பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்* 
    ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!* 

    உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்* 
    வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)    


    வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து*  வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து* 
    முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து*  முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா* 

    கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு*  கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி* 
    புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர்*  இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே.  


    மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு*  முப்போதும் உன் அடி வணங்கித்* 
    தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து*  வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே* 

    கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு*  கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி* 
    வித்தகன் வேங்கட வாணன் என்னும்*  விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே*  


    சுவரில் புராண! நின் பேர் எழுதிச்*  சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்* 
    கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்*  காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா* 

    அவரைப் பிராயம் தொடங்கி*  என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்* 
    துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்*  தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.   


    வானிடை வாழும் அவ் வானவர்க்கு*  மறையவர் வேள்வியில் வகுத்த அவி* 
    கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து*  கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப* 

    ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று*  உன்னித்து எழுந்த என் தட முலைகள்* 
    மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்*  வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!*             


    உருவு உடையார் இளையார்கள் நல்லார்*  ஓத்து வல்லார்களைக் கொண்டு*  வைகல்- 
    தெருவிடை எதிர்கொண்டு*  பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா* 

    கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்*  கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்* 
    திரு உடை முகத்தினிற் திருக் கண்களால்*  திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய்* 


    காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து*  கட்டி அரிசி அவல் அமைத்து* 
    வாய் உடை மறையவர் மந்திரத்தால்*  மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்* 

    தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்*  திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்* 
    சாய் உடை வயிறும் என் தட முலையும்*  தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே*  


    மாசு உடை உடம்பொடு தலை உலறி*  வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு* 
    தேசு உடைத் திறல் உடைக் காமதேவா!*  நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்* 

    பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்*  பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்* 
    கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும்*  இப்பேறு எனக்கு அருளு கண்டாய்*  


    தொழுது முப்போதும் உன் அடி வணங்கித்*  தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்* 
    பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே*  பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்* 

    அழுது அழுது அலமந்து அம்மா வழங்க*  ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்* 
    உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து*  ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே*  


    கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்*  கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற* 
    மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த*  மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று* 

    பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை* 
    விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்*  விண்ணவர் கோன் அடி நண்ணுவரே* (2) 


    நாமம் ஆயிரம் ஏத்த நின்ற*  நாராயணா நரனே*  உன்னை- 
    மாமி தன் மகன் ஆகப் பெற்றால்*  எமக்கு வாதை தவிருமே* 

    காமன் போதரு காலம் என்று*  பங்குனி நாள் கடை பாரித்தோம்* 
    தீமை செய்யும் சிரீதரா!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* (2)


    இன்று முற்றும் முதுகு நோவ*  இருந்திழைத்த இச்சிற்றிலை* 
    நன்றும் கண்ணுற நோக்கி*  நாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்* 

    அன்று பாலகனாகி*  ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய்!* 
    என்றும் உந்தனுக்கு எங்கள் மேல்*  இரக்கம் எழாதது எம் பாவமே*.


    குண்டு நீருறை கோளரீ!* மத யானை கோள் விடுத்தாய்!*
    உன்னைக் கண்டு மாலுறு வோங்களை*  கடைக்கண்களா இட்டு வாதியேல்* 

    வண்டல் நுண்மணல் தெள்ளி* யாம்வளைக் கைகளால் சிரமப்பட்டோம்* 
    தெண் திரைக்கடல் பள்ளியாய்!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே*


    பெய்யுமா முகில் போல் வண்ணா!*  உன்  த‌ன் பேச்சும் செய்கையும்* 
    எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ* 

    நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு*  உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்* 
    செய்யதாமரைக் கண்ணினாய்*  எங்கள் சிற்றில்வந்து சிதையேலே*


    வெள்ளை நுண்மணல் கொண்டு*  சிற்றில் விசித்திரப்பட*  வீதிவாய்த்- 
    தெள்ளிநாங்கள் இழைத்த கோலமழித்தியாகிலும், உன் த‌ன் மேல்* 

    உள்ள்ம் ஓடி உருகலல்லால்*  உரோடம் ஓன்று மிலோம் கண்டாய்* 
    கள்ளமாதவா! கேசவா!* உன் முகத்தன கண்கள் அல்லவே*


    முற்றிலாத பிள்ளைகளோம்*  முலை போந்திலா தோமை*  
    நாள்தோறூம் சிற்றில் மேலிட்டுக்கொண்டு*  நீசிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம்*

    அடலையடைத்து அரக்கர் குளங்களை*  முற்றவும் செற்று*  
    இலங்கையைப் பூசலாக்கிய சேவகா!*  எம்மை வாதியேல்* 


    பேத நன்கறிவார் களோடு இவை*  பேசினால் பெரிது இன்சுவை* 
    யாதும் ஓன்றறியாத பிள்ளைகளோமை*  நீ நலிந்து என் பயன்? 

    ஓதமா கடல் வண்ணா!*  உன் மணவாட்டி மாரொடு சூழறும்* 
    சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* 


    வட்டவாய்ச்சிறு தூதையோடு*  சிறுசுளகும் மணலுங்கொண்டு* 
    இட்டமா விளையாடு வோங்களைச்*  சிற்றிலீடழித் என் பயன்?* 

    தொட்டு தைத்து நலியேல் கண்டாய்*  சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்* 
    கட்டியும் கைத்தால் இன்னாமை*  அறிதியே கடல் வண்ணனே!*
     


    முற்றத்தூடு புகுந்து*  நின்முகங் காட்டிப் புன்முறுவல் செய்து* 
    சிற்றிலோடு எங்கள் சிந்தையும்*  சிதைக்கக் கடவையோ? கோவிந்தா* 

    முற்ற மண்ணிடம் தாவி*  விண்ணுற நீண்டளந்து கொண்டாய்* 
    எம்மைப்பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம் நின்றவர்  என் சொல்லார்?*


    சீதைவாய் அமுதம் உண்டாய்!*  எங்கள் சிற்றில் நீ சிதையேலென்று* 
    வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச்சொல்லை* 

