பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வானவர் தங்கள் சிந்தை போல*  என் நெஞ்சமே! இனிதுஉவந்து 
    மா தவ மானவர் தங்கள் சிந்தை*  அமர்ந்து உறைகின்ற எந்தை*

    கானவர் இடு கார் அகில் புகை*  ஓங்கு வேங்கடம் மேவி*
    மாண் குறள் ஆன அந்தணற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)  


    உறவு சுற்றம் என்று ஒன்று இலா*  ஒருவன்  உகந்தவர் தம்மை*
    மண்மிசைப் பிறவியே கெடுப்பான்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    குறவர் மாதர்களோடு*  வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
    வேங்கடத்து அறவன் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*


    இண்டை ஆயின கொண்டு*  தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
    வானிடைக் கொண்டு போய் இடவும்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    வண்டு வாழ் வட வேங்கட மலை*  கோயில் கொண்டு அதனோடும்*
    மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*  


    பாவியாது செய்தாய்*  என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
    மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்*  விசும்பு ஏற வைக்கும் எந்தை* 

    கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்*  வேங்கட மலை ஆண்டு*
    வானவர் ஆவியாய் இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*         


    பொங்கு போதியும் பிண்டியும் உடைப்*  புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை* 
    தங்கள் தேவரும் தாங்களுமே ஆக*  என் நெஞ்சம் என்பாய்* 

    எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்*  வேங்கடம் மேவி நின்று அருள்* 
    அம் கண் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    துவரி ஆடையர் மட்டையர்*  சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்* 
    தமரும் தாங்களுமே தடிக்க*  என் நெஞ்சம் என்பாய்* 

    கவரி மாக் கணம் சேரும்*  வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை* 
    அமர நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    தருக்கினால் சமண் செய்து*  சோறு தண் தயிரினால் திரளை*
    மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    மருள்கள் வண்டுகள் பாடும்*  வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* 
    வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*


    சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்*  சிலர் பேசக் கேட்டிருந்தே* 
    என் நெஞ்சம் என்பாய்!*  எனக்கு ஒன்று சொல்லாதே* 

    வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி*  வேங்கட மலை கோயில் மேவிய* 
    ஆயர் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 


    கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்*  என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்* 
    பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்*  காண்கிலார்* 

    ஆடு தாமரையோனும் ஈசனும்*  அமரர் கோனும் நின்று ஏத்தும்*  
    வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*  


    மின்னு மா முகில் மேவு*  தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய* 
    அன்னம் ஆய் நிகழ்ந்த*  அமரர் பெருமானைக்* 

    கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி*  இன் தமிழால் உரைத்த*
    இம் மன்னு பாடல் வல்லார்க்கு*  இடம் ஆகும் வான் உலகே* (2) 


    காசை ஆடை மூடி ஓடிக்*  காதல் செய் தானவன் ஊர்* 
    நாசம் ஆக நம்ப வல்ல*  நம்பி நம் பெருமான்* 

    வேயின் அன்ன தோள் மடவார்*  வெண்ணெய் உண்டான் இவன் என்று* 
    ஏச நின்ற எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே* (2)


    தையலாள்மேல் காதல் செய்த*  தானவன் வாள் அரக்கன்* 
    பொய் இலாத பொன் முடிகள்*  ஒன்பதோடு ஒன்றும் அன்று* 

    செய்த வெம் போர் தன்னில்*  அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள* 
    எய்த எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*     


    முன் ஓர் தூது*  வானரத்தின் வாயில் மொழிந்து*  
    அரக்கன் மன் ஊர் தன்னை*  வாளியினால் மாள முனிந்து*

    அவனே பின் ஓர் தூது*  ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்* 
    இன்னார் தூதன் என நின்றான்*  எவ்வுள் கிடந்தானே* 


    பந்து அணைந்த மெல்விரலாள்*  பாவைதன் காரணத்தால்* 
    வெந் திறல் ஏறு ஏழும் வென்ற*  வேந்தன் விரி புகழ் சேர்* 

