பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
உய்ம்மின் திறைகொணர்ந்து* என்று உலகு ஆண்டவர்,* இம்மையே
தம் இன்சுவை மடவாரைப்* பிறர் கொள்ளத் தாம் விட்டு*
வெம் மின் ஒளிவெயில்* கானகம் போய்க் குமைதின்பர்கள்,*
செம்மின் முடித் திருமாலை* விரைந்து அடி சேர்மினோ.
அடி சேர் முடியினர் ஆகி* அரசர்கள் தாம் தொழ,*
இடி சேர் முரசங்கள்* முற்றத்து இயம்ப இருந்தவர்,*
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்* ஆதலில் நொக்கெனக்,*
கடி சேர் துழாய்முடிக்* கண்ணன் கழல்கள் நினைமினோ.
நினைப்பான் புகில் கடல் எக்கலின்* நுண்மணலில் பலர்,*
எனைத்தோர் உகங்களும்* இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,*
மனைப்பால் மருங்கு* அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,*
பனைத் தாள் மத களிறு அட்டவன்* பாதம் பணிமினோ.
பணிமின் திருவருள் என்னும்* அம் சீதப் பைம் பூம் பள்ளி,*
அணி மென் குழலார்* இன்பக் கலவி அமுது உண்டார்,*
துணி முன்பு நால* பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,*
மணி மின்னு மேனி* நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,*
ஆழ்ந்தார் என்று அல்லால்* அன்று முதல் இன்று அறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பது இல்லை நிற்குறில்,*
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினோ.
ஆம் இன் சுவை அவை* ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,*
தூ மென் மொழி மடவார்* இரக்கப் பின்னும் துற்றுவார்,*
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று* இடறுவர் ஆதலின்,*
கோமின் துழாய் முடி* ஆதி அம் சோதி குணங்களே.
குணம் கொள் நிறை புகழ் மன்னர்* கொடைக்கடன் பூண்டிருந்து,*
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்* ஆங்கு அவனை இல்லார்,*
மணம் கொண்ட போகத்து மன்னியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
பணம் கொள் அரவு அணையான்* திருநாமம் படிமினோ.
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து* ஐம்புலன் வென்று,*
செடி மன்னு காயம் செற்றார்களும்* ஆங்கு அவனை இல்லார்,*
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
கொடி மன்னு புள் உடை* அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி* எல்லாம்விட்ட,*
இறுகல் இறப்பு என்னும்* ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,*
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்* பின்னும் வீடு இல்லை,*
மறுகல் இல் ஈசனைப் பற்றி* விடாவிடில் வீடு அஃதே.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று* கண்ணன் கழல்கள் மேல்,*
கொய் பூம் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,*
செய் கோலத்து ஆயிரம்* சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,*
அஃகாமல் கற்பவர்* ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.
பாலன் ஆய்* ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,*
ஆல் இலை* அன்னவசம் செய்யும் அண்ணலார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
மாலுமால்,* வல்வினையேன்* மட வல்லியே. (2)
வல்லி சேர் நுண் இடை* ஆய்ச்சியர் தம்மொடும்,*
கொல்லைமை செய்து* குரவை பிணைந்தவர்,*
நல் அடிமேல் அணி* நாறு துழாய் என்றே
சொல்லுமால்,* சூழ் வினையாட்டியேன் பாவையே.
பா இயல் வேத* நல் மாலை பல கொண்டு,*
தேவர்கள் மா முனிவர்* இறைஞ்ச நின்ற*
சேவடிமேல் அணி* செம் பொன் துழாய் என்றே
கூவுமால்,* கோள் வினையாட்டியேன் கோதையே.
கோது இல வண்புகழ்* கொண்டு சமயிகள்,*
பேதங்கள் சொல்லிப்* பிதற்றும் பிரான்பரன்,*
பாதங்கள் மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* ஊழ்வினையேன்* தடந் தோளியே.
தோளி சேர் பின்னை பொருட்டு* எருது ஏழ் தழீஇக்
கோளியார்* கோவலனார்* குடக் கூத்தனார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
நாளும்நாள்,* நைகின்றதால்* என்தன் மாதரே
மாதர் மா மண்மடந்தைபொருட்டு* ஏனம் ஆய்,*
ஆதி அம் காலத்து* அகல் இடம் கீண்டவர்,*
பாதங்கள்மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* எய்தினள் என் தன் மடந்தையே.
