பிரபந்த தனியன்கள்

தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர 
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர், 
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.
 
இருவிகற்ப நேரிசை வெண்பா
உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில் 
புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே 
வைத்தெடுத்த பக்கம் வலிது.

   பாசுரங்கள்


    பூநிலாய ஐந்துமாய்*  புனற்கண்நின்ற நான்குமாய்,* 
    தீநிலாய மூன்றுமாய்*  சிறந்த கால்இரண்டுமாய்,* 

    மீநிலாயது ஒன்றும்ஆகி*  வேறுவேறு தன்மையாய்,* 
    நீநிலாய வண்ணம்நின்னை*  யார்நினைக்க வல்லரே?* (2)


    ஆறும் ஆறும் ஆறுமாய்*  ஓர்ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,* 
    ஏறுசீர் இரண்டும்மூன்றும்*  ஏழும் ஆறும் எட்டுமாய்,*

    வேறு வேறு ஞானம்ஆகி*  மெய்யினோடு பொய்யுமாய்*, 
    ஊறொடுஓசை ஆயஐந்தும்*  ஆய ஆய மாயனே!  


    ஐந்தும்ஐந்தும் ஐந்தும்ஆகி*  அல்லவற்று உளாயுமாய்,* 
    ஐந்துமூன்றும் ஒன்றும்ஆகி*  நின்ற ஆதி தேவனே,* 

    ஐந்தும்ஐந்தும் ஐந்தும்ஆகி*  அந்தரத்துஅணைந்துநின்று,* 
    ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை*  யாவர்காண வல்லரே?*


    மூன்று முப்பதுஆறினோடு*  ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்,* 
    மூன்று மூர்த்தி ஆகிமூன்று*  மூன்றுமூன்று மூன்றுமாய்*,

    தோன்றுசோதி மூன்றுமாய்*  துளக்கம்இல் விளக்கமாய்*, 
    ஏன்றுஎன் ஆவியுள்புகுந்தது*  என்கொலோ? எம் ஈசனே!*


    நின்றுஇயங்கும் ஒன்றலா*  உருக்கள் தோறும் ஆவியாய்,* 
    ஒன்றி உள்கலந்துநின்ற*  நின்னதன்மை இன்னதுஎன்று,*

    என்றும்யார்க்கும் எண்இறந்த*  ஆதியாய்! நின்உந்திவாய்,* 
    அன்றுநான்முகற் பயந்த*  ஆதி தேவன் அல்லையே?*


    நாகம்ஏந்து மேருவெற்பை*  நாகம்ஏந்து மண்ணினை,* 
    நாகம்ஏந்தும் ஆகமாகம்*  மாகம்ஏந்து வார்புனல்,*

    மாகம்ஏந்து மங்குல் தீஓர்*  வாயுமைந்தும் ஐந்துகாத்து,* 
    ஏகம்ஏந்தி நின்றநீர்மை,*  நின்கணே இயன்றதே,*    


    ஒன்றுஇரண்டு மூர்த்தியாய்*  உறக்கமோடு உணர்ச்சியாய்,* 
    ஒன்றுஇரண்டு காலம்ஆகி*  வேலைஞாலம் ஆயினாய்,*

    ஒன்றுஇரண்டு தீயும்ஆகி*  ஆயன்ஆய மாயனே* 
    ஒன்றுஇரண்டு கண்ணினானும்*  உன்னைஏத்த வல்லனே?* 


    ஆதிஆன வானவர்க்கும்*  அண்டமாய அப்புறத்து,* 
    ஆதிஆன வானவர்க்கும்*  ஆதிஆன ஆதிநீ,*

    ஆதிஆன வானவாணர்*  அந்தகாலம் நீஉரைத்தி,* 
    ஆதிஆன காலம் நின்னை*  யாவர்காண வல்லரே?*


    தாதுஉலாவு கொன்றைமாலை* துன்னு செஞ்சடைச்சிவன்,* 
    நீதியால் வணங்கு பாத!*  நின்மலா! நிலாயசீர்* 

    வேதவாணர் கீதவேள்வி*  நீதியான கேள்வியார்,* 
    நீதியால் வணங்குகின்ற*  நீர்மை நின்கண் நின்றதே*


    தன்னுளே திரைத்துஎழும்*  தரங்க வெண் தடங்கடல்* 
    தன்னுளே திரைத்துஎழுந்து*  அடங்குகின்ற தன்மைபோல்,*

    நின்னுளே பிறந்துஇறந்து*  நிற்பவும் திரிபவும்,* 
    நின்னுளே அடங்குகின்ற*  நீர்மை நின்கண் நின்றதே,* (2)


    சொல்லினால் தொடர்ச்சிநீ*  சொலப்படும் பொருளும்நீ,* 
    சொல்லினால் சொலப்படாது*  தோன்றுகின்ற சோதிநீ,*

    சொல்லினால் படைக்க*  நீ படைக்கவந்து தோன்றினார்,* 
    சொல்லினால் சுருங்க*  நின் குணங்கள் சொல்ல வல்லரே?    


    உலகுதன்னை நீபடைத்தி*  உள்ஒடுக்கி வைத்தி,*  மீண்டு- 
    உலகு தன்னுளே பிறத்தி*  ஓரிடத்தை அல்லையால்*

    உலகு நின்னொடு ஒன்றிநிற்க*  வேறுநிற்றி ஆதலால்,* 
    உலகில்நின்னை உள்ளசூழல்*  யாவர் உள்ள வல்லரே?*  


    இன்னையென்று சொல்லலாவது*  இல்லையாதும் இட்டிடைப்*
    பின்னை கேள்வன் என்பர்  உன்*  பிணக்குணர்ந்த பெற்றியோர்*

    பின்னையாய கோலமோடு*  பேரும் ஊரும் ஆதியும்,*
    நின்னையார் நினைக்கவல்லர்*  நீர்மையால் நினைக்கிலே!*. 


