிக் கொண்ட சோதியை*  உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,* 
    சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்*  சன்ம சன்மாந்தரம் காப்பரே.


    சன்ம சன்மாந்தரம் காத்து*  அடியார்களைக் கொண்டுபோய்,* 
    தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்*  கொள்ளும் அப்பனை,* 

    தொன்மை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    நன்மை பெறுத்து எம்மை*  நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.


    நம்பனை ஞாலம் படைத்தவனை*  திரு மார்பனை,* 
    உம்பர் உலகினில் யார்க்கும்*  உணர்வு அரியான் தன்னை,* 

    கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*  அவர் கண்டீர்,* 
    எம் பல் பிறப்பிடைதோறு*  எம் தொழுகுலம் தாங்களே.


    குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
    நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 

    வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
    கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.


    அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்னவசம் செய்யும,* 
    படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 

    அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
    அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.


    அடி ஓங்கு நூற்றுவர் வீய*  அன்று ஐவர்க்கு அருள்செய்த- 
    நெடியோனைத்,*  தென் குருகூர்ச் சடகோபன்*  குற்றேவல்கள்,* 

    அடி ஆர்ந்த ஆயிரத்துள்*  இவை பத்து அவன் தொண்டர்மேல் 
    முடிவு,*  ஆரக் கற்கிற்கில்*  சன்மம் செய்யாமை முடியுமே. (2) 


    முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்*  சீர் 
    அடியானே,*  ஆழ் கடலைக் கடைந்தாய்!*  புள் ஊர் 

    கொடியானே,*  கொண்டல் வண்ணா!*  அண்டத்து உம்பரில் 
    நெடியானே!,*  என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)


    நெஞ்சமே! நீள் நகர் ஆக*  இருந்த என் 
    தஞ்சனே,*  தண் இலங்கைக்கு இறையைச் செற்ற 

    நஞ்சனே,*  ஞாலம் கொள்வான்*  குறள் ஆகிய 
    வஞ்சனே,*  என்னும் எப்போதும்,*  என் வாசகமே


    வாசகமே ஏத்த அருள் செய்யும்*  வானவர் தம்- 
    நாயகனே,*  நாள் இளம் திங்களைக்*  கோள் விடுத்து,* 

    வேய் அகம் பால் வெண்ணெய்*  தொடு உண்ட ஆன் ஆயர்- 
    தாயவனே,*  என்று தடவும் என் கைகளே.


    கைகளால் ஆரத்*  தொழுது தொழுது உன்னை,* 
    வைகலும் மாத்திரைப்*  போதும் ஓர் வீடு இன்றி,*

    பை கொள் பாம்பு ஏறி*  உறை பரனே,*  உன்னை 
    மெய்கொள்ளக் காண(  விரும்பும் என் கண்களே.


    கண்களால் காண*  வருங்கொல்?  என்று ஆசையால்,* 
    மண் கொண்ட வாமனன்*  ஏற மகிழ்ந்து செல்,* 

    பண் கொண்ட புள்ளின்*   சிறகு ஒலி பாவித்து,* 
    திண் கொள்ள ஓர்க்கும்*  கிடந்து என் செவிகளே.


    செவிகளால் ஆர*  நின் கீர்த்திக் கனி என்னும் 
    கவிகளே*  காலப் பண் தேன்*  உறைப்பத் துற்று,* 

    புவியின்மேல்*  பொன் நெடும் சக்கரத்து உன்னையே.* 
    அவிவு இன்றி ஆதரிக்கும்*  எனது ஆவியே.


    ஆவியே! ஆர் அமுதே!*  என்னை ஆளுடைத்,* 
    தூவி அம் புள் உடையாய்!*  சுடர் நேமியாய்,* 

    பாவியேன் நெஞ்சம்*  புலம்பப் பலகாலும்,* 
    கூவியும் காணப்பெறேன்*  உன கோலமே. 


    கோலமே! தாமரைக் கண்ணது ஓர்*  அஞ்சன 
    நீலமே,*  நின்று எனது ஆவியை* ஈர்கின்ற

    சீலமே,*  சென்று செல்லாதன*  முன் நிலாம் 
    காலமே,*  உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?


    கொள்வன் நான் மாவலி*  மூவடி தா என்ற 
    கள்வனே,*  கஞ்சனை வஞ்சித்து*  வாணனை

    உள் வன்மை தீர,*  ஓர் ஆயிரம் தோள் துணித்த* 
    புள் வல்லாய்,*  உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?


    பொருந்திய மா மருதின் இடை போய*  எம் 
    பெருந்தகாய்,*  உன் கழல்*  காணிய பேதுற்று,* 

    வருந்திநான்*  வாசகமாலை கொண்டு*  உன்னையே 
    இருந்து இருந்து*  எத்தனை காலம் புலம்புவனே? 


    புலம்பு சீர்ப்*  பூமி அளந்த பெருமானை,* 
    நலம்கொள்சீர்*  நன் குருகூர்ச் சடகோபன்,*  சொல் 

    வலம் கொண்ட ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்து, 
    இலங்குவான்*  யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)


    சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,* 
    என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

    தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,* 
    என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே. 


    உளனாகவே எண்ணி*  தன்னை ஒன்றாக தன் செல்வத்தை* 
    வளனா மதிக்கும்*  இம் மானிடத்தைக் கவி பாடி என்,*

    குளன் ஆர் கழனிசூழ்*  கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,* 
    உளனாய எந்தையை*  எந்தை பெம்மானை ஒழியவே? 


    ஒழிவு ஒன்று இல்லாத*  பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,*  போம் 
    வழியைத் தரும் நங்கள்*  வானவர் ஈசனை நிற்கப் போய்,*

    கழிய மிக நல்லவான்*  கவி கொண்டு புலவீர்காள்,* 
    இழியக் கருதி*  ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.


    என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்*  புலவீர்காள்,* 
    மன்னா மனிசரைப் பாடிப்*  படைக்கும் பெரும் பொருள்?,*

    மின் ஆர் மணிமுடி*  விண்ணவர் தாதையைப் பாடினால்,* 
    தன்னாகவே கொண்டு*  சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.


    கொள்ளும் பயன் இல்லை*  குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,* 
    வள்ளல் புகழ்ந்து*  நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,* 

    கொள்ளக் குறைவு இலன்*  வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,*  என் 
    வள்ளல் மணிவண்ணன் தன்னைக்*  கவி சொல்ல வம்மினோ.


    வம்மின் புலவீர்!*  நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,* 
    இம் மன் உலகினில்*  செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*

    நும் இன் கவி கொண்டு*  நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,* 
    செம் மின் சுடர் முடி*  என் திருமாலுக்குச் சேருமே.


    சேரும் கொடை புகழ்*  எல்லை இலானை,*  ஓர் ஆயிரம் 
    பேரும் உடைய பிரானை அல்லால்*  மற்று யான் கிலேன்,* 

    மாரி அனைய கை*  மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,* 
    பாரில் ஓர் பற்றையைப்*  பச்சைப் பசும் பொய்கள் பேசவே.


    வேயின் மலிபுரை தோளி*  பின்னைக்கு மணாளனை,* 
    ஆய பெரும்புகழ்*  எல்லை இலாதன பாடிப்போய்,* 

    காயம் கழித்து*  அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,* 
    மாய மனிசரை*  என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? 


    வாய்கொண்டு மானிடம் பாடவந்த*  கவியேன் அல்லேன்.* 
    ஆய்கொண்ட சீர்வள்ளல்*  ஆழிப் பிரான் எனக்கே உளன்,*

    சாய் கொண்ட இம்மையும் சாதித்து*  வானவர் நாட்டையும்,* 
    நீ கண்டுகொள் என்று*  வீடும் தரும் நின்றுநின்றே!


    நின்றுநின்று பல நாள் உய்க்கும்*  இவ் உடல் நீங்கிப்போய்,* 
    சென்று சென்று ஆகிலும் கண்டு*  சன்மம் கழிப்பான் எண்ணி,* 

    ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்*  கவி ஆயினேற்கு,* 
    என்றும் என்றும் இனி*  மற்றொருவர் கவி ஏற்குமே? 


    ஏற்கும் பெரும்புகழ்*  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  வண் குருகூர்ச் சடகோபன் சொல்,* 

    ஏற்கும் பெரும்புகழ்  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.


    சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு*  சங்கொடு சக்கரம்வில்,* 
    ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்*  தண்டு கொண்டு புள் ஊர்ந்து,*  உலகில் 

    வன்மை உடைய அரக்கர்*  அசுரரை மாளப் படைபொருத,* 
    நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவு இலனே. (2)


    குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி*  தன் கோலச் செந்தாமரைக்கண்,* 
    உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த*  ஒளி மணி வண்ணன் கண்ணன்,*

    கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி*  அசுரரைக் காய்ந்த அம்மான்,* 
    நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்*  யான் ஒரு முட்டு இலனே.


    முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்*  மூவுலகுக்கு உரிய,* 
    கட்டியை தேனை அமுதை*  நன்பாலை கனியை கரும்பு தன்னை,*

    மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி*  அவன் திறத்துப் 
    பட்ட பின்னை*  இறையாகிலும்*  யான் என் மனத்துப் பரிவு இலனே. 


    ',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'*  என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த* 
    திரிபுரம் செற்றவனும் மகனும்*  பின்னும் அங்கியும் போர் தொலைய,*

    பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை*  ஆயனை பொன் சக்கரத்து
    அரியினை,*  அச்சுதனைப் பற்றி*  யான் இறையேனும் இடர் இலனே.


    இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்*  எல்லா உலகும் கழிய,* 
    படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்*  உடன் ஏற திண்தேர்கடவி,*

    சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,* 
    உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயர் இலனே.


    துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி*  நின்ற வண்ணம் நிற்கவே,* 
    துயரில் மலியும் மனிசர் பிறவியில்*  தோன்றி கண் காணவந்து,*

    துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்*  புக உய்க்கும் அம்மான்,* 
    துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற*  யான் ஓர் துன்பம் இலனே.


    துன்பமும் இன்பமும் ஆகிய*  செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,* 
    இன்பம் இல் வெம் நரகு ஆகி*  இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்

    மன் பல் உயிர்களும் ஆகி*  பலபல மாய மயக்குக்களால்,* 
    இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று*  ஏதும் அல்லல் இலனே. 


    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்*  அழகு அமர் சூழ் ஒளியன்,* 
    அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்*  ஆகியும் நிற்கும் அம்மான்,*

    எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு*  எல்லாக் கருமங்களும் செய்,* 
    எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி*  யான் ஓர் துக்கம் இலனே.


    துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி*  துழாய் அலங்கல் பெருமான்,* 
    மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து*  வேண்டும் உருவு கொண்டு,* 

    நக்க பிரானோடு அயன் முதலாக*  எல்லாரும் எவையும்,*  தன்னுள் 
    ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று*  ஒன்றும் தளர்வு இலனே.


    தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த*  தனிமுதல் ஞானம் ஒன்றாய்,* 
    அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்*  அருவு ஆகி நிற்கும்,*

    வளர் ஒளி ஈசனை மூர்த்தியை*  பூதங்கள் ஐந்தை இருசுடரை,* 
    கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி*  யான் என்றும் கேடு இலனே.


    கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,*  அவன் 

    நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,* 
    வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்*  ஒரு நாயகமே. (2)


    ஒரு நாயகமாய்*  ஓட உலகு உடன் ஆண்டவர்,* 
    கரு நாய் கவர்ந்த காலர்*  சிதைகிய பானையர்,*

    பெரு நாடு காண*  இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,* 
    திருநாரணன் தாள்*  காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.


    உய்ம்மின் திறைகொணர்ந்து*  என்று உலகு ஆண்டவர்,*  இம்மையே 
    தம் இன்சுவை மடவாரைப்*  பிறர் கொள்ளத் தாம் விட்டு* 

    வெம் மின் ஒளிவெயில்*  கானகம் போய்க் குமைதின்பர்கள்,* 
    செம்மின் முடித் திருமாலை*  விரைந்து அடி சேர்மினோ. 


    அடி சேர் முடியினர் ஆகி*  அரசர்கள் தாம் தொழ,* 
    இடி சேர் முரசங்கள்*  முற்றத்து இயம்ப இருந்தவர்,* 

    பொடி சேர் துகளாய்ப் போவர்கள்*  ஆதலில் நொக்கெனக்,* 
    கடி சேர் துழாய்முடிக்*  கண்ணன் கழல்கள் நினைமினோ. 


    நினைப்பான் புகில் கடல் எக்கலின்*  நுண்மணலில் பலர்,* 
    எனைத்தோர் உகங்களும்*  இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,* 

    மனைப்பால் மருங்கு*  அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,* 
    பனைத் தாள் மத களிறு அட்டவன்*  பாதம் பணிமினோ.


    பணிமின் திருவருள் என்னும்*  அம் சீதப் பைம் பூம் பள்ளி,* 
    அணி மென் குழலார்*  இன்பக் கலவி அமுது உண்டார்,* 

    துணி முன்பு நால*  பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,* 
    மணி மின்னு மேனி*  நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.  


    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது*  மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,* 
    ஆழ்ந்தார் என்று அல்லால்*  அன்று முதல் இன்று அறுதியா,*

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்*  என்பது இல்லை நிற்குறில்,* 
    ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி*  அண்ணல் அடியவர் ஆமினோ.  


    ஆம் இன் சுவை அவை*  ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,* 
    தூ மென் மொழி மடவார்*  இரக்கப் பின்னும் துற்றுவார்,* 

    ஈமின் எமக்கு ஒரு துற்று என்று*  இடறுவர் ஆதலின்,* 
    கோமின் துழாய் முடி*  ஆதி அம் சோதி குணங்களே.        


    குணம் கொள் நிறை புகழ் மன்னர்*  கொடைக்கடன் பூண்டிருந்து,* 
    இணங்கி உலகு உடன் ஆக்கிலும்*  ஆங்கு அவனை இல்லார்,*

    மணம் கொண்ட போகத்து மன்னியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    பணம் கொள் அரவு அணையான்*  திருநாமம் படிமினோ.


    படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து*  ஐம்புலன் வென்று,* 
    செடி மன்னு காயம் செற்றார்களும்*  ஆங்கு அவனை இல்லார்,* 

    குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    கொடி மன்னு புள் உடை*  அண்ணல் கழல்கள் குறுகுமினோ.


    குறுக மிக உணர்வத்தொடு நோக்கி*  எல்லாம்விட்ட,* 
    இறுகல் இறப்பு என்னும்*  ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,* 

    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்*  பின்னும் வீடு இல்லை,* 
    மறுகல் இல் ஈசனைப் பற்றி*  விடாவிடில் வீடு அஃதே. 


    அஃதே உய்யப் புகும் ஆறு என்று*  கண்ணன் கழல்கள் மேல்,* 
    கொய் பூம் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,* 

    செய் கோலத்து ஆயிரம்*  சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,* 
    அஃகாமல் கற்பவர்*  ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.      


    பாலன் ஆய்*  ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,* 
    ஆல் இலை*  அன்னவசம் செய்யும் அண்ணலார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    மாலுமால்,*  வல்வினையேன்*  மட வல்லியே. (2)  


    வல்லி சேர் நுண் இடை*  ஆய்ச்சியர் தம்மொடும்,* 
    கொல்லைமை செய்து*  குரவை பிணைந்தவர்,* 

    நல் அடிமேல் அணி*  நாறு துழாய் என்றே 
    சொல்லுமால்,*  சூழ் வினையாட்டியேன் பாவையே.   


    பா இயல் வேத*  நல் மாலை பல கொண்டு,* 
    தேவர்கள் மா முனிவர்*  இறைஞ்ச நின்ற* 

    சேவடிமேல் அணி*  செம் பொன் துழாய் என்றே 
    கூவுமால்,*  கோள் வினையாட்டியேன் கோதையே.   


    கோது இல வண்புகழ்*  கொண்டு சமயிகள்,* 
    பேதங்கள் சொல்லிப்*  பிதற்றும் பிரான்பரன்,*

    பாதங்கள் மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  ஊழ்வினையேன்*  தடந் தோளியே.     


    தோளி சேர் பின்னை பொருட்டு*  எருது ஏழ் தழீஇக் 
    கோளியார்*  கோவலனார்*  குடக் கூத்தனார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    நாளும்நாள்,*  நைகின்றதால்*  என்தன் மாதரே       


    மாதர் மா மண்மடந்தைபொருட்டு*  ஏனம் ஆய்,* 
    ஆதி அம் காலத்து*  அகல் இடம் கீண்டவர்,* 

    பாதங்கள்மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  எய்தினள் என் தன் மடந்தையே.    


    மடந்தையை*  வண் கமலத் திருமாதினை,* 
    தடம் கொள் தார் மார்பினில்*  வைத்தவர் தாளின்மேல்,* 

    வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே*  இவள் 
    மடங்குமால்*  வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே. 


    கொம்பு போல் சீதைபொருட்டு*  இலங்கை நகர்* 
    அம்பு எரி உய்த்தவர்*  தாள் இணைமேல் அணி,*

    வம்பு அவிழ் தண் அம் துழாய்*  மலர்க்கே இவள்- 
    நம்புமால்,*  நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!


    நங்கைமீர்! நீரும்*  ஓர் பெண் பெற்று நல்கினீர்,* 
    எங்ஙனே சொல்லுகேன்*  யான் பெற்ற ஏழையை,* 

    சங்கு என்னும் சக்கரம் என்னும்*  துழாய் என்னும்,* 
    இங்ஙனே சொல்லும்*  இராப் பகல் என்செய்கேன்?   


    என் செய்கேன்? என்னுடைப் பேதை*  என் கோமளம்,* 
    என் சொல்லும்*  என் வசமும் அல்லள் நங்கைமீர்,*

    மின் செய் பூண் மார்பினன்*  கண்ணன் கழல் துழாய்,* 
    பொன் செய்பூண்*  மென்முலைக்கு என்று மெலியுமே


    மெலியும் நோய் தீர்க்கும்*  நம் கண்ணன் கழல்கள்மேல்,* 
    மலி புகழ் வண் குருகூர்ச்*  சடகோபன் சொல்,*

    ஒலி புகழ் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்* 
    மலி புகழ் வானவர்க்கு ஆவர்*  நல் கோவையே. (2)    


    கோவை வாயாள் பொருட்டு*  ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,*  மதிள் இலங்கைக் 
    கோவை வீயச் சிலை குனித்தாய்!*  குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,* 

    பூவை வீயா நீர் தூவிப்*  போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூவை வீயாம் மேனிக்குப்*  பூசும் சாந்து என் நெஞ்சமே. 


    பூசும் சாந்து என் நெஞ்சமே*  புனையும் கண்ணி எனதுடைய,* 
    வாசகம் செய் மாலையே*  வான் பட்டு ஆடையும் அஃதே,*

    தேசம் ஆன அணிகலனும்*  என் கைகூப்புச் செய்கையே,* 
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த*  எந்தை ஏக மூர்த்திக்கே.  


    ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி- 
    ஆகி,*  ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,* 

    நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற*  நாராயணனே உன்- 
    ஆகம் முற்றும் அகத்து அடக்கி*  ஆவி அல்லல் மாய்த்ததே. 


    மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த*  மாயப் பேய் உயிர்- 
    மாய்த்த,*  ஆய மாயனே! வாமனனே மாதவா,* 

    பூத்தண் மாலை கொண்டு*  உன்னைப் போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூத்தண் மாலை நெடுமுடிக்குப்*  புனையும் கண்ணி எனது உயிரே.  


    கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,* 
    எண் இல் பல்கலன்களும்*  ஏலும் ஆடையும் அஃதே,*

    நண்ணி மூவுலகும்*  நவிற்றும் கீர்த்தியும் அஃதே,* 
    கண்ணன் எம் பிரான் எம்மான்*  கால சக்கரத்தானுக்கே.   


    கால சக்கரத்தொடு*  வெண் சங்கம் கை ஏந்தினாய்,* 
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாராயணனே என்று என்று,* 

    ஓலம் இட்டு நான் அழைத்தால்*  ஒன்றும் வாராயாகிலும்,* 
    கோலம் ஆம் என் சென்னிக்கு*  உன் கமலம் அன்ன குரைகழலே.


    குரைகழல்கள் நீட்டி*  மண் கொண்ட கோல வாமனா,* 
    குரை கழல் கைகூப்புவார்கள்*  கூட நின்ற மாயனே,* 

    விரை கொள் பூவும் நீரும்கொண்டு*  ஏத்தமாட்டேனேலும்,*  உன் 
    உரை கொள் சோதித் திரு உருவம்*  என்னது ஆவி மேலதே.  


    என்னது ஆவி மேலையாய்*  ஏர் கொள் ஏழ் உலகமும்,* 
    துன்னி முற்றும் ஆகி நின்ற*  சோதி ஞான மூர்த்தியாய்,* 

    உன்னது என்னது ஆவியும்,*  என்னது உன்னது ஆவியும்* 
    இன்ன வண்ணமே நின்றாய்*  என்று உரைக்க வல்லேனே?   


    உரைக்க வல்லேன் அல்லேன்*  உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்* 
    கரைக்கண் என்று செல்வன் நான்?*  காதல் மையல் ஏறினேன்,*

    புரைப்பு இலாத பரம்பரனே!*  பொய் இலாத பரஞ்சுடரே,* 
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த*  யானும் ஏத்தினேன்.       


    யானும் ஏத்தி*  ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,*  பின்னையும் 
    தானும் ஏத்திலும்*  தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும் ஆகித் தித்திப்ப,* 
    யானும் எம் பிரானையே ஏத்தினேன்*  யான் உய்வானே


    உய்வு உபாயம் மற்று இன்மை தேறி*  கண்ணன் ஒண் கழல்கள் மேல்* 
    செய்ய தாமரைப் பழனத்*  தென்னன் குருகூர்ச் சடகோபன்,*

    பொய் இல் பாடல் ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்,* 
    வையம் மன்னி வீற்றிருந்து*  விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)


    மண்ணை இருந்து துழாவி*  'வாமனன் மண் இது' என்னும்,* 
    விண்ணைத் தொழுது அவன் மேவு*  வைகுந்தம் என்று கை காட்டும்,* 

    கண்ணை உள்நீர் மல்க நின்று*  'கடல்வண்ணன்' என்னும் அன்னே!*  என் 
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு*  என் செய்கேன் பெய் வளையீரே? (2)      


    பெய்வளைக் கைகளைக் கூப்பி*  'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,* 
    செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,*  'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,* 

    நையும் கண்ணீர் மல்க நின்று*  'நாரணன்' என்னும் அன்னே,*  என் 
    தெய்வ உருவில் சிறுமான்*  செய்கின்றது ஒன்று அறியேனே.


    அறியும் செந்தீயைத் தழுவி*  'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,* 
    எறியும்தண் காற்றைத் தழுவி*  'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*

    வெறிகொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
    செறிவளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   


    ஒன்றிய திங்களைக் காட்டி*  'ஒளிமணி வண்ணனே' என்னும்* 
    நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,* 

    நன்று பெய்யும் மழை காணில்*  நாரணன் வந்தான் என்று ஆலும்,* 
    என்று இன மையல்கள் செய்தான்*  என்னுடைக் கோமளத்தையே?


    கோமள வான் கன்றைப் புல்கி*  கோவிந்தன் மேய்த்தன' என்னும்,* 
    போம் இள நாகத்தின் பின்போய்*  அவன் கிடக்கை ஈது என்னும்,*

    ஆம் அளவு ஒன்றும் அறியேன்*  அருவினையாட்டியேன் பெற்ற,* 
    கோமள வல்லியை மாயோன்*  மால் செய்து செய்கின்ற கூத்தே.


    கூத்தர் குடம் எடுத்து ஆடில்*  'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,* 
    வாய்த்த குழல் ஓசை கேட்கில்*  'மாயவன்' என்று மையாக்கும்,*

    ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்*  அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,* 
    பேய்ச்சி முலை சுவைத்தாற்கு*  என் பெண்கொடி ஏறிய பித்தே!


    ஏறிய பித்தினோடு*  எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,* 
    நீறு செவ்வே இடக் காணில்*  நெடுமால் அடியார்' என்று ஓடும்,*

    நாறு துழாய் மலர் காணில்*  நாரணன் கண்ணி ஈது என்னும்,* 
    தேறியும் தேறாதும் மாயோன்*  திறத்தனளே இத் திருவே.


    திரு உடை மன்னரைக் காணில்,*  திருமாலைக் கண்டேனே என்னும்,* 
    உரு உடை வண்ணங்கள் காணில்*  'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*

    கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்*  'கடல்வண்ணன் கோயிலே' என்னும்* 
    வெருவிலும் வீழ்விலும் ஓவாள்*  கண்ணன் கழல்கள் விரும்புமே.      


    விரும்பிப் பகவரைக் காணில்*  'வியல் இடம் உண்டானே!' என்னும்,* 
    கரும் பெரு மேகங்கள் காணில்*  'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*

    பெரும் புல ஆ நிரை காணில்*  'பிரான் உளன்' என்று பின் செல்லும்,* 
    அரும் பெறல் பெண்ணினை மாயோன்*  அலற்றி அயர்ப்பிக்கின்றானே!    


    அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி*  அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,* 
    வியர்க்கும் மழைக்கண் துளும்ப*  வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,* 
     

    பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,*  பெருமானே! வா! என்று கூவும்,* 
    மயல் பெருங் காதல் என் பேதைக்கு*  என்செய்கேன் வல்வினையேனே!   


    வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,* 
    சொல் வினையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இவை பத்தும்,*

    நல் வினை என்று கற்பார்கள்*  நலனிடை வைகுந்தம் நண்ணி,*
    தொல்வினை தர எல்லாரும்*  தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)


    வீற்றிருந்து ஏழ் உலகும்*  தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,* 
    ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை*  வெம் மா பிளந்தான் தன்னை,* 

    போற்றி என்றே கைகள் ஆரத்*  தொழுது சொல் மாலைகள்,* 
    ஏற்ற நோற்றேற்கு*  இனி என்ன குறை எழுமையுமே?   (2)


    மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்*  உறை மார்பினன்,* 
    செய்ய கோலத் தடங் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேன்,* 
    வெய்ய நோய்கள் முழுதும்*  வியன் ஞாலத்து வீயவே. 


    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,* 
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,*

    வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி*  மேவப்பெற்றேன்,* 
    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்தனன் மேவியே.   


    மேவி நின்று தொழுவார்*  வினை போக மேவும் பிரான்,* 
    தூவி அம் புள் உடையான்*  அடல் ஆழி அம்மான் தன்னை,

    நா இயலால் இசைமாலைகள் ஏத்தி*  நண்ணப் பெற்றேன்,* 
    ஆவி என் ஆவியை*  யான் அறியேன் செய்த ஆற்றையே.


    ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,*  அமரர்தம்- 
    ஏற்றை*  எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,* 

    மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி*  நாளும் மகிழ்வு எய்தினேன்,* 
    காற்றின் முன்னம் கடுகி*  வினை நோய்கள் கரியவே.


