பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேய் ஏய் பூம் பொழில் சூழ்* விரை ஆர் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
மான் ஏய் கண் மடவார்* மயக்கில் பட்டு மா நிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேன் ஏய் பூம் பொழில் சூழ்* திருவேங்கட மா மலை*
என் ஆனாய் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இலாமையினால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிது ஆக உரைத்து அறியேன்*
குன்று ஏய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறி ஆர் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பு ஆர் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை*
என் அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
மண் ஆய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்*
புண் ஆர் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்*
விண் ஆர் நீள் சிகர* விரைஆர் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம் பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன்-எம் பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
பற்றேல் ஒன்றும் இலேன்* பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!
அற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய* எம் கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்*
பண் ஆர் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2)
சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்*
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
பல்லவன் வில்லவன் என்று உலகில்* பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
மல்லையர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)
கார் மன்னு நீள் விசும்பும்* கடலும் சுடரும் நிலனும் மலையும்*
தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்* தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேர் மன்னு தென்னவனை முனையில்* செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,*
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்* ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்*
வரம் தரு மா மணிவண்ணன் இடம்* மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்* நெடு வாயில் உக செருவில் முன நாள்*
பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
அண்டமும் எண் திசையும் நிலனும்* அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
எந்தை பிரானது இடம்* ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விண்டவர் இண்டைக் குழாமுடனே* விரைந்தார் இரிய செருவில் முனிந்து*
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்* துயர் தீர்த்து அரவம் வெருவ*
முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்* திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற*
பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம்அதுவே.
திண் படைக் கோளரியின் உரு ஆய்* திறலோன் அகலம் செருவில் முன நாள்*
புண் படப் போழ்ந்த பிரானது இடம்* பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப* விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த*
பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்* மாண் உரு ஆய் முன நாள்*
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
உலகு உடை மன்னவன் தென்னவனைக்* கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ,
பல படை சாய வென்றான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
குடைத் திறல் மன்னவன் ஆய்* ஒருகால் குரங்கைப் படையா*
மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்* அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்* வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த*
படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து* முன்னே ஒருகால் செருவில் உருமின்*
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
கறை உடை வாள் மற மன்னர் கெட* கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்*
பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகர்மேல்*
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த*
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்* திரு மா மகள் தன் அருளால்*
உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்* செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)
சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு* தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி* செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)
திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க* தேவரொடு தானவர்கள் திசைப்ப*
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்* ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்* அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்* முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*
எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி* இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய*
வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்* காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி*
தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்* செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்*
மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா* இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர*
தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,
செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை* செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்*
மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்* பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு*
திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்* தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்* உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்* பெரிய
வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து* வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை* உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*
இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்* ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்*
வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த* அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்*
கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்* குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி* மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப*
மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு* மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி*
எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்* ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப* சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து*
மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்* தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்*
வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய* வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன*
சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்* தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)
நும்மைத் தொழுதோம்* நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆவா! என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!* மருவினிய
மைந்தா* அம் தண் ஆலி மாலே!* சோலை மழ களிறே!*
நந்தா விளக்கின் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ* என்
எந்தாய்! இந்தளூராய்!* அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்
பேசுகின்றது இதுவே* வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்*
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்*
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே!
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு
தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர்! இந்தளூரீர்!* வாழ்ந்தே போம் நீரே!
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும்*
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்* அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்* இந்தளூரீரே!
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே!
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா*
வீட்டீர் இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும்தம் அடிக்கள் காட்டில்* உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலைநின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே!
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே.
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானைக்*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன்தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவுஅணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே. (2)
வங்கம் ஆர் கடல்கள் ஏழும்* மலையும் வானகமும் மற்றும்*
அம் கண் மா ஞாலம் எல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
திங்கள் மா முகில் அணவு* செறி பொழில் தென் திருப்பேர்*
எங்கள் மால் இறைவன் நாமம்* ஏத்தி நான் உய்ந்த ஆறே.
ஒருவனை உந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகம்தன்னால்*
ஒருவனைச் சாபம் நீக்கி* உம்பர் ஆள் என்று விட்டான்*
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த* பெரு நகர் அரவு அணைமேல்*
கரு வரை வண்ணன்தன் பேர்* கருதி நான் உய்ந்த ஆறே.
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.
வக்கரன் வாய் முன் கீண்ட* மாயனே என்று வானோர்
புக்கு* அரண் தந்தருளாய் என்ன* பொன் ஆகத்தானை*
நக்கு அரி உருவம் ஆகி* நகம் கிளர்ந்து இடந்து உகந்த*
சக்கரச் செல்வன் தென்பேர்த்* தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.