    தூய்மை யோகமாயினாய்*  துழாயலங்கல் மாலையாய்,*
    ஆமையாகி ஆழ்கடல் துயின்ற*  ஆதி தேவ,*  நின்-

    நாமதேயம் இன்னதென்ன*  வல்லமல்ல மாகிலும்,*
    சாமவேத கீதனாய*  சக்ரபாணி யல்லையே?*


    அங்கமாறும் வேதநான்கும்*  ஆகிநின்ற அவற்றுளே,*
    தங்குகின்ற தன்மையாய்!*  தடங்கடல் பணத்தலை,*

    செங்கண் நாகணைக் கிடந்த*  செல்வமல்கு சீரினாய்,*
    சங்கவண்ணம் அன்னமேனி*  சார்ங்கபாணி யல்லையே?*.


    தலைக் கணத்துகள் குழம்பு*  சாதிசோதி தோற்றமாய்,* 
    நிலைக்கணங்கள் காணவந்து*  நிற்றியேலும் நீடிருங்*

    கலைக்கணங்கள் சொற்பொருள்*  கருத்தினால் நினைக்கொணா,* 
    மலைக்கணங்கள் போலுணர்த்தும்*  மாட்சி நின்தன் மாட்சியே,*.


    ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி*  நாலுமூர்த்தி நன்மைசேர்,*
    போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி*  எண்ணில் மூர்த்தியாய்*

    நாகமூர்த்தி சயனமாய்*  நலங்கடல் கிடந்து ,மேல்* 
    ஆகமூர்த்தி யாயவண்ணம்*  என்கொல்? ஆதி தேவனே!*.


    விடத்தவாய் ஓராயிரம்*  ஈராயிரம் கண் வெந்தழல்,* 
    விடத்து வீள்விலாத போகம்*  மிக்கசோதி தொக்கசீர்,*

    தொடுத்துமேல் விதானமாய*  பௌவநீர் அரவணை* 
    படுத்தபாயல் பள்ளிகொள்வது*  என்கொல் வேலை வண்ணணே!*.  


    புள்ளாதாகி வேதநான்கும்*  ஓதினாய் அதன்றியும்,* 
    புள்ளின் வாய்பிளந்து*  புட்கொடிப்பிடித்த பின்னரும்,*

    புள்ளையூர்தி யாதலால*  அதென்கொல் மின்கொள் நேமியாய்,!* 
    புள்ளின் மெய்ப்பகைக்கடல் கிடத்தல்*  காதலித்ததே.


    கூசமொன்றும் இன்றி*  மாசுணம்படுத்து வேலைநீர்,* 
    பேசநின்ற தேவர்வந்து*  பாட முன் கிடந்ததும்,*

    பாசம்நின்ற நீரில்வாழும்*  ஆமையான கேசவா,* 
    ஏச அன்று நீகிடந்தவாறு*  கூறு தேறவே,*


    அரங்கனே! .தரங்கநீர்*  கலங்க அன்று குன்றுசூழ்,* 
    மரங்கள் தேய மாநிலம் குலுங்க*  மாசுணம் சுலாய்,*

    நெருங்கநீ கடைந்தபோது*  நின்றசூரர் என்செய்தார்?* 
    குரங்கையாளுகந்த எந்தை!* . கூறுதேற வேறிதே.*


    பண்டும் இன்றும் மேலுமாய்*  ஓர் பாலனாகி ஞாலமேழும்,* 
    உண்டுமண்டி ஆலிலைத்  துயின்ற*  ஆதி தேவனே,!*

    வண்டுகிண்டு தண் துழாய்*  அலங்கலாய்!. கலந்தசீர்,* 
    புண்டரீக பாவைசேரும்*  மார்ப!பூமி நாதனே!*


    வால் நிறத்தொர் சீயமாய்*  வளைந்த வாளெயிற்றவன்,* 
    ஊன்நிறத்து உகிர்த்தலம்*  அழுத்தினாய். உலாயசீர்,*

    நால்நிறத்த வேதநாவர்*  நல்ல யோகினால் வணங்கு,* 
    பால்நிறக் கடல்கிடந்த*  பற்பநாபன் அல்லையே?*


    கங்கைநீர் பயந்தபாத*  பங்கயத்து எம் அண்ணலே,*
    அங்கையாழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்தினாய்,*

    சிங்கமாய தேவதேவ!*  தேனுலாவு மென்மலர்,*
    மங்கைமன்னி வாழுமார்ப!*. ஆழிமேனி மாயனே!


    வரத்தினில் சிரத்தைமிக்க*  வாளெயிற்று மற்றவன்,* 
    உரத்தினில் கரத்தைவைத்து*  உகிர்த்தலத்தை ஊன்றினாய்,*

    இரத்த நீ இதென்னபொய்?*  இரந்தமண் வயிற்றுளே- 
    கரத்தி,*  உன் கருத்தை*  யாவர் காணவல்லர் கண்ணனே! 


    ஆணினோடு பெண்ணும்ஆகி*  அல்லவோடு நல்லவாய்,* 
    ஊணொடுஓசை ஊறும்ஆகி*  ஒன்றுஅலாத மாயையாய்,* 

    பூணிபேணும் ஆயன்ஆகி*  பொய்யினோடு மெய்யுமாய்,* 
    காணிபேணும் மாணியாய்க்*  கரந்துசென்ற கள்வனே!  


    விண்கடந்த சோதியாய்*  விளங்கு ஞான மூர்த்தியாய்,* 
    பண்கடந்த தேசம்மேவு*  பாவநாச நாதனே,*

    எண்கடந்த யோகினோடு*  இரந்துசென்று மாணியாய்,* 
    மண்கடந்த வண்ணம்நின்னை*  யார்மதிக்க வல்லரே?


    படைத்தபார் இடந்துஅளந்து*  அதுஉண்டுஉமிழ்ந்து பௌவநீர்,* 
    படைத்துஅடைத்து அதிற்கிடந்து*  முன்கடைந்த பெற்றியோய்,*

    மிடைத்த மாலி மாலிமான்*  விலங்கு காலன்ஊர் புக,* 
    படைக்கலம் விடுத்த*  பல் படைத் தடக்கை மாயனே!  


    பரத்திலும் பரத்தைஆதி*  பௌவ நீர்அணைக்கிடந்து,* 
    உரத்திலும் ஒருத்திதன்னை*  வைத்துஉகந்து அதுஅன்றியும்,*

    நரத்திலும் பிறத்தி*  நாத ஞானமூர்த்தி ஆயினாய்,* 
    ஒருத்தரும் நினாதுதன்மை*  இன்னதுஎன்ன வல்லரே!


