பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த* எம் தாசரதிபோய்*
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட* எம் புருடோத்தமன் இருக்கை*
கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே* கடுவினை களைந்திடுகிற்கும்*
கங்கையின் கரைமேல் கைதொழநின்ற* கண்டம்என்னும் கடிநகரே. (2)
சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்* சந்திரன் வெங்கதிர் அஞ்ச*
மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்* மால் புருடோத்தமன் வாழ்வு*
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்* நாரணன் பாதத்துழாயும்*
கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே.
அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி* அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து* அங்கு-
எதிர்முக அசுரர் தலைகளை இடறும்* எம் புருடோத்தமன் இருக்கை*
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே
இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள* ஏற்று வந்துஎதிர் பொருசேனை*
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்* நம் புருடோத்தமன் நகர்தான்*
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்* ஒண் சுடர்ஆழியும் சங்கும்*
மழுவொடு வாளும் படைக்கலம்உடைய* மால் புருடோத்தமன் வாழ்வு*
எழுமையும் கூடி ஈண்டிய பாவம்* இறைப்பொழுது அளவினில் எல்லாம்*
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்* சலசல பொழிந்திடக்கண்டு*
மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை* மால் புருடோத்தமன் வாழ்வு*
அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்* அவபிரதம் குடைந்தாட*
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி* மேல்இருந்தவன் தலைசாடி*
மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த* மால் புருடோத்தமன் வாழ்வு*
அற்புதம்உடைய ஐராவதமதமும்* அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*
கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே.
திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து* தன்மைத்துனன் மார்க்காய்*
அரசினையவிய அரசினையருளும்* அரிபுருடோத்தமன் அமர்வு*
நிரைநிரையாக நெடியனயூபம்* நிரந்தரம் ஒழுக்குவிட்டு* இரண்டு-
கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை* கண்டமென்னும் கடிநகரே.
வடதிசை மதுரை சாளக்கிராமம்* வைகுந்தம் துவரை அயோத்தி*
இடமுடை வதரி இடவகையுடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
தடவரை அதிரத் தரணி விண்டிடியத்* தலைப்பற்றிக் கரைமரம்சாடி*
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. (2)
மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்றருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. (2)
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து* உறை புருடோத்தமனடிமேல்*
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்* விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்த தமிழ்மாலை* தங்கிய நாவுடையார்க்கு*
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே* குளித்திருந்த கணக்காமே. (2)
கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக்குளத்துள்*
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நின்றாய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக்குளத்துள்*
நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே
கான் ஆர் கரிக் கொம்பு* அது ஒசித்த களிறே!*
நானாவகை* நல்லவர் மன்னிய நாங்கூர்த்*
தேன் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.
வேடு ஆர்* திருவேங்கடம் மேய விளக்கே*
நாடு ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேடு ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்தாய்*
பாடாவருவேன்* வினை ஆயின பாற்றே.
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக்குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே.
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர்கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
மாலே என வல் வினை* தீர்த்தருளாயே.
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்ச்*
சீரார் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.
பூவார் திருமாமகள்* புல்கிய மார்பா!*
நாவார் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்த்*
தேவா!* திருவெள்ளக்குளத்து உறைவானே*
'ஆவா! அடியான்* இவன் என்று அருளாயே.
நல்லன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வன்* திருவெள்ளக்குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே. (2)
சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி* 'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து* கைதலைபூசல் இட்டால்*
கோல மேனி காண வாராய்* கூவியும் கொள்ளாயே.
கொள்ள மாளா இன்ப வெள்ளம்* கோது இல தந்திடும்,* என்
வள்ளலேயோ! வையம் கொண்ட* வாமனாவோ! என்று என்று,*
நள் இராவும் நன் பகலும்* நான் இருந்து ஓலம் இட்டால்,*
கள்ள மாயா! உன்னை* என் கண் காண வந்து ஈயாயே.
'ஈவு இலாத தீவினைகள்* எத்தனை செய்தனன்கொல்?*
தாவி வையம் கொண்ட எந்தாய்!* தாமோதரா! என்று என்று*
கூவிக் கூவி நெஞ்சு உருகி* கண்பனி சோர நின்றால்,*
பாவி நீ என்று ஒன்று சொல்லாய்* பாவியேன் காண வந்தே.
'காண வந்து என் கண்முகப்பே* தாமரைக்கண் பிறழ,*
ஆணி செம்பொன் மேனி எந்தாய்!* நின்று அருளாய் என்று என்று,*
நாணம் இல்லாச் சிறு தகையேன்* நான் இங்கு அலற்றுவது என்,*
பேணி வானோர் காணமாட்டாப்* பீடு உடை அப்பனையே?
அப்பனே! அடல் ஆழியானே,* ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே,* உன் தோள்கள் நான்கும்* கண்டிடக்கூடுங்கொல்? என்று*
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு* ஆவி துவர்ந்து துவர்ந்து,*
இப்பொழுதே வந்திடாய் என்று* ஏழையேன் நோக்குவனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்* யான் எனது ஆவியுள்ளே,*
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை* நாள்தோறும் என்னுடைய,*
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்* அல்ல புறத்தினுள்ளும்,*
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!* நின்னை அறிந்து அறிந்தே.
அறிந்து அறிந்து தேறித் தேறி* யான் எனது ஆவியுள்ளே,*
நிறைந்த ஞான மூர்த்தியாயை* நின்மலமாக வைத்து,*
பிறந்தும் செத்தும் நின்று இடறும்* பேதைமை தீர்ந்தொழிந்தேன்*
நறுந் துழாயின் கண்ணி அம்மா!* நான் உன்னைக் கண்டுகொண்டே!
கண்டுகொண்டு என் கைகள் ஆர* நின் திருப்பாதங்கள்மேல்,*
எண் திசையும் உள்ள பூக்கொண்டு* ஏத்தி உகந்து உகந்து,*
தொண்டரோங்கள் பாடி ஆட* சூழ் கடல் ஞாலத்துள்ளே,*
வண் துழாயின் கண்ணி வேந்தே!* வந்திடகில்லாயே.
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்* ஐம்புலன் வெல்ல கில்லேன்,*
கடவன் ஆகி காலந்தோறும்* பூப்பறித்து ஏத்த கில்லேன்,*
மட வல் நெஞ்சம் காதல் கூர* வல்வினையேன் அயர்ப்பாய்த்,*
தடவுகின்றேன் எங்குக் காண்பன்* சக்கரத்து அண்ணலையே?
சக்கரத்து அண்ணலே என்று* தாழ்ந்து கண்ணீர் ததும்ப,*
பக்கம் நோக்கி நின்று அலந்தேன்* பாவியேன் காண்கின்றிலேன்,*
மிக்க ஞான மூர்த்தி ஆய* வேத விளக்கினை* என்
தக்க ஞானக் கண்களாலே* கண்டு தழுவுவனே.
தழுவிநின்ற காதல் தன்னால்* தாமரைக் கண்ணன் தன்னை,*
குழுவு மாடத் தென் குருகூர்* மாறன் சடகோபன்,* சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
தழுவப் பாடி ஆட வல்லார்* வைகுந்தம் ஏறுவரே.