விலங்கலால் கடல் அடைத்து* விளங்கிழை பொருட்டு* வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன்* இருபது புயம் துணித்தான்*
நலம் கொள் நான்மறை வல்லார்கள்* ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு*
மலங்கு பாய் வயல் திருப்பேர்* மருவி நான் வாழ்ந்த ஆறே.
வெண்ணெய் தான் அமுதுசெய்ய* வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி*
கண்ணி ஆர் குறுங் கயிற்றால்* கட்ட வெட்டொன்று இருந்தான்*
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* வேலை
வண்ணனார் நாமம் நாளும்* வாய் மொழிந்து உய்ந்த ஆறே.
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*
கொம்பு அனார் பின்னை கோலம்* கூடுதற்கு ஏறு கொன்றான்*
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* மேவும்-
எம்பிரான் நாமம் நாளும்* ஏத்தி நான் உய்ந்த ஆறே.
நால் வகை வேதம் ஐந்து வேள்வி* ஆறு அங்கம் வல்லார்*
மேலை வானவரின் மிக்க* வேதியர் ஆதி காலம்*
சேல் உகள் வயல் திருப்பேர்ச்* செங் கண் மாலோடும் வாழ்வார்*
சீல மா தவத்தர் சிந்தை ஆளி* என் சிந்தையானே.
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவுஅணையில் பள்ளி-
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கைத்*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே. (2)
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது* மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணைஅடியே அடை நெஞ்சே!
கழி ஆரும் கன சங்கம்* கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*
பழி ஆரும் விறல் அரக்கன்* பரு முடிகள்அவை சிதற*
அழல் ஆரும் சரம் துரந்தான்* அடிஇணையே அடை நெஞ்சே!
சுளை கொண்ட பலங்கனிகள்* தேன் பாய* கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித்* திகழ் சோலைத் திருநறையூர்*
வளை கொண்ட வண்ணத்தன்* பின் தோன்றல்* மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன்* அடிஇணையே அடை நெஞ்சே!
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே!
அகில் குறடும் சந்தனமும்* அம் பொன்னும் அணி முத்தும்*
மிகக் கொணர்ந்து திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
பகல் கரந்த சுடர் ஆழிப்* படையான் இவ் உலகு ஏழும்*
புகக் கரந்த திரு வயிற்றன்* பொன்அடியே அடை நெஞ்சே !
பொன் முத்தும் அரி உகிரும்* புழைக் கை மா கரிக் கோடும்*
மின்னத் தண் திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
மின் ஒத்த நுண் மருங்குல்* மெல்இயலைத்* திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான்* மலர் அடியே அடை நெஞ்சே!
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்* செங் கமலத்து இடை இடையில்*
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்* பயன் விளைக்கும் திருநறையூர்*
கார் தழைத்த திரு உருவன்* கண்ணபிரான் விண்ணவர்கோன்*
தார் தழைத்த துழாய் முடியன்* தளிர் அடியே அடை நெஞ்சே!
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான்* தன் நீள் கழலே அடை நெஞ்சே!
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணைஅடியே அடை நெஞ்சே!
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல்இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே.
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிகழல் தொழுவீர்*
வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய கரை எங்கும்-
தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உள்ளும்* எனது உள்ளத்துளும்* உறைவாரை உள்ளீரே* (2)
தெருவில் திரிசிறு நோன்பியர்* செஞ்சோற்றொடு கஞ்சி-
மருவிப்* பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்துஅடைவீர்*
திருவில் பொலிமறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள்அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே
பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்* பணியும் சிறு தொண்டீர்!*
அறையும் புனல் ஒருபால்* வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
சிறைவண்டுஇனம் அறையும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உறையும் இறைஅடிஅல்லது* ஒன்று இறையும் அறியேனே*
வான்ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான்ஆகிய தலைவன் அவன்* அமரர்க்குஅதிபதிஆம்*
தேன்ஆர்பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன்ஆயனது* அடிஅல்லது* ஒன்று அறியேன் அடியேனே*
நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-
எந்தாய்! என* இமையோர் தொழுதுஏத்தும் இடம்* எறிநீர்ச்-
செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம்தாமரை அடியாய்!* உனதுஅடியேற்கு அருள் புரியே*
முழுநீலமும் மலர்ஆம்பலும்* அரவிந்தமும் விரவிக்*
கழுநீரொடு மடவார்அவர்* கண்வாய் முகம் மலரும்*
செழுநீர்வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழும்நீர் மைஅதுஉடையார்* அடி தொழுவார் துயர்இலரே*
சேய்ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-
மாயா* எனக்குஉரையாய் இது* மறை நான்கின்உளாயோ?*
தீஓம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ?* உனதுஅடியார் மனத்தாயோ?* அறியேனே* (2)
மைஆர் வரிநீல* மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உனகழலே* தொழுது எழுவேன்* கிளிமடவார்-
செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐவாய் அரவுஅணைமேல்* உறை அமலா! அருளாயே*
கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*
பெருமால் வரை உருவா!* பிறஉருவா! நினதுஉருவா!*
திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அருமா கடல்அமுதே!* உனது அடியே சரண்ஆமே* (2)
சீர்ஆர் நெடுமறுகின்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர்ஆர்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*
கார்ஆர் வயல் மங்கைக்குஇறை* கலியன்ஒலி மாலை*
பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே* (2)
கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*
மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*
எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-
அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. (2)
தருமான மழைமுகிலை* பிரியாது தன்அடைந்தார்*
வரும்மானம் தவிர்க்கும்* மணியை அணிஉருவின்*
திருமாலை அம்மானை* அமுதத்தை கடல்கிடந்த-
பெருமானை* அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே.