    வானகமும் மண்ணகமும்*  வெற்பும் ஏழ்கடல்களும்,* 
    போனகம்செய்து ஆலிலைத்*  துயின்ற புண்டரீகனே,*

    தேன்அகஞ்செய் தண்நறும்*  மலர்த்துழாய் நன் மாலையாய்,* 
    கூன்அகம் புகத்தெறித்த*  கொற்றவில்லி அல்லையே?


    காலநேமி காலனே!*  கணக்குஇலாத கீர்த்தியாய்,* 
    ஞாலம்ஏழும் உண்டுபண்டு ஒர்*  பாலன்ஆய பண்பனே,*

    வேலைவேவ வில்வளைத்த*  வெல்சினத்த வீர,*  நின்- 
    பாலர்ஆய பத்தர் சித்தம்*  முத்திசெய்யும் மூர்த்தியே!  


    குரக்கினப் படைகொடு*  குரைகடலின் மீதுபோய்* 
    அரக்கர் அங்குஅரங்க*  வெஞ்சரம் துரந்த ஆதிநீ,*

    இரக்க மண் கொடுத்தவற்கு*  இரக்கம் ஒன்றும்இன்றியே,* 
    பரக்கவைத்து அளந்துகொண்ட*  பற்பபாதன் அல்லையே? 


    மின்நிறத்து எயிற்றுஅரக்கன்*  வீழ வெஞ்சரம் துரந்து,* 
    பின்னவற்கு அருள்புரிந்து*  அரசுஅளித்த பெற்றியோய்,*

    நன்னிறத்துஒர் இன்சொல் ஏழை*  பின்னைகேள்வ! மன்னுசீர்,*
    பொன்நிறத்த வண்ணன்ஆய*  புண்டரீகன் அல்லையே? 


    ஆதிஆதி ஆதி நீ*  ஒர்அண்டம் ஆதி ஆதலால்,* 
    சோதியாத சோதிநீ*  அதுஉண்மையில் விளங்கினாய்,*

    வேதம்ஆகி வேள்விஆகி*  விண்ணினோடு மண்ணுமாய்* 
    ஆதிஆகி ஆயன்ஆய*  மாயம்என்ன மாயமே?


    அம்புஉலாவு மீனும்ஆகி*  ஆமைஆகி ஆழியார்,* 
    தம்பிரானும்ஆகி மிக்க அன்பு*  மிக்கு அதுஅன்றியும்*

    கொம்புஅராவு நுண்மருங்குல்*  ஆயர்மாதர் பிள்ளையாய்* 
    எம்பிரானும் ஆயவண்ணம்*  என்கொலோ? எம் ஈசனே! 


    ஆடகத்த பூண்முலை*  யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்* 
    சாடுஉதைத்து ஓர் புள்ளதுஆவி*  கள்ளதாய பேய்மகள்*

    வீடவைத்த வெய்யகொங்கை*  ஐயபால் அமுதுசெய்து,* 
    ஆடகக்கை மாதர் வாய்*  அமுதம் உண்டது என்கொலோ? 


    காய்த்த நீள் விளங்கனி*  உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்- 
    சாய்த்து,*  மா பிளந்த கைத்தலத்த*  கண்ணன் என்பரால்*

    ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு*  வெண்ணெய் உண்டு,* பின்- 
    பேய்ச்சி பாலை உண்டு*  பண்டுஓர் ஏனம்ஆய வாமனா!


    கடம்கலந்த வன்கரி*  மருப்புஒசித்து ஒர் பொய்கைவாய்,* 
    விடம்கலந்த பாம்பின்மேல்*  நடம்பயின்ற நாதனே*

    குடம்கலந்த கூத்தன்ஆய*  கொண்டல்வண்ண! தண்துழாய்,* 
    வடம்கலந்த மாலைமார்ப!*  காலநேமி காலனே!


    வெற்புஎடுத்து வேலைநீர்*  கலக்கினாய் அதுஅன்றியும்,* 
    வெற்புஎடுத்து வேலைநீர்*  வரம்புகட்டி வேலை சூழ்,*

    வெற்புஎடுத்த இஞ்சிசூழ்*  இலங்கை கட்டழித்த நீ,* 
    வெற்புஎடுத்து மாரிகாத்த*  மேக வண்ணன் அல்லையே!    


    ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று*  அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,* 
    ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி*  அன்று குன்றம் ஒன்றினால்,*

    ஆனைகாத்து மைஅரிக்கண்*  மாதரார் திறத்து, முன்* 
    ஆனைஅன்று சென்றுஅடர்த்த*  மாயம் என்ன மாயமே?  


    ஆயன்ஆகி ஆயர்மங்கை*  வேய தோள் விரும்பினாய்,* 
    ஆய! நின்னை யாவர்வல்லர்*  அம்பரத்தொடு இம்பராய்,*

    மாய! மாய மாயைகொல்*  அதுஅன்றி நீ வகுத்தலும்,* 
    மாயமாயம் ஆக்கினாய்*  உன் மாயம்முற்றும் மாயமே.


    வேறுஇசைந்த செக்கர்மேனி*  நீறுஅணிந்த புன்சடை,* 
    கீறுதிங்கள் வைத்தவன்*  கை வைத்தவன் கபால்மிசை,*

    ஊறு செங்குருதியால்*  நிறைத்த காரணந்தனை* 
    ஏறு சென்று அடர்த்த ஈச!*  பேசு கூசம்இன்றியே.


    வெஞ்சினத்த வேழவெண்*  மருப்புஒசித்து உருத்தமா,* 
    கஞ்சனைக் கடிந்து*  மண்அளந்துகொண்ட காலனே,*

    வஞ்சனத்து வந்த பேய்ச்சி*  ஆவி பாலுள் வாங்கினாய்,* 
    அஞ்சனத்த வண்ணன்ஆய*  ஆதிதேவன் அல்லையே?


    பாலின்நீர்மை செம்பொன்நீர்மை*  பாசியின் பசும்புறம்,* 
    போலும் நீர்மை பொற்புஉடைத்தடத்து*  வண்டு விண்டுஉலாம்,*

    நீலநீர்மை என்றுஇவை*  நிறைந்த காலம் நான்குமாய்,* 
    மாலின் நீர்மை வையகம்*  மறைத்தது என்ன நீர்மையே?


    மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்*  மண்ணுளே மயங்கி நின்று,* 
    எண்ணும்எண் அகப்படாய் கொல்*  என்ன மாயை, நின்தமர்*

    கண்ணுளாய்கொல் சேயைகொல்*  அனந்தன் மேல் கிடந்த எம்- 
    புண்ணியா,*  புனந்துழாய்*  அலங்கல்அம் புனிதனே!


    தோடுபெற்ற தண்துழாய்*  அலங்கல்ஆடு சென்னியாய்,* 
    கோடுபற்றி ஆழிஏந்தி*  அஞ்சிறைப் புள்ஊர்தியால்,* 

    நாடுபெற்ற நன்மைநண்ணம்*  இல்லையேனும் நாயினேன்,* 
    வீடு பெற்று இறப்பொடும்*  பிறப்புஅறுக்கு மோசொலே.


    காரொடுஒத்த மேனி நங்கள்*  கண்ண! விண்ணின் நாதனே,* 
    நீர்இடத்து அராவணைக்*  கிடத்திஎன்பர் அன்றியும்*

    ஓர்இடத்தை அல்லை எல்லை*  இல்லைஎன்பர் ஆதலால்,* 
    சேர்வுஇடத்தை நாயினேன்*  தெரிந்துஇறைஞ்சு மாசொலே.


    குன்றில்நின்று வான்இருந்து*  நீள்கடற் கிடந்து,*  மண்- 
    ஒன்றுசென்று அதுஒன்றைஉண்டு*  அதுஒன்றுஇடந்து பன்றியாய்,*

    நன்றுசென்ற நாளவற்றுள்*  நல்உயிர் படைத்து அவர்க்கு,* 
    அன்றுதேவு அமைத்துஅளித்த*  ஆதிதேவன் அல்லையே?


    கொண்டைகொண்ட கோதைமீது*  தேன்உலாவு கூனிகூன்,* 
    உண்டைகொண்டு அரங்கஓட்டி*  உள்மகிழ்ந்த நாதன்ஊர்,*

    நண்டைஉண்டு நாரைபேர*  வாளைபாய நீலமே,* 
    அண்டைகொண்டு கெண்டைமேயும்*  அந்தண்நீர் அரங்கமே. 


    வெண் திரைக் கருங்கடல்*  சிவந்துவேவ முன்ஒர்நாள்,* 
    திண் திறல் சிலைக்கைவாளி*  விட்டவீரர் சேரும்ஊர்,*

    எண் திசைக் கணங்களும்*  இறைஞ்சிஆடு தீர்த்தநீர்,* 
    வண்டுஇரைத்த சோலைவேலி*  மன்னுசீர் அரங்கமே.   


    சரங்களைத் துரந்து*  வில் வளைத்து இலங்கை மன்னவன்,* 
    சிரங்கள் பத்துஅறுத்து உதிர்த்த*  செல்வர் மன்னு பொன்இடம்,*

    பரந்து பொன்நிரந்துநுந்தி*  வந்துஅலைக்கும் வார்புனல்,* 
    அரங்கம்என்பர் நான்முகத்து அயன்பணிந்த*  கோயிலே.  


    பொற்றைஉற்ற முற்றல்யானை*  போர்எதிர்ந்து வந்ததைப்,* 
    பற்றிஉற்று மற்றதன்*  மருப்புஒசித்த பாகன்ஊர்,*

    சிற்றெயிற்று முற்றல்மூங்கில்*  மூன்று தண்டர் ஒன்றினர்,* 
    அற்றபற்றர் சுற்றிவாழும்*  அந்தண்நீர் அரங்கமே.  


    மோடியோடு இலச்சையாய*  சாபம்எய்தி முக்கணான்,* 
    கூடுசேனை மக்களோடு*  கொண்டுமண்டி வெஞ்சமத்து-

    ஓட*  வாணன் ஆயிரம்*  கரங்கழித்த ஆதிமால்,* 
    பீடுகோயில் கூடுநீர்*  அரங்கம்என்ற பேரதே.   


    இலைத்தலைச் சரம்துரந்து*  இலங்கை கட்டழித்தவன்,* 
    மலைத்தலைப் பிறந்துஇழிந்து*  வந்துநுந்து சந்தனம்,*

    குலைத்துஅலைத்து இறுத்துஎறிந்த*  குங்குமக் குழம்பினோடு,* 
    அலைத்துஒழுகு காவிரி*  அரங்கம்மேய அண்ணலே.


    மன்னு மாமலர்க் கிழத்தி*  வையமங்கை மைந்தனாய்,* 
    பின்னும் ஆயர் பின்னைதோள்*  மணம்புணர்ந்து அதுஅன்றியும்,*

    உன்னபாதம் என்ன சிந்தை*  மன்னவைத்து நல்கினாய்,* 
    பொன்னி சூழ் அரங்கம்மேய*  புண்டரீகன் அல்லையே?


    இலங்கை மன்னன் ஐந்தொடுஐந்து*  பைந்தலை நிலத்துக,* 
    கலங்க அன்று சென்றுகொன்று*  வென்றிகொண்ட வீரனே,*

    விலங்குநூலர் வேதநாவர்*  நீதியான கேள்வியார்,* 
    வலங்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே? 


    சங்குதங்கு முன் கை நங்கை*  கொங்கைதங்கல் உற்றவன்,* 
    அங்கம்மங்க அன்றுசென்று*  அடர்த்துஎறிந்த ஆழியான்,*

    கொங்குதங்கு வார்குழல்*  மடந்தைமார் குடைந்தநீர்,* 
    பொங்குதண் குடந்தையுள்*  கிடந்த புண்டரீகனே!   


    மரம்கெட நடந்துஅடர்த்து*  மத்தயானை மத்தகத்து,* 
    உரம்கெடப் புடைத்து*  ஒர் கொம்புஒசித்து உகந்த உத்தமா,*

    துரங்கம்வாய் பிளந்து*  மண்அளந்தபாத,*  வேதியர்- 
    வரம்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?


    சாலிவேலி தண்வயல்*  தடங்கிடங்கு பூம்பொழில்,* 
    கோலமாடம் நீடு*  தண் குடந்தை மேய கோவலா,*

    காலநேமி வக்கரன்*  கரன்முரன் சிரம் அவை,* 
    காலனோடு கூட*  விற்குனித்த வில்கை வீரனே!    


