2 எண்ணிக்கை பாடல் பாட

வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)

சீதக் கடலுள்*  அமுது அன்ன தேவகி* 
கோதைக் குழலாள்*  அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி*  பிடித்துச் சுவைத்து உண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே* 
  பவள வாயீர் வந்து காணீரே  (2) 

வஞ்சனையால் வந்த*  பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை*  ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்*  புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு*  இல்லை இடர்தானே  (2)

தன்முகத்துச் சுட்டி*  தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்*  புழுதி அளைகின்றான்*
என்மகன் கோவிந்தன்*  கூத்தினை இள மா மதீ!* 
நின்முகம் கண்ணுள ஆகில்*  நீ இங்கே நோக்கிப் போ (2)

மைத்தடங் கண்ணி*  யசோதை தன்மகனுக்கு*  இவை- 
ஒத்தன சொல்லி*  உரைத்த மாற்றம்*  ஒளிபுத்தூர்-
வித்தகன் விட்டுசித்தன்*  விரித்த தமிழ் இவை* 
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*  இடர் இல்லையே  (2)      

தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்*  தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர வாரணம்  பைய*  நின்று ஊர்வது போல்* 
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*  உடை மணி பறை கறங்க* 
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*  தளர்நடை நடவானோ    
  

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*  அஞ்சனவண்ணன் தன்னைத்* 
தாயர் மகிழ ஒன்னார் தளரத்*   தளர்நடை நடந்ததனை*   
வேயர் புகழ் விட்டுசித்தன்*  சீரால் விரித்தன உரைக்கவல்லார்* 
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*  மக்களைப் பெறுவர்களே* (2)

பொன் இயல் கிண்கிணி*  சுட்டி புறங் கட்டித்* 
தன் இயல் ஓசை*  சலன்-சலன் என்றிட*
மின் இயல் மேகம்*  விரைந்து எதிர் வந்தாற்போல்* 
என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ 
 எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  (2)

நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 
மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)

வட்டு நடுவே*  வளர்கின்ற*  மாணிக்க- 
மொட்டு நுனையில்*  முளைக்கின்ற முத்தே போல்* 
சொட்டுச் சொட்டு என்னத்*  துளிக்கத் துளிக்க*  என் 
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்  கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்*  புறம்புல்கிய* 
வேய்த் தடந்தோளி சொல்*  விட்டுசித்தன் மகிழ்ந்து* 
ஈத்த தமிழ் இவை*  ஈரைந்தும் வல்லவர்* 
வாய்த்த நன்மக்களைப் பெற்று*  மகிழ்வரே (2)

மெச்சு ஊது சங்கம் இடத்தான்*  நல் வேய் ஊதி* 
பொய்ச் சூதிற் தோற்ற*  பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று*  பாரதம் கைசெய்த* 
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
      அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)

வல்லாள் இலங்கை மலங்கச்*  சரந் துரந்த* 
வில்லாளனை*  விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்*  பாடல் இவை பத்தும் 
வல்லார் போய்*  வைகுந்தம் மன்னி இருப்பரே (2)

மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)

வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி*  மாதவா! உண் என்ற மாற்றம்* 
நீர் அணிந்த குவளை வாசம்*  நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
சீர் அணிந்த செங்கண்மால் மேல்*  சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)   

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்*  பொரு திறற் கஞ்சன் கடியன்* 
காப்பாரும் இல்லை கடல்வண்ணா*  உன்னை தனியே போய் எங்கும் திரிதி*
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!*  கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த* 
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்*  அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)

வெண்ணெய் அளைந்த குணுங்கும்*  விளையாடு புழுதியும் கொண்டு* 
திண்ணென இவ் இரா உன்னைத்*  தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
எண்ணெய் புளிப்பழம் கொண்டு*  இங்கு எத்தனை போதும் இருந்தேன்* 
நண்ணல் அரிய பிரானே!*  நாரணா! நீராட வாராய்  (2)

கார் மலி மேனி நிறத்துக்*  கண்ணபிரானை உகந்து* 
வார் மலி கொங்கை யசோதை*  மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
பார் மலி தொல் புதுவைக் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
சீர் மலி செந்தமிழ் வல்லார்*  தீவினை யாதும் இலரே  (2)

இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)

போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 
வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)

வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு*  அதன் ஓசை கேட்கும்* 
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்*  காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை*  புரை புரையால் இவை செய்ய வல்ல* 
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  (2)  

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 

ஆற்றில் இருந்து*  விளையாடுவோங்களைச்*
சேற்றால் எறிந்து*  வளை துகிற் கைக்கொண்டு*
காற்றிற் கடியனாய்*  ஓடி அகம் புக்கு* 
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்* 
 வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)

அங் கமலக் கண்ணன்தன்னை*  அசோதைக்கு* 
மங்கை நல்லார்கள்*  தாம் வந்து முறைப்பட்ட* 
அங்கு அவர் சொல்லைப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
 இங்கு இவை வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே* (2) 

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு*  தளர்நடைஇட்டு வருவான்* 
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு*  ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச*  வாய்வைத்த பிரானே!* 
அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  (2)

அஞ்சன வண்ணனை*  ஆயர் கோலக் கொழுந்தினை* 
மஞ்சனம் ஆட்டி*  மனைகள்தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த*  கழல் அடி நோவக் கன்றின்பின்* 
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!* (2)

என்றும் எனக்கு இனியானை*  என் மணிவண்ணனைக்* 
கன்றின் பின் போக்கினேன் என்று*  அசோதை கழறிய*
பொன் திகழ் மாடப்*  புதுவையர்கோன் பட்டன் சொல்* 
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு*  இடர் இல்லையே* (2)

சீலைக் குதம்பை ஒருகாது*  ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ* 
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்*  குளிர் முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற*  கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்* 
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்*  நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை  (2)

புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி*  தன் புத்திரன் கோவிந்தனைக்* 
கற்றினம் மேய்த்து வரக் கண்டு*  உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*
செற்றம் இலாதவர் வாழ்தரு*  தென்புது வை விட்டுசித்தன் சொல்* 
கற்று இவை பாட வல்லார்*  கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)

நெறிந்த கருங்குழல் மடவாய்!*  நின் அடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணி முடிச் சனகன்*  சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-
அறிந்து அரசு களைகட்ட*  அருந்தவத்தோன் இடை விலங்கச்* 
செறிந்த சிலைகொடு தவத்தைச்*  சிதைத்ததும் ஓர் அடையாளம்*  (2)

திக்கு நிறை புகழாளன்*  தீ வேள்விச் சென்ற நாள்* 
மிக்க பெரும் சபை நடுவே*  வில் இறுத்தான் மோதிரம் கண்டு*
ஒக்குமால் அடையாளம்*  அனுமான்! என்று*  உச்சிமேல்- 
வைத்துக்கொண்டு உகந்தனளால்*  மலர்க்குழலாள் சீதையுமே (2)

வார் ஆரும் முலை மடவாள்*  வைதேவி தனைக் கண்டு* 
சீர் ஆரும் திறல் அனுமன்*  தெரிந்து உரைத்த அடையாளம்* 
பார் ஆரும் புகழ்ப் புதுவைப்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
ஏர் ஆரும் வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே* (2)

கதிர் ஆயிரம் இரவி*  கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்* 
எதிர் இல் பெருமை இராமனை*  இருக்கும் இடம் நாடுதிரேல்*
அதிரும் கழற் பொரு தோள்*  இரணியன் ஆகம் பிளந்து*  அரியாய்- 
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை*  உள்ளவா கண்டார் உளர் (2)

கரியமுகில்புரைமேனிமாயனைக்*  கண்டசுவடுஉரைத்துப்* 
புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி*  விளைகழனிப்புதுவைத்*
திருவிற்பொலிமறைவாணன்*  பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்* 
பரவும்மனமுடைப்பத்தருள்ளார்*  பரமனடிசேர்வர்களே (2)

அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*
சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)

மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 
விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)

உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*
பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)

ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*
ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)

மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*
மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)

நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)

சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 
கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)

ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி*  அன்னை அத்தன் என் புத்திரர்பூமி* 
வாசவார் குழலாள் என்றுமயங்கி*  மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்*  கேழல்ஆகியகேடிலீ! என்றும்* 
பேசுவார் அவர் எய்தும் பெருமை*  பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2) 

செத்துப்போவதோர் போதுநினைந்து*  செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்* 
பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்* 
சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே  (2)

காசும் கறைஉடைக் கூறைக்கும்*  அங்குஓர் கற்றைக்கும்- 
ஆசையினால்*  அங்குஅவத்தப் பேர்இடும்*  ஆதர்காள்!*
கேசவன் பேர்இட்டு*  நீங்கள் தேனித்துஇருமினோ* 
நாயகன் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்  (2)

சீர்அணி மால்*  திருநாமமே இடத்தேற்றிய* 
வீர்அணி தொல்புகழ்*  விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண்தமிழ்*  ஒன்பதோடுஒன்றும் வல்லவர்* 
பேர்அணி வைகுந்தத்து*  என்றும் பேணியிருப்பரே. (2)

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்* 
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*
கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்* 
கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)

 வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*
தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

 மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை- 
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்* 
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்* 
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு* 
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)

மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 
தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)

பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)

தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)

கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)

துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)

வாக்குத் தூய்மை இலாமையினாலே*  மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்* 
நாக்கு நின்னைஅல்லால் அறியாது*  நான் அதஞ்சுவன் என் வசமன்று*
மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று*  முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* 
காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்*  காரணா! கருளக் கொடியானே!  (2)

காமர் தாதை கருதலர்சிங்கம்*  காண இனிய கருங்குழற் குட்டன்* 
வாமனன் என்மரகத வண்ணன்*  மாதவன் மதுசூதனன் தன்னைச்*
சேமநன்குஅமரும் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்* 
நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.

நெய்க்குடத்தைப்பற்றி*  ஏறும்எறும்புகள்போல் நிரந்து*  எங்கும்- 
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!*  காலம்பெற உய்யப்போமின்*
மெய்க்கொண்டு வந்துபுகுந்து*  வேதப்பிரானார் கிடந்தார்* 
பைக்கொண்ட பாம்புஅணையோடும்*  பண்டுஅன்று பட்டினம்காப்பே.  (2)

உறகல் உறகல் உறகல்*  ஒண்சுடராழியே! சங்கே!* 
அறவெறி நாந்தகவாளே!*  அழகியசார்ங்கமே! தண்டே!*
இறவுபடாமல்இருந்த*  எண்மர் உலோகபாலீர்காள்!* 
பறவைஅரையா! உறகல்*  பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)

அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்* 
அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*
பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்* 
பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2) 

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 
மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)

உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,*  இனிப்போய்ஒருவன்- 
தனக்குப்பணிந்து*  கடைத்தலைநிற்கை*  நின்சாயையழிவுகண்டாய்*
புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி*  உன்பொன்னடிவாழ்கவென்று* 
இனத்துக்குறவர் புதியதுண்ணும்*  எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)

சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 
பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)

சென்னியோங்கு*  தண்திருவேங்கடமுடையாய்!*  உலகு- 
தன்னை வாழநின்ற நம்பீ!*  தாமோதரா! சதிரா!* 
என்னையும் என்னுடைமையையும்*  உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு* 
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)

பருப்பதத்துக் கயல்பொறித்த*  பாண்டியர்குலபதிபோல்* 
திருப்பொலிந்தசேவடி*  என் சென்னியின் மேல் பொறித்தாய்* 
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே* 
உருப்பொலிந்தநாவினேனை*  உனக்கு உரித்தாக்கினையே. (2)

தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*
வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)

வேயர் தங்கள் குலத்துதித்த*  விட்டுசித்தன் மனத்தே* 
கோயில்கொண்ட கோவலனைக்*  கொழுங்குளிர் முகில்வண்ணனை* 
ஆயரேற்றை அமரர்கோவை*  அந்தணர்தம் அமுதத்தினை* 
சாயைபோலப் பாடவல்லார்*  தாமும் அணுக்கர்களே. (2)