விடைஏழ் அன்றுஅடர்த்து* வெகுண்டு விலங்கல்உறப்*
படையால்ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்* கண்ணபுரம்ஒன்று-
உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
வந்தாய் என்மனத்தே* வந்துநீ புகுந்தபின்னை,*
எந்தாய்! போய்அறியாய்* இதுவே அமையாதோ*
கொந்துஆர் பைம்பொழில்சூழ்* குடந்தைக் கிடந்துஉகந்த-
மைந்தா,* உன்னைஎன்றும்* மறவாமை பெற்றேனே.
எஞ்சா வெம்நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல்என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே! நீநினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சுஆர் மாளிகைசூழ்* வயல்ஆலி மைந்தனையே.
பெற்றார் பெற்றுஒழிந்தார்* பின்னும்நின்று அடியேனுக்கு*
உற்றான்ஆய் வளர்த்து* என்உயிர்ஆகி நின்றானை*
முற்றா மாமதிகோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான்மறக்கேன்* இதுசொல்என் ஏழைநெஞ்சே!
கற்றார் பற்றுஅறுக்கும்* பிறவிப் பெருங்கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்தபின்னை*
வற்றா நீர்வயல்சூழ்* வயல்ஆலி அம்மானைப்-
பெற்றேன்* பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*
இருநீர்இன் தமிழ்* இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்*
வரும்நீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே. (2)
மூவரில் முன்முதல்வன்* முழங்குஆர் கடலுள்கிடந்து,*
பூவளர்உந்தி தன்னுள்* புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனை* கொடிஏர்இடை கூடும்கொலோ! (2)
புனைவளர் பூம்பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணும்கொலோ?* கயல் கண்ணி எம்காரிகையே! (2)
உண்டு உலகுஏழினையும்* ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
கண்துயில் கொண்டுஉகந்த* கருமாணிக்க மாமலையை,*
திண்திறல் மாகரிசேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
அண்டரதம் கோவினை இன்று* அணுகும் கொல்? என்ஆய்இழையே!
சிங்கம்அதுஆய் அவுணன்* திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
பங்கய மாமலர்க் கண்* பரனை எம் பரம்சுடரை,*
திங்கள்நல் மாமுகில் சேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நங்கள் பிரானை இன்று* நணுகும்கொல் என்நல்நுதலே!
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறள்ஆய் நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேன்அமர் பூம்பொழில் சூழ்* திரமாலிருஞ் சோலைநின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ!
நேசம்இலாதவர்க்கும்* நினையாதவர்க்கும் அரியான்,*
வாசமலர்ப் பொழில்சூழ்* வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசம்எல்லாம் வணங்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்* கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ! (2)
புள்ளினை வாய்பிளந்து* பொருமா கரி கொம்புஒசித்து,*
கள்ளச் சகடுஉதைத்த* கருமாணிக்க ம மலையை,*
தெள்அருவி கொழிக்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வள்ளலை வாள்நுதலாள்* வணங்கித் தொழவல்லள் கொலோ!
பார்த்தனுக்கு அன்றுஅருளி* பாரதத்து ஒருதேர்முன்நின்று,*
காத்தவன் தன்னை* விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
தீர்த்தனை பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
மூர்த்தியைக் கைதொழவும்* முடியும்கொல்? என்மொய்குழற்கே!
