பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வெண்ணெய் அளைந்த குணுங்கும்* விளையாடு புழுதியும் கொண்டு*
திண்ணென இவ் இரா உன்னைத்* தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
எண்ணெய் புளிப்பழம் கொண்டு* இங்கு எத்தனை போதும் இருந்தேன்*
நண்ணல் அரிய பிரானே!* நாரணா! நீராட வாராய் (2)
கன்றுகள் ஓடச் செவியிற்* கட்டெறும்பு பிடித்து இட்டால்*
தென்றிக் கெடும் ஆகில்* வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*
நின்ற மராமரம் சாய்த்தாய்!* நீ பிறந்த திருவோணம்*
இன்று நீ நீராட வேண்டும்* எம்பிரான்! ஓடாதே வாராய்
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு* பின்னையும் நில்லாது என்நெஞ்சம்*
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி* அழைக்கவும் நான் முலை தந்தேன்*
காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்*
வாய்த்த புகழ் மணிவண்ணா!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கஞ்சன் புணர்ப்பினில் வந்த* கடிய சகடம் உதைத்து*
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச* வாய் முலை வைத்த பிரானே!*
மஞ்சளும் செங்கழுநீரின்* வாசிகையும் நறுஞ்சாந்தும்*
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்* அழகனே! நீராட வாராய்
அப்பம் கலந்த சிற்றுண்டி* அக்காரம் பாலிற் கலந்து*
சொப்பட நான் சுட்டு வைத்தேன்* தின்னல் உறுதியேல் நம்பி!*
செப்பு இள மென்முலையார்கள்* சிறுபுறம் பேசிச் சிரிப்பர்*
சொப்பட நீராட வேண்டும்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
எண்ணெய்க் குடத்தை உருட்டி* இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்*
கண்ணைப் புரட்டி விழித்துக்* கழகண்டு செய்யும் பிரானே!*
உண்ணக் கனிகள் தருவன்* ஒலிகடல் ஓதநீர் போலே*
வண்ணம் அழகிய நம்பீ!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கறந்த நற்பாலும் தயிரும்* கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்*
பிறந்ததுவே முதலாகப்* பெற்றறியேன் எம்பிரானே!*
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்* என்பதனால் பிறர் முன்னே*
மறந்தும் உரையாட மாட்டேன்* மஞ்சனம் ஆட நீ வாராய்
கன்றினை வால் ஓலை கட்டி* கனிகள் உதிர எறிந்து*
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்* பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்*
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!* நீ பிறந்த திரு நன்னாள்*
நன்று நீ நீராட வேண்டும்* நாரணா! ஓடாதே வாராய்
பூணித் தொழுவினிற் புக்குப்* புழுதி அளைந்த பொன்-மேனி*
காணப் பெரிதும் உகப்பன்* ஆகிலும் கண்டார் பழிப்பர்*
நாண் இத்தனையும் இலாதாய்!* நப்பின்னை காணிற் சிரிக்கும்*
மாணிக்கமே! என்மணியே!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கார் மலி மேனி நிறத்துக்* கண்ணபிரானை உகந்து*
வார் மலி கொங்கை யசோதை* மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
பார் மலி தொல் புதுவைக் கோன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
சீர் மலி செந்தமிழ் வல்லார்* தீவினை யாதும் இலரே (2)
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
காண்டாவனம் என்பது ஓர் காடு* அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*
அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து* அரியாய் நீண்டான்*
குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே*
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து* அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்*
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்* பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்*
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்* பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்*
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்* அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்*
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அமரில்*
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி* பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட*
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு* அணை கட்டி வரம்பு உருவ*
மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட* படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*
காலம் இது என்று அயன் வாளியினால்* கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்*
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பார் ஆர் உலகும் பனி மால் வரையும்* கடலும் சுடரும் இவை உண்டும்*
எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்* அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்* பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்*
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்* புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அவுணன்*
பகராதவன் ஆயிரம் நாமம்* அடிப் பணியாதவனை பணியால் அமரில்*
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பிச்சச் சிறு பீலி பிடித்து* உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்*
அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்* அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*
நச்சி நமனார் அடையாமை* நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு*
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
பேசும் அளவு அன்று இது வம்மின்* நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்*
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்* அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்* மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்* நிலவும் புகழ் மங்கையர் கோன்*
அமரில் கட மா களி யானை வல்லான்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடும் மால் வினை* வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்*
கொடு மா கடல் வையகம் ஆண்டு* மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)
ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை
பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும்
நாடி நாடி* நரசிங்கா என்று,*
வாடி வாடும்* இவ் வாள் நுதலே.
வாள் நுதல்* இம் மடவரல்,* உம்மைக்
காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்
வாணன்* ஆயிரம் தோள் துணித்தீர்,* உம்மைக்
காண* நீர் இரக்கம் இலீரே.
இரக்க மனத்தோடு* எரி அணை,*
அரக்கும் மெழுகும்* ஒக்கும் இவள்,*
இரக்கம் எழீர்* இதற்கு என் செய்கேன்,*
அரக்கன் இலங்கை* செற்றீருக்கே.
இலங்கை செற்றவனே என்னும்,* பின்னும்
வலம் கொள்* புள் உயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ் உயிர்க்கும்,* கண்ணீர் மிகக்
கலங்கிக்* கைதொழும் நின்று இவளே
இவள் இராப்பகல்* வாய்வெரீ இத்,* தன
குவளை ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* வண்டு
திவளும்* தண் அம் துழாய் கொடீர்,* என
தவள வண்ணர்* தகவுகளே.
தகவு உடையவனே என்னும்,* பின்னும்
மிக விரும்பும்* பிரான் என்னும்,* எனது
அக உயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உக உருகி* நின்று உள் உளே.
உள் உள் ஆவி* உலர்ந்து உலர்ந்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ள நீர்க்* கிடந்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே.
வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிது உயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சம் என்று* இவள் பட்டனவே.
பட்ட போது* எழு போது அறியாள்,* விரை
மட்டு அலர்* தண் துழாய் என்னும்,* சுடர்
வட்ட வாய்* நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்* இவ்ஏழைக்கே.
ஏழை பேதை* இராப்பகல்,* தன
கேழ் இல் ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* கிளர்
வாழ்வை வேவ* இலங்கை செற்றீர்.* இவள்
மாழை நோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே
வாட்டம் இல் புகழ்* வாமனனை* இசை
கூட்டி* வண் சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓர் ஆயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அம் தாமமே.