பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
    கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 

    ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
    நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)


    ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
    பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 

    தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
    என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  


    சேமமே வேண்டி தீவினை பெருக்கி*  தெரிவைமார் உருவமே மருவி* 
    ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்*  ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* 

    காமனார் தாதை நம்முடை அடிகள்*  தம் அடைந்தார் மனத்து இருப்பார்* 
    நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.


    வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல்கணார் கலவியே கருதி* 
    நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*

    பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
    நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். 


    கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்*  கண்டவா திரிதந்தேனேலும்* 
    தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்*  சிக்கெனத் திருவருள் பெற்றேன்* 

    உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்*  உடம்பு எலாம் கண்ண நீர் சோர* 
    நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்*  நாராயணா என்னும் நாமம்.       


    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
    அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 

    வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
    நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      


    இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்*  இன்னது ஓர் தன்மை என்று உணரீர்* 
    கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்*  கண்டவா தொண்டரைப் பாடும்* 

    சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*  சூழ் புனல் குடந்தையே தொழுமின்* 
    நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்*  நாராயணா என்னும் நாமம். 


    கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* 
    பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*

    செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி* 
    நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.


    குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 

    வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       


    மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
    செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை*  இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*

    துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்*  துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்* 
    நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு*  நாராயணா என்னும் நாமம் (2)          


    வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*
    அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்* 

    ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி* 
    பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)


    கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி* 
    இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து* 

    விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர* 
    பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்* 
    இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து 

    கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்* 
    பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து* 
    வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்* 

    இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்* 
    பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த* 
    அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து* 

    வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்* 
    பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று* 
    இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து* 

    மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்* 
    பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய*  கறி வளர் கொடி துன்னிப்* 
    போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய*  பூம் பொழில் இமயத்துள்* 

    ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து*  இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்* 
    பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!      


    இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர* 
    அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*

    பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்* 
    பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!  


    ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்* 
    ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*

    தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி* 
    பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
    களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 

    வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
    அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)


    முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
    இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 

    பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
    வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.


    முதுகு பற்றிக் கைத்தலத்தால்*  முன் ஒரு கோல் ஊன்றி* 
    விதிர் விதிர்த்து கண் சுழன்று*  மேல் கிளைகொண்டு இருமி* 

    இது என் அப்பர் மூத்த ஆறு என்று*  இளையவர் ஏசாமுன்* 
    மது உண் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.  


    உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து*  ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி* 
    நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று*  நடுங்காமுன்* 

    அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்*  ஆயிரம் நாமம் சொலி* 
    வெறி கொள் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.    


    பீளை சோரக் கண் இடுங்கி*  பித்து எழ மூத்து இருமி*
    தாள்கள் நோவத் தம்மில் முட்டி*  தள்ளி நடவாமுன்* 

    காளை ஆகி கன்று மேய்த்து*  குன்று எடுத்து அன்று நின்றான* 
    வாளை பாயும் தண் தடம் சூழ்*  வதரி வணங்குதுமே.


    பண்டு காமர் ஆன ஆறும்*  பாவையர் வாய் அமுதம்* 
    உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி* 

    தண்டு காலா ஊன்றி ஊன்றி*  தள்ளி நடவாமுன்* 
    வண்டு பாடும் தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி*  இருமி இளைத்து*
    உடலம்  பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்*  பேசி அயராமுன்* 

    அத்தன் எந்தை ஆதி மூர்த்தி*  ஆழ் கடலைக் கடைந்த* 
    மைத்த சோதி எம்பெருமான்*  வதரி வணங்குதுமே.    


    பப்ப அப்பர் மூத்த ஆறு*  பாழ்ப்பது சீத் திரளை* 
    ஒப்ப ஐக்கள் போத உந்த*  உன் தமர் காண்மின் என்று* 

    செப்பு நேர் மென் கொங்கை நல்லார்*  தாம் சிரியாத முன்னம்* 
    வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்*  வதரி வணங்குதுமே.            


    ஈசி போமின் ஈங்கு இரேல்மின்*  இருமி இளைத்தீர்* 
    உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்*  குவளை அம் கண்ணியர்பால்*

    நாசம் ஆன பாசம் விட்டு*  நல் நெறி நோக்கல் உறில்* 
    வாசம் மல்கு தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    புலன்கள் நைய மெய்யில் மூத்து*  போந்து இருந்து உள்ளம் எள்கி* 
    கலங்க ஐக்கள் போத உந்தி*  கண்ட பிதற்றாமுன்* 

    அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு*  ஆயிரம் நாமம் சொலி* 
    வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்*  வதரி வணங்குதுமே


    வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
    கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 

    கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
    அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 


    ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
    தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*

    தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
    வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   


    கானிடை உருவை சுடு சரம் துரந்து*  கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்* 
    ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப*  உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்* 

    தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்*  சென்று சென்று இறைஞ்சிட*
    பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.   


    இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
    அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 

    விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
    வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.       


    துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!*  தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்* 
    பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்*  பேர் அருளாளன் எம் பெருமான்* 

    அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்*  ஆரமும் வாரி வந்து*
    அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.        


    பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்*  பெரு முலை சுவைத்திட*
    பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட*  வளர்ந்த என் தலைவன்*

    சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த*  செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,* 
    வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே


    தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து*  ஒரு மறத் தொழில் புரிந்து* 
    பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த*  பனி முகில் வண்ணன் எம் பெருமான்

    காரணம் தன்னால் கடும் புனல் கயத்த*  கரு வரை பிளவு எழக் குத்தி* 
    வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.


    வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்*  விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்* 
    இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்*  எந்தை எம் அடிகள் எம் பெருமான்*

    அந்தரத்து அமரர் அடி இணை வணங்க*  ஆயிரம் முகத்தினால் அருளி* 
    மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  


    மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த*  மன்னவன் பொன் நிறத்து உரவோன்* 
    ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா*  உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்* 

    தான் முனிந்து இட்ட*  வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
    தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்*  குரை கடல் உலகு உடன் அனைத்தும்* 
    உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த*  உம்பரும் ஊழியும் ஆனான்* 

    அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து*  அங்கு அவனியாள் அலமரப்*
    பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
    கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 

    வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
    இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)


    கலையும் கரியும் பரிமாவும்*  திரியும் கானம் கடந்துபோய்* 
    சிலையும் கணையும் துணையாகச்*  சென்றான் வென்றிச் செருக்களத்து* 

    மலை கொண்டு அலை நீர் அணை கட்டி*  மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்* 
    தலை பத்து அறுத்து உகந்தான்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    கடம் சூழ் கரியும் பரிமாவும்*  ஒலி மாத் தேரும் காலாளும்* 
    உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை*  பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்* 

    இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்*  இமையோர் வணங்க மணம் கமழும்* 
    தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    உலவு திரையும் குல வரையும்*  ஊழி முதலா எண் திக்கும்* 
    நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்*  வென்றி விறல் ஆழி வலவன்* 

    வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்* 
    சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்* 
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்* 

    பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
    தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற*  அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* 
    விளங்கு சுடர் ஆழி*  விண்ணோர் பெருமான் நண்ணார்முன்* 

    கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்*  கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
    தடம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    தாய் ஆய் வந்த பேய் உயிரும்*  தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்* 
    தூய வரி உருவின் குறளாய்ச் சென்று*  மாவலியை ஏயான் இரப்ப* 

    மூவடி மண் இன்றே தா என்று*  உலகு ஏழும் தாயான்*
    காயா மலர் வண்ணன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்*  அரி ஆய் பரிய இரணியனை* 
    ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த*  ஒருவன் தானே இரு சுடர் ஆய்* 

    வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்*  மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்* 
    தான் ஆய் தானும் ஆனான் தன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    வெந்தார் என்பும் சுடு நீறும்*  மெய்யில் பூசி கையகத்து*
    ஓர் சந்து ஆர் தலைகொண்டு*  உலகு ஏழும் திரியும்*  பெரியோன் தான் சென்று*

    என் எந்தாய்! சாபம் தீர் என்ன*  இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
    சந்து ஆர் பொழில் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    தொண்டு ஆம் இனமும் இமையோரும்*  துணை நூல் மார்வின் அந்தணரும்* 
    அண்டா எமக்கே அருளாய் என்று*  அணையும் கோயில் அருகு எல்லாம்* 

    வண்டு ஆர் பொழிலின் பழனத்து*  வயலின் அயலே கயல் பாயத்* 
    தண் தாமரைகள் முகம் அலர்த்தும்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    தாரா ஆரும் வயல் சூழ்ந்த*  சாளக்கிராமத்து அடிகளை* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்*  அமரர் நல் நாட்டு அரசு ஆளப்* 
    பேர் ஆயிரமும் ஓதுமின்கள்*  அன்றி இவையே பிதற்றுமினே*


    வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்* 
    அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்* 

    ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்! 


    சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து* 
    புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா* 

    அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!*  
    வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!     


    சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்* 
    காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்* 

    வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   


    வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை* 
    நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து* 

    எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி* 
    நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    


    இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று* 
    நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை* 

    கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி* 
    நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து*  திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு* 
    ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்*  உணர்விலேன் ஆதலால் நமனார்*

    பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்*  பரமனே! பாற்கடல் கிடந்தாய்!* 
    நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்* 
    துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*

    வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!            


    ஏவினார் கலியார் நலிக என்று*  என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
    ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*

    பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு*  உன் பாதமே பரவி நான் பணிந்து*
    என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி*  உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
    தான் உடைக் குரம்பை பிரியும்போது*  உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்* 

    தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!*  திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!* 
    நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!         


    ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*
    இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*

    காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்* 
    ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)      


    அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
    அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
    அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)


    அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*

    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   


    ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 

    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.


    எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
    ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*

    கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  


    மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
    சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.


    எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
    இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 

    நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.


    முனைத்த சீற்றம் விண் சுடப் போய்*  மூவுலகும் பிறவும்* 
    அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்* 

    கனைத்த தீயும் கல்லும் அல்லா*  வில் உடை வேடரும் ஆய்* 
    தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.        


    நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
    அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*

    காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
    தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   


    நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
    அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,

    நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
    அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  


    செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
    எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 

    மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
    செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 


    கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
    சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*

    பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
    பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்*  இரங்க வன் பேய் முலை* 
    பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*

    வெள்ளியான் கரியான்*  மணி நிற வண்ணன் என்று எண்ணி*
    நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!  (2) 


    நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்* 
    என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்* 

    கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்* 
    சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!   


    பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்* 
    கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

    ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்* 
    தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!   


    வண் கையான் அவுணர்க்கு நாயகன்*  வேள்வியில் சென்று மாணியாய்* 
    மண் கையால் இரந்தான்*  மராமரம் ஏழும் எய்த வலத்தினான்* 

    எண் கையான் இமயத்து உள்ளான்*  இருஞ்சோலை மேவிய எம் பிரான்* 
    திண் கை மா துயர் தீர்த்தவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!        


    எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து* 
    பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்* 

    ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு* 
    திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! 


    பாரும் நீர் எரி காற்றினோடு*  ஆகாசமும் இவை ஆயினான்* 
    பேரும் ஆயிரம் பேச நின்ற*  பிறப்பிலி பெருகும் இடம்* 

    காரும் வார் பனி நீள் விசும்பிடைச்*  சோரும் மா முகில் தோய்தர*
    சேரும் வார் பொழில் சூழ்*  எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    அம்பரம் அனல் கால் நிலம் சலம்*  ஆகி நின்ற அமரர்கோன்* 
    வம்பு உலாம் மலர்மேல்*  மலி மட மங்கை தன் கொழுநன்அவன்* 

    கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்*  நீள் இதணம்தொறும்* 
    செம் புனம் அவை காவல் கொள்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
    பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*

    வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
    தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)


    செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
    மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 

    சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
    வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   


    தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
    நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*

    வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
    நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 


    மான் ஏய் கண் மடவார்*  மயக்கில் பட்டு மா நிலத்து* 
    நானே நானாவித*  நரகம் புகும் பாவம் செய்தேன்*

    தேன் ஏய் பூம் பொழில் சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் ஆனாய் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.    


    கொன்றேன் பல் உயிரை*  குறிக்கோள் ஒன்று இலாமையினால்* 
    என்றேனும் இரந்தார்க்கு*  இனிது ஆக உரைத்து அறியேன்*

    குன்று ஏய் மேகம் அதிர்*  குளிர் மா மலை வேங்கடவா!*
    அன்றே வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    குலம் தான் எத்தனையும்*  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்* 
    நலம் தான் ஒன்றும் இலேன்*  நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்* 

    நிலம் தோய் நீள் முகில் சேர்*  நெறி ஆர் திருவேங்கடவா!* 
    அலந்தேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    எப் பாவம் பலவும்*  இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
    துப்பா! நின் அடியே*  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*

    செப்பு ஆர் திண் வரை சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் அப்பா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    மண் ஆய் நீர் எரி கால்*  மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்* 
    புண் ஆர் ஆக்கை தன்னுள்*  புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்* 

    விண் ஆர் நீள் சிகர*  விரைஆர் திருவேங்கடவா!*
    அண்ணா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.            


    தெரியேன் பாலகனாய்*  பல தீமைகள் செய்துமிட்டேன்* 
    பெரியேன் ஆயினபின்*  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*

    கரி சேர் பூம் பொழில் சூழ்*  கன மா மலை வேங்கடவா!*
    அரியே! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    நோற்றேன் பல் பிறவி*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்* 
    ஏற்றேன் இப் பிறப்பே*  இடர் உற்றனன்-எம் பெருமான்!* 

    கோல் தேன் பாய்ந்து ஒழுகும்*  குளிர் சோலை சூழ் வேங்கடவா!* 
    ஆற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    பற்றேல் ஒன்றும் இலேன்*  பாவமே செய்து பாவி ஆனேன்* 
    மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!* 

    கல் தேன் பாய்ந்து ஒழுகும்*  கமலச் சுனை வேங்கடவா! 
    அற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய*  எம் கார் வண்ணனை* 
    விண்ணோர் தாம் பரவும்*  பொழில் வேங்கட வேதியனை*

    திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்* 
    பண் ஆர் பாடல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2) 


    கண் ஆர் கடல் சூழ்*  இலங்கைக்கு இறைவன்தன்* 
    திண் ஆகம் பிளக்கச்*  சரம் செல உய்த்தாய்!* 

    விண்ணோர் தொழும்*  வேங்கட மா மலை மேய* 
    அண்ணா அடியேன்*  இடரைக் களையாயே.   


    இலங்கைப் பதிக்கு*  அன்று இறை ஆய*
    அரக்கர் குலம் கெட்டு அவர் மாள*  கொடிப் புள் திரித்தாய்!* 

    விலங்கல் குடுமித்*  திருவேங்கடம் மேய*  
    அலங்கல் துளப முடியாய்!*  அருளாயே.     


    நீர் ஆர் கடலும்*  நிலனும் முழுது உண்டு* 
    ஏர் ஆலம் இளந் தளிர்மேல்*  துயில் எந்தாய்!* 

    சீர் ஆர்*  திருவேங்கட மா மலை மேய* 
    ஆரா அமுதே!*  அடியேற்கு அருளாயே.    


    உண்டாய் உறிமேல்*  நறு நெய் அமுது ஆக* 
    கொண்டாய் குறள் ஆய்*  நிலம் ஈர் அடியாலே* 

    விண் தோய் சிகரத்*  திருவேங்கடம் மேய, 
    அண்டா!*  அடியேனுக்கு அருள்புரியாயே.    


    தூண் ஆய் அதனூடு*  அரியாய் வந்து தோன்றி* 
    பேணா அவுணன் உடலம்*  பிளந்திட்டாய்!* 

    சேண் ஆர் திருவேங்கட*  மா மலை மேய,* 
    கோள் நாகணையாய்!*  குறிக்கொள் எனை நீயே.      


    மன்னா*  இம் மனிசப் பிறவியை நீக்கி* 
    தன் ஆக்கி*  தன் இன் அருள் செய்யும் தலைவன்* 

    மின் ஆர் முகில் சேர்*  திருவேங்கடம் மேய* 
    என் ஆனை என் அப்பன்*  என் நெஞ்சில் உளானே.


    மான் ஏய் மட நோக்கி*  திறத்து எதிர் வந்த* 
    ஆன் ஏழ் விடை செற்ற*  அணி வரைத் தோளா!*

    தேனே!*  திருவேங்கட மா மலை மேய* 
    கோனே! என் மனம்*  குடிகொண்டு இருந்தாயே.    


    சேயன் அணியன்*  என சிந்தையுள் நின்ற* 
    மாயன் மணி வாள் ஒளி*  வெண் தரளங்கள்* 

    வேய் விண்டு உதிர்*  வேங்கட மா மலை மேய* 
    ஆயன் அடி அல்லது*  மற்று அறியேனே.            


    வந்தாய் என் மனம் புகுந்தாய்*  மன்னி நின்றாய்* 
    நந்தாத கொழுஞ் சுடரே*  எங்கள் நம்பீ!* 

    சிந்தாமணியே*  திருவேங்கடம் மேய எந்தாய்!*
    இனி யான் உனை*  என்றும் விடேனே.    


    வில்லார் மலி*  வேங்கட மா மலை மேய* 
    ல்லார் திரள்தோள்*  மணி வண்ணன் அம்மானைக்* 

    ல்லார்  திரள்தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லார் அவர்*  வானவர் ஆகுவர் தாமே.  


    வானவர் தங்கள் சிந்தை போல*  என் நெஞ்சமே! இனிதுஉவந்து 
    மா தவ மானவர் தங்கள் சிந்தை*  அமர்ந்து உறைகின்ற எந்தை*

    கானவர் இடு கார் அகில் புகை*  ஓங்கு வேங்கடம் மேவி*
    மாண் குறள் ஆன அந்தணற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)  


    உறவு சுற்றம் என்று ஒன்று இலா*  ஒருவன்  உகந்தவர் தம்மை*
    மண்மிசைப் பிறவியே கெடுப்பான்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    குறவர் மாதர்களோடு*  வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
    வேங்கடத்து அறவன் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*


    இண்டை ஆயின கொண்டு*  தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
    வானிடைக் கொண்டு போய் இடவும்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    வண்டு வாழ் வட வேங்கட மலை*  கோயில் கொண்டு அதனோடும்*
    மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*  


    பாவியாது செய்தாய்*  என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
    மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்*  விசும்பு ஏற வைக்கும் எந்தை* 

    கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்*  வேங்கட மலை ஆண்டு*
    வானவர் ஆவியாய் இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*         


    பொங்கு போதியும் பிண்டியும் உடைப்*  புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை* 
    தங்கள் தேவரும் தாங்களுமே ஆக*  என் நெஞ்சம் என்பாய்* 

    எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்*  வேங்கடம் மேவி நின்று அருள்* 
    அம் கண் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    துவரி ஆடையர் மட்டையர்*  சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்* 
    தமரும் தாங்களுமே தடிக்க*  என் நெஞ்சம் என்பாய்* 

    கவரி மாக் கணம் சேரும்*  வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை* 
    அமர நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    தருக்கினால் சமண் செய்து*  சோறு தண் தயிரினால் திரளை*
    மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    மருள்கள் வண்டுகள் பாடும்*  வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* 
    வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*


    சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்*  சிலர் பேசக் கேட்டிருந்தே* 
    என் நெஞ்சம் என்பாய்!*  எனக்கு ஒன்று சொல்லாதே* 

    வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி*  வேங்கட மலை கோயில் மேவிய* 
    ஆயர் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 


    கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்*  என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்* 
    பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்*  காண்கிலார்* 

    ஆடு தாமரையோனும் ஈசனும்*  அமரர் கோனும் நின்று ஏத்தும்*  
    வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*  


    மின்னு மா முகில் மேவு*  தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய* 
    அன்னம் ஆய் நிகழ்ந்த*  அமரர் பெருமானைக்* 

    கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி*  இன் தமிழால் உரைத்த*
    இம் மன்னு பாடல் வல்லார்க்கு*  இடம் ஆகும் வான் உலகே* (2) 


    காசை ஆடை மூடி ஓடிக்*  காதல் செய் தானவன் ஊர்* 
    நாசம் ஆக நம்ப வல்ல*  நம்பி நம் பெருமான்* 

    வேயின் அன்ன தோள் மடவார்*  வெண்ணெய் உண்டான் இவன் என்று* 
    ஏச நின்ற எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே* (2)


    தையலாள்மேல் காதல் செய்த*  தானவன் வாள் அரக்கன்* 
    பொய் இலாத பொன் முடிகள்*  ஒன்பதோடு ஒன்றும் அன்று* 

    செய்த வெம் போர் தன்னில்*  அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள* 
    எய்த எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*     


    முன் ஓர் தூது*  வானரத்தின் வாயில் மொழிந்து*  
    அரக்கன் மன் ஊர் தன்னை*  வாளியினால் மாள முனிந்து*

    அவனே பின் ஓர் தூது*  ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்* 
    இன்னார் தூதன் என நின்றான்*  எவ்வுள் கிடந்தானே* 


    பந்து அணைந்த மெல்விரலாள்*  பாவைதன் காரணத்தால்* 
    வெந் திறல் ஏறு ஏழும் வென்ற*  வேந்தன் விரி புகழ் சேர்* 

    நந்தன் மைந்தன் ஆக ஆகும்*  நம்பி நம் பெருமான்* 
    எந்தை தந்தை தம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*  


    பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு*  பண்டு ஆல் இலைமேல்* 
    சால நாளும் பள்ளி கொள்ளும்*  தாமரைக் கண்ணன் எண்ணில்* 

    நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்*  நெய்தல் அம் தண் கழனி* 
    ஏலம் நாறும் பைம் புறவின்*  எவ்வுள் கிடந்தானே*  


    சோத்தம் நம்பி என்று*  தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்* 
    ஆத்தன் நம்பி செங்கண் நம்பி*  ஆகிலும் தேவர்க்கு எல்லாம்* 

    மூத்த நம்பி முக்கண் நம்பி என்று*  முனிவர் தொழுது* 
    ஏத்தும் நம்பி எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி*  திசைமுகனார்* 
    தங்கள் அப்பன் சாமி அப்பன்*  பாகத்து இருந்த*

    வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்*  சூழ் கழல் சூடநின்ற* 
    எங்கள் அப்பன் எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*


    முனிவன் மூர்த்தி மூவர் ஆகி*  வேதம் விரித்து உரைத்த புனிதன்*
    பூவை வண்ணன் அண்ணல்*  புண்ணியன் விண்ணவர்கோன்* 

    தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்*  தன் அடியார்க்கு இனியன்*
    எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    பந்து இருக்கும் மெல் விரலாள்*  பாவை பனி மலராள்* 
    வந்து இருக்கும் மார்வன்*  நீல மேனி மணி வண்ணன்* 

    அந்தரத்தில் வாழும்*  வானோர் நாயகன் ஆய் அமைந்த* 
    இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*


    இண்டை கொண்டு தொண்டர் ஏத்த*  எவ்வுள் கிடந்தானை* 
    வண்டு பாடும் பைம் புறவின்*  மங்கையர் கோன் கலியன், 

    கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை*  ஈர் ஐந்தும் வல்லார்* 
    அண்டம் ஆள்வது ஆணை*  அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)    


    வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
    செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 

    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
    சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   


    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
    கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

    ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
    மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)


    வஞ்சனை செய்யத் தாய்உருஆகி*  வந்த பேய் அலறிமண் சேர* 
    நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை*  தானவர் கூற்றை* 

    விஞ்சை வானவர் சாரணர் சித்தர்*  வியந்துதி செய்ய பெண்உருஆகி* 
    அம் சுவை அமுதம் அன்று அளித்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த*  எழில் விழவில் பழ நடைசெய்* 
    மந்திர விதியில் பூசனை பெறாது*  மழை பொழிந்திட தளர்ந்து*

    ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்*  எம் பெருமான் அருள் என்ன* 
    அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*  நல் புவிதனக்கு இறைவன்* 
    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*  மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*

    பஞ்ச பாண்டவர்க்கு ஆகி*  வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
    எந்தை தந்தை தம்மானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*    


    அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்*  அணி இழையைச் சென்று* 
    'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது*  'எம் பெருமான் அருள்!' என்ன*

    சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்*  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப* 
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*           


    பரதனும் தம்பி சத்துருக்கனனும்*  இலக்குமனோடு மைதிலியும்* 
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற*  இராவணாந்தகனை எம்மானை*

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு*  குயிலொடு மயில்கள் நின்று ஆல* 
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.


    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
    ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 

    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)


    மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்*  வேட்கையினோடு சென்று இழிந்த* 
    கான் அமர் வேழம் கைஎடுத்து அலற*  கரா அதன் காலினைக் கதுவ* 

    ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*  சென்று நின்று ஆழிதொட்டானை* 
    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*      


    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
    தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*

    கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
    சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)


    அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
    அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*

    இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
    முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*

    அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  நீண்டான்* 
    குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  


    அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 
    புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*  பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்* 

    பல மன்னர் பட சுடர் ஆழியினைப்*  பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 
    நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்* 
    பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*

    பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
    நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.      


    மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி வரம்பு உருவ*
    மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*

    காலம் இது என்று அயன் வாளியினால்*  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
    நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.   


    பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  கடலும் சுடரும் இவை உண்டும்*
    எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்*  அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*

    அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
    நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்*  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
    அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அவுணன்* 

    பகராதவன் ஆயிரம் நாமம்*  அடிப் பணியாதவனை பணியால் அமரில்* 
    நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பிச்சச் சிறு பீலி பிடித்து*  உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்* 
    அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்*  அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*

    நச்சி நமனார் அடையாமை*  நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு* 
    நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பேசும் அளவு அன்று இது வம்மின்*  நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்* 
    நாசம் அது செய்திடும் ஆதன்மையால்*  அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*

    வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்*  மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
    மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
    அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*

    உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
    கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)


    பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 

    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)


    பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
    அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*

    கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       


    உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
    அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 

    தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்* 
    ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*  அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*

    குடம்ஆடு கூத்தன் தன்னை*  கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ*  பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
    இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,* 

    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று*  அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி*  கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
    படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை*  பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*

    வளைமருப்பின் ஏனம்ஆகி*  இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று*  பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்* 
    பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை*   பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை* 

    ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*  உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்* 
    காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை*  பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை* 
    தண்ணார்ந்த  வார்புனல்சூழ் மெய்யம்என்னும்*  தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி* 

    எண்ணானை எண்இறந்த புகழினானை*  இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
    கண்ணாரக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.  


    தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை*  படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
    தென்இலங்கை அரக்கர்வேந்தை*  விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு* 

    பண்டுஆய வேதங்கள் நான்கும்*  ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
    தொண்டனேன் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
    தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 

    கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
    திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  


    நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
    வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*

    மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
    எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)


    பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 
    நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*

    கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே.   


    ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
    வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 

    கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
    ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  


    விண்டாரை வென்று ஆவி*  விலங்கு உண்ண மெல் இயலார்* 
    கொண்டாடும் மல் அகலம்*  அழல் ஏற வெம் சமத்துக்*

    கண்டாரை கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரைக், 
    கொண்டாடும் நெஞ்சு உடையார்*  அவர் எங்கள் குலதெய்வமே.


    பிச்சச் சிறு பீலிச்*  சமண் குண்டர் முதலாயோர்* 
    விச்சைக்கு இறை என்னும்*  அவ் இறையைப் பணியாதே*

    கச்சிக் கிடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நச்சித் தொழுவாரை*  நச்சு என் தன் நல் நெஞ்சே!  


