பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்* மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழை எனக் கருதி* பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து* சுரி குழல் மடந்தையர்திறத்துக்*
காதலே மிகுத்து கண்டவா* திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்* வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து* பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*
நம்பினார் இறந்தால்* நமன் தமர் பற்றி எற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை* பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!* நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்* படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து* திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்* உணர்விலேன் ஆதலால் நமனார்*
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்* பரமனே! பாற்கடல் கிடந்தாய்!*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்* நீதி அல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே* துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா* வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி* உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
தான் உடைக் குரம்பை பிரியும்போது* உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்*
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!* திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!*
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி* எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்* நைமிசாரணியத்து* எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்* மாலைதான் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்* உம்பரும் ஆகுவர் தாமே. (2)
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி* அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே. (2)
பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
கார்வண்ண முது முந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே.
ஏனத்தின்உருவுஆகி* நிலமங்கை எழில் கொண்டான்*
வானத்தில்அவர் முறையால்* மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளிஉருவை* நினைவார் என் நாயகரே. (2)
விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல் இயலார்*
கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*
கண்டாரை கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரைக்,
கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குலதெய்வமே.
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*
விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே!
புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*
நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,*
கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வலங்கொள் மனத்தார்அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே!
பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணா*
கஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே!
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்து வன் பகட்டால்*
உழும் நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல்மல்லைத் தலசயனம்*
தொழும் நீர் மனத்தவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே .
பிணங்கள் இடு காடு அதனுள்* நடம் ஆடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்*
விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என்தன் மட நெஞ்சே!
கடி கமழும் நெடு மறுகின்* கடல்மல்லைத் தலசயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர்தம்* முதல்வர் ஆவாரே. (2)
தூவிரிய மலர் உழக்கி* துணையோடும் பிரியாதே*
பூவிரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே!*
தீவிரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏவரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே. (2)
பிணிஅவிழு நறுநீல* மலர் கிழிய பெடையோடும்*
அணிமலர்மேல் மதுநுகரும்* அறுகால சிறு வண்டே!*
மணிகழுநீர் மருங்குஅலரும்* வயல் ஆலி மணவாளன்*
பணிஅறியேன் நீ சென்று* என் பயலை நோய் உரையாயே.
நீர்வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்*
தன்தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர்ஆரும் வளர்பொழில்சூழ்* திருவாலி வயல்வாழும்*
கூர்வாய சிறுகுருகே!* குறிப்புஅறிந்து கூறாயே.
தானாக நினையானேல்* தன் நினைந்து நைவேற்கு*
ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்* வலி செய்ய மெலிவேனோ?*
தேன் வாய வரி வண்டே!* திருவாலி நகர் ஆளும்*
ஆன்ஆயற்கு என் உறு நோய்* அறிய சென்று உரையாயே.
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு*
ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!* வரை எடுத்த தோளாளா*
என்தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே!
தார் ஆய தன் துளவம்* வண்டு உழுதவரை மார்பன்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த* புள் பாகன் என் அம்மான்*
தேர் ஆரும் நெடு வீதித்* திருவாலி நகர் ஆளும்*
கார் ஆயன் என்னுடைய* கன வளையும் கவர்வானோ!
கொண்டு அரவத் திரை உலவு* குரை கடல்மேல் குலவரைபோல்*
பண்டு அரவின் அணைக் கிடந்து* பார் அளந்த பண்பாளா!*
வண்டு அமரும் வளர் பொழில் சூழ்* வயல் ஆலி மைந்தா!*
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு* என் கன வளையும் கடவேனோ!?
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண்_இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ!*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு*
இது நடுவே வயல் ஆலி மணவாளா!* கொள்வாயோ மணி நிறமே!
நிலை ஆளா நின் வணங்க* வேண்டாயே ஆகிலும் என்*
முலை ஆள ஒருநாள்* உன் அகலத்தால் ஆளாயே*
சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!* திருமெய்யமலையாளா*
நீஆள வளை ஆள மாட்டோமே.
