பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
துப்புடையாரை அடைவது எல்லாம்* சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்* ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்* சங்கொடு சக்கரம் ஏந்தினானே!*
நாமடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும்* புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
எல்லையில் வாசல் குறுகச்சென்றால்* எற்றிநமன்தமர் பற்றும்போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்* சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்*
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
ஒற்றைவிடையனும் நான்முகனும்* உன்னையறியாப் பெருமையோனே!*
முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி* அஞ்சநமன்தமர் பற்றலுற்ற*
அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
பையரவினனைப் பாற்கடலுள்* பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!*
உய்யஉலகு படைக்கவேண்டி* உந்தியிற் தோற்றினாய் நான்முகனை*
வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்* காலனையும் உடனே படைத்தாய்*
ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
தண்ணெனவில்லை நமன்தமர்கள்* சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற* தேவர்கள்நாயகனே! எம்மானே!*
எஞ்சலில் என்னுடை இன்னமுதே!* ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
வஞ்சவுருவின் நமன்தமர்கள்* வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது*
அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்* நமன்தமர்பற்றி நலிந்திட்டு*
இந்த ஊனேபுகேயென்று மோதும்போது* அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
வானேய் வானவர் தங்கள் ஈசா!* மதுரைப் பிறந்த மாமாயனே!* என்-
ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்றுமுதல் இன்றறுதியாக* ஆதியஞ்சோதி மறந்தறியேன்*
நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*
அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே!
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்* விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனாகி வல்லார்* தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்* ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து* பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே. (2)
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு* அரக்கர் தம் சிரங்களை உருட்டி*
கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்*
பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே.
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து*
அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடிஅதுவே.
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்*
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே.
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த* செங்கண்மால் சென்று உறை கோயில்*
ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி* எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே.
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற* கடல் அரக்கர் தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன் தன் கோயில்*
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே.
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்* திருவெள்ளியங்குடி அதுவே.
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே.
குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற* ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
கடிஉடைக் கமலம் அடியிடை மலர* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே.
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதும் இல்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர் படைத்தான்,*
குன்றம்போல் மணிமாடம் நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)
நாடி நீர் வணங்கும் தெய்வமும்* உம்மையும் முன்படைத்தான்,*
வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்* அவன் மேவி உறைகோயில்,*
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனைப்*
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்* பல் உலகீர்! பரந்தே.
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து* அன்று உடனே விழுங்கி,*
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது* கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும்* திருக்குருகூர் அதனுள்,*
பரன் திறம் அன்றி பல் உலகீர்!* தெய்வம் மற்று இல்லை பேசுமினே!
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்* பிறர்க்கும்
நாயகன் அவனே,* கபால நல் மோக்கத்துக்* கண்டுகொண்மின்,*
தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனுள்,*
ஈசன்பால் ஓர் அவம் பறைதல்* என் ஆவது இலிங்கியர்க்கே?
இலிங்கத்து இட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்*
மலிந்து செந்நெல் கவரி வீசும்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்* ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)
போற்றி மற்று ஓர் தெய்வம்* பேணப் புறத்திட்டு* உம்மை இன்னே
தேற்றி வைத்தது* எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,*
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு* திருக்குருகூர் அதனுள்,*
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்* அது அறிந்து அறிந்து ஓடுமினே.
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து* மற்று ஓர் தெய்வம்,
பாடி ஆடிப் பணிந்து* பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*
கூடி வானவர் ஏத்த நின்ற* திருக்குருகூர் அதனுள்,*
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு* அடிமைபுகுவதுவே
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட* மார்க்கண்டேயன் அவனை*
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது* நாராயணன் அருளே*
கொக்கு அலர் தடம் தாழை வேலித்* திருக்குருகூர் அதனுள்*
மிக்க ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் விளம்புதிரே
விளம்பும் ஆறு சமயமும்* அவைஆகியும் மற்றும் தன்பால்,*
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய* ஆதிப்பிரான் அமரும்,*
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனை,*
உளம் கொள் ஞானத்து வைம்மின்* உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
உறுவது ஆவது எத்தேவும்* எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,*
மறு இல் மூர்த்தியோடு ஒத்து* இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,*
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு* திருக்குருகூர் அதனுள்*
குறிய மாண் உரு ஆகிய* நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே.
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்* வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2)