பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த* கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய் பிளந்த* புராணர் தம் இடம்*
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்* இணைத் தாமரை அடி எம் பிரான்*
கன்றி மாரி பொழிந்திட* கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்* திரு வேங்கடம் அடை நெஞ்சமே!
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்து உள்ளான்* இட வெந்தை மேவிய எம் பிரான்*
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்து உள்ளான்* இருஞ்சோலை மேவிய எம் பிரான்*
திண் கை மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றொடு*
திண் திறல் அரியாயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பாரும் நீர் எரி காற்றினோடு* ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற* பிறப்பிலி பெருகும் இடம்*
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்* சோரும் மா முகில் தோய்தர*
சேரும் வார் பொழில் சூழ்* எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!
அம்பரம் அனல் கால் நிலம் சலம்* ஆகி நின்ற அமரர்கோன்*
வம்பு உலாம் மலர்மேல்* மலி மட மங்கை தன் கொழுநன்அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம்தொறும்*
செம் புனம் அவை காவல் கொள்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்* சொலி நின்று பின்னரும்*
பேசுவார்தமை உய்ய வாங்கி* பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கு எலாம்*
தேசமாய்த் திகழும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி* வான்உலகு ஆள்வரே!
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப*
முரிதிரை மாகடல் போல்முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க*
எரிஅன கேசர வாள்எயிற்றோடு* இரணியன்ஆகம் இரண்டு கூறா*
அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)
வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறள்உருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்அளந்த*
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே.
செம்பொன்இலங்கு வலங்கைவாளி * திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்*
உம்பர்இருசுடர்ஆழியோடு* கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே*
வெம்பு சினத்து அடல் வேழம்வீழ* வெண்மருப்புஒன்று பறித்து*
இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே .
மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி* மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
அதன்மருப்புஒன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்*
வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து*
அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்ட புயகரத்தேன் என்றாரே.
கலைகளும் வேதமும் நீதிநூலும்* கற்பமும் சொல் பொருள் தானும்*
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து*
நீண்ட மலைகளும் மாமணியும்* மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்* ஏதும் அறிகிலம் ஏந்திழையார்*
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்* தம்மனஆகப் புகுந்து*
தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா* போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்*
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
முழுசிவண்டுஆடிய தண்துழாயின்* மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்* எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்*
எழுதிய தாமரை அன்னகண்ணும்* ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்*
அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க* வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி*
அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்* மற்றுஇவர் வண்ணம் எண்ணில்*
காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்* கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தே என்றாரே.
தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா* நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு*
வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி* வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு*
நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்* நான் இவர் தம்மை அறியமாட்டேன்*
அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன* அட்டபுயகரத்தேன்என்றாரே.
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்* நீள்முடி மாலை வயிரமேகன்*
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி* அட்ட புயகரத்து ஆதிதன்னை*
கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்* காமருசீர்க் கலிகன்றி*
குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை* ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2)
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!* நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
எமக்கே அருளாய் எனநின்று* இமையோர் பரவும்இடம்*
எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே* களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)
முதலைத் தனி மா முரண் தீர அன்று* முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய*
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி* வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்* பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்*
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய* அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்*
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு* அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்* அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி*
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று* திசை நான்கும் நான்கும் இரிய* செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய* கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்* ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்*
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு* இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து*
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து* தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே* குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு*
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்* பகு வாய்க் கழுதுக்கு இரங்காது* அவள்தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்* உடனே சுவைத்தான் இடம்*
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி* கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து*
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்* தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்* அடி வைத்த அம்மான் இடம்*
மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்* செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்* துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்* விளைவித்த அம்மான் இடம்*
வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று* மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்*
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த* விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்*
படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று* இமையோர் பரவும் இடம்*
பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப* தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்* மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்* விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)
கவள யானைக் கொம்புஒசித்த* கண்ணன் என்றும் காமருசீர்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ-தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அண்டர் கோன் என் ஆனை என்றும்* ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும்* நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி*
பண்டுபோல் அன்று என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம்முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும் மா மதியை*
நெருக்கும் மாடம் நீடு நாங்கை* நின்மலன்தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்*
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
நாடி என்தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்* நான்மறைகள்-
தேடி என்றும் காண மாட்டாச்* செல்வன் என்றும்*
சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்* தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பலரும் ஏச என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென்மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே.(2)
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை* உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்* செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
கோது இல் வாய்மையினாயொடும் உடனே* உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* எனக்கும
ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்* எண்ணிய பேர் அருள்* எனக்கும்-
அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்* உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்* கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய* குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்* எந்தை! நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்* கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து* உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்* தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்* ஒன்னலர்தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி* அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை* எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே.
