பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரைமேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார்தொகையே.
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மாவரும்திண் படைமன்னை* வென்றிகொள்வார் மன்னுநாங்கை*
தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்* திருத்தேவனார்தொகையே.
வான்நாடும் மண்நாடும்* மற்றுஉள்ள பல்உயிரும்*
தான்ஆய எம்பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும்இடம்*
ஆனாத பெருஞ்செல்வத்து* அருமறையோர் நாங்கைதன்னுள்*
தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்* திருத்தேவனார்தொகையே.
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்ரு* அருளூமிடம் எழில்நாங்கை*
சுந்தரநல் பொழில்புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரைமேல்*
திண் திறலார் பயில்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஓடாத ஆளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார்தொகையே.
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார்தொகையே.
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்து* மணம் கமழும் நாங்கைதன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார்தொகைமேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.
கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்* கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறைகோயில்*
செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*
வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர* வண்புருடோத்தமமே.
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக்காளியன் பண அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த* உம்பர்கோன் உறைகோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோநிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட*
வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்குஅவை காட்ட* வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு* எழில் கொள் பந்து அடிப்போர்*
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்* வன்சாபம் மற்றுஅதுநீங்க*
மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த* எம்முகில் வண்ணன் உறைகோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண்பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனைத் தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர்மகளோடு* மண்மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவைதன்னை*
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர்கோனை* கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்* செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை* பங்கயத்து அயன் அவன் அனைய*
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்*
தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே*
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
மல்லை மா முந்நீர் அதர்பட* மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை*
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்* வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை* கரு முகில் திரு நிறத்தவனை*
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
அன்றிய வாணன் ஆயிரம்* தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்* மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்* கார் முகிலே! என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்* மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி* கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து* இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட* பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்* இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு* பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி* அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ* மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே*
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி* வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட* கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்* எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை* கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப* மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்*
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி* ஆடவரை மட மொழியார் முகத்து* இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்* அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன* இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்* மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்* பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு* மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த* குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு* திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நிலமடந்தைதனை இடந்து புல்கிக்* கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்*
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்* ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி* எண் திசையும் மண்டலமும் மண்டி*
அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்* முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து* ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்* கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன* பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி* சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து* இலங்கை
வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை*
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
மாத்தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து* வன் தாள்
சேத்தொழில் சிதைத்துப்* பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத்தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய* வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து* தன்மேல்
வரும்அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெருமகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்றவெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு* எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங்கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
'மூவரில் எங்கள் மூர்த்தி* இவன், என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன்உலகு ஆண்டு* பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே.
தாஅளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நாவளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கைக்*
காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண்நீயே.
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்*
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்!*
துண் என மாற்றார்தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய*
கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி*
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்*
கருத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
முனைமுகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* ஆங்கு
அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே*
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்*
கனை கழல் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
பட அரவு உச்சிதன்மேல்* பாய்ந்து பல் நடங்கள்செய்து*
மடவரல் மங்கைதன்னை* மார்வகத்து இருத்தினானே!*
தடவரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய*
கடவுளே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மல்லரை அட்டு மாள* கஞ்சனை மலைந்து கொன்று*
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்*
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய*
கல் அரண் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி*
மாத்தமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்*
பூத்தமர் சோலை ஓங்கி* புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்*
காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
ஏவிளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று*
காவளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்*
பூவளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனே! களைகண் நீயே.
சந்தம் ஆய் சமயம் ஆகி* சமய ஐம் பூதம் ஆகி*
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்*
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கைக்*
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம் பாடிமேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே.
கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக்குளத்துள்*
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நின்றாய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக்குளத்துள்*
நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே
கான் ஆர் கரிக் கொம்பு* அது ஒசித்த களிறே!*
நானாவகை* நல்லவர் மன்னிய நாங்கூர்த்*
தேன் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.
வேடு ஆர்* திருவேங்கடம் மேய விளக்கே*
நாடு ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேடு ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்தாய்*
பாடாவருவேன்* வினை ஆயின பாற்றே.
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக்குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே.
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர்கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
மாலே என வல் வினை* தீர்த்தருளாயே.
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்ச்*
சீரார் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.
பூவார் திருமாமகள்* புல்கிய மார்பா!*
நாவார் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்த்*
தேவா!* திருவெள்ளக்குளத்து உறைவானே*
'ஆவா! அடியான்* இவன் என்று அருளாயே.
நல்லன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வன்* திருவெள்ளக்குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே. (2)
கவள யானைக் கொம்புஒசித்த* கண்ணன் என்றும் காமருசீர்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ-தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அண்டர் கோன் என் ஆனை என்றும்* ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும்* நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி*
பண்டுபோல் அன்று என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம்முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும் மா மதியை*
நெருக்கும் மாடம் நீடு நாங்கை* நின்மலன்தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்*
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
நாடி என்தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்* நான்மறைகள்-
தேடி என்றும் காண மாட்டாச்* செல்வன் என்றும்*
சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்* தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பலரும் ஏச என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென்மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே.(2)
நும்மைத் தொழுதோம்* நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆவா! என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!* மருவினிய
மைந்தா* அம் தண் ஆலி மாலே!* சோலை மழ களிறே!*
நந்தா விளக்கின் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ* என்
எந்தாய்! இந்தளூராய்!* அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்
பேசுகின்றது இதுவே* வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்*
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்*
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே!
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு
தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர்! இந்தளூரீர்!* வாழ்ந்தே போம் நீரே!
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும்*
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்* அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்* இந்தளூரீரே!
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே!
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா*
வீட்டீர் இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும்தம் அடிக்கள் காட்டில்* உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலைநின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே!
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே.
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானைக்*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்* ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து* பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே. (2)
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு* அரக்கர் தம் சிரங்களை உருட்டி*
கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்*
பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே.
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து*
அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடிஅதுவே.
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்*
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே.
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த* செங்கண்மால் சென்று உறை கோயில்*
ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி* எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே.
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற* கடல் அரக்கர் தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன் தன் கோயில்*
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே.
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்* திருவெள்ளியங்குடி அதுவே.
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே.
குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற* ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
கடிஉடைக் கமலம் அடியிடை மலர* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே.
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)