    நந்தன் மைந்தன் ஆக ஆகும்*  நம்பி நம் பெருமான்* 
    எந்தை தந்தை தம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*  


    பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு*  பண்டு ஆல் இலைமேல்* 
    சால நாளும் பள்ளி கொள்ளும்*  தாமரைக் கண்ணன் எண்ணில்* 

    நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்*  நெய்தல் அம் தண் கழனி* 
    ஏலம் நாறும் பைம் புறவின்*  எவ்வுள் கிடந்தானே*  


    சோத்தம் நம்பி என்று*  தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்* 
    ஆத்தன் நம்பி செங்கண் நம்பி*  ஆகிலும் தேவர்க்கு எல்லாம்* 

    மூத்த நம்பி முக்கண் நம்பி என்று*  முனிவர் தொழுது* 
    ஏத்தும் நம்பி எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி*  திசைமுகனார்* 
    தங்கள் அப்பன் சாமி அப்பன்*  பாகத்து இருந்த*

    வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்*  சூழ் கழல் சூடநின்ற* 
    எங்கள் அப்பன் எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*


    முனிவன் மூர்த்தி மூவர் ஆகி*  வேதம் விரித்து உரைத்த புனிதன்*
    பூவை வண்ணன் அண்ணல்*  புண்ணியன் விண்ணவர்கோன்* 

    தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்*  தன் அடியார்க்கு இனியன்*
    எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    பந்து இருக்கும் மெல் விரலாள்*  பாவை பனி மலராள்* 
    வந்து இருக்கும் மார்வன்*  நீல மேனி மணி வண்ணன்* 

    அந்தரத்தில் வாழும்*  வானோர் நாயகன் ஆய் அமைந்த* 
    இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*


    இண்டை கொண்டு தொண்டர் ஏத்த*  எவ்வுள் கிடந்தானை* 
    வண்டு பாடும் பைம் புறவின்*  மங்கையர் கோன் கலியன், 

    கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை*  ஈர் ஐந்தும் வல்லார்* 
    அண்டம் ஆள்வது ஆணை*  அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)    


    வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
    செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 

    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
    சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   


    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
    கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

    ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
    மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)


    வஞ்சனை செய்யத் தாய்உருஆகி*  வந்த பேய் அலறிமண் சேர* 
    நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை*  தானவர் கூற்றை* 

    விஞ்சை வானவர் சாரணர் சித்தர்*  வியந்துதி செய்ய பெண்உருஆகி* 
    அம் சுவை அமுதம் அன்று அளித்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த*  எழில் விழவில் பழ நடைசெய்* 
    மந்திர விதியில் பூசனை பெறாது*  மழை பொழிந்திட தளர்ந்து*

    ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்*  எம் பெருமான் அருள் என்ன* 
    அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*  நல் புவிதனக்கு இறைவன்* 
    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*  மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*

    பஞ்ச பாண்டவர்க்கு ஆகி*  வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
    எந்தை தந்தை தம்மானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*    


    அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்*  அணி இழையைச் சென்று* 
    'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது*  'எம் பெருமான் அருள்!' என்ன*

    சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்*  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப* 
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*           


    பரதனும் தம்பி சத்துருக்கனனும்*  இலக்குமனோடு மைதிலியும்* 
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற*  இராவணாந்தகனை எம்மானை*

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு*  குயிலொடு மயில்கள் நின்று ஆல* 
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.


    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
    ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 

    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)


    மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்*  வேட்கையினோடு சென்று இழிந்த* 
    கான் அமர் வேழம் கைஎடுத்து அலற*  கரா அதன் காலினைக் கதுவ* 

    ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*  சென்று நின்று ஆழிதொட்டானை* 
    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*      


    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
    தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*

    கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
    சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)


    அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
    அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*

    இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
    முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*

    அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  நீண்டான்* 
    குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  


    அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 
    புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*  பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்* 

    பல மன்னர் பட சுடர் ஆழியினைப்*  பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 
    நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்* 
    பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*

    பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
    நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.      


    மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி வரம்பு உருவ*
    மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*

    காலம் இது என்று அயன் வாளியினால்*  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
    நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.   


    பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  கடலும் சுடரும் இவை உண்டும்*
    எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்*  அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*

    அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
    நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்*  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
    அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அவுணன்* 

    பகராதவன் ஆயிரம் நாமம்*  அடிப் பணியாதவனை பணியால் அமரில்* 
    நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பிச்சச் சிறு பீலி பிடித்து*  உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்* 
    அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்*  அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*

    நச்சி நமனார் அடையாமை*  நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு* 
    நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பேசும் அளவு அன்று இது வம்மின்*  நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்* 
    நாசம் அது செய்திடும் ஆதன்மையால்*  அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*

    வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்*  மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
    மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
    அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*

    உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
    கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)


    பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 

    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)


    பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
    அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*

    கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       


    உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
    அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 

    தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்* 
    ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*  அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*

    குடம்ஆடு கூத்தன் தன்னை*  கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ*  பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
    இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,* 

    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று*  அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி*  கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
    படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை*  பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*

    வளைமருப்பின் ஏனம்ஆகி*  இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று*  பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்* 
    பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை*   பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை* 

    ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*  உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்* 
    காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை*  பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை* 
    தண்ணார்ந்த  வார்புனல்சூழ் மெய்யம்என்னும்*  தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி* 

    எண்ணானை எண்இறந்த புகழினானை*  இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
    கண்ணாரக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.  


    தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை*  படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
    தென்இலங்கை அரக்கர்வேந்தை*  விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு* 

    பண்டுஆய வேதங்கள் நான்கும்*  ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
    தொண்டனேன் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
    தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 

    கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
    திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  


    நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
    வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*

    மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
    எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)


    பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 
    நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*

    கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே.   


    ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
    வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 

    கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
    ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  


    விண்டாரை வென்று ஆவி*  விலங்கு உண்ண மெல் இயலார்* 
    கொண்டாடும் மல் அகலம்*  அழல் ஏற வெம் சமத்துக்*

    கண்டாரை கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரைக், 
    கொண்டாடும் நெஞ்சு உடையார்*  அவர் எங்கள் குலதெய்வமே.


    பிச்சச் சிறு பீலிச்*  சமண் குண்டர் முதலாயோர்* 
    விச்சைக்கு இறை என்னும்*  அவ் இறையைப் பணியாதே*

    கச்சிக் கிடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நச்சித் தொழுவாரை*  நச்சு என் தன் நல் நெஞ்சே!  


    புலன் கொள் நிதிக் குவையோடு*  புழைக் கை மா களிற்று இனமும்* 
    நலம் கொள் நவமணிக் குவையும்*  சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,* 

    கலங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வலங்கொள் மனத்தார்அவரை*  வலங்கொள் என் மட நெஞ்சே!


    பஞ்சிச் சிறு கூழை*  உரு ஆகி மருவாத* 
    வஞ்சப் பெண் நஞ்சு உண்ட*  அண்ணல் முன் நண்ணா*

    கஞ்சைக் கடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நெஞ்சில் தொழுவாரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே!


    செழு நீர் மலர்க் கமலம்*  திரை உந்து வன் பகட்டால்* 
    உழும் நீர் வயல் உழவர் உழ*  பின் முன் பிழைத்து எழுந்த* 

    கழு நீர் கடி கமழும்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    தொழும் நீர் மனத்தவரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே . 


    பிணங்கள் இடு காடு அதனுள்*  நடம் ஆடு பிஞ்ஞகனோடு* 
    இணங்கு திருச் சக்கரத்து*  எம் பெருமானார்க்கு இடம்*

    விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வணங்கும் மனத்தார் அவரை*  வணங்கு என்தன் மட நெஞ்சே!


    கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
    அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 

    வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
    முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       


    திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
    நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*

    குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
    உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   


    துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
    குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*

    வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
    இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
    போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*

    மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
    என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.


    'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
    'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 

    தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
    ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
    காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 

    பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
    ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          


    தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
    வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*

    மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
    என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
    'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 

    களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
    இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
    புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 

    குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
    இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)


    பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
    அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 

    மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
    என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
    என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 

    மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        


    திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
    முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 

    எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
    அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     


    வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்*  வேதம் உரைத்து இமையோர் வணங்கும்* 
    செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்* 

    வந்து குறள்உருவாய் நிமிர்ந்து*  மாவலி வேள்வியில் மண்அளந்த* 
    அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே.   


    செம்பொன்இலங்கு வலங்கைவாளி *  திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்* 
    உம்பர்இருசுடர்ஆழியோடு*  கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே* 

    வெம்பு சினத்து அடல் வேழம்வீழ*  வெண்மருப்புஒன்று பறித்து*
    இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே . 


    மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி*  மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
    அதன்மருப்புஒன்று வாங்கும்*  ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்* 

    வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி*  வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து* 
    அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்ட புயகரத்தேன் என்றாரே. 


    கலைகளும் வேதமும் நீதிநூலும்*  கற்பமும் சொல் பொருள் தானும்*
    மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்*  நீர்மையினால் அருள் செய்து*

    நீண்ட மலைகளும் மாமணியும்*  மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
    அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


    எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்*  ஏதும் அறிகிலம் ஏந்திழையார்* 
    சங்கும் மனமும் நிறையும் எல்லாம்*  தம்மனஆகப் புகுந்து*

    தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா*  போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்* 
    அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


    முழுசிவண்டுஆடிய தண்துழாயின்*  மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
    சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்*  எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்* 

    எழுதிய தாமரை அன்னகண்ணும்*  ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்* 
    அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.


    மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க*  வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி* 
    அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்*  மற்றுஇவர் வண்ணம் எண்ணில்* 

    காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்*  கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
    என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தே என்றாரே.        


    தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா*  நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
    வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி*  வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு* 

    நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்*  நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
    அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன்என்றாரே.   


    மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்*  நீள்முடி மாலை வயிரமேகன்* 
    தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி*  அட்ட புயகரத்து ஆதிதன்னை* 

    கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்*  காமருசீர்க் கலிகன்றி*
    குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 


    சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
    நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*

    பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
    மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     


    கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
    தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          


    உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
    வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
    பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   


    அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
    எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
    பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 


    தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
    முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
    பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.


    திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
    புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
    பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   


    இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
    பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            


    குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
    மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
    படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     


    பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 


    பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 

    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
    உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        


    மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*  வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்* 
    எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்*  இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*

    துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*  தூய நான்மறையாளர் சோமுச் செய்ய* 
    செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  (2)   


    கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*  தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்* 
    சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை*  தாம் இருவர் அடி வருடும் தன்மையானை* 

    வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்*  ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்* 
    சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.         


    கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்*  குழாம்கொள் பொய்கைக்*  கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி* 
    அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*  அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை* 

    எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*  இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட* 
    செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து*  தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை* 
    ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்*  அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*

    கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்*  குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்* 
    தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*  கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்* 
    பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*  பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*

    மறை வளர புகழ் வளர மாடம்தோறும்*  மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத* 
    சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று*  அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* 
    தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*  தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*

    வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
    செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி*  இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து* 
    வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*  வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*

    கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று*  காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட* 
    செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.


    பார் ஏறு பெரும் பாரம் தீரப்*  பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
    பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை*  செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை* 

    போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்*  புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்* 
    சீர் ஏறு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு*  சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற* 
    காவடிவின் கற்பகமே போல நின்று*  கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை* 

    சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை*  செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
    தீ வடிவின் சிவன் அயனே போல்வார்*  மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*  நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்* 
    சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று* 

    வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார 
    காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த*  கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)