பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வைகல் பூங் கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*
செய் கொள் செந்நெல் உயர்* திருவண்வண்டூர் உறையும்*
கை கொள் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பி சொல்லீர்* வினையாட்டியேன் காதன்மையே*. (2)
காதல் மென் பெடையோடு* உடன் மேயும் கரு நாராய்*
வேத வேள்வி ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட* நம் பெருமானைக் கண்டு*
பாதம் கைதொழுது பணியீர்* அடியேன் திறமே*.
திறங்கள் ஆகி எங்கும்* செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்*
சிறந்த செல்வம் மல்கு* திருவண்வண்டூர் உறையும்*
கறங்கு சக்கரக் கைக்* கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
இறங்கி நீர் தொழுது பணியீர்* அடியேன் இடரே*
இடர் இல் போகம் மூழ்கி* இணைந்து ஆடும் மட அன்னங்காள்!*
விடல் இல் வேத ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
கடலின் மேனிப்பிரான்* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
உடலம் நைந்து ஒருத்தி* உருகும் என்று உணர்த்துமினே*
உணர்த்தல் ஊடல் உணர்ந்து* உடன் மேயும் மட அன்னங்காள்*
திணர்த்த வண்டல்கள்மேல்* சங்கு சேரும் திருவண்வண்டூர்*
புணர்த்த பூந் தண் துழாய்முடி* நம் பெருமானைக் கண்டு*
புணர்த்த கையினராய்* அடியேனுக்கும் போற்றுமினே*
போற்றி யான் இரந்தேன்* புன்னைமேல் உறை பூங் குயில்காள்*
சேற்றில் வாளை துள்ளும்* திருவண்வண்டூர் உறையும்*
ஆற்றல் ஆழி அங்கை* அமரர் பெருமானைக் கண்டு*
மாற்றம் கொண்டருளீர்* மையல் தீர்வது ஒருவண்ணமே*
ஒருவண்ணம் சென்று புக்கு* எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே*
செரு ஒண் பூம் பொழில் சூழ்* செக்கர் வேலைத் திருவண்வண்டூர்*
கரு வண்ணம் செய்யவாய்* செய்ய கண் செய்ய கை செய்யகால்*
செரு ஒண் சக்கரம் சங்கு* அடையாளம் திருந்தக் கண்டே*.
திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்* ஒண் சிறு பூவாய்*
செருந்தி ஞாழல் மகிழ்* புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*
பெரும் தண் தாமரைக்கண்* பெரு நீள் முடி நால் தடந்தோள்*
கருந் திண் மா முகில் போல்* திருமேனி அடிகளையே*
அடிகள் கைதொழுது* அலர்மேல் அசையும் அன்னங்காள்*
விடிவை சங்கு ஒலிக்கும்* திருவண்வண்டூர் உறையும்*
கடிய மாயன் தன்னை* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
கொடிய வல்வினையேன்* திறம் கூறுமின் வேறுகொண்டே*
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்* வெறி வண்டினங்காள்*
தேறு நீர்ப் பம்பை* வடபாலைத் திருவண்வண்டூர்*
மாறு இல் போர் அரக்கன்* மதிள் நீறு எழச் செற்று உகந்த*
ஏறு சேவகனார்க்கு* என்னையும் உளள் என்மின்களே*
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்* அகல் ஞாலம் கொண்ட*
வன் கள்வன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருவண்வண்டூர்க்கு*
இன்கொள் பாடல் வல்லார்* மதனர் மின்னிடை யவர்க்கே* (2)
மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்* முன்பு நான் அது அஞ்சுவன்*
மன்உடை இலங்கை* அரண் காய்ந்த மாயவனே*
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்* இனி அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும்* தந்து போகு நம்பீ!*. (2)
போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்* செவ்வாய் முறுவலும்*
ஆகுலங்கள் செய்ய* அழிதற்கே நோற்றோமேயாம்?*
தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்* செவி ஓசை வைத்து எழ*
ஆகள் போகவிட்டு* குழல் ஊது போயிருந்தே*.