    புலன் கொள் நிதிக் குவையோடு*  புழைக் கை மா களிற்று இனமும்* 
    நலம் கொள் நவமணிக் குவையும்*  சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,* 

    கலங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வலங்கொள் மனத்தார்அவரை*  வலங்கொள் என் மட நெஞ்சே!


    பஞ்சிச் சிறு கூழை*  உரு ஆகி மருவாத* 
    வஞ்சப் பெண் நஞ்சு உண்ட*  அண்ணல் முன் நண்ணா*

    கஞ்சைக் கடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நெஞ்சில் தொழுவாரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே!


    செழு நீர் மலர்க் கமலம்*  திரை உந்து வன் பகட்டால்* 
    உழும் நீர் வயல் உழவர் உழ*  பின் முன் பிழைத்து எழுந்த* 

    கழு நீர் கடி கமழும்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    தொழும் நீர் மனத்தவரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே . 


    பிணங்கள் இடு காடு அதனுள்*  நடம் ஆடு பிஞ்ஞகனோடு* 
    இணங்கு திருச் சக்கரத்து*  எம் பெருமானார்க்கு இடம்*

    விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வணங்கும் மனத்தார் அவரை*  வணங்கு என்தன் மட நெஞ்சே!


    கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
    அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 

    வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
    முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       


    திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
    நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*

    குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
    உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   


    துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
    குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*

    வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
    இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
    போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*

    மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
    என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.


    'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
    'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 

    தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
    ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
    காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 

    பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
    ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          


    தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
    வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*

    மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
    என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
    'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 

    களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
    இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
    புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 

    குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
    இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)


    பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
    அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 

    மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
    என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
    என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 

    மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        


    திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
    முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 

    எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
    அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     


    வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்*  வேதம் உரைத்து இமையோர் வணங்கும்* 
    செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்* 

    வந்து குறள்உருவாய் நிமிர்ந்து*  மாவலி வேள்வியில் மண்அளந்த* 
    அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே.   


    செம்பொன்இலங்கு வலங்கைவாளி *  திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்* 
    உம்பர்இருசுடர்ஆழியோடு*  கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே* 

    வெம்பு சினத்து அடல் வேழம்வீழ*  வெண்மருப்புஒன்று பறித்து*
    இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே . 


    மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி*  மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
    அதன்மருப்புஒன்று வாங்கும்*  ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்* 

    வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி*  வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து* 
    அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்ட புயகரத்தேன் என்றாரே. 


    கலைகளும் வேதமும் நீதிநூலும்*  கற்பமும் சொல் பொருள் தானும்*
    மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்*  நீர்மையினால் அருள் செய்து*

    நீண்ட மலைகளும் மாமணியும்*  மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
    அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


    எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்*  ஏதும் அறிகிலம் ஏந்திழையார்* 
    சங்கும் மனமும் நிறையும் எல்லாம்*  தம்மனஆகப் புகுந்து*

    தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா*  போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்* 
    அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


    முழுசிவண்டுஆடிய தண்துழாயின்*  மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
    சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்*  எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்* 

    எழுதிய தாமரை அன்னகண்ணும்*  ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்* 
    அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.


    மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க*  வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி* 
    அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்*  மற்றுஇவர் வண்ணம் எண்ணில்* 

    காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்*  கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
    என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தே என்றாரே.        


    தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா*  நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
    வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி*  வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு* 

    நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்*  நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
    அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன்என்றாரே.   


    மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்*  நீள்முடி மாலை வயிரமேகன்* 
    தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி*  அட்ட புயகரத்து ஆதிதன்னை* 

    கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்*  காமருசீர்க் கலிகன்றி*
    குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 


    சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
    நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*

    பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
    மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     


    கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
    தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          


    உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
    வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
    பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   


    அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
    எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
    பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 


    தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
    முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
    பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.


    திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
    புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
    பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   


    இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
    பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            


    குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
    மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
    படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     


    பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 


    பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 

    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
    உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        


    மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*  வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்* 
    எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்*  இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*

    துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*  தூய நான்மறையாளர் சோமுச் செய்ய* 
    செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  (2)   


    கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*  தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்* 
    சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை*  தாம் இருவர் அடி வருடும் தன்மையானை* 

    வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்*  ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்* 
    சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.         


    கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்*  குழாம்கொள் பொய்கைக்*  கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி* 
    அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*  அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை* 

    எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*  இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட* 
    செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து*  தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை* 
    ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்*  அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*

    கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்*  குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்* 
    தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*  கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்* 
    பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*  பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*

    மறை வளர புகழ் வளர மாடம்தோறும்*  மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத* 
    சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று*  அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* 
    தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*  தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*

    வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
    செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி*  இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து* 
    வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*  வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*

    கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று*  காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட* 
    செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.


    பார் ஏறு பெரும் பாரம் தீரப்*  பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
    பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை*  செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை* 

    போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்*  புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்* 
    சீர் ஏறு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு*  சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற* 
    காவடிவின் கற்பகமே போல நின்று*  கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை* 

    சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை*  செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
    தீ வடிவின் சிவன் அயனே போல்வார்*  மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*  நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்* 
    சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று* 

    வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார 
    காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த*  கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)      


    இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்*  வளைமருப்பினில் அகத்துஒடுக்கி* 
    கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்*  கமலநல்மலர்த்தேறல் அருந்தி*

    இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி*  அம் பொழிலூடே* 
    செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு*  திருவயிந்திரபுரமே. (2)   


    மின்னும் ஆழி அங்கையவன்*  செய்யவள் உறை தரு திரு மார்பன்* 
    பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய*  பரன் இடம் வரைச் சாரல்* 

    பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர*  பிணி அவிழ் கமலத்துத்* 
    தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே. 


    வையம் ஏழும் உண்டு ஆல் இலை*  வைகிய மாயவன்*
    அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்*  மெய்தகு வரைச் சாரல்* 

    மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய*  முல்லை அம் கொடி ஆட* 
    செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு*  திருவயிந்திரபுரமே.


    மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்*  மார்புஅகம் இரு பிளவாக்* 
    கூறு கொண்டு அவன் குலமகற்கு*  இன் அருள் கொடுத்தவன் இடம்*

    மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*  விசும்பு உற மணி நீழல்* 
    சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்*  திருவயிந்திரபுரமே.   


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல் இடம் அளந்து*
    ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்*  பொன் மலர் திகழ்*

    வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*  குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி* 
    தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு*  திருவயிந்திரபுரமே.       


    கூன் உலாவிய மடந்தைதன்*  கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
    கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்*  கவின் ஆரும்* 

    வான் உலாவிய மதி தவழ் மால் வரை*  மா மதிள் புடை சூழ* 
    தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய*  திருவயிந்திரபுரமே.        


    மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்*  விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
    நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்*  மணி வரை நீழல்* 

    அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்*  பெடையொடும் இனிது அமர* 
    செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு*  தண் திருவயிந்திரபுரமே.     


    விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்*  வில் இறுத்து*  அடல் மழைக்கு- 
    நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*  நிலவிய இடம் தடம் ஆர்* 

    வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு*  மலை வளர் அகில் உந்தித்* 
    திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.  


    வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*  விசயனுக்கு ஆய்*
    மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்*  குலவு தண் வரைச் சாரல்* 

    கால் கொள் கண் கொடி கைஎழ*  கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்* 
    சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.       


    மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
    தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 

    மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
    பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)


    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
    தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 

    கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
    தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 


    காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
    ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
    தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.  


    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த* 
    வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த* 
    செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த* 
    பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்* 

    கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்* 
    திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 


    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
    தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்* 

    பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*
    புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
    இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

    அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக* 
    செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த* 
    தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்* 
    தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*
    ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

    மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்* 
    தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்* 
    அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

    பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள* 
    திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
    ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

    கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
    பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)


    வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
    ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

    கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
    சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  


    பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்* 
    மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

    வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்* 
    தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.   


    பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
    எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

    அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு* 
    திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  


    வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
    தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

    முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்* 
    திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து* 
    அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து* 

    உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று* 
    தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
    உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

    வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
    தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  


    ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
    மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

    அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
    தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ* 
    அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

    பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்* 
    சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்* 
    பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

    ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*
    மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த* 
    வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்* 

    ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்* 
    தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2) 


    ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
    ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

    தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
    தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 


    நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
    நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

    உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
    எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து* 
    நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

    நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்* 
    செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்* 
    நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

    நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்* 
    செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து* 
    வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

    விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்* 
    செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   


    பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை* 
    வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்* 

    வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்* 
    திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த* 
    செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

    திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி* 
    தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.         


    பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்* 
    மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

    அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
    பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே. 


    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து* 
    கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

    கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி* 
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.    


    செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
    அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 


    வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்* 
    சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே* 

    அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
    அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  


    நீலத்தடவரை*  மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
    அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*

    சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட*  மழை முகில் போன்று எழுந்து*
    எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!


    நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது* 
    இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*

    செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*
    கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே! 


    மின்னின் மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
    நின்மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*

    புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
    எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!


    நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
    என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*

    பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*
    எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே! 


    கந்த மாமலர் எட்டும்இட்டு*  நின்காமர் சேவடி கைதொழுது எழும்* 
    புந்தியேன் மனத்தே*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    சந்தி வேள்வி சடங்கு நான்மறை*  ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்* 
    அந்தணாளர் அறா*  அணி ஆலி அம்மானே!


    உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து*  உன் அடியேன் மனம் புகுந்த*
    அப்புலவ! புண்ணியனே!*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்*  தண் தாமரை மலரின்மிசை*
    மலி அலவன் கண்படுக்கும்*  அணி ஆலி அம்மானே!


    சங்கு தங்கு தடங் கடல் கடல்*  மல்லையுள் கிடந்தாய்*
    அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்*  இனிப் போயினால் அறையோ!*

    கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி*  இன் இள வண்டு போய்*
    இளந்தெங்கின் தாது அளையும்*  திருவாலி அம்மானே!


    ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*
    ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!* 

    நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*
    மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!


    புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை* 
    கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*

    நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
    தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)    


    தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே* 
    பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!* 

    தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி* 
    ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)


    பிணிஅவிழு நறுநீல*  மலர் கிழிய பெடையோடும்*   
    அணிமலர்மேல் மதுநுகரும்*  அறுகால சிறு வண்டே!* 

    மணிகழுநீர் மருங்குஅலரும்*  வயல் ஆலி மணவாளன்*   
    பணிஅறியேன் நீ சென்று*  என் பயலை நோய் உரையாயே.


    நீர்வானம் மண் எரி கால் ஆய்*  நின்ற நெடுமால்* 
    தன்தார் ஆய நறுந் துளவம்*  பெறும் தகையேற்கு அருளானே*

    சீர்ஆரும் வளர்பொழில்சூழ்*  திருவாலி வயல்வாழும்* 
    கூர்வாய சிறுகுருகே!*  குறிப்புஅறிந்து கூறாயே.      


    தானாக நினையானேல்*  தன் நினைந்து நைவேற்கு*
    ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்*  வலி செய்ய மெலிவேனோ?*

    தேன் வாய வரி வண்டே!*  திருவாலி நகர் ஆளும்*   
    ஆன்ஆயற்கு என் உறு நோய்*  அறிய சென்று உரையாயே.


    வாள் ஆய கண் பனிப்ப*  மென் முலைகள் பொன் அரும்ப* 
    நாள் நாளும்*  நின் நினைந்து நைவேற்கு*

    ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!*  வரை எடுத்த தோளாளா*
    என்தனக்கு ஓர்*  துணையாளன் ஆகாயே!


    தார் ஆய தன் துளவம்*  வண்டு உழுதவரை மார்பன்* 
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த*  புள் பாகன் என் அம்மான்*

    தேர் ஆரும் நெடு வீதித்*  திருவாலி நகர் ஆளும்* 
    கார் ஆயன் என்னுடைய*  கன வளையும் கவர்வானோ! 


    கொண்டு அரவத் திரை உலவு*  குரை கடல்மேல் குலவரைபோல்* 
    பண்டு அரவின் அணைக் கிடந்து*  பார் அளந்த பண்பாளா!*

    வண்டு அமரும் வளர் பொழில் சூழ்*  வயல் ஆலி மைந்தா!* 
    என் கண் துயில் நீ கொண்டாய்க்கு*  என் கன வளையும் கடவேனோ!?


    குயில் ஆலும் வளர் பொழில் சூழ்*  தண் குடந்தைக் குடம் ஆடி* 
    துயிலாத கண்_இணையேன்*  நின் நினைந்து துயர்வேனோ!*

    முயல் ஆலும் இள மதிக்கே*  வளை இழந்தேற்கு*
    இது நடுவே வயல் ஆலி மணவாளா!*  கொள்வாயோ மணி நிறமே!  


    நிலை ஆளா நின் வணங்க*  வேண்டாயே ஆகிலும் என்* 
    முலை ஆள ஒருநாள்*  உன் அகலத்தால் ஆளாயே*

    சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!*  திருமெய்யமலையாளா*
    நீஆள வளை ஆள மாட்டோமே. 


    மை இலங்கு கருங் குவளை*  மருங்கு அலரும் வயல் ஆலி* 
    நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை*  நெடுமாலை* 

    கை இலங்கு வேல் கலியன்*  கண்டு உரைத்த தமிழ் மாலை* 
    ஐஇரண்டும் இவை வல்லார்க்கு*  அரு வினைகள் அடையாவே. (2)


    கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
    வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*

    வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
    அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    


    பண்டு இவன் ஆயன் நங்காய்!*  படிறன் புகுந்து*
    என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து*

    அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  கிளிபோல் மிழற்றி நடந்து* 
    வண்டு அமர் கானல் மல்கும்*  வயல் ஆலி புகுவர்கொலோ!       


    அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!*  அரக்கர் குலப் பாவை தன்னை* 
    வெம் சின மூக்கு அரிந்த*  விறலோன் திறம் கேட்கில் மெய்யே* 

    பஞ்சிய மெல் அடி*  எம் பணைத் தோளி பரக்கழிந்து* 
    வஞ்சி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!     


    ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*
    மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*

    மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
    போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 


    தாய் எனை என்று இரங்காள்*  தடந் தோளி தனக்கு அமைந்த* 
    மாயனை மாதவனை*  மதித்து என்னை அகன்ற இவள்*

    வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
    தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*

    வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
    இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    


    அன்னையும் அத்தனும் என்று*  அடியோமுக்கு இரங்கிற்றிலள்* 
    பின்னைதன் காதலன்தன்*  பெருந் தோள் நலம் பேணினளால்*

    மின்னையும் வஞ்சியையும்*  வென்று இலங்கும் இடையாள் நடந்து* 
    புன்னையும் அன்னமும் சூழ்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
    சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*

    பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
    மற்று எல்லாம் கைதொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    


    காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்* 
    பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*

    தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
    வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!


    தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*

    காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
    மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)


    நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
    எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*

    எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
    மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)


    முதலைத் தனி மா முரண் தீர அன்று*  முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய* 
    விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி*  வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*

    பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்*  பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்* 
    மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*  அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்* 
    இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*  அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*

    அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*  அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி* 
    மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று*  திசை நான்கும் நான்கும் இரிய*  செருவில் 
    கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய*  கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*

    முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*  ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்* 
    மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*  இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து* 
    தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து*  தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*

    குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே*  குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு* 
    மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!


    பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்*  பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*  அவள்தன் 
    உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*  உடனே சுவைத்தான் இடம்*

    ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி*  கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து* 
    மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்* 
    இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*  

    மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*  
    முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    


    துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*  துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
    முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*  விளைவித்த அம்மான் இடம்*

    வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று*  மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்* 
    வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  


    விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*  விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்* 
    படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று*  இமையோர் பரவும் இடம்*

    பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப*  தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்* 
    மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!


    வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
    என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*

    கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
    விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)


    சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
    நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*

    சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
    வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)


    திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க*  தேவரொடு தானவர்கள் திசைப்ப*
    இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்* 

    எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்*  ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்* 
    மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*  அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
    முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*  முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*

    எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி*  இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய* 
    வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்*  காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி* 
    தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்*  செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்* 
    மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!       


    மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா*  இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர* 
    தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,

    செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*  செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்* 
    மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*  பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு* 
    திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்*  தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்*  உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்*  பெரிய 
    வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து*  வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்* 
    உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை*  உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*

    இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்*  ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்* 
    வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! 


    ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த*  அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்* 
    கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்*  குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*  மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப* 
    மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!   


    வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு*  மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி* 
    எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்*  ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப*  சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து* 
    மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர்  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
    வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*

    மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
    சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)


    திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*  தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து* 
    இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*

    பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*  தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ* 
    அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!  (2)


    வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்*  விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று* 
    குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்*  குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*

    என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்*  ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்* 
    அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!


    உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்*  உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்* 
    கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து*  கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*

    மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட*  பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் 
    அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!    


    ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு*  அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி* 
    வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு*  அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*

    சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை*  செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே* 
    ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே! 


    கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்*  களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு* 
    அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்*  அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*

    அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்*  அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்* 
    அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா*  இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்* 
    தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*

    சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை*  செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்* 
    வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்*  தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்* 
    காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்*  கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*

    நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்*  ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
    அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை*  காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* 
    குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்*  குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*

    துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்*  தூமறையோர்  தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை* 
    அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!


    வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு*  வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
    வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை*  கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*

    மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து*  வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி* 
    அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     


    சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து*  பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்* 
    அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*

    கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*  கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்* 
    ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*  உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)    


    போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
    தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*

    மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
    தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 


    யாவரும் ஆய் யாவையும் ஆய்*  எழில் வேதப் பொருள்களும் ஆய்* 
    மூவரும் ஆய் முதல் ஆய*  மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*

    மாவரும்திண் படைமன்னை*  வென்றிகொள்வார் மன்னுநாங்கை* 
    தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே.         


    வான்நாடும் மண்நாடும்*  மற்றுஉள்ள பல்உயிரும்*    
    தான்ஆய எம்பெருமான்*  தலைவன் அமர்ந்து உறையும்இடம்*

    ஆனாத பெருஞ்செல்வத்து*  அருமறையோர் நாங்கைதன்னுள்*
    தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்*  திருத்தேவனார்தொகையே. 


    இந்திரனும் இமையவரும்*  முனிவர்களும் எழில் அமைந்த* 
    சந்த மலர்ச் சதுமுகனும்*  கதிரவனும் சந்திரனும்*

    எந்தை! எமக்கு அருள் என நின்ரு*  அருளூமிடம் எழில்நாங்கை* 
    சுந்தரநல் பொழில்புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.     


    அண்டமும் இவ் அலை கடலும்*  அவனிகளும் குல வரையும்* 
    உண்ட பிரான் உறையும் இடம்*  ஒளி மணி சந்து அகில் கனகம்*

    தெண் திரைகள் வரத் திரட்டும்*  திகழ் மண்ணித் தென் கரைமேல்* 
    திண் திறலார் பயில்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.  


    ஞாலம் எல்லாம் அமுது செய்து*  நான்மறையும் தொடராத*    
    பாலகன் ஆய் ஆல் இலையில்*  பள்ளிகொள்ளும் பரமன் இடம்*

    சாலி வளம் பெருகி வரும்*  தட மண்ணித் தென் கரைமேல்* 
    சேல் உகளும் வயல்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.   


    ஓடாத ஆளரியின்*  உரு ஆகி இரணியனை*      
    வாடாத வள் உகிரால்*  பிளந்து அளைந்த மாலது இடம்*

    ஏடு ஏறு பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சேடு ஏறு பொழில் தழுவு*  திருத்தேவனார்தொகையே.


    வார் ஆரும் இளங் கொங்கை*  மைதிலியை மணம் புணர்வான்* 
    கார் ஆர் திண் சிலை இறுத்த*  தனிக் காளை கருதும் இடம்*

    ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்*  திருத்தேவனார்தொகையே.


    கும்பம் மிகு மத யானை*  பாகனொடும் குலைந்து வீழ*     
    கொம்பு-அதனைப் பறித்து எறிந்த*  கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*

    வம்பு அவிழும் செண்பகத்து*  மணம் கமழும் நாங்கைதன்னுள்* 
    செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.   


    கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
    சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*

    கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    


    கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
    அரசு அவன் தம்பிக்கு*  அளித்தவன் உறைகோயில்*

    செம்பலாநிரை செண்பகம்மாதவி*  சூதகம் வாழைகள்சூழ்* 
    வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர*  வண்புருடோத்தமமே.       


    பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி*  அக்காளியன் பண அரங்கில்* 
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த*  உம்பர்கோன் உறைகோயில்*

    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்* 
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
    கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*

    கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து*  அதன் பாகனைச் சாடிப் புக்கு*  
    ஒருங்க மல்லரைக் கொன்று*  பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*

    கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு*  கழனியில் மலி வாவி* 
    மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து*  ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட* 
    வாணனை ஆயிரம் தோள்களும்*  துணித்தவன் உறை கோயில்*

    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்*  பகலவன் ஒளி மறைக்கும்* 
    மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று*  அயன் அலர் கொடு தொழுது ஏத்த* 
    கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய*   கண்ணன் வந்து உறை கோயில்* 

    கொங்கை கோங்குஅவை காட்ட*  வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்* 
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.  


    உளைய ஒண் திறல் பொன்பெயரோன்*  தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
    வெம் சினத்து அரி பரி கீறிய*  அப்பன் வந்து உறை கோயில்*

    இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு*  எழில் கொள் பந்து அடிப்போர்*
    கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.       


    வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்*  வன்சாபம் மற்றுஅதுநீங்க* 
    மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த*  எம்முகில் வண்ணன் உறைகோயில்*

    பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்*  வண்பழம் விழ வெருவிப் போய்* 
    வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    இந்து வார் சடை ஈசனைப் பயந்த*  நான் முகனைத் தன் எழில் ஆரும்* 
    உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்* 

    குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து*  தன் குருளையைத் தழுவிப் போய்* 
    மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
    அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 

    பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
    எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   


    பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
    வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 

    சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    


    பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை*  பேதியா இன்ப வெள்ளத்தை* 
    இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை*  ஏழ் இசையின் சுவைதன்னை* 

    சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மறைப் பெரும் பொருளை வானவர்கோனை*  கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.


    திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*  செழு நிலத்து உயிர்களும் மற்றும்* 
    படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*  பங்கயத்து அயன் அவன் அனைய*

    திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி*  மண் அளவிட்டவன் தன்னை* 
    அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க*  அலை கடல் துயின்ற அம்மானை* 

    திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    உயர் மணி மகுடம் சூடி நின்றானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.  


    'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்* 
    தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்*  தயரதன் மதலையை சயமே*

    தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    மல்லை மா முந்நீர் அதர்பட*  மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை* 
    கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க*  ஓர் வாளி தொட்டானை* 

    செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.


    வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*  வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை* 
    கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை*  கரு முகில் திரு நிறத்தவனை*

    செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே. 


    அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
    மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*

    தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்*  கார் முகிலே! என நினைந்திட்டு* 
    உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்*  உள்ளத்துள் ஊறிய தேனை*

    தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 

    ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
    மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.


    மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
    தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*

    நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
    சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)


    பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*  பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி* 
    பெற்று எடுத்த தாய்போல மடுப்ப*  ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*

    நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*  இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்* 
    சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.


    படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு*  பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்* 
    அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*  அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*

    மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*  மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி* 
    திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே* 


    வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*  வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த* 
    கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*  கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*

    ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*  எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்* 
    சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*  கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி* 
    முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*  மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 

    மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*  ஆடவரை மட மொழியார் முகத்து*  இரண்டு 
    சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.   


    தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*  அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*    
    கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*  இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*

    மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*  மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு* 
    தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*  பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்* 
    மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு*  மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*

    கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*  குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்* 
    செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*  திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
    நிலமடந்தைதனை இடந்து புல்கிக்*  கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 

    இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*  ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்* 
    சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*  எண் திசையும் மண்டலமும் மண்டி*
    அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*  முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*

    ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*  ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்* 
    சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
    கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*

    பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*


    தூம்பு உடைப் பனைக் கை வேழம்*  துயர் கெடுத்தருளி*  மன்னும் 
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக்*  கடு மழை காத்த எந்தை*

    பூம் புனல் பொன்னி முற்றும்*  புகுந்து பொன் வரன்ற*  எங்கும் 
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து*   இலங்கை
    வவ்விய இடும்பை தீரக்*  கடுங் கணை துரந்த எந்தை* 

    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்*  குங்குமம் கழுவிப் போந்த* 
    தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    மாத்தொழில் மடங்கச் செற்று*  மருது இற நடந்து* வன் தாள் 
    சேத்தொழில் சிதைத்துப்*  பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*

    நாத்தொழில் மறை வல்லார்கள்*  நயந்து அறம் பயந்த வண் கைத்* 
    தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  


    தாங்கு அரும் சினத்து வன் தாள்*  தடக் கை மா மருப்பு வாங்கி* 
    பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து*  எருது அடர்த்த எந்தை*

    மாங்கனி நுகர்ந்த மந்தி*  வந்து வண்டு இரிய*  வாழைத் 
    தீங்கனி நுகரும் நாங்கூர்த்*   திருமணிக்கூடத்தானே.  


    கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து*  தன்மேல் 
    வரும்அவள் செவியும் மூக்கும்*  வாளினால் தடிந்த எந்தை*

    பெருமகள் பேதை மங்கை*  தன்னொடும் பிரிவு இலாத* 
    திருமகள் மருவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.    


    கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
    அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 

    ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
    திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.         


    குன்றமும் வானும் மண்ணும்*  குளிர் புனல் திங்களோடு* 
    நின்றவெம் சுடரும் அல்லா*  நிலைகளும் ஆய எந்தை*

    மன்றமும் வயலும் காவும்*  மாடமும் மணங் கொண்டு*  எங்கும் 
    தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.          


    சங்கையும் துணிவும் பொய்யும்*  மெய்யும் இத் தரணி ஓம்பும்* 
    பொங்கிய முகிலும் அல்லாப்*  பொருள்களும் ஆய எந்தை*

    பங்கயம் உகுத்த தேறல்*  பருகிய வாளை பாய*   
    செங்கயல் உகளும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    பாவமும் அறமும் வீடும்*  இன்பமும் துன்பம் தானும்* 
    கோவமும் அருளும் அல்லாக்*  குணங்களும் ஆய எந்தை*

    'மூவரில் எங்கள் மூர்த்தி*  இவன், என முனிவரோடு* 
    தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே. 


    திங்கள் தோய் மாட நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானை*    
    மங்கையர் தலைவன் வண் தார்க்*  கலியன் வாய் ஒலிகள் வல்லார்*

    பொங்கு நீர் உலகம் ஆண்டு*  பொன்உலகு ஆண்டு*  பின்னும் 
    வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்*  விளங்குவாரே.    


    தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
    நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 

    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
    காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    


    மண் இடந்து ஏனம் ஆகி*  மாவலி வலி தொலைப்பான்* 
    விண்ணவர் வேண்டச் சென்று*  வேள்வியில் குறை இரந்தாய்!*

    துண் என மாற்றார்தம்மைத்*  தொலைத்தவர் நாங்கை மேய* 
    கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    உருத்து எழு வாலி மார்வில்*  ஒரு கணை உருவ ஓட்டி*    
    கருத்து உடைத் தம்பிக்கு*  இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*

    பருத்து எழு பலவும் மாவும்*  பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்* 
    கருத்தனே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.    


    முனைமுகத்து அரக்கன் மாள*  முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*  ஆங்கு 
    அனையவற்கு இளையவற்கே*  அரசு அளித்து அருளினானே*

    சுனைகளில் கயல்கள் பாயச்*  சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்* 
    கனை கழல் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே. 


    பட அரவு உச்சிதன்மேல்*  பாய்ந்து பல் நடங்கள்செய்து* 
    மடவரல் மங்கைதன்னை*  மார்வகத்து இருத்தினானே!*

    தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
    கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   


    மல்லரை அட்டு மாள*  கஞ்சனை மலைந்து கொன்று* 
    பல் அரசு அவிந்து வீழப்*  பாரதப் போர் முடித்தாய்*

    நல் அரண் காவின் நீழல்*  நறை கமழ் நாங்கை மேய* 
    கல் அரண் காவளம் தண்  பாடியாய்!* களைகண் நீயே.            


    மூத்தவற்கு அரசு வேண்டி*  முன்பு தூது எழுந்தருளி* 
    மாத்தமர் பாகன் வீழ*  மத கரி மருப்பு ஒசித்தாய்*

    பூத்தமர் சோலை ஓங்கி*  புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்* 
    காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    ஏவிளங் கன்னிக்கு ஆகி*  இமையவர் கோனைச் செற்று* 
    காவளம் கடிது இறுத்துக்*  கற்பகம் கொண்டு போந்தாய்*

    பூவளம் பொழில்கள் சூழ்ந்த*  புரந்தரன் செய்த நாங்கைக் 
    காவளம்பாடி மேய*  கண்ணனே!  களைகண் நீயே.   


    சந்தம் ஆய் சமயம் ஆகி*  சமய ஐம் பூதம் ஆகி* 
    அந்தம் ஆய் ஆதி ஆகி*  அரு மறை அவையும் ஆனாய்*

    மந்தம் ஆர் பொழில்கள்தோறும்*  மட மயில் ஆலும் நாங்கைக்* 
    கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.


    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும்*  நாங்கைக் 
    காவளம் பாடிமேய*  கண்ணனைக் கலியன் சொன்ன* 

    பாவளம் பத்தும் வல்லார்*  பார்மிசை அரசர் ஆகிக்* 
    கோ இள மன்னர் தாழக்*  குடைநிழல் பொலிவர்தாமே.    


    கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
    நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*

    திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே.


    கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
    நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
    எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.


    குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
    நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
    நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 


    கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
    நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*

    தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.


    வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
    நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
    பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.


    கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
    நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.


    கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
    நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 


    வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
    நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*

    சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.


    பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
    நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*

    தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 


    நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
    செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*

    கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)


    கவள யானைக் கொம்புஒசித்த*  கண்ணன் என்றும் காமருசீர்* 
    குவளை மேகம் அன்ன மேனி*  கொண்ட கோன் என் ஆனை என்றும்*

    தவள மாடம் நீடு நாங்கைத்*  தாமரையாள் கேள்வன் என்றும்* 
    பவள வாயாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    கஞ்சன் விட்ட வெம் சினத்த*  களிறு அடர்த்த காளை என்றும்* 
    வஞ்சம் மேவி வந்த பேயின்*  உயிரை உண்ட மாயன் என்றும்*

    செஞ்சொலாளர் நீடு நாங்கைத்*  தேவ-தேவன் என்று என்று ஓதி* 
    பஞ்சி அன்ன மெல் அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    அண்டர் கோன் என் ஆனை என்றும்*  ஆயர் மாதர் கொங்கை புல்கு 
    செண்டன் என்றும்*  நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*

    வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை*  மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
    பண்டுபோல் அன்று என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.      


    கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்*  கோல் வளையார் தம்முகப்பே* 
    மல்லை முந்நீர் தட்டு இலங்கை*  கட்டு அழித்த மாயன் என்றும்*

    செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி*
    பல் வளையாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    அரக்கர் ஆவி மாள அன்று*  ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற* 
    குரக்கரசன் என்றும்*  கோல வில்லி என்றும் மா மதியை*

    நெருக்கும் மாடம் நீடு நாங்கை*  நின்மலன்தான் என்று என்று ஓதி* 
    பரக்கழிந்தாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே. 


    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாதன் என்றும் நானிலம் சூழ்* 
    வேலை அன்ன கோல மேனி*  வண்ணன் என்றும்*

    மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*  தேவ தேவன் என்று என்று ஓதி* 
    பாலின் நல்ல மென் மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.            


    நாடி என்தன் உள்ளம் கொண்ட*  நாதன் என்றும்*  நான்மறைகள்-
    தேடி என்றும் காண மாட்டாச்*  செல்வன் என்றும்*

    சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பாடகம் சேர் மெல்அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


    உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்*  ஒண் சுடரோடு உம்பர் எய்தா* 
    நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*  தென் திசைக்குத்

    திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பலரும் ஏச என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


    கண்ணன் என்றும் வானவர்கள்*  காதலித்து மலர்கள் தூவும்* 
    எண்ணன் என்றும் இன்பன் என்றும்*  ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*

    திண்ண மாடம் நீடு நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பண்ணின் அன்ன மென்மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.    


    பாருள் நல்ல மறையோர் நாங்கைப்*  பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை* 
    வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்*  தாய் மொழிந்த மாற்றம்*

    கூர் கொள் நல்ல வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்*  இன்பம் நாளும் எய்துவாரே.(2)


    நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
    இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 

    எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
    நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       


    சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
    மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*

    நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
    எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்


    பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*    
    மூசி வண்டு முரலும்*  கண்ணி முடியீர்*

    உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து*  இங்கு அயர்த்தோம்*
    அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்*  இந்தளூரீரே!


    ஆசை வழுவாது ஏத்தும்*  எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு 
    தேசம் அறிய*  உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*

    காசின் ஒளியில் திகழும் வண்ணம்*  காட்டீர் எம் பெருமான்* 
    வாசி வல்லீர்! இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே!             


    தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்*  திசையும் இரு நிலனும்* 
    ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்*  அடியோம் காணோமால்*

    தாய் எம் பெருமான்*  தந்தை தந்தை ஆவீர்*  அடியோமுக் 
    கே எம் பெருமான் அல்லீரோ நீர்*  இந்தளூரீரே!


    சொல்லாது ஒழியகில்லேன்*  அறிந்த சொல்லில்*  நும் அடியார் 
    எல்லாரோடும் ஒக்க*  எண்ணியிருந்தீர் அடியேனை*

    நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்*  நமக்கு இவ் உலகத்தில்* 
    எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்*  இந்தளூரீரே!


    மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள*  எம்மைப் பணி அறியா* 
    வீட்டீர் இதனை வேறே சொன்னோம்*  இந்தளூரீரே*

    காட்டீர் ஆனீர்*  நும்தம் அடிக்கள் காட்டில்*  உமக்கு இந்த 
    நாட்டே வந்து தொண்டர் ஆன*  நாங்கள் உய்யோமே.  


    முன்னை வண்ணம் பாலின் வண்ணம்*  முழுதும் நிலைநின்ற* 
    பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்*  வண்ணம் எண்ணுங்கால்* 

    பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்*  புரையும் திருமேனி* 
    இன்ன வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே!


    எந்தை தந்தை தம்மான் என்று என்று*  எமர் ஏழ் அளவும்* 
    வந்து நின்ற தொண்டரோர்க்கே*  வாசி வல்லீரால்*

    சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்*  சிறிதும் திருமேனி* 
    இந்த வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே.     


    ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*

    சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
    ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)


    ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்*  ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்* 
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து*  பெரு நிலம் அளந்தவன் கோயில்*

    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்*  எங்கும் ஆம் பொழில்களின் நடுவே* 
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்*  திருவெள்ளியங்குடி அதுவே. (2)  


    ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*  அரக்கர் தம் சிரங்களை உருட்டி* 
    கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்*  கண்ணனார் கருதிய கோயில்*

    பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி*  பொதும்பிடை வரி வண்டு மிண்டி* 
    தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்*  திருவெள்ளியங்குடி அதுவே.


    கடு விடம் உடைய காளியன் தடத்தைக்*  கலக்கி முன் அலக்கழித்து* 
    அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*

    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்* 
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்*  திருவெள்ளியங்குடிஅதுவே. 


    கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த*  காளமேகத் திரு உருவன்* 
    பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற*  பரமனார் பள்ளிகொள் கோயில்*

    துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்*  தொகு திரை மண்ணியின் தென்பால்* 
    செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்*  திருவெள்ளியங்குடி அதுவே.           


    பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து*  பாரதம் கையெறிந்து*  ஒருகால் 
    தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*  செங்கண்மால் சென்று உறை கோயில்*

    ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி*  எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி* 
    சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற*  திருவெள்ளியங்குடி அதுவே.    


    காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற*  கடல் அரக்கர் தம் சேனை* 
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த*  கோல வில் இராமன் தன் கோயில்*

    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்*  ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி* 
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்*  திருவெள்ளியங்குடி அதுவே.


    ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த*  மாவலி வேள்வியில் புக்கு* 
    தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு*  திக்கு உற வளர்ந்தவன் கோயில்*

    அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்*  அரி அரி என்று அவை அழைப்ப* 
    வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்*  திருவெள்ளியங்குடி அதுவே.  


    முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்*  அசுரர் தம் பெருமானை*  அன்று அரி ஆய் 
    மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*

    படியிடை மாடத்து அடியிடைத் தூணில்*  பதித்த பல் மணிகளின் ஒளியால்* 
    விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய*  திருவெள்ளியங்குடி அதுவே.    


    குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்*  குணங்களே பிதற்றி நின்று ஏத்த* 
    அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற*  ஆழியான் அமர்ந்து உறை கோயில்*

    கடிஉடைக் கமலம் அடியிடை மலர*  கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய* 
    வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்*  வயல் வெள்ளியங்குடி அதுவே.


    பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்*  பார் இடந்து எயிற்றினில் கொண்டு* 
    தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற*  திருவெள்ளியங்குடியானை*

    வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்*  ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)      


    அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
    குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*

    நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
    பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    


    கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து*  உலகம் கைப்படுத்து* 
    பொள்ளைக் கரத்த போதகத்தின்*  துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*

    பள்ளச் செறுவில் கயல் உகள*  பழனக் கழனி-அதனுள் போய* 
    புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்*  புள்ளம்பூதங்குடி தானே. 


    மேவா அரக்கர் தென் இலங்கை*  வேந்தன் வீயச் சரம் துரந்து* 
    மாவாய் பிளந்து மல் அடர்த்து*  மருதம் சாய்த்த மாலது இடம்*

    காஆர் தெங்கின் பழம் வீழ*  கயல்கள் பாய குருகு இரியும்* 
    பூஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.    


    வெற்பால் மாரி பழுது ஆக்கி*  விறல் வாள் அரக்கர் தலைவன் தன்* 
    வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்*  துணித்த வல் வில் இராமன் இடம்*

    கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்*  கவின் ஆர் கூடம் மாளிகைகள்* 
    பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.  


    மையார் தடங் கண் கருங் கூந்தல்*  ஆய்ச்சி மறைய வைத்த தயிர்* 
    நெய்யார் பாலோடு அமுது செய்த*  நேமி அங் கை மாயன் இடம்*

    செய்யார் ஆரல் இரை கருதிச்*  செங் கால் நாரை சென்று அணையும்* 
    பொய்யா நாவின் மறையாளர்*  புள்ளம்பூதங்குடிதானே.    


    மின்னின் அன்ன நுண் மருங்குல்*  வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா* 
    மன்னு சினத்த மழ விடைகள்*  ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.     


    குடையா விலங்கல் கொண்டு ஏந்தி*  மாரி பழுதா நிரை காத்து* 
    சடையான் ஓட அடல் வாணன்*  தடந் தோள் துணித்த தலைவன் இடம்*

    குடியா வண்டு கள் உண்ண*  கோல நீலம் மட்டு உகுக்கும* 
    புடை ஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.     


    கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி* 
    இறையான் கையில் நிறையாத*  முண்டம் நிறைத்த எந்தை இடம்*

    மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்* 
    பொறையால் மிக்க அந்தணர் வாழ்*  புள்ளம்பூதங்குடி தானே.


    துன்னி மண்ணும் விண் நாடும்*  தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்* 
    அன்னம் ஆகி அரு மறைகள்*  அருளிச்செய்த அமலன் இடம்*

    மின்னு சோதி நவமணியும்*  வேயின் முத்தும் சாமரையும்* 
    பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்*  புள்ளம்பூதங்குடி தானே.


    கற்றா மறித்து காளியன்தன்*  சென்னி நடுங்க நடம்பயின்ற* 
    பொன் தாமரையாள் தன் கேள்வன்*  புள்ளம்பூதங்குடி தன்மேல*

    கற்றார் பரவும் மங்கையர் கோன்*  கார் ஆர் புயல்கைக் கலிகன்றி* 
    சொல்தான் ஈர் ஐந்து இவை பாட*  சோர நில்லா துயர் தாமே.       


    தாம்*  தம் பெருமை அறியார்*  
    தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*

    காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
    கூந்தல் கமழும்*  கூடலூரே.


    செறும் திண்*  திமில் ஏறு உடைய*  பின்னை 
    பெறும் தண் கோலம்*  பெற்றார் ஊர்போல்*

    நறும் தண் தீம்*  தேன் உண்ட வண்டு* 
    குறிஞ்சி பாடும்*  கூடலூரே.


    பிள்ளை உருவாய்த்*  தயிர் உண்டு*  அடியேன்
    உள்ளம் புகுந்த*  ஒருவர் ஊர்போல்*

    கள்ள நாரை*  வயலுள்*  கயல்மீன்
    கொள்ளை கொள்ளும்*  கூடலூரே.


    கூற்று ஏர் உருவின்*  குறள் ஆய்*  நிலம் நீர்
    ஏற்றான் எந்தை*  பெருமான் ஊர்போல்*

    சேற்று ஏர் உழவர்*  கோதைப் போது ஊண்*
    கோல் தேன் முரலும்*  கூடலூரே.


    தொண்டர் பரவ*  சுடர் சென்று அணவ* 
    அண்டத்து அமரும்*  அடிகள் ஊர்போல்*

    வண்டல் அலையுள்*  கெண்டை மிளிர* 
    கொண்டல் அதிரும்*  கூடலூரே. 


    தக்கன் வேள்வி*  தகர்த்த தலைவன்*
    துக்கம் துடைத்த*  துணைவர் ஊர்போல்*

    எக்கல் இடு*  நுண் மணல்மேல்*  எங்கும்
    கொக்கின் பழம் வீழ்*  கூடலூரே.


    கருந் தண் கடலும்*  மலையும் உலகும்*
    அருந்தும் அடிகள்*  அமரும் ஊர்போல*

    பெருந் தண் முல்லைப்*  பிள்ளை ஓடிக்*
    குருந்தம் தழுவும்*  கூடலூரே.


    கலை வாழ்*  பிணையோடு அணையும்*  திருநீர் 
    மலை வாழ் எந்தை*  மருவும் ஊர்போல்*

    இலை தாழ் தெங்கின்*  மேல்நின்று*  இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின்*  கூடலூரே.


    பெருகு காதல் அடியேன்*  உள்ளம்- 
    உருகப் புகுந்த*  ஒருவர் ஊர் போல்* 

    அருகு கைதை மலர*  கெண்டை 
    குருகு என்று அஞ்சும்* கூடலூரே.    


    காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
    மேவித் திகழும்*  கூடலூர்மேல்*

    கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
    பாவைப் பாட*  பாவம் போமே.


    வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
    கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*

    மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
    தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.


    வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
    இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
    திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          


    வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்*  உடலகம் இரு பிளவாக்* 
    கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மையின் ஆர்தரு வரால் இனம் பாய*  வண்தடத்திடைக் கமலங்கள்*
    தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.


    வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக*  ஐவர்கட்கு அரசு அளித்த* 
    காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!*  நின் காதலை அருள் எனக்கு*

    மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்*  வாய்அது துவர்ப்பு எய்த* 
    தீம் பலங்கனித் தேன் அது நுகர்*  திருவெள்ளறை நின்றானே. 


    மான வேல் ஒண் கண் மடவரல்*  மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்* 
    ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி*  வெண்முறுவல் செய்து அலர்கின்ற* 
    தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்*  திருவெள்ளறை நின்றானே.


    பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ*  அமுதினைக் கொடுத்தளிப்பான்* 
    அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!*  நின் அடிமையை அருள் எனக்கு*

    தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்*  தையலார் குழல் அணைவான்* 
    திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை*  திருவெள்ளறை நின்றானே. 


    ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  அரக்கன் தன் சிரம் எல்லாம்* 
    வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  தாமரை மலர் வார்ந்த* 
    தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.


    முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி*  இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த* 
    அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மன்னு கேதகை சூதகம் என்று இவை*  வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 
    தென்ன என்ன வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.      


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல்இடம் முழுதினையும்* 
    பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்*  எனக்கு அருள்புரியே,* 

    ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி*  வண்டு உழிதர*  மாஏறித்
    தீம் குயில் மிழற்றும் படப்பைத்*  திருவெள்ளறை நின்றானே.


    மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
    அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*

    நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
    எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 


    உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
    எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*

    சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
    அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          


    வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
    பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*

    தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
    செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.


    பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
    கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 

    வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
    அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.    


    விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
    வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 

    துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
    திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.        


    வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
    அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 

    உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
    செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.


    கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
    முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*

    குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
    அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.     


    கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
    துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 

    மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
    செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே        


    ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
    தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*

    வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
    தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே


    சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
    மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*

    வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
    ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  


    அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
    கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 

    நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
    வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.


    வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
    மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-

    உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
    திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
    விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்*  மெய்ய

    மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
    சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
    தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*

    கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
    ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
    ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
    மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!


    பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
    ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
    ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
    யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்' என்னும்*  பூமேல்-

    மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
    தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? 


    வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
    பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*

    தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
    தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? 


    உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
    மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*

    பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
    அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   


    பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
    வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

    சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
    அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
    நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்

    காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
    மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.


    கைம்மான மழ களிற்றை*  கடல் கிடந்த கருமணியை* 
    மைம்மான மரகதத்தை*  மறை உரைத்த திருமாலை* 

    எம்மானை எனக்கு என்றும் இனியானை*  பனி காத்த 
    அம்மானை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.


    பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
    ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

    கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
    ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
    தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 

    தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
    ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே.      


    வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
    தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 

    பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
    அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  


    நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
    ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*

    பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
    ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.        


    தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
    கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 

    வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
    அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  


    சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
    வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-

    கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
    அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        


    துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
    அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த

    எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
    அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
    மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*

    மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
    அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   


    ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
    காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*

    நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
    தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        


    பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
    பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*

    கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
    அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
    தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*

    பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
    அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
    துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  


    மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*

    சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     


    எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*

    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    


    ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
    ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*

    ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
    ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*

    வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 


    ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*

    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
    மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச

    சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
    ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
    அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*

    மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      


    ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
    மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து

    தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
    ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே


    வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
    காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*

    கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
    ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
    முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 

    கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
    அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
    நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*

    வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
    அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
    தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*

    போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
    ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
    தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*

    பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
    அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .


    ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
    காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*

    கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
    காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*

    ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 


    துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
    உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*

    வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
    அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
    ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*

    நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
    பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.


    கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
    பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*

    செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      


    வங்கம் ஆர் கடல்கள் ஏழும்*  மலையும் வானகமும் மற்றும்* 
    அம் கண் மா ஞாலம் எல்லாம்*  அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*

    திங்கள் மா முகில் அணவு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    எங்கள் மால் இறைவன் நாமம்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    ஒருவனை உந்திப் பூமேல்*  ஓங்குவித்து ஆகம்தன்னால்* 
    ஒருவனைச் சாபம் நீக்கி*  உம்பர் ஆள் என்று விட்டான்*

    பெரு வரை மதிள்கள் சூழ்ந்த*  பெரு நகர் அரவு அணைமேல்* 
    கரு வரை வண்ணன்தன் பேர்*  கருதி நான் உய்ந்த ஆறே.


    ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி*  உலகு எலாம் திரியும் ஈசன்* 
    ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன*  ஒண் புனலை ஈந்தான்* 

    தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த*  செறி வயல் தென் திருப்பேர்*
    வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.


    வக்கரன் வாய் முன் கீண்ட*  மாயனே என்று வானோர் 
    புக்கு*  அரண் தந்தருளாய் என்ன*  பொன் ஆகத்தானை* 

    நக்கு அரி உருவம் ஆகி*  நகம் கிளர்ந்து இடந்து உகந்த* 
    சக்கரச் செல்வன் தென்பேர்த்*  தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.


    விலங்கலால் கடல் அடைத்து*  விளங்கிழை பொருட்டு*  வில்லால் 
    இலங்கை மா நகர்க்கு இறைவன்*  இருபது புயம் துணித்தான்*

    நலம் கொள் நான்மறை வல்லார்கள்*  ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு* 
    மலங்கு பாய் வயல் திருப்பேர்*  மருவி நான் வாழ்ந்த ஆறே.


    வெண்ணெய் தான் அமுதுசெய்ய*  வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி* 
    கண்ணி ஆர் குறுங் கயிற்றால்*  கட்ட வெட்டொன்று இருந்தான்*

    திண்ண மா மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  வேலை 
    வண்ணனார் நாமம் நாளும்*  வாய் மொழிந்து உய்ந்த ஆறே.


    அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய*  ஆய்ப்பாடி தன்னுள்* 
    கொம்பு அனார் பின்னை கோலம்*  கூடுதற்கு ஏறு கொன்றான்* 

    செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  மேவும்- 
    எம்பிரான் நாமம் நாளும்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    நால் வகை வேதம் ஐந்து வேள்வி*  ஆறு அங்கம் வல்லார்* 
    மேலை வானவரின் மிக்க*  வேதியர் ஆதி காலம்* 

    சேல் உகள் வயல் திருப்பேர்ச்*  செங் கண் மாலோடும் வாழ்வார்* 
    சீல மா தவத்தர் சிந்தை ஆளி*  என் சிந்தையானே.


    வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
    கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*

    திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
    கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       


    தீது அறு நிலத்தொடு எரி காலினொடு*  நீர் கெழு விசும்பும் அவை ஆய்* 
    மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*  அவை ஆய பெருமான்* 

    தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*  தட மார்வர் தகைசேர்* 
    நாதன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   (2)


    உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    மெய்யின் அளவே அமுதுசெய்ய வல*  ஐயன்அவன் மேவும் நகர்தான்*

    மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு*  மலர் கிண்டி அதன்மேல்* 
    நைவளம் நவிற்று பொழில்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.     


    உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த*  தட மார்வர் தகை சேர்*

    வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி*  கங்குல் வயல் சூழ்* 
    நம்பன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.


    பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என*  வந்த அசுரர்* 
    இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல*  நின்ற பெருமான்*

    சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல*  அடிகொள் நெடு மா* 
    நறைசெய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      


    மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என*  வந்த அசுரர்* 
    தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக*  நொடி ஆம் அளவு எய்தான்*

    வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்*  இவை அம்கை உடையான்* 
    நாளும் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.     


    தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்*  துணை ஆக முன நாள்* 
    வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்*  இனிது மேவும் நகர்தான்*

    கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்*  எழில் ஆர் புறவு சேர்* 
    நம்பி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      


    தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்*  நந்தன் மதலை* 
    எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ*  நின்ற நகர்தான்*

    மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்*  மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
    நந்தி பணிசெய்த நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.   


    எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று*  முனியாளர் திரு ஆர்* 
    பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு*  கூட எழில் ஆர்*

    மண்ணில் இதுபோல நகர் இல்லை என*  வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
    நண்ணி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.           


    வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக*  மிக்க பெருநீர்* 
    அங்கம் அழியார் அவனது ஆணை*  தலை சூடும் அடியார் அறிதியேல்*

    பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி*  எங்கும் உளதால்* 
    நங்கள் பெருமான் உறையும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   


    நறை செய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்* 
    உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்*  அவை அம் கை உடையானை*  ஒளி சேர் 

    கறை வளரும் வேல் வல்ல*  கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்* 
    முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்*  முழுது அகலுமே.    


    வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு*  பண்டை நம் வினை கெட என்று*  அடிமேல் 
    தொண்டரும் அமரரும் பணிய நின்று*  அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*  அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!* 
    விண்ணவர் அமுது உண அமுதில் வரும்*  பெண் அமுது உண்ட எம் பெருமானே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல் 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் 
    விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்*  உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்* 
    கலை தரு குழவியின் உருவினை ஆய்*  அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.        


    பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்*  சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்* 
    ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று*  அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல், 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்*  ஏர் கெழும் உலகமும் ஆகி*   முத
    லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்*  சீர் கெழு நான்மறை ஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*  இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்* 
    பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்*  இருக்கினில் இன் இசை ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    காதல் செய்து இளையவர் கலவி தரும்*  வேதனை வினை அது வெருவுதல் ஆம்* 
    ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!*  போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்*  காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்* 
    ஓதல் செய் நான்மறை ஆகி*  உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே!       


    பூ மரு பொழில் அணி*  விண்ணகர் மேல்* 
    காமரு சீர்க்*  கலிகன்றி சொன்ன* 

    பா மரு தமிழ்*  இவை பாட வல்லார்* 
    வாமனன் அடி*  இணை மருவுவரே* 


    பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*  பொருள் இன்பம் என இரண்டும் 
    இறுத்தேன்*  ஐம்புலன்கள் கடன் ஆயின*  வாயில் ஒட்டி

    அறுத்தேன்*  ஆர்வச் செற்றம் அவைதம்மை*  மனத்து அகற்றி 
    வெறுத்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.    


    மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* 
    இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்*

    பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே


    மான் ஏய் நோக்கியர்தம்*  வயிற்றுக் குழியில் உழைக்கும்* 
    ஊன் ஏய் ஆக்கை தன்னை*  உதவாமை உணர்ந்து உணர்ந்து*

    வானே! மா நிலமே!*  வந்து வந்து என் மனத்து இருந்த 
    தேனே*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.      


    பிறிந்தேன் பெற்ற மக்கள்*  பெண்டிர் என்று இவர் பின் உதவாது 
    அறிந்தேன்*  நீ பணித்த அருள் என்னும்*  ஒள் வாள் உருவி

    எறிந்தேன்*  ஐம்புலன்கள் இடர் தீர*  எறிந்து வந்து 
    செறிந்தேன்*  நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே.   


    பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்*  பல்லாண்டு இசைப்ப* 
    ஆண்டார் வையம் எல்லாம்*  அரசு ஆகி*  முன் ஆண்டவரே-

    மாண்டார் என்று வந்தார்*  அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை* 
    வேண்டேன் நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    கல்லா ஐம்புலன்கள் அவை*  கண்டவாறு செய்யகில்லேன்* 
    மல்லா! மல் அமருள் மல்லர் மாள*  மல் அடர்த்த!*

    மல்லா மல்லல் அம் சீர்*  மதிள் நீர் இலங்கை அழித்த 
    வில்லா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.


