பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* அவை ஆய பெருமான்*
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* தட மார்வர் தகைசேர்*
நாதன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே. (2)
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்* ஒழியாமை முன நாள்*
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன்அவன் மேவும் நகர்தான்*
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்*
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த* தட மார்வர் தகை சேர்*
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி* கங்குல் வயல் சூழ்*
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்*
இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல* நின்ற பெருமான்*
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல* அடிகொள் நெடு மா*
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்*
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்*
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர்தான்*
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்*
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர்தான்*
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்*
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனியாளர் திரு ஆர்*
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்*
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்*
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்*
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்*
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடையானை* ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல* கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்* முழுது அகலுமே.
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஐவர்க்குத்-
திறங்கள் காட்டியிட்டுச்* செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை* நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்-
சிறந்தவான் சுடரே!* உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்* மாய மாவினை வாய் பிளந்ததும்*
மதுவை வார் குழலார்* குரவை பிணைந்த குழகும்*
அது இது உது என்னலாவன அல்ல* என்னை உன் செய்கை நைவிக்கும்*
முது வைய முதல்வா!* உன்னை என்று தலைப்பெய்வனே?*
பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட* பிள்ளைத் தேற்றமும்* பேர்ந்து ஓர் சாடு இறச்-
செய்ய பாதம் ஒன்றால்* செய்த நின் சிறுச் சேவகமும்*
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள* நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க*
பையவே நிலையும் வந்து* என் நெஞ்சை உருக்குங்களே*
கள்ள வேடத்தைக் கொண்டு போய்* புரம்புக்க ஆறும்* கலந்து அசுரரை-
உள்ளம் பேதம் செய்திட்டு* உயிர் உண்ட உபாயங்களும்*
வெள்ள நீர்ச் சடையானும்* நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்*
உள்ளம் உள் குடைந்து* என் உயிரை உருக்கி உண்ணுமே*.
உண்ண வானவர் கோனுக்கு* ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்*
வண்ண மால் வரையை எடுத்து* மழை காத்தலும்*
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து* கடந்து இடந்து மணந்த மாயங்கள்*
எண்ணும்தோறும் என் நெஞ்சு* எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.
நின்ற ஆறும் இருந்த ஆறும்/* கிடந்த ஆறும் நினைப்பு அரியன*
ஒன்று அலா உருவு ஆய்* அருவு ஆய நின் மாயங்கள்*
நின்று நின்று நினைக்கின்றேன்* உன்னை எங்ஙனம் நினைகிற்பன்* பாவியேற்கு-
ஒன்று நன்கு உரையாய்* உலகம் உண்ட ஒண் சுடரே!*
ஒண் சுடரோடு இருளுமாய்* நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து* என்-
கண் கொளாவகை* நீ கரந்து என்னைச் செய்கின்றன*
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்* என் கரிய மாணிக்கமே!* என் கண்கட்குத்-
திண் கொள்ள ஒரு நாள்* அருளாய் உன் திரு உருவே*.
திரு உருவு கிடந்த ஆறும்* கொப்பூழ்ச் செந்தாமரைமேல்* திசைமுகன்-
கருவுள் வீற்றிருந்து* படைத்திட்ட கருமங்களும்*
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின்று நெக்கு*
அருவி சோரும் கண்ணீர்* என் செய்கேன் அடியேனே!*
அடியை மூன்றை இரந்த ஆறும்* அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்-
முடிய* ஈர் அடியால்* முடித்துக்கொண்ட முக்கியமும் *
நொடியுமாறு அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்*
கொடிய வல்வினையேன்* உன்னை என்றுகொல் கூடுவதே?*
கூடி நீரைக் கடைந்த ஆறும்* அமுதம் தேவர் உண்ண* அசுரரை-
வீடும் வண்ணங்களே* செய்து போன வித்தகமும்*
ஊடு புக்கு எனது ஆவியை* உருக்கி உண்டிடுகின்ற* நின் தன்னை-
நாடும் வண்ணம் சொல்லாய்* நச்சு நாகு அணையானே!*
நாகு அணைமிசை நம் பிரான்* சரணே சரண் நமக்கு என்று* நாள்தொறும்-
ஏக சிந்தையனாய்க்* குருகூர்ச் சடகோபன் மாறன்*
ஆக நூற்ற அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்*
மாக வைகுந்தத்து* மகிழ்வு எய்துவர் வைகலுமே*.