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!* நின்செய்ய-
வாய் இருங் கனியும் கண்களும்* விபரீதம் இந் நாள்*
வேய் இரும் தடம் தோளினார்* இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*
மா இரும் கடலைக் கடைந்த* பெருமானாலே?*
ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு* அன்று நீ கிடந்தாய்* உன் மாயங்கள்-
மேலை வானவரும் அறியார்* இனி எம் பரமே?*
வேலின் நேர் தடம் கண்ணினார்* விளையாடு சூழலைச் சூழவே நின்று*
காலி மேய்க்க வல்லாய்!* எம்மை நீ கழறேலே*.
கழறேல் நம்பீ!* உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்* திண் சக்கர-
நிழறு தொல் படையாய்!* உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்*
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க* எம்-
குழறு பூவையொடும்* கிளியோடும் குழகேலே*.
குழகி எங்கள் குழமணன்கொண்டு* கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை*
பழகி யாம் இருப்போம்* பரமே இத் திரு அருள்கள்?*
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்* தேவிமை ஈதகுவார் பலர் உளர்*
கழகம் ஏறேல் நம்பீ!* உனக்கும் இளைதே கன்மமே*.
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது* கடல் ஞாலம் உண்டிட்ட*
நின்மலா! நெடியாய்!* உனக்கேலும் பிழை பிழையே*
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி* அது கேட்கில் என் ஐம்மார்*
தன்ம பாவம் என்னார்* ஒரு நான்று தடி பிணக்கே*.
பிணக்கி யாவையும் யாவரும்* பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்*
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்* கதிர் ஞான மூர்த்தியினாய்,
இணக்கி எம்மை எம் தோழிமார்* விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை*
உணக்கி நீ வளைத்தால்* என் சொல்லார் உகவாதவரே?*
உகவையால் நெஞ்சம் உள் உருகி* உன் தாமரைத் தடம் கண் விழிகளின்*
அக வலைப் படுப்பான்* அழித்தாய் உன் திருவடியால்*
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்* யாம் அடு சிறு சோறும் கண்டு* நின்-
முக ஒளி திகழ* முறுவல் செய்து நின்றிலையே*.
நின்று இலங்கு முடியினாய்!* இருபத்தோர் கால் அரசு களைகட்ட*
வென்றி நீள்மழுவா!* வியன் ஞாலம் முன் படைத்தாய்!*
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய* கருமாணிக்கச் சுடர்*
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்* ஆய்ச்சியோமே*.
ஆய்ச்சி ஆகிய அன்னையால்* அன்று வெண்ணெய் வார்த்தையுள்* சீற்ற முண்டு அழு-
கூத்த அப்பன் தன்னை* குருகூர்ச் சடகோபன்*
ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்*
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*. (2)
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்*
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்குகுடித்* திருவிண்ணகர்க் கண்டேனே*. (2)
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்*
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல்சூழ்* திருவிண்ணகர் நல் நகரே*
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்* நிலன் ஆய் விசும்பு ஆய்*
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*.
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்*
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டுகொள்மின்கள் கைதவமே*
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்*
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே*
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்*
பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்*
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே*.
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்* விண்ணோர்-
சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே*.
வன்சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன்சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என்சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே*
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே*. (2)
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்*
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே*. (2)
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்* குன்றம் ஒன்று ஏந்தியதும்*
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்* உட்பட மற்றும் பல*
அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய வினைகளையே அலற்றி,*
இரவும் நன் பகலும் தவிர்கிலன்* என்ன குறை எனக்கே?
கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்* கெண்டை ஒண்கண்*
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்* மணந்ததும் மற்றும்பல,*
மாயக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
நேயத்தோடு கழிந்த போது* எனக்கு எவ் உலகம் நிகரே?
நிகர் இல் மல்லரைச் செற்றதும்* நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,*
சிகர மா களிறு அட்டதும்* இவை போல்வனவும் பிறவும்,*
புகர்கொள் சோதிப் பிரான்தன்* செய்கை நினைந்து புலம்பி என்றும்*
நுகர வைகல் வைகப்பெற்றேன்* எனக்கு என் இனி நோவதுவே?
