பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு*  தளர்நடைஇட்டு வருவான்* 
    பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு*  ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*

    மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச*  வாய்வைத்த பிரானே!* 
    அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  (2)


    பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்*  வருமளவு இப்பால்* 
    வன் பாரச் சகடம் இறச் சாடி*  வடக்கில் அகம் புக்கு இருந்து*

    மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை*  வேற்றுருவம் செய்து வைத்த* 
    அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்*  குடத் தயிர் சாய்த்துப் பருகி* 
    பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்*  பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*

    இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!*  உன்னை என்மகனே என்பர் நின்றார்* 
    அம்மா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை*  மையன்மை செய்து அவர் பின்போய்* 
    கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று*  குற்றம் பல பல செய்தாய்*

    பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ*  புத்தகத்துக்கு உள கேட்டேன்* 
    ஐயா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு*  தயிரும் விழுங்கி* 
    கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த*  கலத்தொடு சாய்த்துப் பருகி*

    மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல*  விம்மி விம்மி அழுகின்ற* 
    அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்*  கற்றாநிரை மண்டித் தின்ன* 
    விரும்பாக் கன்று ஒன்று கொண்டு*  விளங்கனி வீழ எறிந்த பிரானே!*

    சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்*  சூழ்வலை வைத்துத் திரியும்* 
    அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு*  வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி* 
    சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்*  சுற்றும் தொழ நின்ற சோதி!*

    பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!*  உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு- 
    அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    வாளா ஆகிலும் காணகில்லார்*  பிறர் மக்களை மையன்மை செய்து* 
    தோளால் இட்டு அவரோடு திளைத்து*  நீ சொல்லப் படாதன செய்தாய்*

    கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!*  வாழ்வில்லை*  நந்தன்- 
    காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்* 
    நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

    காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்* 
    ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்*  சோலைத் தடம் கொண்டு புக்கு* 
    முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை*  மூவேழு சென்றபின் வந்தாய்*

    ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*  உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்* 
    அத்தா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 


    காரார் மேனி நிறத்து எம்பிரானைக்*  கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி* 
    ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்*  அம்மம் தாரேன் என்ற மாற்றம்*

    பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்*  இருடிகேசன் அடியாரே*  (2)


    அஞ்சன வண்ணனை*  ஆயர் கோலக் கொழுந்தினை* 
    மஞ்சனம் ஆட்டி*  மனைகள்தோறும் திரியாமே*

    கஞ்சனைக் காய்ந்த*  கழல் அடி நோவக் கன்றின்பின்* 
    என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!* (2)


    பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்* 
    சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

    கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*


    நன்மணி மேகலை*  நங்கைமாரொடு நாள்தொறும்* 
    பொன்மணி மேனி*  புழுதியாடித் திரியாமே*

    கல்மணி நின்று அதிர்*  கான்- அதரிடைக் கன்றின்பின்* 
    என் மணிவண்ணனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்* 
    பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்* 
    எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    அவ்வவ் இடம் புக்கு*  அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்* 
    கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்*  கூழைமை செய்யாமே*

    எவ்வும் சிலை உடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    தெய்வத் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்* 
    படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வள்ளி நுடங்கு-இடை*  மாதர் வந்து அலர் தூற்றிடத்* 
    துள்ளி விளையாடித்*  தோழரோடு திரியாமே*

    கள்ளி உணங்கு*  வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    புள்ளின் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    பன்னிரு திங்கள்*  வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்* 
    என் இளங் கொங்கை*  அமுதம் ஊட்டி எடுத்து யான்*

    பொன்னடி நோவப்*  புலரியே கானிற் கன்றின் பின்* 
    என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    குடையும் செருப்பும் கொடாதே*  தாமோதரனை நான்* 
    உடையும் கடியன ஊன்று*  வெம் பரற்கள் உடைக்*