    செழுங்கொழும் பெரும்பனி பொழிந்திட,*  உயர்ந்தவேய்- 
    விழுந்துஉலர்ந்துஎழுந்து*  விண்புடைக்கும் வேங்கடத்துள்நின்று*

    எழுந்திருந்து தேன்பொருந்து*  பூம்பொழில் தழைக்கொழும்* 
    செழுந்தடங் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?  (2)


    நடந்தகால்கள் நொந்தவோ*  நடுங்க ஞாலம் ஏனமாய்,* 
    இடந்த மெய் குலுங்கவோ?*  இலங்கு மால் வரைச்சுரம்*

    கடந்த கால் பரந்த*  காவிரிக் கரைக் குடந்தையுள்,* 
    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு*  வாழி கேசனே!  (2)


    கரண்ட மாடு பொய்கையுள்*  கரும்பனைப் பெரும்பழம்,* 
    புரண்டு வீழ வாளைபாய்*  குறுங்குடி நெடுந்தகாய்,*

    திரண்ட தோள் இரணியன்*  சினங்கொள் ஆகம் ஒன்றையும்,* 
    இரண்டுகூறு செய்துகந்த*  சிங்கம் என்பது உன்னையே   (2)


    நன்றிருந்து யோகநீதி*  நண்ணுவார்கள் சிந்தையுள்,* 
    சென்றிருந்து தீவினைகள்*  தீர்த்ததேவ தேவனே,*

    குன்றிருந்த மாடநீடு*  பாடகத்து மூரகத்தும்,* 
    நின்றிருந்து வெஃகணைக்*  கிடந்ததென்ன நீர்மையே?


    நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
    அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*

    அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
    நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.


    நிற்பதும் ஊர் வெற்பகத்து*  இருப்பும் விண் கிடப்பதும்,* 
    நற் பெருந்திரைக் கடலுள்*  நானிலாத முன்னெலாம்,*

    அற்புதன் அனந்தசயனன்*  ஆதிபூதன் மாதவன்,* 
    நிற்பதும் இருப்பதும்*  கிடப்பதும் என் நெஞ்சுளே.


    இன்றுசாதல் நின்றுசாதல்*  அன்றியாரும் வையகத்து,* 
    ஒன்றிநின்று வாழ்தலின்மை*  கண்டும் நீசர் என்கொலோ,*

    அன்று பார அளந்தபாத*  போதை யுன்னி வானின்மேல்,* 
    சென்றுசென்று தேவராய்*  இருக்கிலாத வண்ணமே?


    சண்ட மண்டலத்தினூடு*  சென்றுவீடு பெற்றுமேல்,* 
    கண்டு வீடிலாத காதல்*  இன்பம் நாளும் எய்துவீர்,*

    புண்டரீக பாத*  புண்யகீர்த்தி நும்செவிமடுத்து* 
    உண்டு, நும் உறுவினைத்*  துயருள் நீங்கி உய்ம்மினோ.


    முத்திறத்து வாணியத்து* இரண்டிலொன்றும் நீசர்கள்,* 
    மத்தராய் மயங்குகின்றது*  இட்டதில் இறந்தபோந்து,*

    எத்திறத்தும் உய்வதோர்*  உபாயமில்லை உய்குறில்,* 
    தொத்துறத்த தண்டுழாய்*  நன்மாலை வாழ்த்தி வாழ்மினோ


    காணிலும் உருப்பொலார்*  செவிக்கினாத கீர்த்தியார்,* 
    பேணிலும் வரந்தரம்*  மிடுக்கிலாத தேவரை,*

    ஆணம் என்றடைந்து*  வாழும் ஆதர்காள்!எம் ஆதிபால்,* 
    பேணி நும் பிறப்பெனும்*  பிணக்கறுக்க கிற்றிரே. 


    குந்தமோடு சூலம்வேல்கள்*  தோமரங்கள் தண்டுவாள்,* 
    பந்தமான தேவர்கள்*  பரந்து வானகம் உற,*

    வந்தவாணம் ஈரைஞ்நூறு*  தோள்களைத் துணித்தநாள்,* 
    அந்தவந்த ஆகுலம*  அமரரே அறிவரே


    வண்டுலாவு கோதைமாதர்*  காரணத்தினால் வெகுண்டு* 
    இண்டவாணன் ஈரைஞ்_று*  தோள்களைத் துணித்தநாள்,* 

    முண்டன் நீறன் மக்கள்வெப்பு*  மோடி அங்கி ஓடிடக்,- 
    கண்டு,*  நாணி வாணனுக்கி இரங்கினான்*  எம் மாயனே


    போதில் மங்கை பூதலக்கிழத்தி*  தேவி அன்றியும்,* 
    போதுதங்கு நான்முகன்*  மகன் அவன் மகன் சொலில்*

    மாதுதங்கு கூறன்ஏற*   ஊர்தியென்று வேதநூல்,* 
    ஓதுகின்றது உண்மை அல்லது*  இல்லை மற்றுரைக்கிலே


    மரம்பொதச் சரந்துரந்து*  வாலிவீழ முன்னொர்நாள்,* 
    உரம்பொதச் சரந்துரந்த*  உம்பராளி எம்பிரான்,*

    வரம்குறிப்பில் வைத்தவர்க்கு*  அலாது வானம் ஆளிலும்,* 
    நிரம்புநீடு போகம் எத்திறத்ததும்*  யார்க்கும் இல்லையே.


    அறிந்தறிந்து வாமனன்*  அடியணை வணங்கினால்,*
    செறிந்தெழுந்த ஞானமோடு*  செல்வமும் சிறந்திடும்,*

    மறிந்தெழுந்த தெண்டிரையுள்*  மன்னுமாலை வாழ்த்தினால்,* 
    பறிந்தெழுந்து தீவினைகள்*  பற்றறுதல் பான்மையே..


    ஒன்றிநின்று நல்தவம்செய்து,*  ஊழியூழி தோறெலாம்,* 
    நின்றுநின்று அவன்குணங்கள்*  உள்ளியுள்ளம் தூயராய்,*

    சென்றுசென்று தேவதேவர்*  உம்பர் உம்பர் உம்பராய்,* 
    அன்றியெங்கள் செங்கண்மாலை*  யாவர்காண வல்லரே?


