பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-
தன்னை வாழநின்ற நம்பீ!* தாமோதரா! சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)
பறவையேறு பரமபுருடா!* நீஎன்னைக் கைக்கொண்டபின்*
பிறவியென்னும் கடலும்வற்றிப்* பெரும்பதம் ஆகின்றதால்*
இறவு செய்யும் பாவக்காடு* தீக்கொளீஇவேகின்றதால்*
அறிவையென்னும் அமுதவாறு* தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
எம்மனா! என்குலதெய்வமே!* என்னுடைய நாயகனே!*
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை* இவ்வுலகினில் ஆர்பெறுவார்?
நம்மன்போலே வீழ்த்தமுக்கும்* நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித்* தூறுகள்பாய்ந்தனவே.
கடல்கடைந்து அமுதம்கொண்டு * கலசத்தைநிறைத்தாற்போல்*
உடலுருகிவாய்திறந்து* மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்*
கொடுமை செய்யும்கூற்றமும்* என்கோலாடிகுறுகப்பெறா*
தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே* நிறமெழவுரைத்தாற்போல்*
உன்னைக்கொண்டு என்நாவகம்பால்* மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்* என்னையும்உன்னிலிட்டேன்*
என்னப்பா! என்னிருடீகேசா!* என்னுயிர்க்காவலனே!
உன்னுடைய விக்கிரமம்* ஒன்றோழியாமல் எல்லாம்*
என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்*
மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட* இராமநம்பீ!*
என்னிடைவந்து எம்பெருமான்!* இனியெங்குப்போகின்றதே?
பருப்பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*
திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின் மேல் பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே*
உருப்பொலிந்தநாவினேனை* உனக்கு உரித்தாக்கினையே. (2)
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து* என்-
மனந்தனுள்ளே வந்துவைகி* வாழச்செய்தாய்எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்* நேமி நெடியவனே!
பனிக்கடலில் பள்ளிகோளைப்* பழகவிட்டு ஓடிவந்துஎன்-
மனக்கடலில் வாழவல்ல* மாயமணாளநம்பீ!*
தனிக்கடலே! தனிச்சுடரே!* தனியுலகே என்றென்று*
உனக்கிடமாய்யிருக்க* என்னை உனக்கு உரித்தாக்கினையே.
தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும்என்சோதிநம்பீ!*
வடதடமும் வைகுந்தமும்* மதிள்துவராபதியும்*
இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகைகொண்டனையே. (2)
வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*
கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*
ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*
சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2)
உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன்
எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே.
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பைகொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே.
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர
கொண்ட* ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்*
வண்டு பாடும் மது வார் புனல்* வந்து இழி காவிரி*
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட*
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு* இடம் என்பரால்*
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக*
அம்பு தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால்*
உம்பர் கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* நல
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழ் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால்*
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே
ஏனம் மீன் ஆமையோடு* அரியும் சிறு குறளும் ஆய*
தானும்ஆய* தரணித் தலைவன் இடம் என்பரால்*
வானும் மண்ணும் நிறையப்* புகுந்து ஈண்டி வணங்கும்* நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்* சேர் தென் அரங்கமே
சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* இம்
மாயை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிர*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல்லிசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே.
ஊர் எல்லாம் துஞ்சி* உலகு எல்லாம் நள் இருள் ஆய்*
நீர் எல்லாம் தேறி* ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்*
பார் எல்லாம் உண்ட* நம் பாம்பு அணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவி காப்பார் இனியே?* (2)
ஆவி காப்பார் இனி யார்?* ஆழ் கடல் மண் விண் மூடி*
மா விகாரம் ஆய்* ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் நெஞ்சமே!* நீயும் பாங்கு அல்லையே?*.
நீயும் பாங்கு அல்லைகாண்* நெஞ்சமே நீள் இரவும்*
ஓயும் பொழுது இன்றி* ஊழி ஆய் நீண்டதால்*
காயும் கடும் சிலை* என் காகுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல்வினையேன் பெண் பிறந்தே*
பெண் பிறந்தார் எய்தும்* பெரும் துயர் காண்கிலேன் என்று*
ஒண் சுடரோன்* வாராது ஒளித்தான்* இம்மண்அளந்த-
கண் பெரிய செவ்வாய்* எம் கார் ஏறு வாரானால்*
எண் பெரிய சிந்தைநோய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*
ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்*
கார் அன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேர் என்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*.
பின்நின்று காதல் நோய்* நெஞ்சம் பெரிது அடுமால்*
முன்நின்று இரா ஊழி* கண் புதைய மூடிற்றால்*
மன் நின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந் நின்ற நீள் ஆவி* காப்பார் ஆர் இவ் இடத்தே?*
காப்பார் ஆர் இவ் இடத்து?* கங்கு இருளின் நுண் துளி ஆய்*
சேண் பாலது ஊழி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்த்*
தூப் பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றானால்*
தீப் பால வல்வினையேன்* தெய்வங்காள்! என் செய்கேனோ?*
தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்*
மெய் வந்து நின்று* எனது ஆவி மெலிவிக்கும்,*
கைவந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தைவந்த தண் தென்றல்* வெம் சுடரில் தான் அடுமே*
வெம் சுடரில் தான் அடுமால்* வீங்கு இருளின் நுண் துளி ஆய்*
அம் சுடர வெய்யோன்* அணி நெடும் தேர் தோன்றாதால்*
செஞ் சுடர்த் தாமரைக்கண்* செல்வனும் வாரானால்*
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?* நின்று உருகுகின்றேனே!*
நின்று உருகுகின்றேனே போல* நெடு வானம்*
சென்று உருகி நுண் துளி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்*
அன்று ஒருகால் வையம்* அளந்த பிரான் வாரான் என்று*
ஒன்று ஒருகால் சொல்லாது* உலகோ உறங்குமே*
உறங்குவான் போல்* யோகுசெய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*