பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிதுஉவந்து
மா தவ மானவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*
மண்மிசைப் பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
வேங்கடத்து அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
வானிடைக் கொண்டு போய் இடவும்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்*
மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு*
வானவர் ஆவியாய் இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அம் கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை*
மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்*
வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்* சிலர் பேசக் கேட்டிருந்தே*
என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்று சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கட மலை கோயில் மேவிய*
ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.
கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்*
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னம் ஆய் நிகழ்ந்த* அமரர் பெருமானைக்*
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி* இன் தமிழால் உரைத்த*
இம் மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே* (2)
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய் தானவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே* (2)
தையலாள்மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும் அன்று*
செய்த வெம் போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து*
அரக்கன் மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து*
அவனே பின் ஓர் தூது* ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*
பந்து அணைந்த மெல்விரலாள்* பாவைதன் காரணத்தால்*
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலைமேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் அம் தண் கழனி*
ஏலம் நாறும் பைம் புறவின்* எவ்வுள் கிடந்தானே*
சோத்தம் நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும் நம்பி எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசைமுகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்து இருந்த*
வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூடநின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு இனியன்*
எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீல மேனி மணி வண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகன் ஆய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்,
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)
வஞ்சனை செய்யத் தாய்உருஆகி* வந்த பேய் அலறிமண் சேர*
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்துதி செய்ய பெண்உருஆகி*
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடைசெய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திட தளர்ந்து*
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்* எம் பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவிதனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*
பஞ்ச பாண்டவர்க்கு ஆகி* வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
எந்தை தந்தை தம்மானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது* 'எம் பெருமான் அருள்!' என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்று ஆல*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த*
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து* சென்று நின்று ஆழிதொட்டானை*
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்* திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
காண்டாவனம் என்பது ஓர் காடு* அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*
அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து* அரியாய் நீண்டான்*
குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே*
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து* அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்*
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்* பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்*
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்* பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்*
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்* அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்*
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அமரில்*
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி* பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட*
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு* அணை கட்டி வரம்பு உருவ*
மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட* படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*
காலம் இது என்று அயன் வாளியினால்* கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்*
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பார் ஆர் உலகும் பனி மால் வரையும்* கடலும் சுடரும் இவை உண்டும்*
எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்* அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்* பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்*
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்* புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அவுணன்*
பகராதவன் ஆயிரம் நாமம்* அடிப் பணியாதவனை பணியால் அமரில்*
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பிச்சச் சிறு பீலி பிடித்து* உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்*
அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்* அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*
நச்சி நமனார் அடையாமை* நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு*
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பேசும் அளவு அன்று இது வம்மின்* நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்*
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்* அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்* மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்* நிலவும் புகழ் மங்கையர் கோன்*
அமரில் கட மா களி யானை வல்லான்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடும் மால் வினை* வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்*
கொடு மா கடல் வையகம் ஆண்டு* மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* உலகு உய்ய நின்றானை*
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை* கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில்*
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்* தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை* அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
குடம்ஆடு கூத்தன் தன்னை* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ* பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,*
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி* கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை* பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
வளைமருப்பின் ஏனம்ஆகி* இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்*
பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை* பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை*
ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்*
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை* பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை*
தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யம்என்னும்* தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி*
எண்ணானை எண்இறந்த புகழினானை* இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
கண்ணாரக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை* படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
தென்இலங்கை அரக்கர்வேந்தை* விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு*
பண்டுஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
தொண்டனேன் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்* படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்*
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்* தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்* வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்* தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி* அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே. (2)
பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
கார்வண்ண முது முந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே.
ஏனத்தின்உருவுஆகி* நிலமங்கை எழில் கொண்டான்*
வானத்தில்அவர் முறையால்* மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளிஉருவை* நினைவார் என் நாயகரே. (2)
விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல் இயலார்*
கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*
கண்டாரை கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரைக்,
கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குலதெய்வமே.
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*
விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே!
புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*
நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,*
கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வலங்கொள் மனத்தார்அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே!
பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணா*
கஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே!
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்து வன் பகட்டால்*
உழும் நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல்மல்லைத் தலசயனம்*
தொழும் நீர் மனத்தவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே .
பிணங்கள் இடு காடு அதனுள்* நடம் ஆடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்*
விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என்தன் மட நெஞ்சே!
கடி கமழும் நெடு மறுகின்* கடல்மல்லைத் தலசயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர்தம்* முதல்வர் ஆவாரே. (2)
திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு* நின்தாள் நயந்திருந்த இவளை*
உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்*
குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்* கோல நல் மலர் குழற்கு அணியாள்*
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த* மால் என்னும் மால் இன மொழியாள்*
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்* தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்*
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்* பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்* வளைகளும் இறை நில்லா*
என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.
