பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று* அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து* அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்* பெண் அமுது உண்ட எம் பெருமானே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட* தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ* நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்,
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி* முத
லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்* சீர் கெழு நான்மறை ஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்* இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
காதல் செய்து இளையவர் கலவி தரும்* வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!* போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்* காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே!
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ்* இவை பாட வல்லார்*
வாமனன் அடி* இணை மருவுவரே*
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்* பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன்* ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி
அறுத்தேன்* ஆர்வச் செற்றம் அவைதம்மை* மனத்து அகற்றி
வெறுத்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான்! திரு மார்பா!*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே
மான் ஏய் நோக்கியர்தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே! மா நிலமே!* வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
பிறிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன்* நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி
எறிந்தேன்* ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து
செறிந்தேன்* நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே.
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி* முன் ஆண்டவரே-
மாண்டார் என்று வந்தார்* அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை*
வேண்டேன் நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா! மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த!*
மல்லா மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்!*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி*
கூற ஐவர் வந்து குமைக்கக்* குடிவிட்டவரைத்*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர்போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்*
மூவா வானவர்தம் முதல்வா!* மதி கோள் விடுத்த
தேவா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர்தம்
கோதா* கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ* மொழியாய் சுடர்போல்* என் மனத்து இருந்த
வேதா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர்கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர்தம்* கொடி மா நகர் கூடுவரே.
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* நின் உருவம்
மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது* யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* நின்
திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே. (2)
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே*
அறம்தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள் குழகா!* திருநறையூர்த்
தேனே* வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே
சாந்து ஏந்து மென் முலையார்* தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன்* அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்*
போந்தேன் புண்ணியனே!* உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன்* பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்
செற்றாய்* கொற்றவனே!* திருவிண்ணகரானே.
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே.
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே* நீ பணியாது அடை* நின் திருமனத்து*
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே.
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே.
சொல்லாய் திரு மார்வா!* உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை* வினைகள் நலியாமை* நம்புநம்பீ*
மல்லா! குடம் ஆடீ!* மதுசூதனே* உலகில்
செல்லா நல் இசையாய்!* திருவிண்ணகரானே.
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானைக்*
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே.
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாதமுன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு உண் குழலார்* கூடி இருந்து சிரித்து* நீர்
இங்கு என் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாதமுன்*
திங்கள் எரி கால்* செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*
நங்கள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொங்கு ஆர் குழலார்* கூடி இருந்து சிரித்து* எம்மை
எம் கோலம் ஐயா!* என் இனிக் காண்பது? என்னாதமுன்*
செங்கோல் வலவன்* தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
நம் கோன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கொம்பும் அரவமும்* வல்லியும் வென்ற நுண் ஏர் இடை*
வம்பு உண் குழலார்* வாசல் அடைத்து இகழாதமுன்*
செம் பொன் கமுகு இனம் தான்* கனியும் செழும் சோலை சூழ்*
நம்பன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
விலங்கும் கயலும்* வேலும் ஒண் காவியும் வென்ற கண்*
சலம் கொண்ட சொல்லார்* தாங்கள் சிரித்து இகழாத முன்*
மலங்கும் வராலும்* வாளையும் பாய் வயல் சூழ்தரு*
நலம் கொள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
மின் நேர் இடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என் நீர் இருமி* எம்பால் வந்தது என்று இகழாதமுன்*
தொல் நீர் இலங்கை மலங்க* விலங்கு எரி ஊட்டினான்*
நல் நீர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வில் ஏர் நுதலார்* வேட்கையை மாற்றி சிரித்து* இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்* புறன் உரை கேட்பதன்முன்*
சொல் ஆர் மறை நான்கு ஓதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்* மதனன் என்றார்தம்மைக்*
கேள்மின்கள் ஈளையோடு* ஏங்கு கிழவன் என்னாதமுன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும் அறாத ஊர்*
நாளும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்* காதன்மை விட்டிட*
குனி சேர்ந்து உடலம்* கோலில் தளர்ந்து இளையாதமுன்*
பனி சேர் விசும்பில்* பால்மதி கோள் விடுத்தான் இடம்*
நனி சேர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே. (2)
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு* இமையோர்
துளங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே.
