பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட* வரி சிலை வளைவித்து*
அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்துள்*
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை* அகடு உற முகடு ஏறி*
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய* அரு வரை அணை கட்டி*
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்* இருந்த நல் இமயத்து*
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன* வேழங்கள் துயர்கூர*
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று* இளங்கொடிதிறத்து ஆயர்*
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்* இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்* மணி அறைமிசை வேழம்*
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர* ஒருவனது அகல் மார்வம் திறந்து*
வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்துள்*
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்* கிடந்து அருகு எரி வீசும்*
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரை செய் மாக் கடல் கிடந்தவன்* கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த*
அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்* அமர்ந்த நல் இமயத்து*
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை* அளை மிகு தேன் தோய்த்துப்*
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்* பரமா என்று*
இணங்கி வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்து*
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற* நிமிர்ந்து அவை முகில் பற்றிப்*
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய* கறி வளர் கொடி துன்னிப்*
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய* பூம் பொழில் இமயத்துள்*
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து* இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்*
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை* இரும் பசி அது கூர*
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய* அருவரை இமயத்து*
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று* எண்ணி நின்று இமையோர்கள்*
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறு துயர் அடையாமல்*
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை* இருந்த நல் இமயத்து*
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற* தழல் புரை எழில் நோக்கி*
பேதை வண்டுகள் எரி என வெருவரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரிய மா முகில் படலங்கள் கிடந்து* அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு* பிரிதி எம் பெருமானை*
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்* கலியனது ஒலி மாலை*
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு* அரு வினை அடையாவே* (2)
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய் தானவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே* (2)
தையலாள்மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும் அன்று*
செய்த வெம் போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து*
அரக்கன் மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து*
அவனே பின் ஓர் தூது* ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*
பந்து அணைந்த மெல்விரலாள்* பாவைதன் காரணத்தால்*
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலைமேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் அம் தண் கழனி*
ஏலம் நாறும் பைம் புறவின்* எவ்வுள் கிடந்தானே*
சோத்தம் நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும் நம்பி எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசைமுகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்து இருந்த*
வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூடநின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு இனியன்*
எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீல மேனி மணி வண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகன் ஆய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்,
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு* உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே* கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)
காயோடு நீடு கனி உண்டு வீசு* கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா* திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்* மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்* விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்* அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து* படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்* அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து* கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய* குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்* தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூமங்கை தங்கி புலமங்கை மன்னி* புகழ்மங்கை எங்கும் திகழ*
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
நெய் வாய் அழல் அம்பு துரந்து* முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி* நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்* அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து* மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு* திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்* கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
மா வாயின் அங்கம் மதியாது கீறி* மழை மா முது குன்று எடுத்து*
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்* குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*
தேவாதிதேவன் திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்* சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகல புகழ் சேர்* அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப* அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்* பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)
கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்* கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறைகோயில்*
செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*
வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர* வண்புருடோத்தமமே.
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக்காளியன் பண அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த* உம்பர்கோன் உறைகோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோநிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட*
வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்குஅவை காட்ட* வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு* எழில் கொள் பந்து அடிப்போர்*
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்* வன்சாபம் மற்றுஅதுநீங்க*
மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த* எம்முகில் வண்ணன் உறைகோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண்பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனைத் தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
தாம்* தம் பெருமை அறியார்*
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே.
செறும் திண்* திமில் ஏறு உடைய* பின்னை
பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர்போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே.
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு* அடியேன்
உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர்போல்*
கள்ள நாரை* வயலுள்* கயல்மீன்
கொள்ளை கொள்ளும்* கூடலூரே.
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்* நிலம் நீர்
ஏற்றான் எந்தை* பெருமான் ஊர்போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே.
தொண்டர் பரவ* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர்போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே.
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர்போல்*
எக்கல் இடு* நுண் மணல்மேல்* எங்கும்
கொக்கின் பழம் வீழ்* கூடலூரே.
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல*
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடிக்*
குருந்தம் தழுவும்* கூடலூரே.
கலை வாழ்* பிணையோடு அணையும்* திருநீர்
மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்*
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்
குலை தாழ் கிடங்கின்* கூடலூரே.
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
அருகு கைதை மலர* கெண்டை
குருகு என்று அஞ்சும்* கூடலூரே.
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித் திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட* பாவம் போமே.
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்* பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன்* ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி
அறுத்தேன்* ஆர்வச் செற்றம் அவைதம்மை* மனத்து அகற்றி
வெறுத்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான்! திரு மார்பா!*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே
மான் ஏய் நோக்கியர்தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே! மா நிலமே!* வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
பிறிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன்* நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி
எறிந்தேன்* ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து
செறிந்தேன்* நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே.
