பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* நின் உருவம்
மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது* யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* நின்
திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே. (2)
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே*
அறம்தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள் குழகா!* திருநறையூர்த்
தேனே* வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே
சாந்து ஏந்து மென் முலையார்* தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன்* அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்*
போந்தேன் புண்ணியனே!* உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன்* பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்
செற்றாய்* கொற்றவனே!* திருவிண்ணகரானே.
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே.
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே* நீ பணியாது அடை* நின் திருமனத்து*
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே.
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே.
சொல்லாய் திரு மார்வா!* உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை* வினைகள் நலியாமை* நம்புநம்பீ*
மல்லா! குடம் ஆடீ!* மதுசூதனே* உலகில்
செல்லா நல் இசையாய்!* திருவிண்ணகரானே.
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானைக்*
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே.
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்*
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்குகுடித்* திருவிண்ணகர்க் கண்டேனே*. (2)
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்*
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல்சூழ்* திருவிண்ணகர் நல் நகரே*
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்* நிலன் ஆய் விசும்பு ஆய்*
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*.
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்*
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டுகொள்மின்கள் கைதவமே*
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்*
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே*
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்*
பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்*
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே*.
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்* விண்ணோர்-
சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே*.
வன்சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன்சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என்சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே*
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே*. (2)
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்*
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே*. (2)