பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது* மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணைஅடியே அடை நெஞ்சே!
கழி ஆரும் கன சங்கம்* கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*
பழி ஆரும் விறல் அரக்கன்* பரு முடிகள்அவை சிதற*
அழல் ஆரும் சரம் துரந்தான்* அடிஇணையே அடை நெஞ்சே!
சுளை கொண்ட பலங்கனிகள்* தேன் பாய* கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித்* திகழ் சோலைத் திருநறையூர்*
வளை கொண்ட வண்ணத்தன்* பின் தோன்றல்* மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன்* அடிஇணையே அடை நெஞ்சே!
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே!
அகில் குறடும் சந்தனமும்* அம் பொன்னும் அணி முத்தும்*
மிகக் கொணர்ந்து திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
பகல் கரந்த சுடர் ஆழிப்* படையான் இவ் உலகு ஏழும்*
புகக் கரந்த திரு வயிற்றன்* பொன்அடியே அடை நெஞ்சே !
பொன் முத்தும் அரி உகிரும்* புழைக் கை மா கரிக் கோடும்*
மின்னத் தண் திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
மின் ஒத்த நுண் மருங்குல்* மெல்இயலைத்* திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான்* மலர் அடியே அடை நெஞ்சே!
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்* செங் கமலத்து இடை இடையில்*
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்* பயன் விளைக்கும் திருநறையூர்*
கார் தழைத்த திரு உருவன்* கண்ணபிரான் விண்ணவர்கோன்*
தார் தழைத்த துழாய் முடியன்* தளிர் அடியே அடை நெஞ்சே!
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான்* தன் நீள் கழலே அடை நெஞ்சே!
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணைஅடியே அடை நெஞ்சே!
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல்இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே.
நீராய் நிலனாய்* தீயாய் காலாய் நெடுவானாய்,*
சீரார் சுடர்கள் இரண்டாய்* சிவனாய் அயனானாய்,*
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி* கொடியேன்பால்
வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
மண்ணும் விண்ணும் மகிழ* குறள் ஆய் வலம் காட்டி,*
மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*
நண்ணி உனை நான்* கண்டு உகந்து கூத்தாட,*
நண்ணி ஒருநாள்* ஞாலத்தூடே நடவாயே.
ஞாலத்தூடே நடந்தும் நின்றும்* கிடந்து இருந்தும்,*
சாலப் பலநாள்* உகம்தோறு உயிர்கள் காப்பானே,*
கோலத் திரு மா மகளோடு* உன்னைக் கூடாதே,*
சாலப் பல நாள்* அடியேன் இன்னும் தளர்வேனோ?
தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுரர் உடல் வேறாப்,*
பிளந்து வீய* திருக்கால் ஆண்ட பெருமானே,*
கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர் சூழ,*
விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே.
விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!* கடல் சேர்ப்பாய்,*
மண்மீது உழல்வாய்!* இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,*
எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!* எனது ஆவி,*
உண் மீது ஆடி* உருக் காட்டாதே ஒளிப்பாயோ?
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்* பரவை நிலம் எல்லாம்-
தாயோர்,* ஓர் அடியால்* எல்லா உலகும் தடவந்த-
மாயோன்,* உன்னைக் காண்பான்* வருந்தி எனைநாளும்,*
தீயோடு உடன்சேர் மெழுகாய்* உலகில் திரிவேனோ?
உலகில் திரியும் கரும கதி ஆய்* உலகம் ஆய்,*
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்* புற அண்டத்து,*
அலகில் பொலிந்த* திசை பத்து ஆய அருவேயோ,*
அலகில் பொலிந்த* அறிவிலேனுக்கு அருளாயே.
அறிவிலேனுக்கு அருளாய்* அறிவார் உயிர் ஆனாய்,*
வெறி கொள் சோதி மூர்த்தி!* அடியேன் நெடுமாலே,*
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு* இன்னம் கெடுப்பாயோ,*
பிறிது ஒன்று அறியா அடியேன்* ஆவி திகைக்கவே?
ஆவி திகைக்க* ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,*
பாவியேனைப்* பல நீ காட்டிப் படுப்பாயோ,*
தாவி வையம் கொண்ட* தடம் தாமரை கட்கே,*
கூவிக் கொள்ளும் காலம்* இன்னம் குறுகாதோ?
குறுகா நீளா* இறுதிகூடா எனை ஊழி,*
சிறுகா பெருகா* அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,*
மறு கால் இன்றி மாயோன்* உனக்கே ஆளாகும்,*
சிறு காலத்தை உறுமோ* அந்தோ தெரியிலே?
தெரிதல் நினைதல்* எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,*
உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*
தெரியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரிய தொண்டர் ஆக்கும்* உலகம் உண்டாற்கே.