    கரிய மேனிமிசை*  வெளிய நீறு சிறிதே இடும்,* 
    பெரிய கோலத் தடங்கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேற்கு,* 
    அரியது உண்டோ எனக்கு*  இன்று தொட்டும் இனி என்றுமே?    


    என்றும் ஒன்று ஆகி*  ஒத்தாரும் மிக்கார்களும்,*  தன் தனக்கு -
    இன்றி நின்றானை*  எல்லா உலகும் உடையான் தன்னை,* 

    குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை*  சொல் மாலைகள்,* 
    நன்று சூட்டும் விதி எய்தினம்*  என்ன குறை நமக்கே?          


    நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்*  இன்பனை,*  ஞாலத்தார்- 
    தமக்கும்*  வானத்தவர்க்கும் பெருமானை,*  தண் தாமரை- 

    சுமக்கும்*  பாதப் பெருமானை*  சொல்மாலைகள் சொல்லுமாறு- 
    அமைக்க வல்லேற்கு*  இனி யாவர் நிகர் அகல் வானத்தே?


    வானத்தும் வானத்துள் உம்பரும்*  மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் 
    தானத்தும்,*  எண் திசையும் தவிராது*  நின்றான் தன்னை,*  

    கூனல் சங்கத் தடக்கையவனை*  குடம் ஆடியை 
    வானக் கோனை,*  கவி சொல்ல வல்லேற்கு*  இனி மாறுஉண்டே?   


    உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்*  கிடந்தும் நின்றும்,* 
    கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்*  மணம் கூடியும்,* 

    கண்ட ஆற்றால் தனதே*  உலகு என நின்றான் தன்னை,* 
    வண் தமிழ் நூற்க நோற்றேன்*  அடியார்க்கு இன்ப மாரியே.


    மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
    வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 

    காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
    வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.


    தீர்ப்பாரை யாம் இனி*  எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
    ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்*  உற்ற நல் நோய் இது தேறினோம்,* 

    போர்ப்பாகு தான் செய்து*  அன்று ஐவரை வெல்வித்த,*  மாயப்போர்த் 
    தேர்ப்பாகனார்க்கு*  இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?


    திசைக்கின்றதே இவள் நோய்*  இது மிக்க பெருந் தெய்வம்,* 
    இசைப்பு இன்றி*  நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*

    திசைப்பு இன்றியே*  சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,*  நீர் 
    இசைக்கிற்றிராகில்*  நன்றே இல் பெறும் இது காண்மினே.  


    இது காண்மின் அன்னைமீர்!*  இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,*  நீர் 
    எதுவானும் செய்து*  அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,* 

    மது வார் துழாய்முடி*  மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,* 
    அதுவே இவள் உற்ற நோய்க்கும்*  அரு மருந்து ஆகுமே.


    மருந்து ஆகும் என்று அங்கு ஓர்*  மாய வலவை சொல் கொண்டு,*  நீர் 
    கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்*  களன் இழைத்து என் பயன்?* 

    ஒருங்காகவே உலகு ஏழும்*  விழுங்கி உமிழ்ந்திட்ட,* 
    பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்*  இவளைப் பெறுதிரே. 


    இவளைப் பெறும்பரிசு*  இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,* 
    குவளைத் தடங் கண்ணும்*  கோவைச் செவ்வாயும் பயந்தனள்,* 

    கவளக் கடாக் களிறு அட்ட பிரான்*  திருநாமத்தால்,* 
    தவளப் பொடிக்கொண்டு*  நீர்இட்டிடுமின் தணியுமே.     


    தணியும் பொழுது இல்லை*  நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,* 
    பிணியும் ஒழிகின்றது இல்லை*  பெருகும் இது அல்லால்,* 

    மணியின் அணிநிற மாயன்*  தமர் அடி நீறுகொண்டு* 
    அணிய முயலின்*  மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.


    அணங்குக்கு அரு மருந்து என்று*  அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்* 
    துணங்கை எறிந்து*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*

    உணங்கல் கெடக்*  கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? 
    வணங்கீர்கள் மாயப் பிரான்*  தமர் வேதம் வல்லாரையே.


    வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 
    பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*

    ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,* 
    கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  


    கீழ்மையினால் அங்கு ஓர்*  கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,* 
    நாழ்மை பல சொல்லி*  நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*

    ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்*  இந் நோய்க்கும் ஈதே மருந்து,* 
    ஊழ்மையில் கண்ணபிரான்*  கழல் வாழ்த்துமின் உன்னித்தே.


    உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்*  அவனை அல்லால்,* 
    நும் இச்சை சொல்லி*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,* 

    மன்னப்படும் மறைவாணனை*  வண் துவராபதி- 
    மன்னனை,*  ஏத்துமின் ஏத்துதலும்*  தொழுது ஆடுமே.   


    தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு*  ஆட்செய்து நோய் தீர்ந்த* 
    வழுவாத தொல்புகழ்  வண் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    வழுவாத ஆயிரத்துள்*  இவை பத்து வெறிகளும்,* 
    தொழுது ஆடிப் பாடவல்லார்*  துக்க சீலம் இலர்களே.    


    சீலம் இல்லாச் சிறியனேலும்*  செய்வினையோ பெரிதால்,* 
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி*  'நாராயணா! என்று என்று,*

    காலந்தோறும் யான் இருந்து*  கைதலைபூசல் இட்டால்* 
    கோல மேனி காண வாராய்*  கூவியும் கொள்ளாயே.


    கொள்ள மாளா இன்ப வெள்ளம்*  கோது இல தந்திடும்,*  என் 
    வள்ளலேயோ! வையம் கொண்ட*  வாமனாவோ! என்று என்று,* 

    நள் இராவும் நன் பகலும்*  நான் இருந்து ஓலம் இட்டால்,* 
    கள்ள மாயா! உன்னை*  என் கண் காண வந்து ஈயாயே.


    'ஈவு இலாத தீவினைகள்*  எத்தனை செய்தனன்கொல்?* 
    தாவி வையம் கொண்ட எந்தாய்!*  தாமோதரா! என்று என்று* 

    கூவிக் கூவி நெஞ்சு உருகி*  கண்பனி சோர நின்றால்,* 
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய்*  பாவியேன் காண வந்தே.   


    'காண வந்து என் கண்முகப்பே*  தாமரைக்கண் பிறழ,* 
    ஆணி செம்பொன் மேனி எந்தாய்!*  நின்று அருளாய் என்று என்று,* 

    நாணம் இல்லாச் சிறு தகையேன்*  நான் இங்கு அலற்றுவது என்,* 
    பேணி வானோர் காணமாட்டாப்*  பீடு உடை அப்பனையே? 


    அப்பனே! அடல் ஆழியானே,*  ஆழ் கடலைக் கடைந்த 
    துப்பனே,*  உன் தோள்கள் நான்கும்*  கண்டிடக்கூடுங்கொல்? என்று*

    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு*  ஆவி துவர்ந்து துவர்ந்து,* 
    இப்பொழுதே வந்திடாய் என்று*  ஏழையேன் நோக்குவனே.    


    நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை*  நாள்தோறும் என்னுடைய,* 

    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்*  அல்ல புறத்தினுள்ளும்,* 
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!*  நின்னை அறிந்து அறிந்தே.


    அறிந்து அறிந்து தேறித் தேறி*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நிறைந்த ஞான மூர்த்தியாயை*  நின்மலமாக வைத்து,* 

    பிறந்தும் செத்தும் நின்று இடறும்*  பேதைமை தீர்ந்தொழிந்தேன்* 
    நறுந் துழாயின் கண்ணி அம்மா!*  நான் உன்னைக் கண்டுகொண்டே!


    கண்டுகொண்டு என் கைகள் ஆர*  நின் திருப்பாதங்கள்மேல்,* 
    எண் திசையும் உள்ள பூக்கொண்டு*  ஏத்தி உகந்து உகந்து,* 

    தொண்டரோங்கள் பாடி ஆட*  சூழ் கடல் ஞாலத்துள்ளே,* 
    வண் துழாயின் கண்ணி வேந்தே!*  வந்திடகில்லாயே.   


    இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்*  ஐம்புலன் வெல்ல கில்லேன்,* 
    கடவன் ஆகி காலந்தோறும்*  பூப்பறித்து ஏத்த கில்லேன்,*

    மட வல் நெஞ்சம் காதல் கூர*  வல்வினையேன் அயர்ப்பாய்த்,* 
    தடவுகின்றேன் எங்குக் காண்பன்*  சக்கரத்து அண்ணலையே?  


    சக்கரத்து அண்ணலே என்று*  தாழ்ந்து கண்ணீர் ததும்ப,* 
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன்*  பாவியேன் காண்கின்றிலேன்,* 

    மிக்க ஞான மூர்த்தி ஆய*  வேத விளக்கினை*  என் 
    தக்க ஞானக் கண்களாலே*  கண்டு தழுவுவனே.          


    தழுவிநின்ற காதல் தன்னால்*  தாமரைக் கண்ணன் தன்னை,* 
    குழுவு மாடத் தென் குருகூர்*  மாறன் சடகோபன்,*  சொல் 

    வழுவு இலாத ஒண் தமிழ்கள்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    தழுவப் பாடி ஆட வல்லார்*  வைகுந்தம் ஏறுவரே.


    ஏறு ஆளும் இறையோனும்*  திசைமுகனும் திருமகளும்,* 
    கூறு ஆளும் தனி உடம்பன்*  குலம் குலமா அசுரர்களை,* 

    நீறு ஆகும்படியாக*  நிருமித்து படை தொட்ட,* 
    மாறாளன் கவராத*  மணி மாமை குறைவு இலமே. (2)


    மணி மாமை குறைவு இல்லா*  மலர்மாதர் உறை மார்பன்,* 
    அணி மானத் தட வரைத்தோள்*  அடல் ஆழித் தடக்கையன்,* 

    பணி மானம் பிழையாமே*  அடியேனைப் பணிகொண்ட,* 
    மணிமாயன் கவராத*  மட நெஞ்சால் குறைவு இலமே.       


    மட நெஞ்சால் குறைவு இல்லா*  மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,* 
    விட நஞ்ச முலை சுவைத்த*  மிகு ஞானச் சிறு குழவி,* 

    பட நாகத்து அணைக் கிடந்த*  பரு வரைத் தோள் பரம்புருடன்,* 
    நெடுமாயன் கவராத*  நிறையினால் குறைவு இலமே.


    நிறையினால் குறைவு இல்லா*  நெடும் பணைத் தோள் மடப் பின்னை,* 
    பொறையினால் முலை அணைவான்*  பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,* 

    கறையினார் துவர் உடுக்கை*  கடை ஆவின் கழி கோல் கைச்,* 
    சறையினார் கவராத*  தளிர் நிறத்தால் குறைவு இலமே


    தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்*  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
    கிளிமொழியாள் காரணமாக்*  கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

    களி மலர்த் துழாய் அலங்கல்*  கமழ் முடியன் கடல் ஞாலத்து,* 
    அளிமிக்கான் கவராத,*  அறிவினால் குறைவு இலமே. 


    அறிவினால் குறைவு இல்லா*  அகல் ஞாலத்தவர் அறிய,* 
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த*  நிறை ஞானத்து ஒருமூர்த்தி,* 

    குறிய மாண் உரு ஆகி*  கொடுங் கோளால் நிலம் கொண்ட,* 
    கிறி அம்மான் கவராத*  கிளர் ஒளியால் குறைவு இலமே.  


    கிளர் ஒளியால் குறைவு இல்லா*  அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,* 
    கிளர் ஒளிய இரணியனது*  அகல் மார்பம் கிழித்து உகந்த,* 

    வளர் ஒளிய கனல் ஆழி*  வலம்புரியன் மணி நீல,* 
    வளர் ஒளியான் கவராத*  வரி வளையால் குறைவு இலமே.


    வரி வளையால் குறைவு இல்லாப்*  பெரு முழக்கால் அடங்காரை,* 
    எரி அழலம் புக ஊதி*  இரு நிலம் முன் துயர் தவிர்த்த,* 

    தெரிவு அரிய சிவன் பிரமன்*  அமரர் கோன் பணிந்து ஏத்தும்,* 
    விரி புகழான் கவராத*  மேகலையால் குறைவு இலமே.


    மேகலையால் குறைவு இல்லா*  மெலிவு உற்ற அகல் அல்குல்,* 
    போகமகள் புகழ்த் தந்தை*  விறல் வாணன் புயம் துணித்து,* 

    நாகமிசைத் துயில்வான்போல்*  உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,* 
    யோகு அணைவான் கவராத*  உடம்பினால் குறைவு இலமே.


    உடம்பினால் குறைவு இல்லா*  உயிர் பிரிந்த மலைத்துண்டம்,* 
    கிடந்தனபோல் துணி பலவா*  அசுரர் குழாம் துணித்து உகந்த,* 

    தடம் புனல சடைமுடியன்*  தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,* 
    உடம்பு உடையான் கவராத*  உயிரினால் குறைவு இலமே. 


    உயிரினால் குறைவு இல்லா*  உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,* 
    தயிர் வெண்ணெய் உண்டானைத்,*  தடம் குருகூர்ச் சடகோபன்,* 

    செயிர் இல் சொல் இசைமாலை*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 


    நண்ணாதார் முறுவலிப்ப*  நல் உற்றார் கரைந்து ஏங்க,* 
    எண் ஆராத் துயர் விளைக்கும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    கண்ணாளா! கடல் கடைந்தாய்!*  உன கழற்கே வரும் பரிசு,* 
    தண்ணாவாது அடியேனைப்*  பணி கண்டாய் சாமாறே. (2)        


    சாம் ஆறும் கெடும் ஆறும்*  தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,* 
    ஏமாறிக் கிடந்து அலற்றும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்*  அரவு அணையாய்! அம்மானே,* 
    கூமாறே விரைகண்டாய்*  அடியேனை குறிக்கொண்டே.


    கொண்டாட்டும் குலம் புனைவும்*  தமர் உற்றார் விழு நிதியும்,* 
    வண்டு ஆர் பூங் குழலாளும்,*  மனை ஒழிய உயிர் மாய்தல்,* 

    கண்டு ஆற்றேன் உலகு இயற்கை*  கடல்வண்ணா! அடியேனைப்* 
    பண்டேபோல் கருதாது*  உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.


    கொள் என்று கிளர்ந்து எழுந்த*  பெரும் செல்வம் நெருப்பு ஆக,* 
    கொள் என்று தமம் மூடும்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,* 
    வள்ளல் செய்து அடியேனை*  உனது அருளால் வாங்காயே. 


    வாங்கு நீர் மலர் உலகில்*  நிற்பனவும் திரிவனவும்,* 
    ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்*  பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,* 

    ஈங்கு இதன்மேல் வெம் நரகம்*  இவை என்ன உலகு இயற்கை?* 
    வாங்கு எனை நீ மணிவண்ணா!*  அடியேனை மறுக்கேலே.    


    மறுக்கி வல் வலைப்படுத்தி*  குமைத்திட்டு கொன்று உண்பர்,* 
    அறப்பொருளை அறிந்து ஓரார்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வெறித் துளவ முடியானே!*  வினையேனை உனக்கு அடிமை- 
    அறக்கொண்டாய்,*  இனி என் ஆர் அமுதே!*  கூயருளாயே.  


    ஆயே! இவ் உலகத்து*  நிற்பனவும் திரிவனவும்* 
    நீயே மற்று ஒரு பொருளும்*  இன்றி நீ நின்றமையால்,* 

    நோயே மூப்பு இறப்பு பிறப்பு*  பிணியே என்று இவை ஒழிய,* 
    கூயேகொள் அடியேனை*  கொடு உலகம் காட்டேலே.


    காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
    ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 

    கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   


    கூட்டுதி நின் குரை கழல்கள்*  இமையோரும் தொழாவகைசெய்து,* 
    ஆட்டுதி நீ அரவு அணையாய்!*  அடியேனும் அஃது அறிவன்,* 

    வேட்கை எல்லாம் விடுத்து*  என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  கூட்டினை நான் கண்டேனே.   


    கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்*  ஐங்கருவி 
    கண்ட இன்பம்,*  தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*

    ஒண் தொடியாள் திருமகளும்*  நீயுமே நிலாநிற்ப,* 
    கண்ட சதிர் கண்டொழிந்தேன்*  அடைந்தேன் உன் திருவடியே. 


    திருவடியை நாரணனை*  கேசவனை பரஞ்சுடரை,* 
    திருவடி சேர்வது கருதி*  செழுங் குருகூர்ச் சடகோபன்,* 

    திருவடிமேல் உரைத்த தமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    திருவடியே அடைவிக்கும்*  திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)      


    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
    அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 

    குன்றம்போல் மணிமாடம் நீடு*   திருக்குருகூர் அதனுள்,* 
    நின்ற ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)


    நாடி நீர் வணங்கும் தெய்வமும்*  உம்மையும் முன்படைத்தான்,* 
    வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்*  அவன் மேவி உறைகோயில்,* 

    மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனைப்* 
    பாடி ஆடி பரவிச் செல்மின்கள்*  பல் உலகீர்! பரந்தே.       


    பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து*  அன்று உடனே விழுங்கி,* 
    கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது*  கண்டும் தெளியகில்லீர்,* 

    சிரங்களால் அமரர் வணங்கும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பரன் திறம் அன்றி பல் உலகீர்!*  தெய்வம் மற்று இல்லை பேசுமினே!   


    பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்*  பிறர்க்கும் 
    நாயகன் அவனே,*  கபால நல் மோக்கத்துக்*  கண்டுகொண்மின்,* 

    தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஈசன்பால் ஓர் அவம் பறைதல்*  என் ஆவது இலிங்கியர்க்கே?


    இலிங்கத்து இட்ட புராணத்தீரும்*  சமணரும் சாக்கியரும்* 
    வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்* 

    மலிந்து செந்நெல் கவரி வீசும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பொலிந்து நின்ற பிரான் கண்டீர்*  ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)     


    போற்றி மற்று ஓர் தெய்வம்*  பேணப் புறத்திட்டு*  உம்மை இன்னே 
    தேற்றி வைத்தது*  எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,* 

    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்*  அது அறிந்து அறிந்து ஓடுமினே.  


    ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து*  மற்று ஓர் தெய்வம், 
    பாடி ஆடிப் பணிந்து*  பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*

    கூடி வானவர் ஏத்த நின்ற*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு*  அடிமைபுகுவதுவே


    புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட*  மார்க்கண்டேயன் அவனை* 
    நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது*  நாராயணன் அருளே*

    கொக்கு அலர் தடம் தாழை வேலித்*  திருக்குருகூர் அதனுள்* 
    மிக்க ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் விளம்புதிரே   


    விளம்பும் ஆறு சமயமும்*  அவைஆகியும் மற்றும் தன்பால்,* 
    அளந்து காண்டற்கு அரியன் ஆகிய*  ஆதிப்பிரான் அமரும்,* 

    வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனை,* 
    உளம் கொள் ஞானத்து வைம்மின்*  உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.  


    உறுவது ஆவது எத்தேவும்*  எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,* 
    மறு இல் மூர்த்தியோடு ஒத்து*  இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,* 

    செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்* 
    குறிய மாண் உரு ஆகிய*  நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே. 


    ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்*  வண் குருகூர்நகரான்*
    நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்*  மாறன் சடகோபன்,* 

    வேட்கையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,* 
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்*  மற்றது கையதுவே. (2)  


    கை ஆர் சக்கரத்து*  என் கருமாணிக்கமே! என்று என்று,* 
    பொய்யே கைம்மைசொல்லி*  புறமே புறமே ஆடி.* 

    மெய்யே பெற்றொழிந்தேன்,*  விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
    ஐயோ கண்ணபிரான்!*  அறையோ இனிப்போனாலே. (2)


    போனாய் மாமருதின் நடுவே*  என் பொல்லா மணியே,* 
    தேனே! இன்அமுதே!'*  என்று என்றே சில கூத்துச்சொல்ல,* 

    தானேல் எம்பெருமான்*  அவன் என் ஆகி ஒழிந்தான்,* 
    வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.


    உள்ளன மற்று உளவா*  புறமே சில மாயம் சொல்லி,* 
    வள்ளல் மணிவண்ணனே!*  என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*

    கள்ள மனம் தவிர்ந்தே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,* 
    வெள்ளத்து அணைக்கிடந்தாய்*  இனி உன்னை விட்டு என் கொள்வனே? 


    என் கொள்வன் உன்னை விட்டு என்னும்*  வாசகங்கள் சொல்லியும்,* 
    வன் கள்வனேன் மனத்தை வலித்து*  கண்ண நீர் கரந்து,* 

    நின்கண் நெருங்கவைத்தே*  எனது ஆவியை நீக்ககில்லேன்,* 
    என்கண் மலினம் அறுத்து*  என்னைக்கூவி அருளாய்கண்ணனே!         


    கண்ணபிரானை*  விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,* 
    நண்ணியும் நண்ணகில்லேன்*  நடுவே ஓர் உடம்பில் இட்டு,* 

    திண்ணம் அழுந்தக் கட்டிப்*  பல செய்வினை வன் கயிற்றால்,* 
    புண்ணை மறையவரிந்து*  என்னைப் போர வைத்தாய் புறமே.


    புறம் அறக் கட்டிக்கொண்டு*  இரு வல்வினையார் குமைக்கும்,* 
    முறை முறை யாக்கை புகல்ஒழியக்*  கண்டு கொண்டொழிந்தேன்,*

    நிறம் உடை நால்தடம்தோள்*  செய்யவாய் செய்ய தாமரைக்கண்,* 
    அறம்முயல் ஆழிஅங்கைக்*  கருமேனி அம்மான் தன்னையே.      


    அம்மான் ஆழிப்பிரான்*  அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,* 
    எம் மா பாவியர்க்கும்*  விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,* 

    'கைம்மா துன்பு ஒழித்தாய்!'  என்று கைதலைபூசல் இட்டே,* 
    மெய்ம் மால் ஆயொழிந்தேன்*  எம்பிரானும் என் மேலானே.   


    மேலாத் தேவர்களும்*  நிலத் தேவரும் மேவித் தொழும்,* 
    மாலார் வந்து இனநாள்*  அடியேன் மனத்தே மன்னினார்,*

    சேல் ஏய் கண்ணியரும்*  பெரும் செல்வமும் நன்மக்களும்,* 
    மேலாத் தாய் தந்தையும்*  அவரே இனி ஆவாரே.   


    ஆவார் ஆர் துணை என்று*  அலை நீர்க் கடலுள் அழுந்தும்- 
    நாவாய் போல்,*  பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,* 

    தேவு ஆர் கோலத்தொடும்*  திருச் சக்கரம் சங்கினொடும்,* 
    ஆஆ என்று அருள்செய்து*  அடியேனொடும் ஆனானே.    


    ஆனான் ஆளுடையான் என்று*  அஃதே கொண்டு உகந்துவந்து*
    தானே இன்அருள் செய்து*  என்னை முற்றவும் தான் ஆனான்,* 

    மீன் ஆய் ஆமையும் ஆய்*  நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,* 
    கான் ஆர் ஏனமும் ஆய்*  கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.    


    கார்வண்ணன் கண்ண பிரான்*  கமலத்தடங்கண்ணன் தன்னை,* 
    ஏர்வள ஒண்கழனிக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஆர்வண்ணத்தால் உரைப்பார்*  அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.


    பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
    நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*

    கலியும் கெடும் கண்டுகொண்மின்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 


    கண்டோம் கண்டோம் கண்டோம்*  கண்ணுக்கு இனியன கண்டோம்* 
    தொண்டீர்! எல்லீரும் வாரீர்*  தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*

    வண்டுஆர் தண் அம் துழாயான்*  மாதவன் பூதங்கள் மண்மேல்* 
    பண் தான் பாடி நின்று ஆடி*   பரந்து திரிகின்றனவே*


    திரியும் கலியுகம் நீங்கி*  தேவர்கள் தாமும் புகுந்து* 
    பெரிய கிதயுகம் பற்றி*  பேரின்ப வெள்ளம் பெருக* 

    கரிய முகில்வண்ணன் எம்மான்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    இரியப் புகுந்து இசை பாடி*  எங்கும் இடம் கொண்டனவே*


    இடம் கொள் சமயத்தை எல்லாம்*  எடுத்துக் களைவன போலே* 
    தடம் கடல் பள்ளிப் பெருமான்*  தன்னுடைப் பூதங்களே ஆய்* 

    கிடந்தும் இருந்தும் எழுந்தும்*  கீதம் பலபல பாடி* 
    நடந்தும் பறந்தும் குனித்தும்*  நாடகம் செய்கின்றனவே*.  


    செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே*  ஒக்கின்றது இவ் உலகத்து* 
    வைகுந்தன் பூதங்களே ஆய்*  மாயத்தினால் எங்கும் மன்னி*

    ஐயம் ஒன்று இல்லை அரக்கர்*  அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
    உய்யும் வகை இல்லை தொண்டீர்!*  ஊழி பெயர்த்திடும் கொன்றே*


    கொன்று உயிர் உண்ணும் விசாதி*  பகை பசி தீயன எல்லாம்* 
    நின்று இவ் உலகில் கடிவான்*  நேமிப் பிரான் தமர் போந்தார்* 

    நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்*  ஞாலம் பரந்தார்* 
    சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!*  சிந்தையைச் செந்நிறுத்தியே*.


    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்*  தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்* 
    மறுத்தும் அவனோடே கண்டீர்*  மார்க்கண்டேயனும் கரியே* 

    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா*  கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை* 
    இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி*  யாயவர்க்கே இறுமினே*.    


    இறுக்கும் இறை இறுத்து உண்ண*  எவ் உலகுக்கும் தன் மூர்த்தி* 
    நிறுத்தினான் தெய்வங்கள் ஆக*  அத் தெய்வ நாயகன் தானே* 

    மறுத் திரு மார்வன் அவன் தன்*  பூதங்கள் கீதங்கள் பாடி* 
    வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்*  மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.


    மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்*  வேதப் புனித இருக்கை* 
    நாவில் கொண்டு அச்சுதன் தன்னை*  ஞானவிதி பிழையாமே* 

    பூவில் புகையும் விளக்கும்*  சாந்தமும் நீரும் மலிந்து* 
    மேவித் தொழும் அடியாரும்*  பகவரும் மிக்கது உலகே*.     


    மிக்க உலகுகள் தோறும்*  மேவி கண்ணன் திருமூர்த்தி* 
    நக்க பிரானோடு*  அயனும் இந்திரனும் முதலாகத்* 

    தொக்க அமரர் குழாங்கள்*  எங்கும் பரந்தன தொண்டீர்!* 
    ஒக்கத் தொழ கிற்றிராகில்*  கலியுகம் ஒன்றும் இல்லையே*.      


    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன்அடியார்க்கு அருள்செய்யும்* 
    மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப் பிரான் கண்ணன் தன்னை*

    கலிவயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
    ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.        


    மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
    ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 

    பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
    ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     


    என் செய்யும் ஊரவர் கவ்வை*  தோழீ இனி நம்மை* 
    என் செய்ய தாமரைக் கண்ணன்*  என்னை நிறை கொண்டான்*

    முன் செய்ய மாமை இழந்து*  மேனி மெலிவு எய்தி* 
    என் செய்ய வாயும் கருங்கண்ணும்*  பயப்பு ஊர்ந்தவே*.           


    ஊர்ந்த சகடம்*  உதைத்த பாதத்தன்*  பேய்முலை- 
    சார்ந்து சுவைத்த செவ்வாயன்*  என்னை நிறை கொண்டான்*

    பேர்ந்தும் பெயர்ந்தும்*  அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்* 
    தீர்ந்த என் தோழீ!*  என் செய்யும் ஊரவர் கவ்வையே?* 


    ஊரவர் கவ்வை எரு இட்டு*  அன்னை சொல் நீர் படுத்து* 
    ஈர நெல் வித்தி முளைத்த*  நெஞ்சப் பெருஞ் செய்யுள்*

    பேர் அமர் காதல்*  கடல் புரைய விளைவித்த* 
    கார் அமர் மேனி*  நம் கண்ணன் தோழீ! கடியனே* 


    கடியன் கொடியன்*  நெடிய மால் உலகம் கொண்ட-
    அடியன்*  அறிவு அரு மேனி மாயத்தன்*  ஆகிலும்

    கொடிய என் நெஞ்சம்*  அவன் என்றே கிடக்கும் எல்லே* 
    துடி கொள் இடை மடத் தோழீ!*  அன்னை என் செய்யுமே?


    அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்* 
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*

    முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி- 
    மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.   


    வலையுள் அகப்படுத்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    அலை கடல் பள்ளி அம்மானை*  ஆழிப்பிரான் தன்னை* 

    கலை கொள் அகல் அல்குல் தோழீ!*  நம் கண்களால் கண்டு* 
    தலையில் வணங்கவும் ஆம் கொலோ?*  தையலார் முன்பே*.  


    பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து*  மருது இடை- 
    போய் முதல் சாய்த்து*  புள் வாய் பிளந்து களிறு அட்ட*

    தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை*  எந் நாள்கொலோ* 
    யாம் உறுகின்றது தோழீ!*  அன்னையர் நாணவே?*      


    நாணும் நிறையும் கவர்ந்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    சேண் உயர் வானத்து இருக்கும்*  தேவ பிரான் தன்னை*

    ஆணை என் தோழீ!*  உலகுதோறு அலர் தூற்றி*  ஆம்- 
    கோணைகள் செய்து*  குதிரியாய் மடல் ஊர்துமே*.


    யாம் மடல் ஊர்ந்தும்*  எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
    தூ மடல் தண் அம் துழாய்*  மலர் கொண்டு சூடுவோம்*

    ஆம் மடம் இன்றி*  தெருவுதோறு அயல் தையலார்*
    நா மடங்காப் பழி தூற்றி*  நாடும் இரைக்கவே*.            


    இரைக்கும் கருங் கடல் வண்ணன்*  கண்ண பிரான் தன்னை* 
    விரைக் கொள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    நிரைக் கொள் அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரைக்க வல்லார்க்கு*  வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்*  (2)


    ஊர் எல்லாம் துஞ்சி*  உலகு எல்லாம் நள் இருள் ஆய்* 
    நீர் எல்லாம் தேறி*  ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்* 

    பார் எல்லாம் உண்ட*  நம் பாம்பு அணையான் வாரானால்* 
    ஆர் எல்லே! வல்வினையேன்*  ஆவி காப்பார் இனியே?* (2)   


    ஆவி காப்பார் இனி யார்?*  ஆழ் கடல் மண் விண் மூடி* 
    மா விகாரம் ஆய்*  ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*

    காவி சேர் வண்ணன்*  என் கண்ணனும் வாரானால்* 
    பாவியேன் நெஞ்சமே!*  நீயும் பாங்கு அல்லையே?*.      


    நீயும் பாங்கு அல்லைகாண்*  நெஞ்சமே நீள் இரவும்* 
    ஓயும் பொழுது இன்றி*  ஊழி ஆய் நீண்டதால்* 

    காயும் கடும் சிலை*  என் காகுத்தன் வாரானால்* 
    மாயும் வகை அறியேன்*  வல்வினையேன் பெண் பிறந்தே*


    பெண் பிறந்தார் எய்தும்*  பெரும் துயர் காண்கிலேன் என்று* 
    ஒண் சுடரோன்*  வாராது ஒளித்தான்*  இம்மண்அளந்த-

    கண் பெரிய செவ்வாய்*  எம் கார் ஏறு வாரானால்* 
    எண் பெரிய சிந்தைநோய்*  தீர்ப்பார் ஆர் என்னையே?*


    ஆர் என்னை ஆராய்வார்?*  அன்னையரும் தோழியரும்* 
    'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்* 

    கார் அன்ன மேனி*  நம் கண்ணனும் வாரானால்* 
    பேர் என்னை மாயாதால்*  வல்வினையேன் பின் நின்றே*.


    பின்நின்று காதல் நோய்*  நெஞ்சம் பெரிது அடுமால்* 
    முன்நின்று இரா ஊழி*  கண் புதைய மூடிற்றால்* 

    மன் நின்ற சக்கரத்து*  எம் மாயவனும் வாரானால்* 
    இந் நின்ற நீள் ஆவி*  காப்பார் ஆர் இவ் இடத்தே?*


    காப்பார் ஆர் இவ் இடத்து?*  கங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    சேண் பாலது ஊழி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்த்* 

    தூப் பால வெண்சங்கு*  சக்கரத்தன் தோன்றானால்* 
    தீப் பால வல்வினையேன்*  தெய்வங்காள்! என் செய்கேனோ?*   


    தெய்வங்காள்! என் செய்கேன்?*  ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்* 
    மெய் வந்து நின்று*  எனது ஆவி மெலிவிக்கும்,* 

    கைவந்த சக்கரத்து*  என் கண்ணனும் வாரானால்* 
    தைவந்த தண் தென்றல்*  வெம் சுடரில் தான் அடுமே* 


    வெம் சுடரில் தான் அடுமால்*  வீங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    அம் சுடர வெய்யோன்*  அணி நெடும் தேர் தோன்றாதால்* 

    செஞ் சுடர்த் தாமரைக்கண்*  செல்வனும் வாரானால்* 
    நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?*  நின்று உருகுகின்றேனே!*            


    நின்று உருகுகின்றேனே போல*  நெடு வானம்* 
    சென்று உருகி நுண் துளி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்* 

    அன்று ஒருகால் வையம்*  அளந்த பிரான் வாரான் என்று* 
    ஒன்று ஒருகால் சொல்லாது*  உலகோ உறங்குமே*      


    உறங்குவான் போல்*  யோகுசெய்த பெருமானை* 
    சிறந்த பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொல்*

    நிறம் கிளர்ந்த அந்தாதி*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    இறந்து போய் வைகுந்தம்*  சேராவாறு எங்ஙனேயோ?*    


    எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
    செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*. (2)     


    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்*  என்னை முனியாதே 
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    மின்னு நூலும் குண்டலமும்*  மார்பில் திருமறுவும்* 
    மன்னு பூணும் நான்கு தோளும்*  வந்து எங்கும் நின்றிடுமே*.  


    நின்றிடும் திசைக்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    வென்றி வில்லும் தண்டும் வாளும்*  சக்கரமும் சங்கமும்* 
    நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா*  நெஞ்சுள்ளும் நீங்காவே*.


    நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    பூந்தண் மாலைத் தண் துழாயும்*  பொன் முடியும் வடிவும்* 
    பாங்கு தோன்றும் பட்டும் நாணும்*  பாவியேன் பக்கத்தவே*.      


    பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    தொக்க சோதித் தொண்டை வாயும்*  நீண்ட புருவங்களும்* 
    தக்க தாமரைக் கண்ணும்*  பாவியேன் ஆவியின் மேலனவே*.     


    மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    கோலநீள் கொடி மூக்கும்*  தாமரைக் கண்ணும் கனிவாயும்* 
    நீலமேனியும் நான்கு தோளும்*  என் நெஞ்சம் நிறைந்தனவே*.  


    நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த*  நீண்ட பொன் மேனியொடும்* 
    நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்*  நேமி அங்கை உளதே*.      


    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்*  சிற்றிடையும் வடிவும்* 
    மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்*  பாவியேன் முன் நிற்குமே*.     


    முன் நின்றாய் என்று தோழிமார்களும்*  அன்னையரும் முனிதிர்* 
    மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    சென்னி நீள்முடி ஆதிஆய*  உலப்பு இல் அணிகலத்தன்* 
    கன்னல் பால் அமுதுஆகி வந்து*  என் நெஞ்சம் கழியானே*.     


    கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    குழுமித் தேவர் குழாங்கள்*  கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே* 
    எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்*  ஆர்க்கும் அறிவு அரிதே*. 


    அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
    நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
    அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)     


    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்* 
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*

    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
    கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*


    கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்*  கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்* 
    கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்*  கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்* 

    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்*  கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
    கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*


    காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்* 
    காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்* 

    காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
    காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,*  காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?* 


    செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்*  செய்வான் நின்றனகளும் யானே என்னும்* 
    செய்து முன் இறந்தவும் யானே என்னும்*  செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*

    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*  செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
    செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*


    திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்*  திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்* 
    திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*  திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*

    திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*  திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?* 
    திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*  திறம்பாது என் திருமகள் எய்தினவே?*


    இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்*  இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்* 
    இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்*  இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*

    இன ஆயர் தலைவனும் யானே என்னும்*  இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?* 
    இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்*  இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*  


    உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்*  உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்* 
    உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்*  உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்* 

    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்*  உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?* 
    உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?*  உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?* 


    உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்*  உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்* 
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*  உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*

    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்*  உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?  உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.


    கொடிய வினை யாதும் இலனே என்னும்*  கொடிய வினை ஆவேனும் யானே என்னும்* 
    கொடிய வினை செய்வேனும் யானே என்னும்*  கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*

    கொடியான் இலங்கை செற்றேனே என்னும்*  கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?* 
    கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*   


    கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்*  கோலம் இல் நரகமும் யானே என்னும்* 
    கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்*  கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்* 

    கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்*  கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
    கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்  கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*


    கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்*  குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* 
    வாய்ந்த வழுதி வள நாடன்*  மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* 

    ஆய்ந்த தமிழ் மாலை*  ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்*  உலகில்- 
    ஏந்து பெரும் செல்வத்தராய்த்*  திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)


    நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
    ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 

    சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
    வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    


    அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்*  உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து*  நான் 
    எங்குற்றேனும் அல்லேன்*  இலங்கை செற்ற அம்மானே* 

    திங்கள் சேர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கலநகர் உறை* 
    சங்கு சக்கரத்தாய்!*  தமியேனுக்கு அருளாயே*.         


    கருளப் புள் கொடி சக்கரப் படை*  வான நாட! என் கார்முகில் வண்ணா* 
    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி*  அடிமைகொண்டாய்*

    தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்*  சிரீவரமங்கலநகர்க்கு* 
    அருள்செய்து அங்கு இருந்தாய்!*  அறியேன் ஒரு கைம்மாறே*


    மாறு சேர் படை நூற்றுவர் மங்க*  ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி* 
    நீறு செய்த எந்தாய்!*  நிலம் கீண்ட அம்மானே* 

    தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    ஏறி வீற்றிருந்தாய்!*  உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*    


    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?*  எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று* 
    கைதவங்கள் செய்யும்*  கரு மேனி அம்மானே*

    செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    கைதொழ இருந்தாய்*  அது நானும் கண்டேனே*.


    ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
    வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*

    தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
    வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    


    வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட*  வானவர் கொழுந்தே!*  உலகுக்கு ஓர்- 
    முந்தைத் தாய் தந்தையே!*  முழு ஏழ் உலகும் உண்டாய்!* 

    செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    அந்தம் இல் புகழாய்!*  அடியேனை அகற்றேலே*.       


    அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை*  நன்கு அறிந்தனன்* 
    அகற்றி என்னையும் நீ*  அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்* 

    பகல் கதிர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கை வாணனே*  என்றும்- 
    புகற்கு அரிய எந்தாய்!*  புள்ளின் வாய் பிளந்தானே!*    


    புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!*  எருது ஏழ் அடர்த்த*  என்- 
    கள்ள மாயவனே!*  கருமாணிக்கச் சுடரே*

    தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்*  மலி தண் சிரீவரமங்கை* 
    யுள் இருந்த எந்தாய்!*  அருளாய் உய்யுமாறு எனக்கே*.  


    ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 
    மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*

    சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 
    நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.


    தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
    கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*

    செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
    வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   


    ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
    நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 

    சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
    ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  


    எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
    எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 

    செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
    அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   


    என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
    உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 

    கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
    செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே*


    செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
    உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 

    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
    அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*.


    அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
    தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*

    செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
    தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    


    சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடிசேரும்- 
    ஊழ் கண்டிருந்தே*  தூராக்குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*

    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
    யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.


    அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
    எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*

    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
    தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.


    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்*  களைகண் மற்று இலேன்* 
    வளை வாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 

    தளரா உடலம் எனது ஆவி*  சரிந்து போம்போது* 
    இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  


    இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
    அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 

    திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
    அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*.


    வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
    ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 

    தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
    ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)


    உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
    கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 

    குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)


    மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
    வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

    தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
    கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   


    என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி* 

    தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்- 
    நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*    


    சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய* 
    பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க* 

    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*      


    நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்* 

    மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்* 
    நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.             


    நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை* 
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்* 

    கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை* 
    என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*   


    காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 
    பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 

    சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 
    மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*


    பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்* 
    ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

    மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*


    நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்* 
    ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

    மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*    


    கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ* 
    குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

    மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்* 
    சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?*  


    தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்* 
    தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்* 

    நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*   


    நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
    சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 

    நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
    சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    


    பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்*  பெரிய பாரதம் கைசெய்து*  ஐவர்க்குத்-
    திறங்கள் காட்டியிட்டுச்*  செய்து போன மாயங்களும்* 

    நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை*  நின்று நின்று உருக்கி உண்கின்ற*  இச்- 
    சிறந்தவான் சுடரே!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)


    வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்*  மாய மாவினை வாய் பிளந்ததும்* 
    மதுவை வார் குழலார்*  குரவை பிணைந்த குழகும்* 

    அது இது உது என்னலாவன அல்ல*  என்னை உன் செய்கை நைவிக்கும்* 
    முது வைய முதல்வா!*  உன்னை என்று தலைப்பெய்வனே?* 


    பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட*  பிள்ளைத் தேற்றமும்*  பேர்ந்து ஓர் சாடு இறச்- 
    செய்ய பாதம் ஒன்றால்*  செய்த நின் சிறுச் சேவகமும்* 

    நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள*  நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க* 
    பையவே நிலையும் வந்து*  என் நெஞ்சை உருக்குங்களே*


    கள்ள வேடத்தைக் கொண்டு போய்*  புரம்புக்க ஆறும்*  கலந்து அசுரரை- 
    உள்ளம் பேதம் செய்திட்டு*  உயிர் உண்ட உபாயங்களும்* 

    வெள்ள நீர்ச் சடையானும்*  நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்* 
    உள்ளம் உள் குடைந்து*  என் உயிரை உருக்கி உண்ணுமே*.   


    உண்ண வானவர் கோனுக்கு*  ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்* 
    வண்ண மால் வரையை எடுத்து*  மழை காத்தலும்* 

    மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து*  கடந்து இடந்து மணந்த மாயங்கள்* 
    எண்ணும்தோறும் என் நெஞ்சு*  எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.


    நின்ற ஆறும் இருந்த ஆறும்/*  கிடந்த ஆறும் நினைப்பு அரியன* 
    ஒன்று அலா உருவு ஆய்*  அருவு ஆய நின் மாயங்கள்* 

    நின்று நின்று நினைக்கின்றேன்*  உன்னை எங்ஙனம் நினைகிற்பன்*  பாவியேற்கு- 
    ஒன்று நன்கு உரையாய்*  உலகம் உண்ட ஒண் சுடரே!*      


    ஒண் சுடரோடு இருளுமாய்*  நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து*  என்- 
    கண் கொளாவகை*  நீ கரந்து என்னைச் செய்கின்றன* 

    எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்*  என் கரிய மாணிக்கமே!*  என் கண்கட்குத்- 
    திண் கொள்ள ஒரு நாள்*  அருளாய் உன் திரு உருவே*.


    திரு உருவு கிடந்த ஆறும்*  கொப்பூழ்ச் செந்தாமரைமேல்*  திசைமுகன்- 
    கருவுள் வீற்றிருந்து*  படைத்திட்ட கருமங்களும்* 

    பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின்று நெக்கு* 
    அருவி சோரும் கண்ணீர்*  என் செய்கேன் அடியேனே!*     


    அடியை மூன்றை இரந்த ஆறும்*  அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்- 
    முடிய*  ஈர் அடியால்*  முடித்துக்கொண்ட முக்கியமும் *

    நொடியுமாறு அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்* 
    கொடிய வல்வினையேன்*  உன்னை என்றுகொல் கூடுவதே?*    


    கூடி நீரைக் கடைந்த ஆறும்*  அமுதம் தேவர் உண்ண*  அசுரரை- 
    வீடும் வண்ணங்களே*  செய்து போன வித்தகமும்* 

    ஊடு புக்கு எனது ஆவியை*  உருக்கி உண்டிடுகின்ற*  நின் தன்னை- 
    நாடும் வண்ணம் சொல்லாய்*  நச்சு நாகு அணையானே!*


    நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 
    ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 

    ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 
    மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.


    வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
    செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   


    காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 
    வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 
    பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*.


    திறங்கள் ஆகி எங்கும்*  செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்* 
    சிறந்த செல்வம் மல்கு*  திருவண்வண்டூர் உறையும்* 

    கறங்கு சக்கரக் கைக்*  கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    இறங்கி நீர் தொழுது பணியீர்*  அடியேன் இடரே*


    இடர் இல் போகம் மூழ்கி*  இணைந்து ஆடும் மட அன்னங்காள்!* 
    விடல் இல் வேத ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    கடலின் மேனிப்பிரான்*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    உடலம் நைந்து ஒருத்தி*  உருகும் என்று உணர்த்துமினே*


    உணர்த்தல் ஊடல் உணர்ந்து*  உடன் மேயும் மட அன்னங்காள்* 
    திணர்த்த வண்டல்கள்மேல்*  சங்கு சேரும் திருவண்வண்டூர்* 

    புணர்த்த பூந் தண் துழாய்முடி*  நம் பெருமானைக் கண்டு* 
    புணர்த்த கையினராய்*  அடியேனுக்கும் போற்றுமினே*  


    போற்றி யான் இரந்தேன்*  புன்னைமேல் உறை பூங் குயில்காள்* 
    சேற்றில் வாளை துள்ளும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    ஆற்றல் ஆழி அங்கை*  அமரர் பெருமானைக் கண்டு* 
    மாற்றம் கொண்டருளீர்*  மையல் தீர்வது ஒருவண்ணமே*


    ஒருவண்ணம் சென்று புக்கு*  எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே* 
    செரு ஒண் பூம் பொழில் சூழ்*  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்* 

    கரு வண்ணம் செய்யவாய்*  செய்ய கண் செய்ய கை செய்யகால்* 
    செரு ஒண் சக்கரம் சங்கு*  அடையாளம் திருந்தக் கண்டே*.  


    திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்*  ஒண் சிறு பூவாய்* 
    செருந்தி ஞாழல் மகிழ்*  புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*

    பெரும் தண் தாமரைக்கண்*  பெரு நீள் முடி நால் தடந்தோள்* 
    கருந் திண் மா முகில் போல்*  திருமேனி அடிகளையே*  


    அடிகள் கைதொழுது*  அலர்மேல் அசையும் அன்னங்காள்* 
    விடிவை சங்கு ஒலிக்கும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கடிய மாயன் தன்னை*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    கொடிய வல்வினையேன்*  திறம் கூறுமின் வேறுகொண்டே*


    வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்* 
    தேறு நீர்ப் பம்பை*  வடபாலைத் திருவண்வண்டூர்* 

    மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த* 
    ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே*  


    மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்*  அகல் ஞாலம் கொண்ட* 
    வன் கள்வன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருவண்வண்டூர்க்கு* 
    இன்கொள் பாடல் வல்லார்*  மதனர் மின்னிடை யவர்க்கே* (2)


    மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்*  முன்பு நான் அது அஞ்சுவன்* 
    மன்உடை இலங்கை*  அரண் காய்ந்த மாயவனே* 

    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்*  இனி அதுகொண்டு செய்வது என்? 
    என்னுடைய பந்தும் கழலும்*  தந்து போகு நம்பீ!*. (2) 


    போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்*  செவ்வாய் முறுவலும்* 
    ஆகுலங்கள் செய்ய*  அழிதற்கே நோற்றோமேயாம்?* 

    தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்*  செவி ஓசை வைத்து எழ*
    ஆகள் போகவிட்டு*  குழல் ஊது போயிருந்தே*.          


    போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!*  நின்செய்ய- 
    வாய் இருங் கனியும் கண்களும்*  விபரீதம் இந் நாள்* 

    வேய் இரும் தடம் தோளினார்*  இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*  
    மா இரும் கடலைக் கடைந்த*  பெருமானாலே?*         


    ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு*  அன்று நீ கிடந்தாய்*  உன் மாயங்கள்- 
    மேலை வானவரும் அறியார்*  இனி எம் பரமே?* 

    வேலின் நேர் தடம் கண்ணினார்*  விளையாடு சூழலைச் சூழவே நின்று* 
    காலி மேய்க்க வல்லாய்!*  எம்மை நீ கழறேலே*.


    கழறேல் நம்பீ!*  உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்*  திண் சக்கர- 
    நிழறு தொல் படையாய்!*  உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்* 

    மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
    குழறு பூவையொடும்*  கிளியோடும் குழகேலே*.  


    குழகி எங்கள் குழமணன்கொண்டு*  கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை* 
    பழகி யாம் இருப்போம்*  பரமே இத் திரு அருள்கள்?*

    அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்*  தேவிமை ஈதகுவார் பலர் உளர்* 
    கழகம் ஏறேல் நம்பீ!*  உனக்கும் இளைதே கன்மமே*.


    கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது*  கடல் ஞாலம் உண்டிட்ட* 
    நின்மலா! நெடியாய்!*  உனக்கேலும் பிழை பிழையே* 

    வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி*  அது கேட்கில் என் ஐம்மார்* 
    தன்ம பாவம் என்னார்*  ஒரு நான்று தடி பிணக்கே*.


    பிணக்கி யாவையும் யாவரும்*  பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்* 
    கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்*  கதிர் ஞான மூர்த்தியினாய், 

    இணக்கி எம்மை எம் தோழிமார்*  விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை* 
    உணக்கி நீ வளைத்தால்*  என் சொல்லார் உகவாதவரே?* 


    உகவையால் நெஞ்சம் உள் உருகி*  உன் தாமரைத் தடம் கண் விழிகளின்* 
    அக வலைப் படுப்பான்*  அழித்தாய் உன் திருவடியால்* 

    தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்*  யாம் அடு சிறு சோறும் கண்டு*  நின்- 
    முக ஒளி திகழ*  முறுவல் செய்து நின்றிலையே*.


    நின்று இலங்கு முடியினாய்!*  இருபத்தோர் கால் அரசு களைகட்ட* 
    வென்றி நீள்மழுவா!*  வியன் ஞாலம் முன் படைத்தாய்!* 

    இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய*  கருமாணிக்கச் சுடர்* 
    நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்*  ஆய்ச்சியோமே*.       


    ஆய்ச்சி ஆகிய அன்னையால்*  அன்று வெண்ணெய் வார்த்தையுள்*  சீற்ற முண்டு அழு- 
    கூத்த அப்பன் தன்னை*  குருகூர்ச் சடகோபன்* 

    ஏத்திய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்* 
    நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு*  இல்லை நல்குரவே*. (2)  


    நல்குரவும் செல்வும்*  நரகும் சுவர்க்கமும் ஆய்* 
    வெல்பகையும் நட்பும்*  விடமும் அமுதமும் ஆய்* 

    பல்வகையும் பரந்த*  பெருமான் என்னை ஆள்வானை* 
    செல்வம் மல்குகுடித்*  திருவிண்ணகர்க் கண்டேனே*. (2) 


    கண்ட இன்பம் துன்பம்*  கலக்கங்களும் தேற்றமும் ஆய்* 
    தண்டமும் தண்மையும்*  தழலும் நிழலும் ஆய்* 

    கண்டுகோடற்கு அரிய*  பெருமான் என்னை ஆள்வான் ஊர்* 
    தெண் திரைப் புனல்சூழ்*  திருவிண்ணகர் நல் நகரே* 


    நகரமும் நாடுகளும்*  ஞானமும் மூடமும் ஆய்* 
    நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்*  நிலன் ஆய் விசும்பு ஆய்* 

    சிகர மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை*  யாவர்க்கும் புண்ணியமே*.   


    புண்ணியம் பாவம்*  புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்* 
    எண்ணம் ஆய் மறப்பு ஆய்*  உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 

    திண்ண மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    கண்ணன் இன் அருளே*  கண்டுகொள்மின்கள் கைதவமே* 


    கைதவம் செம்மை*  கருமை வெளுமையும் ஆய்* 
    மெய் பொய் இளமை*  முதுமை புதுமை பழமையும் ஆய்* 

    செய்த திண் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பெய்த காவு கண்டீர்*  பெரும் தேவு உடை மூவுலகே*    


    மூவுலகங்களும் ஆய்*  அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்* 
    பூவில் வாழ் மகள் ஆய்*  தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்* 

    தேவர் மேவித் தொழும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பாவியேன் மனத்தே*  உறைகின்ற பரஞ்சுடரே*.


    பரம் சுடர் உடம்பு ஆய்*  அழுக்குப் பதித்த உடம்பு ஆய்* 
    கரந்தும் தோன்றியும் நின்றும்*  கைதவங்கள் செய்தும்*  விண்ணோர்- 

    சிரங்களால் வணங்கும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    வரம் கொள் பாதம் அல்லால் இல்லை*  யாவர்க்கும் வன் சரணே*. 


