பிரபந்த தனியன்கள்

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.

   பாசுரங்கள்


    அன்பே தகளியா*  ஆர்வமே நெய் ஆக,* 
    இன்பு உருகு சிந்தை இடு திரியா,*  நன்பு உருகி* 

    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்*  நாரணற்கு* 
    ஞானத் தமிழ் புரிந்த நான். (2)  


    ஞானத்தால் நன்கு உணர்ந்து*  நாரணன் தன் நாமங்கள்,* 
    தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால்,*  - வானத்து-

    அணி அமரர்*  ஆக்குவிக்கும் அஃது அன்றே,*  நங்கள்-
    பணி அமரர் கோமான் பரிசு?         


    பரிசு நறு மலரால்*  பாற்கடலான் பாதம்,*
    புரிவார் புகப்பெறுவர் போலாம்,*  - புரிவார்கள்-

    தொல் அமரர் கேள்வித்*  துலங்கு ஒளி சேர் தோற்றத்து*
    நல் அமரர் கோமான் நகர்.     


    நகர் இழைத்து நித்திலத்து*  நாள் மலர் கொண்டு,*  ஆங்கே-
    திகழும் மணி வயிரம் சேர்த்து,*  - நிகர் இல்லாப்-

    பைங் கமலம் ஏந்திப்*  பணிந்தேன் பனி மலராள்,*
    அங்கம் வலம் கொண்டான் அடி.


    அடி மூன்றில் இவ் உலகம்*  அன்று அளந்தாய் போலும்* 
    அடி மூன்று இரந்து அவனி கொண்டாய்,*  - படிநின்ற-

    நீர் ஓத மேனி*  நெடுமாலே*  நின் அடியை-
    யார் ஓத வல்லார் அறிந்து? 


    அறிந்து ஐந்தும் உள் அடக்கி*  ஆய் மலர் கொண்டு, ஆர்வம்-
    செறிந்த மனத்தராய் செவ்வே,*  - அறிந்து அவன்தன்-

    பேர் ஓதி ஏத்தும்*  பெருந்தவத்தோர் காண்பரே,* 
    கார் ஓத வண்ணன் கழல்.


    கழல் எடுத்து வாய் மடித்து*  கண் சுழன்று,*  மாற்றார்-
    அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச,*  தழல் எடுத்த-

    போர் ஆழி ஏந்தினான்*  பொன் மலர்ச் சேவடியை*
    ஓர் ஆழி நெஞ்சே! உகந்து.    


    உகந்து உன்னை வாங்கி*  ஒளி நிறம் கொள் கொங்கை* 
    அகம் குளிர உண் என்றாள் ஆவி,*  உகந்து- 

    முலை உண்பாய் போலே*  முனிந்து உண்டாய்,*  நீயும்-
    அலை பண்பால் ஆனமையால் அன்று.


    அன்று அதுகண்டு அஞ்சாத*  ஆய்ச்சி உனக்கு இரங்கி,* 
    நின்று முலை தந்த இந் நீர்மைக்கு,*  அன்று-

    வரன்முறையால் நீ அளந்த*  மா கடல் சூழ் ஞாலம்,*
    பெரு முறையால் எய்துமோ பேர்த்து?     


    பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய்*  மண் இரந்து- 
    காத்தனை*  பல் உயிரும் காவலனே,*  ஏத்திய-

    நா உடையேன் பூ உடையேன்*  நின் உள்ளி நின்றமையால்* 
    கா அடியேன் பட்ட கடை.     


    கடை நின்றூ அமரர் கழல்தொழுது, நாளும்-
    இடைநின்ற இன்பத்தராவர்,*  புடைநின்ற-

    நீரோத மேனி*  நெடுமாலே,*  நின்னடியை-
    ஆரோத வல்லார் அவர்?


    அவர் இவர் என்று இல்லை*  அரவு அணையான் பாதம்,*
    எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்,*  பவரும்-

    செழும் கதிரோன் ஒண் மலரோன்*  கண்ணுதலோன் அன்றே* 
    தொழும் தகையார் நாளும் தொடர்ந்து?  