முனை ஆர் சீயம் ஆகி* அவுணன் முரண் மார்வம்*
புனை வாள் உகிரால்* போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்* குயில் கூவும்*
நனை ஆர் சோலை சூழ்ந்து* அழகு ஆய நறையூரே.
ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச் சாடி* இலங்கை செற்றான் ஊர்*
மீனைத் தழுவி வீழ்ந்து எழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமை ஒளிக்கும்நறையூரே.
உறி ஆர் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறி ஆர் கூந்தல்* பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*
பொறி ஆர் மஞ்ஞை* பூம் பொழில்தோறும் நடம் ஆட*
நறு நாள்மலர்மேல்* வண்டு இசை பாடும் நறையூரே.
விடை ஏழ் வென்று* மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதன் ஊர்*
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம்பின்சென்று*
நடையோடு இயலி* நாணி ஒளிக்கும் நறையூரே.
பகு வாய் வன் பேய்* கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு*
புகு வாய் நின்ற* போதகம் வீழப் பொருதான் ஊர்*
நெகு வாய் நெய்தல்* பூ மது மாந்தி கமலத்தின்*
நகு வாய் மலர்மேல்* அன்னம் உறங்கும் நறையூரே*
முந்து நூலும் முப்புரி நூலும்* முன் ஈந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தான் ஊர்*
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி* புள் ஓடி*
நந்து வாரும்* பைம் புனல் வாவி நறையூரே.
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்* விறல் வியூகம்*
விள்ள சிந்துக்கோன் விழ* ஊர்ந்த விமலன் ஊர்*
கொள்ளைக் கொழு மீன்* உண் குருகு ஓடி பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறல் உகுக்கும் நறையூரே.
பாரை ஊரும் பாரம் தீரப்* பார்த்தன்தன்*
தேரை ஊரும்* தேவதேவன் சேறும் ஊர்*
தாரை ஊரும்* தண் தளிர் வேலி புடை சூழ*
நாரை ஊரும்* நல் வயல் சூழ்ந்த* நறையூரே.
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை*
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே.
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்* அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு* மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்* குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்*
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை* இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி* உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள*
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி* பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி* பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி*
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்* அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த*
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
அன்று உலகம் மூன்றினையும் அளந்து* வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு*
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு* விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து*
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்* புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்* தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்*
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்* தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்*
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை* விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட*
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி* முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்* இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய* வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்* மன் எல்லாம் முன் அவியச் சென்று* வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்* சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு* எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட*
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன்* ஆயிரம் பேர் உடைய ஆளன்* பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற* படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்*
பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்* புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்* பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரைத்*
தோளும் தலையும் துணிவு எய்தச்* சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்* வேல்கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே.
முனி ஆய் வந்து மூவெழுகால்* முடி சேர் மன்னர் உடல் துணிய*
தனி வாய் மழுவின் படை ஆண்ட* தார் ஆர் தோளான் வார் புறவில்*
பனி சேர் முல்லை பல் அரும்ப* பானல் ஒருபால் கண் காட்ட*
நனி சேர் கமலம் முகங்காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்* சின வாள் அரவில் துயில் அமர்ந்து*
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்* இரந்தான் மாவலி மண்*
புள் ஆர் புறவில் பூங் காவி* பொலன் கொள் மாதர் கண் காட்ட*
நள் ஆர் கமலம் முகம் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று* உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்*
விளியா ஆர்க்க ஆப்புண்டு* விம்மி அழுதான் மென் மலர்மேல்*
களியா வண்டு கள் உண்ண* காமர் தென்றல் அலர் தூற்ற*
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே.
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே.