    வேறா யான் இரந்தேன்*  வெகுளாது மனக்கொள் எந்தாய்!* 
    ஆறா வெம் நரகத்து*  அடியேனை இடக் கருதி* 

    கூற ஐவர் வந்து குமைக்கக்*  குடிவிட்டவரைத்* 
    தேறாது உன் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    தீ வாய் வல் வினையார்*  உடன் நின்று சிறந்தவர்போல்* 
    மேவா வெம் நரகத்து இட*  உற்று விரைந்து வந்தார்*

    மூவா வானவர்தம் முதல்வா!*  மதி கோள் விடுத்த 
    தேவா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே 


    போது ஆர் தாமரையாள்*  புலவி குல வானவர்தம் 
    கோதா*  கோது இல் செங்கோல்*  குடை மன்னர் இடை நடந்த

    தூதாதூ*  மொழியாய் சுடர்போல்*  என் மனத்து இருந்த 
    வேதா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே


    தேன் ஆர் பூம் புறவில்*  திருவிண்ணகர் மேயவனை* 
    வான் ஆரும் மதிள் சூழ்*  வயல் மங்கையர்கோன் மருவார்*

    ஊன் ஆர் வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்* 
    கோன் ஆய் வானவர்தம்*  கொடி மா நகர் கூடுவரே.      


    துறப்பேன் அல்லேன்*  இன்பம் துறவாது*  நின் உருவம் 
    மறப்பேன் அல்லேன்*  என்றும் மறவாது*  யான் உலகில்

    பிறப்பேன் ஆக எண்ணேன்*  பிறவாமை பெற்றது*  நின் 
    திறத்தேன் ஆதன்மையால்*  திருவிண்ணகரானே. (2) 


    துறந்தேன் ஆர்வச் செற்றச்*  சுற்றம் துறந்தமையால்* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  அடிமை திருமாலே*

    அறம்தான் ஆய்த் திரிவாய்*  உன்னை என் மனத்து அகத்தே* 
    திறம்பாமல் கொண்டேன்*  திருவிண்ணகரானே.  


    மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
    ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*

    கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
    தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      


    சாந்து ஏந்து மென் முலையார்*  தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து 
    ஆழ்ந்தேன்*  அரு நரகத்து அழுந்தும்*  பயன் படைத்தேன்* 

    போந்தேன் புண்ணியனே!*  உன்னை எய்தி என் தீவினைகள் 
    தீர்ந்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகரானே      


    மற்று ஓர் தெய்வம் எண்ணேன்*  உன்னை என் மனத்து வைத்துப் 
    பெற்றேன்*  பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*

    வற்றா நீள் கடல் சூழ்*  இலங்கை இராவணனைச் 
    செற்றாய்*  கொற்றவனே!*  திருவிண்ணகரானே. 


    மை ஒண் கருங் கடலும்*  நிலனும் மணி வரையும்* 
    செய்ய சுடர் இரண்டும்*  இவை ஆய நின்னை*  நெஞ்சில்

    உய்யும் வகை உணர்ந்தேன்*  உண்மையால் இனி *  யாதும் மற்று ஓர் 
    தெய்வம் பிறிது அறியேன்*  திருவிண்ணகரானே.    


    வேறே கூறுவது உண்டு*  அடியேன் விரித்து உரைக்கும் 
    ஆறே*  நீ பணியாது அடை*  நின் திருமனத்து* 

    கூறேன் நெஞ்சு தன்னால்*  குணம் கொண்டு*  மற்று ஓர் தெய்வம் 
    தேறேன் உன்னை அல்லால்*  திருவிண்ணகரானே.


    முளிந்தீந்த வெம் கடத்து*  மூரிப் பெருங் களிற்றால்* 
    விளிந்தீந்த மா மரம்போல்*  வீழ்ந்தாரை நினையாதே* 

    அளிந்து ஓர்ந்த சிந்தை*  நின்பால் அடியேற்கு*  வான் உலகம் 
    தெளிந்தே என்று எய்துவது?*  திருவிண்ணகரானே.     


    சொல்லாய் திரு மார்வா!*  உனக்கு ஆகித் தொண்டு பட்ட 
    நல்லேனை*  வினைகள் நலியாமை*  நம்புநம்பீ*

    மல்லா! குடம் ஆடீ!*  மதுசூதனே*  உலகில் 
    செல்லா நல் இசையாய்!*  திருவிண்ணகரானே.


    தார் ஆர் மலர்க் கமலத்*  தடம் சூழ்ந்த தண் புறவில்* 
    சீர் ஆர் நெடு மறுகின்*  திருவிண்ணகரானைக்* 

    கார் ஆர் புயல் தடக் கைக்*  கலியன் ஒலி மாலை* 
    ஆர் ஆர் இவை வல்லார்*  அவர்க்கு அல்லல் நில்லாவே.


    கண்ணும் சுழன்று பீளையோடு*  ஈளை வந்து ஏங்கினால்* 
    பண் இன் மொழியார்*  பைய நடமின் என்னாதமுன்*

    விண்ணும் மலையும்*  வேதமும் வேள்வியும் ஆயினான்* 
    நண்ணும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கொங்கு உண் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  நீர் 
    இங்கு என் இருமி*  எம்பால் வந்தது? என்று இகழாதமுன்* 

    திங்கள் எரி கால்*  செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*  
    நங்கள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொங்கு ஆர் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  எம்மை 
    எம் கோலம் ஐயா!*  என் இனிக் காண்பது? என்னாதமுன்*

    செங்கோல் வலவன்*  தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
    நம் கோன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொம்பும் அரவமும்*  வல்லியும் வென்ற நுண் ஏர் இடை* 
    வம்பு உண் குழலார்*  வாசல் அடைத்து இகழாதமுன்*

    செம் பொன் கமுகு இனம் தான்*  கனியும் செழும் சோலை சூழ்* 
    நம்பன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    விலங்கும் கயலும்*  வேலும் ஒண் காவியும் வென்ற கண்* 
    சலம் கொண்ட சொல்லார்*  தாங்கள் சிரித்து இகழாத முன்*

    மலங்கும் வராலும்*  வாளையும் பாய் வயல் சூழ்தரு* 
    நலம் கொள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    மின் நேர் இடையார்*  வேட்கையை மாற்றியிருந்து* 
    என் நீர் இருமி*  எம்பால் வந்தது என்று இகழாதமுன்*

    தொல் நீர் இலங்கை மலங்க*  விலங்கு எரி ஊட்டினான்* 
    நல் நீர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    வில் ஏர் நுதலார்*  வேட்கையை மாற்றி சிரித்து*  இவன் 
    பொல்லான் திரைந்தான் என்னும்*  புறன் உரை கேட்பதன்முன்*

    சொல் ஆர் மறை நான்கு ஓதி*  உலகில் நிலாயவர்* 
    நல்லார் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்*  மதனன் என்றார்தம்மைக்* 
    கேள்மின்கள் ஈளையோடு*  ஏங்கு கிழவன் என்னாதமுன்*

    வேள்வும் விழவும்*  வீதியில் என்றும் அறாத ஊர்* 
    நாளும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்*  காதன்மை விட்டிட* 
    குனி சேர்ந்து உடலம்*  கோலில் தளர்ந்து இளையாதமுன்*

    பனி சேர் விசும்பில்*  பால்மதி கோள் விடுத்தான் இடம்* 
    நனி சேர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.      


    பிறை சேர் நுதலார்*  பேணுதல் நம்மை இலாதமுன்* 
    நறை சேர் பொழில் சூழ்*  நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*

    கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்*  கலிகன்றி சொல்* 
    மறவாது உரைப்பவர்*  வானவர்க்கு இன் அரசு ஆவரே.   (2)         


    கலங்க முந்நீர் கடைந்து*  அமுதம் கொண்டு*  இமையோர் 
    துளங்கல் தீர*  நல்கு சோதிச் சுடர் ஆய*

    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்*  உடையான் ஊர்*
    நலம் கொள் வாய்மை*  அந்தணர் வாழும் நறையூரே.    


    முனை ஆர் சீயம் ஆகி*  அவுணன் முரண் மார்வம்* 
    புனை வாள் உகிரால்*  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*

    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்*  குயில் கூவும்* 
    நனை ஆர் சோலை சூழ்ந்து*  அழகு ஆய நறையூரே.   


    ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட* 
    சேனைத் தொகையைச் சாடி*  இலங்கை செற்றான் ஊர்*

    மீனைத் தழுவி வீழ்ந்து எழும்*  மள்ளர்க்கு அலமந்து* 
    நானப் புதலில்*  ஆமை ஒளிக்கும்நறையூரே.             


    உறி ஆர் வெண்ணெய் உண்டு*  உரலோடும் கட்டுண்டு* 
    வெறி ஆர் கூந்தல்*  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*

    பொறி ஆர் மஞ்ஞை*  பூம் பொழில்தோறும் நடம் ஆட* 
    நறு நாள்மலர்மேல்*  வண்டு இசை பாடும் நறையூரே.  


    விடை ஏழ் வென்று*  மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்* 
    நடையால் நின்ற*  மருதம் சாய்த்த நாதன் ஊர்* 

    பெடையோடு அன்னம்*  பெய்வளையார் தம்பின்சென்று* 
    நடையோடு இயலி*  நாணி ஒளிக்கும் நறையூரே.


    பகு வாய் வன் பேய்*  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு* 
    புகு வாய் நின்ற*  போதகம் வீழப் பொருதான் ஊர்*

    நெகு வாய் நெய்தல்*  பூ மது மாந்தி கமலத்தின்* 
    நகு வாய் மலர்மேல்*  அன்னம் உறங்கும் நறையூரே*    


    முந்து நூலும் முப்புரி நூலும்*  முன் ஈந்த* 
    அந்தணாளன் பிள்ளையை*  அஞ்ஞான்று அளித்தான் ஊர்*

    பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி*  புள் ஓடி* 
    நந்து வாரும்*  பைம் புனல் வாவி நறையூரே.     


    வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்*  விறல் வியூகம்* 
    விள்ள சிந்துக்கோன் விழ*  ஊர்ந்த விமலன் ஊர்*

    கொள்ளைக் கொழு மீன்*  உண் குருகு ஓடி பெடையோடும்* 
    நள்ளக் கமலத்*  தேறல் உகுக்கும் நறையூரே.


    பாரை ஊரும் பாரம் தீரப்*  பார்த்தன்தன்* 
    தேரை ஊரும்*  தேவதேவன் சேறும் ஊர்*

    தாரை ஊரும்*  தண் தளிர் வேலி புடை சூழ* 
    நாரை ஊரும்*  நல் வயல் சூழ்ந்த*  நறையூரே. 


    தாமத் துளப*  நீள் முடி மாயன் தான் நின்ற* 
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த*  நறையூர்மேல்* 

    காமக் கதிர் வேல் வல்லான்*  கலியன் ஒலி மாலை* 
    சேமத் துணை ஆம்*  செப்பும் அவர்க்கு திருமாலே.      


    அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*  அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்* 
    கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்*  பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*

    வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*  மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்* 
    செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*  குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்* 
    எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*  இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*

    உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*  உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள* 
    செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி*  பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா* 
    செவ்வி மாதிரம் எட்டும் தோளா*  அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*

    கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்* 
    தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.  


    பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி*  பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி* 
    அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*  அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*

    வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த* 
    செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    அன்று உலகம் மூன்றினையும் அளந்து*  வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு* 
    வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*  விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து* 

    பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*  புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
    தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*  தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்* 
    தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*  தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்* 

    மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*  விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட* 
    தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே* 
    இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*

    மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்* 
    சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்*  மன் எல்லாம் முன் அவியச் சென்று*  வென்றிச் 
    செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்*  சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*

    இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு*  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட* 
    திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
    பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*

    பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
    தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்*  திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்* 
    பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்*  புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*

    அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*  பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி* 
    வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*  விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.


    ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்*  விண்ட நிசாசரரைத்* 
    தோளும் தலையும் துணிவு எய்தச்*  சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*

    வேளும் சேயும் அனையாரும்*  வேல்கணாரும் பயில் வீதி* 
    நாளும் விழவின் ஒலி ஓவா*  நறையூர் நின்ற நம்பியே.    


    முனி ஆய் வந்து மூவெழுகால்*  முடி சேர் மன்னர் உடல் துணிய* 
    தனி வாய் மழுவின் படை ஆண்ட*  தார் ஆர் தோளான் வார் புறவில்*

    பனி சேர் முல்லை பல் அரும்ப*  பானல் ஒருபால் கண் காட்ட* 
    நனி சேர் கமலம் முகங்காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.


    தெள் ஆர் கடல்வாய் விட வாயச்*  சின வாள் அரவில் துயில் அமர்ந்து* 
    துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்*  இரந்தான் மாவலி மண்*

    புள் ஆர் புறவில் பூங் காவி*  பொலன் கொள் மாதர் கண் காட்ட* 
    நள் ஆர் கமலம் முகம் காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.            


    ஒளியா வெண்ணெய் உண்டான் என்று*  உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்* 
    விளியா ஆர்க்க ஆப்புண்டு*  விம்மி அழுதான் மென் மலர்மேல்*

    களியா வண்டு கள் உண்ண*  காமர் தென்றல் அலர் தூற்ற* 
    நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்*  நறையூர் நின்ற நம்பியே. 


    வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து* 
    கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*

    சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்* 
    நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.      


    வள்ளி கொழுநன் முதலாய*  மக்களோடு முக்கணான் 
    வெள்கி ஓட*  விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*

    பள்ளி கமலத்திடைப் பட்ட*  பகு வாய் அலவன் முகம் நோக்கி* 
    நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த*  நறையூர் நின்ற நம்பியே.


    மிடையா வந்த வேல் மன்னர் வீய*  விசயன் தேர் கடவி* 
    குடையா வரை ஒன்று எடுத்து*  ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்

    படையான்*  வேதம் நான்கு ஐந்து வேள்வி*  அங்கம் ஆறு இசை ஏழ்* 
    நடையா வல்ல அந்தணர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.  


    பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி*  கூந்தல் முடிக்க பாரதத்து* 
    கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க*  சங்கம் வாய் வைத்தான்*

    செந்தாமரைமேல் அயனோடு*  சிவனும் அனைய பெருமையோர்* 
    நந்தா வண் கை மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.      


    ஆறும் பிறையும் அரவமும்*  அடம்பும் சடைமேல் அணிந்து*  உடலம் 
    நீறும் பூசி ஏறு ஊரும்*  இறையோன் சென்று குறை இரப்ப*

    மாறு ஒன்று இல்லா வாச நீர்*  வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்* 
    நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  நறையூர் நின்ற நம்பியே 


    நன்மை உடைய மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*

    பன்னி உலகில் பாடுவார்*  பாடு சாரா பழ வினைகள்* 
    மன்னி உலகம் ஆண்டு போய்*  வானோர் வணங்க வாழ்வாரே.       


    மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
    தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*

    தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
    நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     


    முந்நீரை முன் நாள்*  கடைந்தானை*  மூழ்த்த நாள் 
    அந்நீரை மீன் ஆய்*  அமைத்த பெருமானை* 

    தென் ஆலி மேய*  திருமாலை எம்மானை* 
    நல்நீர் சூழ்*  நறையூரில் கண்டேனே.


    தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்* 
    மூவாமை நல்கி*  முதலை துணித்தானை* 

    தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*
    நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.    


    ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த* 
    சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை

    வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை* 
    நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.   


    கல் ஆர் மதிள் சூழ்*  கதி இலங்கைக் கார் அரக்கன்* 
    வல் ஆகம் கீள*  வரி வெம் சரம் துரந்த

    வில்லானை*  செல்வ விபீடணற்கு வேறாக* 
    நல்லானை நாடி*  நறையூரில் கண்டேனே .    


    உம்பர் உலகோடு*  உயிர் எல்லாம் உந்தியில்* 
    வம்பு மலர்மேல்*  படைத்தானை மாயோனை*

    அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை* 
    நம்பனை நாடி*  நறையூரில் கண்டேனே.     


    கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
    விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*

    மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
    நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.


    மண்ணின் மீ பாரம் கெடுப்பான்*  மற மன்னர்* 
    பண்ணின்மேல் வந்த*  படை எல்லாம் பாரதத்து*

    விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை* 
    நண்ணி நான் நாடி*  நறையூரில் கண்டேனே.      


    பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
    சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*

    கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
    நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)


    மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
    நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்

    கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
    பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  


    பெடை அடர்த்த மட அன்னம்*  பிரியாது*  மலர்க் கமல 
    மடல் எடுத்து மது நுகரும்*  வயல் உடுத்த திருநறையூர்*

    முடை அடர்த்த சிரம் ஏந்தி*  மூவுலகும் பலி திரிவோன்* 
    இடர் கெடுத்த திருவாளன்*  இணைஅடியே அடை நெஞ்சே! 


    கழி ஆரும் கன சங்கம்*  கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
    வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*

    பழி ஆரும் விறல் அரக்கன்*  பரு முடிகள்அவை சிதற* 
    அழல் ஆரும் சரம் துரந்தான்*  அடிஇணையே அடை நெஞ்சே!     


    சுளை கொண்ட பலங்கனிகள்*  தேன் பாய*  கதலிகளின் 
    திளை கொண்ட பழம் கெழுமித்*  திகழ் சோலைத் திருநறையூர்*

    வளை கொண்ட வண்ணத்தன்*  பின் தோன்றல்*  மூவுலகோடு 
    அளை வெண்ணெய் உண்டான் தன்*  அடிஇணையே அடை நெஞ்சே!


    துன்று ஒளித் துகில் படலம்*  துன்னி எங்கும் மாளிகைமேல்* 
    நின்று ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்*

    மன்று ஆரக் குடம் ஆடி*  வரை எடுத்து மழை தடுத்த* 
    குன்று ஆரும் திரள் தோளன்*  குரை கழலே அடை நெஞ்சே!    


    அகில் குறடும் சந்தனமும்*  அம் பொன்னும் அணி முத்தும்* 
    மிகக் கொணர்ந்து திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்*

    பகல் கரந்த சுடர் ஆழிப்*  படையான் இவ் உலகு ஏழும்* 
    புகக் கரந்த திரு வயிற்றன்*  பொன்அடியே அடை நெஞ்சே !            


    பொன் முத்தும் அரி உகிரும்*  புழைக் கை மா கரிக் கோடும்* 
    மின்னத் தண் திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்* 

    மின் ஒத்த நுண் மருங்குல்*  மெல்இயலைத்*  திரு மார்வில் 
    மன்ன தான் வைத்து உகந்தான்*  மலர் அடியே அடை நெஞ்சே!    


    சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்*  செங் கமலத்து இடை இடையில்*
    பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்*  பயன் விளைக்கும் திருநறையூர்*

    கார் தழைத்த திரு உருவன்*  கண்ணபிரான் விண்ணவர்கோன்* 
    தார் தழைத்த துழாய் முடியன்*  தளிர் அடியே அடை நெஞ்சே!      


    குலை ஆர்ந்த பழுக் காயும்*  பசுங் காயும் பாளை முத்தும்* 
    தலை ஆர்ந்த இளங் கமுகின்*  தடஞ் சோலைத் திருநறையூர்*

    மலை ஆர்ந்த கோலம் சேர்*  மணி மாடம் மிக மன்னி* 
    நிலை ஆர நின்றான்*  தன் நீள் கழலே அடை நெஞ்சே!         


    மறை ஆரும் பெரு வேள்விக்*  கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்* 
    நிறை ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்* 

    பிறை ஆரும் சடையானும்*  பிரமனும் முன் தொழுது ஏத்த* 
    இறை ஆகி நின்றான் தன்*  இணைஅடியே அடை நெஞ்சே!         


    திண் களக மதிள் புடை சூழ்*  திருநறையூர் நின்றானை* 
    வண் களகம் நிலவு எறிக்கும்*  வயல் மங்கை நகராளன்*

    பண்கள் அகம் பயின்ற சீர்ப்*  பாடல்இவை பத்தும் வல்லார்* 
    விண்கள் அகத்து இமையவர் ஆய்*  வீற்றிருந்து வாழ்வாரே.      


    கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை 
    இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*

    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்* 
    நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    விடம்தான் உடைய அரவம் வெருவ*  செருவில் முன நாள்*  முன் 
    தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு*  மிக்க தாள் ஆளன்*

    இடந்தான் வையம் கேழல் ஆகி*  உலகை ஈர் அடியால்* 
    நடந்தானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே. 


    பூணாது அனலும்*  தறுகண் வேழம் மறுக*  வளை மருப்பைப் 
    பேணான் வாங்கி*  அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*

    பாணா வண்டு முரலும் கூந்தல்*  ஆய்ச்சி தயிர் வெண்ணெய்* 
    நாணாது உண்டான் நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    கல் ஆர் மதிள் சூழ்*  கச்சி நகருள் நச்சி*  பாடகத்துள் 
    எல்லா உலகும் வணங்க*  இருந்த அம்மான்*  இலங்கைக்கோன்

    வல் ஆள் ஆகம் வில்லால்*  முனிந்த எந்தை*  விபீடணற்கு 
    நல்லானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    குடையா வரையால்*  நிரை முன் காத்த பெருமான்*  மருவாத 
    விடைதான் ஏழும் வென்றான்*  கோவல் நின்றான்*  தென் இலங்கை

    அடையா அரக்கர் வீயப்*  பொருது மேவி வெம் கூற்றம்* 
    நடையா உண்ணக் கண்டான் நாமம்*  நமோ நாராயணமே.


    கான எண்கும் குரங்கும்*  முசுவும் படையா*  அடல் அரக்கர் 
    மானம் அழித்து நின்ற*  வென்றி அம்மான்*  எனக்கு என்றும்

    தேனும் பாலும் அமுதும் ஆய*  திருமால் திருநாமம்*
    நானும் சொன்னேன் நமரும் உரைமின்*  நமோ நாராயணமே.   


    நின்ற வரையும் கிடந்த கடலும்*  திசையும் இரு நிலனும்* 
    ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி*  நின்ற அம்மானார்*

    குன்று குடையா எடுத்த*  அடிகளுடைய திருநாமம்* 
    நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்*  நமோ நாராயணமே.


    கடுங் கால் மாரி கல்லே பொழிய*  அல்லே எமக்கு என்று 
    படுங்கால்*  நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*

    நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி*  நிரையைச் சிரமத்தால்* 
    நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்*  நமோ நாராயணமே.       


    பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை*  நில மா மகள் மலர் மா 
    மங்கை*  பிரமன் சிவன் இந்திரன்*  வானவர் நாயகர் ஆய*

    எங்கள் அடிகள் இமையோர்*  தலைவருடைய திருநாமம்*
    நங்கள் வினைகள் தவிர உரைமின்*  நமோ நாராயணமே.        


    வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று*  நறையூர் நெடுமாலை* 
    நாவில் பரவி நெஞ்சில் கொண்டு*  நம்பி நாமத்தை*

    காவித் தடங் கண் மடவார் கேள்வன்*  கலியன் ஒலி மாலை* 
    மேவிச் சொல்ல வல்லார் பாவம்*  நில்லா வீயுமே.        


    கறவா மட நாகு*  தன் கன்று உள்ளினால்போல்* 
    மறவாது அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்*

    நறவு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பி* 
    பிறவாமை எனைப் பணி*  எந்தை பிரானே!*


    வற்றா முதுநீரொடு*  மால் வரை ஏழும்* 
    துற்று ஆக முன் துற்றிய*  தொல் புகழோனே*

    அற்றேன் அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்* 
    பெற்றேன் அருள் தந்திடு*  என் எந்தை பிரானே!*  


    தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்* 
    ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*

    கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி* 
    ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.       


    புள் வாய் பிளந்த*  புனிதா! என்று அழைக்க* 
    உள்ளே நின்று*  என் உள்ளம் குளிரும் ஒருவா!*

    கள்வா!*  கடல்மல்லைக் கிடந்த கரும்பே* 
    வள்ளால்! உன்னை*  எங்ஙனம் நான் மறக்கேனே*


    வில் ஏர் நுதல்*  நெடுங் கண்ணியும் நீயும்* 
    கல் ஆர் கடுங் கானம்*  திரிந்த களிறே*

    நல்லாய் நர நாரணனே!*  எங்கள் நம்பி* 
    சொல்லாய் உன்னை*  யான் வணங்கித் தொழும் ஆறே *


    பனி ஏய் பரங் குன்றின்*  பவளத் திரளே* 
    முனியே*  திருமூழிக்களத்து விளக்கே*

    இனியாய் தொண்டரோம்*  பருகும் இன் அமுது ஆய 
    கனியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*. 


    கதியேல் இல்லை*  நின் அருள் அல்லது எனக்கு* 
    நிதியே!*  திருநீர்மலை நித்திலத் தொத்தே*

    பதியே பரவித் தொழும்*  தொண்டர் தமக்குக் 
    கதியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*     


    அத்தா! அரியே! என்று*  உன்னை அழைக்க *
    பித்தா என்று பேசுகின்றார்*  பிறர் என்னை*

    முத்தே!  மணி மாணிக்கமே!*  முளைக்கின்ற 
    வித்தே*  உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!* 


    தூயாய்! சுடர் மா மதிபோல்*  உயிர்க்கு எல்லாம்* 
    தாய் ஆய் அளிக்கின்ற*  தண் தாமரைக் கண்ணா!*

    ஆயா! அலை நீர் உலகு ஏழும்*  முன் உண்ட 
    வாயா*  உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*


    வண்டு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நம்பிக்கு*  என்றும்- 
    தொண்டு ஆய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    தொண்டீர்! இவை பாடுமின்*  பாடி நின்று ஆட* 
    உண்டே விசும்பு*  உம்தமக்கு இல்லை துயரே*   (2)
     


    புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து*  என்னை உள்ளம் கொண்ட- 
    கள்வா! என்றலும்*  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*

    உள்ளே நின்று உருகி*  நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்* 
    நள்ளேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*    


    ஓடா ஆள் அரியின்*  உரு ஆய் மருவி என் தன்-
    மாடே வந்து*  அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*

    பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு* 
    நாடேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*.   


    எம்மானும் எம் அனையும்*  என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்* 
    அம்மானும் அம்மனையும்*  அடியேனுக்கு ஆகி நின்ற*

    நல் மான ஒண் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ!*  உன்- 
    மைம் மான வண்ணம் அல்லால்*  மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*        


    சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்*  உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல் 
    உறைவாய்*  என் நெஞ்சின் உள்ளே*  உறைவாய் உறைந்ததுதான்*

    அறியாது இருந்தறியேன் அடியேன்*  அணி வண்டு கிண்டும்* 
    நறை வாரும் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    நீண்டாயை வானவர்கள்*  நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்* 
    ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு*  நான் அடிமை

    பூண்டேன்*  என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்* 
    நான்தான் உனக்கு ஒழிந்தேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    எம் தாதை தாதை அப்பால்*  எழுவர் பழ அடிமை 
    வந்தார்*  என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*

    அந்தோ! என் ஆர் உயிரே!*  அரசே அருள் எனக்கு* 
    நந்தாமல் தந்த எந்தாய்!*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    மன் அஞ்ச ஆயிரம் தோள்*  மழுவில் துணித்த மைந்தா* 
    என் நெஞ்சத்துள் இருந்து*  இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்* 

    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்*  வளைத்து வைத்தேன்* 
    நல் நெஞ்ச அன்னம் மன்னும்*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    எப்போதும் பொன் மலர் இட்டு*  இமையோர் தொழுது*  தங்கள்- 
    கைப்போது கொண்டு இறைஞ்சி*  கழல்மேல் வணங்க நின்றாய்*

    இப்போது என் நெஞ்சின் உள்ளே*  புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- 
    நல் போது வண்டு கிண்டும்*  நறையூர் நின்ற நம்பீயோ!*           


    ஊன் நேர் ஆக்கைதன்னை*  உழந்து ஓம்பி வைத்தமையால்* 
    யான் ஆய் என்தனக்கு ஆய்*  அடியேன் மனம் புகுந்த

    தேனே!*  தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்* 
    நானே எய்தப் பெற்றேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*     


    நல் நீர் வயல் புடை சூழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கல் நீர மால் வரைத் தோள்*  கலிகன்றி மங்கையர்கோன்*

    சொல் நீர சொல்மாலை*  சொல்லுவார்கள் சூழ் விசும்பில்- 
    நல் நீர்மையால் மகிழ்ந்து*  நெடுங் காலம் வாழ்வாரே.  (2)


    சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*  செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் 
    மனமுள் கொண்டு*  என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை*  மரம் ஏழ் எய்த மைந்தனை*

    நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்* 
    கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*  என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)


    தாய் நினைந்த கன்றே ஒக்க*  என்னையும் தன்னையே நினைக்கச் செய்து*  தான் எனக்கு 
    ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*  அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட

    வாயனை*  மகரக் குழைக் காதனை*  மைந்தனை மதிள் கோவல் இடைகழி 
    ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை*  என் அன்பனை அன்றி ஆதரியேனே.      


    வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*  மற்று ஓர் நெஞ்சு அறியான்*  அடியேனுடைச் 
    சிந்தை ஆய் வந்து*  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*

    கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை*  குடம் ஆடிய கூத்தனை 
    எந்தையை எந்தை தந்தை தம்மானை*  எம்பிரானை எத்தால் மறக்கேனே?* 


    உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
    இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி

    அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
    சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.


    ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது*  அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து 
    தாங்கு*  தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை*  உம்பர்க்கு அணி ஆய் நின்ற*

    வேங்கடத்து அரியை பரி கீறியை*  வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 
    தீங் கரும்பினை*  தேனை நன் பாலினை அன்றி*  என் மனம் சிந்தை செய்யாதே*.


    எள் தனைப்பொழுது ஆகிலும்*  என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்* 
    தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*  தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்

    கட்டியை*  கரும்பு ஈன்ற இன் சாற்றை*  காதலால் மறை நான்கும் முன் ஓதிய 
    பட்டனை*  பரவைத் துயில் ஏற்றை*  என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.     


    பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற*  பாலை ஆகி இங்கே புகுந்து*  என் 
    கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*  கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*

    விண் உளார் பெருமானை எம்மானை*  வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் 
    வண்ணன்*  மா மணி வண்ணன் எம் அண்ணல்*  வண்ணமே அன்றி வாய் உரையாதே*


    இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்*  எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்*  அடும் 
    துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*  தோற்றத் தொல் நெறியை*  வையம் தொழப்படும்

    முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*  பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் 
    கனியை*  காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.


    என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்* 
    தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்*  அன்று இடந்தவனை தழலே புரை*

    மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*  சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்* 
    பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*  என் மனம் போற்றி என்னாதே*


    தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்*  தோன்றல் வாள் கலியன்*  திரு ஆலி- 
    நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்*  நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-

    சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*  தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்* 
    பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)


    கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
    மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*

    விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
    தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*


    அம் புருவ வரி நெடுங் கண்*  அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்* 
    கொம்பு உருவ விளங்கனிமேல்*  இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்* 

    வம்பு அலரும் தண் சோலை*  வண் சேறை வான் உந்து கோயில் மேய* 
    எம் பெருமான் தாள் தொழுவார்*  எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.  


    மீது ஓடி வாள் எயிறு மின் இலக*  முன் விலகும் உருவினாளைக்* 
    காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த*  கைத்தலத்தா! என்று நின்று*

    தாதோடு வண்டு அலம்பும்*  தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி* 
    போதோடு புனல் தூவும் புண்ணியரே*  விண்ணவரின் பொலிகின்றாரே*     


    தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ* 
    போர் ஆளும் சிலைஅதனால்*  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்

    தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்* 
    பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.


    வந்திக்கும் மற்றவர்க்கும்*  மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்* 
    முந்திச் சென்று அரி உரு ஆய்*  இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*

    சந்தப் பூ மலர்ச் சோலைத்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    சிந்திப்பார்க்கு என் உள்ளம்*  தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.


    பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த*  பண்பாளா என்று நின்று* 
    தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*  துணை இலேன் சொல்லுகின்றேன்*

    வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்*  வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்* 
    கண்டேனுக்கு இது காணீர்*  என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.


    பை விரியும் வரி அரவில்*  படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்* 
    மை விரியும் மணி வரைபோல்*  மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*

    செய் விரியும் தண் சேறை எம் பெருமான்*  திரு வடிவைச் சிந்தித்தேற்கு*  என் 
    ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்*  என் அன்புதானே*.


    உண்ணாது வெம் கூற்றம்*  ஓவாதபாவங்கள் சேரா*  மேலை- 
    விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்*  மென் தளிர்போல் அடியினானை*

    பண் ஆர வண்டு இயம்பும்*  பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை* 
    கண் ஆரக் கண்டு உருகி*  கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.


    கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்* 
    வெள்ளத்தேற்கு என்கொலோ*  விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-

    தள்ள தேன் மணம் நாறும்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்*  என் உள்ளம் உருகும் ஆறே*.       


    பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து*  வயல் நின்ற பெடையோடு*  அன்னம் 
    தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*  தண் சேறை அம்மான் தன்னை*

    வா மான் தேர்ப் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்* 
    தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்*  நும் துணைக் கையால் தொழுது நின்றே*.


    தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
    வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*

    முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.


    பாரித்து எழுந்த*  படை மன்னர் தம்மை மாள பாரதத்து- 
    தேரில் பாகன் ஆய் ஊர்ந்த*  தேவதேவன் ஊர்போலும்* 

    நீரில் பணைத்த நெடு வாளைக்கு*  அஞ்சிப் போன குருகு இனங்கள்* 
    ஆரல் கவுளோடு அருகு அணையும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்*  சிரங்கள் ஐஇரண்டும்* 
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக*  உதிர்த்த உரவோன் ஊர்போலும்*

    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்*  கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
    அம்பு அராவும் கண் மடவார்*  ஐம்பால் அணையும் அழுந்தூரே*.


    வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி*  அடியேன் மனம் புகுந்து*  என்- 
    உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்*  போன காதல் பெடையோடும்* 
    அள்ளல் செறுவில் கயல் நாடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    பகலும் இரவும் தானே ஆய்*  பாரும் விண்ணும் தானே ஆய்*
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    துகிலின் கொடியும் தேர்த் துகளும்*  துன்னி மாதர் கூந்தல்வாய்* 
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    ஏடு இலங்கு தாமரைபோல்*  செவ்வாய் முறுவல் செய்தருளி* 
    மாடு வந்து என் மனம் புகுந்து*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    நீடு மாடத் தனிச் சூலம்*  போழக் கொண்டல் துளி தூவ* 
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.         


    மாலைப் புகுந்து மலர்அணைமேல்*  வைகி அடியேன் மனம் புகுந்து*  என்- 
    நீலக் கண்கள் பனி மல்க*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    வேலைக் கடல்போல் நெடு வீதி*  விண் தோய் சுதை வெண் மணி மாடத்து* 
    ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்*  வீதி அழுந்தூரே*    


    வஞ்சி மருங்குல் இடை நோவ*  மணந்து நின்ற கனவகத்து*  என்- 
    நெஞ்சு நிறையக் கைகூப்பி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    பஞ்சி அன்ன மெல் அடி*  நல் பாவைமார்கள்*  ஆடகத்தின்- 
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    என் ஐம்புலனும் எழிலும் கொண்டு*  இங்கே நெருநல் எழுந்தருளி* 
    பொன் அம் கலைகள் மெலிவு எய்த*  போன புனிதர் ஊர்போலும்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    அன்னம் பெடையோடு உடன் ஆடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.


    நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
    அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*

    வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
    சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)


    சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
    சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*

    செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
    அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     


    கோவானார் மடியக்*  கொலையார் மழுக்கொண்டு அருளும்* 
    மூவா வானவனை*  முழுநீர் வண்ணனை*  அடியார்க்கு-

    ஆ! ஆ! என்று இரங்கித்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    தேவாதி தேவனை*  யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.


    உடையானை*  ஒலி நீர் உலகங்கள் படைத்தானை* 
    விடையான் ஓட அன்று*  விறல் ஆழி விசைத்தானை*

    அடையார் தென் இலங்கை அழித்தானை*  அணி அழுந்தூர்- 
    உடையானை*  அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.     


    குன்றால் மாரி தடுத்தவனை*  குல வேழம் அன்று- 
    பொன்றாமை*  அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*

    அன்று ஆவின்நறுநெய்*  அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்- 
    நின்றானை*  அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.


    கஞ்சனைக் காய்ந்தானை*  கண்ணமங்கையுள் நின்றானை* 
    வஞ்சனப் பேய் முலையூடு*  உயிர் வாய் மடுத்து உண்டானை* 

    செஞ்சொல் நான்மறையோர்*  தென் அழுந்தையில் மன்னி நின்ற* 
    அஞ்சனக் குன்றம் தன்னை*  அடியேன் கண்டுகொண்டேனே*.


    பெரியானை*  அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்* 
    உரி யானை உகந்தானவனுக்கும்*  உணர்வதனுக்கு

    அரியானை*  அழுந்தூர் மறையோர்கள்*  அடிபணியும் 
    கரியானை*  அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.      


    திருவாழ் மார்வன் தன்னை*  திசை மண்நீர் எரிமுதலா* 
    உருவாய் நின்றவனை*  ஒலிசேரும் மாருதத்தை*

    அருவாய் நின்றவனை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    கருவார் கற்பகத்தை*  கண்டுகொண்டு களித்தேனே*      


    நிலையாளாக*  என்னை யுகந்தானை*  நிலமகள்தன்-
    முலையாள் வித்தகனை*  முதுநான்மறை வீதிதொறும்*

    அலையாரும் கடல்போல் முழங்கும்*  தென்னழுந்தையில் மன்னி நின்ற*
    கலையார் சொற்பொருளைக்*  கண்டு கொண்டு களித்தேனே*.


    பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
    வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*

    ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   


    திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
    அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*

    கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
    முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.


    திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
    உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*

    ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
    அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)


    பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
    வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

    சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
    அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 


    நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
    செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*

    பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
    ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
    வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*

    நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
    அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
    பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 

    கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
    அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   


    தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
    தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-

    சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
    ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  


    கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
    இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 

    பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
    அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 


    நெடியானே! கடிஆர் கலிநம்பீ!*  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்* 
    கடிஆர் காளையர்ஐவர் புகுந்து*  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*

    குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*   கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி* 
    அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!*   அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
    போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 

    தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
    ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*


    அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
    கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*

    சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
    மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)


    செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
    வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*

    எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
    அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)


    முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண*  முனிவரொடு தானவர்கள் திசைப்ப*  வந்து- 
    பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்*  பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்* 

    செந்நெல் மலிகதிர் கவரி வீச*  சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி* 
    அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*


    குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு*  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*  
    நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன*  நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*

    மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு*  வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*  
    அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*     


    சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்*  திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி* 
    இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*  எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*

    புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க*  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல* 
    அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


    சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி*  திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு* 
    மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-  மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*

    இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்* 
    அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


    வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*  மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி* 
    தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்*  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*

    தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்* 
    ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* 


    பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி*  பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்* 
    அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*  அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*

    செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க* 
    அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


    கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து* 
    வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*

    செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
    அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


    ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற* 
    நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி*  நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*

    சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்* 
    ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*      


    பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
    அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*

    கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
    ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)


    கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
    வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-

    தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)


    தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி- 
    மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*

    திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே


    பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!* 
    அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

    சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே* 


    வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்* 
    தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*

    தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து 
    ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*


    நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்- 
    எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-

    செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே*  


    முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்* 
    கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*

    செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்* 
    தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே* 


    சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்- 
    மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*

    தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்- 
    தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)


    மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு* 
    உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்- 

    செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே* 


    கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
    பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*

    திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)


    சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*

    கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
    பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)


    பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை*  பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்- 
    தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை*  பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*

    அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை*  அமுதம் பொதிஇன் சுவைக்* 
    கரும்பினை கனியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   


    மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்*  மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை* 
    மைந்நிறக்கடலை கடல் வண்ணனை*  மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*

    நென்னலை பகலை இற்றை நாளினை*  நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை* 
    கன்னலை கரும்பினிடைத் தேறலை*  கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*  


    எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*  வாசவார் குழலாள் மலைமங்கை தன்- 
    பங்கனைப்*  பங்கில் வைத்து உகந்தான் தன்னை*  பான்மையை பனி மா மதியம் தவழ்* 

    மங்குலை சுடரை வடமாமலை-  உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்- 
    கங்குலை*  பகலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*  


    பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை*  தெள்ளியார் வணங்கப்படும் தேவனை* 
    மாயனை மதிள் கோவல்இடைகழி*  மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*

    ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை*  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை* 
    காசினை மணியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*  இம்மையை மறுமைக்கு மருந்தினை,* 
    ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்  ஐயனை*  கையில்ஆழி ஒன்றுஏந்திய   

    கூற்றினை*  குரு மாமணிக் குன்றினை  நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை* 
    காற்றினை புனலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   


    துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை*  சுடர் வான் கலன் பெய்தது ஓர் 
    செப்பினை*  திருமங்கை மணாளனை*  தேவனை திகழும் பவளத்துஒளி 

    ஒப்பனை*  உலகுஏழினை ஊழியை*  ஆழிஏந்திய கையனை அந்தணர் 
    கற்பினை*  கழுநீர் மலரும் வயல்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    திருத்தனை திசை நான்முகன் தந்தையை*  தேவ தேவனை மூவரில் முன்னிய 
    விருத்தனை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய

    அருத்தனை*  அரியை பரிகீறிய  அப்பனை*  அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற 
    கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்*  கன்று வீசிய ஈசனை*  பேய்மகள்- 
    துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை*  தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-

    நஞ்சினை*  அமுதத்தினை நாதனை*   நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை* 
    கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை*  பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற- 
    விண்ணினை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*

    மண்ணினை மலையை அலை நீரினை*  மாலை மாமதியை மறையோர் தங்கள்- 
    கண்ணினை*  கண்கள் ஆரளவும் நின்று*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*  


    கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*  காதலால் கலி கன்றி உரைசெய்த* 
    வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை*  வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*

    விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்*  மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
    கண்ண!*  நின் தனக்கும் குறிப்புஆகில்-  கற்கலாம்*  கவியின் பொருள் தானே*   (2)


    சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
    மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*

    முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
    கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
    பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*

    ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
    கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    துன்னுமா மணிமுடிமேல்*  துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,* 
    மின்னுமா மணிமகர குண்டலங்கள்*  வில்வீசும் என்கின்றாளால்*

    பொன்னின் மாமணி ஆரம்*  அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
    கன்னிமா மதிள்புடைசூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! 


    தார்ஆய தண்துளப*  வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்* 
    போர்ஆனைக் கொம்புஒசித்த*  புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*

    ஆரானும் காண்மின்கள்*  அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
    கார்வானம் நின்றுஅதிரும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    அடித்தலமும் தாமரையே*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,* 
    முடித்தலமும் பொன்பூணும்*  என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*

    வடித்தடங்கண் மலரவளோ*  வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்* 
    கடிக்கமலம் கள்உகுக்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    பேர்ஆயிரம் உடைய பேராளன்*  பேராளன் என்கின்றாளால்* 
    ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்*  எண்தோளன் என்கின்றாளால்*

    நீர்ஆர் மழைமுகிலே*  நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
    கார்ஆர் வயல் மருவும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!


    செவ்அரத்த உடைஆடை*  அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்* 
    அவ்அரத்த அடிஇணையும்*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*

    மைவளர்க்கும் மணிஉருவம்*  மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்* 
    கைவளர்க்கும் அழலாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    கொற்றப்புள் ஒன்றுஏறி*  மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்* 
    வெற்றிப்போர் இந்திரற்கும்*  இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*

    பெற்றக்கால் அவன்ஆகம்*  பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
    கற்றநூல் மறையாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    வண்டுஅமரும் வனமாலை*  மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்* 
    உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று*  ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*

    பண்டுஇவரைக் கண்டுஅறிவது*  எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
    கண்டவர்தம் மனம்வழங்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
    காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*

    பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)


    தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
    வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!

    துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
    கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)


    நீள்நிலா முற்றத்து*  நின்றுஇவள் நோக்கினாள்,* 
    காணுமோ!*  கண்ணபுரம் என்று காட்டினாள்,*

    பாணனார் திண்ணம் இருக்க*  இனிஇவள்- 
    நாணுமோ,?*  நன்று நன்று நறையூரர்க்கே. 


    அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
    வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*

    பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
    உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)


    உண்ணும் நாள்இல்லை*  உறக்கமும் தான்இல்லை,* 
    பெண்மையும் சால*  நிறைந்திலள் பேதைதான்,*

    கண்ணன்ஊர் கண்ணபுரம்*  தொழும் கார்க்கடல்- 
    வண்ணர்மேல்,*  எண்ணம் இவட்கு இது என்கொலோ!


    கண்ணன்ஊர்*  கண்ணபுரம் தொழும் காரிகை,* 
    பெண்மைஎன் தன்னுடை*  உண்மை உரைக்கின்றாள்,*

    வெண்ணெய்உண்டு ஆப்புண்ட*  வண்ணம் விளம்பினால்,* 
    வண்ணமும்*  பொன்நிறம் ஆவது ஒழியுமே. 


    வடவரை நின்றும் வந்து*  இன்று கணபுரம்,- 
    இடவகை கொள்வது*  யாம்என்று பேசினாள்,*

    மடவரல் மாதர் என் பேதை*  இவர்க்குஇவள்- 
    கடவதுஎன்,?*  கண்துயில் இன்று இவர் கொள்ளவே.


    தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
    இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*

    துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
    அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    


    தொண்டுஎல்லாம் நின்அடியே*  தொழுது உய்யுமா- 
    கண்டு,*  தான் கண்ணபுரம்*  தொழப் போயினாள்*

    வண்டுஉலாம் கோதை என் பேதை*  மணிநிறம்- 
    கொண்டுதான்,*  கோயின்மை செய்வது தக்கதே?


    முள்எயிறு ஏய்ந்தில,*  கூழை முடிகொடா,* 
    தெள்ளியள் என்பதுஓர்*  தேசுஇலள் என்செய்கேன்,*

    கள்அவிழ் சோலைக்*  கணபுரம் கைதொழும்- 
    பிள்ளையைப்,*  பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 


    கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
    பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*

    சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
    நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)


    கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
    திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
    வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)


    அரிவிரவு முகில்கணத்தால்*  அகில்புகையால் வரையோடும்* 
    தெரிவுஅரிய மணிமாடத்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வரிஅரவின் அணைத்துயின்று*  மழைமதத்த சிறுதறுகண்,* 
    கரிவெருவ மருப்புஒசித்தாற்கு*  இழந்தேன்என் கனவளையே. 


    துங்கமா மணிமாட*  நெடுமுகட்டின் சூலிகை, போம்* 
    திங்கள்மா முகில்துணிக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    பைங்கண்மால் விடைஅடர்த்து*  பனிமதிகோள் விடுத்துஉகந்த* 
    செங்கண்மால் அம்மானுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    கணம்மருவும் மயில்அகவு*  கடிபொழில்சூழ் நெடுமறுகின்,* 
    திணம்மருவு கனமதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,* 

    மணம்மருவு தோள்ஆய்ச்சி*  ஆர்க்கபோய், உரலோடும்* 
    புணர்மருதம் இறநடந்தாற்கு*  இழந்தேன் என் பொன்வளையே.


    வாய்எடுத்த மந்திரத்தால்*  அந்தணர்தம் செய்தொழில்கள்* 
    தீஎடுத்து மறைவளர்க்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    தாய்எடுத்த சிறுகோலுக்கு*  உளைந்துஓடி தயிர்உண்ட,* 
    வாய்துடைத்த மைந்தனுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.


    மடல்எடுத்த நெடுந்தாழை*  மருங்குஎல்லாம் வளர்பவளம்,* 
    திடல்எடுத்து சுடர்இமைக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    அடல்அடர்த்து அன்று இரணியனை*  முரண்அழிய அணிஉகிரால்,* 
    உடல்எடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    வண்டுஅமரும் மலர்ப்புன்னை*   வரிநீழல் அணிமுத்தம்,* 
    தெண்திரைகள் வரத்திரட்டும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    எண்திசையும் எழுகடலும்*  இருநிலனும் பெருவிசும்பும்,* 
    உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    கொங்குமலி கருங்குவளை*  கண்ஆகத் தெண்கயங்கள்* 
    செங்கமலம் முகம்அலர்த்தும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வங்கம்மலி தடங்கடலுள்*  வரிஅரவின் அணைத்துயின்ற,* 
    செங்கமல நாபனுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    வார்ஆளும் இளங்கொங்கை*  நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
    சீர்ஆளும் வரைமார்வன்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    பேராளன் ஆயிரம்பேர்*  ஆயிரவாய் அரவுஅணைமேல்* 
    பேராளர் பெருமானுக்கு*  இழந்தேன் என் பெய்வளையே.


    தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
    வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*

    காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
    நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)


    விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
    மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*

    கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
    வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)


    வேத முதல்வன்*  விளங்கு புரிநூலன்,* 
    பாதம் பரவிப்*  பலரும் பணிந்துஏத்தி,*

    காதன்மை செய்யும்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாது நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    விண்ட மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?* 
    அண்ட முதல்வன்*  அமரர்கள் எல்லாரும்,*

    கண்டு வணங்கும்*  கண்ணபுரத்து எம்பெருமான்* 
    வண்டு நறுந்துழாய்*  வந்துஊதாய் கோல்தும்பீ!


    நீர் மலிகின்றது ஓர்*  மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,* 
    சீர் மலிகின்றது ஓர்*  சிங்க உருஆகி,*

    கார்மலி வண்ணன்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்மலி தண்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    ஏர்ஆர் மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?*
    பார்ஆர் உலகம்*  பரவ பெருங்கடலுள்,*

    கார்ஆமை ஆன*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்ஆர் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    மார்வில் திருவன்*  வலன்ஏந்து சக்கரத்தன்,* 
    பாரைப் பிளந்த*  பரமன் பரஞ்சோதி,*

    காரில் திகழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    தாரில் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    வாமனன் கற்கி*  மதுசூதன் மாதவன்* 
    தார்மன்னு*  தாசரதிஆய தடமார்வன்,*

    காமன்தன் தாதை*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாம நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    நீல மலர்கள்*  நெடுநீர் வயல் மருங்கில்,* 
    சால மலர்எல்லாம்*  ஊதாதே,*  வாள்அரக்கர்-

    காலன்*  கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,* 
    கோல நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    நந்தன் மதலை*  நிலமங்கை நல்துணைவன்,* 
    அந்தம் முதல்வன்*  அமரர்கள் தம்பெருமான்,*

    கந்தம் கமழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    கொந்து நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
    கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*

    கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
    தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)


    தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
    சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*

    அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
    மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)


    மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்*  வரைபுரை திருமார்வில்,* 
    தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்*  தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*

    ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது*  ஒளியவன் விசும்புஇயங்கும்,* 
    தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன*  செய்வது ஒன்று அறியேனே!


    ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்*  வளைகளும் இறைநில்லா,* 
    பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை*  நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*

    தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை*  இணைமுலை வேகின்றதால்,* 
    ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்*  அஞ்சேல் என்பார் இலையே!


    கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்*  கழல்மன்னர் பெரும்போரில்,* 
    மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்*  வந்திலன், மறிகடல்நீர்*

    தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்*  தழல் முகந்து இளமுலைமேல்,* 
    இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை*  எனக்குஎனப் பெறலாமே!


    ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து*  இலங்கையை மலங்குவித்த- 
    ஆழியான்,*  நமக்கு அருளிய அருளொடும்*  பகல்எல்லை கழிகின்றதால்,*

    தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை*  சுடர்படு முதுநீரில்,* 
    ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்*  அந்தி வந்து அடைகின்றதே!     


    முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட*  முழங்குஅழல் எரிஅம்பின்,* 
    வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்*  வந்திலன் என்செய்கேன்,*

    எரியும் வெம்கதிர் துயின்றது*  பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
    கரிய நாழிகை ஊழியின் பெரியன*  கழியும்ஆறு அறியேனே!  


    கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து*  இலங்கையர் கோனது வரைஆகம்,- 
    மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த*  எம் அடிகளும் வாரானால்,*

    இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்*  விடைமணி அடும்,*  ஆயன்- 
    விலங்கல் வேயினது ஓசையும்ஆய்*  இனி விளைவது ஒன்றுஅறியேனே!  


    முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்*  முனிவனும் முனிவுஎய்த,* 
    மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய*  மைந்தனும் வாரானால்,*

    ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை*  அடங்க அம்சிறைகோலித்,* 
    தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்*  கொடுவினை அறியேனே!


    கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்*  கனவினில் அவன்தந்த,* 
    மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி*  என் வளைநெக இருந்தேனை,*

    சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை*  என் சிந்தையைச் சிந்துவிக்கும்,* 
    அனந்தல் அன்றிலின் அரிகுரல்*  பாவியேன் ஆவியை அடுகின்றதே!   


    வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
    ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*

    கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
    ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)


    தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
    திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*

    வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
    கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)


    பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்*  பொன்ற அன்று புள்ஊர்ந்து* 
    பெருந்தோள் மாலி தலைபுரள*  பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*

    இருந்தார் தம்மைஉடன் கொண்டு*  அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப* 
    கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
    அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*

    வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
    கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)


    மல்லை முந்நீர் அதர்பட*  வரிவெம் சிலைகால் வளைவித்து* 
    கொல்லை விலங்கு பணிசெய்ய*  கொடியோன் இலங்கை புகல்உற்று*

    தொல்லை மரங்கள் புகப்பெய்து*  துவலை நிமிர்ந்து வான்அணவ* 
    கல்லால் கடலை அடைத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    ஆமைஆகி அரிஆகி*  அன்னம்ஆகி,*  அந்தணர்தம்- 
    ஓமம்ஆகி ஊழிஆகி*  உவரி சூழ்ந்த நெடும்புணரி*

    சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்*  சிரமும் கரமும் துணித்து,*  முன்- 
    காமன் பயந்தான் கருதும்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    வருந்தாது இரு நீ மடநெஞ்சே*  நம்மேல் வினைகள் வாரா,*  முன்- 
    திருந்தா அரக்கர் தென்இலங்கை*  செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*

    பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து*  பின்னை மணாளன்ஆகி*  முன்- 
    கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்*  முதலை-தன்னால் அடர்ப்புண்டு* 
    கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய*  அதனுக்கு அருள்புரிந்தான்*

    அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு*  இளையோற்கு அரசை அருளி*  முன்- 
    கலைமாச் சிலையால் எய்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   


    மால்ஆய் மனமே! அருந்துயரில்*  வருந்தாது இரு நீ, வலிமிக்க* 
    கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்*  கதமா கழுதையும்* 

    மால்ஆர் விடையும் மதகரியும்*  மல்லர் உயிரும் மடிவித்து* 
    காலால் சகடம் பாய்ந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    குன்றால் மாரி பழுதுஆக்கி*  கொடிஏர் இடையாள் பொருட்டாக* 
    வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த*  வானோர் பெருமான் மாமாயன்*

    சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்*  திரிகால் சகடம் சினம்அழித்து* 
    கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை* 
    திருமா மகளால் அருள்மாரி*  செழு நீர்ஆலி வளநாடன்*

    மருவுஆர் புயல்கைக் கலிகன்றி*  மங்கை வேந்தன் ஒலிவல்லார்* 
    இருமா நிலத்துக்கு அரசுஆகி*  இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 


    வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
    குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*

    நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
    கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)


    இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
    துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*

    மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
    கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
    மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*

    முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
    கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
    போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-

    கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
    காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)


    தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
    அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*

    விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
    கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
    தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*

    கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
    எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  


    பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
    எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*

    சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
    கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      


    படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
    கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*

    முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
    கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே


    புலம்மனும் மலர்மிசை*  மலர்மகள் புணரிய*
    நிலமகள்என இன*  மகளிர்கள் இவரொடும்*

    வலம்மனு படையுடை*  மணிவணர் நிதிகுவைக்*
    கலம்மனு கணபுரம்*  அடிகள்தம் இடமே. 


    மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
    வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*

    கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
    ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)


    வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
    மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*

    ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
    கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)


    மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக*  அங்கு ஓர் வரைநட்டு* 
    இலங்கு சோதிஆர் அமுதம்*  எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*

    விலங்கல் திரியத் தடங்கடலுள்*  சுமந்து கிடந்த வித்தகனை*
    கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    பாரஆர் அளவும் முதுமுந்நீர்*  பரந்த காலம்,* வளைமருப்பின்-
    ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*

    கூர்ஆர் ஆரல்இரை கருதி*  குருகு பாய கயல் இரியும்*
    கார்ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    உளைந்த அரியும் மானிடமும்*  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து* 
    விளைந்த சீற்றம் விண்வெதும்ப*  வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*

    பிளந்து வளைந்த உகிரானை*  பெருந்தண் செந்நெல் குலைதடிந்து* 
    களம்செய் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே* 


    தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்*  வந்து தோன்றி மாவலிபால்*
    முழுநீர் வையம் முன்கொண்ட*  மூவா உருவின் அம்மானை*

    உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப*  ஒருபால் முல்லை முகையோடும்*
    கழுநீர் மலரும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    வடிவாய் மழுவே படைஆக*  வந்து தோன்றி மூவெழுகால்* 
    படிஆர் அரசு களைகட்ட*  பாழி யானை அம்மானை*

    குடியா வண்டு கொண்டுஉண்ண8  கோல நீலம் மட்டு உகுக்கும்* 
    கடிஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


    வையம் எல்லாம் உடன்வணங்க*  வணங்கா மன்னனாய்த் தோன்றி* 
    வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*

    செய்த வெம்போர் நம்பரனை*  செழுந்தண் கானல் மணம்நாறும்* 
    கைதை வேலிக் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே. 


    ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்*  ஒருபால் தோன்ற தான்தோன்றி*  
    வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்*  விண்பால் செல்ல வெம்சமத்துச்*

    செற்ற கொற்றத் தொழிலானை*  செந்தீ மூன்றும் இல்இருப்ப*  
    கற்ற மறையோர் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
    இவரித்து அரசர் தடுமாற*  இருள்நாள் பிறந்த அம்மானை*

    உவரி ஓதம் முத்துஉந்த*  ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
    கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


    மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
    தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்

    ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
    தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)


    கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
    மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 

    எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
    அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)


    தருமான மழைமுகிலை*  பிரியாது தன்அடைந்தார்*
    வரும்மானம் தவிர்க்கும்*  மணியை அணிஉருவின்*

    திருமாலை அம்மானை*  அமுதத்தை கடல்கிடந்த-
    பெருமானை*  அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 


    விடைஏழ் அன்றுஅடர்த்து*  வெகுண்டு விலங்கல்உறப்*
    படையால்ஆழி தட்ட*  பரமன் பரஞ்சோதி*

    மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்*  கண்ணபுரம்ஒன்று-
    உடையானுக்கு*  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?    


    மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
    புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*

    தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
    அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)


    வந்தாய் என்மனத்தே*  வந்துநீ புகுந்தபின்னை,* 
    எந்தாய்! போய்அறியாய்*  இதுவே அமையாதோ*

    கொந்துஆர் பைம்பொழில்சூழ்*  குடந்தைக் கிடந்துஉகந்த-
    மைந்தா,*  உன்னைஎன்றும்*  மறவாமை பெற்றேனே. 


    எஞ்சா வெம்நரகத்து*  அழுந்தி நடுங்குகின்றேற்கு*
    அஞ்சேல்என்று அடியேனை*  ஆட்கொள்ள வல்லானை*

    நெஞ்சே! நீநினையாது*  இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
    மஞ்சுஆர் மாளிகைசூழ்*  வயல்ஆலி மைந்தனையே.


    பெற்றார் பெற்றுஒழிந்தார்*  பின்னும்நின்று அடியேனுக்கு*
    உற்றான்ஆய் வளர்த்து*  என்உயிர்ஆகி நின்றானை*

    முற்றா மாமதிகோள் விடுத்தானை*  எம்மானை*
    எத்தால் யான்மறக்கேன்*  இதுசொல்என் ஏழைநெஞ்சே!


    கற்றார் பற்றுஅறுக்கும்*  பிறவிப் பெருங்கடலே*
    பற்றா வந்து அடியேன்*  பிறந்தேன் பிறந்தபின்னை*

    வற்றா நீர்வயல்சூழ்*  வயல்ஆலி அம்மானைப்-
    பெற்றேன்*  பெற்றதுவும்*  பிறவாமை பெற்றேனே.


    கண்ணார் கண்ணபுரம்*  கடிகை கடிகமழும்*
    தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*

    விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
    கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?


    செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*

    இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
    வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)


    வண்டுஆர்பூ மாமலர் மங்கை*  மணநோக்கம் 
    உண்டானே*  உன்னை உகந்துஉகந்து*  உன்தனக்கே

    தொண்டுஆனேற்கு*  என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
    கண்டானே*  கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)


    பெருநீரும் விண்ணும்*  மலையும் உலகுஏழும்* 
    ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய*  நின்னை அல்லால்*

    வருதேவர் மற்றுஉளர் என்று*  என்மனத்து இறையும்-
    கருதேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று*  இருப்பாரோடு-
    உற்றிலேன்*  உற்றதும்*  உன்அடியார்க்கு அடிமை*

    மற்றுஎல்லாம் பேசிலும்*  நின்திரு எட்டுஎழுத்தும்-
    கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)


    பெண்ஆனாள்*  பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
    உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை*  உகந்தேன்நான்*

    மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி*  மதுமலராள்-
    கண்ணாளா*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    பெற்றாரும் சுற்றமும்*  என்று இவை பேணேன்நான்* 
    மற்றுஆரும் பற்றுஇலேன்*  ஆதலால் நின்அடைந்தேன்*

    உற்றான்என்று உள்ளத்து வைத்து*  அருள் செய்கண்டாய்,*
    கற்றார்சேர்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    ஏத்திஉன் சேவடி*  எண்ணி இருப்பாரைப்*
    பார்த்திருந்து அங்கு*  நமன்தமர் பற்றாது*

    சோத்தம் நாம் அஞ்சுதும் என்று*  தொடாமைநீ,-
    காத்திபோல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    வெள்ளைநீர் வெள்ளத்து*  அணைந்த அரவுஅணைமேல்*
    துள்ளுநீர் மெள்ளத்*  துயின்ற பெருமானே* 

    வள்ளலே! உன்தமர்க்கு என்றும்*  நமன்தமர்-
    கள்ளர்போல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    மாண்ஆகி*  வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
    பூண்ஆகம் கீண்டதுவும்*  ஈண்டு நினைந்துஇருந்தேன்*

    பேணாத வல்வினையேன்*  இடர் எத்தனையும்-
    காணேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!        


    நாட்டினாய் என்னை*  உனக்குமுன் தொண்டுஆக* 
    மாட்டினேன் அத்தனையே கொண்டு*  என் வல்வினையை*

    பாட்டினால் உன்னை*  என் நெஞ்சத்து இருந்தமை-
    காட்டினாய்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    கண்டசீர்க்*  கண்ணபுரத்து உறை அம்மானை* 
    கொண்டசீர்த் தொண்டன்*  கலியன் ஒலிமாலை*

    பண்டமாய்ப் பாடும்*  அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
    அண்டம்போய் ஆட்சி*  அவர்க்கு அது அறிந்தோமே.   (2)


    வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,* 
    சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*

    அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-
    செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2) 


    கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
    துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*

    குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
    திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே  


    வாதை வந்து அடர வானமும் நிலனும்*  மலைகளும் அலைகடல் குளிப்ப,* 
    மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி*  விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*

    போதுஅலர் புன்னை மல்லிகை*  மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,* 
    சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
    பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*

    ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
    சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.


    மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*
    பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*
    செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  


    மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-
    குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*

    குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*
    செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,* 
    பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*

    கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,* 
    தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 


    அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு- 
    பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,* 
    திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*
    மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*

    துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,* 
    தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.


    கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,* 
    சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*

    மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
    உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2) 


    பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
    மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*

    என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)


    தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்*  சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
    சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்*  செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*

    பாடக மெல்அடியார் வணங்க*  பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
    ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*  மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
    தாயின நாயகர் ஆவர் தோழீ!*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*

    சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்*  செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
    ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்*  அச்சோ ஒருவர் அழகியவா!        


    வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,* 
    நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*

    செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,* 
    அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!  


    கோழியும் கூடலும் கோயில் கொண்ட*  கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
    பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*  மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
    ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வெம்சின வேழ மருப்புஒசித்த*  வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
    தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*   

    கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த*  காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,* 
    அஞ்சன மாமலையேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*   பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,* 
    பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    அணிகெழு தாமரை அன்ன கண்ணும்*  அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
    அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா! 


    மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட*  மாலிருஞ் சோலை மணாளர் வந்து,*  என்-
    நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*  நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*

    மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த*  மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,* 
    அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    எண்திசையும் எறிநீர்க் கடலும்*  ஏழ்உலகும் உடனே விழுங்கி,* 
    மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்*  மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*

    கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்*  கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்* 
    அண்டத்து அமரர் பணிய நின்றார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
    கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-

    இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
    மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)


    தன்னை நைவிக்கிலேன்*  வல்வினையேன் தொழுதும்எழு,*
    பொன்னை நைவிக்கும்*  அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*

    என்னை நைவித்து*  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,* 
    புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து*  அழகுஆய புல்லாணியே.  (2) 


    உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்*  நீழலில் முன்ஒருநாள்,*   

    பெருகுகா தன்மை என்உள்ளம்*  எய்தப் பிரிந்தான்இடம்,* 
    பொருதுமுந் நீர்கரைக்கே*  மணிஉந்து புல்லாணியே.     


    ஏது செய்தால் மறக்கேன்*  மனமே! தொழுதும் எழு,*
    தாது மல்கு தடம்சூழ் பொழில்*  தாழ்வர் தொடர்ந்து,*  பின்-

    பேதை நின்னைப் பிரியேன்இனி*  என்று அகன்றான்இடம்,* 
    போது நாளும் கமழும்*  பொழில்சூழ்ந்த புல்லாணியே.


    கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்*  கொடியேற்கு,*  முன்- 
    நங்கள்ஈசன்*  நமக்கே பணித்த மொழிசெய்திலன்*

    மங்கை நல்லாய்!  தொழுதும் எழு*  போய் அவன் மன்னும்ஊர்,* 
    பொங்கு முந்நீர் கரைக்கே*  மணி உந்து புல்லாணியே


    உணரில் உள்ளம் சுடுமால்*  வினையேன் தொழுதும் எழு,*
    துணரி நாழல் நறும்போது*  நம்சூழ் குழல்பெய்து,*  பின்- 

    தணரில் ஆவி தளரும்என*  அன்பு தந்தான்இடம்,* 
    புணரி ஓதம் பணில*  மணிஉந்து புல்லாணியே.  


    எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    வள்ளல் மாயன்*  மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*

    கள் அவிழும் மலர்க் காவியும்*  தூமடல் கைதையும்,* 
    புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த*  புல்லாணியே.   


    பரவி நெஞ்சே! தொழுதும்எழு*  போய் அவன் பாலம்ஆய்,*
    இரவும் நாளும் இனிகண் துயிலாது*  இருந்து என்பயன்?*

    விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,*  வெண்திரை*
    புரவி என்னப் புதம்செய்து*  வந்துஉந்து புல்லாணியே 


    அலமும் ஆழிப் படையும் உடையார்*  நமக்கு அன்பர்ஆய்,* 
    சலம்அதுஆகி தகவுஒன்று இலர்*  நாம் தொழுதும்எழு,*

    உலவு கால்நல் கழிஓங்கு*  தண்பைம் பொழிலூடு,*  இசை-
    புலவு கானல்*  களிவண்டுஇனம் பாடு புல்லாணியே. 


    ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,*  ஒளிமாமலர்ப்*
    பாதம் நாளும் பணிவோம்*  நமக்கே நலம்ஆதலின்,*

    ஆது தாரான்எனிலும் தரும்,*  அன்றியும் அன்பர்ஆய்ப்*
    போதும் மாதே! தொழுதும்*  அவன்மன்னு புல்லாணியே   


    இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்*  எழில்தாமரைப்,*
    புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த*  அழகுஆய புல்லாணிமேல்*

    கலங்கல் இல்லாப் புகழான்*  கலியன் ஒலிமாலைகள்,*
    வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது*  பாடுஇல் வைகுந்தமே  (2)


    காவார் மடல்பெண்ணை*  அன்றில்அரி குரலும்,*
    ஏவாயின் ஊடுஇயங்கும்*  எஃகின் கொடிதாலோ,*

    பூஆர் மணம்கமழும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    பாவாய்! இதுநமக்குஓர்*  பான்மையே ஆகாதே.   (2)


    முன்னம் குறள்உருஆய்*  மூவடிமண் கொண்டுஅளந்த,*
    மன்னன் சரிதைக்கே*  மால்ஆகி பொன்பயந்தேன்,*

    பொன்னம் கழிக்கானல்*  புள்இனங்காள்! புல்லாணி* 
    அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு*  ஆங்குஇதனைச் செப்புமினே


    வவ்வி துழாய்அதன்மேல்*  சென்ற தனிநெஞ்சம்,*
    செவ்வி அறியாது*  நிற்கும்கொல் நித்திலங்கள்*

    பவ்வத் திரைஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தெய்வச் சிலையாற்கு*  என் சிந்தைநோய் செப்புமினே. 


    பரிய இரணியனது ஆகம்*  அணிஉகிரால்,*
    அரிஉருஆய்க் கீண்டான் அருள்*  தந்தவா!  நமக்கு,*

    பொருதிரைகள் போந்துஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    அரிமலர்க்கண் நீர்ததும்ப*  அம்துகிலும் நில்லாவே.   


    வில்லால் இலங்கை மலங்க*  சரம்துரந்த,*
    வல்லாளன் பின்போன*  நெஞ்சம் வரும் அளவும்,*

    எல்லாரும் என்தன்னை*  ஏசிலும் பேசிடினும்,* 
    புல்லாணி எம்பெருமான்*  பொய் கேட்டுஇருந்தேனே   (2)


    சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்*  தேரோடும் போய்மறைந்தான்,* 
    அழன்று கொடிதுஆகி*  அம்சுடரோன் தான்அடுமால்,* 

    செழுந்தடம் பூஞ்சோலை சூழ்*  புல்லாணி கைதொழுதேன்,*  
    இழந்திருந்தேன் என்தன்*  எழில்நிறமும் சங்குமே.       


    கனைஆர் இடிகுரலின்*  கார்மணியின் நாஆடல்,*
    தினையேனும் நில்லாது*  தீயில் கொடிதாலோ,*

    புனைஆர் மணிமாடப்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    வினையேன்மேல் வேலையும்*  வெம்தழலே வீசுமே.


    தூம்புஉடைக்கை வேழம்*  வெருவ மருப்புஒசித்த*
    பாம்பின் அணையான்*  அருள்தந்தவா நமக்கு,*

    பூஞ்செருந்தி பொன்சொரியும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தேம்பல் இளம்பிறையும்*  என்தனக்கு ஓர்வெம்தழலே. 


    வேதமும் வேள்வியும்*  விண்ணும் இருசுடரும்,* 
    ஆதியும் ஆனான்*  அருள் தந்தவா நமக்கு,*

    போதுஅலரும் புன்னைசூழ்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    ஓதமும் நானும்*  உறங்காது இருந்தேனே. 


    பொன்அலரும் புன்னைசூழ்*  புல்லாணி அம்மானை*
    மின்இடையார் வேட்கைநோய் கூர*  இருந்ததனை,*

    கல்நவிலும் திண்தோள்*  கலியன் ஒலிவல்லார்,*
    மன்னவர்ஆய் மண்ஆண்டு*  வான்நாடும் முன்னுவரே   (2)


    தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
    துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*

    இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
    குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)


    தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த*  தண்மதியின் இளவாடை இன்னே,* 
    ஊதை திரிதந்து உழறிஉண்ண*  ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*  

    பேதையர் பேதைமையால் இருந்து*  பேசிலும் பேசுக பெய்வளையார்,*
    கோதை நறுமலர் மங்கைமார்வன்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 


    காலையும் மாலை ஒத்துண்டு*  கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
    போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்*  பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*

    மாலவன் மாமணி வண்ணன் மாயம்*  மற்றும் உள அவை வந்திடாமுன்,* 
    கோலமயில் பயிலும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து*  கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
    ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள*  ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*

    பெருமணி வானவர் உச்சிவைத்த*  பேர்அருளாளன் பெருமைபேசி,* 
    குருமணி நீர்கொழிக்கும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  


    திண்திமில் ஏற்றின் மணியும்*  ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
    கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற*  கோல இளம்பிறையோடு கூடி,*

    பண்டைய அல்ல இவை நமக்கு*  பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,* 
    கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    எல்லியும் நன்பகலும் இருந்தே*  ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,* 
    நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,*  நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*

    வல்லன சொல்லி மகிழ்வரேலும்*   மாமணி வண்ணரை நாம்மறவோம்,* 
    கொல்லை வளர் இளமுல்லை புல்கு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    செங்கண் நெடிய கரியமேனித்*  தேவர் ஒருவர் இங்கே புகுந்து,*  என்-
    அங்கம் மெலிய வளைகழல*  ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*

    ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு*  ஆடும் அதனை அறியமாட்டேன்,* 
    கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   


    கேவலம் அன்று கடலின் ஓசை*  கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,*  என்-
    ஆவி அளவும் அணைந்து நிற்கும்*  அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,* 

    ஏவலம் காட்டி இவன்ஒருவன்*  இப்படியே புகுந்து எய்திடாமுன்,* 
    கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    சோத்துஎன நின்று தொழ இரங்கான்*  தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்* 
    போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்*  போயின ஊர்அறியேன்,*  என்கொங்கை-

    மூத்திடுகின்றன*  மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,* 
    கூத்தன் இமையவர்கோன் விரும்பும்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
    பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-

    கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
    கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*

    தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
    கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)


    துங்கஆர் அரவத் திரைவந்து உலவ*  தொடுகடலுள்,-
    பொங்குஆர் அரவில் துயிலும்*  புனிதர்ஊர் போலும்,*

    செங்கால் அன்னம்*  திகழ்தண் பணையில் பெடையோடும்,*
    கொங்குஆர் கமலத்து*  அலரில் சேரும் குறுங்குடியே.


    வாழக் கண்டோம்*  வந்து காண்மின் தொண்டீர்காள்,*
    கேழல் செங்கண்*  மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*

    ஏழைச் செங்கால்*  இன்துணை நாரைக்கு இரை தேடி,* 
    கூழைப் பார்வைக்*  கார்வயல் மேயும் குறுங்குடியே. 


    சிரம்முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 
    உரமும் கரமும் துணித்த*  உரவோன்ஊர் போலும்,*

    இரவும் பகலும்*  ஈன்தேன் முரல,*  மன்றுஎல்லாம்-
    குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.


    கவ்வைக் களிற்று மன்னர் மாள*  கலிமாத்தேர்-
    ஐவர்க்குஆய்,*  அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*

    மைவைத்து இலங்கு*  கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,* 
    கொவ்வைக் கனிவாய்க்*  கிள்ளை பேசும் குறுங்குடியே.


    தீநீர் வண்ண*  மாமலர் கொண்டு விரை ஏந்தி,* 
    தூநீர் பரவித்*  தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*

    மாநீர் வண்ணர்*  மருவி உறையும்இடம்,*  வானில்-
    கூன்நீர் மதியை*  மாடம் தீண்டும் குறுங்குடியே..


    வல்லிச்சிறு நுண்இடையாரிடை*  நீர்வைக்கின்ற,*
    அல்லல் சிந்தை தவிர*  அடைமின் அடியீர்காள்!,*

    சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,* 
    கொல்லை முல்லை*  மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே. 


    நார்ஆர்இண்டை*  நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,* 
    ஆரா அன்போடு*  எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*

    தாரா ஆரும்*  வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
    கூர்வாய் நாரை*  பேடையொடு ஆடும் குறுங்குடியே.


    நின்ற வினையும் துயரும் கெட*  மாமலர்ஏந்தி,* 
    சென்று பணிமின் எழுமின்*  தொழுமின் தொண்டீர்காள்,*

    என்றும் இரவும் பகலும்*  வரிவண்டு இசைபாட,* 
    குன்றின் முல்லை*  மன்றிடை நாறும் குறுங்குடியே..


    சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
    கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*

    கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
    நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)


    தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
    பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

    அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
    மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)


    மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
    அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

    துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
    மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
    பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

    நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
    மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
    எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

    விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
    வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 


    மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
    துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

    நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
    மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
    அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

    திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
    மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
    பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

    தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
    மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
    அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
    வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
    கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
    வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
    சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

    கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
    இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)


    முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
    அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*

    சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
    வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)


    இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி*  எழுமினோ தொழுதும்என்று,*  இமையோர்- 
    அண்டரும் பரவ அரவணைத் துயின்ற*  சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*

    விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்*   விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே


    பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த*  பெருநிலம் அருளின் முன்அருளி,* 
    அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்*  அளந்த எம் அடிகள்தம் கோயில்,*

    கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்*  குறவர்தம் கவணிடைத் துரந்த,*
    மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து*  சுடுசரம் அடுசிலைத் துரந்து,* 
    நீர்மை இலாத தாடகை மாள*  நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*

    கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்*  கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய*  மணிமுடி ஒருபதும் புரள,* 
    அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட*  அமர்செய்த அடிகள்தம் கோயில்,*

    பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப*   பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
    மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!    


    விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று*  விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
    குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த*  கூத்த எம் அடிகள்தம் கோயில்,*

    தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற*  தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
    மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    தேனுகன் ஆவி போய்உக*  அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,* 
    தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

    வானகச் சோலை மரகதச் சாயல்*  மாமணிக் கல்அதர் நுழைந்து,* 
    மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ*  பொருகடல் அரவணைத் துயின்று,* 
    பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த*  பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*

    கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்*  கவுள்வழி களிவண்டு பருக,* 
    மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்*  ஒத்தன பேசவும் உவந்திட்டு,* 
    எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

    சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்*  தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
    மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே! 


    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
    தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*

    கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
    கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)


    மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
    பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*

    தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)


    புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
    முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*

    சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
    கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  


    உண்டு உலகுஏழினையும்*  ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
    கண்துயில் கொண்டுஉகந்த*  கருமாணிக்க மாமலையை,* 

    திண்திறல் மாகரிசேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    அண்டரதம் கோவினை இன்று*  அணுகும் கொல்? என்ஆய்இழையே!   


    சிங்கம்அதுஆய் அவுணன்*  திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
    பங்கய மாமலர்க் கண்*  பரனை எம் பரம்சுடரை,*

    திங்கள்நல் மாமுகில் சேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல் என்நல்நுதலே!   


    தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள்ஆய் நிமிர்ந்து,* 
    வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*

    தேன்அமர் பூம்பொழில் சூழ்*  திரமாலிருஞ் சோலைநின்ற,*
    வானவர் கோனை இன்று*  வணங்கித் தொழவல்லள் கொலோ!


    நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
    வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*

    தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)


    புள்ளினை வாய்பிளந்து*  பொருமா கரி கொம்புஒசித்து,* 
    கள்ளச் சகடுஉதைத்த*  கருமாணிக்க ம மலையை,*

    தெள்அருவி கொழிக்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    வள்ளலை வாள்நுதலாள்*  வணங்கித் தொழவல்லள் கொலோ! 


    பார்த்தனுக்கு அன்றுஅருளி*  பாரதத்து ஒருதேர்முன்நின்று,* 
    காத்தவன் தன்னை*  விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*

    தீர்த்தனை பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    மூர்த்தியைக் கைதொழவும்*  முடியும்கொல்? என்மொய்குழற்கே!


    வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
    புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*

    சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)


    தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
    ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*

    மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
    பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  


    எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-
    தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*

    பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*
    செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,


    எவ்வநோய் தவிர்ப்பான்*  எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,*  நிலமகள்--
    செவ்வி தோய வல்லான்*  திருமா மகட்குஇனியான்,*

    மௌவல் மாலை வண்டுஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-
    தெய்வம் நாறவரும்*  திருக்கோட்டியூரானே. 


    வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-
    ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*

    துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,* 
    தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.


    ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-
    கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*

    நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-
    தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே. 


    வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்
    தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*

    மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-
    திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே.  


    காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-
    ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*

    நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,* 
    தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே. 


    கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-
    நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*

    குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-
    தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே.  


    பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து- 
    ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*

    தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
    தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.


    கோவைஇன் தமிழ் பாடுவார்*  குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
    மேவும் நான்முகனில்*  விளங்கு புரிநூலர்,* 

    மேவும் நான்மறை வாணர்*  ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
    தேவ தேவபிரான்*  திருக்கோட்டியூரானே.    


    ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்- 
    சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*

    நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-
    நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)


    ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
    வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*

    நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
    கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)


    பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
    மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*

    என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
    தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)


    வேலை ஆல்இலைப்*  பள்ளி விரும்பிய*
    பாலை ஆர்அமுதத்தினை*  பைந்துழாய்*

    மாலை ஆலியில்*  கண்டு மகிழ்ந்து போய்* 
    ஞாலம் உன்னியைக் காண்டும்*  நாங்கூரிலே


    துளக்கம்இல் சுடரை*  அவுணன்உடல்-
    பிளக்கும் மைந்தனைப்*  பேரில் வணங்கிப்போய்*

    அளப்புஇல் ஆர்அமுதை*  அமரர்க்கு அருள்-
    விளக்கினைச்*  சென்று வெள்ளறைக் காண்டுமே.


    சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
    நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-

    உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
    விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.


    வானை ஆர்அமுதம்*  தந்த வள்ளலை* 
    தேனை நீள்வயல்*  சேறையில் கண்டுபோய்*

    ஆனை வாட்டி அருளும்*  அமரர்தம்-
    கோனை,*  யாம் குடந்தைச்சென்று காண்டுமே.


    கூந்தலார் மகிழ்*  கோவலன்ஆய்*  வெண்ணெய்-
    மாந்துஅழுந்தையில்*  கண்டு மகிழ்ந்துபோய்*

    பாந்தள் பாழியில்*  பள்ளி விரும்பிய*
    வேந்தனைச் சென்று காண்டும்*  வெஃகாவுளே


    பத்தர் ஆவியை*  பால்மதியை,*  அணித்-
    தொத்தை*  மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*

    முத்தினை மணியை*  மணி மாணிக்க-
    வித்தினைச்,*  சென்று விண்ணகர்க் காண்டுமே


    கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-
    கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*

    கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்* 
    நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே.  