    தொடர் எடுத்த மால் யானை*  சூழ் கயம் புக்கு அஞ்சி* 
    படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று,*  இடர் அடுக்க- 

    ஆழியான்*  பாதம் பணிந்து அன்றே,*  வானவர் கோன்-
    பாழி தான் எய்திற்று பண்டு? 


    பண்டிப் பெரும் பதியை ஆக்கி*  பழி பாவம்-
    கொண்டு இங்கு*  வாழ்வாரைக் கூறாதே,*  - எண்திசையும்-

    பேர்த்த கரம் நான்கு உடையான்*  பேர் ஓதி பேதைகாள்* 
    தீர்த்தகரர் ஆமின் திரிந்து.


    திரிந்தது வெம் சமத்துத்*  தேர் கடவி,*  அன்று-
    பிரிந்தது சீதையை மான் பின் போய்,*  - புரிந்ததுவும்-

    கண் பள்ளிகொள்ள*  அழகியதே,*  நாகத்தின்-
    தண் பள்ளி கொள்வான் தனக்கு.      


    தனக்கு அடிமை பட்டது*  தான் அறியானேலும்* 
    மனத்து அடைய வைப்பது ஆம் மாலை,* - வனத் திடரை-

    ஏரி ஆம் வண்ணம்*  இயற்றும் இது அல்லால்* 
    மாரி யார் பெய்கிற்பார் மற்று?  


    மற்று ஆர் இயல் ஆவார்*  வானவர் கோன் மா மலரோன் ,*
    சுற்றும் வணங்கும் தொழிலானை,*  - ஒற்றைப்-

    பிறை இருந்த*  செஞ்சடையான் பின் சென்று,*  மாலைக்-
    குறை இரந்து தான் முடித்தான் கொண்டு?  


    கொண்டது உலகம் குறள்*  உருவாய் கோளரியாய்,*
    ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது*  - உண்டதுவும்*

    தான் கடந்த ஏழ் உலகே*  தாமரைக்கண் மால் ஒரு நாள்,* 
    வான் கடந்தான் செய்த வழக்கு.     


    வழக்கு அன்று கண்டாய்*  வலி சகடம் செற்றாய்,* 
    வழக்கு என்று நீ மதிக்க வேண்டா,* - குழக் கன்று-

    தீ விளவின் காய்க்கு எறிந்த*  தீமை திருமாலே,* 
    பார் விளங்கச் செய்தாய் பழி.    


    பழி பாவம் கையகற்றி*  பல் காலும் நின்னை,*
    வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ,* - வழு இன்றி-

    நாரணன் தன் நாமங்கள்*  நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்,*
    காரணங்கள் தாம் உடையார் தாம்.  


    தாம் உளரே*  தம் உள்ளம் உள் உளதே*  தாமரையின்-
    பூ உளதே*  ஏத்தும் பொழுது உண்டே,*  - வாமன்-

    திரு மருவு*  தாள் மருவு சென்னியரே,*  செவ்வே-
    அரு நரகம் சேர்வது அரிது.  


    அரியது எளிது ஆகும்*  ஆற்றலால் மாற்றிப்*
    பெருக முயல்வாரைப் பெற்றால்,*  - கரியது ஓர்-

    வெண் கோட்டு மால் யானை*  வென்றி முடித்தன்றே,*
    தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து?      


    தாழ்ந்து வரம் கொண்டு*  தக்க வகைகளால்*
    வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்,*  - தாழ்ந்த-

    விளங் கனிக்குக்*  கன்று எறிந்து வேற்று உருவாய்,*  ஞாலம்-
    அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன்.       


    அவன் கண்டாய் நல் நெஞ்சே!*  ஆர் அருளும் கேடும்,* 
    அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான்,*  - அவன் கண்டாய்-

    காற்று தீ நீர் வான்*  கரு வரை மண் கார் ஓதச்,*
    சீற்றத் தீ ஆவானும் சென்று.     


