பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கிடந்த நம்பி குடந்தை மேவி* கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி* எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
விடம்தான் உடைய அரவம் வெருவ* செருவில் முன நாள்* முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக* வளை மருப்பைப்
பேணான் வாங்கி* அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சி* பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால்* முனிந்த எந்தை* விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* மருவாத
விடைதான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே.
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா* அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்* எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே.
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்* நமோ நாராயணமே.
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று
படுங்கால்* நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே.
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா
மங்கை* பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே.
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே.
உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.
கூறாய் நீறு ஆய் நிலன் ஆகி* கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,*
சீறா எரியும் திரு நேமி வலவா!* தெய்வக் கோமானே,*
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும்* திருவேங்கடத்தானே,*
ஆறா அன்பில் அடியேன்* உன் அடிசேர் வண்ணம் அருளாயே.
வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!* மாய அம்மானே,*
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!* இமையோர் அதிபதியே,*
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்* திருவேங்கடத்தானே,*
அண்ணலே! உன் அடிசேர* அடியேற்கு ஆஆ என்னாயே!
ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்* அசுரர் வாழ் நாள்மேல்,*
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!* திரு மா மகள் கேள்வா-
தேவா* சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
பூ ஆர் கழல்கள் அருவினையேன்* பொருந்துமாறு புணராயே.
புணரா நின்ற மரம் ஏழ்* அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,*
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்* நடுவே போன முதல்வா ஓ,*
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்* திருவேங்கடத்தானே,*
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்* சேர்வது அடியேன் எந்நாளே?
,எந்நாளே நாம் மண் அளந்த* இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,*
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி* இறைஞ்சி இனம் இனமாய்,*
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்* திருவேங்கடத்தானே,*
மெய்ந் நான் எய்தி எந்நாள்* உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!* இமையோர் அதிபதியே,*
கொடியா அடு புள் உடையானே!* கோலக் கனிவாய்ப் பெருமானே,*
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!* திருவேங்கடத்து எம் பெருமானே,*
நொடி ஆர் பொழுதும் உன பாதம்* காண நோலாது ஆற்றேனே
நோலாது ஆற்றேன் உன பாதம்* காண என்று நுண் உணர்வின்,*
நீல் ஆர் கண்டத்து அம்மானும்* நிறை நான்முகனும் இந்திரனும்,*
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்* திருவேங்கடத்தானே,*
மாலாய் மயக்கி அடியேன்பால்* வந்தாய் போலே வாராயே.
வந்தாய் போலே வாராதாய்!* வாராதாய் போல் வருவானே,*
செந்தாமரைக் கண் செங்கனிவாய்* நால் தோள் அமுதே! எனது உயிரே,*
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்* திருவேங்கடத்தானே,*
அந்தோ அடியேன் உன பாதம்* அகலகில்லேன் இறையுமே.
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து* அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்*
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்* பழனக் குருகூர்ச் சடகோபன்,*
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்* திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,*
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் நிலாவுவரே.