திரு நீர்மலை

திருநீர்மலை, ஒரு திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.[

அமைவிடம்

ஸ்ரீ நீர் வண்ண பெருமாள்,
ஸ்ரீ ரங்கநாதர் கோவில்,
திருநீர்மலை – 600 044,
காஞ்சிபுரம்(மாவட்டம்)- தொலை பேசி : +91- 44-2238 5484,
98405 95374,
94440 20820.,

தாயார் : ஸ்ரீ அணிமாமலர் மங்கை
மூலவர் : நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : சென்னை
கடவுளர்கள்: கல்யாண ராமர்,ரங்கநாயகி


திவ்யதேச பாசுரங்கள்

    1079.   
    காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
    முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*
    அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  நீண்டான்* 
    குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  

        விளக்கம்  


    • - “காண்டவவநம்” என்பது ‘காண்டாவனம்’ என்று கிடக்கிறது. இவ்வனத்தை அக்நிபகவான் உண்ணும்போது தேவேந்திரன் அதைத் தடுக்க முயன்றும் பயன்படவில்லை யென்பது விளங்க “ கண்டு அவன் நிற்கமுனே” எனப்பட்டது. காண்டவவனத்தை எரிக்க அநுமதித்த முகத்தால் பூமி பாரங்களைத் தொலைத்ததும், தானே நேரில் பல துஷ்டஜனங்களைக் கொன்றொழித்து அம்முகத்தாலும் பூமி பாரங்களைத் தொலைத்தும் அருளின எம்பெருமானுறையுமிடம் திருநீர் மலை என்றாராயிற்று. அரையன்-அரசன், முனே-முன்னே. வகிர்-பிளவு.


    1080.   
    அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 
    புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*  பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்* 
    பல மன்னர் பட சுடர் ஆழியினைப்*  பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 
    நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.

        விளக்கம்  


    • எம்பெருமான் பலராமனாகத் திருவவதரித்தபோது கலப்பையை ஆயுதமாகக் கொண்டருளினனென்க. ‘ஹலாயுதன்’ என்றிறே பலராமனது திரு நாமம். கலப்பையென்னும் பொருள்தான் ஹலம் என்ற வடசொல் இங்கு அலமெனத் திரிந்தது. புலமன்னு வடம்புனை கொங்கையினாள் = திருமடந்தைபோலே மண்மடந்தையும் எம்பெருமானுக்குத் திவய்மஹிஷியாதலால் இங்ஙனே சிறப்பித்து வருணிக்கப்பட்டாள். புலம்மன்னுவடம் = கண்ணும் மனமுமாகிற இந்திரியங்கள் வேறு பொருள்களிற் செல்லாது தன்னிடத்திலேயே பொருந்தியிருக்கப் பெற்ற முத்து வடம்; எனவே, மநோஹரமான முத்துவட மென்றதாயிற்று. பாரதயுத்தத்தில் எண்ணிறந்த ஆண்பிள்ளைகள் முடிந்தமை பற்றி ஆளடுவாளமர் எனப்பட்டது.


    1081.   
    தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்* 
    பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*
    பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
    நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.      

        விளக்கம்  


    • நீங்காச்செருவில் நிறைகாத்தவனுக்கு என்றவிடத்து, “பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழல் மனனர் கலங்கச் சங்கம்வாய்வைத்தான்” என்ற பாசுரமும், “அர்ஜூனநனுக்கு தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்தியுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” என்ற ஸ்ரீவசநபூஷண ஸூக்தியும் அநுஸந்திக்கத்தக்கன.


    1082.   
    மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி வரம்பு உருவ*
    மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*
    காலம் இது என்று அயன் வாளியினால்*  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
    நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.   

        விளக்கம்  



    1083.   
    பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  கடலும் சுடரும் இவை உண்டும்*
    எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்*  அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
    அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
    நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

        விளக்கம்  


    • (பாராருலகும்) திருநீர்மலையிலுள்ள பெருமான் எப்படிப்பட்டவனெனில், “உலகமுண்ட பெருவாயன்“ என்றபடி உலகிலுள்ள பதார்த்தங்களெல்லாவற்றையும் வயிறுநிறைய அமுதுசெய்தும் இன்னமும் இப்படிப்பட்ட உலகங்கள் பல்லாயிரம் உள்ளே யடங்கும்படி இடமுடையவன், இருபத்தொரு தலைமுறையளவும் நிலவுலகில் க்ஷத்ரியப்பூண்டு வேரறும்படி களைந்தொழிந்த பரசுராம முனிவரனாக அவதரித்தவன், தனக்கு மேற்பட்டா ரொருவருமில்லையென்னும்படி பெருமையின் மேலெல்லையிலே நிற்குமவன், நீர்வண்ணனென்று திருநாமமுடையவன், இப்படிப்பட்ட ஸர்வேச்வரனுக்கு உறைவிடம் திருநீர்மலை.


    1084.   
    புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்*  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
    அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அவுணன்* 
    பகராதவன் ஆயிரம் நாமம்*  அடிப் பணியாதவனை பணியால் அமரில்* 
    நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

