பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
நாவலம் பெரிய தீவினில் வாழும்* நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்*
தூ வலம்புரி உடைய திருமால்* தூய வாயிற் குழல்-ஓசை வழியே*
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப* உடல் உள் அவிழ்ந்து* எங்கும்-
காவலும் கடந்து கயிறுமாலை* ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)
இட அணரை இடத் தோளொடு சாய்த்து* இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்*
குடவயிறு பட வாய் கடைகூடக்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
மட மயில்களொடு மான்பிணை போலே* மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ*
உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி* ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*
வான் இளவரசு வைகுந்தக் குட்டன்* வாசுதேவன் மதுரைமன்னன்* நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி* மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்*
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்* சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்* தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்*
கானகம் படி உலாவி உலாவிக்* கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது*
மேனகையொடு திலோத்தமை அரம்பை* உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி*
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி* ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a
முன் நரசிங்கமது ஆகி* அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்-
மன்னர் அஞ்சும்* மதுசூதனன் வாயிற்* குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்பு உடைய தும்புருவோடு* நாரதனும் தம் தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம் தம்* கின்னரம் தொடுகிலோம் என்றனரே*
செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்* தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்*
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்* கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்* அமுத கீத வலையால் சுருக்குண்டு*
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி* நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*
புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்* பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத* அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப*
அவியுணா மறந்து வானவர் எல்லாம்* ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்*
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து* கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்* செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக*
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்* கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
பறவையின் கணங்கள் கூடு துறந்து* வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்*
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்* கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.*
திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்* செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே*
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்* ஊதுகின்ற குழல்-ஓசை வழியே*
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து* மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர*
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா* எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*
கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து* கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை*
அருங்கல உருவின் ஆயர் பெருமான்* அவனொருவன் குழல் ஊதின போது*
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்* மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்*
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி* அவை செய்யும் குணமே.*
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்* கோவிந்தனுடைய கோமள வாயிற்*
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்* கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்*
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்* விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்*
குழலை வென்ற குளிர் வாயினராகிச்* சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)
தூவிரிய மலர் உழக்கி* துணையோடும் பிரியாதே*
பூவிரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே!*
தீவிரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏவரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே. (2)
பிணிஅவிழு நறுநீல* மலர் கிழிய பெடையோடும்*
அணிமலர்மேல் மதுநுகரும்* அறுகால சிறு வண்டே!*
மணிகழுநீர் மருங்குஅலரும்* வயல் ஆலி மணவாளன்*
பணிஅறியேன் நீ சென்று* என் பயலை நோய் உரையாயே.
நீர்வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்*
தன்தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர்ஆரும் வளர்பொழில்சூழ்* திருவாலி வயல்வாழும்*
கூர்வாய சிறுகுருகே!* குறிப்புஅறிந்து கூறாயே.
தானாக நினையானேல்* தன் நினைந்து நைவேற்கு*
ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்* வலி செய்ய மெலிவேனோ?*
தேன் வாய வரி வண்டே!* திருவாலி நகர் ஆளும்*
ஆன்ஆயற்கு என் உறு நோய்* அறிய சென்று உரையாயே.
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு*
ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!* வரை எடுத்த தோளாளா*
என்தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே!
தார் ஆய தன் துளவம்* வண்டு உழுதவரை மார்பன்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த* புள் பாகன் என் அம்மான்*
தேர் ஆரும் நெடு வீதித்* திருவாலி நகர் ஆளும்*
கார் ஆயன் என்னுடைய* கன வளையும் கவர்வானோ!
கொண்டு அரவத் திரை உலவு* குரை கடல்மேல் குலவரைபோல்*
பண்டு அரவின் அணைக் கிடந்து* பார் அளந்த பண்பாளா!*
வண்டு அமரும் வளர் பொழில் சூழ்* வயல் ஆலி மைந்தா!*
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு* என் கன வளையும் கடவேனோ!?
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண்_இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ!*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு*
இது நடுவே வயல் ஆலி மணவாளா!* கொள்வாயோ மணி நிறமே!
நிலை ஆளா நின் வணங்க* வேண்டாயே ஆகிலும் என்*
முலை ஆள ஒருநாள்* உன் அகலத்தால் ஆளாயே*
சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!* திருமெய்யமலையாளா*
நீஆள வளை ஆள மாட்டோமே.
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே. (2)
செய்ய தாமரைக் கண்ணன் ஆய்* உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்* வெளிப் பட்டு இவை படைத்தான்* பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)
மூவர் ஆகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவம் உள்ளன நீக்குவானை* தடங் கடல் கிடந்தான் தன்னை,*
தேவ தேவனை தென் இலங்கை* எரி எழச் செற்ற வில்லியை,*
பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்* பரவுமினோ.
பரவி வானவர் ஏத்த நின்ற* பரமனை பரஞ்சோதியை,*
குரவை கோத்த குழகனை* மணி வண்ணனை குடக் கூத்தனை,*
அரவம் ஏறி அலை கடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன் பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.
வைம்மின் நும் மனத்து என்று* யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை ஆளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிந்தித்து ஏத்தித் திரிவரே.
திரியும் காற்றோடு அகல் விசும்பு* திணிந்த மண் கிடந்த கடல்,*
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணோர் இறை,*
சுரியும் பல் கருங் குஞ்சி* எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே.
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்* புகநின்ற செங்கண்மால்,*
நாற்றம் தோற்றம் சுவை ஒலி* உறல் ஆகி நின்ற,* எம் வானவர்
ஏற்றையே அன்றி* மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
எழுமைக்கும் எனது ஆவிக்கு* இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணிவண்ணனை குடக் கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னல் கனியினை,*
தொழுமின் தூய மனத்தர் ஆய்* இறையும் நில்லா துயரங்களே.
துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்* அவை அல்லன் ஆய்,*
உயர நின்றது ஓர் சோதி ஆய்* உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*
அயர வாங்கும் நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,*
தயரதற்கு மகன் தன்னை அன்றி* மற்று இலேன் தஞ்சமாகவே.
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு* தானும் ஆய் அவை அல்லன் ஆய்,*
எஞ்சல் இல் அமரர் குலமுதல்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!* அவன் இவன் என்று கூழேன்மின்,*
நெஞ்சினால் நினைப்பான் எவன்* அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.
கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்*
படஅரவின் அணைக்கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?
கண்கள் காண்டற்கு அரியன் ஆய்* கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)