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்*
சாவப் பால் உண்டதும்* ஊர் சகடம் இறச் சாடியதும்,*
தேவக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
மேவக் காலங்கள் கூடினேன்* எனக்கு என் இனி வேண்டுவதே?
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்* வீங்கு இருள்வாய்-
பூண்டு* அன்று அன்னைப் புலம்ப போய்* அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்*
காண்டல் இன்றி வளர்ந்து* கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,*
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்* எனக்கு என்ன இகல் உளதே?
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்* இமில் ஏறுகள் செற்றதுவும்,*
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்* உட்பட மற்றும்பல,*
அகல் கொள் வையம் அளந்த மாயன்* என்னப்பன் தன் மாயங்களே,*
பகல் இராப் பரவப் பெற்றேன்* எனக்கு என்ன மனப் பரிப்பே?
மனப் பரிப்போடு அழுக்கு* மானிட சாதியில் தான்பிறந்து,*
தனக்கு வேண்டு உருக்கொண்டு* தான் தன சீற்றத்தினை முடிக்கும்,*
புனத் துழாய் முடி மாலை மார்பன்* என் அப்பன் தன் மாயங்களே,*
நினைக்கும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?
நீள் நிலத்தொடு வான் வியப்ப* நிறை பெரும் போர்கள் செய்து*
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்* உட்பட மற்றும்பல,*
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்* என் அப்பன் தன் மாயங்களே*
காணும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?
கலக்க ஏழ் கடல் ஏழ்* மலை உலகு ஏழும் கழியக் கடாய்*
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்* உட்பட மற்றும் பல,*
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்* இவை உடை மால்வண்ணனை,*
மலக்கும் நா உடையேற்கு* மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க* ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி,* மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட* நூற்றிட்டுப் போய்,*
விண்மிசைத் தன தாமமேபுக* மேவிய சோதிதன்தாள்,*
நண்ணி நான் வணங்கப்பெற்றேன்* எனக்கு ஆர்பிறர் நாயகரே?
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்* முழு ஏழ் உலகும்,* தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து* அவை ஆய் அவை அல்லனும் ஆம்,*
கேசவன் அடி இணைமிசைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
தூய ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆவர் துவள் இன்றியே.
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு* தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்!* உமக்கு ஆசை இல்லை விடுமினோ,*
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்* தாமரைத் தடம் கண் என்றும்,*
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க* நின்று நின்று குமுறுமே.
குமுறும் ஓசை விழவு ஒலித்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
அமுத மென் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்* மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,*
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க* நெக்கு ஒசிந்து கரையுமே.
கரை கொள் பைம் பொழில் தண்பணைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
உரை கொள் இன் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்* திசை ஞாலம் தாவி அளந்ததும்,*
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி* நெடும் கண் நீர் மல்க நிற்குமே.
நிற்கும் நால்மறைவாணர் வாழ்* தொலைவில்லிமங்கலம் கண்டபின்,*
அற்கம் ஒன்றும் அற உறாள்* மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,*
கற்கும் கல்வி எல்லாம்* கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,*
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து* உள் மகிழ்ந்து குழையுமே.
குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.
நோக்கும் பக்கம் எல்லாம்* கரும்பொடு செந்நெல்ஓங்கு செந்தாமரை,*
வாய்க்கும் தண் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
நோக்குமேல் அத்திசை அல்லால்* மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,*
வாய்க்கொள் வாசகமும்* மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!
அன்னைமீர்! அணிமாமயில்* சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து*
என்ன வார்த்தையும் கேட்குறாள்* தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,*
முன்னம் நோற்ற விதிகொலோ* முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன்
சின்னமும் திருநாமமும்* இவள் வாயனகள் திருந்தவே.
திருந்து வேதமும் வேள்வியும்* திருமா மகளிரும் தாம்,* மலிந்து
இருந்து வாழ் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
கருந் தடம் கண்ணி கைதொழுத* அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்*
இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'* என்று என்றே நைந்து இரங்குமே.