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே. (2)
தாஅளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நாவளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கைக்*
காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண்நீயே.
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்*
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்!*
துண் என மாற்றார்தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய*
கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி*
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்*
கருத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
முனைமுகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* ஆங்கு
அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே*
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்*
கனை கழல் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
பட அரவு உச்சிதன்மேல்* பாய்ந்து பல் நடங்கள்செய்து*
மடவரல் மங்கைதன்னை* மார்வகத்து இருத்தினானே!*
தடவரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய*
கடவுளே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மல்லரை அட்டு மாள* கஞ்சனை மலைந்து கொன்று*
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்*
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய*
கல் அரண் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி*
மாத்தமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்*
பூத்தமர் சோலை ஓங்கி* புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்*
காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
ஏவிளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று*
காவளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்*
பூவளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனே! களைகண் நீயே.
சந்தம் ஆய் சமயம் ஆகி* சமய ஐம் பூதம் ஆகி*
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்*
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கைக்*
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே.
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம் பாடிமேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே.
கைம்மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை*
மைம்மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த
அம்மானை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால்
ஊரானை* கரம்பனூர் உத்தமனை* முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே.
ஏன் ஆகி உலகு இடந்து* அன்று இரு நிலனும் பெரு விசும்பும*
தான் ஆய பெருமானை* தன் அடியார் மனத்து என்றும்*
தேன் ஆகி அமுது ஆகித்* திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்*
ஆன்-ஆயன் ஆனானைக்* கண்டது தென் அரங்கத்தே.
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப்-
பிளந்தவனை* பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள்
அளந்தவனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை* கண்டார் பின் காணாமே*
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது தென் அரங்கத்தே.
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை* தரியாது
கஞ் சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை*
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது-
வந்து எனது மனத்து இருந்த* வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை* தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென் அரங்கத்தே.
பொய் வண்ணம் மனத்து அகற்றி* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை*
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரகதத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே.
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்* அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு* மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்* குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்*
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை* இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி* உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள*
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி* பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி* பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி*
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்* அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த*
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
அன்று உலகம் மூன்றினையும் அளந்து* வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு*
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு* விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து*
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்* புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்* தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்*
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்* தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்*
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை* விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட*
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி* முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்* இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய* வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்* மன் எல்லாம் முன் அவியச் சென்று* வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்* சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு* எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட*
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன்* ஆயிரம் பேர் உடைய ஆளன்* பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற* படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்*
பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்* புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்* பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானை* தழல்ஆழி வலத்தானை*
செங்கமலத் தயனையார்* தென்ணழுந்தையில் மன்னிநின்ற*
அம் கமலக் கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*.(2)
கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*
மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-
ஆ! ஆ! என்று இரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை* அணி அழுந்தூர்-
உடையானை* அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று-
பொன்றாமை* அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்-
நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.
கஞ்சனைக் காய்ந்தானை* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய் முலையூடு* உயிர் வாய் மடுத்து உண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அஞ்சனக் குன்றம் தன்னை* அடியேன் கண்டுகொண்டேனே*.
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரி யானை உகந்தானவனுக்கும்* உணர்வதனுக்கு
அரியானை* அழுந்தூர் மறையோர்கள்* அடிபணியும்
கரியானை* அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.
திருவாழ் மார்வன் தன்னை* திசை மண்நீர் எரிமுதலா*
உருவாய் நின்றவனை* ஒலிசேரும் மாருதத்தை*
அருவாய் நின்றவனை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
கருவார் கற்பகத்தை* கண்டுகொண்டு களித்தேனே*
நிலையாளாக* என்னை யுகந்தானை* நிலமகள்தன்-
முலையாள் வித்தகனை* முதுநான்மறை வீதிதொறும்*
அலையாரும் கடல்போல் முழங்கும்* தென்னழுந்தையில் மன்னி நின்ற*
கலையார் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே*.
