பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
பின்னை மணாளனை* பேரிற் கிடந்தானை*
முன்னை அமரர்* முதற் தனி வித்தினை*
என்னையும் எங்கள்* குடி முழுது ஆட்கொண்ட*
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)
பேயின் முலை உண்ட* பிள்ளை இவன் முன்னம்*
மாயச் சகடும்* மருதும் இறுத்தவன்*
காயாமலர் வண்ணன்* கண்ணன் கருங்குழல்*
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!
தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!
திண்ணக் கலத்திற்* திரை உறிமேல் வைத்த*
வெண்ணெய் விழுங்கி* விரைய உறங்கிடும்*
அண்ணல் அமரர்* பெருமானை ஆயர்தம்*
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!
பள்ளத்தில் மேயும்* பறவை உருக் கொண்டு*
கள்ள அசுரன்* வருவானைத் தான் கண்டு*
புள் இது என்று* பொதுக்கோ வாய் கீண்டிட்ட*
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!
கற்றினம் மேய்த்துக்* கனிக்கு ஒரு கன்றினைப்*
பற்றி எறிந்த* பரமன் திருமுடி*
உற்றன பேசி* நீ ஓடித் திரியாதே*
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!
கிழக்கிற் குடி மன்னர்* கேடு இலாதாரை*
அழிப்பான் நினைந்திட்டு* அவ் ஆழிஅதனால்*
விழிக்கும் அளவிலே* வேர் அறுத்தானைக்*
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
பிண்டத் திரளையும்* பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்*
உண்டற்கு வேண்டி* நீ ஓடித் திரியாதே*
அண்டத்து அமரர்* பெருமான் அழகு அமர்*
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
உந்தி எழுந்த* உருவ மலர்தன்னில்*
சந்தச் சதுமுகன்* தன்னைப் படைத்தவன்*
கொந்தக் குழலைக்* குறந்து புளி அட்டித்*
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
மன்னன்தன் தேவிமார்* கண்டு மகிழ்வு எய்த*
முன் இவ் உலகினை* முற்றும் அளந்தவன்*
பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்*
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!
கண்டார் பழியாமே* அக்காக்காய் கார்வண்ணன்!*
வண்டு ஆர் குழல்வார* வா என்ற ஆய்ச்சி சொல்*
விண் தோய் மதில்* வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்*
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* உலகு உய்ய நின்றானை*
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை* கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில்*
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்* தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை* அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
குடம்ஆடு கூத்தன் தன்னை* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ* பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,*
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி* கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை* பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
வளைமருப்பின் ஏனம்ஆகி* இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்*
பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை* பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை*
ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்*
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை* பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை*
தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யம்என்னும்* தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி*
எண்ணானை எண்இறந்த புகழினானை* இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
கண்ணாரக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை* படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
தென்இலங்கை அரக்கர்வேந்தை* விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு*
பண்டுஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
தொண்டனேன் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்* படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்*
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்* தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்* வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்* தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.
அம் தாமத்து அன்பு செய்து* என் ஆவி சேர் அம்மானுக்கு,*
அம் தாமம் வாழ் முடி சங்கு* ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்* செங்கனி வாய் செங்கமலம்,*
செந்தாமரை அடிகள்* செம்பொன் திரு உடம்பே.
திரு உடம்பு வான் சுடர்* செந்தாமரை கண் கை கமலம்,*
திரு இடமே மார்வம்* அயன் இடமே கொப்பூழ்,*
ஒருவு இடமும்* எந்தை பெருமாற்கு அரனே ஓ,*
ஒருவு இடம் ஒன்று இன்றி* என்னுள் கலந்தானுக்கே.
என்னுள் கலந்தவன்* செங்கனி வாய் செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்குக்* கண் பாதம் கை கமலம்,*
மன்னும் முழு ஏழ் உலகும்* வயிற்றின் உள,*
தன்னுள் கலவாதது* எப் பொருளும் தான் இலையே.
எப் பொருளும் தான் ஆய்* மரகதக் குன்றம் ஒக்கும்.*
அப்பொழுதைத் தாமரைப்பூக்* கண் பாதம் கை கமலம்,*
எப்பொழுதும் நாள் திங்கள்* ஆண்டு ஊழி ஊழிதொறும்,*
அப்பொழுதைக்கு அப்பொழுது* என் ஆரா அமுதமே.
ஆரா அமுதமாய்* அல் ஆவியுள் கலந்த,*
கார் ஆர் கருமுகில் போல்* என் அம்மான் கண்ணனுக்கு,*
நேரா வாய் செம்பவளம்* கண் பாதம் கை கமலம்,*
பேர் ஆரம் நீள் முடி நாண்,* பின்னும் இழை பலவே.
பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டு உண்டு* கேட்டு உற்று மோந்து இன்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பு அணை மேலாற்கேயோ.
பாம்பு அணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்* ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*
தேம் பணைய சோலை* மராமரம் ஏழ் எய்ததுவும்,*
பூம் பிணைய தண் துழாய்ப்* பொன் முடி அம் போர் ஏறே.
பொன் முடி அம் போர் ஏற்றை* எம்மானை நால் தடம் தோள்,*
தன் முடிவு ஒன்று இல்லாத* தண் துழாய் மாலையனை,*
என் முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*
சொல்முடிவு காணேன் நான்* சொல்லுவது என் சொல்லீரே.
சொல்லீர் என் அம்மானை* என் ஆவி ஆவிதனை,*
எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*
நல்ல அமுதம்* பெறற்கு அரிய வீடும் ஆய்,*
அல்லி மலர் விரை ஒத்து* ஆண் அல்லன் பெண் அலனே.
ஆண் அல்லன் பெண் அல்லன்* அல்லா அலியும் அல்லன்,*
காணலும் ஆகான்* உளன் அல்லன் இல்லை அல்லன்,*
பேணுங்கால் பேணும்* உரு ஆகும் அல்லனும் ஆம்,*
கோணை பெரிது உடைத்து* எம் பெம்மானைக் கூறுதலே.
கூறுதல் ஒன்று ஆராக்* குடக் கூத்த அம்மானைக்,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
கூறுதல் வல்லார் உளரேல்* கூடுவர் வைகுந்தமே.