மடந்தையை* வண் கமலத் திருமாதினை,*
தடம் கொள் தார் மார்பினில்* வைத்தவர் தாளின்மேல்,*
வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே* இவள்
மடங்குமால்* வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே.
கொம்பு போல் சீதைபொருட்டு* இலங்கை நகர்*
அம்பு எரி உய்த்தவர்* தாள் இணைமேல் அணி,*
வம்பு அவிழ் தண் அம் துழாய்* மலர்க்கே இவள்-
நம்புமால்,* நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!
நங்கைமீர்! நீரும்* ஓர் பெண் பெற்று நல்கினீர்,*
எங்ஙனே சொல்லுகேன்* யான் பெற்ற ஏழையை,*
சங்கு என்னும் சக்கரம் என்னும்* துழாய் என்னும்,*
இங்ஙனே சொல்லும்* இராப் பகல் என்செய்கேன்?
என் செய்கேன்? என்னுடைப் பேதை* என் கோமளம்,*
என் சொல்லும்* என் வசமும் அல்லள் நங்கைமீர்,*
மின் செய் பூண் மார்பினன்* கண்ணன் கழல் துழாய்,*
பொன் செய்பூண்* மென்முலைக்கு என்று மெலியுமே
மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
மலி புகழ் வண் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
மலி புகழ் வானவர்க்கு ஆவர்* நல் கோவையே. (2)
கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்!* குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,*
பூவை வீயா நீர் தூவிப்* போதால் வணங்கேனேலும்,* நின்
பூவை வீயாம் மேனிக்குப்* பூசும் சாந்து என் நெஞ்சமே.
பூசும் சாந்து என் நெஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
வாசகம் செய் மாலையே* வான் பட்டு ஆடையும் அஃதே,*
தேசம் ஆன அணிகலனும்* என் கைகூப்புச் செய்கையே,*
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த* எந்தை ஏக மூர்த்திக்கே.
ஏக மூர்த்தி இரு மூர்த்தி* மூன்று மூர்த்தி பல மூர்த்தி-
ஆகி,* ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,*
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற* நாராயணனே உன்-
ஆகம் முற்றும் அகத்து அடக்கி* ஆவி அல்லல் மாய்த்ததே.
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த* மாயப் பேய் உயிர்-
மாய்த்த,* ஆய மாயனே! வாமனனே மாதவா,*
பூத்தண் மாலை கொண்டு* உன்னைப் போதால் வணங்கேனேலும்,* நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்* புனையும் கண்ணி எனது உயிரே.
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,*
எண் இல் பல்கலன்களும்* ஏலும் ஆடையும் அஃதே,*
நண்ணி மூவுலகும்* நவிற்றும் கீர்த்தியும் அஃதே,*
கண்ணன் எம் பிரான் எம்மான்* கால சக்கரத்தானுக்கே.
கால சக்கரத்தொடு* வெண் சங்கம் கை ஏந்தினாய்,*
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாராயணனே என்று என்று,*
ஓலம் இட்டு நான் அழைத்தால்* ஒன்றும் வாராயாகிலும்,*
கோலம் ஆம் என் சென்னிக்கு* உன் கமலம் அன்ன குரைகழலே.
குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,*
குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,*
விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,* உன்
உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே.
என்னது ஆவி மேலையாய்* ஏர் கொள் ஏழ் உலகமும்,*
துன்னி முற்றும் ஆகி நின்ற* சோதி ஞான மூர்த்தியாய்,*
உன்னது என்னது ஆவியும்,* என்னது உன்னது ஆவியும்*
இன்ன வண்ணமே நின்றாய்* என்று உரைக்க வல்லேனே?
உரைக்க வல்லேன் அல்லேன்* உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்*
கரைக்கண் என்று செல்வன் நான்?* காதல் மையல் ஏறினேன்,*
புரைப்பு இலாத பரம்பரனே!* பொய் இலாத பரஞ்சுடரே,*
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த* யானும் ஏத்தினேன்.
