பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கண் ஆர் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும்* வேங்கட மா மலை மேய*
அண்ணா அடியேன்* இடரைக் களையாயே.
இலங்கைப் பதிக்கு* அன்று இறை ஆய*
அரக்கர் குலம் கெட்டு அவர் மாள* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே.
நீர் ஆர் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந் தளிர்மேல்* துயில் எந்தாய்!*
சீர் ஆர்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே.
உண்டாய் உறிமேல்* நறு நெய் அமுது ஆக*
கொண்டாய் குறள் ஆய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய,
அண்டா!* அடியேனுக்கு அருள்புரியாயே.
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய,*
கோள் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கி* தன் இன் அருள் செய்யும் தலைவன்*
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே.
மான் ஏய் மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடிகொண்டு இருந்தாயே.
சேயன் அணியன்* என சிந்தையுள் நின்ற*
மாயன் மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ் சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திருவேங்கடம் மேய எந்தாய்!*
இனி யான் உனை* என்றும் விடேனே.
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள்தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள்தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே.
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்* இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. (2)
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்* தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை* தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்* குழாம்கொள் பொய்கைக்* கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி* அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட* இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி* கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்* பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்* மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று* தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி* இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று* காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு* சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று* கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார்* மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த* கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)
திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்* தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து*
இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்* தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ*
அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)
வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்* விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று*
குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்* குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*
என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்* ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்*
அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்* உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்*
கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து* கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*
மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட* பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு* அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி*
வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு* அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*
சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை* செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே*
ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்* களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு*
அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்* அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*
அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்* அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா* இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்*
தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*
சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை* செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்*
வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்* தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்* கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்* ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை* காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்*
குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்* குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்* தூமறையோர் தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை*
அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு* வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை* கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*
மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து* வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து* பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்*
அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்* கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்* உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்* ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து* பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே. (2)
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு* அரக்கர் தம் சிரங்களை உருட்டி*
கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்*
பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே.
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து*
அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடிஅதுவே.
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்*
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே.
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த* செங்கண்மால் சென்று உறை கோயில்*
ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி* எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே.
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற* கடல் அரக்கர் தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன் தன் கோயில்*
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே.
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்* திருவெள்ளியங்குடி அதுவே.
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே.
குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற* ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
கடிஉடைக் கமலம் அடியிடை மலர* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே.
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* அவை ஆய பெருமான்*
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* தட மார்வர் தகைசேர்*
நாதன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே. (2)
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்* ஒழியாமை முன நாள்*
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன்அவன் மேவும் நகர்தான்*
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்*
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த* தட மார்வர் தகை சேர்*
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி* கங்குல் வயல் சூழ்*
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்*
இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல* நின்ற பெருமான்*
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல* அடிகொள் நெடு மா*
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்*
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்*
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர்தான்*
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்*
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர்தான்*
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்*
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனியாளர் திரு ஆர்*
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்*
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்*
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்*
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்*
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடையானை* ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல* கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்* முழுது அகலுமே.
கிடந்த நம்பி குடந்தை மேவி* கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி* எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
விடம்தான் உடைய அரவம் வெருவ* செருவில் முன நாள்* முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக* வளை மருப்பைப்
பேணான் வாங்கி* அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சி* பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால்* முனிந்த எந்தை* விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* மருவாத
விடைதான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே.
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா* அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்* எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே.
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்* நமோ நாராயணமே.
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று
படுங்கால்* நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே.
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா
மங்கை* பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே.
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே.
பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை* பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்-
தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை* பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை* அமுதம் பொதிஇன் சுவைக்*
கரும்பினை கனியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்* மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை*
மைந்நிறக்கடலை கடல் வண்ணனை* மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலை பகலை இற்றை நாளினை* நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலை கரும்பினிடைத் தேறலை* கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை* வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனைப்* பங்கில் வைத்து உகந்தான் தன்னை* பான்மையை பனி மா மதியம் தவழ்*
மங்குலை சுடரை வடமாமலை- உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*
பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை* தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல்இடைகழி* மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை* இம்மையை மறுமைக்கு மருந்தினை,*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை* கையில்ஆழி ஒன்றுஏந்திய
கூற்றினை* குரு மாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினை புனலை சென்று நாடி* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை* சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை* திருமங்கை மணாளனை* தேவனை திகழும் பவளத்துஒளி
ஒப்பனை* உலகுஏழினை ஊழியை* ஆழிஏந்திய கையனை அந்தணர்
கற்பினை* கழுநீர் மலரும் வயல்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
திருத்தனை திசை நான்முகன் தந்தையை* தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை* விளங்கும் சுடர்ச் சோதியை* விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை* அரியை பரிகீறிய அப்பனை* அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற
கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்* கன்று வீசிய ஈசனை* பேய்மகள்-
துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை* தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை* பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை* மாலை மாமதியை மறையோர் தங்கள்-
கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று* கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை* வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்* மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
கண்ண!* நின் தனக்கும் குறிப்புஆகில்- கற்கலாம்* கவியின் பொருள் தானே* (2)
வண்டுஆர்பூ மாமலர் மங்கை* மணநோக்கம்
உண்டானே* உன்னை உகந்துஉகந்து* உன்தனக்கே
தொண்டுஆனேற்கு* என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
கண்டானே* கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெருநீரும் விண்ணும்* மலையும் உலகுஏழும்*
ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வருதேவர் மற்றுஉளர் என்று* என்மனத்து இறையும்-
கருதேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்அடியார்க்கு அடிமை*
மற்றுஎல்லாம் பேசிலும்* நின்திரு எட்டுஎழுத்தும்-
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெண்ஆனாள்* பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன்நான்*
மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி* மதுமலராள்-
கண்ணாளா* கண்ணபுரத்து உறை அம்மானே!