வலம்புரி ஆழியனை* வரைஆர் திரள்தோளன் தன்னை,*
புலம்புரி நூலவனை* பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்புஇயல் ஆறுஉடைய* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலம்திகழ் நாரணனை* நணுகும்கொல்? என்நல்நுதலே! (2)
தேடற்கு அரியவனை* திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை* அணிஆய்இழை காணும்என்று,*
மாடக் கொடிமதிள் சூழ்* மங்கையார் கலிகன்றிசொன்ன,*
பாடல் பனுவல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே! (2)
புள்உருஆகி நள்இருள் வந்த* பூதனை மாள,* இலங்கை-
ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த* ஊக்கம் அதனை நினைந்தோ,?*
கள்அவிழ் கோதை காதலும்* எங்கள் காரிகை மாதர் கருத்தும்,*
பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்* பேசுவது எந்தை பிரானே! (2)
மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி* மால்விடை ஏழும் அடர்த்து,* ஆயர்-
அன்று நடுங்க ஆநிரை காத்த* ஆண்மை கொலோ அறியேன் நான்,*
நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!* நீஇவள் தன்னை நின் கோயில்,*
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா* முன் கைவளை கவர்ந்தாயே.
ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி* ஆற்றலை ஆற்றல் மிகுத்து,*
கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்* கடந்தநின் கடுந்திறல் தானோ,*
நேர்இழை மாதை நித்திலத் தொத்தை* நெடுங் கடல் அமுதுஅனை யாளை,*
ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்* இவள்எனக் கருதுகின்றாயே.
மல்கிய தோளும் மான்உரி அதளும்* உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த* கரதலத்து அமைதியின் கருத்தோ?*
அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்* தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே.
செருஅழியாத மன்னர்கள் மாள* தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
அருவழி வானம் அதர்படக் கண்ட* ஆண்மைகொலோ? அறியேன் நான்,*
திருமொழி எங்கள் தேமலர்க் கோதை* சீர்மையை நினைந்திலை அந்தோ,*
பெருவழி நாவல் கனியினும் எளியள்* இவள்எனப் பேசுகின்றாயே
அரக்கியர் ஆகம் புல்என வில்லால்* அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற* சேவகமோ? செய்ததுஇன்று*
முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்* கொண்டு முன்னே நின்று போகாய்,*
எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்* என்செய்வது? எந்தை பிரானே!
ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச* அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ* படைமழுப் பற்றிய வலியோ?*
மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!* குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!
பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற* வள்உகிரால் பிளந்து,* அன்று-
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த* பெருமைகொலோ செய்தது இன்று,*
பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை* பெருமையை நினைந்திலை பேசில்,*
கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்* இவள்எனக் கருதுகின்றாயே
நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்* நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று* அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*
பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை* பாவையைப் பாவம் செய்தேனுக்கு,*
ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக* நின் மனத்து வைத்தாயே
வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி* மெய்ம்மையே நின்று எம்பெருமானை,*
வாள்திறல் தானை மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்* பழமொழியால் பணிந்து உரைத்த,*
பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்* சித்தமும் திருவொடு மிகுமே (2)
இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
எவையும் எவரும் தன்னுளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ண பிரான் என் அமுதம்,*
சுவையன் திருவின் மணாளன்* என்னுடைச் சூழல் உளானே.
சூழல் பலபல வல்லான்* தொல்லை அம் காலத்து உலகைக்*
கேழல் ஒன்று ஆகி இடந்த* கேசவன் என்னுடை அம்மான்,*
வேழ மருப்பை ஒசித்தான்* விண்ணவர்க்கு எண்ணல் அரியான்*
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்* அவன் என் அருகவிலானே.
அருகல் இலாய பெரும் சீர்* அமரர்கள் ஆதி முதல்வன்,*
கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக் கண்ணன்,*
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்* பூமகளார் தனிக் கேள்வன்,*
ஒருகதியின் சுவை தந்திட்டு* ஒழிவு இலன் என்னோடு உடனே
நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக்கு எல்லாம்,*
ஆவியும் ஆக்கையும் தானே* அழிப்போடு அளிப்பவன் தானே,*
பூ இயல் நால் தடம் தோளன்* பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,*
காவி நன் மேனிக் கமலக்* கண்ணன் என் கண்ணின் உளானே.
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்* காண்பன் அவன் கண்களாலே,*
அமலங்கள் ஆக விழிக்கும்* ஐம்புலனும் அவன் மூர்த்தி,*
கமலத்து அயன் நம்பி தன்னைக்* கண்ணுதலானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தொடு உலகம்* ஆக்கி என் நெற்றி உளானே.
நெற்றியுள் நின்று என்னை ஆளும்* நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,*
கற்றைத் துழாய் முடிக் கோலக்* கண்ண பிரானைத் தொழுவார்,*
ஒற்றைப் பிறை அணிந்தானும்* நான்முகனும் இந்திரனும்,*
மற்றை அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுளானே.
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ண பிரானுக்கு,*
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
இச் சொன்ன ஆயிரத்துள்ளே* இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள் கழல் சென்னி பொருமே.