யானும் ஏத்தி* ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,* பின்னையும்
தானும் ஏத்திலும்* தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும் ஆகித் தித்திப்ப,*
யானும் எம் பிரானையே ஏத்தினேன்* யான் உய்வானே
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி* கண்ணன் ஒண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்,*
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)
மண்ணை இருந்து துழாவி* 'வாமனன் மண் இது' என்னும்,*
விண்ணைத் தொழுது அவன் மேவு* வைகுந்தம் என்று கை காட்டும்,*
கண்ணை உள்நீர் மல்க நின்று* 'கடல்வண்ணன்' என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என் செய்கேன் பெய் வளையீரே? (2)
பெய்வளைக் கைகளைக் கூப்பி* 'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,*
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,* 'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,*
நையும் கண்ணீர் மல்க நின்று* 'நாரணன்' என்னும் அன்னே,* என்
தெய்வ உருவில் சிறுமான்* செய்கின்றது ஒன்று அறியேனே.
அறியும் செந்தீயைத் தழுவி* 'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,*
எறியும்தண் காற்றைத் தழுவி* 'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*
வெறிகொள் துழாய் மலர் நாறும்* வினையுடையாட்டியேன் பெற்ற*
செறிவளை முன்கைச் சிறுமான்* செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
ஒன்றிய திங்களைக் காட்டி* 'ஒளிமணி வண்ணனே' என்னும்*
நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,*
நன்று பெய்யும் மழை காணில்* நாரணன் வந்தான் என்று ஆலும்,*
என்று இன மையல்கள் செய்தான்* என்னுடைக் கோமளத்தையே?
கோமள வான் கன்றைப் புல்கி* கோவிந்தன் மேய்த்தன' என்னும்,*
போம் இள நாகத்தின் பின்போய்* அவன் கிடக்கை ஈது என்னும்,*
ஆம் அளவு ஒன்றும் அறியேன்* அருவினையாட்டியேன் பெற்ற,*
கோமள வல்லியை மாயோன்* மால் செய்து செய்கின்ற கூத்தே.
கூத்தர் குடம் எடுத்து ஆடில்* 'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,*
வாய்த்த குழல் ஓசை கேட்கில்* 'மாயவன்' என்று மையாக்கும்,*
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்* அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,*
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு* என் பெண்கொடி ஏறிய பித்தே!
ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்' என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.
திரு உடை மன்னரைக் காணில்,* திருமாலைக் கண்டேனே என்னும்,*
உரு உடை வண்ணங்கள் காணில்* 'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்* 'கடல்வண்ணன் கோயிலே' என்னும்*
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்* கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகவரைக் காணில்* 'வியல் இடம் உண்டானே!' என்னும்,*
கரும் பெரு மேகங்கள் காணில்* 'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*
பெரும் புல ஆ நிரை காணில்* 'பிரான் உளன்' என்று பின் செல்லும்,*
அரும் பெறல் பெண்ணினை மாயோன்* அலற்றி அயர்ப்பிக்கின்றானே!
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி* அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,*
வியர்க்கும் மழைக்கண் துளும்ப* வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,*
பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,* பெருமானே! வா! என்று கூவும்,*
மயல் பெருங் காதல் என் பேதைக்கு* என்செய்கேன் வல்வினையேனே!
வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்* தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)
வீற்றிருந்து ஏழ் உலகும்* தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,*
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை* வெம் மா பிளந்தான் தன்னை,*
போற்றி என்றே கைகள் ஆரத்* தொழுது சொல் மாலைகள்,*
ஏற்ற நோற்றேற்கு* இனி என்ன குறை எழுமையுமே? (2)
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்* உறை மார்பினன்,*
செய்ய கோலத் தடங் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேன்,*
வெய்ய நோய்கள் முழுதும்* வியன் ஞாலத்து வீயவே.
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,*
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி* மேவப்பெற்றேன்,*
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
மேவி நின்று தொழுவார்* வினை போக மேவும் பிரான்,*
தூவி அம் புள் உடையான்* அடல் ஆழி அம்மான் தன்னை,
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி* நண்ணப் பெற்றேன்,*
ஆவி என் ஆவியை* யான் அறியேன் செய்த ஆற்றையே.
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,* அமரர்தம்-
ஏற்றை* எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,*
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி* நாளும் மகிழ்வு எய்தினேன்,*
காற்றின் முன்னம் கடுகி* வினை நோய்கள் கரியவே.
கரிய மேனிமிசை* வெளிய நீறு சிறிதே இடும்,*
பெரிய கோலத் தடங்கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேற்கு,*
அரியது உண்டோ எனக்கு* இன்று தொட்டும் இனி என்றுமே?