    வேதவாய்த் தொழிலார்கள் வாழ்*  வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்* 
    கோதை வாய்த் தமிழ் வல்லவர்*  குறைவின்றி வைகுந்தம் சேர்வரே* (2) 


    கோழி யழைப்பதன் முன்னம்*  குடைந்து நீராடுவான் போந்தோம்* 
    ஆழியஞ் செல்வன் எழுந்தான்*  அரவணை மேல்பள்ளி கொண்டாய்* 

    ஏழைமை யாற்றவும் பட்டோம்*  இனி என்றும் பொய்கைக்கு வாரோம்* 
    தோழியும் நானும் தொழுதோம்*  துகிலைப் பணித்து அருளாயே* (2)


    இது என் புகுந்தது இங்கு அந்தோ!*  இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்* 
    மதுவின் துழாய் முடிமாலே!*  மாயனே! எங்கள் அமுதே* 

    விதி இன்மையால் அது மாட்டோம்*  வித்தகப் பிள்ளாய்! விரையேல்* 
    குதிகொண்டு அரவில் நடித்தாய்!*  குருந்திடைக் கூறை பணியாய்*       


    எல்லே ஈது என்ன இளமை*  எம் அனைமார் காணில் ஒட்டார்* 
    பொல்லாங்கு ஈது என்று கருதாய்*  பூங்குருந்து ஏறி இருத்தி* 

    வில்லால் இலங்கை அழித்தாய்!*  வேண்டியது எல்லாம் தருவோம்* 
    பல்லாரும் காணாமே போவோம்*  பட்டைப் பணித்தருளாயே*


    பரக்க விழித்து எங்கும் நோக்கிப்*  பலர் குடைந்து ஆடும் சுனையில்* 
    அரக்க நில்லா கண்ண நீர்கள்*  அலமருகின்றவா பாராய்* 

    இரக்கமேல் ஒன்றும் இலாதாய்!*  இலங்கை அழித்த பிரானே* 
    குரக்கஅரசு ஆவது அறிந்தோம்*  குருந்திடைக் கூறை பணியாய்* 


    காலைக் கதுவிடுகின்ற*  கயலொடு வாளை விரவி* 
    வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில்*   என்ன விளையாட்டோ?* 

    கோலச் சிற்றாடை பலவும் கொண்டு*  நீ ஏறியிராதே* 
    கோலம் கரிய பிரானே!*  குருந்திடைக் கூறை பணியாய்*            


    தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தாள்கள் எம் காலைக் கதுவ* 
    விடத் தேள் எறிந்தாலே போல*  வேதனை ஆற்றவும் பட்டோம்* 

    குடத்தை எடுத்து ஏறவிட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே* 
    படிற்றை எல்லாம் தவிர்ந்து*  எங்கள் பட்டைப் பணித்தருளாயே*         


    நீரிலே நின்று அயர்க்கின்றோம்*  நீதி-அல்லாதன செய்தாய்* 
    ஊரகம் சாலவும் சேய்த்தால்*  ஊழி எல்லாம் உணர்வானே!* 

    ஆர்வம் உனக்கே உடையோம்*  அம்மனைமார் காணில் ஒட்டார்* 
    போர விடாய் எங்கள் பட்டைப்*  பூங்குருந்து ஏறியிராதே. *    


    மாமிமார் மக்களே அல்லோம்*  மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்* 
    தூமலர்க் கண்கள் வளரத்*  தொல்லை இராத் துயில்வானே* 

    சேமமேல் அன்று இது சால*  சிக்கென நாம் இது சொன்னோம்* 
    கோமள ஆயர் கொழுந்தே!*  குருந்திடைக் கூறை பணியாய்*     


    கஞ்சன் வலைவைத்த அன்று*  காரிருள் எல்லிற் பிழைத்து* 
    நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்*  நின்ற இக் கன்னியரோமை* 
     

    அஞ்ச உரப்பாள் அசோதை*  ஆணாட விட்டிட்டு இருக்கும்* 
    வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட*  மசிமையிலீ! கூறை தாராய்*.  


    கன்னியரோடு எங்கள் நம்பி*  கரிய பிரான் விளையாட்டைப்* 
    பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த*  புதுவையர்கோன் பட்டன் கோதை* 

    இன்னிசையால் சொன்ன மாலை*  ஈரைந்தும் வல்லவர் தாம் போய்* 
    மன்னிய மாதவனோடு*  வைகுந்தம் புக்கு இருப்பாரே*. (2)       


    தெள்ளியார் பலர்* கைதொழும் தேவனார்* 
    வள்ளல்*  மாலிருஞ்சோலை மணாளனார்* 

    பள்ளி கொள்ளும் இடத்து*  அடி கொட்டிடக்* 
    கொள்ளுமாகில்*  நீ கூடிடு கூடலே!*  (2)       


    காட்டில் வேங்கடம்*  கண்ணபுர நகர்* 
    வாட்டம் இன்றி*  மகிழ்ந்து உறை வாமனன்* 

    ஓட்டரா வந்து*  என் கைப் பற்றித் தன்னொடும்* 
    கூட்டு மாகில்*  நீ கூடிடு கூடலே!* (2)


    பூ மகன் புகழ் வானவர்* போற்றுதற்கு* 
    ஆமகன் அணி வாணுதல்* தேவகி* 

    மா மகன் மிகு சீர்*  வசுதேவர்தம்* 
    கோமகன் வரில்*  கூடிடு கூடலே!*   


    ஆய்ச்சிமார்களும்*  ஆயரும் அஞ்சிட* 
    பூத்த நீள்*  கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து* 

    வாய்த்த காளியன்மேல்*  நடம் ஆடிய* 
    கூத்தனார்*  வரில் கூடிடு கூடலே*       


    மாட மாளிகை சூழ்*  மதுரைப் பதி* 
    நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு* 

