பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி*  என்னை உன் பாதபங்கயம்,* 
    நண்ணிலாவகையே*  நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,* 

    எண் இலாப் பெறுமாயனே!  இமையோர்கள் ஏத்தும்*  உலகம் மூன்று உடை,* 
    அண்ணலே! அமுதே! அப்பனே!*  என்னை ஆள்வானே! (2)


    என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து*  இராப்பகல் மோதுவித்திட்டு,* 
    உன்னை நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!*  கடல் ஞாலம் காக்கின்ற* 
    மின்னு நேமியினாய்!*  வினையேனுடை வேதியனே! 


    வேதியாநிற்கும் ஐவரால்*  வினையேனை மோதுவித்து*  உன் திருவடிச் 
    சாதியாவகை*  நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*

    ஆதி ஆகி அகல் இடம் படைத்து*  உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
    சோதி நீள் முடியாய்!*  தொண்டனேன் மதுசூதனனே!     


    சூது நான் அறியாவகை*  சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி*  உன் அடிப்போது-
    நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி*  ஓர் ஆலின் நீள் இலை,* 
    மீது சேர் குழவி!*  வினையேன் வினைதீர் மருந்தே!


    தீர் மருந்து இன்றி ஐந்து நோய்*  அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,* 
    நேர் மருங்கு உடைத்தா அடைத்து*  நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,* 

    ஆர் மருந்து இனி ஆகுவார்?*  அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,* 
    வேர் மருங்கு அறுத்தாய்!*  விண்ணுளார் பெருமானே? ஓ! 


    விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்*  ஐம்புலன் இவை, 
    மண்ணுள் என்னைப் பெற்றால்*  என் செய்யா மற்று நீயும் விட்டால்?*

    பண்ணுளாய் கவி தன்னுளாய்!*  பத்தியின் உள்ளாய்! பரமீசனே,*  வந்து என்-
    கண்ணுளாய்!  நெஞ்சுளாய்!  சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.     


    ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத*  ஓர் ஐவர் வன் கயவரை,* 
    என்று யான் வெல்கிற்பன்*  உன் திருவருள் இல்லையேல்?,* 

    அன்று தேவர் அசுரர் வாங்க*  அலைகடல் அரவம் அளாவி,*  ஓர் 
    குன்றம் வைத்த எந்தாய்!*  கொடியேன் பருகு இன் அமுதே!     


    இன் அமுது எனத் தோன்றி*  ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த- 
    முன்னம் மாயம் எல்லாம்*  முழு வேர் அரிந்து*  என்னை உன்- 

    சின்னமும் திரு மூர்த்தியும்*  சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,* 
    என் அம்மா! என் கண்ணா!*  இமையோர் தம் குலமுதலே !       


    குலம் முதல் அடும் தீவினைக்*  கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை* 
    வலம் முதல் கெடுக்கும்*  வரமே தந்தருள்கண்டாய்,* 

    நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்*  நிற்பன செல்வன எனப்,*  பொருள்- 
    பல முதல் படைத்தாய்!*  என் கண்ணா! என் பரஞ்சுடரே!            


    என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி*  உன் இணைத் தாமரைகட்கு,*
    அன்பு உருகி நிற்கும்*  அது நிற்க சுமடு தந்தாய்,* 

    வன் பரங்கள் எடுத்து ஐவர்*  திசை திசை வலித்து எற்றுகின்றனர்:* 
    முன் பரவை கடைந்து*  அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!


    கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்*  குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,*  அப் 
    புண்டரீகக் கொப்பூழ்ப்*  புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்

    தொண்டர் தொண்டர் தொண்டன்*  சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    கண்டு பாட வல்லார்*  வினை போம் கங்குலும் பகலே. (2)


    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 

    எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
    செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   


    என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
    என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*

    முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
    முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?


    வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
    உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*

    கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
    திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?


    இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
    கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*   

    வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
    சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? 


    சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
    வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*

    அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
    சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!


    மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
    செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*

    வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
    பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. 


    பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
    காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*

    சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
    கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே


    கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
    அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*

    எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
    செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?


    என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
    நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*

    அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
    தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)


    முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
    கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*

    வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
    அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 


    முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
    துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*

    முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
    முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)


    வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
    புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*

    வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
    பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)


    நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,* 
    நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,* 

    தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்*  தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,* 
    வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.


    செங்கனி வாயின் திறத்ததாயும்*  செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,* 
    சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*

    திங்களும் நாளும் விழாஅறாத*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.     


    இழந்த எம்மாமைத் திறத்துப் போன*  என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,* 
    உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?*  ஓதக் கடல்ஒலி போல*  எங்கும்

    எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்*  அன்னையர்காள் என்னை என்முனிந்தே?


    முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,* 
    கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த*  கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*

    முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!*  முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,* 
    கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே*  காலம் பெறஎன்னைக் காட்டுமினே  


    காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்*  காதல் கடலின் மிகப் பெரிதால்,* 
    நீல முகில்வண்ணத்து எம்பெருமான்*  நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*

    ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த*  நான்மறையாளரும் வேள்வி ஓவா,* 
    கோலச் செந்நெற்கள் கவரி வீசும்*  கூடுபுனல் திருப்பேரெயிற்கே.  


    பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை*  செற்றபிரான் வந்து வீற்றிருந்த,* 
    பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி*  பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,* 

    ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,* 
    ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?*  என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  


    கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி*  கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக் 
    கொண்டு,*  அலர் தூற்றிற்றுஅது முதலாக்*  கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*

    மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,* 
    தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த*  தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே


    சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*  அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,* 
    நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*

    கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,* 
    ஏர்வள ஒண்கழனிப் பழன*  தென்திருப்பேரெயில் மாநகரே. 


    நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,* 
    சிகர மணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*

    மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,* 
    நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்*  என்  நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?     


    ஊழிதோறுஊழி உருவும் பேரும்  செய்கையும்*  வேறவன் வையம் காக்கும்,* 
    ஆழிநீர் வண்ணனை அச்சுதனை*  அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்*  இவை திருப்பேரெயில் மேய பத்தும்,* 
    ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்*  அவர்அடிமைத் திறத்து ஆழியாரே.  (2)


    ஆழிஎழ*  சங்கும் வில்லும்எழ,*  திசை 
    வாழிஎழ*  தண்டும் வாளும்எழ,*  அண்டம்

    மோழைஎழ*  முடி பாதம்எழ,*  அப்பன் 
    ஊழிஎழ*  உலகம் கொண்டவாறே   (2)


    ஆறு மலைக்கு*  எதிர்ந்துஓடும் ஒலி,*  அரவு 
    ஊறு சுலாய்*  மலை தேய்க்கும் ஒலி,*  கடல்

    மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,*  அப்பன் 
    சாறுபட*  அமுதம்கொண்ட நான்றே.


    நான்றிலஏழ்*  மண்ணும் தானத்தவே,*  பின்னும் 
    நான்றில ஏழ்*  மலை தானத்தவே,*  பின்னும்

    நான்றில ஏழ்*  கடல் தானத்தவே,*  அப்பன் 
    ஊன்றி இடந்து*  எயிற்றில் கொண்ட நாளே.    


    நாளும்எழ*  நிலம் நீரும்எழ*  விண்ணும் 
    கோளும்எழ*  எரி காலும்எழ,*  மலை

    தாளும்எழ*  சுடர் தானும்எழ,*  அப்பன் 
    ஊளிஎழ*  உலகம்உண்ட ஊணே     


    ஊணுடை மல்லர்*  ததர்ந்த ஒலி,*  மன்னர் 
    ஆண்உடைச் சேனை*  நடுங்கும் ஒலி,*  விண்ணுள்

    ஏண்உடைத் தேவர்*  வெளிப்பட்ட ஒலி,*  அப்பன் 
    காணுடைப் பாரதம்*  கைஅறை போழ்தே


    போழ்து மெலிந்த*  புன் செக்கரில்,*  வான்திசை 
    சூழும் எழுந்து*  உதிரப்புனலா,*  மலை

    கீழ்து பிளந்த*  சிங்கம்ஒத்ததால்,*  அப்பன் 
    ஆழ்துயர் செய்து*  அசுரரைக் கொல்லுமாறே.  