வள்ளி கொழுநன் முதலாய* மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட* விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*
பள்ளி கமலத்திடைப் பட்ட* பகு வாய் அலவன் முகம் நோக்கி*
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த* நறையூர் நின்ற நம்பியே.
மிடையா வந்த வேல் மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
குடையா வரை ஒன்று எடுத்து* ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்* வேதம் நான்கு ஐந்து வேள்வி* அங்கம் ஆறு இசை ஏழ்*
நடையா வல்ல அந்தணர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி* கூந்தல் முடிக்க பாரதத்து*
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க* சங்கம் வாய் வைத்தான்*
செந்தாமரைமேல் அயனோடு* சிவனும் அனைய பெருமையோர்*
நந்தா வண் கை மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேல் அணிந்து* உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்* இறையோன் சென்று குறை இரப்ப*
மாறு ஒன்று இல்லா வாச நீர்* வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்*
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய* நறையூர் நின்ற நம்பியே
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே.
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* மாவலி மண்
தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே. (2)
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* மூழ்த்த நாள்
அந்நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய* திருமாலை எம்மானை*
நல்நீர் சூழ்* நறையூரில் கண்டேனே.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே.
கல் ஆர் மதிள் சூழ்* கதி இலங்கைக் கார் அரக்கன்*
வல் ஆகம் கீள* வரி வெம் சரம் துரந்த
வில்லானை* செல்வ விபீடணற்கு வேறாக*
நல்லானை நாடி* நறையூரில் கண்டேனே .
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே.
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை* மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்* வண் துவரை
நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே.
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்* மற மன்னர்*
பண்ணின்மேல் வந்த* படை எல்லாம் பாரதத்து*
விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை*
நண்ணி நான் நாடி* நறையூரில் கண்டேனே.
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (2)
மன்னும் மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன்உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே. (2)
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது* மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணைஅடியே அடை நெஞ்சே!
கழி ஆரும் கன சங்கம்* கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*
பழி ஆரும் விறல் அரக்கன்* பரு முடிகள்அவை சிதற*
அழல் ஆரும் சரம் துரந்தான்* அடிஇணையே அடை நெஞ்சே!
சுளை கொண்ட பலங்கனிகள்* தேன் பாய* கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித்* திகழ் சோலைத் திருநறையூர்*
வளை கொண்ட வண்ணத்தன்* பின் தோன்றல்* மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன்* அடிஇணையே அடை நெஞ்சே!
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே!
அகில் குறடும் சந்தனமும்* அம் பொன்னும் அணி முத்தும்*
மிகக் கொணர்ந்து திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
பகல் கரந்த சுடர் ஆழிப்* படையான் இவ் உலகு ஏழும்*
புகக் கரந்த திரு வயிற்றன்* பொன்அடியே அடை நெஞ்சே !
பொன் முத்தும் அரி உகிரும்* புழைக் கை மா கரிக் கோடும்*
மின்னத் தண் திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
மின் ஒத்த நுண் மருங்குல்* மெல்இயலைத்* திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான்* மலர் அடியே அடை நெஞ்சே!
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்* செங் கமலத்து இடை இடையில்*
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்* பயன் விளைக்கும் திருநறையூர்*
கார் தழைத்த திரு உருவன்* கண்ணபிரான் விண்ணவர்கோன்*
தார் தழைத்த துழாய் முடியன்* தளிர் அடியே அடை நெஞ்சே!
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான்* தன் நீள் கழலே அடை நெஞ்சே!
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணைஅடியே அடை நெஞ்சே!
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல்இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே.
கிடந்த நம்பி குடந்தை மேவி* கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி* எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
விடம்தான் உடைய அரவம் வெருவ* செருவில் முன நாள்* முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக* வளை மருப்பைப்
பேணான் வாங்கி* அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சி* பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால்* முனிந்த எந்தை* விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* மருவாத
விடைதான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே.
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா* அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்* எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே.
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்* நமோ நாராயணமே.
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று
படுங்கால்* நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே.
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா
மங்கை* பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே.
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே.