பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வேலிக் கோல் வெட்டி* விளையாடு வில் ஏற்றி*
தாலிக் கொழுந்தைத்* தடங்கழுத்திற் பூண்டு*
பீலித் தழையைப்* பிணைத்துப் பிறகிட்டு*
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா!
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க* நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.
கறுத்திட்டு எதிர்நின்ற* கஞ்சனைக் கொன்றான்*
பொறுத்திட்டு எதிர்வந்த* புள்ளின் வாய் கீண்டான்*
நெறித்த குழல்களை* நீங்க முன் ஓடிச்*
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா!
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!
ஒன்றே உரைப்பான்* ஒரு சொல்லே சொல்லுவான்*
துன்று முடியான்* துரியோதனன் பக்கல்*
சென்று அங்குப் பாரதம்* கையெறிந்தானுக்குக்*
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா
கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.
சீர் ஒன்று தூதாய்த்* திரியோதனன் பக்கல்*
ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்*
பார் ஒன்றிப் பாரதம்* கைசெய்து பார்த்தற்குத்*
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
ஆலத்து இலையான்* அரவின் அணை மேலான்*
நீலக் கடலுள்* நெடுங்காலம் கண்வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே* பார்த்தற்கு அருள்செய்த*
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
பொற்றிகழ்* சித்திரகூடப் பொருப்பினில்*
உற்ற வடிவில்* ஒரு கண்ணும் கொண்ட* அக்
கற்றைக் குழலன்* கடியன் விரைந்து உன்னை*
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா!
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!
மின்னிடைச் சீதை பொருட்டா* இலங்கையர்*
மன்னன் மணிமுடி* பத்தும் உடன் வீழத்*
தன் நிகர் ஒன்று இல்லாச்* சிலை கால் வளைத்து இட்ட*
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா!
வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
தென் இலங்கை மன்னன்* சிரம் தோள் துணிசெய்து*
மின் இலங்கும் பூண்* விபீடண நம்பிக்கு*
என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற*
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா!
வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.
அக்காக்காய்! நம்பிக்குக்* கோல் கொண்டு வா என்று*
மிக்காள் உரைத்த சொல்* வில்லிபுத்தூர்ப் பட்டன்*
ஒக்க உரைத்த* தமிழ் பத்தும் வல்லவர்*
மக்களைப் பெற்று* மகிழ்வர் இவ் வையத்தே.
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி* அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே. (2)
பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
கார்வண்ண முது முந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே.
ஏனத்தின்உருவுஆகி* நிலமங்கை எழில் கொண்டான்*
வானத்தில்அவர் முறையால்* மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளிஉருவை* நினைவார் என் நாயகரே. (2)
விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல் இயலார்*
கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*
கண்டாரை கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரைக்,
கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குலதெய்வமே.
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*
விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே!
புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*
நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,*
கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வலங்கொள் மனத்தார்அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே!
பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணா*
கஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே!
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்து வன் பகட்டால்*
உழும் நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல்மல்லைத் தலசயனம்*
தொழும் நீர் மனத்தவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே .
பிணங்கள் இடு காடு அதனுள்* நடம் ஆடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்*
விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என்தன் மட நெஞ்சே!
கடி கமழும் நெடு மறுகின்* கடல்மல்லைத் தலசயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர்தம்* முதல்வர் ஆவாரே. (2)
வைகுந்தா மணிவண்ணனே* என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,*
வைகும் வைகல் தோறும்* அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய் குந்தா* உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..
சிக்கெனச் சிறிது ஓர் இடமும்* புறப்படாத் தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்* துளக்கு அற்று அமுதம் ஆய்,* எங்கும்
பக்கம் நோக்கு அறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே.
தாமரைக் கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய் விரைப்
பூ மருவு கண்ணி* எம் பிரானை பொன்மலையை,*
நாம் மருவி நன்கு ஏத்தி* உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,* நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த* பான்மையே வள்ளலே.
வள்ளலே மதுசூதனா* என் மரகத மலையே,* உனை நினைந்து,
எள்கல் தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி* களித்து உகந்து உகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே.
உய்ந்து போந்து என் உலப்பு இலாத* வெம் தீவினைகளை நாசம் செய்து* உனது
அந்தம் இல் அடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்* பாற்கடல் யோக நித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்து செய்தே.
உன்னைச் சிந்தை செய்து செய்து,* உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி* என்
முன்னைத் தீவினைகள்* முழு வேர் அரிந்தனன் யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன் அகல் மார்வம் கீண்ட* என்
முன்னைக் கோளரியே* முடியாதது என் எனக்கே.
முடியாதது என் எனக்கேல் இனி?* முழு ஏழ் உலகும் உண்டான்* உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான்* அகல்வானும் அல்லன் இனி,*
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து* எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,*
விடியா வெம் நரகத்து என்றும்* சேர்தல் மாறினரே.
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப் பாறி அசுரர் தம்* பல் குழாங்கள் நீறு எழ,* பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய்* உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.
எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ* ஒரு வாளி கோத்த வில்லா,*
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வான் ஏறே* இனி எங்குப் போகின்றதே?
போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்* தாய் தந்தை உயிர்-
ஆகின்றாய்* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண் வேங்கடம்
மேகின்றாய்* தண் துழாய் விரை நாறு கண்ணியனே.
கண்ணித் தண் அம் துழாய் முடிக்* கமலத் தடம் பெருங் கண்ணனைப்,* புகழ்
நண்ணி தென் குருகூர்ச்* சடகோபன் மாறன் சொன்ன,*
எண்ணில் சோர்வு இல் அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,*
பண்ணில் பாட வல்லார்* அவர் கேசவன் தமரே.