    புன்புல வழியடைத்து*  அரக்கிலச்சினை செய்து,* 
    நன்புல வழிதிறந்து*  ஞான நற்சுடர்கொளீஇ,*

    என்பிலெள்கி நெஞ்சுருகி*  உள்கனிந்து எழுந்ததோர்,* 
    அன்பிலன்றி ஆழியானை*  யாவர்காண வல்லரே?


    எட்டும் எட்டும் எட்டுமாய்*  ஒர்ஏழும் ஏழும் ஏழுமாய்,* 
    எட்டும்மூன்றும் ஒன்றும்ஆகி*  நின்ற ஆதி தேவனை,*

    எட்டின்ஆய பேதமோடு*  இறைஞ்சிநின்று அவன்பெயர்,* 
    எட்டுஎழுத்தும் ஓதுவார்கள்*  வல்லர் வானம் ஆளவே.


    சோர்வுஇலாத காதலால்*  தொடக்குஅறா மனத்தராய்,* 
    நீர்அராவணைக் கிடந்த*  நின்மலன் நலங்கழல்,* 

    ஆர்வமோடு இறைஞ்சிநின்று*  அவன்பேர் எட்டுஎழுத்துமே,* 
    வாரம்ஆக ஓதுவார்கள்*  வல்லர் வானம் ஆளவே.


    பத்தினோடு பத்துமாய்*  ஒர்ஏழினோடு ஒர்ஒன்பதாய்,* 
    பத்துநால் திசைக்கண் நின்ற*  நாடுபெற்ற நன்மையாய்,*

    பத்தின்ஆய தோற்றமோடு*  ஒர்ஆற்றல் மிக்க ஆதிபால்,* 
    பத்தராம் அவர்க்குஅலாது*  முத்தி முற்றல் ஆகுமே?  


    வாசிஆகி நேசம்இன்றி*  வந்துஎதிர்ந்த தேனுகன்,* 
    நாசம்ஆகி நாள்உலப்ப*  நன்மை சேர் பனங்கனிக்கு,*

    வீசி மேல் நிமிர்ந்ததோளின்*  இல்லைஆக்கினாய், கழற்கு* 
    ஆசைஆம் அவர்க்குஅலால்*  அமரர் ஆகல்ஆகுமே? 


    கடைந்த பாற்கடற் கிடந்து*  கால நேமியைக் கடிந்து,* 
    உடைந்தவாலி தன் தன்தனக்கு*  உதவ வந்து இராமனாய்,* 

    மிடைந்த ஏழ் மரங்களும்*  அடங்க எய்து வேங்கடம்* 
    அடைந்தமால பாதமே*  அடைந்து நாளும் உய்ம்மினோ


    எத்திறத்தும் ஒத்துநின்று*  உயர்ந்துஉயர்ந்த பெற்றியோய்,* 
    முத்திறத்து மூரிநீர்*  அராவணைத் துயின்ற,* நின்- 

    பத்துஉறுத்த சிந்தையோடு*  நின்றுபாசம் விட்டவர்க்கு,* 
    எத்திறத்தும் இன்பம் இங்கும்*  அங்கும் எங்கும் ஆகுமே. 


    மட்டுஉலாவு தண்துழாய்*  அலங்கலாய்! பொலன்கழல்,* 
    விட்டு வீழ்வுஇலாத போகம்*  விண்ணில் நண்ணி ஏறினும்,*

    எட்டினோடு இரண்டுஎனும்*  கயிற்றினால் மனந்தனைக்- 
    கட்டி,*  வீடுஇலாது வைத்த காதல்*  இன்பம் ஆகுமே. 


    பின்பிறக்க வைத்தனன் கொல்*  அன்றி நின்று தன்கழற்கு,* 
    அன்புஉறைக்க வைத்தநாள்*  அறிந்தனன் கொல் ஆழியான்,*

    தன்திறத்துஒர் அன்பிலா*  அறிவுஇலாத நாயினேன்,* 
    என்திறத்தில் என்கொல்*  எம்பிரான் குறிப்பில் வைத்ததே? 


    நச்சு அராஅணைக் கிடந்த*  நாத! பாத போதினில்,* 
    வைத்தசிந்தை வாங்குவித்து*  நீங்குவிக்க நீஇனம்,*

    மெய்த்தன் வல்லை ஆதலால்*  அறிந்தனன் நின் மாயமே,* 
    உய்த்து நின் மயக்கினில்*  மயக்கல் என்னை மாயனே! 


    சாடுசாடு பாதனே!*  சலம்கலந்த பொய்கைவாய்,* 
    ஆடுஅராவின் வன்பிடர்*  நடம் பயின்ற நாதனே,*

    கோடு நீடு கைய! செய்ய*  பாதம் நாளும் உள்ளினால்,* 
    வீடனாக மெய்செயாத*  வண்ணம்என்கொல்? கண்ணனே!


    நெற்றிபெற்ற கண்ணன் விண்ணின்*  நாதனோடு போதின் மேல்,* 
    நற்றவத்து நாதனோடு*  மற்றும்உள்ள வானவர்,*

    கற்ற பெற்றியால் வணங்கு*  பாத!நாத! வேத,* நின்- 
    பற்றுஅலால் ஒர் பற்று*  மற்றது உற்றிலேன் உரைக்கிலே. 


    வெள்ளைவேலை வெற்புநாட்டி*  வெள்எயிற்று அராவளாய்,* 
    அள்ளலாக் கடைந்த*  அன்று அருவரைக்கு ஓர்ஆமையாய்,*

    உள்ளநோய்கள் தீர்மருந்து*  வானவர்க்கு அளித்த,*  எம்- 
    வள்ளலாரை அன்றி*  மற்றுஒர் தெய்வம் நான் மதிப்பனே?


    பார் மிகுத்த பாரம் முன்*  ஒழிச்சுவான் அருச்சுனன்,* 
    தேர் மிகுத்து மாயம்ஆக்கி*  நின்றுகொன்று வென்றிசேர்,*

     

    மாரதர்க்கு வான்கொடுத்து*  வையம் ஐவர் பாலதாம்,* 
    சீர்மிகுத்த நின்அலால் ஒர்*  தெய்வம் நான் மதிப்பனே?