    வன்சரண் சுரர்க்கு ஆய்*  அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்* 
    தன்சரண் நிழற்கீழ்*  உலகம் வைத்தும் வையாதும் 

    தென்சரண் திசைக்குத்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    என்சரண் என் கண்ணன்*  என்னை ஆளுடை என் அப்பனே*


    என் அப்பன் எனக்கு ஆய்*  இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்* 
    பொன் அப்பன் மணி அப்பன்*  முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*

    மின்னப் பொன் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்* 
    தன் ஒப்பார் இல் அப்பன்*  தந்தனன் தன தாள் நிழலே*. (2) 


    நிழல் வெய்யில் சிறுமை பெருமை*  குறுமை நெடுமையும் ஆய்* 
    சுழல்வன நிற்பன*  மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 

    மழலை வாய் வண்டு வாழ்*  திருவிண்ணகர் மன்னு பிரான்* 
    கழல்கள் அன்றி*  மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*


    காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த* 
    தாள் இணையன் தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    ஆணை ஆயிரத்துத்*  திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்* 
    கோணை இன்றி விண்ணோர்க்கு*  என்றும் ஆவர் குரவர்களே*. (2)        


    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றம் ஒன்று ஏந்தியதும்* 
    உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும் பல* 

    அரவில் பள்ளிப் பிரான்தன்*  மாய வினைகளையே அலற்றி,* 
    இரவும் நன் பகலும் தவிர்கிலன்*  என்ன குறை எனக்கே?        


    கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்*  கெண்டை ஒண்கண்* 
    வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்*  மணந்ததும் மற்றும்பல,* 

    மாயக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    நேயத்தோடு கழிந்த போது*  எனக்கு எவ் உலகம் நிகரே?      


    நிகர் இல் மல்லரைச் செற்றதும்*  நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,* 
    சிகர மா களிறு அட்டதும்*  இவை போல்வனவும் பிறவும்,* 

    புகர்கொள் சோதிப் பிரான்தன்*  செய்கை நினைந்து புலம்பி என்றும்* 
    நுகர வைகல் வைகப்பெற்றேன்*  எனக்கு என் இனி நோவதுவே?    


    நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*  இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்* 
    சாவப் பால் உண்டதும்*  ஊர் சகடம் இறச் சாடியதும்,* 

    தேவக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    மேவக் காலங்கள் கூடினேன்*  எனக்கு என் இனி வேண்டுவதே?  


    வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்*  வீங்கு இருள்வாய்- 
    பூண்டு*  அன்று அன்னைப் புலம்ப போய்*  அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்* 

    காண்டல் இன்றி வளர்ந்து*  கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,* 
    ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்*  எனக்கு என்ன இகல் உளதே?    


    இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்*  இமில் ஏறுகள் செற்றதுவும்,* 
    உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    அகல் கொள் வையம் அளந்த மாயன்*  என்னப்பன் தன் மாயங்களே,* 
    பகல் இராப் பரவப் பெற்றேன்*  எனக்கு என்ன மனப் பரிப்பே?         


    மனப் பரிப்போடு அழுக்கு*  மானிட சாதியில் தான்பிறந்து,* 
    தனக்கு வேண்டு உருக்கொண்டு*  தான் தன சீற்றத்தினை முடிக்கும்,* 

    புனத் துழாய் முடி மாலை மார்பன்*  என் அப்பன் தன் மாயங்களே,* 
    நினைக்கும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?


    நீள் நிலத்தொடு வான் வியப்ப*  நிறை பெரும் போர்கள் செய்து* 
    வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்*  என் அப்பன் தன் மாயங்களே* 
    காணும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?


    கலக்க ஏழ் கடல் ஏழ்*  மலை உலகு ஏழும் கழியக் கடாய்* 
    உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்*  உட்பட மற்றும் பல,* 

    வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்*  இவை உடை மால்வண்ணனை,* 
    மலக்கும் நா உடையேற்கு*  மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?


    மண்மிசைப் பெரும் பாரம் நீங்க*  ஓர் பாரத மா பெரும் போர் 
    பண்ணி,*  மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட*  நூற்றிட்டுப் போய்,* 

    விண்மிசைத் தன தாமமேபுக*  மேவிய சோதிதன்தாள்,* 
    நண்ணி நான் வணங்கப்பெற்றேன்*  எனக்கு ஆர்பிறர் நாயகரே?       


    நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்*  முழு ஏழ் உலகும்,*  தன் 
    வாயகம் புக வைத்து உமிழ்ந்து*  அவை ஆய் அவை அல்லனும் ஆம்,* 

    கேசவன் அடி இணைமிசைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    தூய ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆவர் துவள் இன்றியே.         


    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
    இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 

    தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      


    குமுறும் ஓசை விழவு ஒலித்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    அமுத மென் மொழியாளை*  நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,* 

    திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்*  மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,* 
    நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க*  நெக்கு ஒசிந்து கரையுமே.


    கரை கொள் பைம் பொழில் தண்பணைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    உரை கொள் இன் மொழியாளை*  நீர் உமக்கு  ஆசை இன்றி அகற்றினீர்,*

    திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்*  திசை ஞாலம் தாவி அளந்ததும்,* 
    நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி*  நெடும் கண் நீர் மல்க நிற்குமே. 


    நிற்கும் நால்மறைவாணர் வாழ்*  தொலைவில்லிமங்கலம் கண்டபின்,* 
    அற்கம் ஒன்றும் அற உறாள்*  மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,* 

    கற்கும் கல்வி எல்லாம்*  கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,* 
    ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து*  உள் மகிழ்ந்து குழையுமே.            


    குழையும் வாள் முகத்து ஏழையைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்*  இருந்தமை காட்டினீர்,* 

    மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*  அன்று தொட்டும் மையாந்து,*  இவள் 
    நுழையும் சிந்தையள் அன்னைமீர்!*  தொழும் அத் திசை உற்று நோக்கியே.


    நோக்கும் பக்கம் எல்லாம்*  கரும்பொடு  செந்நெல்ஓங்கு செந்தாமரை,* 
    வாய்க்கும் தண் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    நோக்குமேல் அத்திசை அல்லால்*  மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,* 
    வாய்க்கொள் வாசகமும்*  மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!        


    அன்னைமீர்! அணிமாமயில்*  சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து* 
    என்ன வார்த்தையும் கேட்குறாள்*  தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,* 

    முன்னம் நோற்ற விதிகொலோ*  முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன் 
    சின்னமும் திருநாமமும்*  இவள் வாயனகள் திருந்தவே.   


    திருந்து வேதமும் வேள்வியும்*  திருமா மகளிரும் தாம்,*  மலிந்து 
    இருந்து வாழ் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    கருந் தடம் கண்ணி கைதொழுத*  அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்* 
    இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'*  என்று என்றே நைந்து இரங்குமே.      


    இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ*  இவள் கண்ண நீர்கள் அலமர,* 
    மரங்களும் இரங்கும் வகை*  'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,* 

    துரங்கம் வாய் பிளந்தான் உறை*  தொலைவில்லிமங்கலம் என்று,*  தன் 
    கரங்கள் கூப்பித் தொழும்*  அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.     


    பின்னைகொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல் பிறந்திட்டாள்,* 
    என்ன மாயம்கொலோ?*  இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,* 

    முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்*  தொலைவில்லிமங்கலம்- 
    சென்னியால் வணங்கும்*  அவ் ஊர்த் திருநாமம்*  கேட்பது சிந்தையே.        


    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
    தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 

    முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
    செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே


    மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
    நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 

    கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
    என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.


    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,* 
    செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,* 

    கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என் 
    மங்கை இழந்தது*  மாமை நிறமே. 


    நிறம் கரியானுக்கு*  நீடு உலகு உண்ட,* 
    திறம் கிளர் வாய்ச்*  சிறுக் கள்வன் அவற்கு,* 

    கறங்கிய சக்கரக்*  கையவனுக்கு,*  என் 
    பிறங்கு இரும் கூந்தல்*  இழந்தது பீடே.


    பீடு உடை நான்முகனைப்*  படைத்தானுக்கு,* 
    மாடு உடை வையம் அளந்த*  மணாளற்கு,* 

    நாடு உடை மன்னர்க்குத்*  தூதுசெல் நம்பிக்கு,*  என் 
    பாடு உடை அல்குல்*  இழந்தது பண்பே.


    பண்பு உடை வேதம்*  பயந்த பரனுக்கு,* 
    மண் புரை வையம் இடந்த*  வராகற்கு,* 

    தெண் புனல் பள்ளி*  எம் தேவ பிரானுக்கு,*  என் 
    கண்புனை கோதை*  இழந்தது கற்பே.    


    கற்பகக் கா அன*  நல் பல தோளற்கு,* 
    பொன் சுடர்க் குன்று அன்ன*  பூந்தண் முடியற்கு,* 

    நல் பல தாமரை*  நாள் மலர்க் கையற்கு,*  என் 
    வில் புருவக்கொடி*  தோற்றது மெய்யே.  


    மெய் அமர் பல்கலன்*  நன்கு அணிந்தானுக்கு,* 
    பை அரவின் அணைப்*  பள்ளியினானுக்கு,* 

    கையொடு கால்செய்ய*  கண்ண பிரானுக்கு,*  என் 
    தையல் இழந்தது*  தன்னுடைச் சாயே.


    சாயக் குருந்தம் ஒசித்த*  தமியற்கு,* 
    மாயச் சகடம் உதைத்த*  மணாளற்கு,* 

    பேயைப் பிணம்படப்*  பால் உண் பிரானுக்கு,*  என் 
    வாசக் குழலி*  இழந்தது மாண்பே . 


    மாண்பு அமை கோலத்து*  எம் மாயக் குறளற்கு,* 
    சேண் சுடர்க் குன்று அன்ன*  செஞ்சுடர் மூர்த்திக்கு,* 

    காண் பெரும் தோற்றத்து*  எம் காகுத்த நம்பிக்கு,*  என் 
    பூண் புனை மென்முலை*  தோற்றது பொற்பே.       


    பொற்பு அமை நீள் முடிப்*  பூந்தண் துழாயற்கு,* 
    மல் பொரு தோள் உடை*  மாயப் பிரானுக்கு,* 

    நிற்பன பல் உருவாய்*  நிற்கும் மாயற்கு,*  என் 
    கற்பு உடையாட்டி*  இழந்தது கட்டே. 


    கட்டு எழில் சோலை*  நல் வேங்கடவாணனைக்,* 
    கட்டு எழில் தென் குருகூர்ச்*  சடகோபன் சொல்,* 

    கட்டு எழில் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்,* 
    கட்டு எழில் வானவர்*  போகம் உண்பாரே.  


    உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
    கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 

    மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
    திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  


    ஊரும் நாடும் உலகமும்*  தன்னைப்போல் அவனுடைய* 
    பேரும் தார்களுமே பிதற்ற*  கற்பு வான் இடறி,* 

    சேரும் நல் வளம்சேர்*  பழனத் திருக்கோளூர்க்கே,* 
    போரும் கொல் உரையீர்*  கொடியேன் கொடி பூவைகளே!    


    பூவை பைங்கிளிகள்*  பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
    யாவையும் திருமால்*  திருநாமங்களே கூவி எழும்,*  என் 

    பாவை போய் இனித்*  தண் பழனத் திருக்கோளூர்க்கே,* 
    கோவை வாய் துடிப்ப*  மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?  


    கொல்லை என்பர்கொலோ*  குணம் மிக்கனள் என்பர்கொலோ,* 
    சில்லை வாய்ப் பெண்டுகள்*  அயல் சேரி உள்ளாரும் எல்லே,*

    செல்வம் மல்கி அவன்கிடந்த*  திருக்கோளூர்க்கே,* 
    மேல் இடை நுடங்க*  இளமான் செல்ல மேவினளே.    


    மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்*  என் சிறுத்- 
    தேவிபோய்,*  இனித்தன் திருமால்*  திருக்கோளூரில்,*

    பூ இயல் பொழிலும்*  தடமும் அவன் கோயிலும் கண்டு,* 
    ஆவி உள் குளிர*  எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?   


    இன்று எனக்கு உதவாது அகன்ற*  இளமான் இனிப்போய்,* 
    தென் திசைத் திலதம் அனைய*  திருக்கோளூர்க்கே 

    சென்று,*  தன் திருமால் திருக்கண்ணும்*  செவ்வாயும் கண்டு,* 
    நின்று நின்று நையும்*  நெடும் கண்கள் பனி மல்கவே.


    மல்கு நீர்க் கண்ணொடு*  மையல் உற்ற மனத்தினளாய்,* 
    அல்லும் நன் பகலும்*  நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,* 

    செல்வம் மல்கி அவன் கிடந்த*  திருக்கோளுர்க்கே,* 
    ஒல்கி ஒல்கி நடந்து*  எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?


    ஒசிந்த நுண் இடைமேல்*  கையை வைத்து நொந்து நொந்து,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,* 

    ஒசிந்த ஒண் மலராள்*  கொழுநன் திருக்கோளூர்க்கே,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  எம்மை நீத்த எம் காரிகையே?         


    காரியம் நல்லனகள்*  அவை காணில் என் கண்ணனுக்கு என்று,* 
    ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்*  கிடக்க இனிப் போய்,* 

    சேரி பல் பழி தூஉய் இரைப்ப*  திருக்கோளூர்க்கே,* 
    நேரிழை நடந்தாள்*  எம்மை ஒன்றும் நினைந்திலளே.       


    நினைக்கிலேன் தெய்வங்காள்*  நெடும் கண் இளமான் இனிப்போய்* 
    அனைத்து உலகும் உடைய*  அரவிந்தலோசனனைத்,* 

    தினைத்தனையும் விடாள்*  அவன் சேர் திருக்கோளூர்க்கே,* 
    மனைக்கு வான் பழியும் நினையாள்*  செல்ல வைத்தனளே.


    வைத்த மா நிதியாம்*  மதுசூதனையே அலற்றி,* 
    கொத்து அலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    பத்து நூற்றுள் இப்பத்து*  அவன்சேர் திருக்கோளூர்க்கே,* 
    சித்தம் வைத்து உரைப்பார்*  திகழ் பொன் உலகு ஆள்வாரே.    


    பொன் உலகு ஆளீரோ?*  புவனி முழுது ஆளீரோ?,* 
    நல் நலப் புள்ளினங்காள்!*  வினையாட்டியேன் நான் இரந்தேன்,*

    முன் உலகங்கள் எல்லாம் படைத்த*  முகில்வண்ணன் கண்ணன்,* 
    என் நலம் கொண்ட பிரான் தனக்கு*  என் நிலைமை உரைத்தே?.


    மையமர் வாள் நெடும்கண்*  மங்கைமார் முன்பு என் கை இருந்து,* 
    நெய்யமர் இன் அடிசில்*  நிச்சல் பாலொடு மேவீரோ,* 

    கையமர் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    மெய்யமர் காதல் சொல்லி*  கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?


    ஓடிவந்து என் குழல்மேல்*  ஒளிமாமலர் ஊதீரோ,* 
    கூடிய வண்டினங்காள்!*  குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்* 

    ஆடிய மா நெடும் தேர்ப்படை*  நீறு எழச் செற்ற பிரான்,* 
    சூடிய தண் துளவம் உண்ட*  தூமது வாய்கள் கொண்டே?


    தூமதுவாய்கள் கொண்டுவந்து*  என் முல்லைகள்மேல் தும்பிகாள்,* 
    பூ மது உண்ணச் செல்லில்*  வினையேனைப் பொய்செய்து அகன்ற,*

    மாமதுவார் தண்துழாய்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்*  கண்டீர் நுங்கட்கே.


    நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்*  யான் வளர்த்த கிளிகாள்,* 
    வெம் கண் புள் ஊர்ந்து வந்து*  வினையேனை நெஞ்சம் கவர்ந்த* 

    செங்கண் கருமுகிலை*  செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,* 
    எங்குச் சென்றாகிலும் கண்டு*  இதுவோ தக்கவாறு என்மினே.   


    என் மின்னு நூல் மார்வன்*  என் கரும் பெருமான் என் கண்ணன்,* 
    தன் மன்னு நீள் கழல்மேல்*  தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,* 

    கல்மின்கள் என்று உம்மையான்*  கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,* 
    செல்மின்கள் தீவினையேன்*  வளர்த்த சிறு பூவைகளே!          


    பூவைகள் போல் நிறத்தன்*  புண்டரீகங்கள் போலும் கண்ணன்,* 
    யாவையும் யாவரும் ஆய்*  நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,* 

    மாவை வல் வாய் பிளந்த*  மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,* 
    பாவைகள்! தீர்க்கிற்றிரே*  வினையாட்டியேன் பாசறவே.  


    பாசறவு எய்தி இன்னே*  வினையேன் எனை ஊழி நைவேன்?* 
    ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!*  அருள்செய்து ஒருநாள்,* 

    மாசு அறு நீலச்சுடர்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    ஏசு அறும் நும்மை அல்லால்*  மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.            


    பேர்த்து மற்று ஓர் களைகண்*  வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,* 
    நீர்த் திரைமேல் உலவி*  இரை தேரும் புதா இனங்காள்* 

    கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்*  விண்ணவர் கோனைக் கண்டு,* 
    வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்*  வைகல் வந்திருந்தே.        


    வந்திருந்து உம்முடைய*  மணிச் சேவலும் நீரும் எல்லாம்,* 
    அந்தரம் ஒன்றும் இன்றி*  அலர்மேல் அசையும் அன்னங்காள்,* 

    என் திரு மார்வற்கு என்னை*  இன்னவாறு இவள் காண்மின் என்று,* 
    மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்*  மறுமாற்றங்களே.


    மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரான் அடிமேல்,* 
    நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையும் ஒருபத்தும் வல்லார்* 
    ஊற்றின்கண் நுண் மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.     


    நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 
    சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 

    கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 
    வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 


    மண்ணும் விண்ணும் மகிழ*  குறள் ஆய் வலம் காட்டி,* 
    மண்ணும் விண்ணும் கொண்ட*  மாய அம்மானே,* 

    நண்ணி உனை நான்*  கண்டு உகந்து கூத்தாட,* 
    நண்ணி ஒருநாள்*  ஞாலத்தூடே நடவாயே.    


    ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 
    சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 

    கோலத் திரு மா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 
    சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   


    தளர்ந்தும் முறிந்தும்*  சகட அசுரர் உடல் வேறாப்,* 
    பிளந்து வீய*  திருக்கால் ஆண்ட பெருமானே,* 

    கிளர்ந்து பிரமன் சிவன்*  இந்திரன் விண்ணவர் சூழ,* 
    விளங்க ஒருநாள்*  காண வாராய் விண்மீதே.      


    விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!*  கடல் சேர்ப்பாய்,* 
    மண்மீது உழல்வாய்!*  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,* 

    எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!*  எனது ஆவி,* 
    உண் மீது ஆடி*  உருக் காட்டாதே ஒளிப்பாயோ?    


    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்*  பரவை நிலம் எல்லாம்- 
    தாயோர்,*  ஓர் அடியால்*  எல்லா உலகும் தடவந்த- 

    மாயோன்,*  உன்னைக் காண்பான்*  வருந்தி எனைநாளும்,* 
    தீயோடு உடன்சேர் மெழுகாய்*  உலகில் திரிவேனோ?    


    உலகில் திரியும் கரும கதி ஆய்*  உலகம் ஆய்,* 
    உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்*  புற அண்டத்து,* 

    அலகில் பொலிந்த*  திசை பத்து ஆய அருவேயோ,* 
    அலகில் பொலிந்த*  அறிவிலேனுக்கு அருளாயே.


    அறிவிலேனுக்கு அருளாய்*  அறிவார் உயிர் ஆனாய்,* 
    வெறி கொள் சோதி மூர்த்தி!*  அடியேன் நெடுமாலே,* 

    கிறிசெய்து என்னைப் புறத்திட்டு*  இன்னம் கெடுப்பாயோ,* 
    பிறிது ஒன்று அறியா அடியேன்*  ஆவி திகைக்கவே?


    ஆவி திகைக்க*  ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,* 
    பாவியேனைப்*  பல நீ காட்டிப் படுப்பாயோ,*

    தாவி வையம் கொண்ட*  தடம் தாமரை கட்கே,* 
    கூவிக் கொள்ளும் காலம்*  இன்னம் குறுகாதோ?


    குறுகா நீளா*  இறுதிகூடா எனை ஊழி,* 
    சிறுகா பெருகா*  அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,* 

    மறு கால் இன்றி மாயோன்*  உனக்கே ஆளாகும்,* 
    சிறு காலத்தை உறுமோ*  அந்தோ தெரியிலே?


    தெரிதல் நினைதல்*  எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,* 
    உரிய தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன்,* 

    தெரியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரிய தொண்டர் ஆக்கும்*  உலகம் உண்டாற்கே.       


    உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
    நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 

    திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.


    கூறாய்  நீறு ஆய் நிலன் ஆகி*  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
    சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 

    சேறார்  சுனைத் தாமரை செந்தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
    ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.


    வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
    எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 

    தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
    அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆஆ என்னாயே!   


    ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள்மேல்,* 
    தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-

    தேவா*  சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  


    புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 
    புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*

    திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
    திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   


    ,எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
    எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி இனம் இனமாய்,*

    மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
    மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


    அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
    கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 

    செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    நொடி ஆர் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே


    நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
    நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 

    சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         


    வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
    செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 

    சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
    அந்தோ அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.


    அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
    நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 

    நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        


    அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
    படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 

    முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
    பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.


    உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி*  என்னை உன் பாதபங்கயம்,* 
    நண்ணிலாவகையே*  நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,* 

    எண் இலாப் பெறுமாயனே!  இமையோர்கள் ஏத்தும்*  உலகம் மூன்று உடை,* 
    அண்ணலே! அமுதே! அப்பனே!*  என்னை ஆள்வானே! (2)


    என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து*  இராப்பகல் மோதுவித்திட்டு,* 
    உன்னை நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!*  கடல் ஞாலம் காக்கின்ற* 
    மின்னு நேமியினாய்!*  வினையேனுடை வேதியனே! 


    வேதியாநிற்கும் ஐவரால்*  வினையேனை மோதுவித்து*  உன் திருவடிச் 
    சாதியாவகை*  நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*

    ஆதி ஆகி அகல் இடம் படைத்து*  உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
    சோதி நீள் முடியாய்!*  தொண்டனேன் மதுசூதனனே!     


    சூது நான் அறியாவகை*  சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி*  உன் அடிப்போது-
    நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி*  ஓர் ஆலின் நீள் இலை,* 
    மீது சேர் குழவி!*  வினையேன் வினைதீர் மருந்தே!


    தீர் மருந்து இன்றி ஐந்து நோய்*  அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,* 
    நேர் மருங்கு உடைத்தா அடைத்து*  நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,* 

    ஆர் மருந்து இனி ஆகுவார்?*  அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,* 
    வேர் மருங்கு அறுத்தாய்!*  விண்ணுளார் பெருமானே? ஓ! 


    விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்*  ஐம்புலன் இவை, 
    மண்ணுள் என்னைப் பெற்றால்*  என் செய்யா மற்று நீயும் விட்டால்?*

    பண்ணுளாய் கவி தன்னுளாய்!*  பத்தியின் உள்ளாய்! பரமீசனே,*  வந்து என்-
    கண்ணுளாய்!  நெஞ்சுளாய்!  சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.     


    ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத*  ஓர் ஐவர் வன் கயவரை,* 
    என்று யான் வெல்கிற்பன்*  உன் திருவருள் இல்லையேல்?,* 

    அன்று தேவர் அசுரர் வாங்க*  அலைகடல் அரவம் அளாவி,*  ஓர் 
    குன்றம் வைத்த எந்தாய்!*  கொடியேன் பருகு இன் அமுதே!     


    இன் அமுது எனத் தோன்றி*  ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த- 
    முன்னம் மாயம் எல்லாம்*  முழு வேர் அரிந்து*  என்னை உன்- 

    சின்னமும் திரு மூர்த்தியும்*  சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,* 
    என் அம்மா! என் கண்ணா!*  இமையோர் தம் குலமுதலே !       


    குலம் முதல் அடும் தீவினைக்*  கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை* 
    வலம் முதல் கெடுக்கும்*  வரமே தந்தருள்கண்டாய்,* 

    நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்*  நிற்பன செல்வன எனப்,*  பொருள்- 
    பல முதல் படைத்தாய்!*  என் கண்ணா! என் பரஞ்சுடரே!            


    என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி*  உன் இணைத் தாமரைகட்கு,*
    அன்பு உருகி நிற்கும்*  அது நிற்க சுமடு தந்தாய்,* 

    வன் பரங்கள் எடுத்து ஐவர்*  திசை திசை வலித்து எற்றுகின்றனர்:* 
    முன் பரவை கடைந்து*  அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!


    கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்*  குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,*  அப் 
    புண்டரீகக் கொப்பூழ்ப்*  புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்

    தொண்டர் தொண்டர் தொண்டன்*  சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    கண்டு பாட வல்லார்*  வினை போம் கங்குலும் பகலே. (2)


    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 

    எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
    செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   


    என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
    என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*

    முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
    முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?


    வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
    உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*

    கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
    திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?


    இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
    கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*   

    வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
    சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? 


    சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
    வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*

    அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
    சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!


    மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
    செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*

    வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
    பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. 


    பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
    காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*

    சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
    கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே


    கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
    அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*

    எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
    செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?


    என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
    நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*

    அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
    தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)


    முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
    கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*

    வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
    அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 


    முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
    துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*

    முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
    முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)


    வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
    புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*

    வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
    பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)


    நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,* 
    நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,* 

    தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்*  தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,* 
    வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.


    செங்கனி வாயின் திறத்ததாயும்*  செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,* 
    சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*

    திங்களும் நாளும் விழாஅறாத*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.     


    இழந்த எம்மாமைத் திறத்துப் போன*  என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,* 
    உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?*  ஓதக் கடல்ஒலி போல*  எங்கும்

    எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்*  அன்னையர்காள் என்னை என்முனிந்தே?


    முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,* 
    கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த*  கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*

    முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!*  முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,* 
    கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே*  காலம் பெறஎன்னைக் காட்டுமினே  


    காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்*  காதல் கடலின் மிகப் பெரிதால்,* 
    நீல முகில்வண்ணத்து எம்பெருமான்*  நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*

    ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த*  நான்மறையாளரும் வேள்வி ஓவா,* 
    கோலச் செந்நெற்கள் கவரி வீசும்*  கூடுபுனல் திருப்பேரெயிற்கே.  


    பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை*  செற்றபிரான் வந்து வீற்றிருந்த,* 
    பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி*  பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,* 

    ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,* 
    ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?*  என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  


    கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி*  கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக் 
    கொண்டு,*  அலர் தூற்றிற்றுஅது முதலாக்*  கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*

    மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,* 
    தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த*  தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே


    சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*  அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,* 
    நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*

    கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,* 
    ஏர்வள ஒண்கழனிப் பழன*  தென்திருப்பேரெயில் மாநகரே. 


    நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,* 
    சிகர மணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*

    மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,* 
    நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்*  என்  நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?     


