பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால்போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே!*
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே!*
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி*
ஊரே உகந்தாயை* உகந்து அடியேனே*.
புள் வாய் பிளந்த* புனிதா! என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல்மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால்! உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே*
வில் ஏர் நுதல்* நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே *
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக்
கதியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*
அத்தா! அரியே! என்று* உன்னை அழைக்க *
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே! மணி மாணிக்கமே!* முளைக்கின்ற
வித்தே* உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!*
தூயாய்! சுடர் மா மதிபோல்* உயிர்க்கு எல்லாம்*
தாய் ஆய் அளிக்கின்ற* தண் தாமரைக் கண்ணா!*
ஆயா! அலை நீர் உலகு ஏழும்* முன் உண்ட
வாயா* உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-
தொண்டு ஆய்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
தொண்டீர்! இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம்தமக்கு இல்லை துயரே* (2)
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட-
கள்வா! என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஓடா ஆள் அரியின்* உரு ஆய் மருவி என் தன்-
மாடே வந்து* அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*
பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு*
நாடேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*.
எம்மானும் எம் அனையும்* என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்கு ஆகி நின்ற*
நல் மான ஒண் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ!* உன்-
மைம் மான வண்ணம் அல்லால்* மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்* உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய்* என் நெஞ்சின் உள்ளே* உறைவாய் உறைந்ததுதான்*
அறியாது இருந்தறியேன் அடியேன்* அணி வண்டு கிண்டும்*
நறை வாரும் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்*
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு* நான் அடிமை
பூண்டேன்* என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நான்தான் உனக்கு ஒழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எம் தாதை தாதை அப்பால்* எழுவர் பழ அடிமை
வந்தார்* என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*
அந்தோ! என் ஆர் உயிரே!* அரசே அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ!*
மன் அஞ்ச ஆயிரம் தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என் நெஞ்சத்துள் இருந்து* இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்*
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்* வளைத்து வைத்தேன்*
நல் நெஞ்ச அன்னம் மன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எப்போதும் பொன் மலர் இட்டு* இமையோர் தொழுது* தங்கள்-
கைப்போது கொண்டு இறைஞ்சி* கழல்மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சின் உள்ளே* புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஊன் நேர் ஆக்கைதன்னை* உழந்து ஓம்பி வைத்தமையால்*
யான் ஆய் என்தனக்கு ஆய்* அடியேன் மனம் புகுந்த
தேனே!* தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்*
நானே எய்தப் பெற்றேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*
சொல் நீர சொல்மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்-
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே. (2)
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்* செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு* என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை* நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)
தாய் நினைந்த கன்றே ஒக்க* என்னையும் தன்னையே நினைக்கச் செய்து* தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை* அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை* மகரக் குழைக் காதனை* மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை* என் அன்பனை அன்றி ஆதரியேனே.
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* மற்று ஓர் நெஞ்சு அறியான்* அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து* தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை* குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?*
உரங்களால் இயன்ற மன்னர் மாள* பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்* எம்பிரானை* வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி* என் மனம் தாழ்ந்து நில்லாதே*.
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது* அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு* தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை* உம்பர்க்கு அணி ஆய் நின்ற*
வேங்கடத்து அரியை பரி கீறியை* வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை* தேனை நன் பாலினை அன்றி* என் மனம் சிந்தை செய்யாதே*.
எள் தனைப்பொழுது ஆகிலும்* என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்*
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்* தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை* கரும்பு ஈன்ற இன் சாற்றை* காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை* பரவைத் துயில் ஏற்றை* என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற* பாலை ஆகி இங்கே புகுந்து* என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்* கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
விண் உளார் பெருமானை எம்மானை* வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன்* மா மணி வண்ணன் எம் அண்ணல்* வண்ணமே அன்றி வாய் உரையாதே*
இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்* எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்* அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்* தோற்றத் தொல் நெறியை* வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை* பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை* காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.
என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்*
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்* அன்று இடந்தவனை தழலே புரை*
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட* சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* என் மனம் போற்றி என்னாதே*
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்* திரு ஆலி-
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்* நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்* தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்!* வானவர்தம் கோவே! என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* செல்வத்-
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* காண்மின் என் தலைமேலாரே*
அம் புருவ வரி நெடுங் கண்* அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனிமேல்* இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளைக்*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா! என்று நின்று*
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரின் பொலிகின்றாரே*
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலைஅதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று* நாளும்
தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே*.
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்* இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்* துணை இலேன் சொல்லுகின்றேன்*
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்* வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்*
மை விரியும் மணி வரைபோல்* மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடிவைச் சிந்தித்தேற்கு* என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்புதானே*.
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாதபாவங்கள் சேரா* மேலை-
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்* மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்* பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகி* கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என்கொலோ* விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-
தள்ள தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே*.
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்* நும் துணைக் கையால் தொழுது நின்றே*.
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ நள் இருட்கண்-
வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
பாரித்து எழுந்த* படை மன்னர் தம்மை மாள பாரதத்து-
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த* தேவதேவன் ஊர்போலும்*
நீரில் பணைத்த நெடு வாளைக்கு* அஞ்சிப் போன குருகு இனங்கள்*
ஆரல் கவுளோடு அருகு அணையும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்* சிரங்கள் ஐஇரண்டும்*
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக* உதிர்த்த உரவோன் ஊர்போலும்*
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்* கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
அம்பு அராவும் கண் மடவார்* ஐம்பால் அணையும் அழுந்தூரே*.
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி* அடியேன் மனம் புகுந்து* என்-
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர்போலும்*
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல் நாடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
பகலும் இரவும் தானே ஆய்* பாரும் விண்ணும் தானே ஆய்*
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி* நின்றார் நின்ற ஊர்போலும்*
துகிலின் கொடியும் தேர்த் துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
ஏடு இலங்கு தாமரைபோல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம் புகுந்து* நின்றார் நின்ற ஊர்போலும்*
நீடு மாடத் தனிச் சூலம்* போழக் கொண்டல் துளி தூவ*
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
மாலைப் புகுந்து மலர்அணைமேல்* வைகி அடியேன் மனம் புகுந்து* என்-
நீலக் கண்கள் பனி மல்க* நின்றார் நின்ற ஊர்போலும்*
வேலைக் கடல்போல் நெடு வீதி* விண் தோய் சுதை வெண் மணி மாடத்து*
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே*
வஞ்சி மருங்குல் இடை நோவ* மணந்து நின்ற கனவகத்து* என்-
நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர்போலும்*
பஞ்சி அன்ன மெல் அடி* நல் பாவைமார்கள்* ஆடகத்தின்-
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன் அம் கலைகள் மெலிவு எய்த* போன புனிதர் ஊர்போலும்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
அன்னம் பெடையோடு உடன் ஆடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்ல பாவம் நில்லாவே*. (2)
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானை* தழல்ஆழி வலத்தானை*
செங்கமலத் தயனையார்* தென்ணழுந்தையில் மன்னிநின்ற*
அம் கமலக் கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*.(2)
கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*
மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-
ஆ! ஆ! என்று இரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை* அணி அழுந்தூர்-
உடையானை* அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று-
பொன்றாமை* அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்-
நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.
கஞ்சனைக் காய்ந்தானை* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய் முலையூடு* உயிர் வாய் மடுத்து உண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அஞ்சனக் குன்றம் தன்னை* அடியேன் கண்டுகொண்டேனே*.
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரி யானை உகந்தானவனுக்கும்* உணர்வதனுக்கு
அரியானை* அழுந்தூர் மறையோர்கள்* அடிபணியும்
கரியானை* அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.
திருவாழ் மார்வன் தன்னை* திசை மண்நீர் எரிமுதலா*
உருவாய் நின்றவனை* ஒலிசேரும் மாருதத்தை*
அருவாய் நின்றவனை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
கருவார் கற்பகத்தை* கண்டுகொண்டு களித்தேனே*
நிலையாளாக* என்னை யுகந்தானை* நிலமகள்தன்-
முலையாள் வித்தகனை* முதுநான்மறை வீதிதொறும்*
அலையாரும் கடல்போல் முழங்கும்* தென்னழுந்தையில் மன்னி நின்ற*
கலையார் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே*.
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலை* கண்டு கொண்டு களித்தேனே*. (2)
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.