    பெற்றமாளிகைப்*  பேரில் மணாளனை* 
    கற்ற நூல்*  கலிகன்றி உரைசெய்த*

    சொல்திறம்இவை*  சொல்லிய தொண்டர்கட்கு*
    அற்றம் இல்லை*  அண்டம் அவர்க்கு ஆட்சியே   (2)


    இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை*   இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* 
    பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன்  பட்டனன்*  இனி யாவர்க்கு உரைக்கோம்*

    குரக்கு நாயகர்காள்! இளங்கோவே*   கோல வல்வில் இராம பிரானே* 
    அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை*  நாங்கள்  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  (2)


    பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்*   பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
    சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்*   செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*

    ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்*   ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்* 
    அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்*   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தண்ட காரணியம் புகுந்து*  அன்று  தையலை தகவிலி எம்கோமான்*
    கொண்டு போந்து கெட்டான்*  எமக்கு இங்குஓர்  குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*

    பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்*  பேசுகின்றதுஎன்? தாசரதீ,*  உன்-
    அண்ட வாணர் உகப்பதே செய்தாய்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    எஞ்சல்இல் இலங்கைக்குஇறை*  எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
    நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று*  நங்கையை அவன் தம்பியே சொன்னான்*

    விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்*  வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
    அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்*  சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து* 
    வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே*  குற்றம் ஆயிற்றுக் காணீர்*

    கும்பனோடு நிகும்பனும் பட்டான்*  கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி* 
    அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.


    ஓத மாகடலைக் கடந்துஏறி*  உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து* 
    காதல் மக்களும் சுற்றமும் கொன்று*  கடி இலங்கை மலங்க எரித்து*     

    தூது வந்த குரங்குக்கே*  உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே* 
    ஆதர் நின்று படுகின்றது அந்தோ!*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று*  தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
    மாழை மான்மட நோக்கியை விட்டு*  வாழகில்லா மதிஇல் மனத்தானை*    

    ஏழையை இலங்கைக்கு இறை தன்னை*  எங்களை ஒழியக் கொலை அவனை* 
    சூழு மாநினை மாமணி வண்ணா!*  சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா*  அம்கயல் கண்ணினார்கள் இருப்ப* 
    தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து*  தஞ்சமே சில தாபதர்என்று*

    புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த*  புன்மையாளன் நெஞ்சில் புக எய்த* 
    அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ   


    புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்*  பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
    சரங்களே கொடிதுஆய் அடுகின்ற*  சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*

    இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!*  இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா* 
    குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!*  கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர*  அணி இலங்கை அழித்தவன் தன்னை* 
    பொங்கு மாவலவன் கலி கன்றி*  புகன்ற பொங்கத்தம் கொண்டு,*  இவ்உலகினில்-

    எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!*  இம்மையே இடர் இல்லை,*  இறந்தால்- 
    தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்*  சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!   (2)


    ஏத்துகின்றோம் நாத்தழும்ப*  இராமன் திருநாமம்* 
    சோத்தம் நம்பீ சுக்கிரீவா!*  உம்மைத் தொழுகின்றோம்*

    வார்த்தை பேசீர் எம்மை*  உங்கள் வானரம் கொல்லாமே* 
    கூத்தர் போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே   (2)


    எம்பிரானே! என்னை ஆள்வாய்*  என்றுஎன்று அலற்றாதே* 
    அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது*  இந்திரசித்து அழிந்தான்*

    நம்பி அநுமா! சுக்கிரீவா!*  அங்கதனே! நளனே* 
    கும்பகர்ணன் பட்டுப்போனான்*  குழமணி தூரமே  


    ஞாலம் ஆளும் உங்கள் கோமான்*  எங்கள் இராவணற்குக்*
    காலன்ஆகி வந்தவா*  கண்டு அஞ்சி கருமுகில்போல்*

    நீலன் வாழ்க சுடேணன் வாழ்க*  அங்கதன் வாழ்கஎன்று*
    கோலம்ஆக ஆடுகின்றோம்*  குழமணி தூரமே 


    மணங்கள் நாறும் வார்குழலார்*  மாதர்கள் ஆதரத்தைப்*
    புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்*  பொன்ற வரிசிலையால்*

    கணங்கள்உண்ண வாளிஆண்ட*  காவலனுக்கு இளையோன்*
    குணங்கள் பாடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே


    வென்றி தந்தோம் மானம் வேண்டோம்*  தானம் எமக்குஆக*
    இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்*  எம்பெருமான் தமர்காள்*

    நின்று காணீர் கண்கள்ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*
    குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே      


    கல்லின் முந்நீர் மாற்றி வந்து*  காவல் கடந்து,*  இலங்கை-
    அல்லல் செய்தான் உங்கள் கோமான்*  எம்மை அமர்க்களத்து*

    வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்*  வெம்கதிரோன் சிறுவா,* 
    கொல்ல வேண்டா ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  


    மாற்றம்ஆவது இத்தனையே*  வம்மின் அரக்கர்உள்ளீர்* 
    சீற்றம் நும்மேல் தீர வேண்டின்*  சேவகம் பேசாதே*

    ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்*  அநுமனை வாழ்கஎன்று* 
    கூற்றம் அன்னார் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர்எல்லாம்-
    துவள,*  வென்ற வென்றியாளன்*  தன்தமர் கொல்லாமே*

    தவள மாடம் நீடுஅயோத்தி*  காவலன் தன்சிறுவன்*
    குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்*  எங்கள் இராவணனார்-
    ஓடிப் போனார்,*  நாங்கள் எய்த்தோம்*  உய்வதுஓர் காரணத்தால்*

    சூடிப் போந்தோம் உங்கள் கோமான்*  ஆணை தொடரேல்மின்* 
    கூடிக்கூடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே.


    வென்ற தொல்சீர்த் தென்இலங்கை*  வெம்சமத்து*  அன்றுஅரக்கர்-
    குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*

    கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை*
    ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)


    சந்த மலர்க்குழல் தாழ*  தான் உகந்துஓடி தனியே-
    வந்து,*  என் முலைத் தடம்தன்னை வாங்கி*  நின் வாயில் மடுத்து,*

    நந்தன் பெறப்பெற்ற நம்பீ!*  நான் உகந்துஉண்ணும் அமுதே,* 
    எந்தை பெருமானே! உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே (2)


    வங்க மறிகடல் வண்ணா!*  மாமுகிலே ஒக்கும் நம்பீ* 
    செங்கண் நெடிய திருவே*  செங்கமலம் புரை வாயா,*

    கொங்கை சுரந்திட உன்னைக்*  கூவியும் காணாது இருந்தேன்* 
    எங்குஇருந்து ஆயர்களோடும்*  என் விளையாடுகின்றாயே


    திருவில் பொலிந்த எழில்ஆர்*  ஆயர்தம் பிள்ளைகளோடு* 
    தெருவில் திளைக்கின்ற நம்பீ*  செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*

    உருகிஎன் கொங்கையின் தீம்பால்*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,* 
    மருவிக் குடங்கால் இருந்து*  வாய்முலை உண்ண நீ வாராய்    


    மக்கள் பெறுதவம் போலும்*  வையத்து வாழும் மடவார்* 
    மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்*  முதல்வா மதக்களிறுஅன்னாய்*

    செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி*  நின் கையில் தருவன்* 
    ஒக்கலை மேல்இருந்து*  அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்


    மைத்த கருங்குஞ்சி மைந்தா!*  மாமருதுஊடு நடந்தாய்,* 
    வித்தகனே விரையாதே*  வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*

    இத்தனை போதுஅன்றி என்தன்*  கொங்கை சுரந்து இருக்ககில்லா,* 
    உத்தமனே! அம்மம் உண்ணாய்*  உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்       


    பிள்ளைகள் செய்வன செய்யாய்*  பேசின் பெரிதும் வலியை* 
    கள்ளம் மனத்தில் உடையை*  காணவே தீமைகள் செய்தி*

    உள்ளம் உருகி என் கொங்கை*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற* 
    பள்ளிக் குறிப்புச் செய்யாதே*  பால்அமுது உண்ணநீ வாராய்   


    தன்மகன்ஆக வன் பேய்ச்சி*  தான்முலை உண்ணக் கொடுக்க* 
    வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி*  முலைஉண்ட நம்பீ*

    நன்மகள் ஆய்மகளோடு*  நானில மங்கை மணாளா* 
    என்மகனே! அம்மம் உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே 


    உந்தம் அடிகள் முனிவர்*  உன்னைநான் என்கையில் கோலால்* 
    நொந்திட மோதவும் கில்லேன்*  நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*

    வந்து புகுதரும் போது*  வானிடைத் தெய்வங்கள் காண* 
    அந்திஅம் போது அங்கு நில்லேல்*  ஆழிஅம் கையனே! வாராய்


    பெற்றத் தலைவன் எம்கோமான்*  பேர்அருளாளன் மதலாய்,* 
    சுற்றக் குழாத்து இளங்கோவே!*  தோன்றிய தொல்புகழாளா,*

    கற்றுஇனம் தோறும் மறித்து*  கானம் திரிந்த களிறே* 
    எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே*  எம்பெருமான் இருந்தாயே 


    இம்மை இடர்கெட வேண்டி*  ஏந்துஎழில் தோள்கலி அன்றி* 
    செம்மைப் பனுவல்நூல் கொண்டு*  செங்கண் நெடியவன் தன்னை*

    அம்மம் உண்என்று உரைக்கின்ற*  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
    மெய்ம்மை மனத்து வைத்துஏத்த*  விண்ணவர் ஆகலும்ஆமே   (2)


    பூங்கோதை ஆய்ச்சி*  கடைவெண்ணெய் புக்குஉண்ண,* 
    ஆங்குஅவள் ஆர்த்துப்*  புடைக்க புடையுண்டு*

    ஏங்கி இருந்து*  சிணுங்கி விளையாடும்*
    ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி  (2)


    தாயர் மனங்கள் தடிப்ப*  தயிர்நெய்உண்டு 
    ஏய்எம்பிராக்கள்*  இருநிலத்து எங்கள்தம்*

    ஆயர் அழக*  அடிகள்*  அரவிந்த-
    வாயவனே கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி


    தாம்மோர் உருட்டி*  தயிர்நெய் விழுங்கிட்டு* 
    தாமோ தவழ்வர்என்று*  ஆய்ச்சியர் தாம்பினால்*

    தாம்மோதரக்கையால்*  ஆர்க்க தழும்புஇருந்த*
    தாமோதரா! கொட்டாய் சப்பாணி!*  தாமரைக் கண்ணனே! சப்பாணி


    பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
    உற்றார் ஒருவரும் இன்றி*  உலகினில்,*

    மற்றாரும் அஞ்சப்போய்*  வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
    கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!*  கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி   


    சோத்து என நின்னைத்*  தொழுவன் வரம் தர,* 
    பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,*  பெரியன-

    ஆய்ச்சியர்*  அப்பம் தருவர்*  அவர்க்காகச்-
    சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!*  தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி   


    கேவலம் அன்று*  உன்வயிறு வயிற்றுக்கு*
    நான் அவல் அப்பம் தருவன்*  கருவிளைப்-

    பூஅலர் நீள்முடி*  நந்தன்தன் போர்ஏறே,* 
    கோவலனே! கொட்டாய் சப்பாணி!*  குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.  


    புள்ளினை வாய்பிளந்து*  பூங்குருந்தம் சாய்த்து,* 
    துள்ளி விளையாடி*  தூங்குஉறி வெண்ணெயை,*

    அள்ளிய கையால்*  அடியேன் முலைநெருடும்*
    பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!*  பேய்முலை உண்டானே! சப்பாணி


    யாயும் பிறரும்*  அறியாத யாமத்து,* 
    மாய வலவைப்*  பெண் வந்து முலைதர,*

    பேய்என்று அவளைப்*  பிடித்து உயிர் உண்ட,*
    வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.


    கள்ளக் குழவிஆய்*  காலால் சகடத்தைத்*
    தள்ளி உதைத்திட்டு*  தாய்ஆய் வருவாளை,*

    மெள்ளத் தொடர்ந்து*  பிடித்து ஆர்உயிர்உண்ட,*
    வள்ளலே! கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி 


    கார்ஆர் புயல்கைக்*  கலிகன்றி மங்கையர்கோன்,* 
    பேராளன் நெஞ்சில்*  பிரியாது இடம்கொண்ட*

    சீராளா செந்தாமரைக் கண்ணா!*  தண்துழாய்த்*
    தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!*  தடமார்வா கொட்டாய் சப்பாணி.  (2)


    எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?*  நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
    சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*

    பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக*  பொன்மிடறு அத்தனைபோது,*
    அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.   (2)


    குன்றுஒன்று மத்தா அரவம் அளவி*  குரைமாகடலைக் கடைந்திட்டு,*  ஒருகால்-
    நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர*  நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*

    நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்*  மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,* 
    அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்*   உலப்புஇல் வலியார் அவர்பால்,*  வயிரம்-
    விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ*   அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*

    வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று*  மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
    அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.  


    தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன*  தான் சரண்ஆய் முரண்ஆயவனை*  உகிரால்-
    பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த*  பெருமான் திருமால் விரிநீர் உலகை,*

    வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை*  மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
    அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்*  அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
    தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்*  செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*

    வேண்டாமை நமன் தமர் என்தமரை*   வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
    ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 


    பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல*  பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*

    தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்*  சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
    அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே


    படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்*  தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*

    மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா*  விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,*  கடலை-
    அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு*  உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
    இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு*  இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*

    செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்*  செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
    அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.    


    சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா*  தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
    இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்*  இருகூறுசெய்த பெருமான் முனநாள்* 

    வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து*  மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
    அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*  வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
    அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*  உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*

    நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
    என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*  இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே.   (2) 


    மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
    ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*

    நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
    தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)


    காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்*  கண்டே போனேன்,* 
    மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்*  மற்று வந்தாரும் இல்லை,*

    மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்*  வெண்ணெயேஅன்று, இருந்த*
    பாலும் பதின்குடம் கண்டிலேன்*  பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!


    தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!*  உறி மேலைத் தடாநிறைந்த,*
    வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை*   வாரி விழுங்கி யிட்டு,*

    கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்*  கைஎல்லாம் நெய்,*  வயிறு-
    பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்*  பேதையேன் என்செய்கேனோ!


    மைந்நம்பு வேல்கண்நல்லாள்*  முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
    தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது*  அவன் இவை செய்தறியான்*

    பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்*  பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,* 
    இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை*  என்செய்கேன் என்செய்கேனோ!


    தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்*  தோழிமார் ஆரும்இல்லை,* 
    சந்த மலர்க்குழலாள்*  தனியே விளையாடும்இடம் குறுகி,*

    பந்து பறித்து துகில்பற்றிக் கீறி*  படிறன் படிறு செய்யும்,* 
    நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்*  நந்தன் பெற்ற மதலை,* 
    அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே*   அல்லில்தான் வந்த பின்னை,*

    கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி*  கமலச் செவ்வாய் வெளுப்ப,* 
    என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று*  ஆயர் விழவுஎடுப்ப,* 
    பாசனம் நல்லன பண்டிகளால்*  புகப் பெய்த அதனை எல்லாம்,*

    போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு*  உன்மகன் இன்று நங்காய்,* 
    மாயன் அதனை எல்லாம் முற்ற*  வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்! 


    தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்*  ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,* 
    ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்*  நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*

    சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று*  இரப்பன் உரப்பகில்லேன்* 
    பேய்ச்சி முலைஉண்ட பின்னை*  இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே! 


    ஈடும் வலியும் உடைய*  இந் நம்பி பிறந்த எழு திங்களில்,* 
    ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி*  யமுனை நீராடப் போனேன்,*

    சேடன் திருமறு மார்வன்*  கிடந்து  திருவடியால்,*  மலை போல்-
    ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை*  உரப்புவது அஞ்சுவனே!


    அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!*  ஆயிரம் நாழி நெய்யை,*
    பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று*  பாகம்தான் வையார்களே,*

    கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்*  என்கை வலத்துஆதும் இல்லை,* 
    நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!*  ஆயர் மடமக்களை,*
    பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்*  பின்னே சென்றுஒளித்திருந்து,*

    அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*  அரவுஏர்இடையார் இரப்ப,* 
    மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற*  மரம் ஏறி இருந்தாய் போலும் 


    அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு*  ஆண்மையும் சேவகமும்,* 
    உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க*  உரைத்திலன் தான்இன்று போய்,*

    பச்சிலைப் பூங்கடம்பு ஏறி*  விசைகொண்டு  பாய்ந்து புக்கு*  ஆயிரவாய்-
    நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    தம்பரம் அல்லன ஆண்மைகளைத்*  தனியேநின்று தாம் செய்வரோ?,
    எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்*  இனி யான்என் செய்கேன்?,*

    அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்*  அங்குஅனல் செங்கண்உடை,*
    வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
    மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*

    கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
    இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   


    காதில் கடிப்புஇட்டு*  கலிங்கம் உடுத்து,* 
    தாதுநல்ல*  தண்அம் துழாய் கொடுஅணிந்து,*

    போது மறுத்து*  புறமே வந்து நின்றீர்,*
    ஏதுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  (2)   


    துவர்ஆடை உடுத்து*  ஒருசெண்டு சிலுப்பி,* 
    கவர்ஆக முடித்து*  கலிக்கச்சுக் கட்டி,*

    சுவர்ஆர் கதவின் புறமே*  வந்து நின்றீர்,*
    இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!


    கருளக் கொடி ஒன்றுஉடையீர்!*  தனிப்பாகீர்,* 
    உருளச் சகடம் அது*  உறுக்கி நிமிர்த்தீர்,*

    மருளைக் கொடுபாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    இருளத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    நாமம் பலவும் உடை*  நாரண நம்பீ,* 
    தாமத் துளவம்*  மிக நாறிடுகின்றீர்,*

    காமன்எனப்பாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    ஏமத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    சுற்றும் குழல்தாழ*  சுரிகை அணைத்து,* 
    மற்று பல*  மாமணி பொன்கொடுஅணிந்து,*

    முற்றம் புகுந்து*  முறுவல்செய்து நின்றீர்,*
    எற்றுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    ஆன்ஆயரும்*  ஆநிரையும் அங்குஒழிய,* 
    கூன்ஆயதுஓர்*  கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*

    போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
    ஏனோர்கள் முன்என்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    மல்லே பொருத திரள்தோள்*  மணவாளீர்,* 
    அல்லே அறிந்தோம்*  நும் மனத்தின் கருத்தை,*

    சொல்லாது ஒழியீர்*  சொன்ன போதினால் வாரீர்*
    எல்லே இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    புக்குஆடுஅரவம்*  பிடித்துஆட்டும் புனிதீர்,* 
    இக்காலங்கள்*  யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*

    தக்கார் பலர்*  தேவிமார் சாலஉடையீர்,*
    எக்கே! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    ஆடி அசைந்து*  ஆய்மடவாரொடு நீபோய்க்*
    கூடிக் குரவை*  பிணை கோமளப் பிள்ளாய்,*

    தேடி திருமாமகள்*  மண்மகள் நிற்ப,*
    ஏடி! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!   


    அல்லிக் கமலக் கண்ணனை*  அங்கு ஓர்ஆய்ச்சி*
    எல்லிப் பொழுதுஊடிய*  ஊடல் திறத்தைக்,*

    கல்லின் மலிதோள்*  கலியன் சொன்ன மாலை,*
    சொல்லித் துதிப்பார் அவர்*  துக்கம் இலரே.   (2) 


    புள்உருஆகி நள்இருள் வந்த*  பூதனை மாள,*  இலங்கை-
    ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த*  ஊக்கம் அதனை நினைந்தோ,?*

    கள்அவிழ் கோதை காதலும்*  எங்கள் காரிகை மாதர் கருத்தும்,* 
    பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்*  பேசுவது எந்தை பிரானே!  (2)


    மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி*  மால்விடை ஏழும் அடர்த்து,*  ஆயர்-
    அன்று நடுங்க ஆநிரை காத்த*  ஆண்மை  கொலோ அறியேன் நான்,*

    நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!*  நீஇவள் தன்னை நின் கோயில்,*
    முன்றில் எழுந்த முருங்கையில் தேனா*  முன் கைவளை கவர்ந்தாயே. 


    ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி*  ஆற்றலை ஆற்றல் மிகுத்து,* 
    கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்*  கடந்தநின் கடுந்திறல் தானோ,*

    நேர்இழை மாதை நித்திலத் தொத்தை*   நெடுங் கடல் அமுதுஅனை யாளை,* 
    ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே.    


    மல்கிய தோளும் மான்உரி அதளும்*  உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
    நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த*  கரதலத்து அமைதியின் கருத்தோ?*

    அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,* 
    சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்*  தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே. 


    செருஅழியாத மன்னர்கள் மாள*  தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
    அருவழி வானம் அதர்படக் கண்ட*  ஆண்மைகொலோ? அறியேன் நான்,*

    திருமொழி எங்கள் தேமலர்க் கோதை*  சீர்மையை நினைந்திலை அந்தோ,* 
    பெருவழி நாவல் கனியினும் எளியள்*  இவள்எனப் பேசுகின்றாயே


    அரக்கியர் ஆகம் புல்என வில்லால்*  அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
    செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற*  சேவகமோ? செய்ததுஇன்று*

    முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்*  கொண்டு முன்னே நின்று போகாய்,* 
    எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்*   என்செய்வது? எந்தை பிரானே!  


    ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச*  அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
    பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ*  படைமழுப் பற்றிய வலியோ?*

    மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,*
    கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!*  குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!


    பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற*  வள்உகிரால் பிளந்து,*  அன்று- 
    பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த*  பெருமைகொலோ செய்தது இன்று,*

    பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை*  பெருமையை நினைந்திலை பேசில்,* 
    கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே


    நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்*  நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
    சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று*  அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*

    பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை*  பாவையைப் பாவம் செய்தேனுக்கு,* 
    ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக*  நின் மனத்து வைத்தாயே


    வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி*  மெய்ம்மையே நின்று எம்பெருமானை,* 
    வாள்திறல் தானை மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*

    தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்*  பழமொழியால் பணிந்து உரைத்த,*
    பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்*  சித்தமும் திருவொடு மிகுமே  (2) 


    திருத்தாய் செம்போத்தே,!*  
    திருமாமகள் தன்கணவன்,*

    மருத்தார் தொல்புகழ்*  மாதவனை வர*  
    திருத்தாய் செம்போத்தே!  (2)


    கரையாய் காக்கைப்பிள்ளாய்,*  
    கருமாமுகில் போல்நிறத்தன்,*

    உரைஆர் தொல்புகழ்*  உத்தமனை வர*  
    கரையாய் காக்கைப்பிள்ளாய்!  


    கூவாய் பூங்குயிலே,* 
    குளிர்மாரி தடுத்துஉகந்த*

    மாவாய் கீண்ட*  மணிவண்ணனை வர,*
    கூவாய் பூங்குயிலே!


    கொட்டாய் பல்லிக்குட்டி,* 
    குடம்ஆடி உலகுஅளந்த,*

    மட்டுஆர் பூங்குழல்*  மாதவனை வர,*
    கொட்டாய் பல்லிக்குட்டி!  


    சொல்லாய் பைங்கிளியே,* 
    சுடர்ஆழி வலன்உயர்த்த,*

    மல்ஆர் தோள்*  வட வேங்கடவனைவர,*
    சொல்லாய் பைங்கிளியே!  (2) 


    கோழி கூஎன்னுமால்,* 
    தோழி! நான்என்செய்கேன்,*

    ஆழி வண்ணர்*  வரும்பொழுது ஆயிற்று*
    கோழி கூஎன்னுமால். 


    காமற்கு என்கடவேன்,*
    கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*

    பூமேல் ஐங்கணை*  கோத்துப் புகுந்துஎய்ய,*
    காமற்கு என்கடவேன்!


    இங்கே போதும்கொலோ,*
    இனவேல்நெடுங் கண்களிப்ப,*

    கொங்குஆர் சோலைக்*  குடந்தைக் கிடந்தமால்,*
    இங்கே போதும்கொலோ!  (2) 


    இன்னார் என்றுஅறியேன்,* 
    அன்னே! ஆழியொடும்,*

    பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
    இன்னார் என்றுஅறியேன்.   (2)  


    தொண்டீர் பாடுமினோ,* 
    சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,* 

    ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
    தொண்டீர்! பாடுமினோ  (2)


    குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,*  மாமழை- 
    அன்று காத்த அம்மான்,*  அரக்கரை-

    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,?*
    தென்றல் வந்து*  தீ வீசும் என்செய்கேன்!  (2)


    காரும் வார்பனிக்*  கடலும் அன்னவன்,* 
    தாரும் மார்வமும்*  கண்ட தண்டமோ,*

    சோரும் மாமுகில்*  துளியின் ஊடுவந்து,* 
    ஈர வாடைதான்*  ஈரும் என்னையே!


    சங்கும் மாமையும்*  தளரும் மேனிமேல்,* 
    திங்கள் வெம்கதிர்*  சீறும் என்செய்கேன்,*

    பொங்கு வெண்திரைப்*  புணரி வண்ணனார்,* 
    கொங்குஅலர்ந்ததார்*  கூவும் என்னையே!


    அங்குஓர் ஆய்க்குலத்துள்*  வளர்ந்து சென்று,* 
    அங்குஓர்*  தாய்உருஆகி வந்தவள்,*

    கொங்கை நஞ்சுஉண்ட*  கோயின்மை கொலோ,*
    திங்கள் வெம்கதிர்*  சீறுகின்றதே.


    அங்குஓர் ஆள்அரிஆய்,*  அவுணனை- 
    பங்கமா*  இருகூறு செய்தவன்,* 

    மங்குல் மாமதி*  வாங்கவே கொலோ* 
    பொங்கு மாகடல்*  புலம்பு கின்றதே!


    சென்றுவார்*  சிலை வளைத்து இலங்கையை- 
    வென்ற வில்லியார்*  வீரமே கொலோ,*

    முன்றில் பெண்ணைமேல்*  முளரிக் கூட்டகத்து,* 
    அன்றிலின் குரல்*  அடரும் என்னையே!


    பூவை வண்ணனார்*  புள்ளின் மேல்வர,* 
    மேவி நின்றுநான்*  கண்ட தண்டமோ,*

    வீவுஇல்ஐங்கணை*  வில்லி அம்புகோத்து,* 
    ஆவியே இலக்குஆக எய்வதே!


    மால் இனம்துழாய்*  வரும் என் நெஞ்சகம்,* 
    மாலின் அம்துழாய்*  வந்து என்உள்புக,*

    கோல வாடையும்*  கொண்டு வந்ததுஓர்* 
    ஆலி வந்ததால்*  அரிது காவலே!


    கெண்டை ஒண்கணும் துயிலும்,*  என்நிறம்- 
    பண்டு பண்டு போல்ஒக்கும்,*  மிக்கசீர்த்

    தொண்டர் இட்ட*  பூந்துளவின் வாசமே,* 
    வண்டு கொண்டு வந்து*  ஊதுமாகிலே


    அன்று பாரதத்து*  ஐவர் தூதனாய்ச்,* 
    சென்ற மாயனை*  செங்கண் மாலினை,*

    மன்றில்ஆர் புகழ்*  மங்கை வாள்கலி,*
    கன்றி சொல்வல்லார்க்கு*  அல்லல் இல்லையே  (2)


    குன்றம் எடுத்து மழைதடுத்து*  இளையாரொடும்*
    மன்றில் குரவை பிணைந்த மால்*  என்னை மால்செய்தான்,*

    முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்*  கிடந்தீர்கின்ற*
    அன்றிலின் கூட்டைப்*  பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ!   (2)


    பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து*  அரிமாச்செகுத்து,*
    ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு*  வன் பேய்முலை-

    வாங்கி உண்ட,*  அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
    ஏங்கு வேய்ங்குழல்*  என்னோடாடும் இளமையே!.