    ஓடை மா*  மத யானை உதைத்தவன்* 
    கூடுமாகில்* நீ கூடிடு கூடலே!*    


    அற்றவன்*  மருதம் முறிய நடை- 
    கற்றவன்*  கஞ்சனை வஞ்சனையிற்* 

    செற்றவன் திகழும்*  மதுரைப் பதிக்* 
    கொற்றவன் வரில்*  கூடிடு கூடலே!* 


    அன்று இன்னாதன செய்*  சிசுபாலனும்* 
    நின்ற நீள்*  மருதும் எருதும் புள்ளும்* 

    வென்றி வேல் விறல்*  கஞ்சனும் வீழ*  
    முன் கொன்றவன் வரில்*  கூடிடு கூடலே!*   


    ஆவல் அன்பு உடையார்*  தம் மனத்து அன்றி- 
    மேவலன் விரை சூழ்*  துவராபதிக்- 

    காவலன்,கன்று மேய்த்து விளையாடும்* 
    கோவலன்வரில்*  கூடிடு கூடலே!*

     



    கொண்ட கோலக்*  குறள் உருவாய்ச் சென்று* 
    பண்டு மாவலிதன்*  பெரு வேள்வியில்* 

    அண்டமும் நிலனும்*  அடி ஒன்றினால்* 
    கொண்டவன் வரில்*  கூடிடு கூடலே!*             
     


    பழகு நான்மறையின் பொருளாய்*  மதம் 
    ஒழுகு வாரணம்*  உய்ய அளித்த*  எம் 

    அழகனார்*  அணி ஆய்ச்சியர் சிந்தையுள்* 
    குழகனார் வரில்*  கூடிடு கூடலே!*   


    ஊடல் கூடல்*  உணர்தல் புணர்தலை* 
    நீடு நின்ற*  நிறை புகழ் ஆய்ச்சியர்* 

    கூடலைக்*  குழற் கோதை முன் கூறிய* 
    பாடல் பத்தும் வல்லார்க்கு*  இல்லை பாவமே* (2)          


    மன்னு பெரும்புகழ் மாதவன்*  மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை 
    உகந்தது காரண மாக*  என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே?* 

    புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்*  பொதும்பினில் வாழும் குயிலே!* 
    பன்னி எப்போதும் இருந்து விரைந்து*  என் பவளவாயன் வரக் கூவாய்*. (2)   


    வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட*  விமலன் எனக்கு உருக்காட்டான்* 
    உள்ளம் புகுந்து என்னை நைவித்து*  நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்* 

    கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்*  களித்து இசை பாடும் குயிலே* 
    மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது*  என் வேங்கடவன் வரக் கூவாய்*.      


    மாதலி தேர் முன்பு கோல்கொள்ள*  மாயன் இராவணன் மேல்*
    சரமாரி தாய்தலை அற்று அற்று வீழத்*  தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்* 

    போது அலர் காவிற் புதுமணம் நாறப்*  பொறி வண்டின் காமரம் கேட்டு* உன் 
    காதலியோடு உடன் வாழ்குயிலே!*  என் கருமாணிக்கம் வரக்கூவாய்*.     


    என்புருகி இனவேல் நெடுங்கண்கள்* இமை பொருந்தா பல நாளும்* 
    துன்பக்கடல் புக்குவைகுந்தன் என்பதோர்*  தோணி பெறாது உழல்கின்றேன், 

    அன்புடையாரைப் பிரிவுறு நோய்*  அது நீயும் அறிதி குயிலே* 
    பொன்புரை மேனிக்கருளக் கொடியுடை*  புண்ணியனை வரக்கூவாய்*.


    மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்*  வில்லிபுத்தூர் உறைவான் தன்* 
    பொன்னடி காண்பதோர் ஆசையினால்*   என் பொ ருகயற் கண்ணிணை துஞ்சா* 

    இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் கோலக்கிளியை* 
    உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!*  உலகளந்தான் வரக் கூவாய்*. (2)


    எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்*  இருடீகேசன் வலி செய்ய* 
    முத்தன்ன வெண்முறுவல் செய்யவாயும் முலையும்*  அழகழிந்தேன் நான்* 

    கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை*  கொள்ளும் இளங்குயிலே*
    என்  தத்துவனை வரக் கூகிற்றியாகில்*  தலையல்லால் கைம்மாறிலேனே!*.


    பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானை*  புணர்வதோர் ஆசையினால்*
    என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து*  ஆவியை ஆகுலம் செய்யும், அங்குயிலே!*

    உனக் கென்ன மறைந்துறைவு* ஆழியும் சங்கும் ஒண் தண்டும்* 
    தங்கிய கையவனை வரக்கூவில்*  நீ சாலத் தருமம் பெறுதி*. 


    சார்ங்கம் வளைய வலிக்கும்*  தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்* 
    நாங்கள் எம்மில் இருந்தொட்டி அகச்சங்கம்*  நானும்  அவனும்  அறிதும்* 

    தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்*  சிறுகுயிலே*
    திருமாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றியாகில்*  அவனை நான் செய்வன காணே!*


    பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர்*  பாசத்து  அகப் பட்டிருந்தேன்* 
    பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ்குயிலே!*  குறிக்கொண்டு இது நீ கேள், 

    சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்*  பொன்வளை கொண்டு தருதல்* 
    இங்குள்ள காவினில் வாழக் கருதில்*  இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்*.


    அன்றுலகம் அளந்தானை யுகந்தது*  அடிமைக் கணவன் வலி செய்ய* 
    தென்றலும் திங்களும் ஊடறுத்து*  என்னை நலியும் முறைமை அறியேன்* 

    என்றும் இக்காவில் இருந்திருந்து*  என்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே!* 
    இன்று நாராயணனை வரக் கூவாயேல்*  இங்குற்று நின்றும் துரப்பன்*. 


    விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை*  வேற் கண் மடந்தை விரும்பி* 
    கண்ணுற என்கடல் வண்ணனைக் கூவு*  கருங்குயிலே! என்ற மாற்றம்* 

    பண்ணுற நான்மறையோர் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் கோதை சொன்ன* 
    நண்ணுறு வாசக மாலை வல்லார்*  நமோ நாராயணாய வென்பாரே!* (2)


    வாரண மாயிரம்*  சூழ வலம் செய்து* 
    நாரண நம்பி*  நடக்கின்றான் என்றூ எதிர்* 

    பூரண பொற்குடம்*  வைத்துப் புறமெங்கும்* 
    தோரணம் நாட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்* (2)


    நாளை வதுவை*  மணமென்று நாளிட்டு* 
    பாளை கமுகு*  பரிசுடைப் பந்தற்கீழ்* 

    கோளரி மாதவன்*  கோவிந்தனென்பான் ஓர்* 
    காளை புகுத*  கனாக்கண்டேன் தோழீ! நான்*


    இந்திரன் உள்ளிட்ட*  தேவர் குழாமெல்லாம்* 
    வந்திருந்து  என்னை* மகட்பேசி மந்திரித்து* 

    மந்திரக்கோடி யுடுத்தி*  மணமாலை* 
    அந்தரி சூட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்*


    நால் திசைத் தீர்த்தம்*  கொணர்ந்து நனி நல்கி* 
    பார்ப்பனச் சிட்டர்கள்*  பல்லார் எடுத்து ஏத்தி* 

    பூப் புனை கண்ணிப்*  புனிதனோடு என்தன்னைக்* 
    காப்பு நாண் கட்டக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*  


    கதிர் ஒளித் தீபம்*  கலசம் உடன் ஏந்திச்* 
    சதிர் இள மங்கையர்*  தாம் வந்து எதிர்கொள்ள* 

    மதுரையார் மன்னன்*  அடிநிலை தொட்டு* 
    எங்கும் அதிரப் புகுதக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*       


    மத்தளம் கொட்ட*  வரி சங்கம் நின்று ஊத* 
    முத்து உடைத் தாமம்*  நிரை தாழ்ந்த பந்தற் கீழ்* 

    மைத்துனன் நம்பி*  மதுசூதன் வந்து* 
    என்னைக் கைத்தலம் பற்றக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*  


    வாய் நல்லார்*  நல்ல மறை ஓதி மந்திரத்தால்* 
    பாசிலை நாணல் படுத்துப்*  பரிதி வைத்து* 

    காய் சின மா களிறு*  அன்னான் என் கைப்பற்றி* 
    தீ வலஞ் செய்யக்*  கனாக் கண்டேன் தோழீ நான்*      


    இம்மைக்கும்*  ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்* 
    நம்மை உடையவன்*  நாராயணன் நம்பி* 

    செம்மை உடைய*  திருக்கையால் தாள் பற்றி* 
    அம்மி மிதிக்கக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*   


    வரிசிலை வாள் முகத்து*  என்னைமார் தாம் வந்திட்டு* 
    எரிமுகம் பாரித்து*  என்னை முன்னே நிறுத்தி* 

    அரிமுகன் அச்சுதன்*  கைம்மேல் என் கை வைத்துப்* 
    பொரிமுகந்து அட்டக்* கனாக் கண்டேன் தோழீ நான்*             


    குங்குமம் அப்பிக்*  குளிர் சாந்தம் மட்டித்து* 
    மங்கல வீதி*  வலஞ் செய்து மா மண நீர்* 

    அங்கு அவனோடும் உடன் சென்று*  அங்கு ஆனைமேல்* 
    மஞ்சனம் ஆட்டக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*     


    ஆயனுக்காகத்*  தான் கண்ட கனாவினை* 
    வேயர் புகழ்*  வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்* 

    தூய தமிழ்மாலை*  ஈரைந்தும் வல்லவர்* 
    வாயும் நன் மக்களைப் பெற்று*  மகிழ்வரே* (2)


    கருப்பூரம் நாறுமோ?* கமலப் பூ நாறுமோ* 
    திருப் பவளச் செவ்வாய்தான்*  தித்தித்திருக்குமோ* 

    மருப்பு ஒசித்த மாதவன் தன்*  வாய்ச்சுவையும் நாற்றமும்* 
    விருப்புற்றுக் கேட்கின்றேன்*  சொல் ஆழி வெண்சங்கே!* (2) 


    கடலிற் பிறந்து*  கருதாது*  பஞ்சசனன் 
    உடலில் வளர்ந்துபோய்*  ஊழியான் கைத்தலத்* 

    திடரிற் குடியேறி*  தீய அசுரர்* 
    நடலைப் பட முழங்கும்*  தோற்றத்தாய் நற் சங்கே!*    


    தட வரையின் மீதே*  சரற்கால சந்திரன்* 
    இடை உவாவில் வந்து*  எழுந்தாலே போல்*

    நீயும் வட மதுரையார் மன்னன்*  வாசுதேவன் கையில்* 
    குடியேறி வீற்றிருந்தாய்*  கோலப் பெருஞ் சங்கே!*


    சந்திர மண்டலம் போல்*  தாமோதரன் கையில்* 
    அந்தரம் ஒன்று இன்றி*  ஏறி அவன் செவியில்* 

    மந்திரம் கொள்வாயே போலும்*  வலம்புரியே* 
    இந்திரனும் உன்னோடு*  செல்வத்துக்கு ஏலானே*.      


    உன்னோடு உடனே*  ஒரு கடலில் வாழ்வாரை* 
    இன்னார் இனையார் என்று*  எண்ணுவார் இல்லை காண்* 

    மன் ஆகி நின்ற*  மதுசூதன் வாயமுதம்* 
    பன்னாளும் உண்கின்றாய்*  பாஞ்சசன்னியமே!*             


    போய்த் தீர்த்தம் ஆடாதே*  நின்ற புணர் மருதம்* 
    சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே*  ஏறிக் குடிகொண்டு* 

    சேய்த் தீர்த்தமாய் நின்ற*  செங்கண் மால்தன்னுடைய* 
    வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய்*  வலம்புரியே!*  


    செங்கமல நாள் மலர்மேல்*  தேன் நுகரும் அன்னம் போல்* 
    செங்கண் கருமேனி*  வாசுதேவனுடைய* 

    அங்கைத் தலம் ஏறி*  அன்ன-வசஞ் செய்யும்* 
    சங்கு-அரையா! உன் செல்வம்* சால அழகியதே!*    