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ* இவள் கண்ண நீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* 'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,*
துரங்கம் வாய் பிளந்தான் உறை* தொலைவில்லிமங்கலம் என்று,* தன்
கரங்கள் கூப்பித் தொழும்* அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.
பின்னைகொல் நிலமாமகள்கொல்?* திருமகள்கொல் பிறந்திட்டாள்,*
என்ன மாயம்கொலோ?* இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,*
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்* தொலைவில்லிமங்கலம்-
சென்னியால் வணங்கும்* அவ் ஊர்த் திருநாமம்* கேட்பது சிந்தையே.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த* வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்* அடிமைசெய்வார் திருமாலுக்கே
மாலுக்கு* வையம் அளந்த மணாளற்கு,*
நீலக் கருநிற* மேக நியாயற்கு,*
கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*
என் கொங்குஅலர்ஏலக் குழலி* இழந்தது சங்கே.
சங்கு வில் வாள் தண்டு* சக்கரக் கையற்கு,*
செங்கனிவாய்ச்* செய்ய தாமரைக் கண்ணற்கு,*
கொங்கு அலர் தண் அம் துழாய்* முடியானுக்கு,* என்
மங்கை இழந்தது* மாமை நிறமே.
நிறம் கரியானுக்கு* நீடு உலகு உண்ட,*
திறம் கிளர் வாய்ச்* சிறுக் கள்வன் அவற்கு,*
கறங்கிய சக்கரக்* கையவனுக்கு,* என்
பிறங்கு இரும் கூந்தல்* இழந்தது பீடே.
பீடு உடை நான்முகனைப்* படைத்தானுக்கு,*
மாடு உடை வையம் அளந்த* மணாளற்கு,*
நாடு உடை மன்னர்க்குத்* தூதுசெல் நம்பிக்கு,* என்
பாடு உடை அல்குல்* இழந்தது பண்பே.
பண்பு உடை வேதம்* பயந்த பரனுக்கு,*
மண் புரை வையம் இடந்த* வராகற்கு,*
தெண் புனல் பள்ளி* எம் தேவ பிரானுக்கு,* என்
கண்புனை கோதை* இழந்தது கற்பே.
கற்பகக் கா அன* நல் பல தோளற்கு,*
பொன் சுடர்க் குன்று அன்ன* பூந்தண் முடியற்கு,*
நல் பல தாமரை* நாள் மலர்க் கையற்கு,* என்
வில் புருவக்கொடி* தோற்றது மெய்யே.
மெய் அமர் பல்கலன்* நன்கு அணிந்தானுக்கு,*
பை அரவின் அணைப்* பள்ளியினானுக்கு,*
கையொடு கால்செய்ய* கண்ண பிரானுக்கு,* என்
தையல் இழந்தது* தன்னுடைச் சாயே.
சாயக் குருந்தம் ஒசித்த* தமியற்கு,*
மாயச் சகடம் உதைத்த* மணாளற்கு,*
பேயைப் பிணம்படப்* பால் உண் பிரானுக்கு,* என்
வாசக் குழலி* இழந்தது மாண்பே .
மாண்பு அமை கோலத்து* எம் மாயக் குறளற்கு,*
சேண் சுடர்க் குன்று அன்ன* செஞ்சுடர் மூர்த்திக்கு,*
காண் பெரும் தோற்றத்து* எம் காகுத்த நம்பிக்கு,* என்
பூண் புனை மென்முலை* தோற்றது பொற்பே.
பொற்பு அமை நீள் முடிப்* பூந்தண் துழாயற்கு,*
மல் பொரு தோள் உடை* மாயப் பிரானுக்கு,*
நிற்பன பல் உருவாய்* நிற்கும் மாயற்கு,* என்
கற்பு உடையாட்டி* இழந்தது கட்டே.
கட்டு எழில் சோலை* நல் வேங்கடவாணனைக்,*
கட்டு எழில் தென் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
கட்டு எழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
கட்டு எழில் வானவர்* போகம் உண்பாரே.
