பிரபந்த தனியன்கள்

அவிதிதவிஷயாந்தரச்சடாரே 
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக: 
அபிசகுணவஸாத் ததேகஸேஷீ 
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
 
இருகவிற்ப நேரிசை வெண்பா
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த, 
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள் 
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை 
ஆள்வார் அவரே யரண்.

   பாசுரங்கள்


    கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
    பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*


    நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
    அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 



    நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
    மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*


    தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
    பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*



    திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
    கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*


    பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
    உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*



    நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
    புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*


    அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
    தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

     



    நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
    நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*

    செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
    அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே


    இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
    நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *

    குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
    என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.


    கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *
    பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*

    எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 
    ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே


    அருள் கொண்டாடும்*  அடியவர் இன்புற*
    அருளினான்*  அவ் அரு மறையின் பொருள்*

    அருள்கொண்டு*  ஆயிரம் இன் தமிழ் பாடினான்* 
    அருள் கண்டீர்*  இவ் உலகினில் மிக்கதே


    மிக்க வேதியர்*  வேதத்தின் உட்பொருள்*
    நிற்கப் பாடி*  என் நெஞ்சுள் நிறுத்தினான்*

    தக்க சீர்ச்*  சடகோபன் என் நம்பிக்கு*  ஆட்- 
    புக்க காதல்*  அடிமைப் பயன் அன்றே?


    பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
    செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*

    குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
    முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 


    அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
    அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*

    அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
    நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)