பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை* உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்* செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
கோது இல் வாய்மையினாயொடும் உடனே* உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* எனக்கும
ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்* எண்ணிய பேர் அருள்* எனக்கும்-
அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்* உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்* கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய* குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்* எந்தை! நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்* கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து* உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்* தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்* ஒன்னலர்தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி* அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை* எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே.
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!* (2)
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)
என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அரு வாழ்நாள்*
செல் நாள் எந் நாள்? அந்நாள்* உன தாள் பிடித்தே செலக்காணே*
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பு ஆய்* ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உன தாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்*.
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழ் கண்டிருந்தே* தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே!* அறிவின் பயனே! அரிஏறே!*.
அரிஏறே! என் அம் பொன் சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரி ஏய்! பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*.
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்!* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம்போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே*.
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!* காண வாராயே*.
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊராய்!* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)