பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
நெய்க்குடத்தைப்பற்றி* ஏறும்எறும்புகள்போல் நிரந்து* எங்கும்-
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!* காலம்பெற உய்யப்போமின்*
மெய்க்கொண்டு வந்துபுகுந்து* வேதப்பிரானார் கிடந்தார்*
பைக்கொண்ட பாம்புஅணையோடும்* பண்டுஅன்று பட்டினம்காப்பே. (2)
சித்திரகுத்தன் எழுத்தால்* தென்புலக்கோன் பொறிஒற்றி*
வைத்த இலச்சினை மாற்றித்* தூதுவர் ஓடிஒளித்தார்*
முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்* மூதறிவாளர் முதல்வன்*
பத்தர்க்கு அமுதன்அடியேன்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
வயிற்றில் தொழுவைப்பிரித்து* வன்புலச் சேவைஅதக்கிக்*
கயிற்றும் அக்குஆணி கழித்துக்* காலிடைப் பாசம்கழற்றி*
எயிற்றிடை மண்கொண்ட எந்தை* இராப்பகல் ஓதுவித்து* என்னைப்-
பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்*
இங்குப் புகேன்மின் புகேன்மின்* எளிது அன்று கண்டீர் புகேன்மின்*
சிங்கப் பிரான் அவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்*
பங்கப்படாது உய்யப் போமின்* பண்டு அன்று பட்டினம் காப்பே.
மாணிக் குறளுருவாய்* மாயனை என்மனத்துள்ளே*
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்* பிறிதுஇன்றி*
மாணிக்கப் பண்டாரம்கண்டீர்* வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!*
பாணிக்க வேண்டாநடமின்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
உற்றஉறு பிணிநோய்காள்!* உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்*
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்* பேணும் திருக்கோயில்கண்டீர்*
அற்றம்உரைக்கின்றேன்* இன்னம் ஆழ்வினைகாள்!* உமக்குஇங்குஓர்-
பற்றில்லை கண்டீர்நடமின்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
கொங்கைச் சிறுவரைஎன்னும்* பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி*
அங்குஓர் முழையினில்புக்கிட்டு* அழுந்திக் கிடந்துஉழல்வேனை*
வங்கக் கடல்வண்ணன் அம்மான்* வல்வினைஆயின மாற்றி*
பங்கப்படாவண்ணம் செய்தான்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
ஏதங்கள் ஆயினஎல்லாம்* இறங்கல்இடுவித்து* என்னுள்ளே-
பீதகவாடைப்பிரனார்* பிரமகுருவாகிவந்து*
போதில்கமல வன்நெஞ்சம்* புகுந்து என்சென்னித்திடரில்*
பாத இலச்சினை வைத்தார்* பண்டன்றுபட்டினம்காப்பே.
உறகல் உறகல் உறகல்* ஒண்சுடராழியே! சங்கே!*
அறவெறி நாந்தகவாளே!* அழகியசார்ங்கமே! தண்டே!*
இறவுபடாமல்இருந்த* எண்மர் உலோகபாலீர்காள்!*
பறவைஅரையா! உறகல்* பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)
அரவத்து அமளியினோடும்* அழகிய பாற்கடலோடும்*
அரவிந்தப் பாவையும்தானும்* அகம்படி வந்துபுகுந்து*
பரவைத் திரைபலமோதப்* பள்ளி கொள்கின்றபிரானைப்*
பரவுகின்றான் விட்டுசித்தன்* பட்டினம்காவற்பொருட்டே. (2)
தாம்* தம் பெருமை அறியார்*
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே.
செறும் திண்* திமில் ஏறு உடைய* பின்னை
பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர்போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே.
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு* அடியேன்
உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர்போல்*
கள்ள நாரை* வயலுள்* கயல்மீன்
கொள்ளை கொள்ளும்* கூடலூரே.
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்* நிலம் நீர்
ஏற்றான் எந்தை* பெருமான் ஊர்போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே.
தொண்டர் பரவ* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர்போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே.
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர்போல்*
எக்கல் இடு* நுண் மணல்மேல்* எங்கும்
கொக்கின் பழம் வீழ்* கூடலூரே.
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல*
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடிக்*
குருந்தம் தழுவும்* கூடலூரே.
கலை வாழ்* பிணையோடு அணையும்* திருநீர்
மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்*
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்
குலை தாழ் கிடங்கின்* கூடலூரே.
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
அருகு கைதை மலர* கெண்டை
குருகு என்று அஞ்சும்* கூடலூரே.
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித் திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட* பாவம் போமே.
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2)
கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக்கு இனியன கண்டோம்*
தொண்டீர்! எல்லீரும் வாரீர்* தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
வண்டுஆர் தண் அம் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி நின்று ஆடி* பரந்து திரிகின்றனவே*
திரியும் கலியுகம் நீங்கி* தேவர்கள் தாமும் புகுந்து*
பெரிய கிதயுகம் பற்றி* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*
இடம் கொள் சமயத்தை எல்லாம்* எடுத்துக் களைவன போலே*
தடம் கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களே ஆய்*
கிடந்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடந்தும் பறந்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*.
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே* ஒக்கின்றது இவ் உலகத்து*
வைகுந்தன் பூதங்களே ஆய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்*
உய்யும் வகை இல்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*
கொன்று உயிர் உண்ணும் விசாதி* பகை பசி தீயன எல்லாம்*
நின்று இவ் உலகில் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!* சிந்தையைச் செந்நிறுத்தியே*.
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவனோடே கண்டீர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா* கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை*
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி* யாயவர்க்கே இறுமினே*.
இறுக்கும் இறை இறுத்து உண்ண* எவ் உலகுக்கும் தன் மூர்த்தி*
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக* அத் தெய்வ நாயகன் தானே*
மறுத் திரு மார்வன் அவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.
மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞானவிதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாந்தமும் நீரும் மலிந்து*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*.
மிக்க உலகுகள் தோறும்* மேவி கண்ணன் திருமூர்த்தி*
நக்க பிரானோடு* அயனும் இந்திரனும் முதலாகத்*
தொக்க அமரர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டீர்!*
ஒக்கத் தொழ கிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்அடியார்க்கு அருள்செய்யும்*
மலியும் சுடர் ஒளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்* காரிமாறன் சடகோபன்*
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசு அறுக்குமே*.