என்றும் ஒன்று ஆகி* ஒத்தாரும் மிக்கார்களும்,* தன் தனக்கு -
இன்றி நின்றானை* எல்லா உலகும் உடையான் தன்னை,*
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை* சொல் மாலைகள்,*
நன்று சூட்டும் விதி எய்தினம்* என்ன குறை நமக்கே?
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்* இன்பனை,* ஞாலத்தார்-
தமக்கும்* வானத்தவர்க்கும் பெருமானை,* தண் தாமரை-
சுமக்கும்* பாதப் பெருமானை* சொல்மாலைகள் சொல்லுமாறு-
அமைக்க வல்லேற்கு* இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
வானத்தும் வானத்துள் உம்பரும்* மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும்,* எண் திசையும் தவிராது* நின்றான் தன்னை,*
கூனல் சங்கத் தடக்கையவனை* குடம் ஆடியை
வானக் கோனை,* கவி சொல்ல வல்லேற்கு* இனி மாறுஉண்டே?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்* கிடந்தும் நின்றும்,*
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்* மணம் கூடியும்,*
கண்ட ஆற்றால் தனதே* உலகு என நின்றான் தன்னை,*
வண் தமிழ் நூற்க நோற்றேன்* அடியார்க்கு இன்ப மாரியே.
மாரி மாறாத தண் அம் மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்* குருகூர் நகர்க்,*
காரி மாறன் சடகோபன்* சொல் ஆயிரத்து இப் பத்தால்,*
வேரி மாறாத பூமேல் இருப்பாள்* வினை தீர்க்குமே.
தீர்ப்பாரை யாம் இனி* எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்* உற்ற நல் நோய் இது தேறினோம்,*
போர்ப்பாகு தான் செய்து* அன்று ஐவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு* இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?
திசைக்கின்றதே இவள் நோய்* இது மிக்க பெருந் தெய்வம்,*
இசைப்பு இன்றி* நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*
திசைப்பு இன்றியே* சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,* நீர்
இசைக்கிற்றிராகில்* நன்றே இல் பெறும் இது காண்மினே.
இது காண்மின் அன்னைமீர்!* இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,* நீர்
எதுவானும் செய்து* அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,*
மது வார் துழாய்முடி* மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,*
அதுவே இவள் உற்ற நோய்க்கும்* அரு மருந்து ஆகுமே.
மருந்து ஆகும் என்று அங்கு ஓர்* மாய வலவை சொல் கொண்டு,* நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்* களன் இழைத்து என் பயன்?*
ஒருங்காகவே உலகு ஏழும்* விழுங்கி உமிழ்ந்திட்ட,*
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்* இவளைப் பெறுதிரே.
இவளைப் பெறும்பரிசு* இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,*
குவளைத் தடங் கண்ணும்* கோவைச் செவ்வாயும் பயந்தனள்,*
கவளக் கடாக் களிறு அட்ட பிரான்* திருநாமத்தால்,*
தவளப் பொடிக்கொண்டு* நீர்இட்டிடுமின் தணியுமே.
தணியும் பொழுது இல்லை* நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,*
பிணியும் ஒழிகின்றது இல்லை* பெருகும் இது அல்லால்,*
மணியின் அணிநிற மாயன்* தமர் அடி நீறுகொண்டு*
அணிய முயலின்* மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.
அணங்குக்கு அரு மருந்து என்று* அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்*
துணங்கை எறிந்து* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
உணங்கல் கெடக்* கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்* தமர் வேதம் வல்லாரையே.
வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
கீழ்மையினால் அங்கு ஓர்* கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,*
நாழ்மை பல சொல்லி* நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்* இந் நோய்க்கும் ஈதே மருந்து,*
ஊழ்மையில் கண்ணபிரான்* கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்* அவனை அல்லால்,*
நும் இச்சை சொல்லி* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
மன்னப்படும் மறைவாணனை* வண் துவராபதி-
மன்னனை,* ஏத்துமின் ஏத்துதலும்* தொழுது ஆடுமே.
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய் தீர்ந்த*
வழுவாத தொல்புகழ் வண் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,*
தொழுது ஆடிப் பாடவல்லார்* துக்க சீலம் இலர்களே.
சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி* 'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து* கைதலைபூசல் இட்டால்*
கோல மேனி காண வாராய்* கூவியும் கொள்ளாயே.
கொள்ள மாளா இன்ப வெள்ளம்* கோது இல தந்திடும்,* என்
வள்ளலேயோ! வையம் கொண்ட* வாமனாவோ! என்று என்று,*
நள் இராவும் நன் பகலும்* நான் இருந்து ஓலம் இட்டால்,*
கள்ள மாயா! உன்னை* என் கண் காண வந்து ஈயாயே.
