விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்* 
    மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்* 
    வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்* 
    துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கன்று மேய்த்து - கன்றுகளை ரக்ஷித்து;
இனிது உகந்த - மிகவும் மகிழ்ச்சி கொண்ட;
காளாய் என்றும் - இளையோனே! என்றும்,;
கடி பொழில் சூழ் - வாஸனைமிக்க சோலைகளாலே சூழப்பட்ட;
கணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே (பழுத்த);

விளக்க உரை

மென்கிளிபோல் மிகமிழற்று மென்தையே“ என்றது கீழ்ப்பாட்டில்; நாயகன் எதிரே நிற்கிறானாக நினைத்து மென்கிளிபோல் வார்த்தை சொன்னவிடத்தில் அவனும் அப்படியே மேலிட்டுவார்த்தை சொல்லக்கேட்டிலள்; அதனால் நின்ற நிலைகுலைந்து கூப்பாடுபோடத் தொடங்கினாளென்மக ளென்கிறாள் திருத்தாய். அவனுடைய ரக்ஷகத்வமும் லௌலப்ய ளெஸசீல்யாதிகளும் பாவியேனிடத்தில் பலிக்கப் பெற்றிலவே! என்று கண்ணுங் கண்ணீருமாய்க் கதறுகிறபடியைப் பேசுகிறாளாய்ச் செல்லுகிறது. கன்றுமேய்த்து இனிதுகந்தகாளாய் என்றும் = ஸர்வரக்ஷகனான நீ ரக்ஷணத் தொழிலில் நின்றும் கைவாங்கினாயோ என்கிறாள். நித்யஸூரிகளை ரக்ஷிக்குமளவோடே நின்றால் ஆறியிருப்பேன்; ராமகிருஷ்ணாதிரூபத்தாலே வந்தவதரித்து இடக்கையும் வலக்கையுமறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே நின்றாலும் ஆறியிருப்பேன்; அறிவுகேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையுமுட்பட மேய்த்த உன்னைவிட்டு எங்ஙனே ஆறியிருப்பே னென்கிறாள். அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த நீ, உன்வாசியையறிந்து உன்னையொழியச்செல்லாத வென்னை ரக்ஷியாதொழிவதே!, நானும் கன்றாகப் பிறக்கப்பெற்றிலேனே! என்கிறாள்போலும். கண்ணபிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும் கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆம் என்பது சொற்போக்கில் தெரியக் கிடக்கிறது; “திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி“ என்றார் நம்மாழ்வார்; “கன்றுமேய்த்து இனிது உகந்த“ என்கிறாரிவ்வாழ்வாழ்வார். காளாய்! = இளம்பருவத்தைச் சொன்னபடி; “காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம். கடிபொழில்சூழ் கணபுரத் தென்கனியே யென்றும் = அவ்வக்காலங்களில் பிற்பட்டாரையும் ரக்ஷிக்கைக்காகவன்றோ திருக்கண்ணபுரத்திலே வந்து இனியகனிபோல் நின்றருளிற்று. “கன்றுமேய்த்தினிதுகந்த காளாய்“ என்றவுடனே “கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே“ என்று சொன்ன அமைதியை நோக்கி இவ்விடத்திற்கு பட்டர் ரஸோக்தியாக அருளிச் செய்வதொன்றுண்டு;- “கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவை கைதவறிப் போகையாலே அவற்றை மடக்கிப் பிடிக்கப்போனவிடத்திலே விடாய்தீருவிருப்பதொரு சோலையைக் கண்டு திருவாய்ப்பாடியாக நினைத்துப்புகுந்தான்; அப்பொழில் * மயல்மிகுபொழிலாகையாலே கால்வாங்கமாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக்கண்ணபுரம்“ என்பராம். கடிபொழில்சூழ் கணபுரம் = “ஸர்வகந்த;“ என்கிற சுருதியின்படியே பரிமளமயனாயிருக்கிற எம்பெருமானையும் கால்தாழப் பண்ணுவித்துக் கொள்ளவல்ல பரிமளமுற்ற பொழில்களென்க. (கணபுரத்தென் கனியே!) அச்சோலைபழுத்த பழம்போலும் சௌரிராஜன், “என் கனியே“ என்கையாலே உபாயாந்தர நிஷ்டர்களுக்குக் காயாகவேயிருப்பனென்பது போதரும். அவர்களுக்கு ஸாதநாநுஷ்டானம் தலைக்கட்டின பின்பு அனுபவமாகையாலே அதுவரையில் காயாயிருப்பன்; ப்ரபந்நர்க்கு அத்யவஸாயமுண்டான ஸமயமேபிடித்துப் பரம போக்யனா யிருக்கையாலே பக்குவ பலமாயிருப்பன். அவல்பொதி அவிழ்ப்பாரைப் போலே ஸமுதாய ஸ்தலத்திலே ஸர்வஸ்வதானம் பண்ணினாயல்லையோ என்கிறாள். மன்று - நாற்சந்தி; அஃது