    சென்றது இலங்கைமேல்*  செவ்வே தன் சீற்றத்தால்,*
    கொன்றது இராவணனை கூறுங்கால்,*  -நின்றதுவும்-

    வேய் ஓங்கு தண் சாரல்*  வேங்கடமே,*  விண்ணவர் தம்-
    வாய் ஓங்கு*  தொல் புகழான் வந்து.   


    வந்தித்து அவனை*  வழி நின்ற ஐம்பூதம்* 
    ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய்,*  - உந்திப்- 

    படி அமரர் வேலையான்*  பண்டு அமரர்க்கு ஈந்த,* 
    படி அமரர் வாழும் பதி.  


    பதி அமைந்து நாடி*  பருத்து எழுந்த சிந்தை,* 
    மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி*  - கதி மிகுத்து அம்-

    கோல் தேடி ஓடும்*  கொழுந்ததே போன்றதே,* 
    மால் தேடி ஓடும் மனம்.       


    மனத்து உள்ளான் வேங்கடத்தான்*  மா கடலான்,*  மற்றும்-
    நினைப்பு அரிய*  நீள் அரங்கத்து உள்ளான்,*  - எனைப் பலரும்-

    தேவாதி தேவன்*  எனப்படுவான்,*  முன் ஒரு நாள்-
    மா வாய் பிளந்த மகன்.     


    மகனாகக் கொண்டு எடுத்தாள்*  மாண்பு ஆய கொங்கை,*
    அகன் ஆர உண்பன் என்று உண்டு,*  - மகனைத் தாய்-

    தேறாத வண்ணம்*  திருத்தினாய்,*  தென் இலங்கை-
    நீறு ஆக எய்து அழித்தாய் நீ.  


    நீ அன்று உலகு அளந்தாய்*  நீண்ட திருமாலே,* 
    நீ அன்று உலகு இடந்தாய் என்பரால்,*  - நீ அன்று-

    கார் ஓதம் முன் கடைந்து*  பின் அடைத்தாய் மா கடலை,* 
    பேர் ஓத மேனிப் பிரான்.     


    பிரான் என்றும் நாளும்*  பெரும் புலரி என்றும்,* 
    குரா நல் செழும் போது கொண்டு,*  - வராகத்து-

    அணி உருவன்*  பாதம் பணியும் அவர் கண்டீர்,*
    மணி உருவம் காண்பார் மகிழ்ந்து.  


    மகிழ்ந்தது சிந்தை*  திருமாலே,*  மற்றும்-
    மகிழ்ந்தது உன் பாதமே போற்றி,*  - மகிழ்ந்தது-

    அழல் ஆழி சங்கம்*  அவை பாடி ஆடும்,*
    தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து.     


    துணிந்தது சிந்தை*  துழாய் அலங்கல்,*  அங்கம்-
    அணிந்தவன்*  பேர் உள்ளத்துப் பல்கால்,*  - பணிந்ததுவும்- 

    வேய் பிறங்கு சாரல்*  விறல் வேங்கடவனையே,* 
    வாய் திறங்கள் சொல்லும் வகை.             


    வகையால் அவனி*  இரந்து அளந்தாய் பாதம்,*
    புகையால் நறு மலரால் முன்னே,*  - மிக வாய்ந்த-

    அன்பு ஆக்கி ஏத்தி*  அடிமைப்பட்டேன் உனக்கு,* 
    என் பாக்கியத்தால் இனி.      


    இனிது என்பர் காமம்*  அதனிலும் ஆற்ற*
    இனிது என்பர் தண்ணீரும் எந்தாய்,*  - இனிது என்று-

    காமம் நீர் வேளாது*  நின் பெருமை வேட்பரேல்* 
    சேம நீர் ஆகும் சிறிது.        


    சிறியார் பெருமை*  சிறிதின்கண் எய்தும்,* 
    அறியாரும் தாம் அறியார் ஆவர்,*  - அறியாமை- 

    மண் கொண்டு மண் உண்டு*  மண் உமிழ்ந்த மாயன் என்று,*
    எண் கொண்டு என் நெஞ்சே! இரு.       