    உண்பது சொல்லில்*  உலகு அளந்தான் வாயமுதம்* 
    கண்படை கொள்ளில்* கடல்வண்ணன் கைத்தலத்தே* 

    பெண் படையார் உன் மேல்*  பெரும் பூசல் சாற்றுகின்றார்* 
    பண் பல செய்கின்றாய்*  பாஞ்சசன்னியமே!*      


    பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பார்த்திருப்ப* 
    மது வாயிற் கொண்டாற்போல்*  மாதவன் தன் வாயமுதம்* 

    பொதுவாக உண்பதனைப்*  புக்கு நீ உண்டக்கால்* 
    சிதையாரோ உன்னோடு*  செல்வப் பெருஞ்சங்கே!*      


    பாஞ்சசன்னியத்தைப்*  பற்பநாபனோடும்* 
    வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய*  வண்புதுவை* 

    ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான்*  கோதை தமிழ் ஈரைந்தும்*
    ஆய்ந்து ஏத்த வல்லார்*  அவரும் அணுக்கரே*. (2)   


    விண் நீல மேலாப்பு*  விரித்தாற்போல் மேகங்காள்* 
    தெண் நீர் பாய் வேங்கடத்து*  என் திருமாலும் போந்தானே?* 

    கண்ணீர்கள் முலைக்குவட்டிற்*  துளி சோரச் சோர்வேனைப்* 
    பெண் நீர்மை ஈடழிக்கும்*  இது தமக்கு ஓர் பெருமையே?*  (2)   


    மா முத்தநிதி சொரியும்*  மா முகில்காள்*  வேங்கடத்துச் 
    சாமத்தின் நிறங்கொண்ட*  தாளாளன் வார்த்தை என்னே* 

    காமத்தீ உள்புகுந்து*  கதுவப்பட்டு இடைக் கங்குல்* 
    ஏமத்து ஓர் தென்றலுக்கு*  இங்கு இலக்காய் நான் இருப்பேனே*     


    ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
    எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 

    குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
    அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*        


    மின் ஆகத்து எழுகின்ற*  மேகங்காள்*  வேங்கடத்துத்- 
    தன் ஆகத் திருமங்கை*  தங்கிய சீர் மார்வற்கு* 

    என் ஆகத்து இளங்கொங்கை*  விரும்பித் தாம் நாள்தோறும்* 
    பொன் ஆகம் புல்குதற்கு என்*  புரிவுடைமை செப்புமினே*         


    வான் கொண்டு கிளர்ந்து எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்துத்- 
    தேன் கொண்ட மலர் சிதறத்*  திரண்டு ஏறிப் பொழிவீர்காள்* 

    ஊன் கொண்ட வள் உகிரால்*  இரணியனை உடல் இடந்தான்* 
    தான் கொண்ட சரிவளைகள்*  தருமாகிற் சாற்றுமினே*   


    சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த*  தண் முகில்காள்!*  மாவலியை- 
    நிலங் கொண்டான் வேங்கடத்தே*  நிரந்து ஏறிப் பொழிவீர்காள்* 

    உலங்கு உண்ட விளங்கனி போல்*  உள் மெலியப் புகுந்து* 
    என்னை நலங் கொண்ட நாரணற்கு*  என் நடலைநோய் செப்புமினே*       


    சங்க மா கடல் கடைந்தான்*  தண் முகில்காள்!* வேங்கடத்துச்- 
    செங்கண் மால் சேவடிக் கீழ்*  அடிவீழ்ச்சி விண்ணப்பம்* 

    கொங்கை மேல் குங்குமத்தின்*  குழம்பு அழியப் புகுந்து* 
    ஒருநாள் தங்குமேல் என் ஆவி*  தங்கும் என்று உரையீரே* (2)       


    கார் காலத்து எழுகின்ற*  கார்முகில்காள்!*  வேங்கடத்துப்- 
    போர் காலத்து எழுந்தருளிப்*  பொருதவனார் பேர் சொல்லி* 

    நீர் காலத்து எருக்கின்*  அம்பழ இலை போல் வீழ்வேனை* 
    வார் காலத்து ஒருநாள்*  தம் வாசகம் தந்தருளாரே *.     


    மத யானை போல் எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்தைப்- 
    பதியாக வாழ்வீர்காள்!*  பாம்பு அணையான் வார்த்தை என்னே* 

    கதி என்றும் தான் ஆவான்*  கருதாது*  ஓர் பெண்கொடியை-
    வதை செய்தான் என்னும் சொல்*  வையகத்தார் மதியாரே* (2)    


    நாகத்தின் அணையானை*  நன்னுதலாள் நயந்து உரை செய்* 
    மேகத்தை வேங்கடக்கோன்*  விடு தூதில் விண்ணப்பம்* 

    போகத்தில் வழுவாத*  புதுவையர்கோன் கோதை தமிழ்* 
    ஆகத்து வைத்து உரைப்பார் *  அவர் அடியார் ஆகுவரே* (2)


    சிந்துரச் செம்பொடிப் போல்*  திருமாலிருஞ்சோலை எங்கும்* 
    இந்திர கோபங்களே*  எழுந்தும் பரந்திட்டனவால்* 

    மந்தரம் நாட்டி அன்று*  மதுரக் கொழுஞ்சாறு கொண்ட* 
    சுந்தரத்தோளுடையான்*  சுழலையினின்று உய்துங் கொலோ!* (2)    


    போர்க்களிறு பொரும்*  மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்* 
    தார்க்கொடி முல்லைகளும்*  தவள நகை காட்டுகின்ற* 

    கார்க்கொள் பிடாக்கள் நின்று*  கழறிச் சிரிக்கத் தரியேன்* 
    ஆர்க்கு இடுகோ? தோழீ !*  அவன் தார் செய்த பூசலையே*. 