    கடிய வெங் கானிடைக்*  கால்- அடி நோவக் கன்றின் பின்* 
    கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்*  :எல்லே பாவமே!*


    என்றும் எனக்கு இனியானை*  என் மணிவண்ணனைக்* 
    கன்றின் பின் போக்கினேன் என்று*  அசோதை கழறிய*

    பொன் திகழ் மாடப்*  புதுவையர்கோன் பட்டன் சொல்* 
    இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு*  இடர் இல்லையே* (2)


    சீலைக் குதம்பை ஒருகாது*  ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ* 
    கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்*  குளிர் முத்தின் கோடாலமும்*

    காலிப் பின்னே வருகின்ற*  கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்* 
    ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்*  நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை  (2)


    கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
    மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*

    உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
    என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*


    காடுகள் ஊடு போய்க்*  கன்றுகள் மேய்த்து மறியோடிக்*  கார்க்கோடற்பூச்- 
    சூடி வருகின்ற தாமோதரா!*  கற்றுத் தூளி காண் உன் உடம்பு*

    பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!*  நீராட்டு அமைத்து வைத்தேன்* 
    ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்*  உன்னோடு உடனே உண்பான்*


    கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!*  கரும் போரேறே!*  நீ உகக்கும்- 
    குடையும் செருப்பும் குழலும்*  தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*

    கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*  சிறுக்குட்டச் செங் கமல* 
    அடியும் வெதும்பி*  உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!* 


    பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை*  வாய்வைத்த போரேறே!*  என்
    சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!*  சிறுக்குட்டச் செங்கண் மாலே!*

    சிற்றாடையும் சிறுப்பத்திரமும்*  இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்* 
    கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்*  கலந்து உடன் வந்தாய் போலும்*


    அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!*  நீ பொய்கை புக்கு* 
    நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்*  நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*

    என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?*  ஏதும் ஓர் அச்சம் இல்லை* 
    கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்*  காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*


    பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய*  பாற்கடல் வண்ணா!*  உன்மேல்- 
    கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த*  கள்ள அசுரர் தம்மைச்*

    சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே*  விளங்காய் எறிந்தாய் போலும்* 
    என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்*  அங்ஙனம் ஆவர்களே*


    கேட்டு அறியாதன கேட்கின்றேன்*  கேசவா! கோவலர் இந்திரற்குக்* 
    காட்டிய சோறும் கறியும் தயிரும்*  கலந்து உடன் உண்டாய் போலும்*

    ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு*  ஒருபோதும் எனக்கு அரிது* 
    வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!*  உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*


    திண் ஆர் வெண்சங்கு உடையாய்!*  திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்*  முன்- 
    பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்*  பல்லாண்டு கூறுவித்தேன்*

    கண்ணாலம் செய்யக்*  கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்* 
    கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்*  கோலம் செய்து இங்கே இரு*


    புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி*  தன் புத்திரன் கோவிந்தனைக்* 
    கற்றினம் மேய்த்து வரக் கண்டு*  உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*

    செற்றம் இலாதவர் வாழ்தரு*  தென்புது வை விட்டுசித்தன் சொல்* 
    கற்று இவை பாட வல்லார்*  கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)


    தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*  தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி* 
    குழல்களும் கீதமும் ஆகி*  எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு* 

    மழைகொலோ வருகின்றது என்று சொல்லி*  மங்கைமார் சாலக வாசல் பற்றி* 
    நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்*  உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)


    வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு*  வசை அறத் திருவரை விரித்து உடுத்து* 
    பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி*  பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே* 

    முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 
    எல்லியம் போதாகப் பிள்ளை வரும்*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*


    சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்*  மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட* 
    ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி*  ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*

    வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*  மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்* 
    அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்*  அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*


    குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்*  கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்* 
    கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு*  கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு* 