    ஊழிதோறுஊழி உருவும் பேரும்  செய்கையும்*  வேறவன் வையம் காக்கும்,* 
    ஆழிநீர் வண்ணனை அச்சுதனை*  அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்*  இவை திருப்பேரெயில் மேய பத்தும்,* 
    ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்*  அவர்அடிமைத் திறத்து ஆழியாரே.  (2)


    ஆழிஎழ*  சங்கும் வில்லும்எழ,*  திசை 
    வாழிஎழ*  தண்டும் வாளும்எழ,*  அண்டம்

    மோழைஎழ*  முடி பாதம்எழ,*  அப்பன் 
    ஊழிஎழ*  உலகம் கொண்டவாறே   (2)


    ஆறு மலைக்கு*  எதிர்ந்துஓடும் ஒலி,*  அரவு 
    ஊறு சுலாய்*  மலை தேய்க்கும் ஒலி,*  கடல்

    மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,*  அப்பன் 
    சாறுபட*  அமுதம்கொண்ட நான்றே.


    நான்றிலஏழ்*  மண்ணும் தானத்தவே,*  பின்னும் 
    நான்றில ஏழ்*  மலை தானத்தவே,*  பின்னும்

    நான்றில ஏழ்*  கடல் தானத்தவே,*  அப்பன் 
    ஊன்றி இடந்து*  எயிற்றில் கொண்ட நாளே.    


    நாளும்எழ*  நிலம் நீரும்எழ*  விண்ணும் 
    கோளும்எழ*  எரி காலும்எழ,*  மலை

    தாளும்எழ*  சுடர் தானும்எழ,*  அப்பன் 
    ஊளிஎழ*  உலகம்உண்ட ஊணே     


    ஊணுடை மல்லர்*  ததர்ந்த ஒலி,*  மன்னர் 
    ஆண்உடைச் சேனை*  நடுங்கும் ஒலி,*  விண்ணுள்

    ஏண்உடைத் தேவர்*  வெளிப்பட்ட ஒலி,*  அப்பன் 
    காணுடைப் பாரதம்*  கைஅறை போழ்தே


    போழ்து மெலிந்த*  புன் செக்கரில்,*  வான்திசை 
    சூழும் எழுந்து*  உதிரப்புனலா,*  மலை

    கீழ்து பிளந்த*  சிங்கம்ஒத்ததால்,*  அப்பன் 
    ஆழ்துயர் செய்து*  அசுரரைக் கொல்லுமாறே.  


    மாறு நிரைத்து*  இரைக்கும் சரங்கள்,*  இன 
    நூறு பிணம்*  மலை போல் புரள,*  கடல்

    ஆறு மடுத்து*  உதிரப்புனலா,*  அப்பன் 
    நீறுபட*  இலங்கை செற்ற நேரே


    நேர்சரிந்தான்*  கொடிக் கோழிகொண்டான்,*  பின்னும் 
    நேர்சரிந்தான்*  எரியும் அனலோன்,*  பின்னும்

    நேர்சரிந்தான்*  முக்கண் மூர்த்திகண்டீர்,*  அப்பன் 
    நேர்சரி வாணன்*  திண்தோள் கொண்ட அன்றே 


    அன்றுமண் நீர்எரிகால்*  விண் மலைமுதல்,* 
    அன்று சுடர்*  இரண்டு பிறவும்,*  பின்னும்

    அன்று மழை*  உயிர் தேவும் மற்றும்,* அப்பன் 
    அன்று முதல்*  உலகம் செய்ததுமே


    மேய்நிரை கீழ்புக*  மாபுரள,*  சுனை 
    வாய்நிறை நீர்*  பிளிறிச்சொரிய,*  இன

    ஆநிரை பாடி*  அங்கேஒடுங்க,*  அப்பன் 
    தீமழை காத்து*  குன்றம் எடுத்தானே     


    குன்றம் எடுத்தபிரான்*  அடியாரொடும்,* 
    ஒன்றிநின்ற*  சடகோபன்உரைசெயல்,*

    நன்றி புனைந்த*  ஓர்ஆயிரத்துள் இவை* 
    வென்றி தரும்பத்தும்*  மேவிக் கற்பார்க்கே (2)


    கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 
    புல்பா முதலா*  புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*

    நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 
    நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)


    நாட்டில் பிறந்தவர்*  நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    நாட்டில் பிறந்து படாதன பட்டு*  மனிசர்க்காய்,* 

    நாட்டை நலியும் அரக்கரை*  நாடித் தடிந்திட்டு,*  
    நாட்டை அளித்துஉய்யச் செய்து*  நடந்தமை கேட்டுமே?


    கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்*  மற்றும் கேட்பரோ,* 
    கேட்பார் செவிசுடு*  கீழ்மை வசைவுகளே வையும்,*

    சேண்பால் பழம்பகைவன்*  சிசு பாலன்,*  திருவடி 
    தாள்பால் அடைந்த*  தன்மை அறிவாரை அறிந்துமே?  


    தன்மை அறிபவர்*  தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    பன்மைப் படர்பொருள்*  ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*

    நன்மைப் புனல்பண்ணி*  நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*  
    தொன்மை மயக்கிய தோற்றிய*  சூழல்கள் சிந்தித்தே?    


    சூழல்கள் சிந்திக்கில்*  மாயன் கழல்அன்றி சூழ்வரோ,* 
    ஆழப் பெரும்புனல்*  தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*

    தாழப் படாமல்*  தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,* 
    கேழல் திருஉருஆயிற்றுக்*  கேட்டும் உணர்ந்துமே?


    கேட்டும் உணர்ந்தவர்*  கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    வாட்டம்இலா வண்கை*  மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*

    ஈட்டம்கொள் தேவர்கள்*  சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,* 
    கோட்டுஅங்கை வாமனன்ஆய்*  செய்த கூத்துக்கள் கண்டுமே? 


    கண்டும் தெளிந்தும் கற்றார்*  கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,* 
    வண்டுஉண் மலர்த்தொங்கல்*  மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*

    இண்டைச் சடைமுடி*  ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,* 
    கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு*  உடன்சென்றது உணர்ந்துமே? 


    செல்ல உணர்ந்தவர்*  செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,* 
    எல்லை இலாத பெரும்தவத்தால்*  பல செய்மிறை,*

    அல்லல் அமரரைச் செய்யும்*  இரணியன் ஆகத்தை,* 
    மல்லல் அரிஉருஆய்*  செய்த மாயம் அறிந்துமே?   


    மாயம் அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க*  ஓர்ஐவர்க்குஆய்,*

    தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று*  சேனையை 
    நாசம் செய்திட்டு,*  நடந்த நல் வார்த்தை அறிந்துமே?


    வார்த்தை அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு*  இறப்புஇவை

    பேர்த்து,*  பெரும்துன்பம் வேர்அற நீக்கி*  தன் தாளின்கீழ்ச் 
    சேர்த்து,*  அவன் செய்யும்*  சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே? 


    தெளிவுற்று வீவுஇன்றி*  நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,* 
    தெளிவுற்ற கண்ணனைத்*  தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*

    தெளிவுற்ற ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்,*  அவர் 
    தெளிவுற்ற சிந்தையர்*  பாமரு மூவுலகத்துள்ளே   (2)


    பாமரு மூவுலகும் படைத்த*  பற்ப நாபாவோ,* 
    பாமரு மூவுலகும் அளந்த*  பற்ப பாதாவோ,*

    தாமரைக் கண்ணாவோ!*  தனியேன் தனிஆளாவோ,* 
    தாமரைக் கையாவோ!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே?  (2)


    என்றுகொல் சேர்வது அந்தோ*  அரன் நான்முகன் ஏத்தும்,*  செய்ய 
    நின் திருப்பாதத்தை*  யான்நிலம் நீர்எரி கால்,*  விண்உயிர்

    என்றுஇவை தாம்முதலா*  முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
    குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து*  அவை காத்த எம்கூத்தாவோ!


    காத்த எம்கூத்தாவோ!*  மலைஏந்திக் கல்மாரி தன்னை,* 
    பூத்தண் துழாய்முடியாய்!*  புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*

    வாய்த்த என் நான்முகனே!*  வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,* 
    ஏத்துஅரும் கீர்த்தியினாய்!*  உன்னை எங்குத் தலைப்பெய்வனே?


    எங்குத் தலைப்பெய்வன் நான்?*  எழில் மூவுலகும் நீயே,* 
    அங்கு உயர் முக்கண்பிரான்*  பிரம பெருமான் அவன்நீ,*

    வெங்கதிர் வச்சிரக் கை*  இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
    கொங்குஅலர் தண்அம் துழாய்முடி*  என்னுடைக் கோவலனே?   


    என்னுடைக் கோவலனே!*  என் பொல்லாக் கருமாணிக்கமே,* 
    உன்னுடை உந்தி மலர்*  உலகம் அவைமூன்றும் பரந்து,*

    உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்*  உன்னைக் கண்டுகொண்டிட்டு,* 
    என்னுடை ஆர்உயிரார்*  எங்ஙனேகொல் வந்து எய்துவரே? 


    வந்துஎய்து மாறுஅறியேன்*  மல்கு நீலச் சுடர்தழைப்ப,* 
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து*  ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*

    அந்தரமேல் செம்பட்டோடு*  அடி உந்திகை மார்புகண்வாய்,* 
    செஞ்சுடர்ச் சோதி விடஉறை*  என்திரு மார்பனையே. 


    என்திரு மார்பன் தன்னை*  என் மலைமகள் கூறன்தன்னை,* 
    என்றும் என்நாமகளை*  அகம்பால்கொண்ட நான்முகனை,*

    நின்ற சசிபதியை*  நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,* 
    வென்று புலன்துரந்த*  விசும்புஆளியை காணேனோ!


    ஆளியைக் காண்பரியாய்*  அரிகாண் நரியாய்,*  அரக்கர் 
    ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து*  பிலம்புக்குஒளிப்ப,*

    மீளியம் புள்ளைக்கடாய்*  விறல் மாலியைக் கொன்று,*  பின்னும் 
    ஆள்உயர் குன்றங்கள் செய்து*  அடர்த்தானையும் காண்டும்கொலோ?


    காண்டும்கொலோ நெஞ்சமே!*  கடிய வினையே முயலும்,* 
    ஆண்திறல் மீளிமொய்ம்பின்*  அரக்கன் குலத்தைத் தடிந்து,*

    மீண்டும் அவன் தம்பிக்கே*  விரி நீர்இலங்கைஅருளி,* 
    ஆண்டு தன் சோதிபுக்க*  அமரர் அரியேற்றினையே?  


    ஏற்றுஅரும் வைகுந்தத்தை*  அருளும் நமக்கு,*  ஆயர்குலத்து 
    ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு*  மாயங்களே இயற்றி,*

    கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று*  ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,* 
    ஆற்றல் மிக்கான் பெரிய*  பரஞ்சோதி புக்க அரியே


    புக்க அரிஉருஆய்*  அவுணன்உடல் கீண்டுஉகந்த,* 
    சக்கரச் செல்வன்தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    மிக்க ஓர்ஆயிரத்துள்*  இவைபத்தும் வல்லார் அவரைத்,* 
    தொக்கு பல்லாண்டுஇசைத்து*  கவரி செய்வர் ஏழையரே  (2)


    ஏழையர் ஆவிஉண்ணும்*  இணைக் கூற்றம்கொலோ அறியேன்,* 
    ஆழிஅம் கண்ணபிரான்*  திருக்கண்கள் கொலோ அறியேன்,*

    சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,* 
    தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே?  (2)


    ஆட்டியும் தூற்றியும் நின்று*  அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?* 
    மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*

    ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,* 
    மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.


    வாலியதுஓர் கனிகொல்*  வினையாட்டியேன் வல்வினைகொல்,* 
    கோலம் திரள்பவளக்*  கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*

    நீல நெடுமுகில்போல்*  திருமேனி அம்மான் தொண்டைவாய்,* 
    ஏலும் திசையுள்எல்லாம்*  வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே. 


    இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,* 
    மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*  மதனன்

    தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,* 
    என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே  


    என்றும் நின்றேதிகழும்*  செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,* 
    அன்றி என்ஆவிஅடும்*  அணி முத்தம்கொலோ? அறியேன்,*

    குன்றம் எடுத்தபிரான்*  முறுவல் எனதுஆவிஅடும்* 
    ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே       


    உய்விடம் ஏழையர்க்கும்*  அசுரர்க்கும் அரக்கர்கட்கும்* 
    எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*

    பைவிடப் பாம்புஅணையான்*  திருக்குண்டலக் காதுகளே?* 
    கைவிடல் ஒன்றும்இன்றி*  அடுகின்றன காண்மின்களே 


    காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,* 
    நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*

    சேண்மன்னு நால்தடம்தோள்*  பெருமான்தன் திருநுதலே?,* 
    கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே


    கோள்இழைத் தாமரையும்*  கொடியும் பவளமும் வில்லும்,.* 
    கோள்இழைத் தண் முத்தமும்*  தளிரும் குளிர்வான் பிறையும்,*

    கோள்இழையாஉடைய*  கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன், 
    கோள்இழை வாள் முகமாய்*  கொடியேன் உயிர் கொள்கின்றதே? 


    கொள்கின்ற கோள் இருளைச்*  சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,* 
    உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?*  அன்று மாயன் குழல்,*

    விள்கின்ற பூந்தண்துழாய்*  விரை நாற வந்து என் உயிரைக்,* 
    கள்கின்றவாறு அறியீர்*  அன்னைமீர்! கழறாநிற்றிரே.


    நிற்றி முற்றத்துள் என்று*  நெரித்த கையர் ஆய்*  
    என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்*  வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*

    முற்ற இம்மூவுலகும்*  விரிகின்ற சுடர்முடிக்கே,* 
    ஒற்றுமை கொண்டது உள்ளம்*  அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?  


    கட்கு அரிய பிரமன் சிவன்*  இந்திரன் என்று இவர்க்கும்,* 
    கட்கு அரிய கண்ணனைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    உட்கு உடை ஆயிரத்துள்*  இவையும் ஒரு பத்தும் வல்லார்,* 
    உட்கு உடை வானவரோடு*  உடனாய் என்றும் மாயாரே. (2)        


    மாயா! வாமனனே!*  மதுசூதா நீ அருளாய்,* 
    தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்*  விசும்பு ஆய் கால் ஆய்,* 

    தாயாய்  தந்தையாய்*  மக்களாய்  மற்றுமாய் முற்றுமாய்,* 
    நீயாய்  நீ நின்றவாறு*  இவை என்ன நியாயங்களே! (2) 


    அங்கண்  மலர்த் தண் துழாய்முடி*  அச்சுதனே! அருளாய்,* 
    திங்களும் ஞாயிறும் ஆய்*  செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,* 

    பொங்கு பொழி மழை ஆய்*  புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ, 
    வெங்கண்வெங் கூற்றமும் ஆம்*  இவை என்ன விசித்திரமே!


    சித்திரத் தேர் வலவா!*  திருச் சக்கரத்தாய்! அருளாய்,* 
    எத்தனை ஓர் உகமும்*  அவை ஆய் அவற்றுள் இயலும்,* 

    ஒத்த ஓண் பல் பொருள்கள்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,* 
    வித்தகத்தாய் நிற்றி நீ*  இவை என்ன விடமங்களே! 


    கள் அவிழ் தாமரைக்கண்*  கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,* 
    உள்ளதும் இல்லதும் ஆய்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*

    வெள்ளத் தடம் கடலுள்*  விட நாகு அணைமேல் மருவி,* 
    உள்ளப் பல் யோகு செய்தி*  இவை என்ன உபாயங்களே!     


    பாசங்கள் நீக்கி*  என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,*  நீ 
    வாச மலர்த் தண் துழாய்முடி*  மாயவனே! அருளாய்,*

    காயமும் சீவனும் ஆய்*  கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,* 
    மாயங்கள் செய்துவைத்தி*  இவை என்ன மயக்குக்களே!       


    மயக்கா! வாமனனே!*  மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,* 
    அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்*  அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,* 

    வியப்பு ஆய் வென்றிகள் ஆய்*  வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,* 
    துயக்கு ஆய் நீ நின்றவாறு*  இவை என்ன துயரங்களே! 


    துயரங்கள் செய்யும் கண்ணா!*  சுடர் நீள் முடியாய் அருளாய்,*
    துயரம் செய் மானங்கள் ஆய்*  மதன் ஆகி உகவைகள் ஆய்,* 

    துயரம் செய் காமங்கள் ஆய்*  துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,* 
    துயரங்கள் செய்துவைத்தி*  இவை என்ன சுண்டாயங்களே.


    என்ன சுண்டாயங்களால்*  நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,* 
    இன்னது ஓர் தன்மையை என்று*  உன்னை யாவர்க்கும் தேற்றரியை,* 

    முன்னிய மூவுலகும்*  அவை ஆய் அவற்றைப் படைத்து,*
    பின்னும் உள்ளாய்! புறத்தாய்*!  இவை என்ன இயற்கைகளே!


    என்ன இயற்கைகளால்*  எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
    துன்னு கரசரணம் முதலாக*  எல்லா உறுப்பும்,* 

    உன்னு சுவை ஒளி*  ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,* 
    உன்னை உணரவுறில்*  உலப்பு இல்லை நுணுக்கங்களே.


    இல்லை நுணுக்கங்களே*  இதனில் பிறிது என்னும் வண்ணம்* 
    தொல்லை நல் நூலில் சொன்ன*  உருவும் அருவும் நீயே:* 

    அல்லித் துழாய் அலங்கல்*  அணி மார்ப என் அச்சுதனே,* 
    வல்லது ஓர் வண்ணம் சொன்னால்*  அதுவே உனக்கு ஆம்வண்ணமே.        


    ஆம் வண்ணம் இன்னது ஒன்று*  என்று அறிவது அரிய அரியை,* 
    ஆம் வண்ணத்தால்*  குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த* 

    ஆம் வண்ண ஒண் தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    ஆம் வண்ணத்தால் உரைப்பார்*  அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)  


    என்றைக்கும் என்னை*  உய்யக்கொண்டு போகிய,* 
    அன்றைக்கு அன்று என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 

    இன் தமிழ் பாடிய ஈசனை*  ஆதியாய்- 
    நின்ற என் சோதியை,*  என் சொல்லி நிற்பனோ? (2)         


    என்சொல்லி நிற்பன்*  என் இன் உயிர் இன்று ஒன்றாய்,* 
    என்சொல்லால் யான்சொன்ன*  இன்கவி என்பித்து,* 

    தன்சொல்லால் தான்தன்னைக்*  கீர்த்தித்த மாயன்,*  என் 
    முன்சொல்லும்*  மூவுருவாம் முதல்வனே.


    ஆம் முதல்வன் இவன் என்று*  தன் தேற்றி,* என் 
    நா முதல் வந்து புகுந்து*  நல் இன் கவி,* 

    தூ முதல் பத்தர்க்குத்*  தான் தன்னைச் சொன்ன,*  என் 
    வாய் முதல் அப்பனை*  என்று மறப்பனோ? 


    அப்பனை என்று மறப்பன்*  என் ஆகியே,* 
    தப்புதல் இன்றி*  தனைக் கவி தான் சொல்லி,* 

    ஒப்பிலாத் தீவினையேனை*  உய்யக்கொண்டு* 
    செப்பமே செய்து*  திரிகின்ற சீர்கண்டே?  


    சீர் கண்டுகொண்டு*  திருந்து நல் இன்கவி,* 
    நேர்பட யான் சொல்லும்*  நீர்மை இலாமையில்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைப்,* 
    பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.  


    இன் கவி பாடும்*  பரம் கவிகளால்,* 
    தன் கவி தான் தன்னைப்*  பாடுவியாது இன்று* 

    நன்கு வந்து என்னுடன் ஆக்கி*  என்னால் தன்னை,* 
    வன் கவி பாடும்*  என் வைகுந்த நாதனே.


    வைகுந்த நாதன்*  என வல்வினை மாய்ந்து அறச்,* 
    செய் குந்தன் தன்னை*  என் ஆக்கி என்னால் தன்னை,* 

    வைகுந்தன் ஆகப்*  புகழ வண் தீம்கவி,* 
    செய் குந்தன் தன்னை*  எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!


    ஆர்வனோ ஆழிஅங்கை*  எம் பிரான் புகழ்,* 
    பார் விண் நீர் முற்றும்*  கலந்து பருகிலும்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைச்,* 
    சீர்பெற இன்கவி*  சொன்ன திறத்துக்கே?


    திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்*  திருமாலின் சீர்,* 
    இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,* 

    மறப்பு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
    உறப் பல இன்கவி*  சொன்ன உதவிக்கே?


    உதவிக் கைம்மாறு*  என் உயிர் என்ன உற்று எண்ணில்,* 
    அதுவும் மற்று ஆங்கவன்*  தன்னது என்னால் தன்னைப்,* 

    பதவிய இன்கவி*  பாடிய அப்பனுக்கு,* 
    எதுவும் ஒன்றும் இல்லை*  செய்வது இங்கும் அங்கே.


    இங்கும் அங்கும்*  திருமால் அன்றி இன்மை கண்டு,* 
    அங்ஙனே வண் குருகூர்ச்*  சடகோபன்,* 

    இங்ஙனே சொன்ன*  ஓர் ஆயிரத்து இப்பத்தும்,* 
    எங்ஙனே சொல்லினும்*  இன்பம் பயக்குமே. (2)


    இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
    இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 

    அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)      


    ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே* 
    ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்* 

    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!       


    கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,* 
    ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*

    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,* 
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!     


    வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற* 
    வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*

    வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,* 
    வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.    


    மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,* 
    பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,* 

    மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.


    ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,* 

    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,* 
    நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.


    நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,* 
    நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்* 

    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,* 
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே. 


    அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,* 
    நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,* 

    சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.


    தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,* 
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,* 

    யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,* 
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே. 


    சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,* 
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,* 

    சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,* 
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     


    தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
    தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)   


    தேவிமார் ஆவார் திருமகள்பூமி*   ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்* 
    மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி*  வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*

    பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்*  பவளவாய் மணியே* 
    ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த  அப்பனே!*  காணுமாறு அருளாய்   (2)


    காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி*   கண்ணநீர் அலமர*  வினையேன் 
    பேணுமாறுஎல்லாம் பேணி*  நின்பெயரே  பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*

    காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!*  தொண்டனேன் கற்பகக்கனியே* 
    பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்*   பெருநிலம் எடுத்த பேராளா!         


    எடுத்தபேராளன் நந்தகோபன்தன்*   இன்உயிர்ச் சிறுவனே*  அசோதைக்கு 
    அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே*   அடியனேன் பெரிய அம்மானே*

    கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்*   கைஉகிர் ஆண்ட எம்கடலே,* 
    அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்*  எங்ஙனம் தேறுவர் உமரே?


    உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி*  உன்தனக்கு அன்பர் ஆனார்* 
    அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை*   அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*

    அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்*   அடுபடை அவித்த அம்மானே* 
    அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே*   என்னுடை ஆர்உயிரேயோ!    


    ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்*  படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த* 
    பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து*  அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*

    சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்*  தேவர்க்கும்தேவாவோ* 
    ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்*   உன்னை நான் எங்கு வந்து உறுகோ?       


    எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே*   ஏழ்உலகங்களும் நீயே* 
    அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே*  அவற்றுஅவை கருமமும் நீயே*

    பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்*   அவையுமோ நீ இன்னேஆனால்* 
    மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே*   வான்புலன் இறந்ததும் நீயே.  


    இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே*   நிகழ்வதோ நீ இன்னேஆனால்* 
    சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று*  அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*

    கறந்தபால் நெய்யே நெய்யின்  சுவையே!*  கடலினுள் அமுதமே அமுதில்* 
    பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!*   பின்னைதோள் மணந்தபேர்ஆயா!


    மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்*   வல்வினையேனை ஈர்கின்ற* 
    குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!*  கொடிய புள்உயர்த்தாய்*

    பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!*  பாற்கடல் சேர்ப்பா* 
    வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்*   செய்கையும் யானும் நீதானே.   


    யானும் நீதானே ஆவதோமெய்யே*   அருநரகுஅவையும் நீ ஆனால்* 
    வான்உயர் இன்பம் எய்தில்என்*  மற்றை   நரகமே எய்தில்என்? எனினும்,*

    யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்*  நரகம் நான்அடைதல்* 
    வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்*  அருளுநின் தாள்களைஎனக்கே.


    தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்* 
    தோள்களை ஆரத்தழுவி என்உயிரை*  அறவிலை செய்தனன் சோதீ,

    தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்*   துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்* 
    தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்*   தமியனேன் பெரிய அப்பனே!


    பெரிய அப்பனை பிரமன் அப்பனை*   உருத்திரன் அப்பனை*  முனிவர்க்கு 
    உரிய அப்பனை அமரர் அப்பனை*   உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*

    பெரியவண்குருகூர் வண்சடகோபன்*   பேணின ஆயிரத்துள்ளும்* 
    உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்*   உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே  (2)


    நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
    நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*

    சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
    வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)


    வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்*   என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்* 
    ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ*  காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*

    காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்*  விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்* 
    ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்*  எத்தனைகாலம் இளைக்கின்றேனே!


    காலம் இளைக்கில் அல்லால் வினையேன்  நான் இளைக்கின்றிலன்*  கண்டு கொள்மின்* 
    ஞாலம் அறியப் பழிசுமந்தேன்*  நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*

    நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த*   நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட* 
    கோலவளையொடும் மாமைகொள்வான்*  எத்தனைகாலமும் கூடச்சென்றே? 


    கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?*  கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்* 
    பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்*   பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*

    மாடக்கொடிமதிள் தென்குளந்தை*   வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்* 
    ஆடல்பறவை உயர்த்தவெல்போர்*  ஆழிவலவனை ஆதரித்தே.


    ஆழிவலவனை ஆதரிப்பும்*  ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்* 
    தோழியர்காள்! நம்உடையமேதான்?*  சொல்லுவதோ இங்கு அரியதுதான்*

    ஊழிதோறுஊழி ஒருவனாக*   நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்* 
    சூழல்உடைய சுடர்கொள்ஆதித்*  தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.  


    தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்*  என்  சொல்அளவன்று இமையோர் தமக்கும்* 
    எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்*  அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*

    அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்*  ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்* 
    வல்லிவளவயல்சூழ் குடந்தை*  மாமலர்க்கண் வளர்கின்றமாலே.


    மாலரிகேசவன் நாரணன்*  சீமாதவன்  கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று* 
    ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு*   ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*

    ஏலமலர்  குழல் அன்னைமீர்காள்!*  என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?* 
    காலம்பலசென்றும் காண்பதுஆணை*  உங்களோடு எங்கள் இடைஇல்லையே.


    இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்*  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
    உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்*  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*

    அடையும் வைகுந்தமும் பாற்கடலும்*   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
    கடையறப்பாசங்கள் விட்டபின்னை*  அன்றி அவன்அவை காண்கொடானே.  


    காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை*  கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்* 
    மாண்குறள் கோலவடிவுகாட்டி*  மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*

    சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த*  தேவபிராற்கு என் நிறைவினோடு* 
    நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்*  என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்


    என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!*   யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை* 
    நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி*  நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*

    பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு*   பால்மதி ஏந்தி ஓர்கோலநீல* 
    நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்*   நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே


    பாதம் அடைவதன் பாசத்தாலே*   மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* 
    கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்*   வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*

    தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்*  இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்* 
    ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி*  இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.      (2)


    அங்கும் இங்கும்*  வானவர் தானவர் யாவரும்* 
    எங்கும் இனையைஎன்று*  உன்னைஅறியகிலாதுஅலற்றி*

    அங்கம்சேரும்*  பூமகள் மண்மகள் ஆய்மகள்* 
    சங்குசக்கரக் கையவன் என்பர்*  சரணமே.  (2)


    சரணமாகிய*  நான்மறை நூல்களும் சாராதே* 
    மரணம் தோற்றம்*  வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*

    கரணப்பல்படை*  பற்றறஓடும் கனல்ஆழி* 
    அரணத்திண் படைஏந்திய*  ஈசற்கு ஆளாயே.


    ஆளும் ஆளார் ஆழியும்*  சங்கும் சுமப்பார்தாம்* 
    வாளும் வில்லும் கொண்டு*  பின் செல்வார் மற்றுஇல்லை*

    தாளும் தோளும்*  கைகளைஆரத் தொழக்காணேன்* 
    நாளும் நாளும் நாடுவன்*  அடியேன் ஞாலத்தே


    ஞாலம் போனகம்பற்றி*  ஓர்முற்றா உருஆகி* 
    ஆலம்பேர்இலை*  அன்னவசம்செய்யும் அம்மானே*

    காலம்பேர்வதுஓர்*  கார்இருள் ஊழி ஒத்துஉளதால்*  உன் 
    கோலம்கார்எழில்*  காணலுற்று ஆழும் கொடியேற்கே


    கொடியார்மாடக்*  கோளூர்அகத்தும் புளியங்குடியும்* 
    மடியாதுஇன்னே*  நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*

    அடியார் அல்லல்தவிர்த்த*  அசைவோ? அன்றேல்*  இப் 
    படிதான் நீண்டுதாவிய*  அசைவோ? பணியாயே.


    பணியாஅமரர்*  பணிவும் பண்பும் தாமேஆம்* 
    அணியார் ஆழியும்*  சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*

    தணியா வெம்நோய்*  உலகில் தவிர்ப்பான்*  திருநீல 
    மணியார்மேனியோடு*  என்மனம் சூழவருவாரே. 


    வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
    திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*

    உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
    ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  


    என்றே என்னை*  உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்* 
    நின்றே ஆட்செய்ய*  நீகொண்டருள நினைப்பதுதான்*

    குன்றுஏழ் பார்ஏழ்*  சூழ்கடல்ஞாலம் முழுஏழும்* 
    நின்றே தாவிய*  நீள்கழல் ஆழித் திருமாலே!


    திருமால் நான்முகன்*  செஞ்சடையான் என்றுஇவர்கள்*  எம் 
    பெருமான் தன்மையை*  யார் அறிகிற்பார்? பேசிஎன்*

    ஒருமாமுதல்வா!*  ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்* 
    கருமாமேனியன்! என்பன்*  என்காதல் கலக்கவே. 


    கலக்கம் இல்லா*  நல்தவமுனிவர் கரைகண்டோர்* 
    துளக்கம் இல்லா*  வானவர் எல்லாம் தொழுவார்கள்*

    மலக்கம் எய்த*  மாகடல்தன்னைக் கடைந்தானை* 
    உலக்க நாம் புகழ்கிற்பது*  என்செய்வது உரையீரே.   


    உரையா வெம்நோய்தவிர*  அருள் நீள்முடியானை* 
    வரையார்மாடம்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    உரையேய் சொல்தொடை*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    நிரையே வல்லார்*  நீடு உலகத்துப் பிறவாரே.   (2)


    வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
    ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

    போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
    சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2)  


    எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்* 
    பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

    செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு- 
    அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே?  


    என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்* 
    முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*

    தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்- 
    நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.


    பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த* 
    குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*

    செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு 
    அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே.  


    அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை*   அது பொருள்ஆகிலும்*  அவனை 
    அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது*   ஆதலால் அவன் உறைகின்ற*

    நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த*   நறும்புகை விசும்புஒளி மறைக்கும்* 
    நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.


    எனக்கு நல்அரணை எனதுஆருயிரை*   இமையவர் தந்தைதாய் தன்னை* 
    தனக்கும் தன் தன்மை அறிவரியானை*   தடம்கடல்பள்ளி அம்மானை*

    மனக்கொள்சீர் மூவாயிரவர்*  வண்சிவனும்  அயனும்தானும் ஒப்பார்வாழ்* 
    கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே. 


    திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்* 
    திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*

    திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்* 
    திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே.  


    திகழ என்சிந்தையுள் இருந்தானை*  செழுநிலத்தேவர் நான்மறையோர்* 
    திசை கைகூப்பி ஏத்தும்*  திருச்செங்குன்றூரில்  திருச்சிற்றாற்றங்கரையானை*

    புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை*   அசுரர்வன்கையர் வெம்கூற்றை* 
    புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்*   படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!


    படைப்பொடு கெடுப்புக் காப்பவன்*  பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே* 
    இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே*  புகழ்வுஇல்லையாவையும் தானே*

    கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்*  கூரியவிச்சையோடு ஒழுக்கம்* 
    நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.


    அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை* 
    அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

    அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு* 
    அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே. 


    தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை* 
    வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*

    கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* 
    வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)


    மாயக்கூத்தா!வாமனா!*  வினையேன்கண்ணா! கண்கைகால்* 
    தூயசெய்ய மலர்களா*  சோதிச்செவ்வாய் முகிழதா*

    சாயல்சாமத் திருமேனி*  தண்பாசடையா*  தாமரைநீள் 
    வாசத்தடம்போல் வருவானே!*  ஒருநாள் காண வாராயே.    


    'காணவாராய்' என்றுஎன்று*   கண்ணும்வாயும் துவர்ந்து*  அடியேன் 
    நாணி நல்நாட்டு அலமந்தால்*  இரங்கி ஒருநாள் நீஅந்தோ*

    காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்*  கருமாமாணிக்க* 
    நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி*  முடிசேர் சென்னி அம்மானே!  


    'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்* 
    கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    படிசேர்மகரக் குழைகளும்*  பவளவாயும் நால்தோளும்* 
    துடிசேர் இடையும் அமைந்தது ஓர்*  தூநீர் முகில்போல் தோன்றாயே. 


    தூநீர் முகில்போல் தோன்றும்*  நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்* 
    தேநீர்க்கமலக் கண்களும்*  வந்து என்சிந்தை நிறைந்தவா*

    மாநீர்வெள்ளிமலை தன்மேல்*  வண்கார் நீல முகில்போல* 
    தூநீர்க்கடலுள் துயில்வானே!*  எந்தாய்! சொல்லமாட்டேனே.    


    சொல்லமாட்டேன் அடியேன்*  உன்துளங்குசோதித் திருப்பாதம்* 
    எல்லைஇல் சீர்இள நாயிறு*  இரண்டுபோல் என்உள்ளவா!*

    அல்லல் என்னும் இருள்சேர்தற்கு*  உபாயம் என்னே? ஆழிசூழ்* 
    மல்லை ஞாலம் முழுதுஉண்ட*  மாநீர்க் கொண்டல் வண்ணனே! 


    'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!*  வினையேன் கண்ணா! கண்ணா* என் 
    அண்டவாணா!' என்றுஎன்னை*   ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*

    விண்தன்மேல்தான் மண்மேல்தான்*  விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்* 
    தொண்டனேன் உன்கழல்காண*  ஒருநாள்வந்து தோன்றாயே.


    வந்து தோன்றாய்அன்றேல்*  உன் வையம்தாய மலர்அடிக்கீழ்* 
    முந்தி வந்து யான்நிற்ப*   முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*

    செந்தண்கமலக் கண்கைகால்*  சிவந்தவாய்ஓர் கருநாயிறு* 
    அந்தம் இல்லாக் கதிர்பரப்பி*  அலர்ந்ததுஒக்கும் அம்மானே!   


    ஒக்கும் அம்மான் உருவம்என்று*  உள்ளம் குழைந்து நாள்நாளும்* 
    தொக்க மேகப் பல்குழாங்கள்*  காணும்தோறும் தொலைவன்நான்*

    தக்க ஐவர் தமக்காய்அன்று*  ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்* 
    புக்கநல்தேர்த் தனிப்பாகா!*  வாராய் இதுவோ பொருத்தமே?


    'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப்  படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்* 
    அதுவே கொடியா உயர்த்தானே!'*  என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்* 
    மதுவார் சோலை*  உத்தர  மதுரைப் பிறந்த மாயனே?  


    பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!*  நீஇன்னே* 
    சிறந்தகால் தீநீர்வான்*  மண்பிறவும்ஆய பெருமானே*

    கறந்த பாலுள் நெய்யேபோல்*  இவற்றுள்எங்கும் கண்டுகொள்* 
    இறந்து நின்ற பெருமாயா!*  உன்னை எங்கே காண்கேனே?  


    'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை*  யான்?' என்றுஎன்று* 
    அங்கே தாழ்ந்த சொற்களால்*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்*  எல்லியும் காலையே.  (2)


    எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
    நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*

    அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
    செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)


    திருக்கடித் தானமும்*  என்னுடையச் சிந்தையும்* 
    ஒருக்கடுத்துஉள்ளே*  உறையும்பிரான் கண்டீர்*

    செருக்கடுத்துஅன்று*  திகைத்த அரக்கரை* 
    உருக்கெடவாளி*  பொழிந்த ஒருவனே. 


    ஒருவர் இருவர் ஓர்*  மூவர்என நின்று* 
    உருவுகரந்து*  உள்ளும்தோறும் தித்திப்பான்*

    திருஅமர் மார்வன்*  திருக்கடித்தானத்தை* 
    மருவிஉறைகின்ற*  மாயப்பிரானே.    


    மாயப்பிரான்*  எனவல்வினை மாய்ந்துஅற* 
    நேசத்தினால் நெஞ்சம்*  நாடு குடிகொண்டான்*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்தை* 
    வாசப்பொழில்மன்னு*  கோயில்கொண்டானே.       


    கோயில் கொண்டான்தன்*  திருக்கடித் தானத்தை* 
    கோயில்கொண்டான்*  அதனோடும் என்நெஞ்சகம்*;

    கோயில்கொள்*  தெய்வம்எல்லாம் தொழ*  வைகுந்தம் 
    கோயில்கொண்ட*  குடக்கூத்த அம்மானே. 


    கூத்தஅம்மான்*  கொடியேன்இடர் முற்றவும்* 
    மாய்த்தஅம்மான்*  மதுசூத அம்மான்உறை*

    பூத்தபொழில்தண்*  திருக்கடித் தானத்தை* 
    ஏத்தநில்லா*  குறிக்கொள்மின் இடரே.   


    கொண்டமின் இடர்கெட*  உள்ளத்து கோவிந்தன்* 
    மண்விண் முழுதும்*  அளந்தஒண்தாமரை*

    மண்ணவர் தாம்தொழ*  வானவர் தாம்வந்து* 
    நண்ணு திருக்கடித்தான நகரே


    தான நகர்கள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    வான்இந் நிலம்கடல்*  முற்றும் எம்மாயற்கே*

    ஆனவிடத்தும் என் நெஞ்சும்*  திருக்கடித் 
    தான நகரும்*  தனதாயப் பதியே.


    தாயப்பதிகள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    மாயத்தினால் மன்னி*  வீற்றிருந்தான்உறை*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்துள்* 
    ஆயர்க்குஅதிபதி*  அற்புதன்தானே. 


    அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
    நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*

    நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
    கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)


    சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
    மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*

    பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
    மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)


    இருத்தும் வியந்து என்னைத்*  தன் பொன்அடிக்கீழ் என்று* 
    அருத்தித்து எனைத்துஓர்*  பலநாள் அழைத்தேற்கு*

    பொருத்தம்உடை*  வாமனன்தான் புகுந்து*  என்தன் 
    கருத்தைஉற*  வீற்றிருந்தான் கண்டுகொண்டே.       (2)


    இருந்தான் கண்டுகொண்டு*  எனதுஏழை நெஞ்சுஆளும்* 
    திருந்தாத ஓர்ஐவரைத்*  தேய்ந்துஅறமன்னி*

    பெரும்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த பெருமான்* 
    தரும்தான் அருள்தான்*  இனியான் அறியேனே.   (2)


    அருள்தான் இனியான் அறியேன்*  அவன்என்உள்* 
    இருள்தான்அற*  வீற்றிருந்தான் இதுஅல்லால்*

    பொருள் தான்எனில்*  மூவுலகும் பொருளல்ல* 
    மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.


    மாயமயக்கு மயக்கான்*  என்னை வஞ்சித்து* 
    ஆயன் அமரர்க்கு*  அரிஏறு எனதுஅம்மான்*     

    தூய சுடர்ச்சோதி*  தனதுஎன்னுள் வைத்தான்* 
    தேசம் திகழும்*  தன்திருவருள் செய்தே.      


    திகழும்தன் திருவருள் செய்து*  உலகத்தார்- 
    புகழும் புகழ்*  தானதுகாட்டித் தந்து என்உள்-

    திகழும்*  மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்* 
    புகழும் புகழ்*  மற்றுஎனக்கும் ஓர்பொருளே? 


    பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்*  சீர்க்கத் 
    தருமேல்*  பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*

    கருமாணிக்கக் குன்றத்துத்*  தாமரைபோல்* 
    திருமார்பு கால்கண்கை*  செவ்வாய் உந்தியானே.   


    செவ்வாய்உந்தி*  வெண்பல் சுடர்க்குழை தம்மோடு* 
    எவ்வாய்ச் சுடரும்*  தம்மில்முன்வளாய்க் கொள்ள*

    செவ்வாய் முறுவலோடு*  எனதுஉள்ளத்துஇருந்த* 
    அவ்வாயன்றி*  யான் அறியேன் மற்றுஅருளே.


    அறியேன் மற்றருள்*  என்னைஆளும் பிரானார்* 
    வெறிதே அருள்செய்வர்*  செய்வார்கட்கு உகந்து*

    சிறியேனுடைச்*  சிந்தையுள் மூவுலகும்*  தன் 
    நெறியா வயிற்றில்கொண்டு*  நின்றொழிந்தாரே. 


    வயிற்றில் கொண்டு*  நின்றொழிந்தாரும் எவரும்* 
    வயிற்றில் கொண்டு*  நின்று ஒருமூவுலகும்* தம்

    வயிற்றில் கொண்டு*  நின்றவண்ணம் நின்றமாலை* 
    வயிற்றில் கொண்டு*  மன்னவைத்தேன் மதியாலே.  


    வைத்தேன் மதியால்*  எனதுஉள்ளத்துஅகத்தே* 
    எய்த்தே ஒழிவேன்அல்லேன்*  என்றும் எப்போதும்*

    மொய்த்துஏய்திரை*  மோது தண்பாற் கடலுளால்* 
    பைத்துஏய் சுடர்ப்பாம்பணை*  நம்பரனையே  


    சுடர்ப்பாம்பணை நம்பரனை*  திருமாலை* 
    அடிச்சேர்வகை*  வண்குருகூர்ச் சடகோபன்*

    முடிப்பான் சொன்னஆயிரத்து*  இப்பத்தும் சன்மம் 
    விடத்*  தேய்ந்தற நோக்கும்*  தன்கண்கள் சிவந்தே  (2)


    கண்கள் சிவந்து பெரியவாய்*  வாயும் சிவந்து கனிந்து*  உள்ளே 
    வெண்பல் இலகு சுடர்இலகு*  விலகு மகர குண்டலத்தன்*

    கொண்டல் வண்ணன் சுடர்முடியன்*  நான்கு தோளன் குனிசார்ங்கன்* 
    ஒண் சங்கதை வாள்ஆழியான்*  ஒருவன் அடியேன் உள்ளானே.  (2)


    அடியேன்உள்ளான் உடல்உள்ளான்*  அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்* 
    படியேஇது என்றுஉரைக்கலாம்  படியன்*  அல்லன் பரம்பரன்*

    கடிசேர் நாற்றத்துள்ஆலை*   இன்பத் துன்பக் கழிநேர்மை* 
    ஒடியா இன்பப் பெருமையோன்*  உணர்வில்உம்பர் ஒருவனே    


    உணர்வில்உம்பர் ஒருவனை*  அவனது அருளால் உறற்பொருட்டு*  என் 
    உணர்வின்உள்ளே இருத்தினேன்*  அதுவும் அவனது இன்அருளே*

    உணர்வும் உயிரும் உடம்பும்*  மற்று உலப்பிலனவும் பழுதேயாம்* 
    உணர்வைப் பெறஊர்ந்துறஏறி*  யானும் தானாய் ஒழிந்தானே.


    யானும் தானாய் ஒழிந்தானை*  யாதும் எவர்க்கும் முன்னோனை* 
    தானும் சிவனும் பிரமனும்ஆகிப்*  பணைத்த தனிமுதலை*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும்ஆகித் தித்தித்து*  என் 
    ஊனில் உயிரில் உணர்வினில்*  நின்ற ஒன்றை உணர்ந்தேனே 


    நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு*  அதனுள் நேர்மை அதுஇதுஎன்று* 
    ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது*   உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*

    சென்று சென்று பரம்பரமாய்*  யாதும்இன்றித் தேய்ந்துஅற்று* 
    நன்று தீதுஎன்று அறிவரிதாய்*  நன்றாய் ஞானம் கடந்ததே


    நன்றாய் ஞானம் கடந்துபோய்*  நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து* 
    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்*  உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*

    சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்*  செற்றுக் களைந்து பசைஅற்றால்* 
    அன்றே அப்போதேவீடு*  அதுவே வீடு வீடாமே.


    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறி* 
    எதுவே தானும் பற்றுஇன்றி*  யாதும் இலிகள்ஆகிற்கில்*

    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறாது* 
    'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று*  எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 


    எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று*  இல்லத்தாரும் புறத்தாரும்- 
    மொய்த்து*  ஆங்கு அறிமுயங்க*  தாம் போகும் போது*  உன்மத்தர்போல்

    பித்தேஏறி அநுராகம்  பொழியும்போது*  எம் பெம்மானோடு- 
    ஒத்தேசென்று*  அங்குஉள்ளம்கூடக்*  கூடிற்றாகில் நல்உறைப்பே.     


    கூடிற்றாகில் நல்உறைப்பு*   கூடாமையைக் கூடினால்* 
    ஆடல் பறவை உயர்கொடி*  எம்மாயன் ஆவதது அதுவே*

    வீடைப் பண்ணி ஒருபரிசே*  எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்* 
    ஓடித் திரியும் யோகிகளும்*  உளரும்இல்லை அல்லரே.


    உளரும்இல்லை அல்லராய்*  உளராய்இல்லை ஆகியே* 
    உளர்எம்ஒருவர் அவர்வந்து*  என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*

    வளரும் பிறையும் தேய்பிறையும்போல*  அசைவும் ஆக்கமும்* 
    வளரும் சுடரும் இருளும்போல்*  தெருளும் மருளும் மாய்த்தோமே.  


    தெருளும் மருளும் மாய்த்து*  தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்* 
    அருளிஇருத்தும் அம்மானாம்*  அயனாம் சிவனாம்*  திருமாலால்

    அருளப்பட்ட சடகோபன்*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்* 
    அருளி அடிக்கீழ் இருத்தும்*  நம்அண்ணல் கருமாணிக்கமே   (2)


    கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
    திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*

    திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)


    அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?*  அணிமேருவின் மீதுஉலவும்* 
    துன்னுசூழ் சுடர் ஞாயிறும்*  அன்றியும்  பல்சுடர்களும்போல்*

    மின்னு நீள்முடிஆரம் பல்கலன்*  தான்உடை எம்பெருமான்* 
    புன்னைஅம் பொழில்சூழ்*  திருப்புலியூர்  புகழும்இவளே.


    புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*  எங்கும் 
    திகழும்எரியொடு செல்வதுஒப்ப*  செழும்கதிர்ஆழிமுதல்*

    புகழும் பொருபடை ஏந்தி*  போர்புக்கு  அசுரரைப் பொன்றுவித்தான்* 
    திகழும் மணிநெடு மாடம்நீடு*   திருப்புலியூர் வளமே.      


    ஊர்வளம்கிளர் சோலையும்*  கரும்பும்   பெரும்செந்நெலும் சூழ்ந்து* 
    ஏர்வளம்கிளர் தண்பணைக்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

    சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்*  தேவபிரான்* 
    பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்*  இன்று இப்புனைஇழையே.   


    புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்*   புதுக்கணிப்பும்* 
    நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது*  நின்று  நினைக்கப்புக்கால்*

    சுனையினுள் தடம்தாமரை மலரும்*  தண் திருப்புலியூர்* 
    முனைவன் மூவுலகுஆளி*  அப்பன்  திருஅருள் மூழ்கினளே.  


    திருஅருள் மூழ்கி வைகலும்*  செழுநீர்நிறக் கண்ணபிரான்* 
    திருஅருள்களும் சேர்ந்தமைக்கு*  அடையாளம் திருந்தஉள*

    திருஅருள் அருளால் அவன்*  சென்று   சேர்தண் திருப்புலியூர்* 
    திருஅருள் கமுகுஒண் பழத்தது*  மெல்லியல் செவ்விதழே


    மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க*   வீங்குஇளம்தாள்கமுகின்* 
    மல்இலை மடல்வாழை*  ஈன்கனி சூழ்ந்து  மணம்கமழ்ந்து*

    புல்இலைத் தெங்கினூடு*  கால் உலவும்தண் திருப்புலியூர்* 
    மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்*   இம் மடவரலே   


    மடவரல் அன்னைமீர்கட்கு*  என்சொல்லிச் சொல்லுகேன்?  மல்லைச்செல்வ* 
    வடமொழி மறைவாணர்*  வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*

    திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்*  தண் திருப்புலியூர்* 
    படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்*  பரவாள் இவளே.


    பரவாள் இவள் நின்று இராப்பகல்*  பனிநீர்நிறக் கண்ணபிரான்* 
    விரவார்இசை மறை வேதியர்ஒலி*  வேலையின்  நின்றுஒலிப்ப*

    கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்*  தீவிகை நின்றுஅலரும்* 
    புரவார் கழனிகள் சூழ்*  திருப்புலியூர்ப்  புகழ்அன்றிமற்றே 


    அன்றி மற்றோர் உபாயம்என்*  இவள்அம்தண் துழாய்கமழ்தல்* 
    குன்றமாமணி மாடமாளிகைக்*  கோலக்  குழாங்கள் மல்கி*

    தென்திசைத் திலதம்புரை*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    நின்ற மாயப்பிரான் திருவருளாம்*  இவள் நேர்பட்டதே.  


    நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*

    நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
    நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)


    நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்*   அவனைக் கருத வஞ்சித்து* 
    தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்*  முற்றும்  தவிர்ந்த சதிர்நினைந்தால்*

    கொடுமாவினையேன் அவன்அடியார்  அடியே*  கூடும் இதுஅல்லால்* 
    விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!*  வியன் மூவுலகு பெறினுமே?.  (2)


    வியன் மூவுலகு பெறினும்போய்*  தானே தானே ஆனாலும்* 
    புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்*  புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*

    சயமே அடிமை தலைநின்றார்*  திருத்தாள் வணங்கி*  இம்மையே 
    பயனே இன்பம் யான்பெற்றது*  உறுமோ பாவியேனுக்கே? 


    உறுமோ பாவியேனுக்கு*  இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய* 
    சிறுமாமேனி நிமிர்த்த*  என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*

    நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்*   புகுதல் அன்றி அவன்அடியார்* 
    சிறுமா மனிசராய் என்னைஆண்டார்*  இங்கே திரியவே. 


    இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!*  இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த* 
    செங்கோலத்த பவளவாய்ச்*  செந்தாமரைக்கண் என்அம்மான்*

    பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்*  புலன்கொள் வடிவு என்மனத்ததாய்* 
    அங்குஏய் மலர்கள் கையவாய்*  வழிபட்டுஓட அருளிலே?  


    வழிபட்டுஓட அருள்பெற்று*  மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்* 
    சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி  வெள்ளத்து*  இன்புற்றுஇருந்தாலும்*

    இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து*  தன்சீர் யான்கற்று* 
    மொழிபட்டுஓடும் கவிஅமுதம்*  நுகர்ச்சி உறுமோ முழுதுமே?  


    நுகர்ச்சி உறுமோ மூவுலகின்*  வீடு பேறு தன்கேழ்இல்* 
    புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்*  நீண்ட அசுரர் உயிர்எல்லாம்* 
    தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்*  பெரிய தனிமாப் புகழே?  


    தனிமாப் புகழே எஞ்ஞான்றும்*   நிற்கும் படியாத் தான்தோன்றி* 
    முனிமாப் பிரம முதல்வித்தாய்*  உலகம் மூன்றும் முளைப்பித்த*

    தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்*  புகுதல் அன்றி அவன்அடியார்* 
    நனிமாக் கலவி இன்பமே*  நாளும் வாய்க்க நங்கட்கே


    நாளும் வாய்க்க நங்கட்கு*  நளிர்நீர்க் கடலைப் படைத்து*  தன் 
    தாளும் தோளும் முடிகளும்*  சமன் இலாத பலபரப்பி*

    நீளும் படர்பூங் கற்பகக்காவும்*  நிறைபல்நாயிற்றின்* 
    கோளும்உடைய மணிமலைபோல்*  கிடந்தான் தமர்கள் கூட்டமே.   