'ஈவு இலாத தீவினைகள்* எத்தனை செய்தனன்கொல்?*
தாவி வையம் கொண்ட எந்தாய்!* தாமோதரா! என்று என்று*
கூவிக் கூவி நெஞ்சு உருகி* கண்பனி சோர நின்றால்,*
பாவி நீ என்று ஒன்று சொல்லாய்* பாவியேன் காண வந்தே.
'காண வந்து என் கண்முகப்பே* தாமரைக்கண் பிறழ,*
ஆணி செம்பொன் மேனி எந்தாய்!* நின்று அருளாய் என்று என்று,*
நாணம் இல்லாச் சிறு தகையேன்* நான் இங்கு அலற்றுவது என்,*
பேணி வானோர் காணமாட்டாப்* பீடு உடை அப்பனையே?
அப்பனே! அடல் ஆழியானே,* ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே,* உன் தோள்கள் நான்கும்* கண்டிடக்கூடுங்கொல்? என்று*
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு* ஆவி துவர்ந்து துவர்ந்து,*
இப்பொழுதே வந்திடாய் என்று* ஏழையேன் நோக்குவனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்* யான் எனது ஆவியுள்ளே,*
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை* நாள்தோறும் என்னுடைய,*
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்* அல்ல புறத்தினுள்ளும்,*
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!* நின்னை அறிந்து அறிந்தே.
அறிந்து அறிந்து தேறித் தேறி* யான் எனது ஆவியுள்ளே,*
நிறைந்த ஞான மூர்த்தியாயை* நின்மலமாக வைத்து,*
பிறந்தும் செத்தும் நின்று இடறும்* பேதைமை தீர்ந்தொழிந்தேன்*
நறுந் துழாயின் கண்ணி அம்மா!* நான் உன்னைக் கண்டுகொண்டே!
கண்டுகொண்டு என் கைகள் ஆர* நின் திருப்பாதங்கள்மேல்,*
எண் திசையும் உள்ள பூக்கொண்டு* ஏத்தி உகந்து உகந்து,*
தொண்டரோங்கள் பாடி ஆட* சூழ் கடல் ஞாலத்துள்ளே,*
வண் துழாயின் கண்ணி வேந்தே!* வந்திடகில்லாயே.
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்* ஐம்புலன் வெல்ல கில்லேன்,*
கடவன் ஆகி காலந்தோறும்* பூப்பறித்து ஏத்த கில்லேன்,*
மட வல் நெஞ்சம் காதல் கூர* வல்வினையேன் அயர்ப்பாய்த்,*
தடவுகின்றேன் எங்குக் காண்பன்* சக்கரத்து அண்ணலையே?
சக்கரத்து அண்ணலே என்று* தாழ்ந்து கண்ணீர் ததும்ப,*
பக்கம் நோக்கி நின்று அலந்தேன்* பாவியேன் காண்கின்றிலேன்,*
மிக்க ஞான மூர்த்தி ஆய* வேத விளக்கினை* என்
தக்க ஞானக் கண்களாலே* கண்டு தழுவுவனே.
தழுவிநின்ற காதல் தன்னால்* தாமரைக் கண்ணன் தன்னை,*
குழுவு மாடத் தென் குருகூர்* மாறன் சடகோபன்,* சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
தழுவப் பாடி ஆட வல்லார்* வைகுந்தம் ஏறுவரே.
ஏறு ஆளும் இறையோனும்* திசைமுகனும் திருமகளும்,*
கூறு ஆளும் தனி உடம்பன்* குலம் குலமா அசுரர்களை,*
நீறு ஆகும்படியாக* நிருமித்து படை தொட்ட,*
மாறாளன் கவராத* மணி மாமை குறைவு இலமே. (2)
மணி மாமை குறைவு இல்லா* மலர்மாதர் உறை மார்பன்,*
அணி மானத் தட வரைத்தோள்* அடல் ஆழித் தடக்கையன்,*
பணி மானம் பிழையாமே* அடியேனைப் பணிகொண்ட,*
மணிமாயன் கவராத* மட நெஞ்சால் குறைவு இலமே.