    மாறு நிரைத்து*  இரைக்கும் சரங்கள்,*  இன 
    நூறு பிணம்*  மலை போல் புரள,*  கடல்

    ஆறு மடுத்து*  உதிரப்புனலா,*  அப்பன் 
    நீறுபட*  இலங்கை செற்ற நேரே


    நேர்சரிந்தான்*  கொடிக் கோழிகொண்டான்,*  பின்னும் 
    நேர்சரிந்தான்*  எரியும் அனலோன்,*  பின்னும்

    நேர்சரிந்தான்*  முக்கண் மூர்த்திகண்டீர்,*  அப்பன் 
    நேர்சரி வாணன்*  திண்தோள் கொண்ட அன்றே 


    அன்றுமண் நீர்எரிகால்*  விண் மலைமுதல்,* 
    அன்று சுடர்*  இரண்டு பிறவும்,*  பின்னும்

    அன்று மழை*  உயிர் தேவும் மற்றும்,* அப்பன் 
    அன்று முதல்*  உலகம் செய்ததுமே


    மேய்நிரை கீழ்புக*  மாபுரள,*  சுனை 
    வாய்நிறை நீர்*  பிளிறிச்சொரிய,*  இன

    ஆநிரை பாடி*  அங்கேஒடுங்க,*  அப்பன் 
    தீமழை காத்து*  குன்றம் எடுத்தானே     


    குன்றம் எடுத்தபிரான்*  அடியாரொடும்,* 
    ஒன்றிநின்ற*  சடகோபன்உரைசெயல்,*

    நன்றி புனைந்த*  ஓர்ஆயிரத்துள் இவை* 
    வென்றி தரும்பத்தும்*  மேவிக் கற்பார்க்கே (2)


    கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 
    புல்பா முதலா*  புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*

    நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 
    நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)


    நாட்டில் பிறந்தவர்*  நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    நாட்டில் பிறந்து படாதன பட்டு*  மனிசர்க்காய்,* 

    நாட்டை நலியும் அரக்கரை*  நாடித் தடிந்திட்டு,*  
    நாட்டை அளித்துஉய்யச் செய்து*  நடந்தமை கேட்டுமே?


    கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்*  மற்றும் கேட்பரோ,* 
    கேட்பார் செவிசுடு*  கீழ்மை வசைவுகளே வையும்,*

    சேண்பால் பழம்பகைவன்*  சிசு பாலன்,*  திருவடி 
    தாள்பால் அடைந்த*  தன்மை அறிவாரை அறிந்துமே?  


    தன்மை அறிபவர்*  தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    பன்மைப் படர்பொருள்*  ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*

    நன்மைப் புனல்பண்ணி*  நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*  
    தொன்மை மயக்கிய தோற்றிய*  சூழல்கள் சிந்தித்தே?    


    சூழல்கள் சிந்திக்கில்*  மாயன் கழல்அன்றி சூழ்வரோ,* 
    ஆழப் பெரும்புனல்*  தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*

    தாழப் படாமல்*  தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,* 
    கேழல் திருஉருஆயிற்றுக்*  கேட்டும் உணர்ந்துமே?


    கேட்டும் உணர்ந்தவர்*  கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    வாட்டம்இலா வண்கை*  மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*

    ஈட்டம்கொள் தேவர்கள்*  சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,* 
    கோட்டுஅங்கை வாமனன்ஆய்*  செய்த கூத்துக்கள் கண்டுமே? 


    கண்டும் தெளிந்தும் கற்றார்*  கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,* 
    வண்டுஉண் மலர்த்தொங்கல்*  மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*

    இண்டைச் சடைமுடி*  ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,* 
    கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு*  உடன்சென்றது உணர்ந்துமே? 