        விளக்கம்  


    • (புகராருருவாகி) ஸ்ரீக்ருஷ்ணாவதார காலத்தில் பேளண்ட்ரகவாஸு தேவன் என்பானொரு அரசன் பிறந்திருந்தான், பல மூடர்கள் திரண்டு ‘நீதான் வாஸுதேவன்‘ என்று அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் அவனும் ‘நானே வாஸுதேவன்‘ என்று மயங்கி மார்பு நெறித்துச் சங்கு சக்கரம் கிரீடம் முதலியவற்றைச் செய்வித்து தானணிந்துகொண்டு, தூதனையழைத்து “நீ கிருஷ்ணனிடம் போய் என் பெயரைச்சொல்லி ‘இன்னான் வாஸுதேவனாயிருக்க, நீ அவனுடைய சங்கு சக்கரங்களைத் தரிக்கக்வுடாது, இன்று முதல் விட்டுவிட வேண்டியது, இல்லையாகில் அவனோடு யுத்தஞ்செயது அவனை வென்றாயாகில் தரிக்கலாம்‘ என்று சொல்லவேண்டியது“ என்று சொல்லியனுப்ப, அங்ஙனமே அந்தத்தூதன் வந்து கிருஷ்ணனிடம் அச்செய்தியைச் சொல்லக் கண்ணபிரான் சினமுற்றுப் பெரிய திருவடியின்மீதேறிச் சென்று போர்செய்து அப்பௌண்ட்ரகனைத் தனது திருவாழியினால் தலையறுத்துக் கொன்றொழித்தனன் – என்ற கதையை முன்னடிகளிலருளிச் செய்கிறார். பெளண்டர்கன் க்ருத்ரிமமான சங்குசக்கரங்களைச் செய்வித்து அணிந்து கொண்டதனால் ஒருதேஜஸ்ஸு தோன்றத் பெற்றமைப் பற்றிப் புகராருருவாகி முனிந்தவ னென்றார். அவன் தனக்காக அமைத்துக் கொண்டிருந்த பல நகரங்களையுமு கண்ணபிரான் நீறுபடுத்தினவீறு இரண்டாமடியில் கூறப்பட்டது. ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனை முடித்தமை சொல்வன முன்னடிகள் என்றும் வியாக்கியானித்துருளினர் பெரியார்.


    1085.   
    பிச்சச் சிறு பீலி பிடித்து*  உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்* 
    அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்*  அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*
    நச்சி நமனார் அடையாமை*  நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு* 
    நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

        விளக்கம்  


    • (பிச்சச்சிறுட்லி) முன் ஒன்றரையடியால் ஜைநர்களின் நடவடிக்கையைப் பழித்துக் கூறுகின்றார். ஜீவஹிம்ஸை செய்யக் கூடாதென்கிற நூற்கொள்கையிலே ஜைநர்கள் மிகவும் ஊற்றமுடையராயிருப்பர், தரையில் நடக்கும்போது பூச்சிகளும் புழுக்களும் காலில்மதிபட்டு முடிந்து போகுமென்று ஜீவ ஹிம்ஸைக்கு வெருவி மயிலிறகுகளை விளக்குமாறாகக்கட்டிக் கையிலேகொண்டு தரையை விளக்கிக்கொண்டே நடந்து செல்லுவார்கள், இதனைச் சொல்லுகிறது “பிச்சச்சிறுபீலி பிடித்து“ என்று. திகம்பரச்சாமிகளாய்த் திரிவது முண்டாகையால் அதனைச் சொல்லுகிறது “பிணந்தின் மடவாரவர்போல் அச்சமிலர் நாணிலர்“ என்று. பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாசுகள் வெட்கமும் அச்சமுமின்றியே துணியில்லாமல் திரிவதுபோலத் திரிகின்றனராம் ஜைநர்கள். இதுபற்றியே ‘ஜைநப்பிசாசுகள்‘ என்ற வ்யவஹாரம் உலகிற் பெரும்பாலும் வழங்குகின்றதென்பர். இப்படி அநாவச்யகமாயும் அநுசிதமாயுமுள்ள நடத்தைகளையுடைய ஜைநர்களின் செய்கையிலே ஜுகுப்ஸைகொண்டு அந்தரங்க பக்தியுடனே தன்னை வந்து பணிகின்ற பக்தர்கட்கு அருள்செய்யும் பெருமானுறையுமிடம் திருநீர் மலை – என்றதாயிற்று. நித்யம் என்ற வடசொல் நீச்சயமெனத்திரிந்தது. “நமக்கு நிச்சம் அருள் செய்“ என்றும், “நிச்சம் உள்குழைந்து நினார்க்கு“ என்றும், “நிச்சம் அருள் செய்யுமவற்கு“ என்றும் மூன்றுவிதமாக அந்வயிக்கலாம்.


    1086.   
    பேசும் அளவு அன்று இது வம்மின்*  நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்* 
    நாசம் அது செய்திடும் ஆதன்மையால்*  அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*
    வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்*  மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
    மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 

        விளக்கம்  


    • (பேசுமளவன்றிது) நாம் அடைந்து உஜ்ஜீவிப்பதற்குப் பாங்கான திவ்யதேசம் திருநீர்மலை என்று சில அந்தரங்கர்களை யழைத்து ஏகாந்தமாக அருளிச்செய்கிறார். நாமர் என்றது அண்மைவிளி நம்முடையவர்காள்! என்று அந்தரங்கர்களான சில பகவத்விஷயரஸிகர்களை அழைக்கிறபடி. நமர்களே! பிறர்கேட்பதன்முன் வம்மின் – சிறந்த அர்த்தவிசேஷம் நாஸ்திகர்களின் செவியிற்படக்கூடாதாகையால் உங்களுக்கு ஏகாந்தமாகச் சொல்லுகிறேன் வாருங்கள் என்றழைக்கிறார். சொல்லப்புகுவதற்கு முன்னே திவ்ய தேசவைபவத்தைத் தாம் அநுஸந்தித்து “இது பேசுமளவன்று“ என வியக்கிறார். பணியுமவர்களின் தீவினைகள் முழுவதையும் உடனே நாசஞ் செய்யுமதான இத்திவ்யதேசமே நமக்கு உஜ்ஜீவநத்துக்கு உரிய திருப்பதியாமென்றாராயிற்று – முன்னடிகளில்.


    1087.   
    நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
    அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
    உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
    கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)

        விளக்கம்