    இரும் தண் கமலத்து*  இரு மலரின் உள்ளே,* 
    திருந்து திசைமுகனைத் தந்தாய்,*  - பொருந்திய நின்-

    பாதங்கள் ஏத்திப்*  பணியாவேல்,*  பல் பிறப்பும்-
    ஏதங்கள் எல்லாம் எமக்கு. 


    எமக்கு என்று இரு நிதியம்*  ஏமாந்து இராதே,* 
    தமக்கு என்றும் சார்வம் அறிந்து,*  - நமக்கு என்றும்-

    மாதவனே என்னும்*  மனம் படைத்து*  மற்று அவன் பேர்-
    ஓதுவதே*  நாவினால் ஓத்து.             


    ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே,*  உத்தமன் பேர்-
    ஏத்தும்*  திறம் அறிமின் ஏழைகாள்,*  ஓத்து அதனை-

    வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல்,*  மாதவன் பேர்-
    சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.    


    சுருக்காக வாங்கி*  சுலாவி நின்று*  ஐயார்-
    நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர்,*  - திருப் பொலிந்த-

    ஆகத்தான்*  பாதம் அறிந்தும், அறியாத*
    போகத்தால் இல்லை பொருள்.       


    பொருளால் அமர் உலகம்*  புக்கு இயலல் ஆகாது* 
    அருளால் அறம் அருளும் அன்றே,*  - அருளாலே-

    மா மறையோர்க்கு ஈந்த*  மணிவண்ணன் பாதமே,*
    நீ மறவேல் நெஞ்சே! நினை.         


    நினைப்பன் திருமாலை*  நீண்ட தோள் காண,* 
    நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார்,*  - மனைப்பால்-

    பிறந்தார் பிறந்து எய்தும்*  பேரின்பம் எல்லாம்,*
    துறந்தார் தொழுதார் அத் தோள்.     


    தோள் இரண்டு எட்டு ஏழும்*  மூன்றும் முடி அனைத்தும்* 
    தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான்,*  - தாள் இரண்டும்-

    ஆர் தொழுவார் பாதம்*  அவை தொழுவது அன்றே,*  என்-
    சீர் கெழு தோள்*  செய்யும் சிறப்பு?


    சிறந்தார்க்கு எழு துணையாம்*  செங்கண் மால் நாமம்.*
    மறந்தாரை மானிடமா வையேன்,*  அறம் தாங்கும்-

    மாதவனே என்னும்*  மனம் படைத்து,*  மற்று அவன்பேர்-
    ஓதுவதே*  நாவினால் உள்ளு. 


    உளது என்று இறுமாவார்*  உண்டு இல்லை என்று,*
    தளர்தல் அதன் அருகும் சாரார்,*  - அளவு அரிய-

    வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடி தோயும்,*
    பாதத்தான் பாதம் பயின்று.        


    பயின்றது அரங்கம் திருக்கோட்டி,*  பல் நாள்-
    பயின்றதுவும்*  வேங்கடமே பல்நாள்,*  - பயின்றது-

    அணி திகழும் சோலை*  அணி நீர் மலையே* 
    மணி திகழும் வண் தடக்கை மால். 


    மாலை அரி உருவன்*  பாதமலர் அணிந்து,* 
    காலை தொழுது எழுமின் கைகோலி,*  - ஞாலம்-

    அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த*  அண்ணலை மற்று அல்லால்*
    உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து.   


    உணர்ந்தாய் மறை நான்கும்*  ஓதினாய் நீதி* 
    மணந்தாய் மலர் மகள் தோள் மாலே!*  - மணந்தாய் போய்-

    வேய் இரும் சாரல்*  வியல் இரு ஞாலம் சூழ்,* 
    மா இரும் சோலை மலை.