    செல்ல உணர்ந்தவர்*  செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,* 
    எல்லை இலாத பெரும்தவத்தால்*  பல செய்மிறை,*

    அல்லல் அமரரைச் செய்யும்*  இரணியன் ஆகத்தை,* 
    மல்லல் அரிஉருஆய்*  செய்த மாயம் அறிந்துமே?   


    மாயம் அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க*  ஓர்ஐவர்க்குஆய்,*

    தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று*  சேனையை 
    நாசம் செய்திட்டு,*  நடந்த நல் வார்த்தை அறிந்துமே?


    வார்த்தை அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு*  இறப்புஇவை

    பேர்த்து,*  பெரும்துன்பம் வேர்அற நீக்கி*  தன் தாளின்கீழ்ச் 
    சேர்த்து,*  அவன் செய்யும்*  சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே? 


    தெளிவுற்று வீவுஇன்றி*  நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,* 
    தெளிவுற்ற கண்ணனைத்*  தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*

    தெளிவுற்ற ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்,*  அவர் 
    தெளிவுற்ற சிந்தையர்*  பாமரு மூவுலகத்துள்ளே   (2)


    பாமரு மூவுலகும் படைத்த*  பற்ப நாபாவோ,* 
    பாமரு மூவுலகும் அளந்த*  பற்ப பாதாவோ,*

    தாமரைக் கண்ணாவோ!*  தனியேன் தனிஆளாவோ,* 
    தாமரைக் கையாவோ!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே?  (2)


    என்றுகொல் சேர்வது அந்தோ*  அரன் நான்முகன் ஏத்தும்,*  செய்ய 
    நின் திருப்பாதத்தை*  யான்நிலம் நீர்எரி கால்,*  விண்உயிர்

    என்றுஇவை தாம்முதலா*  முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
    குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து*  அவை காத்த எம்கூத்தாவோ!


    காத்த எம்கூத்தாவோ!*  மலைஏந்திக் கல்மாரி தன்னை,* 
    பூத்தண் துழாய்முடியாய்!*  புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*

    வாய்த்த என் நான்முகனே!*  வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,* 
    ஏத்துஅரும் கீர்த்தியினாய்!*  உன்னை எங்குத் தலைப்பெய்வனே?


    எங்குத் தலைப்பெய்வன் நான்?*  எழில் மூவுலகும் நீயே,* 
    அங்கு உயர் முக்கண்பிரான்*  பிரம பெருமான் அவன்நீ,*

    வெங்கதிர் வச்சிரக் கை*  இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
    கொங்குஅலர் தண்அம் துழாய்முடி*  என்னுடைக் கோவலனே?   


    என்னுடைக் கோவலனே!*  என் பொல்லாக் கருமாணிக்கமே,* 
    உன்னுடை உந்தி மலர்*  உலகம் அவைமூன்றும் பரந்து,*

    உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்*  உன்னைக் கண்டுகொண்டிட்டு,* 
    என்னுடை ஆர்உயிரார்*  எங்ஙனேகொல் வந்து எய்துவரே? 


    வந்துஎய்து மாறுஅறியேன்*  மல்கு நீலச் சுடர்தழைப்ப,* 
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து*  ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*

    அந்தரமேல் செம்பட்டோடு*  அடி உந்திகை மார்புகண்வாய்,* 
    செஞ்சுடர்ச் சோதி விடஉறை*  என்திரு மார்பனையே. 


    என்திரு மார்பன் தன்னை*  என் மலைமகள் கூறன்தன்னை,* 
    என்றும் என்நாமகளை*  அகம்பால்கொண்ட நான்முகனை,*

    நின்ற சசிபதியை*  நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,* 
    வென்று புலன்துரந்த*  விசும்புஆளியை காணேனோ!


    ஆளியைக் காண்பரியாய்*  அரிகாண் நரியாய்,*  அரக்கர் 
    ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து*  பிலம்புக்குஒளிப்ப,*

    மீளியம் புள்ளைக்கடாய்*  விறல் மாலியைக் கொன்று,*  பின்னும் 
    ஆள்உயர் குன்றங்கள் செய்து*  அடர்த்தானையும் காண்டும்கொலோ?