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
ஊரும் நாடும் உலகமும்* தன்னைப்போல் அவனுடைய*
பேரும் தார்களுமே பிதற்ற* கற்பு வான் இடறி,*
சேரும் நல் வளம்சேர்* பழனத் திருக்கோளூர்க்கே,*
போரும் கொல் உரையீர்* கொடியேன் கொடி பூவைகளே!
பூவை பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,*
யாவையும் திருமால்* திருநாமங்களே கூவி எழும்,* என்
பாவை போய் இனித்* தண் பழனத் திருக்கோளூர்க்கே,*
கோவை வாய் துடிப்ப* மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?
கொல்லை என்பர்கொலோ* குணம் மிக்கனள் என்பர்கொலோ,*
சில்லை வாய்ப் பெண்டுகள்* அயல் சேரி உள்ளாரும் எல்லே,*
செல்வம் மல்கி அவன்கிடந்த* திருக்கோளூர்க்கே,*
மேல் இடை நுடங்க* இளமான் செல்ல மேவினளே.
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்* என் சிறுத்-
தேவிபோய்,* இனித்தன் திருமால்* திருக்கோளூரில்,*
பூ இயல் பொழிலும்* தடமும் அவன் கோயிலும் கண்டு,*
ஆவி உள் குளிர* எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?
இன்று எனக்கு உதவாது அகன்ற* இளமான் இனிப்போய்,*
தென் திசைத் திலதம் அனைய* திருக்கோளூர்க்கே
சென்று,* தன் திருமால் திருக்கண்ணும்* செவ்வாயும் கண்டு,*
நின்று நின்று நையும்* நெடும் கண்கள் பனி மல்கவே.
மல்கு நீர்க் கண்ணொடு* மையல் உற்ற மனத்தினளாய்,*
அல்லும் நன் பகலும்* நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,*
செல்வம் மல்கி அவன் கிடந்த* திருக்கோளுர்க்கே,*
ஒல்கி ஒல்கி நடந்து* எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?
ஒசிந்த நுண் இடைமேல்* கையை வைத்து நொந்து நொந்து,*
கசிந்த நெஞ்சினளாய்* கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,*
ஒசிந்த ஒண் மலராள்* கொழுநன் திருக்கோளூர்க்கே,*
கசிந்த நெஞ்சினளாய்* எம்மை நீத்த எம் காரிகையே?
காரியம் நல்லனகள்* அவை காணில் என் கண்ணனுக்கு என்று,*
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்* கிடக்க இனிப் போய்,*
சேரி பல் பழி தூஉய் இரைப்ப* திருக்கோளூர்க்கே,*
நேரிழை நடந்தாள்* எம்மை ஒன்றும் நினைந்திலளே.
நினைக்கிலேன் தெய்வங்காள்* நெடும் கண் இளமான் இனிப்போய்*
அனைத்து உலகும் உடைய* அரவிந்தலோசனனைத்,*
தினைத்தனையும் விடாள்* அவன் சேர் திருக்கோளூர்க்கே,*
மனைக்கு வான் பழியும் நினையாள்* செல்ல வைத்தனளே.
வைத்த மா நிதியாம்* மதுசூதனையே அலற்றி,*
கொத்து அலர் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
சித்தம் வைத்து உரைப்பார்* திகழ் பொன் உலகு ஆள்வாரே.
பொன் உலகு ஆளீரோ?* புவனி முழுது ஆளீரோ?,*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில்வண்ணன் கண்ணன்,*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே?.
மையமர் வாள் நெடும்கண்* மங்கைமார் முன்பு என் கை இருந்து,*
நெய்யமர் இன் அடிசில்* நிச்சல் பாலொடு மேவீரோ,*
கையமர் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
மெய்யமர் காதல் சொல்லி* கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?
ஓடிவந்து என் குழல்மேல்* ஒளிமாமலர் ஊதீரோ,*
கூடிய வண்டினங்காள்!* குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்*
ஆடிய மா நெடும் தேர்ப்படை* நீறு எழச் செற்ற பிரான்,*
சூடிய தண் துளவம் உண்ட* தூமது வாய்கள் கொண்டே?
