பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்* வளைமருப்பினில் அகத்துஒடுக்கி*
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே. (2)
மின்னும் ஆழி அங்கையவன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய* பரன் இடம் வரைச் சாரல்*
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர* பிணி அவிழ் கமலத்துத்*
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே.
வையம் ஏழும் உண்டு ஆல் இலை* வைகிய மாயவன்*
அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்* மெய்தகு வரைச் சாரல்*
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு* திருவயிந்திரபுரமே.
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்* மார்புஅகம் இரு பிளவாக்*
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்*
மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை* விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து*
ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்*
வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்* குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே.
கூன் உலாவிய மடந்தைதன்* கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்*
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதிள் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே.
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்* விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்*
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையொடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே.
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்* வில் இறுத்து* அடல் மழைக்கு-
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்* நிலவிய இடம் தடம் ஆர்*
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தித்*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்* விசயனுக்கு ஆய்*
மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்*
கால் கொள் கண் கொடி கைஎழ* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்*
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே.
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச* தண் திருவயிந்திரபுரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலிகன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே (2)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு* உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே* கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)
காயோடு நீடு கனி உண்டு வீசு* கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா* திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்* மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்* விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்* அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து* படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்* அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து* கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய* குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்* தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூமங்கை தங்கி புலமங்கை மன்னி* புகழ்மங்கை எங்கும் திகழ*
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
நெய் வாய் அழல் அம்பு துரந்து* முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி* நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்* அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து* மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு* திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்* கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மா வாயின் அங்கம் மதியாது கீறி* மழை மா முது குன்று எடுத்து*
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்* குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*
தேவாதிதேவன் திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்* சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகல புகழ் சேர்* அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப* அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்* பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே. (2)
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்*
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடித்*
தே மலர் தூவ வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திரகூடத்து உள்ளானே .(2)
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே.
பொங்கி அமரில் ஒருகால்* பொன்பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*
சிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்*
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன்மருவார்*
ஊன்அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார்மேல்* சாரா தீவினை தானே. (2)
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* தாடாளன் தாள் அணைவீர்*
தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்* சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை* நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை* ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*
உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்* தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்* மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்* நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்* மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து* முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட* நின்மலன் தாள் அணைகிற்பீர்*
நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே* தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு* திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட* அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள* படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த* விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்* துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்* புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்* திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*
திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி* வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்* காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்* பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்* மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*
அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ* நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து* பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்* கலந்தவன் தாள்அணைகிற்பீர்*
கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று* கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்* காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.
செங்கமலத்து அயன்அனைய மறையோர்* காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*
அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்* அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்* கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்* தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
நீலத்தடவரை* மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே!
நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை* என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ* அரிவார் முகத்து எழு வாளை போய்*
கரும்பு அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே!
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
நின்மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே!
நீடு பல்மலர் மாலைஇட்டு* நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா!*
பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து* பல் பணையால் மலிந்து*
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே!
கந்த மாமலர் எட்டும்இட்டு* நின்காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே!
உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த*
அப்புலவ! புண்ணியனே!* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின்மிசை*
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே!
சங்கு தங்கு தடங் கடல் கடல்* மல்லையுள் கிடந்தாய்*
அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்*
இளந்தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே!
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு*
ஒரு பொருள் வேதியா! அரையா!* உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*
நீதி ஆகிய வேதமாமுனியாளர்* தோற்றம் உரைத்து*
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!* அணி ஆலி அம்மானே!
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான்உலகே. (2)
தூவிரிய மலர் உழக்கி* துணையோடும் பிரியாதே*
பூவிரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே!*
தீவிரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏவரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே. (2)
பிணிஅவிழு நறுநீல* மலர் கிழிய பெடையோடும்*
அணிமலர்மேல் மதுநுகரும்* அறுகால சிறு வண்டே!*
மணிகழுநீர் மருங்குஅலரும்* வயல் ஆலி மணவாளன்*
பணிஅறியேன் நீ சென்று* என் பயலை நோய் உரையாயே.