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலை* கண்டு கொண்டு களித்தேனே*. (2)
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.
தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-
திண்தோள் நிமிர சிலைவளைய* சிறிதே முனிந்த திருமார்வன்,*
வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-
கண்டான்,* கண்டு கொண்டுஉகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்* பொன்ற அன்று புள்ஊர்ந்து*
பெருந்தோள் மாலி தலைபுரள* பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
இருந்தார் தம்மைஉடன் கொண்டு* அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப*
கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியைக்*
கல்விச் சிலையால் காத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
மல்லை முந்நீர் அதர்பட* வரிவெம் சிலைகால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல்உற்று*
தொல்லை மரங்கள் புகப்பெய்து* துவலை நிமிர்ந்து வான்அணவ*
கல்லால் கடலை அடைத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
ஆமைஆகி அரிஆகி* அன்னம்ஆகி,* அந்தணர்தம்-
ஓமம்ஆகி ஊழிஆகி* உவரி சூழ்ந்த நெடும்புணரி*
சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்* சிரமும் கரமும் துணித்து,* முன்-
காமன் பயந்தான் கருதும்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வருந்தாது இரு நீ மடநெஞ்சே* நம்மேல் வினைகள் வாரா,* முன்-
திருந்தா அரக்கர் தென்இலங்கை* செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*
பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து* பின்னை மணாளன்ஆகி* முன்-
கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை-தன்னால் அடர்ப்புண்டு*
கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*
அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-
கலைமாச் சிலையால் எய்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
மால்ஆய் மனமே! அருந்துயரில்* வருந்தாது இரு நீ, வலிமிக்க*
கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்* கதமா கழுதையும்*
மால்ஆர் விடையும் மதகரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
குன்றால் மாரி பழுதுஆக்கி* கொடிஏர் இடையாள் பொருட்டாக*
வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்* திரிகால் சகடம் சினம்அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திருமா மகளால் அருள்மாரி* செழு நீர்ஆலி வளநாடன்*
மருவுஆர் புயல்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*
இருமா நிலத்துக்கு அரசுஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
அக்கும் புலியின்* அதளும் உடையார்* அவர்ஒருவர்
பக்கம் நிற்க நின்ற* பண்பர்ஊர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினைஏறி,* தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை* வெள்இறவு உண்ணும் குறுங்குடியே. (2)
துங்கஆர் அரவத் திரைவந்து உலவ* தொடுகடலுள்,-
பொங்குஆர் அரவில் துயிலும்* புனிதர்ஊர் போலும்,*
செங்கால் அன்னம்* திகழ்தண் பணையில் பெடையோடும்,*
கொங்குஆர் கமலத்து* அலரில் சேரும் குறுங்குடியே.
வாழக் கண்டோம்* வந்து காண்மின் தொண்டீர்காள்,*
கேழல் செங்கண்* மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*
ஏழைச் செங்கால்* இன்துணை நாரைக்கு இரை தேடி,*
கூழைப் பார்வைக்* கார்வயல் மேயும் குறுங்குடியே.
சிரம்முன் ஐந்தும் ஐந்தும்* சிந்தச் சென்று,* அரக்கன்-
உரமும் கரமும் துணித்த* உரவோன்ஊர் போலும்,*
இரவும் பகலும்* ஈன்தேன் முரல,* மன்றுஎல்லாம்-
குரவின் பூவே தான்* மணம் நாறும் குறுங்குடியே.
கவ்வைக் களிற்று மன்னர் மாள* கலிமாத்தேர்-
ஐவர்க்குஆய்,* அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
மைவைத்து இலங்கு* கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,*
கொவ்வைக் கனிவாய்க்* கிள்ளை பேசும் குறுங்குடியே.
தீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரை ஏந்தி,*
தூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
மாநீர் வண்ணர்* மருவி உறையும்இடம்,* வானில்-
கூன்நீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே..