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* மாவலி மண்
தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே. (2)
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* மூழ்த்த நாள்
அந்நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய* திருமாலை எம்மானை*
நல்நீர் சூழ்* நறையூரில் கண்டேனே.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே.
கல் ஆர் மதிள் சூழ்* கதி இலங்கைக் கார் அரக்கன்*
வல் ஆகம் கீள* வரி வெம் சரம் துரந்த
வில்லானை* செல்வ விபீடணற்கு வேறாக*
நல்லானை நாடி* நறையூரில் கண்டேனே .
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே.
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை* மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்* வண் துவரை
நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே.
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்* மற மன்னர்*
பண்ணின்மேல் வந்த* படை எல்லாம் பாரதத்து*
விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை*
நண்ணி நான் நாடி* நறையூரில் கண்டேனே.
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (2)
மன்னும் மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன்உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே. (2)
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்* திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த*
வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்* வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து- வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* (2)
முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண* முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்* பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்*
செந்நெல் மலிகதிர் கவரி வீச* சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி*
அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு* கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*
நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன* நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு* வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்* திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி*
இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி* எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*
புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க* பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல*
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி* திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு*
மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி- மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*
இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை* ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்*
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி* மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி*
தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்* தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி* செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்*
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி* பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்*
அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ* அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்* திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து*
வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*
செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்* திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்* ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற*
நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி* நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*
சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி* திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்*
ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்* பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்* கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்* ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலிஉருவின்-
மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன்ஆயன்* அவனை அம்மா விளைவயலுள்*
கான்ஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. (2)
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக* அங்கு ஓர் வரைநட்டு*
இலங்கு சோதிஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*
விலங்கல் திரியத் தடங்கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை*
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
பாரஆர் அளவும் முதுமுந்நீர்* பரந்த காலம்,* வளைமருப்பின்-
ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்* எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர்ஆர் ஆரல்இரை கருதி* குருகு பாய கயல் இரியும்*
கார்ஆர் புறவன் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண்வெதும்ப* வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*
பிளந்து வளைந்த உகிரானை* பெருந்தண் செந்நெல் குலைதடிந்து*
களம்செய் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே*
தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன்கொண்ட* மூவா உருவின் அம்மானை*
உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வடிவாய் மழுவே படைஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படிஆர் அரசு களைகட்ட* பாழி யானை அம்மானை*
குடியா வண்டு கொண்டுஉண்ண8 கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடிஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வையம் எல்லாம் உடன்வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*
செய்த வெம்போர் நம்பரனை* செழுந்தண் கானல் மணம்நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்ற தான்தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்* விண்பால் செல்ல வெம்சமத்துச்*
செற்ற கொற்றத் தொழிலானை* செந்தீ மூன்றும் இல்இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
துவரிக் கனிவாய் நிலமங்கை* துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள்நாள் பிறந்த அம்மானை*
உவரி ஓதம் முத்துஉந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்* முன்னும் இராமன்ஆய்
தான்ஆய்* பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்* கற்கியும்
ஆனான் தன்னைக்* கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*
தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை* செப்ப பாவம் நில்லாவே. (2)
முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்* கலவியை விடுதடு மாறல்,*
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய* எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்* தழுவி வந்து அருவிகள் நிரந்து,*
வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! (2)
இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி* எழுமினோ தொழுதும்என்று,* இமையோர்-
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற* சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்* விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த* பெருநிலம் அருளின் முன்அருளி,*
அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்* அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்* குறவர்தம் கவணிடைத் துரந்த,*
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து* சுடுசரம் அடுசிலைத் துரந்து,*
நீர்மை இலாத தாடகை மாள* நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்* கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய* மணிமுடி ஒருபதும் புரள,*
அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட* அமர்செய்த அடிகள்தம் கோயில்,*
பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப* பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று* விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த* கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற* தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
தேனுகன் ஆவி போய்உக* அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,*
தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
வானகச் சோலை மரகதச் சாயல்* மாமணிக் கல்அதர் நுழைந்து,*
மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ* பொருகடல் அரவணைத் துயின்று,*
பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த* பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்* கவுள்வழி களிவண்டு பருக,*
மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்* ஒத்தன பேசவும் உவந்திட்டு,*
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்* தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்* சூழ் வயல்ஆலி நல்நாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்* ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)
காதில் கடிப்புஇட்டு* கலிங்கம் உடுத்து,*
தாதுநல்ல* தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
போது மறுத்து* புறமே வந்து நின்றீர்,*
ஏதுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ! (2)
துவர்ஆடை உடுத்து* ஒருசெண்டு சிலுப்பி,*
கவர்ஆக முடித்து* கலிக்கச்சுக் கட்டி,*
சுவர்ஆர் கதவின் புறமே* வந்து நின்றீர்,*
இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!