நீர்வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்*
தன்தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர்ஆரும் வளர்பொழில்சூழ்* திருவாலி வயல்வாழும்*
கூர்வாய சிறுகுருகே!* குறிப்புஅறிந்து கூறாயே.
தானாக நினையானேல்* தன் நினைந்து நைவேற்கு*
ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்* வலி செய்ய மெலிவேனோ?*
தேன் வாய வரி வண்டே!* திருவாலி நகர் ஆளும்*
ஆன்ஆயற்கு என் உறு நோய்* அறிய சென்று உரையாயே.
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு*
ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!* வரை எடுத்த தோளாளா*
என்தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே!
தார் ஆய தன் துளவம்* வண்டு உழுதவரை மார்பன்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த* புள் பாகன் என் அம்மான்*
தேர் ஆரும் நெடு வீதித்* திருவாலி நகர் ஆளும்*
கார் ஆயன் என்னுடைய* கன வளையும் கவர்வானோ!
கொண்டு அரவத் திரை உலவு* குரை கடல்மேல் குலவரைபோல்*
பண்டு அரவின் அணைக் கிடந்து* பார் அளந்த பண்பாளா!*
வண்டு அமரும் வளர் பொழில் சூழ்* வயல் ஆலி மைந்தா!*
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு* என் கன வளையும் கடவேனோ!?
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண்_இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ!*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு*
இது நடுவே வயல் ஆலி மணவாளா!* கொள்வாயோ மணி நிறமே!
நிலை ஆளா நின் வணங்க* வேண்டாயே ஆகிலும் என்*
முலை ஆள ஒருநாள்* உன் அகலத்தால் ஆளாயே*
சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!* திருமெய்யமலையாளா*
நீஆள வளை ஆள மாட்டோமே.
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே. (2)
கள்வன்கொல் யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என்தன் மடமானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கைப் பற்ற* பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ! (2)
பண்டு இவன் ஆயன் நங்காய்!* படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து*
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ!
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி*
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ!
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறி* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ!
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ! (2)
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னைதன் காதலன்தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ!
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ!
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
தாய் மனம் நின்று இரங்க* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே. (2)
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!* நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
எமக்கே அருளாய் எனநின்று* இமையோர் பரவும்இடம்*
எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே* களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)
முதலைத் தனி மா முரண் தீர அன்று* முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய*
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி* வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்* பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்*
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய* அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்*
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு* அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்* அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி*
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று* திசை நான்கும் நான்கும் இரிய* செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய* கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்* ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்*
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு* இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து*
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து* தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே* குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு*
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்* பகு வாய்க் கழுதுக்கு இரங்காது* அவள்தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்* உடனே சுவைத்தான் இடம்*
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி* கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து*
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்* தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்* அடி வைத்த அம்மான் இடம்*
மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்* செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்* துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்* விளைவித்த அம்மான் இடம்*
வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று* மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்*
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த* விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்*
படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று* இமையோர் பரவும் இடம்*
பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப* தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்* மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்* விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)
சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு* தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி* செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)
திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க* தேவரொடு தானவர்கள் திசைப்ப*
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்* ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்* அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்* முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*
எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி* இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய*
வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்* காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி*
தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்* செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்*
மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா* இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர*
தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,
செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை* செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்*
மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்* பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு*
திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்* தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்* உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்* பெரிய
வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து* வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை* உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*
இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்* ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்*
வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த* அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்*
கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்* குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி* மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப*
மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு* மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி*
எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்* ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப* சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து*
மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்* தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்*
வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய* வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன*
சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்* தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)
திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்* தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து*
இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்* தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ*
அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)
வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்* விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று*
குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்* குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*
என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்* ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்*
அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்* உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்*
கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து* கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*
மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட* பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு* அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி*
வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு* அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*
சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை* செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே*
ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்* களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு*
அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்* அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*
அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்* அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா* இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்*
தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*
சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை* செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்*
வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்* தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்* கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்* ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை* காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்*
குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்* குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்* தூமறையோர் தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை*
அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு* வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை* கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*
மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து* வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து* பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்*
அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்* கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்* உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)