வல்லிச்சிறு நுண்இடையாரிடை* நீர்வைக்கின்ற,*
அல்லல் சிந்தை தவிர* அடைமின் அடியீர்காள்!,*
சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,*
கொல்லை முல்லை* மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே.
நார்ஆர்இண்டை* நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,*
ஆரா அன்போடு* எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*
தாரா ஆரும்* வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
கூர்வாய் நாரை* பேடையொடு ஆடும் குறுங்குடியே.
நின்ற வினையும் துயரும் கெட* மாமலர்ஏந்தி,*
சென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*
என்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*
குன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே..
சிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)
எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?* நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்* அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக* பொன்மிடறு அத்தனைபோது,*
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே. (2)
குன்றுஒன்று மத்தா அரவம் அளவி* குரைமாகடலைக் கடைந்திட்டு,* ஒருகால்-
நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர* நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*
நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்* மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,*
அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்* உலப்புஇல் வலியார் அவர்பால்,* வயிரம்-
விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ* அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*
வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று* மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன* தான் சரண்ஆய் முரண்ஆயவனை* உகிரால்-
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த* பெருமான் திருமால் விரிநீர் உலகை,*
வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை* மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்* அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்* செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*
வேண்டாமை நமன் தமர் என்தமரை* வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல* பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*
தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்* சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்* தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா* விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,* கடலை-
அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு* உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு* இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்* செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா* தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்* இருகூறுசெய்த பெருமான் முனநாள்*
வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து* மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்* வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி* உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி* இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே. (2)
மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி* வானவரும் யாமும்எல்லாம்,*
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*
எந்நன்றி செய்தாரா* ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?*
செய்ந்நன்றி குன்றேல்மின்* தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே (2)
நில்லாத பெருவெள்ளம்* நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,*
மல்ஆண்ட தடக்கையால்* பகிரண்டம் அகப்படுத்த காலத்து,* அன்று-
எல்லாரும் அறியாரோ* எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,*
அல்லாதார் தாம்உளரே?* அவன்அருளே உலகுஆவது அறியீர்களே?
நெற்றிமேல் கண்ணானும்* நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,*
ஒற்றைக்கை வெண்பகட்டின்* ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*
வெற்றிப்போர்க் கடல்அரையன்* விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,*
கொற்றப் போர்ஆழியான்* குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!
பனிப்பரவைத் திரைததும்ப* பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*
இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று* உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*
முனித்தலைவன் முழங்குஒளிசேர்* திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே* கழல் தொழுமா கல்லீர்களே.
பார்ஆரும் காணாமே* பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,*
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது,* உள்ளத்து-
ஓராத உணர்விலீர்! உணருதிரேல்* உலகுஅளந்த உம்பர் கோமான்,*
பேராளன் பேரான* பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.
பேய்இருக்கும் நெடுவெள்ளம்* பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,*
தாய்இருக்கும் வண்ணமே* உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*
போய்இருக்க மற்றுஇங்குஓர்* புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,* பெற்ற-
தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ* மாட்டாத தகவுஅற்றீரே!
மண்நாடும் விண்நாடும்* வானவரும் தானவரும் மற்றும்எல்லாம்*
உண்ணாத பெருவெள்ளம்* உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்ட,*
கணணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல்சூடி, அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.
மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்* உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,*
புறம்கிளர்ந்த காலத்து* பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*
அறம்கிளந்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி* நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.
அண்டத்தின் முகடுஅழுந்த* அலைமுந்நீர்த் திரைததும்ப ஆ! ஆ! என்று,*
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்* தான்அருளி,* உலகம்ஏழும்-
உண்டுஒத்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
கொண்டல்கை மணிவண்ணன்* தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,*
யாவரையும் ஒழியாமே* எம்பெருமான் உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்* கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,*
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்* பொன்உலகில் பொலிவர் தாமே. (2)