திருவுக்கும் திருஆகிய செல்வா!* தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா*
உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!* உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்* உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-
அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* (2)
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி* பாவை பூமகள் தன்னொடும் உடனே-
வந்தாய்* என் மனத்தே மன்னி நின்றாய்* மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!* சாமவேதியனே! நெடுமாலே*
அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள்உடையாய்* அடியேனைச்-
செய்யாத உலகத்திடைச் செய்தாய்* சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்* போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்*
ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்* பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்-
வரனே! மாதவனே! மதுசூதா!* மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
நரனே! நாரணனே! திருநறையூர்!* நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்-
அரனே* ஆதிவராகம் முன்ஆனாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்* பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்* பண்பாளா! பரனே! பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை* கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்* சொல்லி நகும் பரிசே* பெற்ற-
தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்- தாடாளா!* தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
சேயாய்* கிரேத திரேத துவாபர- கலியுகம்* இவை நான்கும் முன்ஆனாய்*
ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!* கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா*
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!* எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்*
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து* ஐவர்-
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
நெடியானே! கடிஆர் கலிநம்பீ!* நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்*
கடிஆர் காளையர்ஐவர் புகுந்து* காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்* கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி*
அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி* கூறை சோறு இவை தா என்று குமைத்து-
போகார்* நான் அவரைப் பொறுக்ககிலேன்* புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே*
தீவாய் நாகணையில் துயில்வானே!* திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்*
ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்*
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி- ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவராய் உலகுஆண்டு* மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே* (2)
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்* திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த*
வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்* வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து- வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* (2)
முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண* முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்* பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்*
செந்நெல் மலிகதிர் கவரி வீச* சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி*
அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு* கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*
நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன* நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு* வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்* திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி*
இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி* எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*
புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க* பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல*
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி* திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு*
மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி- மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*
இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை* ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்*
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி* மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி*
தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்* தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி* செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்*
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி* பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்*
அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ* அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்* திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து*
வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*
செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்* திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்* ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற*
நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி* நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*
சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி* திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்*
ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்* பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்* கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்* ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிகழல் தொழுவீர்*
வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய கரை எங்கும்-
தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உள்ளும்* எனது உள்ளத்துளும்* உறைவாரை உள்ளீரே* (2)
தெருவில் திரிசிறு நோன்பியர்* செஞ்சோற்றொடு கஞ்சி-
மருவிப்* பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்துஅடைவீர்*
திருவில் பொலிமறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள்அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே
பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்* பணியும் சிறு தொண்டீர்!*
அறையும் புனல் ஒருபால்* வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
சிறைவண்டுஇனம் அறையும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உறையும் இறைஅடிஅல்லது* ஒன்று இறையும் அறியேனே*
வான்ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான்ஆகிய தலைவன் அவன்* அமரர்க்குஅதிபதிஆம்*
தேன்ஆர்பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன்ஆயனது* அடிஅல்லது* ஒன்று அறியேன் அடியேனே*
நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-
எந்தாய்! என* இமையோர் தொழுதுஏத்தும் இடம்* எறிநீர்ச்-
செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம்தாமரை அடியாய்!* உனதுஅடியேற்கு அருள் புரியே*
முழுநீலமும் மலர்ஆம்பலும்* அரவிந்தமும் விரவிக்*
கழுநீரொடு மடவார்அவர்* கண்வாய் முகம் மலரும்*
செழுநீர்வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழும்நீர் மைஅதுஉடையார்* அடி தொழுவார் துயர்இலரே*
சேய்ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-
மாயா* எனக்குஉரையாய் இது* மறை நான்கின்உளாயோ?*
தீஓம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ?* உனதுஅடியார் மனத்தாயோ?* அறியேனே* (2)
மைஆர் வரிநீல* மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உனகழலே* தொழுது எழுவேன்* கிளிமடவார்-
செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐவாய் அரவுஅணைமேல்* உறை அமலா! அருளாயே*
கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*
பெருமால் வரை உருவா!* பிறஉருவா! நினதுஉருவா!*
திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அருமா கடல்அமுதே!* உனது அடியே சரண்ஆமே* (2)
சீர்ஆர் நெடுமறுகின்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர்ஆர்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*
கார்ஆர் வயல் மங்கைக்குஇறை* கலியன்ஒலி மாலை*
பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே* (2)
பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை* பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்-
தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை* பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை* அமுதம் பொதிஇன் சுவைக்*
கரும்பினை கனியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்* மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை*
மைந்நிறக்கடலை கடல் வண்ணனை* மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலை பகலை இற்றை நாளினை* நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலை கரும்பினிடைத் தேறலை* கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை* வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனைப்* பங்கில் வைத்து உகந்தான் தன்னை* பான்மையை பனி மா மதியம் தவழ்*
மங்குலை சுடரை வடமாமலை- உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*
பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை* தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல்இடைகழி* மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை* இம்மையை மறுமைக்கு மருந்தினை,*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை* கையில்ஆழி ஒன்றுஏந்திய
கூற்றினை* குரு மாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினை புனலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை* சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை* திருமங்கை மணாளனை* தேவனை திகழும் பவளத்துஒளி
ஒப்பனை* உலகுஏழினை ஊழியை* ஆழிஏந்திய கையனை அந்தணர்
கற்பினை* கழுநீர் மலரும் வயல்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
திருத்தனை திசை நான்முகன் தந்தையை* தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை* விளங்கும் சுடர்ச் சோதியை* விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை* அரியை பரிகீறிய அப்பனை* அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற
கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்* கன்று வீசிய ஈசனை* பேய்மகள்-
துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை* தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை* பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை* மாலை மாமதியை மறையோர் தங்கள்-
கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை* வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்* மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
கண்ண!* நின் தனக்கும் குறிப்புஆகில்- கற்கலாம்* கவியின் பொருள் தானே* (2)