பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்* பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன்* ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி
அறுத்தேன்* ஆர்வச் செற்றம் அவைதம்மை* மனத்து அகற்றி
வெறுத்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான்! திரு மார்பா!*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே
மான் ஏய் நோக்கியர்தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே! மா நிலமே!* வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
பிறிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன்* நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி
எறிந்தேன்* ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து
செறிந்தேன்* நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே.
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி* முன் ஆண்டவரே-
மாண்டார் என்று வந்தார்* அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை*
வேண்டேன் நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா! மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த!*
மல்லா மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்!*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி*
கூற ஐவர் வந்து குமைக்கக்* குடிவிட்டவரைத்*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர்போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்*
மூவா வானவர்தம் முதல்வா!* மதி கோள் விடுத்த
தேவா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர்தம்
கோதா* கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ* மொழியாய் சுடர்போல்* என் மனத்து இருந்த
வேதா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர்கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர்தம்* கொடி மா நகர் கூடுவரே.
மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்* முன்பு நான் அது அஞ்சுவன்*
மன்உடை இலங்கை* அரண் காய்ந்த மாயவனே*
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்* இனி அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும்* தந்து போகு நம்பீ!*. (2)
போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்* செவ்வாய் முறுவலும்*
ஆகுலங்கள் செய்ய* அழிதற்கே நோற்றோமேயாம்?*
தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்* செவி ஓசை வைத்து எழ*
ஆகள் போகவிட்டு* குழல் ஊது போயிருந்தே*.
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!* நின்செய்ய-
வாய் இருங் கனியும் கண்களும்* விபரீதம் இந் நாள்*
வேய் இரும் தடம் தோளினார்* இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*
மா இரும் கடலைக் கடைந்த* பெருமானாலே?*
ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு* அன்று நீ கிடந்தாய்* உன் மாயங்கள்-
மேலை வானவரும் அறியார்* இனி எம் பரமே?*
வேலின் நேர் தடம் கண்ணினார்* விளையாடு சூழலைச் சூழவே நின்று*
காலி மேய்க்க வல்லாய்!* எம்மை நீ கழறேலே*.
கழறேல் நம்பீ!* உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்* திண் சக்கர-
நிழறு தொல் படையாய்!* உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்*
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க* எம்-
குழறு பூவையொடும்* கிளியோடும் குழகேலே*.
குழகி எங்கள் குழமணன்கொண்டு* கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை*
பழகி யாம் இருப்போம்* பரமே இத் திரு அருள்கள்?*
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்* தேவிமை ஈதகுவார் பலர் உளர்*
கழகம் ஏறேல் நம்பீ!* உனக்கும் இளைதே கன்மமே*.
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது* கடல் ஞாலம் உண்டிட்ட*
நின்மலா! நெடியாய்!* உனக்கேலும் பிழை பிழையே*
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி* அது கேட்கில் என் ஐம்மார்*
தன்ம பாவம் என்னார்* ஒரு நான்று தடி பிணக்கே*.
பிணக்கி யாவையும் யாவரும்* பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்*
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்* கதிர் ஞான மூர்த்தியினாய்,
இணக்கி எம்மை எம் தோழிமார்* விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை*
உணக்கி நீ வளைத்தால்* என் சொல்லார் உகவாதவரே?*
உகவையால் நெஞ்சம் உள் உருகி* உன் தாமரைத் தடம் கண் விழிகளின்*
அக வலைப் படுப்பான்* அழித்தாய் உன் திருவடியால்*
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்* யாம் அடு சிறு சோறும் கண்டு* நின்-
முக ஒளி திகழ* முறுவல் செய்து நின்றிலையே*.
நின்று இலங்கு முடியினாய்!* இருபத்தோர் கால் அரசு களைகட்ட*
வென்றி நீள்மழுவா!* வியன் ஞாலம் முன் படைத்தாய்!*
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய* கருமாணிக்கச் சுடர்*
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்* ஆய்ச்சியோமே*.
ஆய்ச்சி ஆகிய அன்னையால்* அன்று வெண்ணெய் வார்த்தையுள்* சீற்ற முண்டு அழு-
கூத்த அப்பன் தன்னை* குருகூர்ச் சடகோபன்*
ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்*
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*. (2)