    என்றும் இவனை ஒப்பாரை நங்காய்*  கண்டறியேன் ஏடி! வந்து காணாய்* 
    ஒன்றும்நில்லா வளை கழன்று*  துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.* 


    சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து* 
    பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்- 

    மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்* 
    கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*


    சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்*  திருத்திய கோறம்பும் திருக்குழலும்* 
    அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்*  வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*

    அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை*  அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்* 
    பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*


    சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்*  தன் திருமேனிநின்று ஒளி திகழ* 
    நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 

    கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*  குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு- 
    ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*


    சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்*  திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்* 
    அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை*  அழகிய நேத்திரத்தால் அணிந்து* 

    இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன* 
    சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்*  துகிலொடு சரிவளை கழல்கின்றதே.


    வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து*  மல்லிகை வனமாலை மௌவல் மாலை* 
    சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்*  தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி* 

    அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
    விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.* 


    விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே* 
    கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற- 

    வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்* 
    பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  


    அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
    பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 

    வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
    கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)


    வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட* 
    மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை* 

    இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்* 
    குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்*  ஆனாயரும் ஆநிரையும் அலறி* 
    எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப*  இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை* 

    தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்*  புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று* 
    கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்*  கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்* 
    அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு*  அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை* 

    கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*  கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி*  எங்கும்- 
    குடவாய்ப் பட நின்று மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்*  அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்* 
    ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை*  இடவன் எழ வாங்கி எடுத்த மலை*

    கானக் களி-யானை தன் கொம்பு இழந்து*  கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்* 
    கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    செப்பாடு உடைய திருமால் அவன் தன்*  செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*  
    கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்*  காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*

    எப்பாடும் பரந்து இழி தெள் அருவி*  இலங்கு மணி முத்துவடம் பிறழக்* 
    குப்பாயம் என நின்று காட்சிதரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்*  படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்* 
    தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*  தாமோதரன் தாங்கு தடவரைதான்* 

    அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த*  அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்* 
    குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்*  சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு* 
    நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*  நாராயணன் முன் முகம் காத்த மலை* 

    இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்*  இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்* 
    கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்*  வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை* 
    தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்*  தாமோதரன் தாங்கு தடவரை தான்* 

    முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்*  முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்* 
    கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்*  கோலமும் அழிந்தில வாடிற்று இல* 
    வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல*  மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*

    முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்*  முன் நெற்றி நரைத்தன போல*  எங்கும்- 
    குடி ஏறி இருந்து மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய*  
    குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*

    திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* 
    பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)


    நாவலம் பெரிய தீவினில் வாழும்*  நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்* 
    தூ வலம்புரி உடைய திருமால்*  தூய வாயிற் குழல்-ஓசை வழியே* 

    கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப*  உடல் உள் அவிழ்ந்து*  எங்கும்- 
    காவலும் கடந்து கயிறுமாலை*  ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)  


    இட அணரை இடத் தோளொடு சாய்த்து*  இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்* 
    குடவயிறு பட வாய் கடைகூடக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    மட மயில்களொடு மான்பிணை போலே*  மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ* 
    உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி*  ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*


    வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 
    கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்* 
    தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*


    தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*  தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்* 
    கானகம் படி உலாவி உலாவிக்*  கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது* 

    மேனகையொடு திலோத்தமை அரம்பை*  உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி* 
    வானகம் படியில் வாய் திறப்பு இன்றி*  ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a


    முன் நரசிங்கமது ஆகி*  அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்- 
    மன்னர் அஞ்சும்*  மதுசூதனன் வாயிற்*  குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க* 

    நன் நரம்பு உடைய தும்புருவோடு*  நாரதனும் தம் தம் வீணை மறந்து* 
    கின்னர மிதுனங்களும் தம் தம்*  கின்னரம் தொடுகிலோம் என்றனரே* 


    செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்*  தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்* 
    நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்*  கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*

    அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*  அமுத கீத வலையால் சுருக்குண்டு* 
    நம் பரம் அன்று என்று நாணி மயங்கி*  நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*


    புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
    அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 

    அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
    செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  


    சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக* 
    குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*

    பறவையின் கணங்கள் கூடு துறந்து*  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
    கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 


    திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்*  செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே* 
    சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*  ஊதுகின்ற குழல்-ஓசை வழியே* 

    மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து*  மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர* 
    இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா*  எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*


    கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து*  கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை* 
    அருங்கல உருவின் ஆயர் பெருமான்*  அவனொருவன் குழல் ஊதின போது* 

    மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*  மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்* 
    இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி*  அவை செய்யும் குணமே.*


    குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
    குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 

    குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
    குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)


    ஐய புழுதி உடம்பு அளைந்து*  இவள் பேச்சும் அலந்தலையாய்ச்* 
    செய்ய நூலின் சிற்றாடை*  செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்* 

    கையினில் சிறுதூதை யோடு*  இவள் முற்றில் பிரிந்தும் இலள்* 
    பை அரவணைப் பள்ளியானொடு*  கைவைத்து இவள்வருமே.* (2)


    வாயிற் பல்லும் எழுந்தில*  மயிரும் முடி கூடிற்றில* 
    சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி* 

    தீ இணக்கு இணங்கு ஆடி வந்து*  இவள் தன் அன்ன செம்மை சொல்லி* 
    மாயன் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே* 


    பொங்கு வெண்மணல் கொண்டு*  சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்* 
    சங்கு சக்கரம் தண்டு வாள்*  வில்லும் அல்லது இழைக்கலுறாள்* 

    கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில*  கோவிந்தனோடு இவளைச்* 
    சங்கை யாகி என் உள்ளம்*  நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.* 


    ஏழை பேதை ஓர் பாலகன் வந்து*  என் பெண்மகளை எள்கி* 
    தோழிமார் பலர் கொண்டுபோய்ச்*  செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?* 

    ஆழியான் என்னும் ஆழ மோழையில்*  பாய்ச்சி அகப்படுத்தி* 
    மூழை உப்பு அறியாது என்னும்*  மூதுரையும் இலளே*


    நாடும் ஊரும் அறியவே போய்*  நல்ல துழாய் அலங்கல்- 
    சூடி*  நாரணன் போம் இடம் எல்லாம்*  சோதித்து உழிதர்கின்றாள்* 

    கேடு வேண்டுகின்றார் பலர் உளர்*  கேசவனோடு இவளைப்* 
    பாடிகாவல் இடுமின் என்று என்று*  பார் தடுமாறினதே.*


    பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து*  இவள் பாடகமும் சிலம்பும்* 
    இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு*  என்னோடு இருக்கலுறாள்*

    பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று*  இவள் பூவைப் பூவண்ணா என்னும்* 
    வட்ட வார் குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    பேசவும் தரியாத பெண்மையின்*  பேதையேன் பேதை இவள்* 
    கூசமின்றி நின்றார்கள்*  தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்* 

    கேசவா என்றும் கேடிலீ என்றும்*  கிஞ்சுக வாய் மொழியாள்* 
    வாச வார்குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    காறை பூணும் கண்ணாடி காணும்*  தன் கையில் வளை குலுக்கும்* 
    கூறை உடுக்கும் அயர்க்கும்*  தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* 

    தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்*  தேவன் திறம் பிதற்றும்* 
    மாறில் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே.*


    கைத்தலத்து உள்ள மாடு அழியக்*  கண்ணாலங்கள் செய்து*  இவளை- 
    வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?*  நம்மை வடுப்படுத்தும்*

    செய்த்தலை எழு நாற்றுப் போல்*  அவன் செய்வன செய்துகொள்ள* 
    மைத் தடமுகில் வண்ணன் பக்கல்*  வளர விடுமின்களே.*


    பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து*   பேணி நம் இல்லத்துள்ளே* 
    இருத்துவான் எண்ணி நாம் இருக்க*  இவளும் ஒன்று எண்ணுகின்றாள்* 

    மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்*  வார்த்தை படுவதன்முன்* 
    ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*


    ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்*  நாராயணனுக்கு*  இவள்- 
    மாலதாகி மகிழ்ந்தனள் என்று*  தாய் உரை செய்ததனை* 

    கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் சொன்ன* 
    மாலை பத்தும் வல்லவர்கட்கு*  இல்லை வரு துயரே.* (2)


    நல்லது ஓர் தாமரைப் பொய்கை*  நாண்மலர் மேல் பனி சோர* 
    அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு*  அழகழிந்தால் ஒத்ததாலோ* 

    இல்லம் வெறியோடிற்றாலோ*  என்மகளை எங்கும் காணேன்* 
    மல்லரை அட்டவன் பின்போய்*  மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2) 


    ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத*  உருவறைக் கோபாலர் தங்கள்* 
    கன்று கால் மாறுமா போலே*  கன்னி இருந்தாளைக் கொண்டு* 

    நன்றும் கிறி செய்து போனான்*  நாராயணன் செய்த தீமை*
    என்றும் எமர்கள் குடிக்கு*  ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*


    குமரி மணம் செய்து கொண்டு*  கோலம் செய்து இல்லத்து இருத்தி* 
    தமரும் பிறரும் அறியத்*  தாமோதரற்கு என்று சாற்றி* 

    அமரர் பதியுடைத் தேவி*  அரசாணியை வழிபட்டு* 
    துமிலம் எழப் பறை கொட்டித்*  தோரணம் நாட்டிடுங் கொல்லோ?* 


    ஒரு மகள் தன்னை உடையேன்*  உலகம் நிறைந்த புகழால்* 
    திருமகள் போல வளர்த்தேன்*  செங்கண் மால் தான் கொண்டு போனான்* 

    பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*  பெரும்பிள்ளை பெற்ற அசோதை* 
    மருமகளைக் கண்டு உகந்து*  மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?* 


    தம் மாமன் நந்தகோபாலன்*  தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்* 
    செம்மாந்திரே என்று சொல்லி*  செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*

    கொம்மை முலையும் இடையும்*  கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு* 
    இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?* 


    வேடர் மறக்குலம் போலே*  வேண்டிற்றுச் செய்து என்மகளைக்* 
    கூடிய கூட்டமே யாகக்*  கொண்டு குடி வாழுங் கொல்லோ?* 

    நாடும் நகரும் அறிய*  நல்லது ஓர் கண்ணாலம் செய்து* 
    சாடு இறப் பாய்ந்த பெருமான்*  தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*


    அண்டத்து அமரர் பெருமான்*  ஆழியான் இன்று என்மகளைப்* 
    பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?* 

    கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து*  கோவலப் பட்டம் கவித்துப்* 
    பண்டை மணாட்டிமார் முன்னே*  பாதுகாவல் வைக்குங் கொல்லோ?* 


    குடியிற் பிறந்தவர் செய்யும்*  குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!* 
    நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!*  நந்தகோபன் மகன் கண்ணன்* 

    இடை இருபாலும் வணங்க*  இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்* 
    கடைகயிறே பற்றி வாங்கிக்*  கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?* 


    வெண்ணிறத் தோய் தயிர் தன்னை*  வெள்வரைப்பின் முன் எழுந்து* 
    கண் உறங்காதே இருந்து*  கடையவும் தான்வல்லள் கொல்லோ?* 

    ஒண்ணிறத் தாமரைச் செங்கண்*  உலகளந்தான் என்மகளைப்* 
    பண் அறையாப் பணிகொண்டு*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*