    மலை ஏழும்*  மா நிலங்கள் ஏழும் அதிர* 
    குலை சூழ் குரை கடல்கள் ஏழும்,*  - முலை சூழ்ந்த-

    நஞ்சு உரத்துப் பெண்ணை*  நவின்று உண்ட நாவன் என்று*
    அஞ்சாது என்நெஞ்சே! அழை. 


    அழைப்பன் திருமாலை*  ஆங்கு அவர்கள் சொன்ன,*
    பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி,*  - இழைப்பு அரிய-

    ஆயவனே! யாதவனே!*  என்றவனை யார் முகப்பும்,*
    மாயவனே என்று மதித்து.  


    மதிக் கண்டாய் நெஞ்சே!*  மணிவண்ணன் பாதம்,* 
    மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை,*  - மதிக் கண்டாய்- 

    பேர் ஆழிநின்று*  பெயர்ந்து கடல் கடைந்த*
    நீர் ஆழி வண்ணன் நிறம்.       


    நிறம் கரியன் செய்ய*  நெடு மலராள் மார்வன்,* 
    அறம் பெரியன் ஆர் அது அறிவார்?*  - மறம் புரிந்த-

    வாள் அரக்கன் போல்வானை*  வானவர் கோன் தானத்து,*
    நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி.       


    நெறியார் குழல் கற்றை*  முன்நின்று பின் தாழ்ந்து,*
    அறியாது இளங் கிரி என்று எண்ணி*  - பிரியாது- 

    பூங்கொடிக்கள் வைகும்*  பொரு புனல் குன்று என்னும்*
    வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு.         


    வெற்பு என்று இரும் சோலை*  வேங்கடம் என்று இவ் இரண்டும்*
    நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல்,*  - நிற்பு என்று-

    உளம் கோயில்*  உள்ளம் வைத்து உள்ளினேன்,*  வெள்ளத்து-
    இளங் கோயில் கைவிடேல் என்று.  


    என்றும் மறந்தறியேன்*  ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,* 
    நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்,*  - வென்றி-

    அடல் ஆழி கொண்ட*  அறிவனே,*  இன்பக்-
    கடல் ஆழி நீ அருளிக் காண்.   


    காணக் கழி காதல்*  கைமிக்குக் காட்டினால்,* 
    நாணப்படும் என்றால் நாணுமே?*  - பேணி- 

    கரு மாலைப்*  பொன் மேனி காட்டாமுன் காட்டும்,* 
    திருமாலை நங்கள் திரு.       


    திருமங்கை நின்றருளும்*  தெய்வம் நா வாழ்த்தும்,*
    கருமம் கடைப்பிடிமின் கண்டீர்,*  - உரிமையால்-

    ஏத்தினோம் பாதம்*  இருந் தடக்கை எந்தை பேர்,*
    நால் திசையும் கேட்டீரே நாம்?    
     


    நாம் பெற்ற நன்மையும்*  நா மங்கை நல் நெஞ்சத்து*
    ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து,*  - வேம்பின்-

    பொருள் நீர்மை ஆயினும்*  பொன் ஆழி பாடு என்று,*
    அருள் நீர்மை தந்த அருள்.          


    அருள் புரிந்த சிந்தை*  அடியார்மேல் வைத்து,* 
    பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது,*  - இருள் திரிந்து-

    நோக்கினேன் நோக்கி*  நினைந்தேன் அது ஒண் கமலம்,* 
    ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து.    


    ஓர் உருவன் அல்லை*  ஒளி உருவம் நின் உருவம்,* 
    ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர்,*  ஓர் உருவம்-

    ஆதியாம் வண்ணம்*  அறிந்தார் அவர் கண்டீர்,*
    நீதியால் மண் காப்பார் நின்று.       


    நின்றது ஓர் பாதம்*  நிலம் புதைப்ப நீண்ட தோள்*
    சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்*  - அன்று-

    கரு மாணியாய் இரந்த*  கள்வனே, உன்னைப்-
    பிரமாணித்தார்*  பெற்ற பேறு.             


