பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?
கட்டளைக் கலித்துறை
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே!
சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.
இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.
பாசுரங்கள்
போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு* உனதடிப் போதில் ஒண்சீ-
ராம் தெளி தேன் உண்டு* அமர்ந்திட வேண்டி,* நின் பாலதுவே-
ஈந்திட வேண்டும் இராமாநுச! இது அன்றியொன்றும்*
மாந்த கில்லாது,* இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு* மதி மயங்கித்-
துயக்கும் பிறவியில்* தோன்றிய என்னை* துயரகற்றி-
உயக்கொண்டு நல்கும் இராமாநுச! என்றது உன்னையுன்னி*
நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,* நல்லவர் என்றும்நைந்தே.
நையும் மனம் உன் குணங்களை உன்னி* என் நாஇருந்துஎம்-
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்* அருவினையேன்-
கையும் தொழும் கண் கருதிடுங் காண க் கடல்புடைசூழ்*
வையம் இதனில்* உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே?
வளர்ந்த* வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்-
கிளர்ந்த* பொன்னாகம் கிழித்தவன்* கீர்த்திப் பயிரெழுந்து-
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்*
களைந்து நல் ஞானம் அளித்தனன்* கையில் கனியென்னவே.
கையில் கனியென்னக்* கண்ணனைக் காட்டித் தரிலும்* உன் தன்-
மெய்யில் பிறங்கிய* சீரன்றி வேண்டிலன் யான்,* நிரயத்-
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள்நீ*
செய்யில் தரிப்பன்* இராமாநுச! என் செழுங் கொண்டலே!
செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
விழுந்திருப்பார் நெஞ்சில்* மேவு நல்ஞானி* நல் வேதியர்கள்-
தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
எழுந்திரைத்து ஆடும் இடம்* அடியேனுக்கு இருப்பிடமே. (2)
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்-
பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து-
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன்வந்து-
இருப்பிடம்* என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)
இன்புற்ற சீலத்து இராமானுச,* என்றும் எவ்விடத்தும்-
என்புற்ற நோய்* உடல் தோறும் பிறந்து இறந்து* எண்ணரிய-
துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு* உன் தொண்டர்கட்கே-
அன்புற்று இருக்கும்படி,* என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2)
அங்கயல்பாய் வயல் தென் அரங்கன்,* அணி ஆகமன்னும்-
பங்கய மாமலர்* பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்-
தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே! நம் தலைமிசையே *
பொங்கிய கீர்த்தி * இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)