தூமதுவாய்கள் கொண்டுவந்து* என் முல்லைகள்மேல் தும்பிகாள்,*
பூ மது உண்ணச் செல்லில்* வினையேனைப் பொய்செய்து அகன்ற,*
மாமதுவார் தண்துழாய்முடி* வானவர் கோனைக் கண்டு,*
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்* கண்டீர் நுங்கட்கே.
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்* யான் வளர்த்த கிளிகாள்,*
வெம் கண் புள் ஊர்ந்து வந்து* வினையேனை நெஞ்சம் கவர்ந்த*
செங்கண் கருமுகிலை* செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,*
எங்குச் சென்றாகிலும் கண்டு* இதுவோ தக்கவாறு என்மினே.
என் மின்னு நூல் மார்வன்* என் கரும் பெருமான் என் கண்ணன்,*
தன் மன்னு நீள் கழல்மேல்* தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,*
கல்மின்கள் என்று உம்மையான்* கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*
செல்மின்கள் தீவினையேன்* வளர்த்த சிறு பூவைகளே!
பூவைகள் போல் நிறத்தன்* புண்டரீகங்கள் போலும் கண்ணன்,*
யாவையும் யாவரும் ஆய்* நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,*
மாவை வல் வாய் பிளந்த* மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,*
பாவைகள்! தீர்க்கிற்றிரே* வினையாட்டியேன் பாசறவே.
பாசறவு எய்தி இன்னே* வினையேன் எனை ஊழி நைவேன்?*
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!* அருள்செய்து ஒருநாள்,*
மாசு அறு நீலச்சுடர்முடி* வானவர் கோனைக் கண்டு,*
ஏசு அறும் நும்மை அல்லால்* மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.
பேர்த்து மற்று ஓர் களைகண்* வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,*
நீர்த் திரைமேல் உலவி* இரை தேரும் புதா இனங்காள்*
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்* விண்ணவர் கோனைக் கண்டு,*
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்* வைகல் வந்திருந்தே.
வந்திருந்து உம்முடைய* மணிச் சேவலும் நீரும் எல்லாம்,*
அந்தரம் ஒன்றும் இன்றி* அலர்மேல் அசையும் அன்னங்காள்,*
என் திரு மார்வற்கு என்னை* இன்னவாறு இவள் காண்மின் என்று,*
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்* மறுமாற்றங்களே.
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு* மதுசூத பிரான் அடிமேல்,*
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தோற்றங்கள் ஆயிரத்துள்* இவையும் ஒருபத்தும் வல்லார்*
ஊற்றின்கண் நுண் மணல்போல்* உருகாநிற்பர் நீராயே.
நீராய் நிலனாய்* தீயாய் காலாய் நெடுவானாய்,*
சீரார் சுடர்கள் இரண்டாய்* சிவனாய் அயனானாய்,*
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி* கொடியேன்பால்
வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
மண்ணும் விண்ணும் மகிழ* குறள் ஆய் வலம் காட்டி,*
மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*
நண்ணி உனை நான்* கண்டு உகந்து கூத்தாட,*
நண்ணி ஒருநாள்* ஞாலத்தூடே நடவாயே.
ஞாலத்தூடே நடந்தும் நின்றும்* கிடந்து இருந்தும்,*
சாலப் பலநாள்* உகம்தோறு உயிர்கள் காப்பானே,*
கோலத் திரு மா மகளோடு* உன்னைக் கூடாதே,*
சாலப் பல நாள்* அடியேன் இன்னும் தளர்வேனோ?
தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுரர் உடல் வேறாப்,*
பிளந்து வீய* திருக்கால் ஆண்ட பெருமானே,*
கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர் சூழ,*
விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே.
விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!* கடல் சேர்ப்பாய்,*
மண்மீது உழல்வாய்!* இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,*
எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!* எனது ஆவி,*
உண் மீது ஆடி* உருக் காட்டாதே ஒளிப்பாயோ?