    தமர்கள் கூட்ட வல்வினையை*   நாசம் செய்யும் சதுமூர்த்தி* 
    அமர்கொள் ஆழி சங்குவாள்*  வில்தண்டுஆதி பல்படையன்*

    குமரன் கோல ஐங்கணைவேள்தாதை*  கோதுஇல் அடியார்தம்* 
    தமர்கள் தமர்கள் தமர்களாம்*  சதிரே வாய்க்க தமியேற்கே 


    வாய்க்க தமியேற்கு*  ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்- 
    பூக்கொள் மேனி நான்குதோள்*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நீக்கம்இல்லா அடியார்தம்*  அடியார் அடியார் அடியார் எம் 
    கோக்கள்*  அவர்க்கே குடிகளாய்ச்  செல்லும்*  நல்ல கோட்பாடே  


    நல்ல கோட்பாட்டு உலகங்கள்*  மூன்றினுள்ளும் தான்நிறைந்த* 
    அல்லிக் கமலக் கண்ணனை*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    சொல்லப் பட்ட ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    நல்ல பதத்தால் மனைவாழ்வர்*  கொண்ட பெண்டீர் மக்களே.  (2)


    கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்*  சுற்றத்தவர் பிறரும்* 
    கண்டதோடு பட்டதுஅல்லால்*  காதல்மற்றுயாதும்இல்லை*

    எண்திசையும் கீழும்மேலும்*  முற்றவும் உண்டபிரான்* 
    தொண்டரோமாய் உய்யலல்லால்*  இல்லைகண்டீர் துணையே  (2)


    துணையும் சார்வும்ஆகுவார்போல்*  சுற்றத்தவர்பிறரும்* 
    அணையவந்த ஆக்கம்உண்டேல்*  அட்டைகள்போல் சுவைப்பர்*

    கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த*  எம்கார்முகிலைப்* 
    புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர்பொருளே.  


    பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்* 
    இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*

    மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு* 
    அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.


    அரணம்ஆவர் அற்றகாலைக்கு*  என்றென்று அமைக்கப்பட்டார்* 
    இரணம்கொண்ட தெப்பர்ஆவர்*  இன்றியிட்டாலும் அஃதே*

    வருணித்துஎன்னே?*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
    சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர் சதிரே. 


    சதுரம்என்று தம்மைத்தாமே*  சம்மதித்து இன்மொழியார்* 
    மதுரபோகம் துற்றவரே*  வைகிமற்றுஒன்றுஉறுவர்*

    அதிர்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப்பிறந்தாற்கு* 
    எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர் இன்பமே. 


    இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!*  உள்ளது நினையாதே* 
    தொல்லையார்கள் எத்தனைவர்*  தோன்றிக் கழிந்தொழிந்தார்?*

    மல்லை மூதூர்*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    சொல்லிஉய்யப் போகல்அல்லால்*  மற்றொன்றுஇல்லைசுருக்கே.


    மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்*  மாநிலத்துஎவ்உயிர்க்கும்* 
    சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்*  கண்டீர்கள்அந்தோ!*

    குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்*  வடமதுரைப்பிறந்தான்* 
    குற்றம்இல்சீர் கற்றுவைகல்*  வாழ்தல்கண்டீர்குணமே. 


    வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!*  மாயவன் அடிபரவிப்* 
    போழ்துபோக உள்ளகிற்கும்*  புன்மைஇலாதவர்க்கு*

    வாழ்துணையா*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    வீழ்துணையாப் போம்இதனில்*  யாதும்இல்லைமிக்கதே. 


    யாதும்இல்லை மிக்குஅதனில்*  என்றுஎன்று அதுகருதி* 
    காதுசெய்வான் கூதைசெய்து*  கடைமுறை வாழ்க்கையும்போம்*

    மாதுகிலின் கொடிக்கொள்மாட*  வடமதுரைப்பிறந்த* 
    தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்*  இல்லை கண்டீர் சரணே.


    கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்*  சரண்அதுநிற்கவந்து* 
    மண்ணின் பாரம் நீக்குதற்கே*  வடமதுரைப்பிறந்தான்*

    திண்ணமாநும் உடைமை உண்டேல்*  அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ* 
    எண்ணவேண்டா நும்மதுஆதும்*  அவன்அன்றிமற்றுஇல்லையே.


    ஆதும்இல்லை மற்றுஅவனில்*  என்றுஅதுவே துணிந்து* 
    தாதுசேர்தோள் கண்ணனைக்*  குருகூர்ச்சடகோபன்சொன்ன*

    தீதுஇலாத ஒண்தமிழ்கள்*  இவைஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஓதவல்லபிராக்கள்*  நம்மை ஆளுடையார்கள் பண்டே.   (2)


    பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
    கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 

    தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
    தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  


    குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன் 
    அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்

    படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்* 
    கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  


    கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
    தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*

    தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்* 
    இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!


    புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து*  வைகுந்தத்துள் நின்று* 
    தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே*  என்னைஆள்வாய் எனக்குஅருளி*

    நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப*  நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப* 
    பளிங்குநீர் முகிலின்பவளம்போல்*  கனிவாய்சிவப்பநீ காணவாராயே   


    பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்* 
    தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*

    பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்* 
    கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  


    காய்சினப்பறவைஊர்ந்து*  பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல* 
    மாசினமாலி மாலிமான்என்று*  அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*

    காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்* 
    காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி*  எம்இடர்கடிவானே!  


    எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்* 
    செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*

    நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர* 
    இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 


    எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி* 
    தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*

    திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா* 
    இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.


    வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம் 
    போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக* 

    சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்* 
    கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே! 


    கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்* 
    கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*

    வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்* 
    கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    


    'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
    மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*

    நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
    ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)


    ஓராயிரமாய்*  உலகுஏழ்அளிக்கும்* 
    பேராயிரம்கொண்டதுஓர்*  பீடுஉடையன்*

    காராயின*  காளநல்மேனியினன்* 
    நாரயணன்*  நங்கள்பிரான்அவனே.   (2)


    அவனேஅகல்ஞாலம்*  படைத்துஇடந்தான்* 
    அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*

    அவனேஅவனும்*  அவனும்அவனும்* 
    அவனே மற்றுஎல்லாமும்*  அறிந்தனமே.


    அறிந்தனவேத*  அரும்பொருள்நூல்கள்* 
    அறிந்தனகொள்க*  அரும்பொருள்ஆதல்*

    அறிந்தனர்எல்லாம்*  அரியைவணங்கி* 
    அறிந்தனர்*  நோய்கள்அறுக்கும்மருந்தே.  


    மருந்தேநங்கள்*  போக மகிழ்ச்சிக்குஎன்று* 
    பெரும்தேவர் குழாங்கள்*  பிதற்றும்பிரான்*

    கரும்தேவன்எம்மான்*  கண்ணன்விண்உலகம்* 
    தரும்தேவனைச்*  சோரேல்கண்டாய்மனமே!


    மனமே! உன்னை*  வல்வினையேன்இரந்து* 
    கனமேசொல்லினேன்*  இதுசோரேல்கண்டாய்*

    புனம்மேவிய*  பூந்தண்துழாய் அலங்கல்* 
    இனம்ஏதும்இலானை*  அடைவதுமே.


    அடைவதும்அணியார்*  மலர்மங்கைதோள்* 
    மிடைவதும்*  அசுரர்க்குவெம்போர்களே*

    கடைவதும்*  கடலுள்அமுதம்*  என்மனம் 
    உடைவதும்*  அவற்கேஒருங்காகவே.


    ஆகம்சேர்*  நரசிங்கம்அதுஆகி ஓர்* 
    ஆகம்வள்உகிரால்*  பிளந்தான்உறை*

    மாகவைகுந்தம்*  காண்பதற்கு என்மனம்* 
    ஏகம்எண்ணும்*  இராப்பகல்இன்றியே   (2)  


    இன்றிப்போக*  இருவினையும்கெடுத்து* 
    ஒன்றியாக்கைபுகாமை*  உய்யக்கொள்வான்*

    நின்றவேங்கடம்*  நீள்நிலத்துஉள்ளது, 
    சென்றதேவர்கள்*  கைதொழுவார்களே.


    தொழுதுமாமலர்*  நீர்சுடர்தூபம்கொண்டு* 
    எழுதும்என்னும்இது*  மிகைஆதலின்*

    பழுதுஇல்தொல்புகழ்ப்*  பாம்புஅணைப்பள்ளியாய்* 
    தழுவுமாறுஅறியேன்*  உனதாள்களே 


    தாளதாமரையான்*  உனதுஉந்தியான்* 
    வாள்கொள் நீளமழுஆளி*  உன்ஆகத்தான்*

    ஆளராய்த்தொழுவாரும்*  அமரர்கள்* 
    நாளும் என்புகழ்கோ*  உனசீலமே? 


    சீலம்எல்லைஇலான்*  அடிமேல்*  அணி 
    கோலம்நீள்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    மாலைஆயிரத்துள்*  இவை பத்தினின் 
    பாலர்*  வைகுந்தம்ஏறுதல் பான்மையே  (2)


    மையார்கருங்கண்ணி*  கமல மலர்மேல்* 
    செய்யாள் திருமார்வினில்சேர்*  திருமாலே*

    வெய்யார்சுடர்ஆழி*  சுரிசங்கம்ஏந்தும்*  
    கையா உன்னைக்காணக்*  கருதும் என்கண்ணே.    (2)


    கண்ணேஉன்னைக் காணக்கருதி*  என்நெஞ்சம் 
    எண்ணேகொண்ட*  சிந்தையதாய்  நின்றுஇயம்பும்*

    விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை* 
    நண்ணாது  ஒழியேன் என்று*  நான் அழைப்பனே


    அழைக்கின்ற அடிநாயேன்*  நாய்கூழை வாலால்* 
    குழைக்கின்றது போல*  என்உள்ளம் குழையும்*

    மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து*  ஆநிரைகாத்தாய். 
    பிழைக்கின்றதுஅருள்என்று*  பேதுறுவனே


    உறுவது இதுஎன்று*  உனக்கு ஆள்பட்டு*  நின்கண் 
    பெறுவது எதுகொல்என்று*  பேதையேன் நெஞ்சம்*

    மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்* 
    அறிவதுஅரிய*  அரியாய அம்மானே!    


    அரியாய அம்மானை*  அமரர் பிரானை* 
    பெரியானை*  பிரமனை முன்படைத்தானை*

    வரிவாள் அரவின்அணைப்*  பள்ளிகொள்கின்ற* 
    கரியான்கழல் காணக்*  கருதும் கருத்தே.


    கருத்தே உன்னைக்*  காணக்கருதி*  என்நெஞ்சத்து 
    இருத்தாக இருத்தினேன்*  தேவர்கட்குஎல்லாம்*

    விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி*  உயரத்து 
    ஒருத்தா*  உன்னைஉள்ளும்*  என்உள்ளம் உகந்தே


    உகந்தேஉன்னை*  உள்ளும் என்உள்ளத்து அகம்பால்* 
    அகம்தான் அமர்ந்தே*  இடம்கொண்ட அமலா*

    மிகும்தானவன் மார்வுஅகலம்*  இருகூறா* 
    நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!


    உருவாகிய*  ஆறுசமயங்கட்குஎல்லாம்* 
    பொருவாகி நின்றான்*  அவன் எல்லாப்பொருட்கும்*

    அருவாகிய ஆதியை*  தேவர்கட்குஎல்லாம்* 
    கருவாகிய கண்ணனை*  கண்டுகொண்டேனே.


    கண்டுகொண்டு*  என்கண்இணை ஆரக்களித்து* 
    பண்டைவினையாயின*  பற்றோடுஅறுத்து*

    தொண்டர்க்கு அமுதுஉண்ணச்*  சொல்மாலைகள் சொன்னேன்* 
    அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.       


    அடியான் இவன்என்று*  எனக்குஆர்அருள்செய்யும் 
    நெடியானை*  நிறைபுகழ் அம்சிறைப்*  புள்ளின்

    கொடியானை*  குன்றாமல்*  உலகம்அளந்த 
    அடியானை*  அடைந்து அடியேன்*  உய்ந்தவாறே


    ஆறாமதயானை*  அடர்த்தவன்தன்னை* 
    சேறுஆர்வயல்*  தென்குருகூர்ச் சடகோபன்*

    நூறேசொன்ன*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஏறேதரும்*  வானவர்தம் இன்உயிர்க்கே   (2)


    இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*  இங்கு எத்தனை* 
    என்னுயிர் நோவ மிழற்றேல்மின்*  குயில் பேடைகாள்*

    என்னுயிர்க் கண்ணபிரானை*  நீர் வரக்கூவுகிலீர்* 
    என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்*  இத்தனை வேண்டுமோ?   (2)


    இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!*  அன்றில் பேடைகாள்* 
    எத்தனை நீரும் நும்சேவலும்*  கரைந்துஏங்குதிர்*

    வித்தகன் கோவிந்தன்*  மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்* 
    அத்தனைஆம் இனி*  என்உயிர் அவன்கையதே.


    அவன்கையதே எனதுஆர்உயிர்*  அன்றில் பேடைகாள்* 
    எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்*  புடைசூழவே*

    தவம்செய்தில்லா*  வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ* 
    எவன்சொல்லி நிற்றும்*  நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 


    கூக்குரல்கேட்டும்*  நம்கண்ணன் மாயன் வெளிப்படான்* 
    மேல்கிளை கொள்ளேல்மின்*  நீரும் சேவலும் கோழிகாள்*

    வாக்கும்மனமும்*  கருமமும் நமக்குஆங்கதே* 
    ஆக்கையும் ஆவியும்*  அந்தரம் நின்றுஉழலுமே


    அந்தரம் நின்றுஉழல்கின்ற*  யானுடைப் பூவைகாள்* 
    நும்திறத்துஏதும் இடைஇல்லை*  குழறேல்மினோ*

    இந்திரஞாலங்கள் காட்டி*  இவ்ஏழ்உலகும் கொண்ட* 
    நம் திருமார்பன்*  நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான். 


    நன்குஎண்ணி நான்வளர்த்த*  சிறுகிளிப்பைதலே* 
    இன்குரல் நீ மிழற்றேல்*  என்ஆர்உயிர்க் காகுத்தன்*

    நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்*  கண்ணன்கை காலினன்* 
    நின்பசும்சாம நிறத்தன்*  கூட்டுண்டு நீங்கினான். 


    கூட்டுண்டு நீங்கிய*  கோலத்தாமரைக் கண்செவ்வாய்* 
    வாட்டம்இல்என் கருமாணிக்கம்*  கண்ணன் மாயன்போல்*

    கோட்டிய வில்லொடு*  மின்னும் மேகக்குழாங்கள்காள்* 
    காட்டேல்மின் நும்உரு*  என்உயிர்க்கு அதுகாலனே.


    உயிர்க்குஅது காலன்என்று*  உம்மை யான்இரந்தேற்குநீர்* 
    குயில் பைதல்காள்*  கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*

    தயிர்ப்பழஞ்சோற்றொடு*  பால்அடிசிலும் தந்து*  சொல் 
    பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்*  பண்புஉடையீரே!      


    பண்புடை வண்டொடு தும்பிகாள்*  பண்மிழற்றேல்மின்* 
    புண்புரை வேல்கொடு*  குத்தால்ஒக்கும் நும்இன்குரல்

    தண்பெருநீர்த் தடம்தாமரை*  மலர்ந்தால்ஒக்கும் 
    கண்பெரும்கண்ணன்*  நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான் 


    எழநண்ணி நாமும்*  நம்வானநாடனோடு ஒன்றினோம்* 
    பழன நல்நாரைக் குழாங்கள்காள்*  பயின்றுஎன்இனி*

    இழைநல்லஆக்கையும்*  பையவே புயக்குஅற்றது* 
    தழைநல்ல இன்பம் தலைப்பெய்து*  எங்கும் தழைக்கவே.   


    இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த*  பல்ஊழிக்குத்* 
    தன்புகழ்ஏத்தத்*  தனக்குஅருள் செய்தமாயனைத்*

    தென்குருகூர்ச் சடகோபன்*  சொல்ஆயிரத்துள் இவை* 
    ஒன்பதோடு ஒன்றுக்கும்*  மூவுலகும் உருகுமே   (2)   


    உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி* 
    பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*

    தெருவுஎல்லாம் காவிகமழ்*  திருக்காட்கரை*  
    மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.   (2)


    நினைதொறும் சொல்லும்தொறும்*  நெஞ்சு இடிந்துஉகும்* 
    வினைகொள்சீர் பாடிலும்*  வேம்எனதுஆர்உயிர்*

    சுனைகொள் பூஞ்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பா* 
    நினைகிலேன் நான்உனக்கு*  ஆட்செய்யும் நீர்மையே.   


    நீர்மையால் நெஞ்சம்*  வஞ்சித்துப் புகுந்து*  என்னை 
    ஈர்மைசெய்து*  என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்* 

    சீர்மல்குசோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கார்முகில் வண்ணன்தன்*  கள்வம் அறிகிலேன்.


    அறிகிலேன் தன்னுள்*  அனைத்துஉலகும் நிற்க* 
    நெறிமையால் தானும்*  அவற்றுள் நிற்கும் பிரான்*

    வெறிகமழ்சோலைத்*  தென்காட்கரை என்அப்பன்* 
    சிறியவென்னாயிருண்ட திருஅருளே.


    திருவருள் செய்பவன்போல*  என்னுள்புகுந்து* 
    உருவமும் ஆருயிரும்*  உடனே உண்டான்*

    திருவளர்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கருவளர்மேனி*  என்கண்ணன் கள்வங்களே.


    என்கண்ணன் கள்வம்*  எனக்குச் செம்மாய்நிற்கும்* 
    அம்கண்ணன் உண்ட*  என்ஆர்உயிர்க்கோதுஇது*

    புன்கண்மை எய்தி*  புலம்பி இராப்பகல்* 
    என்கண்ணன் என்று*  அவன்காட்கரைஏத்துமே 


    காட்கரைஏத்தும்*  அதனுள் கண்ணாஎன்னும்* 
    வேட்கை நோய்கூர*  நினைந்து கரைந்துகும்*

    ஆட்கொள் வான்ஒத்து*  என்னுயிருண்ட மாயனால்* 
    கோள்குறைபட்டது*  என்னாருயிர் கோள்உண்டே.


    கோள்உண்டான் அன்றிவந்து*  என்உயிர் தான்உண்டான்* 
    நாளும்நாள்வந்து*  என்னை முற்றவும் தான்உண்டான்*

    காளநீர்மேகத்*  தென்காட்கரை என்அப்பற்கு* 
    ஆள்அன்றேபட்டது*  என்ஆர்உயிர் பட்டதே. 


    ஆருயிர் பட்டது*  எனதுஉயிர் பட்டது* 
    பேர்இதழ்த் தாமரைக்கண்*  கனிவாயதுஓர்*

    கார்எழில் மேகத்*  தென்காட்கரை கோயில்கொள், 
    சீர்எழில் நால்தடம்தோள்*  தெய்வ வாரிக்கே.


    வாரிக்கொண்டு*  உன்னைவிழுங்குவன் காணில்' என்று* 
    ஆர்வுஉற்ற என்னை ஒழிய*  என்னில் முன்னம்

    பாரித்துத்*  தான்என்னை*  முற்றப் பருகினான்* 
    கார்ஒக்கும்*  காட்கரைஅப்பன் கடியனே.  


    கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
    கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*

    வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
    முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)


    எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
    செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*

    கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
    நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)


    நுமரோடும் பிரியாதே*  நீரும் நும் சேவலுமாய்* 
    அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*

    எமராலும் பழிப்புண்டு*  இங்கு என்தம்மால் இழிப்புண்டு* 
    தமரோடுஅங்கு உறைவார்க்குத்*  தக்கிலமே! கேளீரே.


    தக்கிலமே கேளீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேரும்* 
    கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!*  குளிர் மூழிக்களத்து உறையும்*

    செக்கமலத்துஅலர் போலும்*  கண்கைகால் செங்கனிவாய்* 
    அக்கமலத்துஇலைப்போலும்*  திருமேனி அடிகளுக்கே.


    திருமேனி அடிகளுக்குத்*  தீவினையேன் விடுதூதாய்* 
    திருமூழிக்களம் என்னும்*  செழுநகர்வாய் அணிமுகில்காள்*

    திருமேனி அவட்குஅருளீர்*  என்றக்கால் உம்மைத்தன்* 
    திருமேனி ஒளிஅகற்றி*  தெளிவிசும்பு கடியுமே?   


    தெளிவிசும்பு கடிதுஓடி*  தீவளைத்து மின்இலகும்* 
    ஒளிமுகில்காள்!*  திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*

    தெளிவிசும்பு திருநாடாத்*  தீவினையேன் மனத்துஉறையும்* 
    துளிவார்கள்குழலார்க்கு*  என்தூதுஉரைத்தல் செப்புமினே.


    தூதுஉரைத்தல் செப்புமின்கள்*  தூமொழிவாய் வண்டுஇனங்காள்*  
    போதுஇரைத்து மதுநுகரும்*  பொழில் மூழிக்களத்துஉறையும்* 

    மாதரைத்தம் மார்வகத்தே*  வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*  
    தூதுஉரைத்தல் செப்புதிரேல்*  சுடர்வளையும் கலையுமே.


    சுடர்வளையும் கலையும்கொண்டு*  அருவினையேன் தோள்துறந்த*  
    படர்புகழான்*  திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்* 

    சுடர்பவள வாயனைக்கண்டு*  ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*  
    படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!*  எனக்கு ஒன்று பணியீரே. 


    எனக்குஒன்று பணியீர்கள்*  இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*  
    மனக்குஇன்பம் படமேவும்*  வண்டுஇனங்காள்! தும்பிகாள்* 

    கனக்கொள் திண்மதிள்புடைசூழ்*  திருமூழிக் களத்துஉறையும்*  
    புனக்கொள் காயாமேனிப்*  பூந்துழாய் முடியார்க்கே.


    பூந்துழாய் முடியார்க்கு*  பொன்ஆழிக் கையாருக்கு* 
    ஏந்துநீர் இளம்குருகே!*  திருமூழிக்களத்தாருக்கு*

    ஏந்துபூண் முலைபயந்து*  என்இணைமலர்க்கண் நீர்ததும்ப* 
    தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்*  தகவுஅன்றுஎன்று உரையீரே   


    தகவுஅன்றுஎன்று உரையீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேர்ந்து* 
    மிகஇன்பம் படமேவும்*  மேல்நடைய அன்னங்காள்*

    மிகமேனி மெலிவுஎய்தி*  மேகலையும் ஈடுஅழிந்து*  என் 
    அகமேனி ஒழியாமே*  திருமூழிக் களத்தார்க்கே.


    ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
    ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 

    வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
    அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2) 


    அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
    நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*

    வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)


    கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
    வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*

    நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!


    எவைகொல் அணுகப் பெறும்நாள்?'*  என்று எப்போதும்* 
    கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்* 

    நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்*  
    அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே


    நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும் 
    மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*

    நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!


    மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்* 
    கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*

    விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே?  


    கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்* 
    தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*

    வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!


    கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்* 
    தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*

    நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ* 
    'ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே. 


    அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப் 
    பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*

    மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்* 
    தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே!  


    தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்* 
    மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*

    தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!


    அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்*  
    சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*

    கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.


    வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
    திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 

    பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
    மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)


    மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!*  வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ* 
    செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!*   செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*

    அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்*  ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்* 
    புல்லிய முலைகளும் தோளும் கொண்டு*  புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!   (2)


    புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ* 
    பகலடுமாலைவண் சாந்தமாலோ!*  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*

    அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து-  அளந்து*  எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்* 
    இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*  இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?


    இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்*  இணைமுலை நமுக நுண்இடை நுடங்க* 
    துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து*   துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*  

    தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்*   தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்* 
    பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்*  பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!  


    பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!*  வாடை தண்வாடை வெவ்வாயாலோ* 
    மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*  மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*

    தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த*  எம்பெண்மைஅம் பூஇதுதாலோ* 
    ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!*  யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*


    யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*  ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,* 
    யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!*  அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*

    யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்*   எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ* 
    யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்?  அவனுடை அருள் பெறும்போது அரிதே.


    அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*  அவ்அருள்அல்லன அருளும் அல்ல* 
    அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது*  அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*

    சிவனொடு பிரமன் வண் திருமடந்தை*  சேர்திருஆகம் எம்ஆவிஈரும்* 
    எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ?  ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!   


    ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!*  ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை* 
    கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்*   கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*

    சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு*  பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து* 
    போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்*   புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!


    புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!*  பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ* 
    அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்*   கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*  

    மதுமண மல்லிகை மந்தக்கோவை*  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து* 
    அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே*  ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!     


    ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!*  அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்* 
    தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி*  தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*

    பேதுறு முகம்செய்து நொந்துநொந்து*  பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை* 
    யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!*  மாலையும்வந்தது மாயன்வாரான். 


    மாலையும்வந்தது மாயன்வாரான்*  மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
    கோல நல்நாகுகள் உகளும்ஆலோ!  கொடியன குழல்களும் குழறும்ஆலோ*

    வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்*   மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
    வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!*  என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?  


    அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா*  அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்* 
    அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*  அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*

    அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த*   ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு* 
    அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!   அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே!    (2)


    மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
    காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*

    வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
    ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)


    கள்அவிழும் மலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்* 
    நள்ளிசேரும் வயல்சூழ்*  கிடங்கின்புடை*

    வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    உள்ளி*  நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!   


    தொண்டர் நும்தம்*  துயர்போகநீர் கமாய்* 
    விண்டுவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வண்டுபாடும் பொழில்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அண்டவாணன்*  அமரர்பெருமானையே       


    மானைநோக்கி*  மடப்பின்னைதன் கேள்வனை* 
    தேனைவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வானைஉந்தும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம்* 
    தான்நயந்த பெருமான்*  சரண்ஆகுமே.


    சரணம்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    மரணம்ஆனால்*  வைகுந்தம் கொடுக்கும்பிரான்*

    அரண்அமைந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத் 
    தரணியாளன்*  தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே. 


    அன்பன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    செம்பொன்ஆகத்து*  அவுணன்உடல் கீண்டவன்,  

    நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அன்பன்*  நாளும் தன*  மெய்யர்க்கு மெய்யனே  


    மெய்யன்ஆகும்*  விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்* 
    பொய்யன்ஆகும்*  புறமே தொழுவார்க்குஎல்லாம்*

    செய்யில்வாளைஉகளும்*  திருக்கண்ணபுரத்து 
    ஐயன்*  ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.


    அணியன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    பிணியும்சாரா*  பிறவிகெடுத்துஆளும்*

    மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்*  திருக்கண்ணரம் 
    பணிமின்*  நாளும் பரமேட்டிதன் பாதமே


    பாதம்நாளும்*  பணிய தணியும்பிணி* 
    ஏதம்சாரா*  எனக்கேல் இனிஎன்குறை?*

    வேதநாவர் விரும்பும்*  திருக்கண்ணபுரத்து 
    ஆதியானை*  அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.  


    இல்லை அல்லல்*  எனக்கேல்இனி என்குறை? 
    அல்லிமாதர் அமரும்*  திருமார்பினன்*

    கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    சொல்ல*  நாளும் துயர் பாடுசாராவே.   


    பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
    மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)


    தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
    நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*

    தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
    காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)


    இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்*  ஈன்தண் துழாயின்* 
    அலங்கலங்கண்ணி*  ஆயிரம் பேர்உடை அம்மான்*

    நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்*  திருமோகூர்* 
    நலங்கழல் அவன் அடிநிழல்*  தடமன்றி யாமே. 