    காண்டும்கொலோ நெஞ்சமே!*  கடிய வினையே முயலும்,* 
    ஆண்திறல் மீளிமொய்ம்பின்*  அரக்கன் குலத்தைத் தடிந்து,*

    மீண்டும் அவன் தம்பிக்கே*  விரி நீர்இலங்கைஅருளி,* 
    ஆண்டு தன் சோதிபுக்க*  அமரர் அரியேற்றினையே?  


    ஏற்றுஅரும் வைகுந்தத்தை*  அருளும் நமக்கு,*  ஆயர்குலத்து 
    ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு*  மாயங்களே இயற்றி,*

    கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று*  ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,* 
    ஆற்றல் மிக்கான் பெரிய*  பரஞ்சோதி புக்க அரியே


    புக்க அரிஉருஆய்*  அவுணன்உடல் கீண்டுஉகந்த,* 
    சக்கரச் செல்வன்தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    மிக்க ஓர்ஆயிரத்துள்*  இவைபத்தும் வல்லார் அவரைத்,* 
    தொக்கு பல்லாண்டுஇசைத்து*  கவரி செய்வர் ஏழையரே  (2)


    ஏழையர் ஆவிஉண்ணும்*  இணைக் கூற்றம்கொலோ அறியேன்,* 
    ஆழிஅம் கண்ணபிரான்*  திருக்கண்கள் கொலோ அறியேன்,*

    சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,* 
    தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே?  (2)


    ஆட்டியும் தூற்றியும் நின்று*  அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?* 
    மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*

    ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,* 
    மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.


    வாலியதுஓர் கனிகொல்*  வினையாட்டியேன் வல்வினைகொல்,* 
    கோலம் திரள்பவளக்*  கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*

    நீல நெடுமுகில்போல்*  திருமேனி அம்மான் தொண்டைவாய்,* 
    ஏலும் திசையுள்எல்லாம்*  வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே. 


    இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,* 
    மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*  மதனன்

    தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,* 
    என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே  


    என்றும் நின்றேதிகழும்*  செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,* 
    அன்றி என்ஆவிஅடும்*  அணி முத்தம்கொலோ? அறியேன்,*

    குன்றம் எடுத்தபிரான்*  முறுவல் எனதுஆவிஅடும்* 
    ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே       


    உய்விடம் ஏழையர்க்கும்*  அசுரர்க்கும் அரக்கர்கட்கும்* 
    எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*

    பைவிடப் பாம்புஅணையான்*  திருக்குண்டலக் காதுகளே?* 
    கைவிடல் ஒன்றும்இன்றி*  அடுகின்றன காண்மின்களே 


    காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,* 
    நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*

    சேண்மன்னு நால்தடம்தோள்*  பெருமான்தன் திருநுதலே?,* 
    கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே


    கோள்இழைத் தாமரையும்*  கொடியும் பவளமும் வில்லும்,.* 
    கோள்இழைத் தண் முத்தமும்*  தளிரும் குளிர்வான் பிறையும்,*

    கோள்இழையாஉடைய*  கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன், 
    கோள்இழை வாள் முகமாய்*  கொடியேன் உயிர் கொள்கின்றதே? 


    கொள்கின்ற கோள் இருளைச்*  சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,* 
    உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?*  அன்று மாயன் குழல்,*

    விள்கின்ற பூந்தண்துழாய்*  விரை நாற வந்து என் உயிரைக்,* 
    கள்கின்றவாறு அறியீர்*  அன்னைமீர்! கழறாநிற்றிரே.


    நிற்றி முற்றத்துள் என்று*  நெரித்த கையர் ஆய்*  
    என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்*  வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*

    முற்ற இம்மூவுலகும்*  விரிகின்ற சுடர்முடிக்கே,* 
    ஒற்றுமை கொண்டது உள்ளம்*  அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?  