    மல்லோடு கஞ்சனும்*  துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
    அல்லி மலர்த்தண்துழாய்*  நினைந்திருந்தேனையே,*

    எல்லியில் மாருதம்*  வந்தடும், அதுவன்றியும்,*
    கொல்லை வல்லேற்றின் மணியும்*  கோயின்மை செய்யுமே!.


    பொருந்து மாமரம்*  ஏழும் எய்த புனிதனார்*
    திருந்து சேவடி*  என்மனத்து நினைதொறும்,*

    கருந்தண் மாகடல்*  மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
    வருந்த வாடை வரும்*  இதற்கினி என்செய்கேன்!


    அன்னை முனிவதும்*  அன்றிலின் குரல் ஈர்வதும்,*
    மன்னு மறிகடல் ஆர்ப்பதும்*  வளை சோர்வதும்*

    பொன்னங் கலையல்குல்*  அன்ன மென்னடைப் பூங்குழல்,*
    பின்னை மணாளர்*  திறத்தவாயின பின்னையே


    ஆழியும் சங்கும் உடைய*  நங்கள் அடிகள்தாம்,*
    பாழிமையான கனவில்*  நம்மைப் பகர்வித்தார்,*

    தோழியும் நானும்  ஒழிய*  வையம் துயின்றது,*
    கோழியும் கூகின்றதில்லைக்*  கூரிருள் ஆயிற்றே!. 


    காமன் தனக்கு முறையல்லேன்*  கடல் வண்ணனார்,*
    மாமணவாளர்*  எனக்குத் தானும் மகன்சொல்லில்,*

    யாமங்கள் தோறும் எரி வீசும்*  என்னிளங் கொங்கைகள்,*
    மாமணி வண்ணர்*  திறத்த வாய் வளர்கின்றவே!


    மஞ்சுறு மாலிருஞ் சோலை*  நின்ற மணாளனார்,*
    நெஞ்சம் நிறைகொண்டு போயினார்*  நினைகின்றிலர்,*

    வெஞ்சுடர் போய் விடியாமல்*  எவ்விடம் புக்கதோ,*
    நஞ்சு உடலம் துயின்றால்*  நமக்கினி நல்லதே! 


    காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்*  நலத்தில்மிகு,*
    பூமரு கோல*  நம் பெண்மை சிந்தித்திராது போய்*

    தூமலர் நீர்கொடு*  தோழி.நாம் தொழுதேத்தினால்*
    கார்முகில் வண்ணரைக்*  கண்களால் காணலாம் கொலோ!.


    வென்றி விடையுடன்*  ஏழடர்த்த அடிகளை,*
    மன்றில் மலிபுகழ்*  மங்கைமன் கலிகன்றிசொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  உரைப்பவர் தங்கள்மேல்*
    என்றும் நில்லா வினை*  ஒன்றும் சொல்லில் உலகிலே  (2) 


    மன்னிலங்கு பாரதத்துத்*  தேரூர்ந்து,*  மாவலியைப்-
    பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்*  பொருகடல்சூழ்*

    தென்னிலங்கை ஈடழித்த*  தேவர்க்கு இதுகாணீர்*
    என்னிலங்கு சங்கோடு*  எழில் தோற்றிருந்தேனே!. (2)


    இருந்தான் என்னுள்ளத்து*  இறைவன், கறைசேர்*
    பருந்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த, செங்கண்*

    பெருந்தோள் நெடுமாலைப்*  பேர்பாடி ஆட*
    வருந்தாது என் கொங்கை*  ஒளிமன்னும் அன்னே! 


    அன்னே! இவரை*  அறிவன், மறைநான்கும்*
    முன்னே உரைத்த*  முனிவர் இவர்வந்து*

    பொன்னேய் வளைகவர்ந்து*  போகார் மனம்புகுந்து*
    என்னே இவரெண்ணும்*  எண்ணம் அறியோமே! 


    அறியோமே என்று*  உரைக்கலாமே எமக்கு,*
    வெறியார் பொழில்சூழ்*  வியன்குடந்தை மேவி,*

    சிறியான் ஓர் பிள்ளையாய்*  மெள்ள நடந்திட்டு*
    உறியார் நறுவெண்ணெய்*  உண்டுகந்தார் தம்மையே?


    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுவார்க்கு,*
    தம்மையே ஒக்க*  அருள்செய்வர் ஆதலால்,*

    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுதிறைஞ்சி,*
    தம்மையே பற்றா*  மனத்தென்றும் வைத்தோமே. 


    வைத்தார் அடியார்*  மனத்தினில் வைத்து,*  இன்பம்-
    உற்றார் ஒளிவிசும்பி*  ஓரடிவைத்து,*  ஓரடிக்கும்-

    எய்த்தாது மண்ணென்று*  இமையோர் தொழுதிறைஞ்சி,*
    கைத்தாமரை குவிக்கும்*  கண்ணன் என் கண்ணனையே


    கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
    என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*

    பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
    அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.


    பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
    ஆடோமே*  ஆயிரம் பேரானை? பேர்நினைந்து

    சூடோமே*  சூடும் துழாயலங்கல்? சூடி,*  நாம்
    கூடோமே கூடக்*  குறிப்பாகில்? நன்னெஞ்சே!


    நன்னெஞ்சே! நம்பெருமான்*  நாளும் இனிதமரும்,*
    அன்னம்சேர் கானல்*  அணியாலி கைதொழுது,*

    முன்னம்சேர் வல்வினைகள் போக*  முகில்வண்ணன்,*
    பொன்னம்சேர் சேவடிமேல்*  போதணியப் பெற்றோமே! 


    பெற்றாரார்*  ஆயிரம் பேரானைப்,*  பேர்பாடப்-
    பெற்றான்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*

    கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்*  இவைகேட்கல்-
    உற்றார்க்கு,*  உறுதுயர் இல்லை உலகத்தே (2)


    நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்*   வளநாடு மூட இமையோர்* 
    தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன*   அரண்ஆவன் என்னும் அருளால்* 

    அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி*   அகல் வான்உரிஞ்ச,*  முதுகில்- 
    மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை*   மறவாது இறைஞ்சு என் மனனே!   (2)


    செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி*   திசைமண்ணும் விண்ணும் உடனே* 
    வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப*   இமையோர்கள் நின்று கடைய,*

    பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து*   சுழலக் கிடந்து துயிலும்,* 
    அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன*   திருமால் நமக்கு ஓர் அரணே. 


    தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்*  உலகுஏழினோடும் உடனே,* 
    மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற*  மலைஆறும் ஏழு கடலும்*

    பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்*  ஒருபால் ஒடுங்க வளர்சேர்,* 
    ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி*  அதுநம்மை ஆளும் அரசே. 


    தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க*   எரிகான்றுஇரண்டு தறுகண்,* 
    அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று*   பரியோன் சினங்கள் அவிழ,*

    வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்*   மதியாது சென்று ஓர்உகிரால்* 
    பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு*   பெருநீரில் மும்மை பெரிதே.


    வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி*  அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர* 
    செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்*   அடிமூன்று இரந்து பெறினும்,*

    மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச*   மலரோன் வணங்க வளர்சேர்,* 
    அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்*  அது நம்மை ஆளும் அரசே.


    இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்*   ஒருநாலும் ஒன்றும் உடனே,* 
    செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க*   மழுவாளில் வென்ற திறலோன்,*

    பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்*   புலமங்கை கேள்வர் புகழ்சேர்,* 
    பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி*  யவர் நம்மை ஆள்வர் பெரிதே.


    இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன*  இனம்ஆய மான்பின் எழில்சேர்* 
    அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு*   ஓர்உருஆய மானை அமையா,*

    கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை*   பொடிஆக வென்றி அமருள்,* 
    சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*   திருமால் நமக்குஓர் அரணே. 


    முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண*  முதலோடு வீடும் அறியாது,* 
    என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப*  எழில் வேதம் இன்றி மறைய,*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,* 
    அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த*  அது நம்மை ஆளும் அரசே.


    துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது*  தொழுமின்கள் தொண்டர்! தொலைய* 
    உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி*   உகஉண்டு வெண்ணெய் மருவி,*

    பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட*  அதனோடும் ஓடி அடல்சேர்,* 
    இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்*   வினைப் பற்றுஅறுக்கும் விதியே.


    கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று*  கொடியோன் இலங்கை பொடியா* 
    சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*  திருமாலை, வேலை புடைசூழ்*

    கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு*  கலிகன்றி சொன்ன பனுவல்,* 
    ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்*  அவர்ஆள்வர் உம்பர் உலகே.  (2)


    மான்அமரும் மென்நோக்கி*  வைதேவிஇன் துணையா,* 
    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்தான் காண்ஏடீ*

    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்த பொன்அடிக்கள்,* 
    வானவர்-தம் சென்னி*  மலர்கண்டாய் சாழலே  (2)


    தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
    தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.


    ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்- 
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்- 
    ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.


    அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,* 
    எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே


    வண்ணக் கருங்குழல்*  ஆய்ச்சியால் மொத்துண்டு,* 
    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் காண்ஏடீ,*

    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் ஆகிலும்,* 
    எண்ணற்கு அரியன்*  இமையோர்க்கும் சாழலே.     


    கன்றப் பறைகறங்க*  கண்டவர்தம் கண்களிப்ப,* 
    மன்றில் மரக்கால்*  கூத்துஆடினான் காண் ஏடீ,*

    மன்றில் மரக்கால்*  கூத்து ஆடினான் ஆகிலும்,* 
    என்றும் அரியன்*  இமையோர்க்கும் சாழலே.  


    கோதைவேல் ஐவர்க்குஆய்*  மண்அகலம் கூறுஇடுவான்,* 
    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் காண்ஏடீ,*

    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் ஆகிலும்,* 
    ஓதநீர் வையகம்*  முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே. 


    பார்மன்னர் மங்கப்*  படைதொட்டு வெம்சமத்துத்,* 
    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*

    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,* 
    தார்மன்னர் தங்கள்*  தலைமேலான் சாழலே. 


    கண்டார் இரங்க*  கழியக் குறள்உருஆய்,* 
    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் காண்ஏடீ,*

    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் ஆகிலும்* 
    விண்டுஏழ் உலகுக்கும்*  மிக்கான் காண் சாழலே


    கள்ளத்தால் மாவலியை*  மூவடி மண் கொண்டு அளந்தான்,* 
    வெள்ளத்தான் வேங்கடத்தான்*  என்பரால் காண்ஏடீ,*

    வெள்ளத்தான்*  வேங்கடத்தானேலும்,*  கலிகன்றி- 
    உள்ளத்தின் உள்ளே*  உளன் கண்டாய் சாழலே.  (2)


    மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி*  வானவரும் யாமும்எல்லாம்,* 
    நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*

    எந்நன்றி செய்தாரா*  ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?* 
    செய்ந்நன்றி குன்றேல்மின்*  தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே  (2)   


    நில்லாத பெருவெள்ளம்*  நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,* 
    மல்ஆண்ட தடக்கையால்*  பகிரண்டம்  அகப்படுத்த காலத்து,*  அன்று-

    எல்லாரும் அறியாரோ*  எம்பெருமான்  உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,* 
    அல்லாதார் தாம்உளரே?*  அவன்அருளே  உலகுஆவது அறியீர்களே?     


    நெற்றிமேல் கண்ணானும்*  நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,* 
    ஒற்றைக்கை வெண்பகட்டின்*  ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*

    வெற்றிப்போர்க் கடல்அரையன்*  விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,* 
    கொற்றப் போர்ஆழியான்*  குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!    


    பனிப்பரவைத் திரைததும்ப*  பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*  
    இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று*  உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*

    முனித்தலைவன் முழங்குஒளிசேர்*  திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட* 
    கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே*  கழல் தொழுமா கல்லீர்களே.  


    பார்ஆரும் காணாமே*  பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,* 
    ஆரானும் அவனுடைய திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது,*  உள்ளத்து-

    ஓராத உணர்விலீர்! உணருதிரேல்*  உலகுஅளந்த உம்பர் கோமான்,* 
    பேராளன் பேரான*  பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.  


    பேய்இருக்கும் நெடுவெள்ளம்*  பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,* 
    தாய்இருக்கும் வண்ணமே*  உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*

    போய்இருக்க மற்றுஇங்குஓர்*  புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,*  பெற்ற- 
    தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ*  மாட்டாத தகவுஅற்றீரே!


    மண்நாடும் விண்நாடும்*  வானவரும்  தானவரும் மற்றும்எல்லாம்* 
    உண்ணாத பெருவெள்ளம்*  உண்ணாமல்  தான்விழுங்கி உய்யக்கொண்ட,*

     


    கணணாளன் கண்ணமங்கை நகராளன்*   கழல்சூடி, அவனை உள்ளத்து* 
    எண்ணாத மானிடத்தை*  எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.


    மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்*  உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,* 
    புறம்கிளர்ந்த காலத்து*  பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*

    அறம்கிளந்த திருவயிற்றின்*  அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    நிறம்கிளர்ந்த கருஞ்சோதி*  நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.


    அண்டத்தின் முகடுஅழுந்த*  அலைமுந்நீர்த்  திரைததும்ப ஆ! ஆ! என்று,* 
    தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்*  தான்அருளி,*  உலகம்ஏழும்-

    உண்டுஒத்த திருவயிற்றின்*  அகம்படியில்  வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    கொண்டல்கை மணிவண்ணன்*  தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.


    தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,* 
    யாவரையும் ஒழியாமே*  எம்பெருமான்  உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*

    காவளரும் பொழில்மங்கைக்*  கலிகன்றி  ஒலிமாலை கற்று வல்லார்,* 
    பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்*   பொன்உலகில் பொலிவர் தாமே.  (2)


    நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
    பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*

    பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
    காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)


    நீள்வான் குறள்உருஆய்*  நின்றுஇரந்து மாவலிமண்,* 
    தாளால் அளவிட்ட*  தக்கணைக்கு மிக்கானை,*

    தோளாத மாமணியை*  தொண்டர்க்கு இனியானை,*
    கேளாச் செவிகள்*  செவிஅல்ல கேட்டாமே.


    தூயானை*  தூய மறையானை,*  தென்ஆலி 
    மேயானை*  மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட 

    வாயானை*  மாலை வணங்கி*  அவன்பெருமை 
    பேசாதார்*  பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.


    கூடா இரணியனைக்*  கூர்உகிரால் மார்வுஇடந்த,* 
    ஓடா அடல்அரியை*  உம்பரார் கோமானை,*

    தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,*  ஆர்வத்தால்- 
    பாடாதார் பாட்டுஎன்றும்*  பாட்டுஅல்ல கேட்டாமே.


    மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
    கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*

    மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
    கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.


    கள்ஆர் துழாயும்*  கணவலரும் கூவிளையும்,* 
    முள்ஆர் முளரியும்*  ஆம்பலும்முன் கண்டக்கால்,*

    புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்*  புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
    உள்ளாதார் உள்ளத்தை*  உள்ளமாக் கொள்ளோமே.


    கனைஆர் கடலும்*  கருவிளையும் காயாவும்* 
    அனையானை,*  அன்பினால் ஆர்வத்தால்,*  என்றும்-

    சுனைஆர் மலர்இட்டு*  தொண்டராய் நின்று,* 
    நினையாதார் நெஞ்சுஎன்றும்*  நெஞ்சுஅல்ல கண்டாமே.


    வெறிஆர் கருங்கூந்தல்*  ஆய்ச்சியர் வைத்த* 
    உறிஆர் நறுவெண்ணெய்*  தான்உகந்து உண்ட

    சிறியானை*  செங்கண்*  நெடியானை சிந்தித்து- 
    அறியாதார்*  என்றும் அறியாதார் கண்டாமே.


    தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
    தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*

    ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
    மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)


    மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
    கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*

    கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
    ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)


    மாற்றம்உள*  ஆகிலும் சொல்லுவன்,*  மக்கள்- 
    தோற்றக் குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*

    ஆற்றங்கரை வாழ் மரம்போல்*  அஞ்சுகின்றேன்,* 
    நாற்றம் சுவை*  ஊறு ஒலிஆகிய நம்பீ!  (2)         


    சீற்றம்உள*  ஆகிலும் செப்புவன்,*  மக்கள்- 
    தோற்றக்குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*

    காற்றத்து இடைப்பட்ட*  கலவர் மனம்போல்,*
    ஆற்றத்துளங்கா நிற்பன்*  ஆழிவலவா!     


    தூங்குஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    வாங்காய்என்று சிந்தித்து*  நான்அதற்கு அஞ்சி,*

    பாம்போடு ஒருகூரையிலே*  பயின்றால்போல்,*
    தாங்காது உள்ளம் தள்ளும்*  என் தமரைக்கண்ணா!       


    உருஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    திரிவாய்என்று சிந்தித்தி*  என்றுஅதற்கு அஞ்சி,*

    இருபாடு எரிகொள்ளியின்*  உள் எறும்பே போல்,* 
    உருகாநிற்கும்*  என்உள்ளம் ஊழி முதல்வா!


    கொள்ளக் குறையாத*  இடும்பைக் குழியில்,* 
    தள்ளிப் புகப்பெய்தி கொல்*  என்றுஅதற்கு அஞ்சி,*

    வெள்ளத்து இடைப்பட்ட*  நரிஇனம் போலே,*
    உள்ளம் துளங்கா நிற்பன்*  ஊழி முதல்வா!     


    படைநின்ற*  பைந்தாமரையோடு*  அணிநீலம்- 
    மடைநின்று அலரும்*  வயல்ஆலி மணாளா,*

    இடையன் எறிந்த மரமே*  ஒத்துஇராமே,* 
    அடைய அருளாய்*  எனக்கு உன்தன் அருளே. 


    வேம்பின்புழு*  வேம்புஅன்றி உண்ணாது,*  அடியேன்- 
    நான்பின்னும்*  உன்சேவடிஅன்றி நயவேன்,*

    தேம்பல் இளந்திங்கள்*  சிறைவிடுத்து,*  ஐவாய்ப்- 
    பாம்பின் அணைப்*  பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!  (2)


    அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
    துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*

    மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
    பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)


    நந்தா நரகத்து அழுந்தா வகை,*  நாளும்- 
    எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு*  இன்அருள் செய்வாய்,*

    சந்தோகா! தலைவனே!*  தாமரைக் கண்ணா,*
    அந்தோ! அடியேற்கு*  அருளாய் உன்அருளே  (2)


    குன்றம் எடுத்து*  ஆநிரை காத்தவன் தன்னை,* 
    மன்றில் புகழ்*  மங்கை மன் கலிகன்றி சொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  வல்லவர்-தம்மேல்,* 
    என்றும் வினைஆயின*  சாரகில்லாவே,    (2)


    பிணக்கற அறுவகைச் சமயமும்*  நெறி உள்ளி உரைத்த* 
    கணக்கு அறு நலத்தனன்*  அந்தம் இல் ஆதி அம் பகவன்*

    வணக்கு உடைத் தவநெறி*  வழிநின்று புறநெறி களைகட்டு* 
    உணக்குமின், பசை அற!*  அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.    


    உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று*  உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை* 
    உணர்ந்து உணர்ந்து உணரிலும்*  இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*

    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  அரி அயன் அரன் என்னும் இவரை* 
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.   


    ஒன்று எனப் பல என*  அறிவு அரும்வடிவினுள் நின்ற* 
    நன்று எழில் நாரணன்*  நான்முகன் அரன் என்னும் இவரை*

    ஒன்ற நும் மனத்து வைத்து*  உள்ளி நும் இரு பசை அறுத்து* 
    நன்று என நலம் செய்வது*  அவனிடை நம்முடை நாளே.


    நாளும் நின்று அடு நம பழமை*  அம் கொடுவினை உடனே 
    மாளும்*  ஓர் குறைவு இல்லை;*  மனன் அகம் மலம் அறக் கழுவி*

    நாளும் நம் திரு உடை அடிகள் தம்*  நலம் கழல் வணங்கி* 
    மாளும் ஓர் இடத்திலும்*  வணக்கொடு மாள்வது வலமே.


    வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,*  இடம்பெறத் துந்தித் 
    தலத்து எழு திசைமுகன் படைத்த*  நல் உலகமும் தானும்

    புலப்பட*  பின்னும் தன் உலகத்தில்*  அகத்தனன் தானே 
    சொலப் புகில்*  இவை பின்னும் வயிற்று உள;*  இவை அவன் துயக்கே.


    துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்*  அமரரைத் துயக்கும்* 
    மயக்கு உடை மாயைகள்*  வானிலும் பெரியன வல்லன்*

    புயல் கரு நிறத்தனன்;*  பெரு நிலங் கடந்த நல் அடிப் போது* 
    அயர்ப்பிலன் அலற்றுவன்*  தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.


    அமரர்கள் தொழுது எழ*  அலை கடல் கடைந்தவன் தன்னை* 
    அமர் பொழில் வளங் குருகூர்ச்*  சடகோபன் குற்றேவல்கள்*

    அமர் சுவை ஆயிரத்து*  அவற்றினுள் இவை பத்தும் வல்லார்* 
    அமரரோடு உயர்வில் சென்று*  அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)


    அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!*  நீயும் நின் 
    அம்சிறைய சேவலுமாய்*  ஆஆ என்று எனக்கு அருளி*

    வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு*  என் விடு தூதாய்ச் சென்றக்கால்* 
    வன்சிறையில் அவன் வைக்கில்*  வைப்புண்டால் என் செயுமோ? (2)


    என் செய்ய தாமரைக்கண்*  பெருமானார்க்கு என் தூதாய்* 
    என் செய்யும் உரைத்தக்கால்?*  இனக் குயில்காள் நீர் அலிரே?*

    முன் செய்த முழுவினையால்*  திருவடிக்கீழ்க் குற்றேவல்* 
    முன் செய்ய முயலாதேன்*  அகல்வதுவோ? விதியினமே.


    விதியினால் பெடை மணக்கும்*  மென்நடைய அன்னங்காள்!* 
    மதியினால் குறள் மாணாய்*  உலகு இரந்த கள்வர்க்கு*

    மதியிலேன் வல் வினையே*  மாளாதோ? என்று ஒருத்தி* 
    மதி எல்லாம் உள் கலங்கி*  மயங்குமால் என்னீரே!


    என் நீர்மை கண்டு இரங்கி*  இது தகாது என்னாத* 
    என் நீல முகில் வண்ணற்கு*  என் சொல்லி யான் சொல்லுகேனோ?*

    நன் நீர்மை இனி அவர்கண்*  தங்காது என்று ஒரு வாய்ச்சொல்* 
    நன் நீல மகன்றில்காள்!*  நல்குதிரோ? நல்கீரோ?


    நல்கித் தான் காத்து அளிக்கும்*  பொழில் ஏழும்; வினையேற்கே* 
    நல்கத் தான் ஆகாதோ?*  நாரணனைக் கண்டக்கால்*

    மல்கு நீர்ப் புனல் படப்பை*  இரை தேர் வண் சிறு குருகே!* 
    மல்கு நீர்க் கண்ணேற்கு*  ஓர் வாசகம் கொண்டு அருளாயே. 


    அருளாத நீர் அருளி*  அவர் ஆவி துவராமுன்* 
    அருள் ஆழிப் புட்கடவீர்*  அவர் வீதி ஒருநாள் என்று*

    அருள் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    அருள் ஆழி வரி வண்டே!*  யாமும் என் பிழைத்தோமே?     


    என்பு இழை கோப்பது போலப்*  பனி வாடை ஈர்கின்றது* 
    என் பிழையே நினைந்தருளி*  அருளாத திருமாலார்க்கு*

    என் பிழைத்தாள் திருவடியின்*  தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்* 
    என்பிழைக்கும்? இளங் கிளியே!*  யான் வளர்த்த நீ அலையே?   


    நீயலையே ? சிறு பூவாய்!*  நெடுமாலார்க்கு என் தூதாய்* 
    நோய் எனது நுவல் என்ன,*  நுவலாதே இருந்தொழிந்தாய்*

    சாயலொடு மணி மாமை*  தளர்ந்தேன் நான்*  இனி உனது- 
    வாய் அலகில் இன் அடிசில்*  வைப்பாரை நாடாயே.  


    நாடாத மலர் நாடி*  நாள்தோறும் நாரணன் தன்* 
    வாடாத மலர் அடிக்கீழ்*  வைக்கவே வகுக்கின்று*

    வீடாடி வீற்றிருத்தல்*  வினை அற்றது என் செய்வதோ?* 
    ஊடாடு பனி வாடாய்!*  உரைத்து ஈராய் எனது உடலே.


    உடல் ஆழிப் பிறப்பு வீடு*  உயிர் முதலா முற்றுமாய்க்* 
    கடல் ஆழி நீர் தோற்றி*  அதனுள்ளே கண்வளரும்*

    அடல் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    விடல் ஆழி மட நெஞ்சே!*  வினையோம் ஒன்றாம் அளவே.


    அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்*  பெருமான் கண்ணனை* 
    வள வயல் சூழ் வண் குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்து உரைத்த*

    அளவு இயன்ற அந்தாதி*  ஆயிரத்துள் இப் பத்தின்* 
    வள உரையால் பெறலாகும்*  வான் ஓங்கு பெரு வளமே. (2) 


    இவையும் அவையும் உவையும்*  இவரும் அவரும் உவரும்,* 
    எவையும் எவரும் தன்னுளே*  ஆகியும் ஆக்கியும் காக்கும்,*

    அவையுள் தனிமுதல் எம்மான்*  கண்ண பிரான் என் அமுதம்,* 
    சுவையன் திருவின் மணாளன்*  என்னுடைச் சூழல் உளானே.


    சூழல் பலபல வல்லான்*  தொல்லை அம் காலத்து உலகைக்* 
    கேழல் ஒன்று ஆகி இடந்த*  கேசவன் என்னுடை அம்மான்,*

    வேழ மருப்பை ஒசித்தான்*  விண்ணவர்க்கு எண்ணல் அரியான்* 
    ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்*  அவன் என் அருகவிலானே.


    அருகல் இலாய பெரும் சீர்*  அமரர்கள் ஆதி முதல்வன்,* 
    கருகிய நீல நன் மேனி வண்ணன்*  செந்தாமரைக் கண்ணன்,* 

    பொரு சிறைப் புள் உவந்து ஏறும்*  பூமகளார் தனிக் கேள்வன்,* 
    ஒருகதியின் சுவை தந்திட்டு*  ஒழிவு இலன் என்னோடு உடனே


    நாவினுள் நின்று மலரும்*  ஞானக் கலைகளுக்கு எல்லாம்,* 
    ஆவியும் ஆக்கையும் தானே*  அழிப்போடு அளிப்பவன் தானே,*

    பூ இயல் நால் தடம் தோளன்*  பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,* 
    காவி நன் மேனிக் கமலக்*  கண்ணன் என் கண்ணின் உளானே.


    கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்*  காண்பன் அவன் கண்களாலே,* 
    அமலங்கள் ஆக விழிக்கும்*  ஐம்புலனும் அவன் மூர்த்தி,*

    கமலத்து அயன் நம்பி தன்னைக்*  கண்ணுதலானொடும் தோற்றி* 
    அமலத் தெய்வத்தொடு உலகம்*  ஆக்கி என் நெற்றி உளானே.


    நெற்றியுள் நின்று என்னை ஆளும்*  நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,* 
    கற்றைத் துழாய் முடிக் கோலக்*  கண்ண பிரானைத் தொழுவார்,* 

    ஒற்றைப் பிறை அணிந்தானும்*  நான்முகனும் இந்திரனும்,* 
    மற்றை அமரரும் எல்லாம் வந்து*  எனது உச்சியுளானே.


    உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்*  கண்ண பிரானுக்கு,* 
    இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*

    இச் சொன்ன ஆயிரத்துள்ளே*  இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,* 
    நிச்சலும் விண்ணப்பம் செய்ய*  நீள் கழல் சென்னி பொருமே.