பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
    குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*

    நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
    பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    


    கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து*  உலகம் கைப்படுத்து* 
    பொள்ளைக் கரத்த போதகத்தின்*  துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*

    பள்ளச் செறுவில் கயல் உகள*  பழனக் கழனி-அதனுள் போய* 
    புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்*  புள்ளம்பூதங்குடி தானே. 


    மேவா அரக்கர் தென் இலங்கை*  வேந்தன் வீயச் சரம் துரந்து* 
    மாவாய் பிளந்து மல் அடர்த்து*  மருதம் சாய்த்த மாலது இடம்*

    காஆர் தெங்கின் பழம் வீழ*  கயல்கள் பாய குருகு இரியும்* 
    பூஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.    


    வெற்பால் மாரி பழுது ஆக்கி*  விறல் வாள் அரக்கர் தலைவன் தன்* 
    வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்*  துணித்த வல் வில் இராமன் இடம்*

    கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்*  கவின் ஆர் கூடம் மாளிகைகள்* 
    பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.  


    மையார் தடங் கண் கருங் கூந்தல்*  ஆய்ச்சி மறைய வைத்த தயிர்* 
    நெய்யார் பாலோடு அமுது செய்த*  நேமி அங் கை மாயன் இடம்*

    செய்யார் ஆரல் இரை கருதிச்*  செங் கால் நாரை சென்று அணையும்* 
    பொய்யா நாவின் மறையாளர்*  புள்ளம்பூதங்குடிதானே.    


    மின்னின் அன்ன நுண் மருங்குல்*  வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா* 
    மன்னு சினத்த மழ விடைகள்*  ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.     


    குடையா விலங்கல் கொண்டு ஏந்தி*  மாரி பழுதா நிரை காத்து* 
    சடையான் ஓட அடல் வாணன்*  தடந் தோள் துணித்த தலைவன் இடம்*

    குடியா வண்டு கள் உண்ண*  கோல நீலம் மட்டு உகுக்கும* 
    புடை ஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.     


    கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி* 
    இறையான் கையில் நிறையாத*  முண்டம் நிறைத்த எந்தை இடம்*

    மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்* 
    பொறையால் மிக்க அந்தணர் வாழ்*  புள்ளம்பூதங்குடி தானே.


    துன்னி மண்ணும் விண் நாடும்*  தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்* 
    அன்னம் ஆகி அரு மறைகள்*  அருளிச்செய்த அமலன் இடம்*

    மின்னு சோதி நவமணியும்*  வேயின் முத்தும் சாமரையும்* 
    பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்*  புள்ளம்பூதங்குடி தானே.


    கற்றா மறித்து காளியன்தன்*  சென்னி நடுங்க நடம்பயின்ற* 
    பொன் தாமரையாள் தன் கேள்வன்*  புள்ளம்பூதங்குடி தன்மேல*

    கற்றார் பரவும் மங்கையர் கோன்*  கார் ஆர் புயல்கைக் கலிகன்றி* 
    சொல்தான் ஈர் ஐந்து இவை பாட*  சோர நில்லா துயர் தாமே.       


    தாம்*  தம் பெருமை அறியார்*  
    தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*

    காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
    கூந்தல் கமழும்*  கூடலூரே.


    செறும் திண்*  திமில் ஏறு உடைய*  பின்னை 
    பெறும் தண் கோலம்*  பெற்றார் ஊர்போல்*

    நறும் தண் தீம்*  தேன் உண்ட வண்டு* 
    குறிஞ்சி பாடும்*  கூடலூரே.


    பிள்ளை உருவாய்த்*  தயிர் உண்டு*  அடியேன்
    உள்ளம் புகுந்த*  ஒருவர் ஊர்போல்*

    கள்ள நாரை*  வயலுள்*  கயல்மீன்
    கொள்ளை கொள்ளும்*  கூடலூரே.


    கூற்று ஏர் உருவின்*  குறள் ஆய்*  நிலம் நீர்
    ஏற்றான் எந்தை*  பெருமான் ஊர்போல்*

    சேற்று ஏர் உழவர்*  கோதைப் போது ஊண்*
    கோல் தேன் முரலும்*  கூடலூரே.


    தொண்டர் பரவ*  சுடர் சென்று அணவ* 
    அண்டத்து அமரும்*  அடிகள் ஊர்போல்*

    வண்டல் அலையுள்*  கெண்டை மிளிர* 
    கொண்டல் அதிரும்*  கூடலூரே. 


    தக்கன் வேள்வி*  தகர்த்த தலைவன்*
    துக்கம் துடைத்த*  துணைவர் ஊர்போல்*

    எக்கல் இடு*  நுண் மணல்மேல்*  எங்கும்
    கொக்கின் பழம் வீழ்*  கூடலூரே.


    கருந் தண் கடலும்*  மலையும் உலகும்*
    அருந்தும் அடிகள்*  அமரும் ஊர்போல*

    பெருந் தண் முல்லைப்*  பிள்ளை ஓடிக்*
    குருந்தம் தழுவும்*  கூடலூரே.