    கருவிளை ஒண்மலர்காள்!*  காயா மலர்காள்*  
    திருமால் உரு ஒளி காட்டுகின்றீர்*  எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்* 

    திரு விளையாடு திண் தோள்*  திருமாலிருஞ்சோலை நம்பி* 
    வரிவளை இற் புகுந்து*  வந்திபற்றும் வழக்கு உளதே*      


    பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்!*  ஒண் கருவிளைகாள்* 
    வம்பக் களங்கனிகாள்!*  வண்ணப் பூவை நறுமலர்காள்* 

    ஐம் பெரும் பாதகர்காள்!*  அணி மாலிருஞ்சோலை நின்ற* 
    எம்பெருமானுடைய நிறம்*  உங்களுக்கு என் செய்வதே?*   


    துங்க மலர்ப் பொழில் சூழ்*  திருமாலிருஞ்சோலை நின்ற* 
    செங்கண் கருமுகிலின்*  திருவுருப் போல்*  

    மலர்மேல் தொங்கிய வண்டினங்காள்!*  தொகு பூஞ்சுனைகாள்!* 
    சுனையிற் தங்கு செந்தாமரைகாள்!*  எனக்கு ஓர் சரண் சாற்றுமினே*       


    நாறு நறும் பொழில்*  மாலிருஞ்சோலை நம்பிக்கு*  நான்- 
    நூறு தடாவில் வெண்ணெய்*  வாய்நேர்ந்து பராவி வைத்தேன்* 

    நூறு தடா நிறைந்த*  அக்கார அடிசில் சொன்னேன்* 
    ஏறு திருவுடையான்*  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!* (2)        


    இன்று வந்து இத்தனையும்*  அமுது செய்திடப் பெறில்*  நான்- 
    ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்*  பின்னும் ஆளும் செய்வன்* 

    தென்றல் மணம் கமழும்*  திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் 
    அடியேன் மனத்தே*  வந்து நேர்படிலே*


    காலை எழுந்திருந்து*  கரிய குருவிக் கணங்கள்* 
    மாலின் வரவு சொல்லி*  மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ* 

    சோலைமலைப் பெருமான்*  துவாராபதி எம்பெருமான்* 
    ஆலின் இலைப் பெருமான்*  அவன் வார்த்தை உரைக்கின்றதே*.


    கோங்கு அலரும் பொழில்*  மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல்* 
    தூங்கு பொன் மாலைகளோடு*  உடனாய் நின்று தூங்குகின்றேன்* 

    பூங்கொள் திருமுகத்து*  மடுத்து ஊதிய சங்கு ஒலியும்* 
    சார்ங்க வில் நாண் ஒலியும்*  தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ!*       


    சந்தொடு காரகிலும் சுமந்து*  தடங்கள் பொருது* 
    வந்திழியும் சிலம்பாறு*  உடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனைச்*

    சுரும்பு ஆர் குழற் கோதை*  தொகுத்து உரைத்த* 
    செந்தமிழ் பத்தும் வல்லார்*  திருமாலடி சேர்வர்களே* (2)     


    கார்க்கோடற் பூக்காள்!*  கார்க்கடல் வண்ணன் என்மேல்*  உம்மைப்- 
    போர்க் கோலம் செய்து*  போர விடுத்தவன் எங்கு உற்றான்?* 

    ஆர்க்கோ இனி நாம்*  பூசல் இடுவது?*  அணி துழாய்த்- 
    தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப்*  படைக்க வல்லேன் அந்தோ!*  (2)    


    மேல் தோன்றிப் பூக்காள்!*  மேல் உலகங்களின் மீது போய்* 
    மேல் தோன்றும் சோதி*  வேத முதல்வர் வலங்கையில்* 

    மேல் தோன்றும் ஆழியின்*  வெஞ்சுடர் போலச் சுடாது*  
    எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து*  வைத்துக்கொள்கிற்றிரே*.


    கோவை மணாட்டி!*  நீ உன் கொழுங்கனி கொண்டு*  எம்மை 
    ஆவி தொலைவியேல்*  வாயழகர்தம்மை அஞ்சுதும்* 

    பாவியேன் தோன்றிப்*  பாம்பு அணையார்க்கும் தம் பாம்புபோல்* 
    நாவும் இரண்டு உள ஆய்த்து*  நாணிலியேனுக்கே*        


    முல்லைப் பிராட்டி!*  நீ உன் முறுவல்கள் கொண்டு*  எம்மை-
    அல்லல் விளைவியேல்*  ஆழி நங்காய்! உன் அடைக்கலம்* 

    கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட*  குமரனார்- 
    சொல்லும் பொய்யானால்*  நானும் பிறந்தமை பொய் அன்றே*.    


    பாடும் குயில்காள்!*  ஈது என்ன பாடல்?* நல் வேங்கட- 
    நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால்*  வந்து பாடுமின்* 

    ஆடும் கருளக் கொடி உடையார்*  வந்து அருள்செய்து* 
    கூடுவராயிடில்*  கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே*


    கண மாமயில்காள்!*  கண்ணபிரான் திருக்கோலம் போன்று* 
    அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு*  அடி வீழ்கின்றேன்* 

    பணம் ஆடு அரவணைப்*  பற்பல காலமும் பள்ளிகொள்* 
    மணவாளர் நம்மை வைத்த பரிசு*  இது காண்மினே*             


    நடம் ஆடித் தோகை விரிக்கின்ற*  மா மயில்காள்*  
    உம்மை நடம் ஆட்டம் காணப்*  பாவியேன் நான் ஓர் முதல் இலேன்* 

    குடம் ஆடு கூத்தன்*  கோவிந்தன் கோமிறை செய்து* 
    எம்மை  உடை மாடு கொண்டான்*  உங்களுக்கு இனி ஒன்று போதுமே?*    


    மழையே! மழையே! மண் புறம் பூசி*  உள்ளாய் நின்று* 
    மெழுகு ஊற்றினாற் போல்*  ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற* 

    அழகப்பிரானார் தம்மை*  என் நெஞ்சத்து அகப்படத் தழுவ நின்று*
    என்னைத் ததைத்துக்கொண்டு*  ஊற்றவும் வல்லையே?*. 