அமரக் கூத்தாடுகையாவது கூத்தாடிமுடிந்தபின்பும் அவ்விடம் கூத்தாடுவதுபோலவே காணப்படுகையாம். “பெருமாள் எழுந்தருளிப் புக்க திருவீதிபோலே காண் திருவாய்ப்பாடியில் அம்பலமிருப்பது“ என்று பட்டர் பணிக்கும்படி. மன்று என்று இடையரெல்லாரும் திரளுமிடத்திற்கும் பெயராதால், இச்சொல் ஆகு பெயரால் இடையர்களை உணர்த்தி இடையரெல்லாரும் ஈடுபடும்படும்படியாகக் கூத்தாடினமை சொல்லுகிறதென்றும் உரைப்ப. மகிழ்ந்தாய் என்றவிடத்திற்குப் பெரியாச்சான்பிள்ளை வியாக்கியானம் காண்மின் ;- “கூத்துக் கண்டவர்கள் உகக்கையன்றியே உகப்பானும், தானாயிருக்கை; அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக்கொள்வானும் தானாய் உகப்பானும் தானாயிரக்கிறபடி. “-ஸஜாதீயர்களை ஈடுபடுத்திக்கொள்ளப் பெற்றோம் என்று உகந்தானாயிற்று. அந்தணர்க்குச் செல்வம் மிக்க பல யாகங்கள் நிகழ்த்துமா போலவும் விஷயபரவணர்க்கு ஐச்வரியம் விஞ்சினால் அடுத்தடுத்து விவாஹம்பண்ணிக் கொள்ளுமாபோலவும் இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் போக்குவீடாக ஆடுவதொரு கூத்து குடக்கூத்து; சாதி மெய்ப்பாட்டுக்காகக் கண்ணபிரான் குடக்கூத்தாடினபடி. ஊர்ப்பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதாபந் தோற்றச் சொல்லும் வார்த்தை மன்றமரக்கூத்தாடி மகிழ்ந்தாய்! என்பது. வடதிவேங்கடம்மேய மைந்தா வென்று = ஒரு ஊரிலே மன்றிலேநின்று கொள்ளை கொடுத்தது மாத்திரமன்றியே உபயவிபூதிக்கும் நடுவானதொரு மன்றிலே நின்று தன்னைக் கொள்ளை கொடுத்தபடியைச் சொல்லுகிறது; “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ – “வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும் “கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்றுஞ் சொல்லுகிறபடியே உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசியற அனைவரும் கொள்ளை கொள்ளும்வடிவு எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதபித்துச் சொல்லுகிறபடி. வென்றசுரர்குலங்களைந்த வேந்தே யென்றும் = அவன்றான் விரோதி நிவ்ருத்தியைச் செய்வதற்கு அசக்தனென்றும் அது பிறரால் ஆகவேண்டிய தென்றும் இருந்தால் ஒருவாறு ஆறியிருக்கலாம்; அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களைக் கிழங்கெடுத்து வெற்றிபெற்ற பெருவீரனாய் அவன் விளங்கும்போதும் நான் இழக்கிறனே! என்று வருந்திச் சொல்லுகிறபடி. வீரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாயென்றும் = வென்று அசுரர் குலங்களைந்த அவதாரத்திலும் இழந்தவர்களுக்கும் முகங் கொடுப்பதற்காகத் திருநறையூரிலே வந்து நின்றருளுமவனே! என்கிறாள். நறையூர் நம்பியும் நாச்சியாரும் கடாக்ஷிக்க அக்கடாக்ஷமே விளைநீராக வளருகிற பொழிலாகையாலே விரிபொழிலாயிருக்கும். அசேதநங்களைக் கடாக்ஷித்து வளரச்செய்பவன் என்னைக் கடாக்ஷியாதொழிவதே! என்கிறாள். பிராட்டி பக்கலிலே பிச்சேறித் தன்னூரை அவள்பெயராலே ப்ரஸித்தப்படுத்தி * நாச்சியார் கோவிலாக்கி இப்படி ஒருத்திக்குக் கைவழி மண்ணாயிருப்பவன் என்னொருத்தியை விஷமாக நினைப்பதே! என்பதும் உள்ளுறை. துன்றுகுழல் கருநிறத்து என்துணையே யென்று – மிகவும் நெருங்கி இருண்டிருக்கின்ற திருக்குழற் கற்றையையும் காளமேகம் போன்ற வடிவையுமுடைய உன் துணைவனே! என்கிறாள். ஆக இப்படியெல்லாம் சொல்லாநின்று கொண்டு தன் ஆற்றாமைக்கு ஒரு போக்கடி காணாமையாலே * கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்ந்தாளாயிற்று. கன்று மேய்த்தினிதுகந்த காளாயென்று சொல்லித் துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாள், கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே யென்று சொல்லித் துணைமுலைமேல் துளி சோரச்சோர்கின்றாள் என்று தனித்தனியே கூட்டியுரைத்துக் கொள்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்