    மாயவன் பின்வழி சென்று*  வழியிடை மாற்றங்கள் கேட்டு* 
    ஆயர்கள் சேரியிலும் புக்கு*  அங்குத்தை மாற்றமும் எல்லாம்*

    தாயவள் சொல்லிய சொல்லைப்*  தண் புதுவைப் பட்டன் சொன்ன* 
    தூய தமிழ் பத்தும் வல்லார்*  தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2) 


    என் நாதன் தேவிக்கு*  அன்று இன்பப்பூ ஈயாதாள்* 
    தன் நாதன் காணவே*  தண்பூ மரத்தினை*

    வன் நாதப் புள்ளால்*  வலியப் பறித்திட்ட* 
    என் நாதன் வன்மையைப் பாடிப் பற* 
    எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2) 


    என் வில் வலி கண்டு*  போ என்று எதிர்வந்தான்* 
    தன் வில்லினோடும்*  தவத்தை எதிர்வாங்கி* 

    முன் வில் வலித்து*  முதுபெண் உயிருண்டான்* 
    தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற* 
    தாசரதி தன்மையைப் பாடிப் பற.*


    உருப்பிணி நங்கையைத்*  தேர் ஏற்றிக் கொண்டு* 
    விருப்புற்று அங்கு ஏக*  விரைந்து எதிர் வந்து* 

    செருக்கு உற்றான்*  வீரம் சிதையத்*  தலையைச்- 
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற* 
    தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*


    மாற்றுத்தாய் சென்று*  வனம்போகே என்றிட* 
    ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து*  எம்பிரான்! என்று அழ* 

    கூற்றுத் தாய் சொல்லக்*  கொடிய வனம் போன* 
    சீற்றம் இலாதானைப் பாடிப் பற* 
    சீதை மணாளனைப் பாடிப் பற.*


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சன வண்ணனைப் பாடிப் பற* 
    அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*


    முடி ஒன்றி*  மூவுலகங்களும் ஆண்டு*  உன்- 
    அடியேற்கு அருள் என்று*  அவன்பின் தொடர்ந்த* 

    படியில் குணத்துப்*  பரத நம்பிக்கு*  அன்று- 
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற* 
    அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*


    காளியன் பொய்கை*  கலங்கப் பாய்ந்திட்டு*  அவன்- 
    நீள்முடி ஐந்திலும்*  நின்று நடம்செய்து*

    மீள அவனுக்கு*  அருள்செய்த வித்தகன்* 
    தோள்-வலி வீரமே பாடிப் பற* 
    தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*


    தார்க்கு இளந்தம்பிக்கு*  அரசு ஈந்து*  தண்டகம்- 
    நூற்றவள்*  சொற்கொண்டு போகி*  நுடங்கு இடைச்- 

    சூர்ப்பணகாவைச்*  செவியொடு மூக்கு*  அவள்- 
    ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற* 
    அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*


    மாயச் சகடம் உதைத்து*  மருது இறுத்து* 
    ஆயர்களோடு போய்*  ஆநிரை காத்து*  அணி- 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற* 
    ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.* 


    காரார் கடலை அடைத்திட்டு*  இலங்கை புக்கு* 
    ஓராதான் பொன்முடி*  ஒன்பதோடு ஒன்றையும்* 

    நேரா அவன்தம்பிக்கே*  நீள் அரசு ஈந்த* 
    ஆராவமுதனைப் பாடிப் பற* 
    அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*


    நந்தன் மதலையைக்*  காகுத்த னைநவின்று* 
    உந்தி பறந்த*  ஒளியிழை யார்கள்சொல்* 

    செந்தமிழ்த் தென்புதுவை*  விட்டு சித்தன்சொல்* 
    ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு*  அல்லல் இல்லையே.* (2)


    நெறிந்த கருங்குழல் மடவாய்!*  நின் அடியேன் விண்ணப்பம்*
    செறிந்த மணி முடிச் சனகன்*  சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-