    பேறு ஒன்றும் முன் அறியேன்*  பெற்று அறியேன் பேதைமையால்,* 
    மாறு என்று சொல்லி வணங்கினேன்,*  ஏறின்-

    பெருத்தெருத்தம் கோடு ஒசிய*  பெண் நசையின் பின் போய்,* 
    எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு.  


    ஏறு ஏழும்*  வென்று அடர்த்த எந்தை,*  எரி உருவத்து-
    ஏறு ஏறி பட்ட இடுசாபம்*  - பாறு ஏறி-

    உண்ட தலை வாய் நிறைய*  கோட்டு அம் கை ஒண் குருதி,*
    கண்ட பொருள் சொல்லின் கதை.         


    கதையின் பெரும் பொருளும் கண்ணா!*  நின் பேரே,- 
    இதயம்*  இருந்தவையே ஏத்தில்,*  - கதையின்-

    திருமொழியாய் நின்ற*  திருமாலே*  உன்னைப்-
    பரு மொழியால் காணப் பணி.   


    பணிந்தேன் திருமேனி*  பைங் கமலம் கையால்*
    அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்*  - துணிந்தேன்- 

    புரிந்து ஏத்தி*  உன்னை புகலிடம் பார்த்து,*  ஆங்கே-
    இருந்து ஏத்தி*  வாழும் இது.


    இது கண்டாய் நல் நெஞ்சே!*  இப் பிறவி ஆவது,* 
    இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது,*  - இது கண்டாய்-

    நாரணன் பேர் ஓதி*  நரகத்து அருகு அணையாக்,*
    காரணமும் வல்லையேல் காண்.    


    கண்டேன் திருமேனி*  யான் கனவில்,*  ஆங்கு அவன் கைக்-
    கண்டேன்*  கனலும் சுடர் ஆழி கண்டேன்* 

    உறு நோய் வினை இரண்டும்*  ஓட்டுவித்து,*  பின்னும்- 
    மறு நோய் செறுவான் வலி.  


    வலி மிக்க வாள் எயிற்று*  வாள் அவுணர் மாள* 
    வலி மிக்க வாள் வரை மத்து ஆக,*  வலி மிக்க-

    வாள் நாகம் சுற்றி*  மறுகக் கடல் கடைந்தான்,* 
    கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ.


    கோ ஆகி மா நிலம் காத்து,*  நம் கண் முகப்பே*
    மா ஏகிச் செல்கின்ற மன்னவரும்*  - பூ மேவும்-

    செங் கமல நாபியான்*  சேவடிக்கே ஏழ் பிறப்பும்* 
    தண் கமலம் ஏய்ந்தார் தமர்.  


    தமர் உள்ளம் தஞ்சை*  தலை அரங்கம் தண்கால்,* 
    தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*  - தமர் உள்ளும்-

    மாமல்லை கோவல்*  மதிள் குடந்தை என்பரே,* 
    ஏ வல்ல எந்தைக்கு இடம். 


    இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப,*  எரி கான்று- 
    அடங்கார்*  ஒடுங்குவித்தது ஆழி,*  - விடம் காலும்-

    தீ வாய் அரவு அணைமேல்*  தோன்றல் திசை அளப்பான்,* 
    பூ ஆர் அடி நிமிர்த்த போது.        


    போது அறிந்து வானரங்கள்*  பூஞ்சுனை புக்கு,*  ஆங்கு அலர்ந்த-
    போது அரிந்துகொண்டு ஏத்தும் போது,*  உள்ளம் போதும்- 

    மணி வேங்கடவன்*  மலர் அடிக்கே செல்ல,* 
    அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.         


    ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்*  ஆதி நடு அந்திவாய்,*
    வாய்ந்த மலர் தூவி வைகலும்,*  - ஏய்ந்த-

    பிறைக் கோட்டுச் செங்கண் * கரி விடுத்த பெம்மான்* 
    இறைக்கு ஆட்படத் துணிந்த யான்.   