     



    குலங்களாய ஈரிரண்டில்*  ஒன்றிலும் பிறந்திலேன்,* 
    நலங்களாய நற்கலைகள்*  நாலிலும் நவின்றிலேன்,* 

    புலன்கள் ஐந்தும் வென்றிலேன்*  பொறியிலேன் புனித,* நின்- 
    இலங்கு பாதம் அன்றி*  மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே! 


    பண்உலாவு மென்மொழிப்*  படைத் தடங்கணாள் பொருட்டு* 
    எண்இலா அரக்கரை*  நெருப்பினால் நெருக்கினாய்,*

    கண்அலால் ஒர் கண்இலேன்*  கலந்த சுற்றம் மற்றுஇலேன்,* 
    எண்இலாத மாய!நின்னை*  என்னுள் நீக்கல் என்றுமே. 


    விடைக் குலங்கள் ஏழ்அடர்த்து*  வென்றிவேற்கண் மாதரார்,* 
    கடிக்கலந்த தோள்புணர்ந்த*  காலி ஆய! வேலைநீர்,*

    படைத்து அடைத்து அதில் கிடந்து*  முன்கடைந்த நின்தனக்கு,* 
    அடைக்கலம் புகுந்த என்னை*  அஞ்சல் என்ன வேண்டுமே.      


    சுரும்புஅரங்கு தண்துழாய்*  துதைந்துஅலர்ந்த பாதமே,* 
    விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு*  இரங்கு அரங்க வாணனே,*

    கரும்புஇருந்த கட்டியே!*  கடல்கிடந்த கண்ணனே,* 
    இரும்புஅரங்க வெஞ்சரம் துரந்த*  வில் இராமனே!  


    ஊனில் மேய ஆவி நீ*  உறக்கமோடு உணர்ச்சி நீ,* 
    ஆனில்மேய ஐந்தும் நீ*  அவற்றுள் நின்ற தூய்மை நீ,*

    வானினோடு மண்ணும் நீ*  வளங்கடற் பயனும் நீ,* 
    யானும் நீ அதுஅன்றி*  எம்பிரானும் நீ இராமனே!


    அடக்குஅரும் புலன்கள்*  ஐந்துஅடக்கி ஆசையாம் அவை,* 
    தொடக்குஅறுத்து வந்து நின்*  தொழிற்கண் நின்ற என்னைநீ,*

    விடக்கருதி மெய்செயாது*  மிக்குஒர் ஆசை ஆக்கிலும்,* 
    கடற்கிடந்த நின்அலால் ஒர்*  கண்ணிலேன் எம் அண்ணலே!


    வரம்புஇலாத மாய! மாய!*  வையம்ஏழும் மெய்ம்மையே,* 
    வரம்புஇல் ஊழி ஏத்திலும்*  வரம்புஇலாத கீர்த்தியாய்,*

    வரம்புஇலாத பல்பிறப்பு*  அறுத்துவந்து நின்கழல்,* 
    பொந்துமா திருந்த நீ*  வரம் செய் புண்டரீகனே!   


    வெய்யஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்து சீர்* 
    கைய செய்ய போதில் மாது*  சேரும் மார்ப நாதனே,*

    ஐயில்ஆய ஆக்கை நோய்*  அறுத்துவந்து நின்அடைந்து,* 
    உய்வதுஓர் உபாயம் நீ*  எனக்கு நல்க வேண்டுமே.   


    மறம் துறந்து வஞ்சம்மாற்றி*  ஐம்புலன்கள் ஆசையும்- 
    துறந்து,*  நின் கண் ஆசையே தொடர்ந்து*  நின்ற நாயினேன்,*

    பிறந்துஇறந்து பேர்இடர்ச்*  சுழிக்கணின்று நீங்குமா,* 
    மறந்திடாது மற்றுஎனக்கு*  மாய! நல்க வேண்டுமே


    காட்டி நான் செய்வல்வினைப்*  பயன் தனால் மனந்தனை,* 
    நாட்டிவைத்து நல்லஅல்ல*  செய்ய எண்ணினார்எனக்,*

    கேட்டதுஅன்றி என்னதுஆவி*  பின்னைகேள்வ! நின்னொடும்,* 
    பூட்டி வைத்த என்னை*  நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே! 


    பிறப்பினோடு பேர்இடர்ச்*  சுழிக்கண் நின்றும் நீங்கும்அஃது,* 
    இறப்ப வைத்த ஞான நீசரைக்*  கரைக் கொடுஏற்றுமா,* 

    பெறற்குஅரிய நின்னபாத*  பத்திஆன பாசனம்,* 
    பெறற்குஅரிய மாயனே!*  எனக்கு நல்க வேண்டுமே.  


    இரந்து உரைப்பது உண்டுவாழி*  ஏமநீர் நிறத்துஅமா,* 
    வரம் தரும் திருக்குறிப்பில்*  வைத்ததுஆகில் மன்னு சீர்,*

    பரந்த சிந்தை ஒன்றி நின்று*  நின்னபாத பங்கயம்,* 
    நிரந்தரம் நினைப்பதாக*  நீ நினைக்க வேண்டுமே  (2)


    விள்வுஇலாத காதலால்*  விளங்குபாத போதில்வைத்து,* 
    உள்ளுவேனது ஊனநோய்*  ஒழிக்குமா தெழிக்குநீர்ப்,*

    பள்ளிமாய பன்றிஆய*  வென்றிவீர குன்றினால்* 
    துள்ளுநீர் வரம்பு செய்த*  தோன்றல் ஒன்று சொல்லிடே.


    திருக்கலந்து சேரும்மார்ப!*  தேவதேவ தேவனே,* 
    இருக்கலந்த வேதநீதி*  ஆகி நின்ற நின்மலா,*

    கருக்கலந்த காளமேக*  மேனிஆய நின்பெயர்,* 
    உருக்கலந்து ஒழிவிலாது*  உரைக்குமாறு உரைசெயே.      


    கடுங்க வந்தன் வக்கரன்*  கரன் முரன் சிரம் அவை, 
    இடந்து கூறு செய்த*  பல்படைத் தடக்கை மாயனே,*

    கிடந்துஇருந்து நின்றுஇயங்கு*  போதும் நின்ன பொற்கழல்,* 
    தொடர்ந்து மீள்வுஇலாதது ஒர்*  தொடர்ச்சி நல்க வேண்டுமே.    


