பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
ஆனிரை மேய்க்க நீ போதி* அருமருந்து ஆவது அறியாய்*
கானகம் எல்லாம் திரிந்து* உன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப்* பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2)
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
உரு உடையாய்! உலகு ஏழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
திரு உடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்ட வாராய்
மச்சொடு மாளிகை ஏறி* மாதர்கள்தம் இடம் புக்கு*
கச்சொடு பட்டைக் கிழித்து* காம்பு துகில் அவை கீறி*
நிச்சலும் தீமைகள் செய்வாய்!* நீள் திருவேங்கடத்து எந்தாய்!*
பச்சைத் தமனகத்தோடு* பாதிரிப் பூச் சூட்ட வாராய்.
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்* தீமை செய்யாதே*
மருவும் தமனகமும் சீர்* மாலை மணம் கமழ்கின்ற*
புருவம் கருங்குழல் நெற்றி* பொலிந்த முகிற்-கன்று போலே*
உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.
புள்ளினை வாய் பிளந்திட்டாய்!* பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!*
கள்ள அரக்கியை மூக்கொடு* காவலனைத் தலை கொண்டாய்!*
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க* அஞ்சாது அடியேன் அடித்தேன்*
தெள்ளிய நீரில் எழுந்த* செங்கழுநீர் சூட்ட வாராய்.
எருதுகளோடு பொருதி* ஏதும் உலோபாய் காண் நம்பீ!*
கருதிய தீமைகள் செய்து* கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
தெருவின்கண் தீமைகள் செய்து* சிக்கென மல்லர்களோடு*
பொருது வருகின்ற பொன்னே* புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே!*
மடம் கொள் மதிமுகத்தாரை* மால்செய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.
சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!*
சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!*
ஆமாறு அறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!*
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.
அண்டத்து அமரர்கள் சூழ* அத்தாணியுள் அங்கு இருந்தாய்!*
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!* தூமலராள் மணவாளா!*
உண்டிட்டு உலகினை ஏழும்* ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!*
கண்டு நான் உன்னை உகக்கக்* கருமுகைப் பூச் சூட்ட வாராய்.
செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி*
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்* இன்று இவை சூட்ட வா என்று*
மண் பகர் கொண்டானை* ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை*
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்* பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)
திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு* நின்தாள் நயந்திருந்த இவளை*
உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்*
குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்* கோல நல் மலர் குழற்கு அணியாள்*
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த* மால் என்னும் மால் இன மொழியாள்*
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்* தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்*
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்* பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்* வளைகளும் இறை நில்லா*
என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.
'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்* 'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்*
'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா* தென்றலும் தீயினில் கொடிதுஆம்*
தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்* சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்*
ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்* உருகும்நின் திருஉரு நினைந்து*
காதன்மை பெரிது கையறவு உடையள்* கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்*
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது* தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்*
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்* தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை*
வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த* வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* மென்முலை பொன்பயந்திருந்த*
என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்* உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்*
'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை* மாயனே! 'என்று வாய்வெருவும்*
களங் கனி முறுவல் காரிகை பெரிது* கவலையோடு அவலம்சேர்ந்திருந்த*
இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு* அழியுமால் என்உள்ளம்!' என்னும்*
புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்* 'போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி* கொடிஇடை நெடுமழைக் கண்ணி*
இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்* பொருகயல் கண்துயில் மறந்தாள்*
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது* இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்*
மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* வீங்கிய வனமுலை யாளுக்கு*
என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம்மாயனே! அருளாய்'*
என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை*
மன்னுமா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய்ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)
கேசவன் தமர்* கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மா சதிர் இது பெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம் பிரான் எம்மான்* நாராயணனாலே.
நாரணன் முழு ஏழ் உலகுக்கும்* நாதன் வேத மயன்,*
காரணம் கிரிசை கருமம் இவை* முதல்வன் எந்தை,*
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்* தொழுது ஏத்த நின்று,*
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்* என் மாதவனே.
மாதவன் என்றதே கொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாது அவங்களும் சேர்கொடேன் என்று* என்னுள் புகுந்து இருந்து,*
தீது அவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக் கண் குன்றம்,*
கோது அவம் இல் என் கன்னல் கட்டி* எம்மான் என் கோவிந்தனே.
கோவிந்தன் குடக் கூத்தன்* கோவலன் என்று என்றே குனித்துத்*
தேவும் தன்னையும்* பாடி ஆடத் திருத்தி* என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும்* பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மேவும் தன்மையம் ஆக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே.
விட்டு இலங்கு செஞ்சோதித்* தாமரை பாதம் கைகள் கண்கள,*
விட்டு இலங்கு கருஞ்சுடர்* மலையே திரு உடம்பு,*
விட்டு இலங்கு மதியம் சீர்* சங்கு சக்கரம் பரிதி,*
விட்டு இலங்கு முடி அம்மான்* மதுசூதனன் தனக்கே.
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று* எத்தாலும் கருமம் இன்றி,*
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட* நின்று ஊழி ஊழிதொறும்,*
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே.
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்* எம்மான் என் செங்கனி வாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனன் என்று என்று,* உள்ளி
பரவிப் பணிந்து* பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே
வாமனன் என் மரகத வண்ணன்* தாமரைக் கண்ணினன்-
காமனைப் பயந்தாய்,* என்று என்று உன் கழல்* பாடியே பணிந்து,*
தூ மனத்தனனாய்ப்* பிறவித் துழதி நீங்க,* என்னைத்
தீ மனம் கெடுத்தாய்* உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்* என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ,* அலமந்து கண்கள் நீர் மல்கி* வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
மரீஇய தீவினை மாள இன்பம் வளர* வைகல் வைகல்
இரீஇ* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே.
இருடீகேசன் எம் பிரான்* இலங்கை அரக்கர் குலம்,*
முருடு தீர்த்த பிரான் எம்மான்* அமரர் பெம்மான் என்று என்று,*
தெருடியாகில் நெஞ்சே வணங்கு* திண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல் கண்டாய்* நம்பி பற்பநாபனையே.
பற்பநாபன் உயர்வு அற உயரும்* பெரும் திறலோன்,*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு* எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,* என் அமுதம் கார் முகில் போலும்* வேங்கட நல்
வெற்பன்,* விசும்போர் பிரான்* எந்தை தாமோதரனே.
தாமோதரனை தனி முதல்வனை* ஞாலம் உண்டவனை,*
ஆமோ தரம் அறிய* ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
தாமோதரன் உரு ஆகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோ தரம் அறிய* எம்மானை என் ஆழி வண்ணனையே.
வண்ண மா மணிச் சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு* அண்ணல் தாள் அணைவிக்குமே.