    யானே தவம் செய்தேன்*  ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,* 
    யானே தவம் உடையேன் எம் பெருமான்,*  - யானே-

    இருந் தமிழ் நல் மாலை*  இணை அடிக்கே சொன்னேன்,* 
    பெருந் தமிழன் நல்லேன் பெருகு.


    பெருகு மத வேழம்*  மாப் பிடிக்கு முன் நின்று,* 
    இரு கண் இள மூங்கில் வாங்கி,*  - அருகு இருந்த-

    தேன் கலந்து நீட்டும்*  திருவேங்கடம் கண்டீர்,* 
    வான் கலந்த வண்ணன் வரை.    


    வரைச் சந்தனக் குழம்பும்*  வான் கலனும் பட்டும்,* 
    விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு* 

    ஆதிக்கண் நின்ற*  அறிவன் அடி இணையே*
    ஓதிப் பணிவது உறும் . 


    உறும் கண்டாய் நல் நெஞ்சே!*  உத்தமன் நல் பாதம்,* 
    உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்,*  - உறும் கண்டாய்- 

    ஏத்திப் பணிந்து அவன் பேர்*  ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்,* 
    சாத்தி உரைத்தல் தவம்.             


    தவம் செய்து*  நான் முகனே பெற்றான்,*  தரணி-
    நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்,*  - சிவந்த தன்-

    கை அனைத்தும்*  ஆரக் கழுவினான்,*  கங்கை நீர்-
    பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்.    


    பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-
    முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  - சொல் நின்ற-

    தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-
    நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   


    நேர்ந்தேன் அடிமை*  நினைந்தேன் அது ஒண் கமலம்,* 
    ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,*  - ஆர்ந்த-           

    அடிக் கோலம்*  கண்டவர்க்கு என்கொலோ,*  முன்னைப்-
    படிக் கோலம் கண்ட பகல்?  


    பகல் கண்டேன்*  நாரணனைக் கண்டேன்,*  - கனவில்-
    மிகக் கண்டேன்*  மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்* 

    ஊன் திகழும் நேமி*  ஒளி திகழும் சேவடியான்,*
    வான் திகழும் சோதி வடிவு.         


    வடிக் கோல வாள் நெடுங் கண்*  மா மலராள்,*  செவ்விப்-
    படிக் கோலம்*  கண்டு அகலாள் பல்நாள்,*  - அடிக்கோலி-

    ஞாலத்தாள் பின்னும்*  நலம் புரிந்தது என்கொலோ,*
    கோலத்தால் இல்லை குறை.


    குறையாக வெம் சொற்கள்*  கூறினேன் கூறி,* 
    மறை ஆங்கு என உரைத்த மாலை,*  - இறையேனும்- 

    ஈயும்கொல் என்றே*  இருந்தேன் எனைப் பகலும்,* 
    மாயன்கண் சென்ற வரம்.


    வரம் கருதி தன்னை*  வணங்காத வன்மை,*
    உரம் கருதி மூர்க்கத்தவனை,*  - நரம் கலந்த-

    சிங்கமாய்க் கீண்ட*  திருவன் அடி இணையே,*
    அம் கண் மா ஞாலத்து அமுது.       


    அமுது என்றும் தேன் என்றும்*  ஆழியான் என்றும்,* 
    அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்,*  - அமுது அன்ன

    சொல் மாலை ஏத்தித்*  தொழுதேன் சொலப்பட்ட,*
    நல் மாலை ஏத்தி நவின்று.     


    நவின்று உரைத்த நாவலர்கள்*  நாள் மலர் கொண்டு,*  ஆங்கே-
    பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்,*  - பயின்றார் தம்-

    மெய்த் தவத்தால்*  காண்பு அரிய மேக மணி வண்ணனை,*  யான்-
    எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?        


    இன்றா அறிகின்றேன் அல்லேன்*  இரு நிலத்தைச்-
    சென்று ஆங்கு அளந்த திருவடியை.*  - அன்று- 

    கருக்கோட்டியுள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்,* 
    திருக்கோட்டி எந்தை திறம்.    