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்* பரவை நிலம் எல்லாம்-
தாயோர்,* ஓர் அடியால்* எல்லா உலகும் தடவந்த-
மாயோன்,* உன்னைக் காண்பான்* வருந்தி எனைநாளும்,*
தீயோடு உடன்சேர் மெழுகாய்* உலகில் திரிவேனோ?
உலகில் திரியும் கரும கதி ஆய்* உலகம் ஆய்,*
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்* புற அண்டத்து,*
அலகில் பொலிந்த* திசை பத்து ஆய அருவேயோ,*
அலகில் பொலிந்த* அறிவிலேனுக்கு அருளாயே.
அறிவிலேனுக்கு அருளாய்* அறிவார் உயிர் ஆனாய்,*
வெறி கொள் சோதி மூர்த்தி!* அடியேன் நெடுமாலே,*
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு* இன்னம் கெடுப்பாயோ,*
பிறிது ஒன்று அறியா அடியேன்* ஆவி திகைக்கவே?
ஆவி திகைக்க* ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,*
பாவியேனைப்* பல நீ காட்டிப் படுப்பாயோ,*
தாவி வையம் கொண்ட* தடம் தாமரை கட்கே,*
கூவிக் கொள்ளும் காலம்* இன்னம் குறுகாதோ?
குறுகா நீளா* இறுதிகூடா எனை ஊழி,*
சிறுகா பெருகா* அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,*
மறு கால் இன்றி மாயோன்* உனக்கே ஆளாகும்,*
சிறு காலத்தை உறுமோ* அந்தோ தெரியிலே?
தெரிதல் நினைதல்* எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,*
உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*
தெரியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரிய தொண்டர் ஆக்கும்* உலகம் உண்டாற்கே.
உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.
கூறாய் நீறு ஆய் நிலன் ஆகி* கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,*
சீறா எரியும் திரு நேமி வலவா!* தெய்வக் கோமானே,*
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும்* திருவேங்கடத்தானே,*
ஆறா அன்பில் அடியேன்* உன் அடிசேர் வண்ணம் அருளாயே.
வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!* மாய அம்மானே,*
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!* இமையோர் அதிபதியே,*
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்* திருவேங்கடத்தானே,*
அண்ணலே! உன் அடிசேர* அடியேற்கு ஆஆ என்னாயே!
ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்* அசுரர் வாழ் நாள்மேல்,*
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!* திரு மா மகள் கேள்வா-
தேவா* சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
பூ ஆர் கழல்கள் அருவினையேன்* பொருந்துமாறு புணராயே.
புணரா நின்ற மரம் ஏழ்* அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,*
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்* நடுவே போன முதல்வா ஓ,*
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்* திருவேங்கடத்தானே,*
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்* சேர்வது அடியேன் எந்நாளே?
,எந்நாளே நாம் மண் அளந்த* இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,*
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி* இறைஞ்சி இனம் இனமாய்,*
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்* திருவேங்கடத்தானே,*
மெய்ந் நான் எய்தி எந்நாள்* உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!* இமையோர் அதிபதியே,*
கொடியா அடு புள் உடையானே!* கோலக் கனிவாய்ப் பெருமானே,*
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!* திருவேங்கடத்து எம் பெருமானே,*
நொடி ஆர் பொழுதும் உன பாதம்* காண நோலாது ஆற்றேனே
நோலாது ஆற்றேன் உன பாதம்* காண என்று நுண் உணர்வின்,*
நீல் ஆர் கண்டத்து அம்மானும்* நிறை நான்முகனும் இந்திரனும்,*
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்* திருவேங்கடத்தானே,*
மாலாய் மயக்கி அடியேன்பால்* வந்தாய் போலே வாராயே.
வந்தாய் போலே வாராதாய்!* வாராதாய் போல் வருவானே,*
செந்தாமரைக் கண் செங்கனிவாய்* நால் தோள் அமுதே! எனது உயிரே,*
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்* திருவேங்கடத்தானே,*
அந்தோ அடியேன் உன பாதம்* அகலகில்லேன் இறையுமே.
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து* அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்*
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்* பழனக் குருகூர்ச் சடகோபன்,*
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்* திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,*
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் நிலாவுவரே.