'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்* 'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்*
'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா* தென்றலும் தீயினில் கொடிதுஆம்*
தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்* சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்*
ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்* உருகும்நின் திருஉரு நினைந்து*
காதன்மை பெரிது கையறவு உடையள்* கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்*
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது* தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்*
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்* தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை*
வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த* வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* மென்முலை பொன்பயந்திருந்த*
என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்* உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்*
'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை* மாயனே! 'என்று வாய்வெருவும்*
களங் கனி முறுவல் காரிகை பெரிது* கவலையோடு அவலம்சேர்ந்திருந்த*
இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு* அழியுமால் என்உள்ளம்!' என்னும்*
புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்* 'போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி* கொடிஇடை நெடுமழைக் கண்ணி*
இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்* பொருகயல் கண்துயில் மறந்தாள்*
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது* இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்*
மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* வீங்கிய வனமுலை யாளுக்கு*
என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம்மாயனே! அருளாய்'*
என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை*
மன்னுமா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய்ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப*
முரிதிரை மாகடல் போல்முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க*
எரிஅன கேசர வாள்எயிற்றோடு* இரணியன்ஆகம் இரண்டு கூறா*
அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)
வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறள்உருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்அளந்த*
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே.
செம்பொன்இலங்கு வலங்கைவாளி * திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்*
உம்பர்இருசுடர்ஆழியோடு* கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே*
வெம்பு சினத்து அடல் வேழம்வீழ* வெண்மருப்புஒன்று பறித்து*
இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே .
மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி* மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
அதன்மருப்புஒன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்*
வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து*
அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்ட புயகரத்தேன் என்றாரே.
கலைகளும் வேதமும் நீதிநூலும்* கற்பமும் சொல் பொருள் தானும்*
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து*
நீண்ட மலைகளும் மாமணியும்* மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்* ஏதும் அறிகிலம் ஏந்திழையார்*
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்* தம்மனஆகப் புகுந்து*
தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா* போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்*
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
முழுசிவண்டுஆடிய தண்துழாயின்* மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்* எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்*
எழுதிய தாமரை அன்னகண்ணும்* ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்*
அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க* வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி*
அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்* மற்றுஇவர் வண்ணம் எண்ணில்*
காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்* கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தே என்றாரே.
தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா* நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு*
வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி* வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு*
நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்* நான் இவர் தம்மை அறியமாட்டேன்*
அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன* அட்டபுயகரத்தேன்என்றாரே.
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்* நீள்முடி மாலை வயிரமேகன்*
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி* அட்ட புயகரத்து ஆதிதன்னை*
கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்* காமருசீர்க் கலிகன்றி*
குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை* ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2)
சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்*
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
பல்லவன் வில்லவன் என்று உலகில்* பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
மல்லையர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)
கார் மன்னு நீள் விசும்பும்* கடலும் சுடரும் நிலனும் மலையும்*
தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்* தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேர் மன்னு தென்னவனை முனையில்* செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,*
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்* ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்*
வரம் தரு மா மணிவண்ணன் இடம்* மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்* நெடு வாயில் உக செருவில் முன நாள்*
பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
அண்டமும் எண் திசையும் நிலனும்* அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
எந்தை பிரானது இடம்* ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விண்டவர் இண்டைக் குழாமுடனே* விரைந்தார் இரிய செருவில் முனிந்து*
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்* துயர் தீர்த்து அரவம் வெருவ*
முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்* திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற*
பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம்அதுவே.
திண் படைக் கோளரியின் உரு ஆய்* திறலோன் அகலம் செருவில் முன நாள்*
புண் படப் போழ்ந்த பிரானது இடம்* பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப* விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த*
பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்* மாண் உரு ஆய் முன நாள்*
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
உலகு உடை மன்னவன் தென்னவனைக்* கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ,
பல படை சாய வென்றான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
குடைத் திறல் மன்னவன் ஆய்* ஒருகால் குரங்கைப் படையா*
மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்* அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்* வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த*
படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து* முன்னே ஒருகால் செருவில் உருமின்*
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
கறை உடை வாள் மற மன்னர் கெட* கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்*
பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகர்மேல்*
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த*
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்* திரு மா மகள் தன் அருளால்*
உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்* செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்* இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. (2)
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்* தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை* தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்* குழாம்கொள் பொய்கைக்* கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி* அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட* இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி* கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்* பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்* மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று* தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி* இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று* காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு* சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று* கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார்* மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த* கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)