பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
சீலைக் குதம்பை ஒருகாது* ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ*
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்* குளிர் முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற* கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்*
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்* நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை (2)
கன்னி நன் மா மதில் சூழ்தரு* பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்*
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என்குட்டனே முத்தம் தா*
காடுகள் ஊடு போய்க்* கன்றுகள் மேய்த்து மறியோடிக்* கார்க்கோடற்பூச்-
சூடி வருகின்ற தாமோதரா!* கற்றுத் தூளி காண் உன் உடம்பு*
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!* நீராட்டு அமைத்து வைத்தேன்*
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்* உன்னோடு உடனே உண்பான்*
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!* கரும் போரேறே!* நீ உகக்கும்-
குடையும் செருப்பும் குழலும்* தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன* சிறுக்குட்டச் செங் கமல*
அடியும் வெதும்பி* உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!*
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை* வாய்வைத்த போரேறே!* என்
சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!* சிறுக்குட்டச் செங்கண் மாலே!*
சிற்றாடையும் சிறுப்பத்திரமும்* இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்*
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்* கலந்து உடன் வந்தாய் போலும்*
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!* நீ பொய்கை புக்கு*
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்* நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?* ஏதும் ஓர் அச்சம் இல்லை*
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்* காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய* பாற்கடல் வண்ணா!* உன்மேல்-
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த* கள்ள அசுரர் தம்மைச்*
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே* விளங்காய் எறிந்தாய் போலும்*
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்* அங்ஙனம் ஆவர்களே*
கேட்டு அறியாதன கேட்கின்றேன்* கேசவா! கோவலர் இந்திரற்குக்*
காட்டிய சோறும் கறியும் தயிரும்* கலந்து உடன் உண்டாய் போலும்*
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு* ஒருபோதும் எனக்கு அரிது*
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!* உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*
திண் ஆர் வெண்சங்கு உடையாய்!* திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்* முன்-
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்* பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக்* கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்*
கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்* கோலம் செய்து இங்கே இரு*
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி* தன் புத்திரன் கோவிந்தனைக்*
கற்றினம் மேய்த்து வரக் கண்டு* உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*
செற்றம் இலாதவர் வாழ்தரு* தென்புது வை விட்டுசித்தன் சொல்*
கற்று இவை பாட வல்லார்* கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே. (2)
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்*
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடித்*
தே மலர் தூவ வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திரகூடத்து உள்ளானே .(2)
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே.
பொங்கி அமரில் ஒருகால்* பொன்பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*
சிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்*
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன்மருவார்*
ஊன்அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார்மேல்* சாரா தீவினை தானே. (2)
ஒழிவு இல் காலம் எல்லாம்* உடனாய் மன்னி,*
வழு இலா* அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில் கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே. (2)
எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முந்தை,* வானவர் வானவர் கோனொடும்,*
சிந்து பூ மகிழும்* திருவேங்கடத்து,*
அந்தம் இல் புகழ்க்* கார் எழில் அண்ணலே.
அண்ணல் மாயன்* அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி,* வாய்க் கருமாணிக்கம்,*
தெள் நிறை சுனை நீர்த்,* திருவேங்கடத்து,*
எண் இல் தொல் புகழ்* வானவர் ஈசனே.
ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திருவேங்கடத்தானுக்கு?,*
நீசனேன்* நிறைவு ஒன்றும் இலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரம் சுடர்ச் சோதிக்கே.
சோதி ஆகி* எல்லா உலகும் தொழும்,*
ஆதிமூர்த்தி என்றால்* அளவு ஆகுமோ?,*
வேதியர்* முழு வேதத்து அமுதத்தை,*
தீது இல் சீர்த்* திருவேங்கடத்தானையே.
வேம் கடங்கள்* மெய்மேல் வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நம என்னல்-
ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.
சுமந்து மாமலர்* நீர் சுடர் தூபம் கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*
நமன்று எழும்* திருவேங்கடம் நங்கட்குச்,*
சமன் கொள் வீடு தரும்* தடங் குன்றமே.
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்பு:பிணி,*
வீயுமாறு செய்வான்* திருவேங்கடத்து
ஆயன்,* நாள் மலர் ஆம்* அடித்தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.
வைத்த நாள் வரை* எல்லை குறுகிச் சென்று,*
எய்த்து இளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பு அணையான்* திருவேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்பூந்தடந் தாழ்வரே.
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து* இப் பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வு எய்தி* ஞாலம் புகழவே. (2)