விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு*  மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்* 
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்து*  உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்*  கோதுகலம் உடைய-
    பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு*  மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய* 
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*  ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய் - கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத்தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம் - கீழ்திசைப்பக்கத்து  ஆகாசமானது
வெள்ளென்று - வெறுத்தது;
சிறுவீடு - சிற தோட்டங்களில்
பரந்தன - சென்று புக்கன

 

விளக்க உரை

உரை:1

எல்லோரும் திரண்டுவந்து அழைக்கவேண்டும்படி கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது. பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க; இதனைக்கேட்ட அவள், அதற்குள் இராக்காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்? இஃது உங்களுடைய விரிந்த ஞானம்; அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள் நெடும்போதாகக் கீழ்த்திசையை நோக்கிகக்கொண்டிருக்கையாலே உங்களுடைய முகநிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது; இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்; வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன; எருமைகள் பனிப்புல் மேய்கைக்காகச் சென் பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள்.

உரை:2

கிழக்கு வானம் வெளுத்துவிட்டது! எருமைகள் எல்லாம் சிறுதீனி மேய்வதற்காக வீட்டைச் சுற்றிலும் பரந்து திரிகின்றன பார்! மிச்சம் இருக்கும் பிள்ளைகளும் நோன்பு நோற்கும் இடத்திற்கு போவதே கொண்டாட்டமாகப் போய் கொண்டிருக்கிறார்கள்; அவர்களைப் போகாமல் தடுத்து நிறுத்தி உன்னைக் கூவி எழுப்புவதற்காக வந்து நின்றோம்! குதூகலம் உடைய அழகான பெண்ணே! எழுந்திரு! குதிரையின் உருவில் வந்த கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்தவனை, முஷ்டிகன் சாணூரன் என்னும் மல்யுத்த வீரர்களை வென்று கொன்ற தேவாதிதேவனான கண்ணனைப் பாடி வேண்டியதெல்லாம் பெறுவதற்காக அவன் முன்னே சென்று நாம் சேவிப்போம்! அப்படி செய்தால் 'ஆகா! இவர்கள் நம் அடியவர்கள் அல்லவா?! நாமே சென்று அருள வேண்டியிருக்க இவர்கள் நம்மைத் தேடி வரும்படி செய்தோமே!' என்று நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் செய்வான்!

English Translation

The Eastern horizon whitens, water buffaloes wander out to graze the dew tipped morning grass. The other girls were keen to go; we made them wait, and came to call you. Dainty girl, wake up and join our chorus. The Lord of Gods ripped the horse’s jaws and killed the wrestlers. If we go and approach him with our prayers, he will listen in attention, and bestow his grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்