    கலை வாழ்*  பிணையோடு அணையும்*  திருநீர் 
    மலை வாழ் எந்தை*  மருவும் ஊர்போல்*

    இலை தாழ் தெங்கின்*  மேல்நின்று*  இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின்*  கூடலூரே.


    பெருகு காதல் அடியேன்*  உள்ளம்- 
    உருகப் புகுந்த*  ஒருவர் ஊர் போல்* 

    அருகு கைதை மலர*  கெண்டை 
    குருகு என்று அஞ்சும்* கூடலூரே.    


    காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
    மேவித் திகழும்*  கூடலூர்மேல்*

    கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
    பாவைப் பாட*  பாவம் போமே.


    வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
    கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*

    மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
    தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.


    வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
    இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
    திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          


    வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்*  உடலகம் இரு பிளவாக்* 
    கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மையின் ஆர்தரு வரால் இனம் பாய*  வண்தடத்திடைக் கமலங்கள்*
    தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.


    வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக*  ஐவர்கட்கு அரசு அளித்த* 
    காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!*  நின் காதலை அருள் எனக்கு*

    மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்*  வாய்அது துவர்ப்பு எய்த* 
    தீம் பலங்கனித் தேன் அது நுகர்*  திருவெள்ளறை நின்றானே. 


    மான வேல் ஒண் கண் மடவரல்*  மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்* 
    ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி*  வெண்முறுவல் செய்து அலர்கின்ற* 
    தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்*  திருவெள்ளறை நின்றானே.


    பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ*  அமுதினைக் கொடுத்தளிப்பான்* 
    அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!*  நின் அடிமையை அருள் எனக்கு*

    தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்*  தையலார் குழல் அணைவான்* 
    திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை*  திருவெள்ளறை நின்றானே. 


    ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  அரக்கன் தன் சிரம் எல்லாம்* 
    வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  தாமரை மலர் வார்ந்த* 
    தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.


    முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி*  இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த* 
    அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மன்னு கேதகை சூதகம் என்று இவை*  வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 
    தென்ன என்ன வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.      


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல்இடம் முழுதினையும்* 
    பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்*  எனக்கு அருள்புரியே,* 

    ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி*  வண்டு உழிதர*  மாஏறித்
    தீம் குயில் மிழற்றும் படப்பைத்*  திருவெள்ளறை நின்றானே.


    மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
    அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*

    நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
    எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 


    உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
    எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*

    சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
    அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          


    வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
    பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*

    தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
    செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.


    பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
    கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 

    வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
    அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.    


    விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
    வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 

    துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
    திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.        


    வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
    அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 

    உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
    செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.


    கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
    முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*

    குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
    அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.     


    கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
    துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 

    மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
    செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே        


    ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
    தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*

    வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
    தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே


    சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
    மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*

    வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
    ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  


    அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
    கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 

    நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
    வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.


    வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
    மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-

    உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
    திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
    விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்*  மெய்ய

    மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
    சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
    தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*

    கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
    ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
    ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
    மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!


    பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
    ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
    ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
    யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்' என்னும்*  பூமேல்-

    மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
    தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? 


    வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
    பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*

    தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
    தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? 


    உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
    மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*

    பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
    அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   


    பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
    வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

    சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
    அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
    நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்

    காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
    மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.


    கைம்மான மழ களிற்றை*  கடல் கிடந்த கருமணியை* 
    மைம்மான மரகதத்தை*  மறை உரைத்த திருமாலை* 

    எம்மானை எனக்கு என்றும் இனியானை*  பனி காத்த 
    அம்மானை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.


    பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
    ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

    கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
    ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
    தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 

    தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
    ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே.      


    வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
    தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 

    பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
    அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  


    நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
    ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*

    பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
    ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.        


    தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
    கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 

    வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
    அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  


    சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
    வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-

    கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
    அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        


    துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
    அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த

    எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
    அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
    மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*

    மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
    அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   


    ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
    காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*

    நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
    தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        


    பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
    பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*

    கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
    அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
    தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*

    பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
    அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
    துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  


    மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*

    சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     


    எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*

    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    


    ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
    ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*

    ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
    ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*

    வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 


    ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*

    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
    மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச

    சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
    ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
    அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*

    மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      


    ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
    மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து

    தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
    ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே


    வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
    காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*

    கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
    ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
    முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 

    கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
    அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
    நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*

    வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
    அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
    தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*

    போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
    ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
    தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*

    பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
    அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .


    ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
    காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*

    கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
    காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*

    ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 


    துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
    உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*

    வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
    அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
    ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*

    நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
    பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.


    கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
    பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*

    செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      


    வங்கம் ஆர் கடல்கள் ஏழும்*  மலையும் வானகமும் மற்றும்* 
    அம் கண் மா ஞாலம் எல்லாம்*  அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*

    திங்கள் மா முகில் அணவு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    எங்கள் மால் இறைவன் நாமம்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    ஒருவனை உந்திப் பூமேல்*  ஓங்குவித்து ஆகம்தன்னால்* 
    ஒருவனைச் சாபம் நீக்கி*  உம்பர் ஆள் என்று விட்டான்*

    பெரு வரை மதிள்கள் சூழ்ந்த*  பெரு நகர் அரவு அணைமேல்* 
    கரு வரை வண்ணன்தன் பேர்*  கருதி நான் உய்ந்த ஆறே.


    ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி*  உலகு எலாம் திரியும் ஈசன்* 
    ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன*  ஒண் புனலை ஈந்தான்* 

    தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த*  செறி வயல் தென் திருப்பேர்*
    வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.


    வக்கரன் வாய் முன் கீண்ட*  மாயனே என்று வானோர் 
    புக்கு*  அரண் தந்தருளாய் என்ன*  பொன் ஆகத்தானை* 

    நக்கு அரி உருவம் ஆகி*  நகம் கிளர்ந்து இடந்து உகந்த* 
    சக்கரச் செல்வன் தென்பேர்த்*  தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.


    விலங்கலால் கடல் அடைத்து*  விளங்கிழை பொருட்டு*  வில்லால் 
    இலங்கை மா நகர்க்கு இறைவன்*  இருபது புயம் துணித்தான்*

    நலம் கொள் நான்மறை வல்லார்கள்*  ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு* 
    மலங்கு பாய் வயல் திருப்பேர்*  மருவி நான் வாழ்ந்த ஆறே.


    வெண்ணெய் தான் அமுதுசெய்ய*  வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி* 
    கண்ணி ஆர் குறுங் கயிற்றால்*  கட்ட வெட்டொன்று இருந்தான்*

    திண்ண மா மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  வேலை 
    வண்ணனார் நாமம் நாளும்*  வாய் மொழிந்து உய்ந்த ஆறே.


    அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய*  ஆய்ப்பாடி தன்னுள்* 
    கொம்பு அனார் பின்னை கோலம்*  கூடுதற்கு ஏறு கொன்றான்* 

    செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  மேவும்- 
    எம்பிரான் நாமம் நாளும்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    நால் வகை வேதம் ஐந்து வேள்வி*  ஆறு அங்கம் வல்லார்* 
    மேலை வானவரின் மிக்க*  வேதியர் ஆதி காலம்* 

    சேல் உகள் வயல் திருப்பேர்ச்*  செங் கண் மாலோடும் வாழ்வார்* 
    சீல மா தவத்தர் சிந்தை ஆளி*  என் சிந்தையானே.


    வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
    கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*

    திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
    கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       


    தீது அறு நிலத்தொடு எரி காலினொடு*  நீர் கெழு விசும்பும் அவை ஆய்* 
    மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*  அவை ஆய பெருமான்* 

    தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*  தட மார்வர் தகைசேர்* 
    நாதன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   (2)


    உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    மெய்யின் அளவே அமுதுசெய்ய வல*  ஐயன்அவன் மேவும் நகர்தான்*

    மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு*  மலர் கிண்டி அதன்மேல்* 
    நைவளம் நவிற்று பொழில்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.     


    உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த*  தட மார்வர் தகை சேர்*

    வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி*  கங்குல் வயல் சூழ்* 
    நம்பன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.


    பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என*  வந்த அசுரர்* 
    இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல*  நின்ற பெருமான்*

    சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல*  அடிகொள் நெடு மா* 
    நறைசெய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      


    மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என*  வந்த அசுரர்* 
    தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக*  நொடி ஆம் அளவு எய்தான்*

    வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்*  இவை அம்கை உடையான்* 
    நாளும் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.     


    தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்*  துணை ஆக முன நாள்* 
    வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்*  இனிது மேவும் நகர்தான்*

    கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்*  எழில் ஆர் புறவு சேர்* 
    நம்பி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      


    தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்*  நந்தன் மதலை* 
    எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ*  நின்ற நகர்தான்*

    மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்*  மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
    நந்தி பணிசெய்த நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.   


    எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று*  முனியாளர் திரு ஆர்* 
    பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு*  கூட எழில் ஆர்*

    மண்ணில் இதுபோல நகர் இல்லை என*  வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
    நண்ணி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.           


    வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக*  மிக்க பெருநீர்* 
    அங்கம் அழியார் அவனது ஆணை*  தலை சூடும் அடியார் அறிதியேல்*

    பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி*  எங்கும் உளதால்* 
    நங்கள் பெருமான் உறையும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   


    நறை செய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்* 
    உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்*  அவை அம் கை உடையானை*  ஒளி சேர் 

    கறை வளரும் வேல் வல்ல*  கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்* 
    முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்*  முழுது அகலுமே.