மட நெஞ்சால் குறைவு இல்லா* மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,*
விட நஞ்ச முலை சுவைத்த* மிகு ஞானச் சிறு குழவி,*
பட நாகத்து அணைக் கிடந்த* பரு வரைத் தோள் பரம்புருடன்,*
நெடுமாயன் கவராத* நிறையினால் குறைவு இலமே.
நிறையினால் குறைவு இல்லா* நெடும் பணைத் தோள் மடப் பின்னை,*
பொறையினால் முலை அணைவான்* பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,*
கறையினார் துவர் உடுக்கை* கடை ஆவின் கழி கோல் கைச்,*
சறையினார் கவராத* தளிர் நிறத்தால் குறைவு இலமே
தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்* தனிச் சிறையில் விளப்பு உற்ற,*
கிளிமொழியாள் காரணமாக்* கிளர் அரக்கன் நகர் எரித்த,*
களி மலர்த் துழாய் அலங்கல்* கமழ் முடியன் கடல் ஞாலத்து,*
அளிமிக்கான் கவராத,* அறிவினால் குறைவு இலமே.
அறிவினால் குறைவு இல்லா* அகல் ஞாலத்தவர் அறிய,*
நெறி எல்லாம் எடுத்து உரைத்த* நிறை ஞானத்து ஒருமூர்த்தி,*
குறிய மாண் உரு ஆகி* கொடுங் கோளால் நிலம் கொண்ட,*
கிறி அம்மான் கவராத* கிளர் ஒளியால் குறைவு இலமே.
கிளர் ஒளியால் குறைவு இல்லா* அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,*
கிளர் ஒளிய இரணியனது* அகல் மார்பம் கிழித்து உகந்த,*
வளர் ஒளிய கனல் ஆழி* வலம்புரியன் மணி நீல,*
வளர் ஒளியான் கவராத* வரி வளையால் குறைவு இலமே.
வரி வளையால் குறைவு இல்லாப்* பெரு முழக்கால் அடங்காரை,*
எரி அழலம் புக ஊதி* இரு நிலம் முன் துயர் தவிர்த்த,*
தெரிவு அரிய சிவன் பிரமன்* அமரர் கோன் பணிந்து ஏத்தும்,*
விரி புகழான் கவராத* மேகலையால் குறைவு இலமே.
மேகலையால் குறைவு இல்லா* மெலிவு உற்ற அகல் அல்குல்,*
போகமகள் புகழ்த் தந்தை* விறல் வாணன் புயம் துணித்து,*
நாகமிசைத் துயில்வான்போல்* உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,*
யோகு அணைவான் கவராத* உடம்பினால் குறைவு இலமே.
உடம்பினால் குறைவு இல்லா* உயிர் பிரிந்த மலைத்துண்டம்,*
கிடந்தனபோல் துணி பலவா* அசுரர் குழாம் துணித்து உகந்த,*
தடம் புனல சடைமுடியன்* தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,*
உடம்பு உடையான் கவராத* உயிரினால் குறைவு இலமே.
உயிரினால் குறைவு இல்லா* உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,*
தயிர் வெண்ணெய் உண்டானைத்,* தடம் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)
நண்ணாதார் முறுவலிப்ப* நல் உற்றார் கரைந்து ஏங்க,*
எண் ஆராத் துயர் விளைக்கும்* இவை என்ன உலகு இயற்கை?,*
கண்ணாளா! கடல் கடைந்தாய்!* உன கழற்கே வரும் பரிசு,*
தண்ணாவாது அடியேனைப்* பணி கண்டாய் சாமாறே. (2)
சாம் ஆறும் கெடும் ஆறும்* தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,*
ஏமாறிக் கிடந்து அலற்றும்* இவை என்ன உலகு இயற்கை?,*
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்* அரவு அணையாய்! அம்மானே,*
கூமாறே விரைகண்டாய்* அடியேனை குறிக்கொண்டே.
கொண்டாட்டும் குலம் புனைவும்* தமர் உற்றார் விழு நிதியும்,*
வண்டு ஆர் பூங் குழலாளும்,* மனை ஒழிய உயிர் மாய்தல்,*
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை* கடல்வண்ணா! அடியேனைப்*
பண்டேபோல் கருதாது* உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.
கொள் என்று கிளர்ந்து எழுந்த* பெரும் செல்வம் நெருப்பு ஆக,*
கொள் என்று தமம் மூடும்* இவை என்ன உலகு இயற்கை?*
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,*
வள்ளல் செய்து அடியேனை* உனது அருளால் வாங்காயே.