    அன்றியாம் ஒரு புகலிடம்*  இலம் என்றுஎன்று அலற்றி* 
    நின்று நான்முகன் அரனொடு*  தேவர்கள் நாட*

    வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்*  திருமோகூர்* 
    நன்று நாம் இனி நணுகுதும்*  நமதுஇடர் கெடவே.  


    இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்*  என்றுஎன்று ஏத்தி* 
    சுடர்கொள் சோதியைத்*  தேவரும் முனிவரும் தொடர*

    படர்கொள் பாம்பணைப்*  பள்ளிகொள்வான் திருமோகூர்* 
    இடர் கெடவடி பரவுதும்*  தொண்டீர்! வம்மினே.  


    தொண்டீர்! வம்மின்*  நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்* 
    அண்டம் மூவுலகு அளந்தவன்*  அணி திருமோகூர்*

    எண் திசையும் ஈன்கரும்பொடு*  பெரும்செந்நெல் விளையக்* 
    கொண்ட கோயிலை வலஞ்செய்து*  இங்கு ஆடுதும் கூத்தே.


    கூத்தன் கோவலன்*  குதற்று வல்லசுரர்கள் கூற்றம்* 
    ஏத்தும் நங்கட்கும்*  அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*

    வாய்த்த தண்பணை வளவயல்சூழ்*  திருமோகூர்- 
    ஆத்தன்*  தாமரை அடிஅன்றி*  மற்றுஇலம் அரணே.        


    மற்றிலம் அரண்*  வான்பெரும் பாழ்தனி முதலாச்* 
    சுற்றும் நீர்படைத்து*  அதன்வழித் தொல்முனி முதலா*

    முற்றும் தேவரோடு*  உலகுசெய்வான் திருமோகூர்* 
    சுற்றிநாம் வலஞ்செய்ய*  நம் துயர்கெடும் கடிதே.


    துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து*  அடியவர் தொழுமின்* 
    உயர்கொள் சோலை*  ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*

    பெயர்கள் ஆயிரம்உடைய*  வல்லரக்கர் புக்குஅழுந்த* 
    தயரதன் பெற்ற*  மரகத மணித் தடத்தினையே.   


    மணித் தடத்தடி மலர்க்கண்கள்*  பவளச் செவ்வாய்* 
    அணிக்கொள் நால்தடம்தோள்*  தெய்வம் அசுரரை என்றும்*

    துணிக்கும் வல்அரட்டன்*  உறைபொழில் திருமோகூர்* 
    நணித்து நம்முடை நல்லரண்*  நாம் அடைந்தனமே.


    நாம்அடைந்த நல்அரண்*  நமக்குஎன்று நல்அமரர்* 
    தீமை செய்யும் வல்அசுரரை*  அஞ்சிச் சென்றுஅடைந்தால்*

    காமரூபம் கொண்டு*  எழுந்துஅளிப்பான் திருமோகூர்* 
    நாமமே நவின்று எண்ணுமின்*  ஏத்துமின் நமர்காள்! 


    ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
    கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*

    வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
    ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)


    கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
    கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

    விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
    தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)


    இன்றுபோய்ப் புகுதிராகில்*  எழுமையும் ஏதம்சாரா* 
    குன்றுநேர் மாடம்மாடே*  குருந்துசேர் செருந்திபுன்னை*

    மன்றலர் பொழில்*  அனந்தபுரநகர் மாயன்நாமம்*
    ஒன்றும்ஓர் ஆயிரமாம்*  உள்ளுவார்க்கு உம்பர்ஊரே


    ஊரும்புள் கொடியும் அஃதே*  உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்* 
    சேரும் தண்அனந்தபுரம்*  சிக்கெனப் புகுதிராகில்*

    தீரும்நோய் வினைகள்எல்லாம்*  திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* 
    பேரும் ஓர்ஆயிரத்துள்*  ஒன்றுநீர் பேசுமினே   


    பேசுமின் கூசம்இன்றி*  பெரியநீர் வேலைசூழ்ந்து* 
    வாசமே கமழும் சோலை*  வயலணிஅனந்தபுரம்*

    நேசம்செய்து உறைகின்றானை*  நெறிமையால் மலர்கள்தூவி* 
    பூசனை செய்கின்றார்கள்*  புண்ணியம் செய்தவாறே.   


    புண்ணியம் செய்து*  நல்ல புனலொடு மலர்கள்தூவி* 
    எண்ணுமின் எந்தைநாமம்*  இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*

    திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*  செறிபொழில் அனந்தபுரத்து* 
    அண்ணலார் கமலபாதம்*  அணுகுவார் அமரர்ஆவார் 


    அமரராய்த் திரிகின்றார்கட்கு*  ஆதிசேர் அனந்தபுரத்து* 
    அமரர்கோன் அர்ச்சிக்கின்று*  அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*

    நமர்களோ! சொல்லக்கேள்மின்*  நாமும்போய் நணுகவேண்டும்* 
    குமரனார் தாதை*  துன்பம் துடைத்த கோவிந்தனாரே


    துடைத்த கோவிந்தனாரே*  உலகுஉயிர் தேவும்மற்றும்* 
    படைத்த எம்பரமமூர்த்தி*  பாம்பணைப் பள்ளிகொண்டான்*

    மடைத்தலை வாளைபாயும்*  வயல்அணிஅனந்தபுரம்* 
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால்*  கடுவினை களையலாமே  


    கடுவினை களையலாகும்*  காமனைப் பயந்தகாளை* 
    இடவகை கொண்டதுஎன்பர்*  எழில்அணிஅனந்தபுரம்*

    படம்உடைஅரவில் பள்ளி*  பயின்றவன் பாதம்காண* 
    நடமினோ நமர்கள்உள்ளீர்!*  நாம் உமக்குஅறியச் சொன்னோம்.


    நாம் உமக்கு அறியச்சொன்ன*  நாள்களும் நணியஆன* 
    சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்*  செறிபொழில்அனந்தபுரம்*

    தூமநல் விரைமலர்கள்*  துவள்அற ஆய்ந்துகொண்டு* 
    வாமனன் அடிக்குஎன்று ஏத்த*  மாய்ந்துஅறும் வினைகள்தாமே.  


    மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்- 
    ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*

    சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல* 
    ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே. 


    அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
    கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*

    ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
    பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)


    வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!*   மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்* 
    காமரு குயில்களும் கூவும் ஆலோ!*  கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*

    ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு*  ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ* 
    தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!*   தகவிலை தகவிலையே நீ கண்ணா!    (2)


    தகவிலை தகவிலையே நீ கண்ணா!*   தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்* 
    சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்-   சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*

    அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு*   ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ* 
    மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்*   வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.


    வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*   வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்* 
    யாவரும் துணைஇல்லை யான் இருந்து*  உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*

    போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்*  பொருகயல் கண்இணை நீரும் நில்லா* 
    சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த*  இத் தொழுத்தையோம் தனிமை தானே.  


    தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-  துயரமும் நினைகிலை கோவிந்தா நின்- 
    தொழுத்தனில் பசுக்களையே விரும்பி*   துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*

    பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்*  பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு- 
    அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*


    பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*  பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!* 
    பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ*   பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*

    மணிமிகு மார்பினில் முல்லைப் போது*  என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து 
    அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*  அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்  


    அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*  ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்* 
    பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்  பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*

    வடித்தடம் கண்இணை நீரும் நில்லா*   மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே* 
    வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*  வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே. 


    வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு*  வெள்வளை மேகலை கழன்று வீழ*
    தூமலர்க் கண்இணை முத்தம் சோர*  துணைமுலை பயந்து என தோள்கள் வாட*

    மாமணி வண்ணா! உன்செங்கமல  வண்ண*  மெல் மலரடி நோவ நீபோய்* 
    ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு*  அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 


    அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று*  ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்* 
    கசிகையும் வேட்கையும் உள்கலந்து*  கலவியும் நலியும் என்கை கழியேல்*

    வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்*  கைகளும் பீதக உடையும் காட்டி* 
    ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ*  உகக்கும் நல்லவரொடும் உழிதராயே  


    உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்*  திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்- 
    வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்*  எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*

    மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு*  நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ* 
    அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*  அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!


    அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!*  அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ* 
    தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்- 

    உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று-  ஊடுற என்னுடை ஆவி வேமால்* 
    திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*  செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே! 


    செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு*  அத்திருவடி திருவடிமேல்*  பொருநல்- 
    சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்*  வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*

    மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*  அவனொடும் பிரிவதற்கு இரங்கி*  தையல்- 
    அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்-  உரைத்தன*  இவையும் பத்து அவற்றின் சார்வே.   (2)


    சார்வே தவநெறிக்குத்*  தாமோதரன் தாள்கள்* 
    கார்மேக வண்ணன்*  கமல நயனத்தன்*

    நீர்வானம் மண்எரி கால்ஆய்*  நின்ற நேமியான்* 
    பேர் வானவர்கள்*  பிதற்றும் பெருமையனே.   (2)


    பெருமையனே வானத்து இமையோர்க்கும்*  காண்டற்கு- 
    அருமையனே*  ஆகத்தணை யாதார்க்கு*  என்றும்-

    திருமெய் உறைகின்ற*  செங்கண்மால்*  நாளும்- 
    இருமை வினைகடிந்து*  இங்கு என்னைஆள்கின்றானே.


    ஆள்கின்றான் ஆழியான்*  ஆரால் குறைவுஉடையம்?* 
    மீள்கின்றதுஇல்லை*  பிறவித் துயர்கடிந்தோம்*

    வாள்கெண்டை ஒண்கண்*  மடப்பின்னை தன்கேள்வன்* 
    தாள்கண்டு கொண்டு*  என் தலைமேல் புனைந்தேனே. 


    தலைமேல் புனைந்தேன்*  சரணங்கள்*  ஆலின்- 
    இலைமேல் துயின்றான்*  இமையோர் வணங்க*

    மலைமேல்தான் நின்று*  என்மனத்துள் இருந்தானை* 
    நிலைபேர்க்கல்ஆகாமை*  நிச்சித்துஇருந்தேனே.


    நிச்சித்துஇருந்தேன்*  என்நெஞ்சம் கழியாமை* 
    கைச்சக்கரத்துஅண்ணல்*  கள்வம் பெரிதுஉடையன்*

    மெச்சப்படான் பிறர்க்கு*  மெய்போலும் பொய்வல்லன்* 
    நச்சப்படும் நமக்கு*  நாகத்து அணையானே.  


    நாகத்து அணையானை*  நாள்தோறும் ஞானத்தால்* 
    ஆகத்தணைப் பார்க்கு*  அருள்செய்யும் அம்மானை*

    மாகத்து இளமதியம்*  சேரும் சடையானைப்* 
    பாகத்து வைத்தான் தன்*  பாதம் பணிந்தேனே.


    பணிநெஞ்சே! நாளும்*  பரம பரம்பரனை* 
    பிணிஒன்றும் சாரா*  பிறவி கெடுத்துஆளும்*

    மணிநின்ற சோதி*  மதுசூதன் என்அம்மான்* 
    அணிநின்ற செம்பொன்*  அடல்ஆழி யானே. 


    ஆழியான் ஆழி*  அமரர்க்கும் அப்பாலான்* 
    ஊழியான் ஊழி படைத்தான்*  நிரைமேய்த்தான்*

    பாழிஅம் தோளால்*  வரைஎடுத்தான் பாதங்கள்* 
    வாழி என்நெஞ்சே!*  மறவாது வாழ்கண்டாய்.


    கண்டேன் கமல மலர்ப்பாதம்*  காண்டலுமே* 
    விண்டே ஒழிந்த*  வினையாயின எல்லாம்*

    தொண்டேசெய்து என்றும்*  தொழுது வழியொழுக* 
    பண்டே பரமன் பணித்த*  பணிவகையே.  


    வகையால் மனம்ஒன்றி*  மாதவனை*  நாளும்- 
    புகையால் விளக்கால்*  புதுமலரால் நீரால்*

    திசைதோறு அமரர்கள்*  சென்று இறைஞ்ச நின்ற* 
    தகையான் சரணம்*  தமர்கட்குஓர் பற்றே.


    பற்றுஎன்று பற்றி*  பரம பரம்பரனை* 
    மல் திண்தோள் மாலை*  வழுதி வளநாடன்*

    சொல் தொடைஅந்தாதி*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    கற்றார்க்கு ஓர்பற்றாகும்*  கண்ணன் கழல்இணையே.   (2)


    கண்ணன் கழல்இணை*  நண்ணும் மனம்உடையீர்*

    எண்ணும் திருநாமம்*  திண்ணம் நாரணமே.  (2)


    நாரணன் எம்மான்*  பாரணங்காளன்*

    வாரணம் தொலைத்த*  காரணன் தானே.  


    தானே உலகுஎல்லாம்*  தானே படைத்துஇடந்து*

    தானே உண்டுஉமிழ்ந்து*  தானே ஆள்வானே.


    ஆள்வான் ஆழிநீர்க்*  கோள்வாய் அரவுஅணையான்*

    தாள்வாய் மலர்இட்டு*  நாள்வாய் நாடீரே. 


    நாடீர் நாள்தோறும்*  வாடா மலர்கொண்டு*

    பாடீர் அவன்நாமம்*  வீடே பெறலாமே.   


    மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*

    பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)


    மாதவன் என்றுஎன்று*  ஓத வல்லீரேல்*

    தீதுஒன்றும் அடையா*  ஏதம் சாராவே.


    சாரா ஏதங்கள்*  நீரார் முகில்வண்ணன்*

    பேர் ஆர் ஓதுவார்*  ஆரார் அமரரே.


    அமரர்க்கு அரியானை*  தமர்கட்கு எளியானை*

    அமரத் தொழுவார்கட்கு*  அமரா வினைகளே.


    வினைவல் இருள்என்னும்*  முனைகள் வெருவிப்போம்*

    சுனை நல் மலர்இட்டு*  நினைமின் நெடியானே.


    நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

    நொடி ஆயிரத்துஇப்பத்து  அடியார்க்கு அருள்பேறே  (2) 


    அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
    அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*

    இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
    மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)


    வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
    கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*

    பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
    நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.


    நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி* 
    மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*

    விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே* 
    எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!


    என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து* 
    வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*

    மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்* 
    நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.


    வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே* 
    நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*

    தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை- 
    தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே 


    தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்* 
    நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*

    மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க* 
    கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே. 


    குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்* 
    திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*

    வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்* 
    விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.


    மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்* 
    கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*

    மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு* 
    எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே? 


    திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்* 
    திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*

    புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்* 
    இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே. 


    பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்* 
    அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*

    பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு* 
    வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.


    காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
    வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*

    பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)


    செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
    வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-

    நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
    நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 


    தானே ஆகி நிறைந்து*  எல்லாஉலகும் உயிரும் தானேஆய்* 
    தானே யான்என்பான்ஆகி*  தன்னைத் தானே துதித்து*  எனக்குத்-

    தேனே பாலே கன்னலே அமுதே*  திருமாலிருஞ்சோலைக்* 
    கோனே ஆகி நின்றொழிந்தான்*  என்னை முற்றும் உயிர்உண்டே.


    என்னை முற்றும் உயிர்உண்டு*  என் மாயஆக்கை இதனுள்புக்கு* 
    என்னை முற்றும் தானேஆய்*  நின்ற மாய அம்மான் சேர்*

    தென்நன் திருமாலிருஞ்சோலைத்*  திசைகை கூப்பிச் சேர்ந்தயான்* 
    இன்னும் போவேனே கொலோ!*  என்கொல் அம்மான் திருஅருளே?


    என்கொல் அம்மான் திருஅருள்கள்?*  உலகும் உயிரும் தானேயாய்*
    நன்கு என் உடலம் கைவிடான்*  ஞாலத்தூடே நடந்து உழக்கி*

    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற*  திருமாலிருஞ்சோலை* 
    நங்கள் குன்றம் கைவிடான்*  நண்ணா அசுரர் நலியவே.


    நண்ணா அசுரர் நலிவுஎய்த*  நல்ல அமரர் பொலிவுஎய்த* 
    எண்ணாதனகள் எண்ணும்*  நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*

    பண்ணார் பாடலின் கவிகள்*  யானாய்த் தன்னைத் தான்பாடி* 
    தென்னா என்னும் என்அம்மான்*  திருமாலிருஞ்சோலையானே.


    திருமாலிருஞ்சோலை யானேயாகி*  செழு மூவுலகும்*  தன்- 
    ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து*  ஊழி ஊழி தலையளிக்கும்*

    திருமால்என்னை ஆளும்மால்*  சிவனும் பிரமனும்காணாது* 
    அருமால் எய்தி அடிபரவ*  அருளை ஈந்த அம்மானே. 


    அருளை ஈ என்அம்மானே! என்னும்*  முக்கண் அம்மானும்* 
    தெருள்கொள் பிரமன்அம்மானும்*  தேவர் கோனும் தேவரும்*

    இருள்கள் கடியும் முனிவரும்*  ஏத்தும் அம்மான் திருமலை* 
    மருள்கள் கடியும் மணிமலை*  திருமாலிருஞ்சோலை மலையே.   


    திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
    திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*

    அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
    ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)


    ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்*  ஒருவன் உலகுஎல்லாம்* 
    ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து*  காத்து கெடுத்துஉழலும்*

    ஆழி வண்ணன் என்அம்மான்*  அம்தண் திருமாலிருஞ்சோலை* 
    வாழி மனமே! கைவிடேல்*  உடலும் உயிரும் மங்கஒட்டே. 


    மங்க ஒட்டு உன் மாமாயை*  திருமாலிருஞ்சோலைமேய* 
    நங்கள் கோனே! யானேநீஆகி*  என்னை அளித்தானே*

    பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்*  கருமேந்திரியம் ஐம்பூதம்* 
    இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி*  மான்ஆங்காரம் மனங்களே. 


    மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
    தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*

    தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
    மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)


    திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
    திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
    திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)


    பேரே உறைகின்ற பிரான்*  இன்று வந்து* 
    பேரேன்என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    கார்ஏழ் கடல்ஏழ்*  மலைஏழ் உலகு உண்டும்* 
    ஆராவயிற்றானை*  அடங்கப் பிடித்தேனே.


    பிடித்தேன் பிறவி கெடுத்தேன்*  பிணிசாரேன்* 
    மடித்தேன் மனைவாழ்க்கையுள்*  நிற்பதுஓர் மாயையை*

    கொடிக் கோபுரமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    அடிச்சேர்வது எனக்கு*  எளிதுஆயின வாறே.


    எளிதாயினவாறுஎன்று*  என்கண்கள் களிப்பக்* 
    களிதாகிய சிந்தையனாய்க்*  களிக்கின்றேன்*

    கிளிதாவிய சோலைகள்சூழ்*  திருப்பேரான்* 
    தெளிதாகிய*  சேண்விசும்பு தருவானே.


    வானே தருவான்*  எனக்காய் என்னோடுஒட்டி* 
    ஊன்ஏய் குரம்பை*  இதனுள் புகுந்து*  இன்று-

    தானே தடுமாற்ற*  வினைகள் தவிர்த்தான்* 
    தேனேய் பொழில்*  தென்திருப்பேர் நகரானே.


    திருப்பேர் நகரான்*  திருமாலிருஞ்சோலைப்* 
    பொருப்பே உறைகின்றபிரான்*  இன்றுவந்து*

    இருப்பேன் என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்* 
    விருப்பே பெற்று*  அமுதம்உண்டு களித்தேனே.  


    உண்டு களித்தேற்கு*  உம்பர்என் குறை*  மேலைத்- 
    தொண்டு உகளித்து*  அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*

    வண்டு களிக்கும் பொழில்சூழ்*  திருப்பேரான்* 
    கண்டு களிப்ப*  கண்ணுள்நின்று அகலானே.


    கண்ணுள் நின்று அகலான்*  கருத்தின்கண் பெரியன்* 
    எண்ணில்நுண் பொருள்*  ஏழ்இசையின் சுவைதானே*

    வண்ணநல் மணிமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    திண்ணம் என்மனத்துப்*  புகுந்தான் செறிந்துஇன்றே. 


    இன்று என்னைப் பொருளாக்கி*  தன்னை என்னுள் வைத்தான்* 
    அன்று என்னைப் புறம்போகப்*  புணர்த்தது என் செய்வான்?*

    குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    ஒன்று எனக்குஅருள்செய்ய*  உணர்த்தல்உற்றேனே. 


    உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
    பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*

    கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
    அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)


    நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
    நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*

    சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
    வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)


    சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
    ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*

    ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
    வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)


    நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
    பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*

    நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
    தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.


    தொழுதனர் உலகர்கள்*  தூபநல் மலர்மழை- 
    பொழிவனர்*  பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*

    எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்*  முனிவர்கள்* 
    வழிஇது வைகுந்தர்க்கு என்று*  வந்து எதிரே. 


    எதிர்எதிர் இமையவர்*  இருப்பிடம் வகுத்தனர்* 
    கதிரவர்அவரவர்*  கைந்நிரை காட்டினர்*

    அதிர்குரல் முரசங்கள்*  அலைகடல் முழக்குஒத்த* 
    மதுவிரி துழாய்முடி*  மாதவன் தமர்க்கே.


    மாதவன் தமர்என்று*  வாசலில் வானவர்* 
    போதுமின் எமதுஇடம்*  புகுதுக என்றலும்*

    கீதங்கள் பாடினர்*  கின்னரர் கெருடர்கள்* 
    வேதநல் வாயவர்*  வேள்விஉள் மடுத்தே.  


    வேள்விஉள் மடுத்தலும்*  விரைகமழ் நறும்புகை* 
    காளங்கள் வலம்புரி*  கலந்துஎங்கும் இசைத்தனர்*

    ஆள்மின்கள் வானகம்*  ஆழியான் தமர் என்று* 
    வாள்ஒண் கண்மடந்தையர்*  வாழ்த்தினர் மகிழ்ந்தே.


    மடந்தையர் வாழ்த்தலும்*  மருதரும் வசுக்களும்* 
    தொடர்ந்து எங்கும்*  தோத்திரம் சொல்லினர்*  தொடுகடல்-

    கிடந்த எம்கேசவன்*  கிளர்ஒளி மணிமுடி* 
    குடந்தை எம்கோவலன்*  குடிஅடி யார்க்கே


    குடிஅடியார் இவர்*  கோவிந்தன் தனக்குஎன்று* 
    முடிஉடை வானவர்*  முறைமுறை எதிர்கொள்ள*

    கொடிஅணி நெடுமதிள்*  கோபுரம் குறுகினர்* 
    வடிவுஉடை மாதவன்*  வைகுந்தம் புகவே.     


    வைகுந்தம் புகுதலும்*  வாசலில் வானவர்*  
    வைகுந்தன் தமர்எமர்*  எமதுஇடம் புகுதஎன்று*

    வைகுந்தத்து அமரரும்*  முனிவரும் வியந்தனர்* 
    வைகுந்தம் புகுவது*  மண்ணவர் விதியே.


    விதிவகை புகுந்தனர்என்று*  நல்வேதியர்* 
    பதியினில் பாங்கினில்*  பாதங்கள் கழுவினர்*

    நிதியும் நல்சுண்ணமும்*  நிறைகுட விளக்கமும்* 
    மதிமுக மடந்தையர்*  ஏந்தினர் வந்தே.


    வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
    அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*

    கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
    சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)


    முனியே! நான்முகனே!*  முக்கண்ணப்பா*  என்பொல்லாக்- 
    கனிவாய்த்*  தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*

    தனியேன்ஆர்உயிரே!*  என்தலை மிசையாய் வந்திட்டு* 
    இனிநான் போகல்ஒட்டேன்*  ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.   (2)


    மாயம்செய்யேல் என்னை*  உன்திருமார்வத்து மாலைநங்கை* 
    வாசம்செய் பூங்குழலாள்*  திருஆணை நின்ஆணை கண்டாய்*

    நேசம்செய்து உன்னோடு என்னை*  உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே* 
    கூசம்செய்யாது கொண்டாய்*  என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!


    கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!*  என்பொல்லாக் கருமாணிக்கமே!* 
    ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு*  நின்அலால் அறிகின்றி லேன்யான்*

    மேவித்தொழும் பிரமன் சிவன்*  இந்திரன் ஆதிக்குஎல்லாம்* 
    நாவிக் கமல முதல்கிழங்கே!*  உம்பர் அந்ததுவே.


    உம்பர்அம்தண் பாழேஓ!*  அதனுள்மிசை நீயேஓ* 
    அம்பரம் நல்சோதி!*  அதனுள் பிரமன் அரன் நீ*

    உம்பரும் யாதவரும் படைத்த*  முனிவன் அவன்நீ* 
    எம்பரம் சாதிக்கலுற்று*  என்னைப்போர விட்டிட்டாயே.  


    போரவிட்டிட்டு என்னை*  நீபுறம்போக்கலுற்றால்*  பின்னையான்- 
    ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!*  எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*

    தீர இரும்புஉண்ட நீரதுபோல*  என்ஆர்உயிரை- 
    ஆரப்பருக*  எனக்கு ஆராஅமுதுஆனாயே. 


    எனக்கு ஆராஅமுதாய்*  எனதுஆவியை இன்உயிரை* 
    மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்*  இனிஉண்டொழியாய்*

    புனக்காயாநிறத்த*  புண்டரீகக்கண் செங்கனிவாய்* 
    உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு*  அன்பா! என்அன்பேயோ!


    கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய*  என் அன்பேயோ* 
    நீலவரை இரண்டு பிறைகவ்வி*  நிமிர்ந்தது ஒப்ப*

    கோல வராகம்ஒன்றாய்*  நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்* 
    நீலக் கடல்கடைந்தாய்!*  உன்னைபெற்று இனிப் போக்குவனோ?  (2)


    பெற்றுஇனிப் போக்குவனோ*  உன்னை என் தனிப்பேருயிரை* 
    உற்ற இருவினையாய்*  உயிராய்ப் பயன் ஆவையாய்*

    முற்றஇம் மூவுலகும்*  பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு* 
    முற்றக் கரந்துஒளித்தாய்!*  என்முதல் தனிவித்தேயோ!


    முதல்தனி வித்தேயோ!*  முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்* 
    முதல்தனி உன்னைஉன்னை*  எனைநாள் வந்து கூடுவன்நான்?*

    முதல்தனி அங்கும்இங்கும்*  முழுமுற்றுறுவாழ் பாழாய்* 
    முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவிலீஓ!   


    சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவில் பெரும் பாழேயோ* 
    சூழ்ந்ததனில் பெரிய*  பரநல் மலர்ச்சோதீயோ*

    சூழ்ந்ததனில் பெரிய*  சுடர்ஞான இன்பமேயோ!*
    சூழ்ந்ததனில் பெரிய*  என் அவாஅறச் சூழ்ந்தாயே!   (2)


    அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 
    அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 
    அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)