கருளக் கொடி ஒன்றுஉடையீர்!* தனிப்பாகீர்,*
உருளச் சகடம் அது* உறுக்கி நிமிர்த்தீர்,*
மருளைக் கொடுபாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
இருளத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
நாமம் பலவும் உடை* நாரண நம்பீ,*
தாமத் துளவம்* மிக நாறிடுகின்றீர்,*
காமன்எனப்பாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
ஏமத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
சுற்றும் குழல்தாழ* சுரிகை அணைத்து,*
மற்று பல* மாமணி பொன்கொடுஅணிந்து,*
முற்றம் புகுந்து* முறுவல்செய்து நின்றீர்,*
எற்றுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆன்ஆயரும்* ஆநிரையும் அங்குஒழிய,*
கூன்ஆயதுஓர்* கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
ஏனோர்கள் முன்என்?* இதுஎன்? இதுஎன்னோ!
மல்லே பொருத திரள்தோள்* மணவாளீர்,*
அல்லே அறிந்தோம்* நும் மனத்தின் கருத்தை,*
சொல்லாது ஒழியீர்* சொன்ன போதினால் வாரீர்*
எல்லே இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
புக்குஆடுஅரவம்* பிடித்துஆட்டும் புனிதீர்,*
இக்காலங்கள்* யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*
தக்கார் பலர்* தேவிமார் சாலஉடையீர்,*
எக்கே! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆடி அசைந்து* ஆய்மடவாரொடு நீபோய்க்*
கூடிக் குரவை* பிணை கோமளப் பிள்ளாய்,*
தேடி திருமாமகள்* மண்மகள் நிற்ப,*
ஏடி! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
அல்லிக் கமலக் கண்ணனை* அங்கு ஓர்ஆய்ச்சி*
எல்லிப் பொழுதுஊடிய* ஊடல் திறத்தைக்,*
கல்லின் மலிதோள்* கலியன் சொன்ன மாலை,*
சொல்லித் துதிப்பார் அவர்* துக்கம் இலரே. (2)
மாற்றம்உள* ஆகிலும் சொல்லுவன்,* மக்கள்-
தோற்றக் குழி* தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்* அஞ்சுகின்றேன்,*
நாற்றம் சுவை* ஊறு ஒலிஆகிய நம்பீ! (2)
சீற்றம்உள* ஆகிலும் செப்புவன்,* மக்கள்-
தோற்றக்குழி* தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*
காற்றத்து இடைப்பட்ட* கலவர் மனம்போல்,*
ஆற்றத்துளங்கா நிற்பன்* ஆழிவலவா!
தூங்குஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
வாங்காய்என்று சிந்தித்து* நான்அதற்கு அஞ்சி,*
பாம்போடு ஒருகூரையிலே* பயின்றால்போல்,*
தாங்காது உள்ளம் தள்ளும்* என் தமரைக்கண்ணா!
உருஆர் பிறவிக்கண்* இன்னம் புகப்பெய்து,*
திரிவாய்என்று சிந்தித்தி* என்றுஅதற்கு அஞ்சி,*
இருபாடு எரிகொள்ளியின்* உள் எறும்பே போல்,*
உருகாநிற்கும்* என்உள்ளம் ஊழி முதல்வா!
கொள்ளக் குறையாத* இடும்பைக் குழியில்,*
தள்ளிப் புகப்பெய்தி கொல்* என்றுஅதற்கு அஞ்சி,*
வெள்ளத்து இடைப்பட்ட* நரிஇனம் போலே,*
உள்ளம் துளங்கா நிற்பன்* ஊழி முதல்வா!
படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.
வேம்பின்புழு* வேம்புஅன்றி உண்ணாது,* அடியேன்-
நான்பின்னும்* உன்சேவடிஅன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ! (2)
அணிஆர் பொழில்சூழ்* அரங்க நகர்அப்பா,*
துணியேன் இனி* நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!* மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,* பரஞ்சோதீ! (2)
நந்தா நரகத்து அழுந்தா வகை,* நாளும்-
எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு* இன்அருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!* தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு* அருளாய் உன்அருளே (2)
குன்றம் எடுத்து* ஆநிரை காத்தவன் தன்னை,*
மன்றில் புகழ்* மங்கை மன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* வல்லவர்-தம்மேல்,*
என்றும் வினைஆயின* சாரகில்லாவே, (2)