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி* முன் ஆண்டவரே-
மாண்டார் என்று வந்தார்* அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை*
வேண்டேன் நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா! மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த!*
மல்லா மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்!*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி*
கூற ஐவர் வந்து குமைக்கக்* குடிவிட்டவரைத்*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர்போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்*
மூவா வானவர்தம் முதல்வா!* மதி கோள் விடுத்த
தேவா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர்தம்
கோதா* கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ* மொழியாய் சுடர்போல்* என் மனத்து இருந்த
வேதா* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர்கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர்தம்* கொடி மா நகர் கூடுவரே.
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட-
கள்வா! என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஓடா ஆள் அரியின்* உரு ஆய் மருவி என் தன்-
மாடே வந்து* அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*
பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு*
நாடேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*.
எம்மானும் எம் அனையும்* என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்கு ஆகி நின்ற*
நல் மான ஒண் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ!* உன்-
மைம் மான வண்ணம் அல்லால்* மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்* உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய்* என் நெஞ்சின் உள்ளே* உறைவாய் உறைந்ததுதான்*
அறியாது இருந்தறியேன் அடியேன்* அணி வண்டு கிண்டும்*
நறை வாரும் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்*
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு* நான் அடிமை
பூண்டேன்* என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நான்தான் உனக்கு ஒழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எம் தாதை தாதை அப்பால்* எழுவர் பழ அடிமை
வந்தார்* என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*
அந்தோ! என் ஆர் உயிரே!* அரசே அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ!*
மன் அஞ்ச ஆயிரம் தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என் நெஞ்சத்துள் இருந்து* இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்*
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்* வளைத்து வைத்தேன்*
நல் நெஞ்ச அன்னம் மன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
எப்போதும் பொன் மலர் இட்டு* இமையோர் தொழுது* தங்கள்-
கைப்போது கொண்டு இறைஞ்சி* கழல்மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சின் உள்ளே* புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ!*
ஊன் நேர் ஆக்கைதன்னை* உழந்து ஓம்பி வைத்தமையால்*
யான் ஆய் என்தனக்கு ஆய்* அடியேன் மனம் புகுந்த
தேனே!* தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்*
நானே எய்தப் பெற்றேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*
சொல் நீர சொல்மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்-
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே. (2)
என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்*
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்* அன்று இடந்தவனை தழலே புரை*
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட* சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* என் மனம் போற்றி என்னாதே*
தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*
வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்* ஓ!
துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-
கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே? (2)
நீள்நிலா முற்றத்து* நின்றுஇவள் நோக்கினாள்,*
காணுமோ!* கண்ணபுரம் என்று காட்டினாள்,*
பாணனார் திண்ணம் இருக்க* இனிஇவள்-
நாணுமோ,?* நன்று நன்று நறையூரர்க்கே.
அருவிசோர் வேங்கடம்* நீர்மலை என்றுவாய்-
வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்* கண்ணபுரம் என்று பேசினாள்-
உருகினாள்* உள்மெலிந்தாள் இது என்கொலோ! (2)
உண்ணும் நாள்இல்லை* உறக்கமும் தான்இல்லை,*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதைதான்,*
கண்ணன்ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க்கடல்-
வண்ணர்மேல்,* எண்ணம் இவட்கு இது என்கொலோ!
கண்ணன்ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை,*
பெண்மைஎன் தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்,*
வெண்ணெய்உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்,*
வண்ணமும்* பொன்நிறம் ஆவது ஒழியுமே.
வடவரை நின்றும் வந்து* இன்று கணபுரம்,-
இடவகை கொள்வது* யாம்என்று பேசினாள்,*
மடவரல் மாதர் என் பேதை* இவர்க்குஇவள்-
கடவதுஎன்,?* கண்துயில் இன்று இவர் கொள்ளவே.
தரங்கநீர் பேசினும்* தண்மதி காயினும்,*
இரங்குமோ?* எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* ஊர்-
அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே.
தொண்டுஎல்லாம் நின்அடியே* தொழுது உய்யுமா-
கண்டு,* தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டுஉலாம் கோதை என் பேதை* மணிநிறம்-
கொண்டுதான்,* கோயின்மை செய்வது தக்கதே?
முள்எயிறு ஏய்ந்தில,* கூழை முடிகொடா,*
தெள்ளியள் என்பதுஓர்* தேசுஇலள் என்செய்கேன்,*
கள்அவிழ் சோலைக்* கணபுரம் கைதொழும்-
பிள்ளையைப்,* பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளைப்,*
பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*
நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே (2)
பொன்இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி* ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா! (2)
தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்* செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*
பாடக மெல்அடியார் வணங்க* பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
தாயின நாயகர் ஆவர் தோழீ!* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா!
வெம்சின வேழ மருப்புஒசித்த* வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,*
அஞ்சன மாமலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்* பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,*
பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
அணிகெழு தாமரை அன்ன கண்ணும்* அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட* மாலிருஞ் சோலை மணாளர் வந்து,* என்-
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்* நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த* மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,*
அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா!
எண்திசையும் எறிநீர்க் கடலும்* ஏழ்உலகும் உடனே விழுங்கி,*
மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்* மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்* கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா!