    கட்கு அரிய பிரமன் சிவன்*  இந்திரன் என்று இவர்க்கும்,* 
    கட்கு அரிய கண்ணனைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    உட்கு உடை ஆயிரத்துள்*  இவையும் ஒரு பத்தும் வல்லார்,* 
    உட்கு உடை வானவரோடு*  உடனாய் என்றும் மாயாரே. (2)        


    மாயா! வாமனனே!*  மதுசூதா நீ அருளாய்,* 
    தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்*  விசும்பு ஆய் கால் ஆய்,* 

    தாயாய்  தந்தையாய்*  மக்களாய்  மற்றுமாய் முற்றுமாய்,* 
    நீயாய்  நீ நின்றவாறு*  இவை என்ன நியாயங்களே! (2) 


    அங்கண்  மலர்த் தண் துழாய்முடி*  அச்சுதனே! அருளாய்,* 
    திங்களும் ஞாயிறும் ஆய்*  செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,* 

    பொங்கு பொழி மழை ஆய்*  புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ, 
    வெங்கண்வெங் கூற்றமும் ஆம்*  இவை என்ன விசித்திரமே!


    சித்திரத் தேர் வலவா!*  திருச் சக்கரத்தாய்! அருளாய்,* 
    எத்தனை ஓர் உகமும்*  அவை ஆய் அவற்றுள் இயலும்,* 

    ஒத்த ஓண் பல் பொருள்கள்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,* 
    வித்தகத்தாய் நிற்றி நீ*  இவை என்ன விடமங்களே! 


    கள் அவிழ் தாமரைக்கண்*  கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,* 
    உள்ளதும் இல்லதும் ஆய்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*

    வெள்ளத் தடம் கடலுள்*  விட நாகு அணைமேல் மருவி,* 
    உள்ளப் பல் யோகு செய்தி*  இவை என்ன உபாயங்களே!     


    பாசங்கள் நீக்கி*  என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,*  நீ 
    வாச மலர்த் தண் துழாய்முடி*  மாயவனே! அருளாய்,*

    காயமும் சீவனும் ஆய்*  கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,* 
    மாயங்கள் செய்துவைத்தி*  இவை என்ன மயக்குக்களே!       


    மயக்கா! வாமனனே!*  மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,* 
    அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்*  அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,* 

    வியப்பு ஆய் வென்றிகள் ஆய்*  வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,* 
    துயக்கு ஆய் நீ நின்றவாறு*  இவை என்ன துயரங்களே! 


    துயரங்கள் செய்யும் கண்ணா!*  சுடர் நீள் முடியாய் அருளாய்,*
    துயரம் செய் மானங்கள் ஆய்*  மதன் ஆகி உகவைகள் ஆய்,* 

    துயரம் செய் காமங்கள் ஆய்*  துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,* 
    துயரங்கள் செய்துவைத்தி*  இவை என்ன சுண்டாயங்களே.


    என்ன சுண்டாயங்களால்*  நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,* 
    இன்னது ஓர் தன்மையை என்று*  உன்னை யாவர்க்கும் தேற்றரியை,* 

    முன்னிய மூவுலகும்*  அவை ஆய் அவற்றைப் படைத்து,*
    பின்னும் உள்ளாய்! புறத்தாய்*!  இவை என்ன இயற்கைகளே!


    என்ன இயற்கைகளால்*  எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
    துன்னு கரசரணம் முதலாக*  எல்லா உறுப்பும்,* 

    உன்னு சுவை ஒளி*  ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,* 
    உன்னை உணரவுறில்*  உலப்பு இல்லை நுணுக்கங்களே.


    இல்லை நுணுக்கங்களே*  இதனில் பிறிது என்னும் வண்ணம்* 
    தொல்லை நல் நூலில் சொன்ன*  உருவும் அருவும் நீயே:* 

    அல்லித் துழாய் அலங்கல்*  அணி மார்ப என் அச்சுதனே,* 
    வல்லது ஓர் வண்ணம் சொன்னால்*  அதுவே உனக்கு ஆம்வண்ணமே.        