வாங்கு நீர் மலர் உலகில்* நிற்பனவும் திரிவனவும்,*
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்* பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,*
ஈங்கு இதன்மேல் வெம் நரகம்* இவை என்ன உலகு இயற்கை?*
வாங்கு எனை நீ மணிவண்ணா!* அடியேனை மறுக்கேலே.
மறுக்கி வல் வலைப்படுத்தி* குமைத்திட்டு கொன்று உண்பர்,*
அறப்பொருளை அறிந்து ஓரார்* இவை என்ன உலகு இயற்கை?*
வெறித் துளவ முடியானே!* வினையேனை உனக்கு அடிமை-
அறக்கொண்டாய்,* இனி என் ஆர் அமுதே!* கூயருளாயே.
ஆயே! இவ் உலகத்து* நிற்பனவும் திரிவனவும்*
நீயே மற்று ஒரு பொருளும்* இன்றி நீ நின்றமையால்,*
நோயே மூப்பு இறப்பு பிறப்பு* பிணியே என்று இவை ஒழிய,*
கூயேகொள் அடியேனை* கொடு உலகம் காட்டேலே.
காட்டி நீ கரந்து உமிழும்* நிலம் நீர் தீ விசும்பு கால்,*
ஈட்டி நீ வைத்து அமைத்த* இமையோர் வாழ் தனி முட்டைக்,*
கோட்டையினில் கழித்து* என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே?
கூட்டுதி நின் குரை கழல்கள்* இமையோரும் தொழாவகைசெய்து,*
ஆட்டுதி நீ அரவு அணையாய்!* அடியேனும் அஃது அறிவன்,*
வேட்கை எல்லாம் விடுத்து* என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* கூட்டினை நான் கண்டேனே.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்* ஐங்கருவி
கண்ட இன்பம்,* தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*
ஒண் தொடியாள் திருமகளும்* நீயுமே நிலாநிற்ப,*
கண்ட சதிர் கண்டொழிந்தேன்* அடைந்தேன் உன் திருவடியே.
திருவடியை நாரணனை* கேசவனை பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதி* செழுங் குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்த தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதும் இல்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர் படைத்தான்,*
குன்றம்போல் மணிமாடம் நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)
நாடி நீர் வணங்கும் தெய்வமும்* உம்மையும் முன்படைத்தான்,*
வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்* அவன் மேவி உறைகோயில்,*
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனைப்*
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்* பல் உலகீர்! பரந்தே.
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து* அன்று உடனே விழுங்கி,*
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது* கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும்* திருக்குருகூர் அதனுள்,*
பரன் திறம் அன்றி பல் உலகீர்!* தெய்வம் மற்று இல்லை பேசுமினே!
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்* பிறர்க்கும்
நாயகன் அவனே,* கபால நல் மோக்கத்துக்* கண்டுகொண்மின்,*
தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனுள்,*
ஈசன்பால் ஓர் அவம் பறைதல்* என் ஆவது இலிங்கியர்க்கே?
இலிங்கத்து இட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்*
மலிந்து செந்நெல் கவரி வீசும்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்* ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)
போற்றி மற்று ஓர் தெய்வம்* பேணப் புறத்திட்டு* உம்மை இன்னே
தேற்றி வைத்தது* எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,*
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு* திருக்குருகூர் அதனுள்,*
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்* அது அறிந்து அறிந்து ஓடுமினே.
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து* மற்று ஓர் தெய்வம்,
பாடி ஆடிப் பணிந்து* பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*
கூடி வானவர் ஏத்த நின்ற* திருக்குருகூர் அதனுள்,*
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு* அடிமைபுகுவதுவே
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட* மார்க்கண்டேயன் அவனை*
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது* நாராயணன் அருளே*
கொக்கு அலர் தடம் தாழை வேலித்* திருக்குருகூர் அதனுள்*
மிக்க ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் விளம்புதிரே
விளம்பும் ஆறு சமயமும்* அவைஆகியும் மற்றும் தன்பால்,*
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய* ஆதிப்பிரான் அமரும்,*
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனை,*
உளம் கொள் ஞானத்து வைம்மின்* உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
உறுவது ஆவது எத்தேவும்* எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,*
மறு இல் மூர்த்தியோடு ஒத்து* இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,*
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு* திருக்குருகூர் அதனுள்*
குறிய மாண் உரு ஆகிய* நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே.
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்* வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2)