பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    கருப்பூரம் நாறுமோ?* கமலப் பூ நாறுமோ* 
    திருப் பவளச் செவ்வாய்தான்*  தித்தித்திருக்குமோ* 

    மருப்பு ஒசித்த மாதவன் தன்*  வாய்ச்சுவையும் நாற்றமும்* 
    விருப்புற்றுக் கேட்கின்றேன்*  சொல் ஆழி வெண்சங்கே!* (2) 


    கடலிற் பிறந்து*  கருதாது*  பஞ்சசனன் 
    உடலில் வளர்ந்துபோய்*  ஊழியான் கைத்தலத்* 

    திடரிற் குடியேறி*  தீய அசுரர்* 
    நடலைப் பட முழங்கும்*  தோற்றத்தாய் நற் சங்கே!*    


    தட வரையின் மீதே*  சரற்கால சந்திரன்* 
    இடை உவாவில் வந்து*  எழுந்தாலே போல்*

    நீயும் வட மதுரையார் மன்னன்*  வாசுதேவன் கையில்* 
    குடியேறி வீற்றிருந்தாய்*  கோலப் பெருஞ் சங்கே!*


    சந்திர மண்டலம் போல்*  தாமோதரன் கையில்* 
    அந்தரம் ஒன்று இன்றி*  ஏறி அவன் செவியில்* 

    மந்திரம் கொள்வாயே போலும்*  வலம்புரியே* 
    இந்திரனும் உன்னோடு*  செல்வத்துக்கு ஏலானே*.      


    உன்னோடு உடனே*  ஒரு கடலில் வாழ்வாரை* 
    இன்னார் இனையார் என்று*  எண்ணுவார் இல்லை காண்* 

    மன் ஆகி நின்ற*  மதுசூதன் வாயமுதம்* 
    பன்னாளும் உண்கின்றாய்*  பாஞ்சசன்னியமே!*             


    போய்த் தீர்த்தம் ஆடாதே*  நின்ற புணர் மருதம்* 
    சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே*  ஏறிக் குடிகொண்டு* 

    சேய்த் தீர்த்தமாய் நின்ற*  செங்கண் மால்தன்னுடைய* 
    வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய்*  வலம்புரியே!*  


    செங்கமல நாள் மலர்மேல்*  தேன் நுகரும் அன்னம் போல்* 
    செங்கண் கருமேனி*  வாசுதேவனுடைய* 

    அங்கைத் தலம் ஏறி*  அன்ன-வசஞ் செய்யும்* 
    சங்கு-அரையா! உன் செல்வம்* சால அழகியதே!*    


    உண்பது சொல்லில்*  உலகு அளந்தான் வாயமுதம்* 
    கண்படை கொள்ளில்* கடல்வண்ணன் கைத்தலத்தே* 

    பெண் படையார் உன் மேல்*  பெரும் பூசல் சாற்றுகின்றார்* 
    பண் பல செய்கின்றாய்*  பாஞ்சசன்னியமே!*      


    பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பார்த்திருப்ப* 
    மது வாயிற் கொண்டாற்போல்*  மாதவன் தன் வாயமுதம்* 

    பொதுவாக உண்பதனைப்*  புக்கு நீ உண்டக்கால்* 
    சிதையாரோ உன்னோடு*  செல்வப் பெருஞ்சங்கே!*      


    பாஞ்சசன்னியத்தைப்*  பற்பநாபனோடும்* 
    வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய*  வண்புதுவை* 

    ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான்*  கோதை தமிழ் ஈரைந்தும்*
    ஆய்ந்து ஏத்த வல்லார்*  அவரும் அணுக்கரே*. (2)