    திறம்பிற்று இனி அறிந்தேன்*  தென் அரங்கத்து எந்தை,*
    திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,*  - திறம்பாச்-

    செடி நரகை நீக்கி*  தாம் செல்வதன் முன்,*  வானோர்-
    கடி நகர வாசல் கதவு.


    கதவி கதம் சிறந்த*  கஞ்சனை முன் காய்ந்து,* 
    அதவி போர் யானை ஒசித்து,*  - பதவியாய்ப்-

    பாணியால் நீர் ஏற்று*  பண்டு ஒருகால் மாவலியை,*
    மாணியாய்க் கொண்டிலையே மண்.      


    மண்ணுலகம் ஆளேனே*  வானவர்க்கும் வானவனாய்,*
    விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,*  - நண்ணித்-

    திருமாலை*  செங்கண் நெ.டியானை,*  எங்கள்-
    பெருமானை கைதொழுத பின்             


    பின்னால் அரு நரகம்*  சேராமல் பேதுறுவீர்,* 
    முன்னால் வணங்க முயல்மினோ,*  - பல் நூல்-

    அளந்தானை*  கார்க் கடல் சூழ் ஞாலத்தை,*  எல்லாம்-
    அளந்தான் அவன் சேவடி   


    அடியால் முன் கஞ்சனைச் செற்று,*  அமரர் ஏத்தும்-
    படியான்*  கொடிமேல் புள் கொண்டான்,*  - நெடியான் தன்-

    நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,*  தாம் வேண்டும்-
    காமமே காட்டும் கடிது.  


    கடிது கொடு நரகம்*  பிற்காலும் செய்கை,*
    கொடிது என்று அது கூடாமுன்னம்,*  - வடி சங்கம்-

    கொண்டானை*  கூந்தல் வாய் கீண்டானை,*  கொங்கை நஞ்சு-
    உண்டானை*  ஏத்துமினோ உற்று. 


    உற்று வணங்கித்*  தொழுமின் உலகு ஏழும்*
    முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,*  - பற்றிப்-

    பொருந்தாதான் மார்பு இடந்து*  பூம் பாடகத்துள்-
    இருந்தானை,*  ஏத்தும் என் நெஞ்சு.    


    என் நெஞ்சம் மேயான்*  என் சென்னியான்,*  தானவனை-
    வல் நெஞ்சம்*  கீண்ட மணி வண்ணன்,*  முன்னம் சேய்-

    ஊழியான்*  ஊழி பெயர்த்தான்,*  உலகு ஏத்தும்-
    ஆழியான்*  அத்தியூரான்.


    அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-
    துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-

    மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
    இறை ஆவான் எங்கள் பிரான். (2)


    எங்கள் பெருமான்*  இமையோர் தலைமகன்! நீ,* 
    செங்கண் நெடு மால் திருமார்பா,*  - பொங்கு-

    பட மூக்கின் ஆயிர வாய்ப்*  பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,* 
    குடமூக்குக் கோயிலாக் கொண்டு.   


    கொண்டு வளர்க்க*  குழவியாய்த் தான் வளர்ந்தது* 
    உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க,*  - கொண்டு-

    குடம் ஆடி*  கோவலனாய் மேவி,*  என் நெஞ்சம்-
    இடமாகக் கொண்ட இறை.           


    இறை எம் பெருமான் அருள் என்று*  இமையோர்-
    முறை நின்று*  மொய்ம் மலர்கள் தூவ,*  - அறை கழல-

    சேவடியான்*  செங்கண் நெடியான்,*  குறள் உருவாய்-
    மாவடிவின்*  மண் கொண்டான் மால். (2) 


    மாலே நெடியோனே!*  கண்ணனே,*  விண்ணவர்க்கு-
    மேலா!*  வியன் துழாய்க் கண்ணியனே,*  - மேலால்-

    விளவின் காய்*  கன்றினால் வீழ்த்தவனே,*  என் தன்-
    அளவு அன்றால்*  யானுடைய அன்பு. (2)