பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்* பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர்* மருந்தும்பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி* தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* பிறங்கு இருள் நிறம் கெட* ஒருநாள்-
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற* படுதிரை விசும்பிடைப் படர*
சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்* ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்* உலகில்-
சூழி மால் யானைத் துயர் கெடுத்து* இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி* பகலவன் ஒளி கெடப்* பகலே-
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச
சேயன் ஆய்* அடியோர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே.
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்* ஆகிலும் இனி உன்னை விட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவின் அணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்* சிரீவரமங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகை அல்லேன் அங்கே*.
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து* நான்
எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே*
திங்கள் சேர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கலநகர் உறை*
சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*.
கருளப் புள் கொடி சக்கரப் படை* வான நாட! என் கார்முகில் வண்ணா*
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி* அடிமைகொண்டாய்*
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிரீவரமங்கலநகர்க்கு*
அருள்செய்து அங்கு இருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*
மாறு சேர் படை நூற்றுவர் மங்க* ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி*
நீறு செய்த எந்தாய்!* நிலம் கீண்ட அம்மானே*
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று*
கைதவங்கள் செய்யும்* கரு மேனி அம்மானே*
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்* சிரீவரமங்கலநகர்*
கைதொழ இருந்தாய்* அது நானும் கண்டேனே*.
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்* கைதொழ உறை*
வானமாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*. (2)
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட* வானவர் கொழுந்தே!* உலகுக்கு ஓர்-
முந்தைத் தாய் தந்தையே!* முழு ஏழ் உலகும் உண்டாய்!*
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
அந்தம் இல் புகழாய்!* அடியேனை அகற்றேலே*.
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை* நன்கு அறிந்தனன்*
அகற்றி என்னையும் நீ* அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்*
பகல் கதிர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கை வாணனே* என்றும்-
புகற்கு அரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளந்தானே!*
புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!* எருது ஏழ் அடர்த்த* என்-
கள்ள மாயவனே!* கருமாணிக்கச் சுடரே*
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலி தண் சிரீவரமங்கை*
யுள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*.
ஆறு எனக்கு நின் பாதமே* சரண் ஆகத் தந்தொழிந்தாய்* உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன்* எனது ஆவியும் உனதே*
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்* மலி தண் சிரீவரமங்கை*
நாறு பூந் தண் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*.
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடி இணைமிசை*
கொய் கொள் பூம் பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண் சிரீவரமங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆரா அமுதே*. (2)