பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்*  வளைமருப்பினில் அகத்துஒடுக்கி* 
    கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்*  கமலநல்மலர்த்தேறல் அருந்தி*

    இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி*  அம் பொழிலூடே* 
    செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு*  திருவயிந்திரபுரமே. (2)   


    மின்னும் ஆழி அங்கையவன்*  செய்யவள் உறை தரு திரு மார்பன்* 
    பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய*  பரன் இடம் வரைச் சாரல்* 

    பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர*  பிணி அவிழ் கமலத்துத்* 
    தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே. 


    வையம் ஏழும் உண்டு ஆல் இலை*  வைகிய மாயவன்*
    அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்*  மெய்தகு வரைச் சாரல்* 

    மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய*  முல்லை அம் கொடி ஆட* 
    செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு*  திருவயிந்திரபுரமே.


    மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்*  மார்புஅகம் இரு பிளவாக்* 
    கூறு கொண்டு அவன் குலமகற்கு*  இன் அருள் கொடுத்தவன் இடம்*

    மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*  விசும்பு உற மணி நீழல்* 
    சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்*  திருவயிந்திரபுரமே.   


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல் இடம் அளந்து*
    ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்*  பொன் மலர் திகழ்*

    வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*  குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி* 
    தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு*  திருவயிந்திரபுரமே.       


    கூன் உலாவிய மடந்தைதன்*  கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
    கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்*  கவின் ஆரும்* 

    வான் உலாவிய மதி தவழ் மால் வரை*  மா மதிள் புடை சூழ* 
    தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய*  திருவயிந்திரபுரமே.        


    மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்*  விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
    நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்*  மணி வரை நீழல்* 

    அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்*  பெடையொடும் இனிது அமர* 
    செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு*  தண் திருவயிந்திரபுரமே.     


    விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்*  வில் இறுத்து*  அடல் மழைக்கு- 
    நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*  நிலவிய இடம் தடம் ஆர்* 

    வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு*  மலை வளர் அகில் உந்தித்* 
    திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.  


    வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*  விசயனுக்கு ஆய்*
    மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்*  குலவு தண் வரைச் சாரல்* 

    கால் கொள் கண் கொடி கைஎழ*  கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்* 
    சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.       


    மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
    தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 

    மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
    பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)


    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
    தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 

    கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
    தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 


    காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
    ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
    தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.  


    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த* 
    வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த* 
    செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த* 
    பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்* 

    கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்* 
    திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 


    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
    தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்* 

    பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*
    புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
    இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

    அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக* 
    செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த* 
    தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்* 
    தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*
    ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

    மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்* 
    தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்* 
    அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

    பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள* 
    திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
    ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

    கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
    பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)


    வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
    ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

    கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
    சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  


    பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்* 
    மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

    வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்* 
    தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.   


    பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
    எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

    அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு* 
    திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  


    வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
    தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

    முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்* 
    திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து* 
    அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து* 

    உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று* 
    தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
    உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

    வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
    தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  


    ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
    மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

    அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
    தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ* 
    அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

    பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்* 
    சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்* 
    பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

    ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*
    மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த* 
    வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்* 

    ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்* 
    தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2) 


    ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
    ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

    தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
    தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 


    நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
    நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

    உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
    எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து* 
    நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

    நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்* 
    செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்* 
    நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

    நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்* 
    செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து* 
    வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

    விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்* 
    செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   


    பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை* 
    வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்* 

    வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்* 
    திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த* 
    செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

    திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி* 
    தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.         


    பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்* 
    மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

    அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
    பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே. 


    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து* 
    கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

    கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி* 
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.    


    செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
    அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 


    வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்* 
    சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே* 

    அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
    அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  


    நீலத்தடவரை*  மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
    அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*

    சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட*  மழை முகில் போன்று எழுந்து*
    எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!


    நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது* 
    இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*

    செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*
    கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே! 


    மின்னின் மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
    நின்மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*

    புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
    எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!


    நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
    என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*

    பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*
    எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே! 


    கந்த மாமலர் எட்டும்இட்டு*  நின்காமர் சேவடி கைதொழுது எழும்* 
    புந்தியேன் மனத்தே*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    சந்தி வேள்வி சடங்கு நான்மறை*  ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்* 
    அந்தணாளர் அறா*  அணி ஆலி அம்மானே!


    உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து*  உன் அடியேன் மனம் புகுந்த*
    அப்புலவ! புண்ணியனே!*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்*  தண் தாமரை மலரின்மிசை*
    மலி அலவன் கண்படுக்கும்*  அணி ஆலி அம்மானே!


    சங்கு தங்கு தடங் கடல் கடல்*  மல்லையுள் கிடந்தாய்*
    அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்*  இனிப் போயினால் அறையோ!*

    கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி*  இன் இள வண்டு போய்*
    இளந்தெங்கின் தாது அளையும்*  திருவாலி அம்மானே!


    ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*
    ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!* 

    நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*
    மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!


    புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை* 
    கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*

    நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
    தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)    


    தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே* 
    பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!* 

    தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி* 
    ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)


    பிணிஅவிழு நறுநீல*  மலர் கிழிய பெடையோடும்*   
    அணிமலர்மேல் மதுநுகரும்*  அறுகால சிறு வண்டே!* 

    மணிகழுநீர் மருங்குஅலரும்*  வயல் ஆலி மணவாளன்*   
    பணிஅறியேன் நீ சென்று*  என் பயலை நோய் உரையாயே.


    நீர்வானம் மண் எரி கால் ஆய்*  நின்ற நெடுமால்* 
    தன்தார் ஆய நறுந் துளவம்*  பெறும் தகையேற்கு அருளானே*

    சீர்ஆரும் வளர்பொழில்சூழ்*  திருவாலி வயல்வாழும்* 
    கூர்வாய சிறுகுருகே!*  குறிப்புஅறிந்து கூறாயே.      


    தானாக நினையானேல்*  தன் நினைந்து நைவேற்கு*
    ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்*  வலி செய்ய மெலிவேனோ?*

    தேன் வாய வரி வண்டே!*  திருவாலி நகர் ஆளும்*   
    ஆன்ஆயற்கு என் உறு நோய்*  அறிய சென்று உரையாயே.


    வாள் ஆய கண் பனிப்ப*  மென் முலைகள் பொன் அரும்ப* 
    நாள் நாளும்*  நின் நினைந்து நைவேற்கு*

    ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!*  வரை எடுத்த தோளாளா*
    என்தனக்கு ஓர்*  துணையாளன் ஆகாயே!


    தார் ஆய தன் துளவம்*  வண்டு உழுதவரை மார்பன்* 
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த*  புள் பாகன் என் அம்மான்*

    தேர் ஆரும் நெடு வீதித்*  திருவாலி நகர் ஆளும்* 
    கார் ஆயன் என்னுடைய*  கன வளையும் கவர்வானோ! 


    கொண்டு அரவத் திரை உலவு*  குரை கடல்மேல் குலவரைபோல்* 
    பண்டு அரவின் அணைக் கிடந்து*  பார் அளந்த பண்பாளா!*

    வண்டு அமரும் வளர் பொழில் சூழ்*  வயல் ஆலி மைந்தா!* 
    என் கண் துயில் நீ கொண்டாய்க்கு*  என் கன வளையும் கடவேனோ!?


    குயில் ஆலும் வளர் பொழில் சூழ்*  தண் குடந்தைக் குடம் ஆடி* 
    துயிலாத கண்_இணையேன்*  நின் நினைந்து துயர்வேனோ!*

    முயல் ஆலும் இள மதிக்கே*  வளை இழந்தேற்கு*
    இது நடுவே வயல் ஆலி மணவாளா!*  கொள்வாயோ மணி நிறமே!  


    நிலை ஆளா நின் வணங்க*  வேண்டாயே ஆகிலும் என்* 
    முலை ஆள ஒருநாள்*  உன் அகலத்தால் ஆளாயே*

    சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!*  திருமெய்யமலையாளா*
    நீஆள வளை ஆள மாட்டோமே. 


    மை இலங்கு கருங் குவளை*  மருங்கு அலரும் வயல் ஆலி* 
    நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை*  நெடுமாலை* 

    கை இலங்கு வேல் கலியன்*  கண்டு உரைத்த தமிழ் மாலை* 
    ஐஇரண்டும் இவை வல்லார்க்கு*  அரு வினைகள் அடையாவே. (2)


    கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
    வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*

    வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
    அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    


    பண்டு இவன் ஆயன் நங்காய்!*  படிறன் புகுந்து*
    என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து*

    அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  கிளிபோல் மிழற்றி நடந்து* 
    வண்டு அமர் கானல் மல்கும்*  வயல் ஆலி புகுவர்கொலோ!       


    அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!*  அரக்கர் குலப் பாவை தன்னை* 
    வெம் சின மூக்கு அரிந்த*  விறலோன் திறம் கேட்கில் மெய்யே* 

    பஞ்சிய மெல் அடி*  எம் பணைத் தோளி பரக்கழிந்து* 
    வஞ்சி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!     


    ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*
    மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*

    மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
    போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 


    தாய் எனை என்று இரங்காள்*  தடந் தோளி தனக்கு அமைந்த* 
    மாயனை மாதவனை*  மதித்து என்னை அகன்ற இவள்*

    வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
    தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*

    வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
    இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    


    அன்னையும் அத்தனும் என்று*  அடியோமுக்கு இரங்கிற்றிலள்* 
    பின்னைதன் காதலன்தன்*  பெருந் தோள் நலம் பேணினளால்*

    மின்னையும் வஞ்சியையும்*  வென்று இலங்கும் இடையாள் நடந்து* 
    புன்னையும் அன்னமும் சூழ்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
    சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*

    பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
    மற்று எல்லாம் கைதொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    


    காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்* 
    பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*

    தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
    வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!


    தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*

    காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
    மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)


    நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
    எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*

    எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
    மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)


    முதலைத் தனி மா முரண் தீர அன்று*  முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய* 
    விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி*  வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*

    பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்*  பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்* 
    மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*  அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்* 
    இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*  அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*

    அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*  அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி* 
    மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று*  திசை நான்கும் நான்கும் இரிய*  செருவில் 
    கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய*  கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*

    முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*  ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்* 
    மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*  இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து* 
    தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து*  தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*

    குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே*  குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு* 
    மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!


    பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்*  பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*  அவள்தன் 
    உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*  உடனே சுவைத்தான் இடம்*

    ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி*  கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து* 
    மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்* 
    இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*  

    மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*  
    முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    


    துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*  துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
    முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*  விளைவித்த அம்மான் இடம்*

    வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று*  மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்* 
    வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  


    விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*  விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்* 
    படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று*  இமையோர் பரவும் இடம்*

    பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப*  தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்* 
    மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!


    வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
    என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*

    கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
    விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)


    சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
    நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*

    சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
    வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)


    திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க*  தேவரொடு தானவர்கள் திசைப்ப*
    இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்* 

    எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்*  ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்* 
    மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*  அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
    முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*  முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*

    எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி*  இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய* 
    வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்*  காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி* 
    தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்*  செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்* 
    மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!       


    மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா*  இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர* 
    தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,

    செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*  செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்* 
    மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*  பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு* 
    திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்*  தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்*  உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்*  பெரிய 
    வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து*  வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்* 
    உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை*  உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*

    இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்*  ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்* 
    வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! 


    ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த*  அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்* 
    கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்*  குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*  மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப* 
    மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!   


    வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு*  மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி* 
    எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்*  ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப*  சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து* 
    மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர்  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
    வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*

    மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
    சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)


    திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*  தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து* 
    இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*

    பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*  தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ* 
    அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!  (2)


    வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்*  விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று* 
    குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்*  குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*

    என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்*  ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்* 
    அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!


    உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்*  உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்* 
    கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து*  கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*

    மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட*  பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் 
    அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!    


    ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு*  அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி* 
    வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு*  அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*

    சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை*  செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே* 
    ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே! 


    கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்*  களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு* 
    அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்*  அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*

    அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்*  அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்* 
    அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா*  இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்* 
    தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*

    சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை*  செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்* 
    வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்*  தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்* 
    காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்*  கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*

    நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்*  ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
    அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை*  காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* 
    குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்*  குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*

    துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்*  தூமறையோர்  தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை* 
    அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!


    வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு*  வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
    வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை*  கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*

    மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து*  வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி* 
    அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     


    சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து*  பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்* 
    அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*

    கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*  கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்* 
    ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*  உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)