    ஆம் வண்ணம் இன்னது ஒன்று*  என்று அறிவது அரிய அரியை,* 
    ஆம் வண்ணத்தால்*  குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த* 

    ஆம் வண்ண ஒண் தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    ஆம் வண்ணத்தால் உரைப்பார்*  அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)  


    என்றைக்கும் என்னை*  உய்யக்கொண்டு போகிய,* 
    அன்றைக்கு அன்று என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 

    இன் தமிழ் பாடிய ஈசனை*  ஆதியாய்- 
    நின்ற என் சோதியை,*  என் சொல்லி நிற்பனோ? (2)         


    என்சொல்லி நிற்பன்*  என் இன் உயிர் இன்று ஒன்றாய்,* 
    என்சொல்லால் யான்சொன்ன*  இன்கவி என்பித்து,* 

    தன்சொல்லால் தான்தன்னைக்*  கீர்த்தித்த மாயன்,*  என் 
    முன்சொல்லும்*  மூவுருவாம் முதல்வனே.


    ஆம் முதல்வன் இவன் என்று*  தன் தேற்றி,* என் 
    நா முதல் வந்து புகுந்து*  நல் இன் கவி,* 

    தூ முதல் பத்தர்க்குத்*  தான் தன்னைச் சொன்ன,*  என் 
    வாய் முதல் அப்பனை*  என்று மறப்பனோ? 


    அப்பனை என்று மறப்பன்*  என் ஆகியே,* 
    தப்புதல் இன்றி*  தனைக் கவி தான் சொல்லி,* 

    ஒப்பிலாத் தீவினையேனை*  உய்யக்கொண்டு* 
    செப்பமே செய்து*  திரிகின்ற சீர்கண்டே?  


    சீர் கண்டுகொண்டு*  திருந்து நல் இன்கவி,* 
    நேர்பட யான் சொல்லும்*  நீர்மை இலாமையில்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைப்,* 
    பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.  


    இன் கவி பாடும்*  பரம் கவிகளால்,* 
    தன் கவி தான் தன்னைப்*  பாடுவியாது இன்று* 

    நன்கு வந்து என்னுடன் ஆக்கி*  என்னால் தன்னை,* 
    வன் கவி பாடும்*  என் வைகுந்த நாதனே.


    வைகுந்த நாதன்*  என வல்வினை மாய்ந்து அறச்,* 
    செய் குந்தன் தன்னை*  என் ஆக்கி என்னால் தன்னை,* 

    வைகுந்தன் ஆகப்*  புகழ வண் தீம்கவி,* 
    செய் குந்தன் தன்னை*  எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!


    ஆர்வனோ ஆழிஅங்கை*  எம் பிரான் புகழ்,* 
    பார் விண் நீர் முற்றும்*  கலந்து பருகிலும்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைச்,* 
    சீர்பெற இன்கவி*  சொன்ன திறத்துக்கே?


    திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்*  திருமாலின் சீர்,* 
    இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,* 

    மறப்பு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
    உறப் பல இன்கவி*  சொன்ன உதவிக்கே?


    உதவிக் கைம்மாறு*  என் உயிர் என்ன உற்று எண்ணில்,* 
    அதுவும் மற்று ஆங்கவன்*  தன்னது என்னால் தன்னைப்,* 

    பதவிய இன்கவி*  பாடிய அப்பனுக்கு,* 
    எதுவும் ஒன்றும் இல்லை*  செய்வது இங்கும் அங்கே.


    இங்கும் அங்கும்*  திருமால் அன்றி இன்மை கண்டு,* 
    அங்ஙனே வண் குருகூர்ச்*  சடகோபன்,* 

    இங்ஙனே சொன்ன*  ஓர் ஆயிரத்து இப்பத்தும்,* 
    எங்ஙனே சொல்லினும்*  இன்பம் பயக்குமே. (2)


    இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
    இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 

    அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)      


    ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே* 
    ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்* 

    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!       


    கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,* 
    ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*

    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,* 
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!     


    வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற* 
    வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*

    வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,* 
    வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.    


    மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,* 
    பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,* 

    மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.


    ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,* 

    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,* 
    நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.


    நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,* 
    நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்* 

    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,* 
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே. 


    அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,* 
    நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,* 

    சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.


    தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,* 
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,* 

    யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,* 
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே. 


    சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,* 
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,* 

    சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,* 
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     


    தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
    தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)