பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
கைம்மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை*
மைம்மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த
அம்மானை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால்
ஊரானை* கரம்பனூர் உத்தமனை* முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே.
ஏன் ஆகி உலகு இடந்து* அன்று இரு நிலனும் பெரு விசும்பும*
தான் ஆய பெருமானை* தன் அடியார் மனத்து என்றும்*
தேன் ஆகி அமுது ஆகித்* திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்*
ஆன்-ஆயன் ஆனானைக்* கண்டது தென் அரங்கத்தே.
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப்-
பிளந்தவனை* பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள்
அளந்தவனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை* கண்டார் பின் காணாமே*
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது தென் அரங்கத்தே.
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை* தரியாது
கஞ் சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை*
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது-
வந்து எனது மனத்து இருந்த* வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை* தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென் அரங்கத்தே.
பொய் வண்ணம் மனத்து அகற்றி* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை*
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரகதத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே.
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்* கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்* கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்* கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்* கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்* காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,* காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?*
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்* செய்வான் நின்றனகளும் யானே என்னும்*
செய்து முன் இறந்தவும் யானே என்னும்* செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்* செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்* திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்* திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்* திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்* திறம்பாது என் திருமகள் எய்தினவே?*
இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்* இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்*
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்* இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*
இன ஆயர் தலைவனும் யானே என்னும்* இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?*
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்* இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்* உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்*
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்* உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்*
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்* உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?*
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?* உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?*
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்* உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்*
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்* உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்* உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.
கொடிய வினை யாதும் இலனே என்னும்* கொடிய வினை ஆவேனும் யானே என்னும்*
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்* கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்* கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?*
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்* கோலம் இல் நரகமும் யானே என்னும்*
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்* கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்*
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்* கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)