    கடலே! கடலே! உன்னைக் கடைந்து*  கலக்கு உறுத்து* 
    உடலுள் புகுந்து*  நின்ற ஊறல் அறுத்தவற்கு*  

    என்னையும் உடலுள் புகுந்து*  நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு*  என்- 
    நடலைகள் எல்லாம்*  நாகணைக்கே சென்று உரைத்தியே?*    


    நல்ல என் தோழி!*  நாகணைமிசை நம்பரர்* 
    செல்வர் பெரியர்*  சிறு மானிடவர் நாம் செய்வதென்?* 

    வில்லி புதுவை*  விட்டுசித்தர் தங்கள் தேவரை* 
    வல்ல பரிசு வருவிப்பரேல்*  அது காண்டுமே*  (2) 


    தாம் உகக்கும் தம் கையிற்*  சங்கமே போலாவோ* 
    யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 

    தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
    ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  


    எழில் உடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
    குழல் அழகர் வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 

    எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
    என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே*


    பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
    அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 

    செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
    எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)


    மச்சு அணி மாட*  மதில் அரங்கர் வாமனனார்* 
    பச்சைப் பசுந் தேவர்*  தாம் பண்டு நீர் ஏற்ற* 

    பிச்சைக் குறையாகி*  என்னுடைய பெய்வளை மேல்* 
    இச்சை உடையரேல்*  இத் தெருவே போதாரே?*       


    பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
    எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 

    நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
    இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே*  


    கைப் பொருள்கள் முன்னமே*  கைக்கொண்டார்* 
    காவிரிநீர் செய்ப் புரள ஓடும்*  திருவரங்கச் செல்வனார்* 

    எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்*  எய்தாது*
    நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்*  என் மெய்ப்பொருளும் கொண்டாரே*.


    உண்ணாது உறங்காது*  ஒலிகடலை ஊடறுத்துப்* 
    பெண் ஆக்கை யாப்புண்டு*  தாம் உற்ற பேது எல்லாம்* 

    திண்ணார் மதில் சூழ்*  திருவரங்கச் செல்வனார்* 
    எண்ணாதே தம்முடைய*  நன்மைகளே எண்ணுவரே* 


    பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
    பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 

    தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
    பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)      


    கண்ணாலம் கோடித்துக்*  கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* 
    திண் ஆர்ந்து இருந்த*  சிசுபாலன் தேசு அழிந்து* 

    அண்ணாந்து இருக்கவே*  ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
    பெண்ணாளன் பேணும் ஊர்*  பேரும் அரங்கமே*.   


    செம்மை உடைய*  திருவரங்கர் தாம் பணித்த* 
    மெய்ம்மைப் பெரு வார்த்தை*  விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 

    தம்மை உகப்பாரைத்*  தாம் உகப்பர் என்னும் சொல்* 
    தம்மிடையே பொய்யானால்*  சாதிப்பார் ஆர் இனியே!* (2)   


    மற்று இருந்தீர்கட்கு அறியலாகா*  மாதவன் என்பது ஓர் அன்புதன்னை* 
    உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்*  ஊமையரோடு செவிடர் வார்த்தை* 

    பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்*  பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி* 
    மற் பொருந்தாமற் களம் அடைந்த*  மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்*. (2)   


    நாணி இனி ஓர் கருமம் இல்லை*  நால்அயலாரும் அறிந்தொழிந்தார்* 
    பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்* 

    மாணி உருவாய் உலகு அளந்த*  மாயனைக் காணிற் தலைமறியும்* 
    ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்*.   


    தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்*  தனிவழி போயினாள்!' என்னும்சொல்லு* 
    வந்த பின்னைப் பழி காப்பு அரிது*  மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்* 

    கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்*  குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற* 
    நந்தகோபாலன் கடைத்தலைக்கே*  நள்இருட்கண் என்னை உய்த்திடுமின்*  


    அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்*  அவன்முகத்து அன்றி விழியேன் என்று* 
    செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்*  சிறு மானிடவரைக் காணில் நாணும்* 

    கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர்*  கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா* 
    இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்*  யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்*.       


    ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது*  அம்மனைமீர்! துழதிப் படாதே* 
    கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்*  கைகண்ட யோகம் தடவத் தீரும்* 

    நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்*  காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து* 
    போர்க்களமாக நிருத்தம் செய்த*  பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்*.     


    கார்த் தண் முகிலும் கருவிளையும்*  காயா மலரும் கமலப் பூவும்* 
    ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு*  இருடீகேசன் பக்கல் போகே என்று* 

    வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து*  வேண்டு அடிசில் உண்ணும் போது*
    ஈது என்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்*  பத்தவிலோசனத்து உய்த்திடுமின்*.    


    வண்ணம் திரிவும் மனம்குழைவும்*  மானம் இலாமையும் வாய்வெளுப்பும்* 
    உண்ண லுறாமையும் உள்மெலிவும்*  ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்* 

    தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு*  சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்* 
    பண் அழியப் பலதேவன் வென்ற*  பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்*.        


    கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்*  காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்* 
    பற்றி உரலிடை யாப்பும் உண்டான்*  பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?* 

    கற்றன பேசி வசவு உணாதே*  காலிகள் உய்ய மழை தடுத்துக்* 
    கொற்றக் குடையாக ஏந்தி நின்ற*  கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்* 


    கூட்டில் இருந்து கிளி எப்போதும்*  கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* 
    ஊட்டக் கொடாது செறுப்பனாகில்*  உலகுஅளந்தான்! என்று உயரக் கூவும்* 

    நாட்டில் தலைப்பழி எய்தி*  உங்கள் நன்மை இழந்து தலையிடாதே* 
    சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்*  துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்*.    