    மண்ணை உண்டுஉமிழ்ந்து*  பின் இரந்து கொண்டுஅளந்து,*  மண்- 
    கண்ணுள் அல்லதுஇல்லைஎன்று*  வென்ற காலம் ஆயினாய்,*

    பண்ணை வென்ற இன்சொல் மங்கை*  கொங்கை தங்கு பங்கயக்- 
    கண்ண,*  நின்ன வண்ணம் அல்லதுஇல்லை*  எண்ணும் வண்ணமே.    


    கறுத்துஎதிர்ந்த காலநேமி*  காலனோடு கூட அன்று,* 
    அறுத்த ஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்தினாய்,*

    தொறுக்கலந்த ஊனம்அஃது*  ஒழிக்க அன்று குன்றம்முன்,* 
    பொறுத்த நின் புகழ்க்குஅலால் ஒர்*  நேசம்இல்லை நெஞ்சமே!


    காய்சினத்த காசிமன்னன்*  வக்கரன் பவுண்டிரன்,* 
    மாசினத்த மாலிமான்*  சுமாலிகேசி தேனுகன்,* 

    நாசம்உற்று வீழநாள்*  கவர்ந்த நின் கழற்குஅலால்,* 
    நேசபாசம் எத்திறத்தும்*  வைத்திடேன் எம் ஈசனே! 


    கேடுஇல் சீர் வரத்தினாய்க்*  கெடும்வரத்து அயன் அரன், 
    நாடினோடு நாட்டம்ஆயிரத்தன்*  நாடு நண்ணினும்,* 

    வீடதுஆன போகம்எய்தி*  வீற்றிருந்த போதிலும்*, 
    கூடும்ஆசை அல்லதுஒன்று*  கொள்வனோ? குறிப்பிலே?  


    சுருக்குவாரை இன்றியே*  சுருங்கினாய் சுருங்கியும்,* 
    பெருக்குவாரை இன்றியே*  பெருக்கமெய்து பெற்றியோய்,*  

    செருக்குவார்கள் தீக்குணங்கள்*  தீர்த்ததேவ தேவன்என்று,* 
    இருக்குவாய் முனிக்கணங்கள்*  ஏத்த யானும் ஏத்தினேன்.  


    தூயனாயும் அன்றியும்*  சுரும்புஉலாவு தண்துழாய்,* 
    மாய!நின்னை நாயினேன்*  வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்,*

    நீயும் நின் குறிப்பினிற்*  பொறுத்து நல்கு வேலைநீர்* 
    பாயலோடு பத்தர்சித்தம்*  மேய வேலை வண்ணனே! 


    வைது நின்னை வல்லவா*  பழித்தவர்க்கும் மாறில்போர்* 
    செய்து நின்ன செற்றத் தீயில்*  வெந்தவர்க்கும் வந்து உனை*

    எய்தல்ஆகும் என்பர் ஆதலால்*  எம்மாய நாயினேன்,* 
    செய்தகுற்றம் நற்றமாக*  வேகொள் ஞால நாதனே!  


    வாள்கள்ஆகி நாள்கள் செல்ல*  நோய்மைகுன்றி மூப்புஎய்தி,* 
    மாளும்நாள் அதுஆதலால்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*

    ஆளதுஆகும் நன்மைஎன்று*  நன்குணர்ந்துஅது அன்றியும்,* 
    மீள்வுஇலாத போகம்*  நல்க வேண்டும் மால பாதமே.    


    சலம்கலந்த செஞ்சடைக்*  கறுத்தகண்டன் வெண்தலைப்* 
    புலன்கலங்க உண்ட பாதகத்தன்*  வன் துயர் கெட,*

    அலங்கல் மார்வில் வாச நீர்*  கொடுத்தவன் அடுத்தசீர்,* 
    நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம்*  எண்ணு வாழி நெஞ்சமே!


    ஈனமாய எட்டும் நீக்கி*  ஏதம்இன்றி மீதுபோய்,* 
    வானம்ஆள வல்லையேல்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*

    ஞானம்ஆகி ஞாயிறுஆகி*  ஞாலமுற்றும் ஓர்எயிற்று,* 
    ஏனமாய் இடந்த மூர்த்தி*  எந்தை பாதம் எண்ணியே. 


    அத்தன்ஆகி அன்னைஆகி*  ஆளும் எம் பிரானுமாய்,* 
    ஒத்துஒவ்வாத பல் பிறப்புஒழித்து*  நம்மை ஆட்கொள்வான்,*

    முத்தனார் முகுந்தனார்*  புகுந்து நம்முள் மேவினர்,* 
    எத்தினால் இடர்க் கடற்கிடத்தி*  ஏழை நெஞ்சமே!  (2)


    மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
    நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*

    வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
    கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  


    அச்சம் நோயொடு அல்லல்*  பல்பிறப்பு அவாய மூப்புஇவை,* 
    வைத்த சிந்தை வைத்த ஆக்கை*  மாற்றி வானில் ஏற்றுவான்,*

    அச்சுதன் அனந்த கீர்த்தி*  ஆதி அந்தம் இல்லவன்,* 
    நச்சு நாகனைக் கிடந்த*  நாதன் வேத கீதனே. 


    சொல்லினும் தொழிற்கணும்*  தொடக்குஅறாத அன்பினும்,* 
    அல்லும் நன்பகலினோடும்*  ஆன மாலை காலையும்,*

    அல்லி நாள்-மலர்க் கிழத்தி*  நாத!பாத போதினைப்,* 
    புல்லிஉள்ளம் விள்வுஇலாது*  பூண்டு மீண்டது இல்லையே.


    பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
    என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*

    உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
    மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)


    இயக்குஅறாத பல்பிறப்பில்*  என்னை மாற்றி இன்று வந்து,* 
    உயக்கொள் மேக வண்ணன் நண்ணி*  என்னிலாய தன்னுளே,*

    மயக்கினான் தன் மன்னுசோதி*  ஆதலால் என் ஆவிதான்,- 
    இயக்குஎலாம் அறுத்து*  அறாத இன்ப வீடு பெற்றதே  (2)