பிரபந்த தனியன்கள்

ஆபாத சூட மநுபூய ஹரிம் ஷயானம் நம் *
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா *
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தரானாம் *
யோ நிஷ்சிகாய மநவை முநிவாஹனம் தம் *

 

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே*

   பாசுரங்கள்


    அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
    விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*

    நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
    கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)


    உவந்த உள்ளத்தனாய்*  உலகம் அளந்து அண்டம் உற,* 
    நிவந்த நீள்முடியன்*  அன்று நேர்ந்த நிசாசரரைக்,*

    கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்*  கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்* 
    சிவந்த ஆடையின் மேல்*  சென்றதுஆம் என சிந்தனையே (2)


    மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,- 
    சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,* 

    அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்* 
    உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)


    சதுரமா மதிள்சூழ்*  இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
    உதிர ஓட்டி,*  ஓர் வெங்கணை*  உய்த்தவன் ஓத வண்ணன்*

    மதுரமா வண்டு பாட*  மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,*  திருவயிற்று- 
    உதர பந்தம்*  என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.


    பாரமாய*  பழவினை பற்றுஅறுத்து,*  என்னைத்தன்-
    வாரம்ஆக்கி வைத்தான்*  வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*

    கோர மாதவம் செய்தனன் கொல்  அறியேன்*  அரங்கத்து அம்மான்,*  திரு-
    வார மார்பத‌ன்றோ*  அடியேனை ஆட்கொண்டதே*


    துண்ட வெண்பிறையன்*  துயர் தீர்த்தவன்*  அஞ்சிறைய-
    வண்டுவாழ் பொழில்சூழ்*  அரங்கநகர் மேய அப்பன்*

    அண்டர் அண்ட‌ பகிரண்டத்து*  ஒரு மாநிலம் எழுமால்வரை,*  முற்றும்-
    உண்ட கண்டம் கண்டீர்*  அடியேனை உய்யக் கொண்டதே.


    கையினார்*  சுரி சங்கனல் ஆழியர்,*  நீள்வரை போல்-
    மெய்யனார்*  துளப விரையார் கமழ் நீள் முடியெம்.

    ஐயனார்,*  அணிஅரங்கனார்*  அரவின் அணைமிசை மேய மாயனார்,*
    செய்ய வாய் ஐயோ!*  என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!


    பரியனாகி வந்த*  அவுணன் உடல்கீண்ட,*  அமரர்க்கு-
    அரிய ஆதிபிரான்*  அரங்கத்து அமலன் முகத்து,*

    கரியவாகிப் புடைபரந்து*  மிளிர்ந்து செவ்வரிஓடி*  நீண்டவப்‍- 
    பெரிய வாய கண்கள்*  என்னைப் பேதைமை செய்தனவே!


    ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
    ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*

    கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
    நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)


    கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
    உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*

    அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
    கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)