    அறிந்து அரசு களைகட்ட*  அருந்தவத்தோன் இடை விலங்கச்* 
    செறிந்த சிலைகொடு தவத்தைச்*  சிதைத்ததும் ஓர் அடையாளம்*  (2)


    அல்லியம்பூ மலர்க்கோதாய்!*  அடிபணிந்தேன் விண்ணப்பம்* 
    சொல்லுகேன் கேட்டருளாய்*  துணைமலர்க் கண் மடமானே!*

    எல்லியம் போது இனிதிருத்தல்*  இருந்தது ஓர் இட வகையில்* 
    மல்லிகை மா மாலைகொண்டு*  அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*


    கலக்கிய மா மனத்தனளாய்க்*  கைகேசி வரம் வேண்ட* 
    மலக்கிய மா மனத்தனனாய்*  மன்னவனும் மறாது ஒழியக்*

    குலக்குமரா! காடு உறையப் போ என்று*  விடை கொடுப்ப* 
    இலக்குமணன் தன்னொடும்*  அங்கு ஏகியது ஓர் அடையாளம்*


    வார் அணிந்த முலை மடவாய்!*  வைதேவீ! விண்ணப்பம்* 
    தேர் அணிந்த அயோத்தியர்கோன்*  பெருந்தேவீ! கேட்டருளாய்*

    கூர் அணிந்த வேல் வலவன்*  குகனோடும் கங்கைதன்னிற்* 
    சீர் அணிந்த தோழமை*  கொண்டதும் ஓர் அடையாளம்*


    மான் அமரும் மென்நோக்கி!*  வைதேவீ! விண்ணப்பம்*
    கான் அமரும் கல்-அதர் போய்க்*  காடு உறைந்த காலத்துத்* 

    தேன் அமரும் பொழிற் சாரல்*  சித்திரகூடத்து இருப்பப்*
    பால்மொழியாய்! பரதநம்பி*  பணிந்ததும் ஓர் அடையாளம*


    சித்திரகூடத்து இருப்பச்*  சிறுகாக்கை முலை தீண்ட* 
    அத்திரமே கொண்டு எறிய*  அனைத்து உலகும் திரிந்து ஓடி*

    வித்தகனே! இராமாவோ!*  நின் அபயம் என்று அழைப்ப*
    அத்திரமே அதன்கண்ணை*  அறுத்ததும் ஓர் அடையாளம்*


    மின் ஒத்த நுண்- இடையாய்!*  மெய்- அடியேன் விண்ணப்பம்* 
    பொன் ஒத்த மான் ஒன்று*  புகுந்து இனிது விளையாட*

    நின் அன்பின் வழிநின்று*  சிலை பிடித்து எம்பிரான் ஏகப்* 
    பின்னே அங்கு இலக்குமணன்*  பிரிந்ததும் ஓர் அடையாளம்*


    மைத் தகு மா மலர்க்குழலாய்!*  வைதேவீ விண்ணப்பம்* 
    ஒத்த புகழ் வானரக்கோன்*  உடன் இருந்து நினைத் தேட* 

    அத்தகு சீர் அயோத்தியர்கோன்*  அடையாளம் இவை மொழிந்தான்* 
    இத் தகையால் அடையாளம்*  ஈது அவன் கைம் மோதிரமே*    


    திக்கு நிறை புகழாளன்*  தீ வேள்விச் சென்ற நாள்* 
    மிக்க பெரும் சபை நடுவே*  வில் இறுத்தான் மோதிரம் கண்டு*

    ஒக்குமால் அடையாளம்*  அனுமான்! என்று*  உச்சிமேல்- 
    வைத்துக்கொண்டு உகந்தனளால்*  மலர்க்குழலாள் சீதையுமே (2)


    வார் ஆரும் முலை மடவாள்*  வைதேவி தனைக் கண்டு* 
    சீர் ஆரும் திறல் அனுமன்*  தெரிந்து உரைத்த அடையாளம்* 

    பார் ஆரும் புகழ்ப் புதுவைப்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    ஏர் ஆரும் வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே* (2)