    மன்னு மதுரை தொடக்கமாக*  வண் துவராபதிதன் அளவும்* 
    தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்*  தாழ்குழலாள் துணிந்த துணிவை* 

    பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை* 
    இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே*. (2)          


    கண்ணன் என்னும் கருந்தெய்வம்*  காட்சிப் பழகிக் கிடப்பேனைப்* 
    புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்*  புறம் நின்று அழகு பேசாதே* 

    பெண்ணின் வருத்தம் அறியாத*  பெருமான் அரையிற் பீதக- 
    வண்ண ஆடை கொண்டு*  என்னை வாட்டம் தணிய வீசீரே* (2)     


    பால் ஆலிலையில் துயில் கொண்ட*  பரமன் வலைப்பட்டு இருந்தேனை* 
    வேலால் துன்னம் பெய்தாற் போல்*  வேண்டிற்று எல்லாம் பேசாதே* 

    கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்*  குடந்தைக் கிடந்த குடம் ஆடி* 
    நீலார் தண்ணந் துழாய் கொண்டு*  என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே*     


    கஞ்சைக் காய்ந்த கருவில்லி*  கடைக்கண் என்னும் சிறைக்கோலால்* 
    நெஞ்சு ஊடுருவ வேவுண்டு*  நிலையும் தளர்ந்து நைவேனை* 

    அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்*  அவன் மார்வு அணிந்த வனமாலை* 
    வஞ்சியாதே தருமாகில்*  மார்விற் கொணர்ந்து புரட்டீரே* 


    ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்* 
    காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை* 

    ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய* 
    நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே* 


    அழிலும் தொழிலும் உருக் காட்டான்*  அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்* 
    தழுவி முழுசிப் புகுந்து என்னைச்*  சுற்றிச் சுழன்று போகானால்* 

    தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே*  நெடுமால் ஊதி வருகின்ற* 
    குழலின் தொளைவாய் நீர் கொண்டு*  குளிர முகத்துத் தடவீரே*      


    நடை ஒன்று இல்லா உலகத்து*  நந்தகோபன் மகன் என்னும்* 
    கொடிய கடிய திருமாலால்*  குளப்புக்கூறு கொளப்பட்டு* 

    புடையும் பெயரகில்லேன் நான்*  போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்* 
    பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்*  போகா உயிர் என் உடம்பையே*      


    வெற்றிக் கருளக் கொடியான்தன்*  மீமீது ஆடா உலகத்து* 
    வெற்ற வெறிதே பெற்ற தாய்*  வேம்பே ஆக வளர்த்தாளே* 

    குற்றம் அற்ற முலைதன்னைக்*  குமரன் கோலப் பணைத்தோளோடு* 
    அற்ற குற்றம் அவை தீர*  அணைய அமுக்கிக் கட்டீரே*  


    உள்ளே உருகி நைவேனை*  உளளோ இலளோ என்னாத* 
    கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்*  கோவர்த்தனனைக் கண்டக்கால்* 

    கொள்ளும் பயன் ஒன்று இல்லாத*  கொங்கைதன்னைக் கிழங்கோடும்* 
    அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்*  எறிந்து என் அழலைத் தீர்வேனே*.     


    கொம்மை முலைகள் இடர் தீரக்*  கோவிந்தற்கு ஓர் குற்றேவல்* 
    இம்மைப் பிறவி செய்யாதே*  இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?* 

    செம்மை உடைய திருமார்வில்*  சேர்த்தானேனும் ஒரு ஞான்று* 
    மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி*  விடைதான் தருமேல் மிக நன்றே*    


    அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை* 
    வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை* 

    வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்* 
    சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2)  


    பட்டி மேய்ந்து ஓர் காரேறு*  பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்* 
    இட்டீறு இட்டு விளையாடி*  இங்கே போதக் கண்டீரே?* 

    இட்டமான பசுக்களை*  இனிது மறித்து நீர் ஊட்டி* 
    விட்டுக் கொண்டு விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*. (2)


    அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்* 
    குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?* 

    கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை* 
    மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.          


    மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை* 
    ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?* 

    மேலால் பரந்த வெயில்காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்* 
    மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*      


    கார்த் தண் கமலக் கண் என்னும்*  நெடுங்கயிறு படுத்தி*
    என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 

    போர்த்த முத்தின் குப்பாயப்*  புகர் மால் யானைக் கன்றே போல்* 
    வேர்த்து நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*   


    மாதவன் என் மணியினை*  வலையிற் பிழைத்த பன்றி போல்* 
    ஏதும் ஒன்றும் கொளத் தாரா*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 

    பீதகஆடை உடை தாழ*  பெருங் கார்மேகக் கன்றே போல்* 
    வீதி ஆர வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)    


    தருமம் அறியாக் குறும்பனைத்*  தன் கைச் சார்ங்கம் அதுவே போல்* 
    புருவ வட்டம் அழகிய*  பொருத்தம் இலியைக் கண்டீரே?* 

    உருவு கரிதாய் முகம் சேய்தாய்*  உதயப் பருப்பதத்தின்மேல்* 
    விரியும் கதிரே போல்வானை*  விருந்தாவனத்தே கண்டோமே*            


    பொருத்தம் உடைய நம்பியைப்*  புறம்போல் உள்ளும் கரியானைக்* 
    கருத்தைப் பிழைத்து நின்ற*  அக் கரு மா முகிலைக் கண்டீரே?* 

    அருத்தித் தாரா கணங்களால்*  ஆரப் பெருகு வானம் போல்* 
    விருத்தம் பெரிதாய் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*     


    வெளிய சங்கு ஒன்று உடையானைப்*  பீதக ஆடை உடையானை* 
    அளி நன்கு உடைய திருமாலை*  ஆழியானைக் கண்டீரே?* 

    களி வண்டு எங்கும் கலந்தாற்போல்*  கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்* 
    மிளிர நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*       


    நாட்டைப் படை என்று அயன் முதலாத்*  தந்த நளிர் மா மலர் உந்தி* 
    வீட்டைப் பண்ணி விளையாடும்*  விமலன்தன்னைக் கண்டீரே?* 

    காட்டை நாடித் தேனுகனும்*  களிறும் புள்ளும் உடன் மடிய* 
    வேட்டையாடி வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)


    பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த*  பரமன்தன்னைப்* 
    பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதை சொல்* 

    மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்* 
    பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்*  பிரியாது என்றும் இருப்பாரே* (2)