அன்னமும் கேழலும் மீனும்ஆய* ஆதியை நாகை அழகியாரை,*
கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க்கலி கன்றி,* குன்றா-
இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
மன்னவர்ஆய் உலகுஆண்டு* மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே. (2)
இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*
பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன் பட்டனன்* இனி யாவர்க்கு உரைக்கோம்*
குரக்கு நாயகர்காள்! இளங்கோவே* கோல வல்வில் இராம பிரானே*
அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ. (2)
பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்* பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்* செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்* ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்*
அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தண்ட காரணியம் புகுந்து* அன்று தையலை தகவிலி எம்கோமான்*
கொண்டு போந்து கெட்டான்* எமக்கு இங்குஓர் குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்* பேசுகின்றதுஎன்? தாசரதீ,* உன்-
அண்ட வாணர் உகப்பதே செய்தாய்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
எஞ்சல்இல் இலங்கைக்குஇறை* எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று* நங்கையை அவன் தம்பியே சொன்னான்*
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்* வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்* சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து*
வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே* குற்றம் ஆயிற்றுக் காணீர்*
கும்பனோடு நிகும்பனும் பட்டான்* கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி*
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.
ஓத மாகடலைக் கடந்துஏறி* உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து*
காதல் மக்களும் சுற்றமும் கொன்று* கடி இலங்கை மலங்க எரித்து*
தூது வந்த குரங்குக்கே* உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே*
ஆதர் நின்று படுகின்றது அந்தோ!* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று* தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
மாழை மான்மட நோக்கியை விட்டு* வாழகில்லா மதிஇல் மனத்தானை*
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை* எங்களை ஒழியக் கொலை அவனை*
சூழு மாநினை மாமணி வண்ணா!* சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா* அம்கயல் கண்ணினார்கள் இருப்ப*
தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து* தஞ்சமே சில தாபதர்என்று*
புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த* புன்மையாளன் நெஞ்சில் புக எய்த*
அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்* பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
சரங்களே கொடிதுஆய் அடுகின்ற* சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*
இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!* இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா*
குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!* கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர* அணி இலங்கை அழித்தவன் தன்னை*
பொங்கு மாவலவன் கலி கன்றி* புகன்ற பொங்கத்தம் கொண்டு,* இவ்உலகினில்-
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!* இம்மையே இடர் இல்லை,* இறந்தால்-
தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்* சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! (2)
குன்றம் எடுத்து மழைதடுத்து* இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்* என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்* கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்* பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ! (2)
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து* அரிமாச்செகுத்து,*
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு* வன் பேய்முலை-
வாங்கி உண்ட,* அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
ஏங்கு வேய்ங்குழல்* என்னோடாடும் இளமையே!.
மல்லோடு கஞ்சனும்* துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
அல்லி மலர்த்தண்துழாய்* நினைந்திருந்தேனையே,*
எல்லியில் மாருதம்* வந்தடும், அதுவன்றியும்,*
கொல்லை வல்லேற்றின் மணியும்* கோயின்மை செய்யுமே!.
பொருந்து மாமரம்* ஏழும் எய்த புனிதனார்*
திருந்து சேவடி* என்மனத்து நினைதொறும்,*
கருந்தண் மாகடல்* மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
வருந்த வாடை வரும்* இதற்கினி என்செய்கேன்!
அன்னை முனிவதும்* அன்றிலின் குரல் ஈர்வதும்,*
மன்னு மறிகடல் ஆர்ப்பதும்* வளை சோர்வதும்*
பொன்னங் கலையல்குல்* அன்ன மென்னடைப் பூங்குழல்,*
பின்னை மணாளர்* திறத்தவாயின பின்னையே
ஆழியும் சங்கும் உடைய* நங்கள் அடிகள்தாம்,*
பாழிமையான கனவில்* நம்மைப் பகர்வித்தார்,*
தோழியும் நானும் ஒழிய* வையம் துயின்றது,*
கோழியும் கூகின்றதில்லைக்* கூரிருள் ஆயிற்றே!.
காமன் தனக்கு முறையல்லேன்* கடல் வண்ணனார்,*
மாமணவாளர்* எனக்குத் தானும் மகன்சொல்லில்,*
யாமங்கள் தோறும் எரி வீசும்* என்னிளங் கொங்கைகள்,*
மாமணி வண்ணர்* திறத்த வாய் வளர்கின்றவே!
மஞ்சுறு மாலிருஞ் சோலை* நின்ற மணாளனார்,*
நெஞ்சம் நிறைகொண்டு போயினார்* நினைகின்றிலர்,*
வெஞ்சுடர் போய் விடியாமல்* எவ்விடம் புக்கதோ,*
நஞ்சு உடலம் துயின்றால்* நமக்கினி நல்லதே!
காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்* நலத்தில்மிகு,*
பூமரு கோல* நம் பெண்மை சிந்தித்திராது போய்*
தூமலர் நீர்கொடு* தோழி.நாம் தொழுதேத்தினால்*
கார்முகில் வண்ணரைக்* கண்களால் காணலாம் கொலோ!.
வென்றி விடையுடன்* ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்* மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை* ஒன்றும் சொல்லில் உலகிலே (2)