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*
மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*
உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*
கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!
ஏத்திஉன் சேவடி* எண்ணி இருப்பாரைப்*
பார்த்திருந்து அங்கு* நமன்தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமைநீ,-
காத்திபோல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
வெள்ளைநீர் வெள்ளத்து* அணைந்த அரவுஅணைமேல்*
துள்ளுநீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே! உன்தமர்க்கு என்றும்* நமன்தமர்-
கள்ளர்போல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மாண்ஆகி* வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
பூண்ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்துஇருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும்-
காணேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டுஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-
காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே!
கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே. (2)
எங்கள் எம்இறை எம்பிரான்* இமையோர்க்கு நாயகன்,* ஏத்து அடியவர்-
தங்கள் தம்மனத்துப்* பிரியாது அருள்புரிவான்,*
பொங்கு தண்அருவி புதம்செய்ய* பொன்களே சிதற இலங்குஒளி,*
செங்கமலம் மலரும்* திருக்கோட்டியூரானே. ,
எவ்வநோய் தவிர்ப்பான்* எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,* நிலமகள்--
செவ்வி தோய வல்லான்* திருமா மகட்குஇனியான்,*
மௌவல் மாலை வண்டுஆடும்* மல்லிகை மாலையொடும் அணைந்த,* மாருதம்-
தெய்வம் நாறவரும்* திருக்கோட்டியூரானே.
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே.
ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்* ஈசற்கு இசைந்து,* உடம்பில் ஓர்-
கூறுதான் கொடுத்தான்* குலமாமகட்கு இனியான்,*
நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி* இன்இள வண்டு,* நல்நறும்-
தேறல்வாய் மடுக்கும்* திருக்கோட்டியூரானே.
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகம்மீது உயர்ந்துஏறி,* வான்உயர்-
திங்கள் தான்அணவும்* திருக்கோட்டியூரானே.
காவலன் இலங்கைக்கு இறைகலங்க* சரம் செல உய்த்து,* மற்றுஅவன்-
ஏவலம் தவிர்த்தான்* என்னை ஆளுடை எம்பிரான்,*
நாவலம் புவிமன்னர் வந்து வணங்க* மால் உறைகின்றது இங்குஎன,*
தேவர் வந்துஇறைஞ்சும்* திருக்கோட்டியூரானே.
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவுஎன்று,* மாமழை-
நின்று காத்துஉகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளம்-
தென்றல் வந்துஉலவும்* திருக்கோட்டியூரானே.
பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து* அரிமாச் செகுத்து,* அடியேனை ஆள்உகந்து-
ஈங்கு என்னுள் புகுந்தான்* இமையோர்கள் தம் பெருமான்,*
தூங்கு தண்பலவின்கனி* தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
தேங்கு தண்புனல் சூழ்* திருக்கோட்டியூரானே.
கோவைஇன் தமிழ் பாடுவார்* குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
மேவும் நான்முகனில்* விளங்கு புரிநூலர்,*
மேவும் நான்மறை வாணர்* ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
தேவ தேவபிரான்* திருக்கோட்டியூரானே.
ஆலும்மா வலவன் கலிகன்றி* மங்கையர் தலைவன்* அணிபொழில்-
சேல்கள் பாய்கழனித்* திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை* நெடுமாலை இன்தமிழால் நினைந்த,* இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு* இடம்ஆகும் வான்உலகே. (2)
திருத்தாய் செம்போத்தே,!*
திருமாமகள் தன்கணவன்,*
மருத்தார் தொல்புகழ்* மாதவனை வர*
திருத்தாய் செம்போத்தே! (2)
கரையாய் காக்கைப்பிள்ளாய்,*
கருமாமுகில் போல்நிறத்தன்,*
உரைஆர் தொல்புகழ்* உத்தமனை வர*
கரையாய் காக்கைப்பிள்ளாய்!
கூவாய் பூங்குயிலே,*
குளிர்மாரி தடுத்துஉகந்த*
மாவாய் கீண்ட* மணிவண்ணனை வர,*
கூவாய் பூங்குயிலே!
கொட்டாய் பல்லிக்குட்டி,*
குடம்ஆடி உலகுஅளந்த,*
மட்டுஆர் பூங்குழல்* மாதவனை வர,*
கொட்டாய் பல்லிக்குட்டி!
சொல்லாய் பைங்கிளியே,*
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்ஆர் தோள்* வட வேங்கடவனைவர,*
சொல்லாய் பைங்கிளியே! (2)
கோழி கூஎன்னுமால்,*
தோழி! நான்என்செய்கேன்,*
ஆழி வண்ணர்* வரும்பொழுது ஆயிற்று*
கோழி கூஎன்னுமால்.
காமற்கு என்கடவேன்,*
கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*
பூமேல் ஐங்கணை* கோத்துப் புகுந்துஎய்ய,*
காமற்கு என்கடவேன்!
இங்கே போதும்கொலோ,*
இனவேல்நெடுங் கண்களிப்ப,*
கொங்குஆர் சோலைக்* குடந்தைக் கிடந்தமால்,*
இங்கே போதும்கொலோ! (2)
இன்னார் என்றுஅறியேன்,*
அன்னே! ஆழியொடும்,*
பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
இன்னார் என்றுஅறியேன். (2)
தொண்டீர் பாடுமினோ,*
சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,*
ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
தொண்டீர்! பாடுமினோ (2)