பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* மாவலி மண்
தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே. (2)
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* மூழ்த்த நாள்
அந்நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய* திருமாலை எம்மானை*
நல்நீர் சூழ்* நறையூரில் கண்டேனே.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே.
கல் ஆர் மதிள் சூழ்* கதி இலங்கைக் கார் அரக்கன்*
வல் ஆகம் கீள* வரி வெம் சரம் துரந்த
வில்லானை* செல்வ விபீடணற்கு வேறாக*
நல்லானை நாடி* நறையூரில் கண்டேனே .
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே.
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை* மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்* வண் துவரை
நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே.
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்* மற மன்னர்*
பண்ணின்மேல் வந்த* படை எல்லாம் பாரதத்து*
விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை*
நண்ணி நான் நாடி* நறையூரில் கண்டேனே.
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (2)
மன்னும் மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன்உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே. (2)
பொன் உலகு ஆளீரோ?* புவனி முழுது ஆளீரோ?,*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில்வண்ணன் கண்ணன்,*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே?.
மையமர் வாள் நெடும்கண்* மங்கைமார் முன்பு என் கை இருந்து,*
நெய்யமர் இன் அடிசில்* நிச்சல் பாலொடு மேவீரோ,*
கையமர் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
மெய்யமர் காதல் சொல்லி* கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?
ஓடிவந்து என் குழல்மேல்* ஒளிமாமலர் ஊதீரோ,*
கூடிய வண்டினங்காள்!* குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்*
ஆடிய மா நெடும் தேர்ப்படை* நீறு எழச் செற்ற பிரான்,*
சூடிய தண் துளவம் உண்ட* தூமது வாய்கள் கொண்டே?
தூமதுவாய்கள் கொண்டுவந்து* என் முல்லைகள்மேல் தும்பிகாள்,*
பூ மது உண்ணச் செல்லில்* வினையேனைப் பொய்செய்து அகன்ற,*
மாமதுவார் தண்துழாய்முடி* வானவர் கோனைக் கண்டு,*
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்* கண்டீர் நுங்கட்கே.
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்* யான் வளர்த்த கிளிகாள்,*
வெம் கண் புள் ஊர்ந்து வந்து* வினையேனை நெஞ்சம் கவர்ந்த*
செங்கண் கருமுகிலை* செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,*
எங்குச் சென்றாகிலும் கண்டு* இதுவோ தக்கவாறு என்மினே.
என் மின்னு நூல் மார்வன்* என் கரும் பெருமான் என் கண்ணன்,*
தன் மன்னு நீள் கழல்மேல்* தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,*
கல்மின்கள் என்று உம்மையான்* கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*
செல்மின்கள் தீவினையேன்* வளர்த்த சிறு பூவைகளே!
பூவைகள் போல் நிறத்தன்* புண்டரீகங்கள் போலும் கண்ணன்,*
யாவையும் யாவரும் ஆய்* நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,*
மாவை வல் வாய் பிளந்த* மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,*
பாவைகள்! தீர்க்கிற்றிரே* வினையாட்டியேன் பாசறவே.
பாசறவு எய்தி இன்னே* வினையேன் எனை ஊழி நைவேன்?*
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!* அருள்செய்து ஒருநாள்,*
மாசு அறு நீலச்சுடர்முடி* வானவர் கோனைக் கண்டு,*
ஏசு அறும் நும்மை அல்லால்* மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.
பேர்த்து மற்று ஓர் களைகண்* வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,*
நீர்த் திரைமேல் உலவி* இரை தேரும் புதா இனங்காள்*
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்* விண்ணவர் கோனைக் கண்டு,*
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்* வைகல் வந்திருந்தே.
வந்திருந்து உம்முடைய* மணிச் சேவலும் நீரும் எல்லாம்,*
அந்தரம் ஒன்றும் இன்றி* அலர்மேல் அசையும் அன்னங்காள்,*
என் திரு மார்வற்கு என்னை* இன்னவாறு இவள் காண்மின் என்று,*
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்* மறுமாற்றங்களே.
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு* மதுசூத பிரான் அடிமேல்,*
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தோற்றங்கள் ஆயிரத்துள்* இவையும் ஒருபத்தும் வல்லார்*
ஊற்றின்கண் நுண் மணல்போல்* உருகாநிற்பர் நீராயே.