பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
மெச்சு ஊது சங்கம் இடத்தான்* நல் வேய் ஊதி*
பொய்ச் சூதிற் தோற்ற* பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று* பாரதம் கைசெய்த*
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)
மலை புரை தோள் மன்னவரும்* மாரதரும் மற்றும்*
பலர் குலைய* நூற்றுவரும் பட்டழிய* பார்த்தன்
சிலை வளையத்* திண்தேர்மேல் முன்நின்ற* செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
காயும் நீர் புக்குக்* கடம்பு ஏறி* காளியன்
தீய பணத்திற்* சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி*
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
இருட்டிற் பிறந்து போய்* ஏழை வல் ஆயர்*
மருட்டைத் தவிர்ப்பித்து* வன் கஞ்சன் மாளப்-
புரட்டி* அந்நாள் எங்கள்* பூம்பட்டுக் கொண்ட*
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
சேப் பூண்ட* சாடு சிதறித்* திருடி நெய்க்கு
ஆப்பூண்டு* நந்தன் மனைவி கடை தாம்பால்*
சோப்பூண்டு துள்ளித்* துடிக்கத் துடிக்க* அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
செப்பு இள மென்முலைத்* தேவகி நங்கைக்குச்*
சொப்படத் தோன்றி* தொறுப்பாடியோம் வைத்த*
துப்பமும் பாலும்* தயிரும் விழுங்கிய*
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
தத்துக் கொண்டாள் கொலோ?* தானே பெற்றாள் கொலோ?*
சித்தம் அனையாள்* அசோதை இளஞ்சிங்கம்*
கொத்து ஆர் கருங்குழற்* கோபால கோளரி*
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
கொங்கை வன்* கூனிசொற் கொண்டு குவலயத்*
துங்கக் கரியும்* பரியும் இராச்சியமும்*
எங்கும் பரதற்கு அருளி* வன்கான் அடை*
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பதக முதலை* வாய்ப் பட்ட களிறு*
கதறிக் கைகூப்பி* என் கண்ணா! கண்ணா! என்ன*
உதவப் புள் ஊர்ந்து* அங்கு உறுதுயர் தீர்த்த*
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
வல்லாள் இலங்கை மலங்கச்* சரந் துரந்த*
வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்* பாடல் இவை பத்தும்
வல்லார் போய்* வைகுந்தம் மன்னி இருப்பரே (2)
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிதுஉவந்து
மா தவ மானவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*
மண்மிசைப் பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
வேங்கடத்து அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
வானிடைக் கொண்டு போய் இடவும்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்*
மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு*
வானவர் ஆவியாய் இருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அம் கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை*
மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்*
வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்* சிலர் பேசக் கேட்டிருந்தே*
என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்று சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கட மலை கோயில் மேவிய*
ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.
கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்*
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னம் ஆய் நிகழ்ந்த* அமரர் பெருமானைக்*
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி* இன் தமிழால் உரைத்த*
இம் மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே* (2)
வாயும் திரை உகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.
கோள் பட்ட சிந்தையையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேண் பட்டயாமங்கள்* சேராது இரங்குதியால்,*
ஆள் பட்ட எம்மேபோல்,* நீயும் அரவு அணையான்,*
தாள் பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே.
காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நீ முற்றக் கண்துயிலாய்* நெஞ்சு உருகி ஏங்குதியால்,*
தீ முற்றத் தென் இலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*
யாம் உற்றது உற்றாயோ?* வாழி கனை கடலே
கடலும் மலையும்* விசும்பும் துழாய் எம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண் வாடாய்,*
அடல் கொள் படை ஆழி* அம்மானைக் காண்பான் நீ,*
உடலம் நோய் உற்றாயோ* ஊழிதோறு ஊழியே.
ஊழிதோறு ஊழி* உலகுக்கு நீர்கொண்டு,*
தோழியரும் யாமும் போல்* நீராய் நெகிழ்கின்ற,*
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*
பாழிமையில் பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே.
நைவாய எம்மேபோல்* நாள் மதியே நீ இந் நாள்,*
மை வான் இருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*
ஐ வாய் அரவு அணைமேல்* ஆழிப் பெருமானார்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
தோற்றோம் மட நெஞ்சம்* எம் பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*
வேற்றோர் வகையில்* கொடிதாய் எனை ஊழி,*
மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே.
இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*
மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*
அருளின் பெரு நசையால்* ஆழாந்து நொந்தாயே.
நொந்து ஆராக் காதல் நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
நந்தா விளக்கமே,* நீயும் அளியத்தாய்,*
செந்தாமரைத் தடங்கண்* செங்கனி வாய் எம் பெருமான்,*
அம் தாமம் தண் துழாய்* ஆசையால் வேவாயே.
வேவு ஆரா வேட்கை நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மா வாய் பிளந்து* மருதிடை போய் மண் அளந்த,*
மூவா முதல்வா* இனி எம்மைச் சோரேலே.
சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே.